28 மே, 2011

நாட்டின் பல பகுதிகளிலும் அடைமழை 5 பேர் பலி; பெருமளவானோர் பாதிப்பு



நாட்டில் பல பகுதிகளிலும் பெய்துவரும் அடைமழை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தினாலேயே இவர்கள் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் இரு குழந்தைகளும் அடங்குவர்.

கேகாலை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழையினால் பல பகுதிகளிலுள்ள வீதிகள் மற்றும் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இங்கு இடம்பெற்ற மண்சரிவில் தாயும் மகளும் பலியாகியுள்ளனர். நேற்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின்மீது மண்மேடு இடிந்து விழுந்ததனாலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கனமழையினால் களுகங்கை, களனிகங்கை, நில்வள கங்கை மற்றும் கிங்கங்கை ஆகியவற்றின் நீர்மட்டங்கள் தொடர்ந்தும் உயர்ந்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கேகாலை, கொட்டியாகும்புற படகல்தெனிய வீதி நீரில் மூழ்கியுள்ளது. சுமார் 20 வீடுகள் பகுதியளவில் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளதாகவும் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

காலி மாவட்டத்தில் தவளம மற்றும் கினிதுமை ஆகிய பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக இதுவரை 450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்கு தொடருமென்று வானிலை அவதான நி>லையம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சிறுநீரக சிகிச்சைக்காக ரஜினி சிங்கப்பூர் பயணம்




சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக சூப்பர்ஸ்ரார் ரஜினிகாந்த் நாளை சிங்கப்பூர் செல்லவுள்ளதாக தக வல்கள் வெளியாகி யுள்ளன.

ரஜினிகாந்தின் பயணம் தொடர்பில் பல்வேறுபட்ட குழப்பகரமான தகவல்கள் வெளியாகின. அவரின் பயண திகதிகள் திடீர் திடீரென மாற்றப்பட்டன. மேலும் லண்டன், செல்லவுள்ளதாகவும் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் பின்னர் சிங்கப்பூர் செல்லவுள்ளதாகவும் மாறி மாறி தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியான அம்புலன்ஸ் விமானம் ஒன்றில் அவர் சிங்கப்பூர் செல்லவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

ரஜினிகாந்தை சிங்கப்பூரிலுள்ள நேஷனல் கிட்னி பவுண்டேஷன் சிங்கப்பூர் என்ற மருத்துவமனையில் சேர்க்கவும் குடும்பத்தினர் முடிவு எடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது மேலதிக சிகிச்சைக்காக மனைவி, மகளுடன் இன்று (27-05-2011) இரவு 11 மணிக்கு ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்வதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

சிறுநீரக சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளிநாடு செல்கிறார்.

சிறுநீரக பாதிப்புக்கு விரைவான சிகிச்சை பெறுவதற்காக, ரஜினிகாந்த் லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டுக்கு செல்கிறார். முதலில் அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) புறப்படுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.

இப்போது அவருடைய பயண திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை 29 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அவர் வெளிநாடு புறப்படுவார். இதற்காக அம்புலன்ஸ் போன்ற தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இந் நிலையில் ரஜினிகாந்த் பூரண குணம் அடையவேண்டி, அவருடைய ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்ல உலகம் முழுவதும் விசேட பூஜைகளும், பிரார்த்தனைகளும் நடத்தி வருகிறார்கள்.

ரஜினி ரசிகர்கள் பால்குடம் விளக்கு பூஜை, பால் அபிஷேகம், மண் சாப்பாடு, 101 பேர்களுக்கு அன்னதானம் ஆகியவற்றிலும் ஈடுபட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த பின்னிற்கப் போவதில்லை




* நாட்டு மக்களின் அனுமதியின்றி வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளுக்கு இடமில்லை.

* பிரிவினைவாதிகள், இனவாதிகள் கேட்கின்றவற்றை பெற்றுக்கொடுக்க நாம் தயாராக இல்லை.

லோரன்ஸ் செல்வநாயகம்

வடக்கு, கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளையும், மனித உரிமைகளையும் உறுதிப்படுத்த ஒரு நிமிடம் கூட தயங்கமாட்டோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

நேற்றையதினம் காலிமுகத் திடலில் நடைபெற்ற படைவீரர்களின் வெற்றிவிழா வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதமர் டி.எம்.ஜயரட்ண, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, சிரேஷ்ட அமைச்சர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற் றுகையில், உலகத்தில் மிகக்கொடூரமான பயங்கரவாதிகளைத் தோல்வியுறச் செய்து, தாய்நாட்டை ஐக்கியப்படுத்தியதன் பின்னர் இன்று பெருமிதத்துடன் எம்மால் தேசிய கொடியை ஏற்றிவைப்பதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.

தமிழ், முஸ்லிம், சிங்கள அனைத்து இனங்களுக்கும் உயிர்வாழ்வதற்கு இருக்கின்ற உரிமையை உறுதிப்படுத்துகின்ற வெற்றிவிழாவை இன்று நாம் கொண்டாடுகின்றோம். அதேபோன்று பணயக் கைதிகளாக அடைபட்டுக்கிடந்த இலட்சக்கணக்கான வடபகுதி மக்களை விடுவித்து அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவகுத்த மாபெரும் வெற்றியாகும்.

அரசியலமைப்பில் மனித உரிமைகளைச் சேர்த்து அதை அங்கீகரித்து உலக மக்களுக்கு பறைசாற்றுவதன் மூலம் இந்த நாட்டில் மனித உரிமை மக்களுக்குக் கிடைத்துவிடமாட்டாது. வாழ்வதற்கு இருக்கும் உரிமையை எவரேனும் பறித்துக்கொள்வாராக இருந்தால் அதைத் தடுப்பதன்மூலமும், அதிலிருந்து மக்களை விடுவிப்பதன் மூலமும் மாத்திரமேதான் மனித உரிமைகளைப் பாதுகாக்க முடியும். அதனால் நாட்டு மக்கள் அச்சமும் சந்தேகமும் இன்றி வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தியதை முன்னிட்டே இந்த வெற்றிவிழாவை நாம் கொண்டாடுகின்றோம்.

நாங்கள் பயங்கரவாதத்திலிருந்து விடுதலை பெற்று கடந்துபோன இரண்டு ஆண்டுகளை நாம் திருப்தியுடனும், பெருமிதத்துடனும் திரும்பிப் பார்க்க முடியும்.

நாம் புதிய இலங்கை வரைபடமொன்றை உருவாக்கும் அளவுக்கு அபிவிருத்திப் புரட்சியொன்றை இந்நாட்டில் மேற்கொண்டுள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். படைவீரர்கள் விடுவித்த வடக்கும், கிழக்கும் கஸ்டமான வாழ்க்கைக்குப் பதிலாக ஆடம்பரவாழ்வை அனுபவித்துக்கொண்டிருக்கின்றன.

எல்லைக் கிராமங்களை இலங்கை வரைபடத்திலிருந்து எடுத்து எறிந்த நாம், இப்போது அகதிகள், இடம்பெயர்ந்தவர்கள் ஆகியவர்களைப் பற்றி எமது அகராதிகளிலிருந்து அகற்றிக்கொண்டிருக்கும் யுகமாகும்.

இலட்சக்கணக்கில் இடம்பெயர்ந்திருந்த மக்களை, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுத்துத்தான் மீளக்குடியம ர்த்தியிருக்கிறோம். இவ்வாறு வடக்கு, கிழக்கை மீண்டும் கட்டியெழுப்பியமை வரலாற்றில் மேற்கொண்ட பாரிய அபிவிருத்திப் பணியென்றுதான் நான் நம்புகின்றேன்.

சுதந்திரத்தின் ஒளிக்கீற்று படரத் தொடங்கியவுடன் அந்த ஒளிக்கீற்று வடக்கு, கிழக்கு மக்களுக்குக் கிடைத்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் இவ்வாறு துரிதகதியில் கட்டியெழுப்புவதை பயங்கரவாதிகளினால் அழிக்கப்பட்ட பொதுமக்களின் சொத்து என்பதை குறிப்பிடவேண்டும். பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்ட வடக்கையும், கிழக்கையும் கட்டியெழுப்புகின்றபோது வெளிநாடுகளிலிருந்து பயங்கரவாதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளிலும் என்னசெய்தார்கள் என்பதை உலக மக்கள் அறிவார்கள்.

முள்ளிவாய்க்காலில் கடைசிப் பயங்கரவாதத் தலைவன் இறந்ததையடுத்து மே மாதம் 19ஆம் திகதி இந்த நாடு ஐக்கியப்பட்ட நேரத்திலிருந்து வெளிநாடுகளிலிருக்கின்ற இவர்கள் மீண்டும் தாய்நாட்டுக்கு எதிராக ஒன்று சேர்ந்தனர். நன்கொ டைகளை சேகரிப்பதையும், கடத்தல் வேலைகளை செய்வதையும் பயங் கரவாதிகள் நிறுத்தவில்லை.

யுத்தம் நடைபெற்ற யுகத்தில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கு, கப்பல்களை கொள்வனவு செய்வதற்கு செலவுசெய்த பணம் அவர்களிடம் குவிந்து கிடந்தது. குவிந்து கிடந்த பணத்தைக்கொண்டு இலங்கைக்கு எதிராக பாரிய அளவில் பொய்ப் பிரசார இயக்கங்களை, சதி செயல்களை இன்னும் தொடர்ச்சியாக மேற்கொள்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இலங்கையில் பயங்கரவாதம் முடிவடைந்தாலும் வெளிநாடுகளில் குடியேறியிருக்கின்ற பயங்கரவாதிகளும், அவர்களுடைய நண்பர்களும் இன்னும் நமது நாட்டை அழிக்க நடவடிக்கை எடுக்கிறார்கள்.

வெளிநாடுகளில் இருக்கின்ற அவர்கள் அந்நாடுகளில் இருக்கின்ற ஜனநாயக ரீதியிலான சுதந்திரத்தையும், கிடைத்துள்ள வாக்குரிமையையும் பயன்படுத்தி அந்நாடுகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது இரகசியம் அல்ல.

ஒரு நாட்டில் முதலில் சத்தியத்தை சுட்டுக்கொன்றுவிட்டுத்தான் பயங்கரவாதம் ஆரம்பமாகின்றது. யுத்தத்தின் பின்னரும் புலிகள் சத்தியத்தை சுட்டுக்கொல்லத் தொடங்கினர். அதன் விளைவாக எமது படைவீரர்களுக்கு எதிராக, நாட்டுக்கு எதிராக பொய்யான அறிக்கைகளை எழுதுவதற்கு தேவையான சதி செயல்களை ஆரம்பித்தனர்.

எமது படையினர் ஒரு கையில் படைக்கலங்களையும் மற்றக்கையில் மனித உரிமை சாசனத்தையும், தோளில் நிர்க்கதியானவர்களுக்குக் கொடுக்கின்ற உணவுப் பக்கற்றையும், இதயத்தில் பிள்ளைப் பாசத்தையும் சுமந்துகொண்டு போராடினார்கள்.

பயங்கரவாதத் தலைவன் முள்ளிவாய்க்காலில் இறந்ததன் பின்னர் அவருடைய தாயும் தந்தையும் தொடர்ச்சியாக எங்களுடைய பாதுகாப்பைப் பெற்றனர். அவர்களை துப்பாக்கித் தோட்டக்களிலிருந்து காப்பாற்றி தூக்கிக்கொண்டுவரும் அளவுக்கு படைவீரர்களது இதயம் இழகியிருந்தது என்பதை நாம் அறிவோம். இன்னும் கூட எங்களிடம் சரணடைந்து இருக்கின்ற பயங்கரவாத தலைவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எமது பாதுகாப்பைப் பெறுகின்றனர்.

எங்களுக்கு எதிராகப் போராடிய பயங்கரவாதிகளுக்கும் தேவையான உணவு, மருந்து ஆகியவற்றை அனுப்புக்கொண்டு போராடிய ஒரே இனம், ஒரே நாடு நாம்தான். வேறுநாடுகளில் மோதல்கள் இடம்பெறும் தன்மையைப் பார்க்கின்றபோது நமது மனிதாபிமான நடவடிக்கையிலிருந்து ஆழமான மனித நேயத்தை எண்ணி பெருமை கொள்கின்றோம்.

படைவீரர்களே! போர்க்களத்தில் உங்களுடன் எங்கள் இதயங்கள் இருந்தன. முழு நாடுமே உங்களோடு இருந்தது. இன்றும் அப்படித்தான். உலகத்தின் முன்னால் உங்களைக் காட்டிக்கொடுக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம் என்பதை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்தவேண்டும். மனிதாபிமான நடவடிக்கை முடிவடைந்ததன் பின்னர் உங்களை பாசறைக்குள் வரையறுத்து வைக்கவில்லை. எமது நாட்டை கட்டியெழுப்புகின்ற பாரிய பணியில் உங்களையும் பங்காளிகளாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

வெளிவிவகார சேவையிலிருந்து கொழும்பை அழகான நகரமாகக் கட்டியெழுப்பும் பணிவரைக்கும் பல விடயங்களில் படைவீரர்கள் பங்களிப்புச் செய்தனர் என்பதை நாம் அறிவோம். அன்று யுத்த களத்திலே இரத்தம் சிந்திய நீங்கள் இன்று நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்தளத்திலே வியர்வை சிந்துகிஹர்கள். அதுமாத்திரமல்ல உங்களிடம் இருக்கின்ற ஒழுக்கம் அர்ப்பணிப்பு, துணிச்சல் என்பவற்றையும் தாய்நாட்டின் பல்வேறு துறைகளுக்கும் கேட்கின்றனர்.

நாம் உலகத்துக்குக் காட்டவேண்டிய உண்மை இருக்கின்றது. நாம் உருவாக்கியிருப்பது நாடுகளை முற்றுகையிடுகின்ற முப்படையல்ல, நாட்டைக் கட்டியெழுப்புகின்ற மக்களுக்காகத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டிருக்கின்ற ஒரு முப்படையாகும்.

நண்பர்ளே! தாய்நாட்டின் சுதந்திரத்தில் பாதம் பதிக்கின்ற ஒவ்வொரு நிமிடத்திலும் நமக்காகத் தமது உயிரைத் தியாகம் செய்த மாபெரும் வீரர்கள் இம்மண்ணில் உறங்குகின்றனர் என்பதை நாங்கள் கெளரவாக நினைவுகூரவேண்டும். கண்களை, உடலின் பாகங்களை, இரத்தத்தை நாட்டுக்காகத் தியாகம்செய்த வீரர்கள் நம்மத்தியில் இருக்கின்றனர் என்பதை கெளரவமாக நினைவுகூருகின்றோம். படைவீரர்களே நீங்கள் செய்த உன்னதமான தியாகத்தை அர்த்தமுள்ளதாக்க வேண்டுமானால் தேசிய ஒற்றுமையுடன் உன்னதமான எதிர்காலத்தை இவ்வனைத்து மக்களுக்கும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

நாம் வடக்கு, கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை மனிதாபிமான உரிமைகளை உறுதிப்படுத்தி ஒரு நிமிடம் கூட தயங்க மாட்டோம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு பெற்றுக் கொடுத்த இடைக்கால பரிந்துரைகளை ஏற்கனவே நாம் நடைமுறைப்படுத்தியிருக்கின்றோம். அதன் இறுதி அறிக்கை தொடர்பாக இந்நாட்டு மக்களும் எமது அரசாங்கமும் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம்.

ஆனால் பிரிவினைவாதிகள் அல்லது இனவாத குழுக்கள் கேட்கின்றவற்றை பெற்றுக் கொடுக்க நாம் தயாராக இல்லை. இந்நாட்டு மக்களுடைய அங்கீகாரம் இல்லாததால் வெளிநாடுகளைக் கொண்டு நிர்ப்பந்தித்து தமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ள இவர்கள் குறி பார்க்கின்றனர் என்பது இரகசியம் அல்ல.

ஆயினும் எந்தவொரு அதிகாரமுடையவருக்கும் இந்நாட்டு மக்களின் சம்மதமும் அங்கீகாரமும் இன்று எதையும் பெற்றுக் கொடுக்க முடியாது என்பதை நான் தெரிவிக்கின்றேன். நமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டுமே ஒழிய அவற்றை மற்றவர்கள் தீர்க்க முடியாது. எம்மால் அதை செய்ய முடியும் என்பதை உலகத்திற்கு நாம் காட்டி இருக்கின்றோம்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மக்களுக்கு கிடைத்த நிவாரணம் என்ன என்று கேட்கின்றவர்களுக்கு வடக்கைப் போன்று முழு நாட்டையும் கை நீட்டி சுட்டிக்காட்ட முடியும். இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி நூற்றுக்கு 6.8 வீதமாகும். ஆனால் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பொருளாதார வளர்ச்சி நூற்றுக்கு 8 வீதமாகும். வடக்கில் அபிவிருத்தி வேகம் நூற்றுக்கு 14.2 வீதமாகும். அதே போன்று தொழில் இல்லா தன்மையையும் குறைத்துக் கொள்ள முடிந்தது. டொலரின் பெறுமதியை நிலையாக வைத்துக் கொள்ள முடிந்துள்ளது.

எமது எதிர்கால சவாலை வெற்றிக் கொள்வதற்கு இருக்கின்ற சிறந்த வழி நாட்டில் தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்துவதாகும். எமது நாட்டு மக்களிடையே உன்னதமான தேசிய ஒற்றுமை இருக்கின்றது. இனங்களுக்கிடையே மோதிக் கொள்கின்ற தன்மை தற்பொழுது எந்த இடத்திலும் இல்லை. இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் மாபெரும் வெற்றிவிழா எந்த இனத்திற்கும் மன வேதனையை ஏற்படுத்தாத விதத்தில் கொண்டாடப்பட்டது.

ஆடிவேல் விழா நடைபெறுகின்ற போது சிங்கள மக்கள் பெரும் விருப்பத்துடன் அதில் கலந்து கொண்டனர். சிங்கள பெளத்த மக்கள் சம்புத்த ஜயந்தியை கொண்டாடுகின்ற போது வடக்கு வாழ் மக்களும் அதில் கலந்து கொள்கின்றனர். அனைத்து இன மக்களும் வாழ்கின்ற கொழும்பில் வெசாக் பண்டிகையை கொண்டாடுகின்ற போது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் எவ்வித வேறுபாடுகளுமின்றி அதில் கலந்து கொண்டனர்.

மக்கள் அந்தந்த இனங்களிடையே ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற இந்த பிணைப்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவருடைய பொறுப்புமாகும்.

அப்படியின்றி பழைய புண்ணைக் கிளறிக்கொண்டு, கடந்த கால நினைவுகளை மீண்டும் மீண்டும் தோண்டிக் கிளறி இனங்களுக்கிடையே ஆத்திரத்தை ஏற்படுத்துவதனால் எந்தப் பயனும் கிட்டாது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நான் தெரிவிக்கின்றேன். வாழ்கின்றபோது இனங்களுக்கிடையே ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற அந்த உன்னதமான பிணைப்பை பாதுகாப்பது நாட்டின் சுதந்திரத்தையும் இந்த மாபெரும் வெற்றியையும் பாதுகாத்துக்கொள்வதற்கு இருக்கின்ற ஒரே வழியாகும்.

படைவீரர்களே மாலை நேரங்களில் குழந்தை குட்டிகளைத் தூக்கிக்கொண்டு காடுகளுக்குள் சென்று மரங்களுக்கடியில் மரணபயத்துடன் வாழ்ந்த மக்கள் இன்று தங்களுடைய சொந்த வீட்டில் சிரித்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதைப் பார்க்கும்போது எம் மனதில் மகிழ்ச்சி தோன்றுகிறது.

தற்கொலை, கடற்புலி படகுகள் சென்ற சமுத்திரத்தில் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்கின்றபோது நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிர்செய்கின்றபோது பயங்கரவாதிகள் அழித்த பாலங்கள், மதகுகள், புகையிரதப் பாதைகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் என்பவற்றை மீளக்கட்டியெழுப்புகின்றபோது கால்வாய்கள், வாய்க்கால்கள், குளங்கள், வாவிகள், அணைகள் என்பவை கட்டியெழுப்பப்படுகின்றபோது விகாரைகள், தேவாலயங்கள், கோவில்கள் கட்டப்பட்டு கீதங்கள், தேவாரங்கள், பிரார்த்தனை ஒலிகள் காதுகளுக்குக் கேட்கின்றபோது உங்களுடைய தியாகம் வீணாகவில்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

சயனைட் வில்லையை கழுத்தில் கட்டிக்கொண்டு ரி-56 ரகத் துப்பாக்கியை ஏந்திக்கொண்டு இருந்த பிள்ளைகள் வெள்ளைச் சீருடையணிந்து பாடசாலைகளுக்குச் செல்கின்ற காட்சியைப் பார்க்கின்றபோது நீங்கள் செய்த தியாகம் வீணாகவில்லையென்பதை உங்களுடைய இதயத்திலிருந்து வருகின்ற வெற்றி உணர்வுகளினால் நிறைவடையும்.

தாய் நாட்டை சுதந்திரத்தின் மகிழ்ச்சியில் உயர்த்திவைப்பதற்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட அனைவருக்கும் இந்த நாட்டு மக்கள் அனைவருடைய பாராட்டும் உரித்தாகும். உங்களுடைய அர்ப்பணிப்பை எந்த சந்ததியும் இதய பூர்வமாக மறந்துவிடாது என்பதையும், நீங்கள் என்றும் எம் நினைவில் நிலைத்து நிற்பீர்கள் என்பதையும் நான் ஞாபகப்படுத்துகின்றேன் என்றும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

27 மே, 2011

ஈரானில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொலை, பாலியல் வல்லுறவு ,கடத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆவர்.

ஈரானின் டெஹ்ரானில் உள்ள ஷிராஸ் நகரில் வைத்தே நேற்று இவர்களுக்கு இத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது அந்நாட்டில் இத்தகைய குற்றங்களுக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனையே வழங்கப்பட்டு வருகின்றது இதுவும் பல சமயங்களில் பொது மக்கள் முன்னிலையிலேயே இடம்பெற்று வருகின்றது.

ஈரானின் இக் கொடூர தண்டனைக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் கண்டனம் ‌தெரிவித்துள்ள போதிலும் தமது நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்கு இத்தகைய தண்டனைகள் அவசியமென ஈரான் தெரிவிக்கின்றது. இதேவேளை நேற்று மேலும் 7 பேர் வெவ்வேறு இடங்களில் வைத்து தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

ஈரானில் இவ்வருடத்தில் 143 பேருக்கு இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் அங்கு 179 பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதாகவும், சீனாவிற்கு அடுத்ததாக அதிகப்படியான மரணதண்டனைகள் இங்கேயே நிறைவேற்றப்படுவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் குழுக்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

தூக்குமேடையில் ஏற்றி அலுகோசு கயிறை இழுத்தாலும் கண்ணீர் மல்கேன்: பொன்சேகா

சர்வதேச யுத்த விசாரணைக்கு முகம்கொடுப்பதற்கு நான் தயார். நாடு முகம்கொடுத்திருக்கும் சர்வாதிகார ஆட்சியில் என் வாழ்க்கை இருக்கும் வரையில் 100 சிறைகளில் அடைத்தாலோ, தூக்கில் ஏற்றினாலோ எனது தாய்நாட்டின் மீதான அன்பை அப்படியே வைத்திருப்பேன். அலுகோஸ் என்னை ஏற்றுக்கொள்ளட்டும் அவர் தூக்குகயிறை இழுத்தாலும் நான் கண்ணீர் மல்கேன் என்று வெள்ளைக்கொடி விவகார வழக்கின் பிரதிவாதியான முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார்.

யுத்தத்தின் வெற்றிக்காக போராடிய இராணுவத்திற்கு நானே தலைமைதாங்கினேன். இராணுவம் தொடர்பிலும் என்னைப்பற்றியும் பான் கீ மூன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது அந்த அறிக்கையை இன்று வரையிலும் நான் பார்க்கவில்லை அதற்கான சந்தர்ப்பமும் எனக்கு கிடைக்கவில்லை அவ்வறிக்கைக்கு நானே பதிலளிக்ககூடியவன். ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியிருந்தால் நானும் எதிர்க்கட்சி தலைவரும் கைது செய்யப்பட்டிருப்போம். இன்று நான் சிறைச்சாலையில் இருக்கின்றேன் கே.பி அரசாங்க சிறையில் இருக்கின்றார் என்றும் அவர் சொன்னார்.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி. வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையிலேயே இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.வழக்கின் பிரதிவாதியான முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா ஆவணப்படுத்தப்பட்ட அறிக்கையை ஐந்தாவது நாளாகவும் சமர்ப்பித்து வாசிக்கையில்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை வரும் வெளிநாட்டினருக்கு ஒன்லைன் விசா வழங்க ஏற்பாடு மொரட்டுவ பல்கலையில் விசேட பயிற்சி






இலங்கைக்குள் வரும் வெளிநாட்டவர் களுக்கு Online வீசா வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கென அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

குடிவரவு - குடியகல்வு திணைக் களத்தின் இணையத்தளமான www.lmmigration.gov.lk என்ற இணையத்தளமூடாக விசாவுக்காக விண்ணப்பிக் முடியும். வீசா பெறுவதற்கான நடைமுறை கட்டணத்தை செலுத்தவும் முடியும். இப்புதிய நடைமுறையை விரைவில் குடியகல்வு குடிவரவு திணைக்களம் தயாரித்து வருகிறது.

இப்புதிய நடைமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில் நுட்பத்தை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவு தயாரிக்கவுள்ளது.

இலங்கைக்குள் வரும் வெளிநாட்டினரும், இலங்கை ஊடாக செல்லும் வெளி நாட்டினரும் இவ்வாறு Online வீசாவுக்காக விண்ணப்பிக்க முடியும். இவ்வாறு விண்ணப்பிப்பவருக்கு விசா வழங்கப்பட்டு விட்டதற்கான அறிவித்தல் ஷிணிஷிஊடாகவோ,லீசீailஊடாகவே அறிவிக்கப்படும்.

விசா கிடைத்து இலங்கை வரும் நபர் விமான நிலையத்தில் தனது கடவுச் சீட்டை வழங்கியவுடன் அவருக்குரிய விசா முத்திரை இடப்பட்டு விசாவுக்கான பணமும் அறவிடப்படும்.

இப்புதிய நடைமுறையை குடிவரவு - குடியகல்வு திணைக்களம் விரைவில் நடைமுறைப்படுத்தும்.
மேலும் இங்கே தொடர்க...

ஓமந்தைவரை யாழ்தேவி






21 ஆண்டுகளுக்கு பின்னர் வடபகுதிக்கான ரயில் சேவை இன்று வெள்ளிக்கிழமை ஓமந்தை வரை செல்லவுள்ளது.

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் ஓமந்தை ரயில் நிலையம் வைபவரீதியாக பயணிகளுடைய பாவனைக்கு இன்று திறந்துவைக்கப்படும்.

போரின் காரணமாக பாதிக்கப்பட்ட வட பகுதிக்கான ரயில் பாதை புனரமைப்பு பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. ஓமந்தை முதல் பளை வரையிலான பாதை புனரமைப்பினை இந்திய நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

ஆனால் தாண்டிக்குளம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதை இராணுவத்தினராலும் ரயில்வே திணைக்களத்தினாலும் புனரமைக்கப்பட்டது.

ஓமந்தை ரயில் நிலைய திறப்பு விழாவில் போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம, பிரதி அமைச்சர் றோகண குமாரதிசாநாயக்க ரயில்வே பொது முகாமையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள்.

1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் வவுனியாவிற்கு அப்பால் ரயில் சேவை நடைபெறவில்லை. இன்று காலை கோட்டையிலிருந்து வரும் யாழ்தேவி நேரடியாக ஓமந்தை சென்றடையும். வழமைபோல் அனைத்து ரயில்களும் ஓமந்தையிலிருந்தே ஆரம்பிக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

பல்கலைக்கழகங்களை மூடியாவது பகிடிவதைக்கு முடிவு கட்டப்படும்

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை அடுத்த வருடம் முதல் முற்றாக நிறுத்தப்படும். பல்கலைக்கழகங்களை மூடியாவது இதற்கொரு முடிவு கட்டப்படும் என உயர் கல்வியமைச்சர் எஸ். பி. திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் ஒரு சிறு குழுவினர் மேற்கொள்ளும் இத்தகைய அநாகரிகமான நடவடிக்கை களினால் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுமே பாதிக்கப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர், இதற்கு தீர்க்கமான தீர்வு ஒன்று எட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜே. வி. பி. எம். பி. அநுரகுமார திசாநாயக்க முன் வைத்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கவனயீர்ப்புப் பிரேரணைக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

சில பல்கலைக்கழகங்களில் பகிடிவதை என்ற பெயரில் மாணவ மாணவியர் பெரும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அண்மைக் காலமாக பெண்கள் மிக மோசமான விதத்தில் வதைக்கப்படுவதுடன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஆங்கிலத்தில் பேசுவதற்குக் கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர இனியும் இடமளிக்க முடியாது. அடுத்த வருடத்தில் இதற்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தேவையேற்படின் பல்கலைக்கழகங்களை மூடியாவது இதற்கு தீர்க்கமான முடிவு கட்டப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

படை வீரர்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து




நாட்டுக்காக அபரிமிதமான சேவையை ஆற்றிய படை வீரர்களை நினைவு கூரும் தேசிய படை வீரர் தினத்துக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடை கிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

எமது தாய்நாட்டுக்காக சகலரும் எதிர்பார்த்த, பிரார்த்தித்த உயரிய சுதந்திரம் உதயமாகியுள்ளது. இதன் முழுமையான கெளரவம் படை வீரர்களுக்கே உரித்தானது.

இந்த சுதந்திரத்திற்காக அவர்கள் தமது உயிர்களை, கை, கால்களை, கண்களை அர்ப்பணித்தார்கள் என்பதை நன்றியுணர்வுடன் நினைவு கூருகிறோம்.

இந்த உயரிய சுதந்திரத்தையும், அபிமானத்தையும் பாதுகாக்க வேண்டியது எம் அனைவரின தும் கடமையாகும்.

இதற்காக நாம் தோல்வியுறச் செய்த பிரிவினைவாதமும், பயங்கரவாதமும் மீண்டும் தலைதூக்கு வதற்குரிய சகல வழிகளையும் தடுக்க வேண்டும். இது படை வீரர்களின் அபிமானத்துக்கும், கெளரவத்துக்கும் எம்மால் செய்ய இயன்ற பெறுமதியான உதவியாகும்.

இதேபோன்று தேசத்தின் கெளரவத்தை பாதுகாத்துத் தந்த படை வீரர்களினதும், அவர்களது குடும்பத்தினரதும் நலன்கள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதும் எம் அனைவரினதும் கடமையாகும். அரசைப் போன்றே இந்த கடமையை நாட்டின் அனைத்து பிரஜைகளும் நிறைவேற்றுவார்கள் என நான் நம்புகிறேன். என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

உத்தேச தனியார்துறை ஓய்வூதிய சட்டமூலம்:

50 வயதுக்கு உட்பட்ட ஊழியர்கள் இணைந்து கொள்வது கட்டாயம்

50 வயதுக்கு மேற்பட்டோர் விரும்பினால் சேரலாம் கலாநிதி பி.பி. ஜெயசுந்தர



அரசாங்கம் விரைவில் அமுல்படுத்த விருக்கும் தனியார்துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திட்டத்தில் அங்கத்த வராக இணைந்து கொண்ட ஒருவர் 50 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட காலகட்ட த்தில் மரணமடைந்தால் அவரது மனைவிக்கு அவர் செலுத்திய ஓய்வூதியத் தொகையில் 60 சதவீதம் சேமிப்பு வழங்கப்படும்.

இதேவேளையில் 60 வயதை தாண்டிய பின்னர் ஓய்வூதியத்தை பெற்றுக் கொண்டிருப்பவர் மரணமடைந்தால் அவருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் அவரது மனைவிக்கோ குடும்பத்தாருக்கோ கொடுக்கப்படமாட்டாதென்றும் நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜெயசுந்தர தெரிவித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடந்த தனியார் துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியம் பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தனியார் ஓய்வூதியத் திட்டத்தில் அங்கத்தவராக சேர்ந்து கொள்ளும் ஒருவரின் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், மற்றும் பணிக்கொடை கொடுப்பனவுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சம்பந்தப் பட்ட அங்கத்தவர் இந்த சலுகைகளை தங்கு தடையின்றி பெற்றுக் கொள்ளவும் முடியும்.

இலங்கையில் நடைமுறையில் இருக்கும் தொழில் சட்டங்களுக்கு ஏற்ப பெரும்பாலும் ஒருவர் 57 வயதில் இளைப்பாறுவதுண்டு. எனினும், தனியார் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து கொண்ட ஒருவர் 57 வயதில் இந்த ஓய்வூதியத்தை பெறும் தகுதியை அடைய மாட்டார். அவர் 60 வயதை பூர்த்தி செய்த பின்னரே அவருக்கு இந்த ஓய்வூதியம் வழங்கப்படும்.

தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் பற்றி மேலும் விளக்கமளித்த கலாநிதி பி.பி. ஜெயசுந்தர, இந்தச் சட்டத்தின்படி 50 வயதுக்கு குறைவான தனியார் துறை ஊழியர்கள் கட்டாயம் இவ் ஓய்வூதியத்திட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென்றும், 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் விரும்பினால் மாத்திரமே இந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து கொள்ள முடியும்.

ஆயினும் ஒருவர் 50 வயதிற்கு பிறகு இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு சேர்ந்து 60 வயதாகும் போது இளைப்பாறினால் அவருக்கும் இந்த ஓய்வூதியத்திட்டத்தின் மூலம் பயனடைய முடியும். தனியார் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஒருவர் 10 ஆண்டு காலம் சேவையை பூர்த்தி செய்த பின்னரே ஓய்வூதியம் பெறும் தகுதியை பெறுகிறார்.

ஒருவர் 7 ஆண்டுகளை பூர்த்தி செய்த பின்னர், சேவையில் இருந்து இளைப்பாறும் சந்தர்ப்பத்தில் அவர் எஞ்சிய மூன்று ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டிய ஓய்வூதியக் கொடுப்பனவுகளை தமக்கு கிடைக்கும் ஊழியர்சேமலாப நிதிய, ஊழியர் நம்பிக்கை நிதிய மற்றும் பணிக்கொடையில் இருந்து அதற்கான மூன்று ஆண்டுகளுக்கான முழுத் தொகையையும் செலுத்திய பின்னர் ஓய்வூதியத்தை 60 ஆவது வயதில் பெறும் தகுதியை அடைவார்.

இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஊழியர் ஒருவரின் அடிப்படை சம்பளத்தின் 2சதவீதத்தையும், அவர் பணியாற்றும் நிறுவனம் அவ்விதம் 2 சதவீதத்தையும் மாதாந்தம் செலுத்த வேண்டும்.

இந்த ஓய்வூதியத் திட்டத்தில் மூன்று வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பை பெறுகிறார்கள். ஒரு சாரார் தனியார் துறை நிறுவனமொன்றில் தொழில் புரிபவர்கள். இரண்டாவது பிரிவினர் வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர் ஆவர். மூன்றாவது பிரிவினர் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுபவர்களாவர்.

இதேவேளை, 2025ம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகையில் 60 வயதிற்கு கூடியவர்கள் 20சதவீதம் இருப்பார்கள். அவர்களுக்கு தங்கள் வாழ்க்கையின் இறுதிக் காலத்தை மற்றவர்களை நம்பி வாழாமல், கெளரவ மான முறையில் வாழ்க்கையை உதவும் உன்னத திட்டத்திற்கு அமையவே இந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப் படுகிறதென்று அவர் மேலும் கூறினார்.

மஹிந்த சிந்தனை எண்ணக்கருவில் தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அளித்த வாக்குறுதி இன்று நிறைவேற்றப்படுகிறது.

இந்நிகழ்வில் கலாநிதி பி.பி. ஜெயசுந்தர, தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே மற்றும் தொழில் அமைச்சின் செயலாளரும், மேலும் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பில் இன்று யுத்த வெற்றிவிழா




* இராணுவ, படைக்கலங்களுடன் அணிவகுப்பு

* விமானப்படையினர், கடற்படையினர் சாகசம்

* காலி முகத்திடலில் பிரமாண்ட வைபவம்

ஸாதிக் ஷிஹான்

யுத்த வெற்றியின் இரண்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறுகிறது.

யுத்த வெற்றி அணிவகுப்பின் பிரதான வைபவம் காலை 8.30 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலிலும் தேசிய படை வீரர்கள் நினைவு தின பிரதான வைபவம் மாலை 4.30 மணிக்கு பாராளுமன்ற முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர் நினைவு தூபிக்கு அருகிலும் இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதமர் தி.மு. ஜயரட்ன பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் றொஹான் குணதிலக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம, பொலிஸ் மா அதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரிய மற்றும் சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

காலி முகத்திடலில் நடைபெறவுள்ள வெற்றி அணிவகுப்பு வைபவத்தில் இம்முறை இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் என்ற அடிப்படையில் 9035 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இவற்றில் 108 அதிகாரிகளும், 8927 வீரர்களும் அடங்குவர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த மற்றும் மேஜர் ஜெனரல் சாகி கால்லகே ஆகியோர் வெற்றி அணிவகுப்புக்கு தலைமை வகிக்கவுள்ளனர்.

படைவீரர்களை கெளரவித்து நினைவு கூரும் வகையில் ஜனாதிபதி அவர்கள் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

இராணுவம்

இராணுவ அணி வகுப்பில் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தின் சகல படைப்பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இராணுவத்தின் கனரக வாகனங்கள், கவச வாகனங்கள், ஆட்லரி படைப் பிரிவு உட்பட மனிதாபிமான நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்ட சகல உபகரணங்களும் இந்த அணிவகுப்பில் செல்லவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.

கடற்படை

கடற்படை அணி வகுப்பில் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையின் சகல படைப்பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அணிவகுப்புக்கு மேலதிகமாக கடற்படைக்குச் சொந்தமான வேகப் படகுகளான ‘சுரனிமல’, ‘நந்தமித்ர’, படகுகள், ஆழ்கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும். ‘சயுரல’, ‘சமுதுர’, ‘சாகர’, ‘சக்தி’ கப்பல்கள், ஜெட்லைனர் கப்பல், அதிவேக டோரா படகுகள் மற்றும் பெருந்தொகையான சிறிய ரக படகுகள் காலி முகத்திடல் கடலில் சாகசங்களை காண்பிக்கவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

விமானப்படை

இந்த அணிவகுப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன் விமானப் படைக்குச் சொந்தமான சுமார் 34 விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் கொழும்பு வான் பரப்பில் பறந்து செல்லவுள்ளதுடன் சாகசங்களையும் காண்பிக்கவுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் குறூப் கப்டன் என்ரு விஜேசூரிய தெரிவித்தார்.

அம்பலங்கொடைக்கும் புத்தளத்திற்கும் இடைப்பட்ட பகுதிகளிலிருந்து இந்த விமானங்கள் பறக்கவுள்ளன. கல்கிசையில் ஒன்றிணையும் விமானங்கள் ஒவ்வொன்றும் 20 செக்கன்கள் இடைவெளியில் பெல் 412, 212 ஹெலிகள் தேசிய கொடிகளை பறக்க விட்ட வண்ணமும் வை – 12, கே - 8, ஏ.என். – 32 மற்றும் ஜெட் விமானங்களும் காலி முகத்திடல் வான் பரப்பில் சாகசங்களுடன் பறந்து செல்லவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

26 மே, 2011

ஆஸ்திரேலிய அகதி கொள்கைக்கு கண்டனம் ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை

ஆஸ்திரேலிய கரையை நோக்கி படகுகளில் வரும் மக்கள் மற்றும் ஆஸ்திரேலியாவின் பழங்குடியின மக்கள் ஆகியோர் குறித்த ஆஸ்திரேலிய கொள்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் சீற்றத்துடன் தாக்கியிருக்கிறார்.

அரசியல் தஞ்சம் கோரிவருகின்ற மக்களை கட்டாயமாக தடுத்து வைப்பது என்ற ஆஸ்திரேலிய கொள்கையானது அந்த நாட்டின் மனித உரிமைகள் வரலாற்றின் மீது படிந்துள்ள ஒரு கரு நிழல் என்றும், அந்த நாட்டின் பூர்வகுடியினர் குறித்த அரசாங்க கொள்கையானது அந்த மக்களுக்கு ஆழமான தாக்கத்தையும் வலியையும் கொடுத்திருக்கிறது என்றும் நவிபிள்ளை அவர்கள் கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவின் தஞ்சக் கோரிக்கையாளர்கள் குறித்த கொள்கையை நவிபிள்ளை அவர்கள் அண்மைக்காலத்தில் இவ்வாறு பகிரங்கமாக விமர்சிப்பது இது இரண்டாவது தடவையாகும்.

அத்துடன் இந்தத் தடவை அவர், தனது விமர்சனத்தை ஆஸ்ரேலியாவின் மூத்த குடிகளான, பழங்குடியின மக்களை அந்த நாட்டு அரசாங்கம் நடத்தும் விதம் குறித்தும் விரிவுபடுத்தியுள்ளார்.

ஆஸ்ரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் அவர்களின் அரசாங்கத்தின் தஞ்சக் கோரிக்கையாளர்களை கட்டாயமாக தடுத்து வைக்கும் கொள்கையானது, ஆஸ்ரேலியாவின் சர்வதேச கடப்பாடுகளை மீறும் ஒன்று என்றும், அந்த நாட்டின் மனித உரிமை குறித்த பதிவுகளில் நீண்ட காலத்துக்கு அது ஒரு கரு நிழலாக படிந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆண்களும், பெண்களும் மற்றும் அனைத்துக்கும் மேலாக அனைவருக்கும் கவலைதரும் வகையில் குழந்தைகளையும்-- இத்தனைக்கும் அவர்கள் குற்றம் எதுவும் செய்யாத நிலையிலும் கூட தடுத்து வைக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

அரசியல் தஞ்சக்கோரிக்கையாளர்கள் குறித்த விவாதங்களின் போக்கையும் அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஏதோ குறுக்கு வழியில் நன்மை பெறவிழைபவர்களால் தமது நாடு நிரம்பிவிட்டதாக இவர்களை அரசியல்வாதிகள் திரும்பத்திரும்ப விவரிப்பதாகவும் அவர் குறை கூறியிருக்கிறார்.

பழங்குடியின மக்களின் உரிமைகள் குறித்த விவகாரத்தில் அவர் கடுமையாக சீற்றத்தை வெளியிட்டிருக்கிறார்.

பொருத்தமற்ற நெகிழ்வற்ற கொள்கைகள் பழங்குடியின மக்களுக்கு ஆழமான வலியையும், வேதனையும் தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை ஆஸ்திரேலிய அரசாங்கம் இதுகுறித்த தனது கருத்து எதனையும் வெளியிடவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

எண்ணாயிரம் முஸ்லிம்களின் படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரதான சூத்திரதாரி கைது

போர் குற்றச்சாட்டுகளுக்காக ஐரோப்பாவினால் தேடப்படும் மிக முக்கிய நபர்களில் ஒருவரான முன்னாள் பொஸ்னிய சேர்ப்ஸ் இராணுவ ஜெனரல் ரெட்கோ மிளடிக் தமது நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக சேர்பியா அறிவித்துள்ளது.

ரெட்கோ மிளடிக் பொஸ்னிய சிவில் யுத்தத்தின் போது யுத்தக் குற்றங்களில் இழைத்தமையின்பேரில் தேடப்பட்டு வந்த நபர் ஆவார்.

பொஸ்னியாவின் 'ஸ்ரெப்ரெனிகா' நகரில் 1995 ஆம் ஆண்டில் சுமார் 8,000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதற்கான கட்டளையை ரெட்கோ மிளடிக்கே வழங்கியதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

சுமார் 10 வருடங்கள் தலைமறைவாகியிருந்த இவர் பொஸ்னிய யுத்தத்தின்போது இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களின் பிரதான சூத்திரதாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நாவின் யுத்தக் குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வந்த இவர் மீது இனப்படுகொலை, மனித உரிமை மீறல் உட்பட பல குற்றச்சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

வறுமையின் உச்சிக்குச் சென்று தற்கொலைக்கு துணியும் நிலையிலுள்ள குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்த புலம்பெயர் நிதிசேகரிப்பு உதவுமா?‏

வறுமையாலும் மன அழுத்தத்தாலும் இன்று யாழ். மாவட்டத்தில் பெண்கள் தற்கொலை செய்கின்ற நிலைமை அதிகரித்து வருகின்றது. இதுபோன்ற ஒரு துயர சம்பவம் நேற்று முன்தினம் யாழ் புன்னாலைக்கட்டுவான் ஈவினையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் புலிகள் இயக்க முன்னாள் பெண் உறுப்பினரான 21வயதுடைய லாவண்யா எனும் யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்துகொண்ட இந்த புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினரான லாவண்யாவை அவளின் தகப்பன் தண்டித்ததனால் அன்றே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது குடும்பம் கடந்த வன்னி இடப்பெயர்வின் பின்னர் மிகவும் வறிய நிலையில் சீவியம் நடத்தவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தது. அப்பாவுக்கும் சுகமில்லை பாடசாலைக்கு போகும் நான்கு தம்பிகள். தாய்தான் கூலிவேலை செய்து குடும்பப் பொறுப்பை பார்க்க வேண்டிய நிலைமை. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து சொந்த இடமான புன்னாலைக்கட்டுவானுக்கு வந்து சுமார் ஒன்றரை வருடங்கள் ஆனபோதும் அரசும் அரச அதிகாரிகளும் ஏன் அரசியல்வாதிகளும் இந்தக் குடும்பத்தை கண்டுகொள்ளவில்லை. மிகச்சிறிய குடிசையிலேயே அடிப்படை வசதிகளே இல்லாமல் வாழ்க்கை நடத்தினார்கள். குடும்ப கஸ்டம்; வீடு இல்லை இவ்வாறே மன விறக்தியும் வறுமையும் நிறைந்ததாய் வாழும் வளரும் காலத்தில் வாழ்க்கை நடத்திய லாண்யாவிற்கு தந்தையின் கண்டிப்பு மனமுடைந்து போயிருந்த இவளை இலகுவாக தற்கொலைக்கு கொண்டு சென்றுள்ளது. யுத்த சூழ்நிலையில் இருந்து மீண்டு இரு வருடங்கள் கடந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதனையும் எடுக்காத நிலையில், சொந்தங்களை இழந்து சொத்துக்களை இழந்து நிற்கும் இம்மக்களும் முன்னாள் புலி உறுப்பினர்களும் வறுமையாலும் மனவிரக்தியாலும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயரால் ஐரோப்பிய நாடுகளில் சேர்க்கப்பட்ட, சேர்க்கப்பட்டுவரும் நிதியினில் கொஞ்சத்தையேனும் இவ்வாறான மக்களுக்கு கொடுத்து உதவாமல் புலிகளுக்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் சேகரிக்கப்பட்ட நிதியினை அதற்குப் பொறுப்பாக செயற்பட்ட பலர் சொகுசாக செலவுசெய்து வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறானோர் மனசு வைத்தால் எந்த வழியிசலும் அந்தப் பணத்தை பாதிக்கப்பட்ட இவ்வாறான மக்களுக்கு சென்றடையச் செய்யலாம். அரசும் அரச அதிகாரிகளும் ஏன் அரசியல்வாதிகளும் இந்தக் குடும்பத்தை கண்டுகொள்ளவில்லை என்று சொல்லிக்கொண்டு இருப்பதைவிட புலம்பெயர் நாடுகளில் உள்ள நிதியினை இவ்வாறான மக்களைச் சென்றடையவாவது ஏதும் வழிவகைகளை செய்வதற்கு புலம்பெயர் நாடுகளில் நிதிசேகரிப்போர் முன்வருவார்களா? அல்லது புலம்பெயர் தமிழர்கள் முன்வந்து இவ்வாறான குடும்பங்களின் துயர் போக்க முன்வருவார்களா என்பதே இப்போதைய அத்தியாவசிய கேள்வியாகவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

விசாக்களின்றி சிங்கப்பூரில் தங்கியிருந்த 48 இலங்கையர் கைது

சிங்கப்பூரில் விசாக்களின்றி தங்கியிருந்த 48 இலங்கையர்கள் கடந்த திங்கட் கிழமை சிங்கப்பூர் குடிவரவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் செயற்படும் அனைத்து தங்கு விடுதிகளையும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்ட போதே சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 48 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 1570 வரையான வயது பருவங்களைக் கொண்டவர்கள் என்றும் தற்போது அவர்கள் அனைவரும் சிங்கப்பூர் பொலிஸார் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கடந்த வாரமும் சிங்கப்பூரில் 52 வரையான சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அந்நாட்டுப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்தினால் முடியும்: சீனா

இலங்கை தனது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு முழுத் தகைமையையும் கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு சீன அரசாங்கம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் யாவ் ஜீசி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வெளிவிவகார மைச்சர் ஜி.எல் பீரிஸ் சீனாவுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் சீன வெளிவிவகார அமைச்சரை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போதே சீன வெளிவிவகார அமைச்சர் யாவ் ஜீசி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் அந்த விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் சீனாவுக்கு சென்றிருந்தார்.

சீன வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போது ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகள், இலங்கை அராங்கத்தால் நியமிக்கப்பட்ட பரஸ்பர முகவராண்மை ஆலோசனைக் குழுவின் முன்னெடுப்புக்கள் என்பன குறித்தும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சீன அமைச்ருக்கு எடுத்துக்கூறியுள்ளார்.

இதுகுறித்து வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சீன வெளியுறவு அமைச்சரை அமைச்சர் பீரிஸ் பீஜிங்கில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினார். இரு நாடுகளுக்குமிடையே நிலவும் இருதரப்பு உறவுகள் மிகவும் சுமுகமானவையென இரு அமைச்சர்களும் குறிப்பிட்டனர்.

சீனாவின் திடமான வெளிநாட்டுக்கொள்கையான “ஒரே சீனா“ என்ற கொள்கையை இலங்கை தொடர்ந்தும் ஆதரிக்கும். சீனா எட்டியுள்ள உயரிய மாற்றமுடியாத முன்னேற்றம் மற்றும் சுபீட்சம் என்பவற்றுக்கு இலங்கையின் சார்பில் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் பயங்கரவாதத்தை பூண்டோடு அழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாதனைகளை சீன வெளிநாட்டமைச்சர் பாராட்டியதோடு நாட்டை துரித அபிவிருத்திப் பாதையில் வழிநடத்தியுள்ளமைக்கு தனது அரசாங்கத்தின் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் சீனக் குடியரசுக்கு விஜயம் செய்யுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

தருஸ்மன் அறிக்கையிலுள்ள பல்வேறுபட்ட விடயங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட பரஸ்பர முகவராண்மை ஆலோசனைக்குழுவின் முன்னெடுப்புக்கள் என்பன குறித்து அமைச்சர் பீரிஸ் சீன அமைச்சருக்கு விவரமாக எடுத்துரைத்தார்.

பொதுவாக உருவாகிவரும் சூழ்நிலைகள் பற்றி சீன வெளிநாட்டமைச்சர் யாவ்ஜீசி குறிப்பிடுகையில், இலங்கை அரசாங்கமும் அதன் மக்களும் தமது சொந்தப் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கான தகைமையை கொண்டுள்ளதை தான் உறுதிப்படுத்துவதாக தெரிவித்தார். இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் மீள் நிர்மாணம் ஆகிய பணிகளை முன்னெடுப்பதற்கு சீனா இலங்கைக்கு பக்கபலமாக இருக்குமென்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் சீனாவின் பங்களிப்பு குறித்து அøமச்சர் பீரிஸ் குறிப்பிடுகையில், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டம், மாத்தளை விமான நிலையம், புத்தளம் அனல் மின்சார திட்டம், கொழும்பு கட்டுநாயக்கா கடுகதிப் பாதை என்பவற்றுக்கு சீனா நிதி வழங்கியமைக்கு பாராட்டுத் தெரிவித்தார். இலங்கையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் பல வீதி அபிவிருத்தி மற்றும் மீள் நிர்மாண திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை இரு அமைச்சர்களும் குறிப்பிட்டதோடு இலங்கையில் முன்வைக்கப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 2ஆம் கட்டப் பணி மற்றும் மாத்தøற கதிர்காமம் புதிய ரயில் பாதை விஸ்தரிப்பு என்பவற்றுக்கான ஏற்பாடுகள் குறித்தும் இருவரும் பேச்சுவார்ததை மேற்கொண்டனர்.

2011ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேந்கொள்ளும் வருடமென பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பீரிஸ் கூறியதுடன் ஸ்ரீலங்கன் விமக்ஷினசேவை தனது சேவையினை ஷங்காய், குவாங்ஸோ ஆகிய இடங்களுக்கு ஆரம்பித்துள்ளதையும் குறிப்பிட்டார். கடந்த வருடம் ஆகஸ்டில் ஜுனான் மாகாணத்தின் ஆளுநர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது சீன ஈஸ்ரன் எயார்லைன்ஸ் தனது கன்னிச் சேவையை ஆரம்பித்ததை இரு அமைச்சர்களும் மகிழ்வுடன் நினைவுகூர்ந்தனர்.

இலங்கைக்குள் சீன உல்லாசப் பிரயாணிகளை கவர்ந்திழுப்பதில் அதிகரித்த வேகத்தை வழங்கும் வசதியை அளித்ததன் மூலம் இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட சேரிட அந்தஸ்தை சீனா வழங்கியுள்ளமை பாராட்டத்தக்கது. மேம்படுத்திய விமானத்தொடர்புடன் இலங்கைக்குள் கூடுதலான சீன முதலீடுகள் வருமென அøமச்சர் பீரிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனை சீன அமைச்சரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைத் தமிழர் விவகாரம் பிரதமரை சந்திக்கிறார் ஜெயா

இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக, பிரதமரை சந்தித்துப் பேசுவேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சென்னையில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, "போரில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் பணிநடந்துகொண்டிருக்கிறது.

இது தொடர்பாக, பிரதமரை சந்தித்து பேசுவீர்களா?' என்று கேட் டதற்கு, பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

போலி கடவுச்சீட்டு: இலங்கை பெண் கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி சென்னையிலிருந்து கொழும்பு செல்ல முயன்ற இலங்கைப் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்தனர். சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன் னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் விமானமொன்று புறப்படுவதற்கு தயாராகவிருந்தது.

இந்நிலையில் குறித்த விமானத்தில் செல்லவிருந்த பயணிகளை விமான நிலைய குடியுரிமை அதி காரிகள் சோதனையிட்டபோது வசந்தி (வயது 42) என்ற இலங்கைப் பெண்ணொருவர் இந்திய கடவுசீட்டை வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் விமான நிலைய பொலிஸார் வசம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கை பதிவு செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது தெரியவந்ததாவது,

இலங்கையை சேர்ந்த வசந்தி மஸ்கட்டில் பணியாற்றியபோது அங்கிருந்த ராமுலு என் பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்து கிருஷ்ணகிரியில் தங்கி விட்ட இவர், தான் இலங்கை பெண் என்பதை மறைத்து இந்திய கடவுசீட்டை பெற்றுக் கொண்டுள்ளார். மேலும் அக்கடவுச்சீட்டை பயன்படுத்தி இரு முறை இலங்கையில் உள்ள தங்கை வீட்டிற்கும் அவர் சென்று வந்துள்ளார்.

அதனைத் தொடந்து அவர் மீண்டும் இலங்கைக்கு செல்லவிருந்த போதே விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கண்டு பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் நியாயமானது: பொன்சேகா

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நியாயமானது. அவர்கள் விடயத்தில் அரசாங்கம் தனது கடமைகளை சரிவர செய்யவில்லை என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறுகின்ற வெள்ளைக்கொடி விவகார வழக்கின் நேற்றை விசாரணையில் கலந்துகொள்வதற்காக மன்றுக்கு வருகைதந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,

தமிழ் அரசியல் கைதிகள் விடயங்களில் அரசாங்கம் தன்னுடைய கடமையை முறையாக மேற்கொள்ளவில்லை அதனால் தான் அவர்களின் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இதேவேளை வெள்ளைக்கொடி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் மதிய போசன இடைவேளைக்காக மன்றிருந்து வெளியேறிய அவர். அரசாங்கம் அரசாங்க ஊழியர்களை அடிமைகளாகவே நடாத்துகின்றது. அவர்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கமுடியாத நிலையில் இருக்கின்றனர். பேச்சு சுதந்திரமும் மறுக்கப்பட்டுள்ளது.

பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் கருத்துக்களை தெரிவித்துக்கொண்டே செல்கையில் சிறைச்சாலை அதிகாரிகள் ஒளி,ஒலிபதிவு கருவிகளை தங்களுடைய கைகளினால் பலத்தடவைகள் மறைப்பதற்கு முயற்சித்தனர். அதற்கிடையில் ஊடகவியலாளர்களுக்கு இடையூறு விளைவிக்கவேண்டாம். அவர்களின் பணிகளை செய்வதற்கு இடமளிக்கவேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள்: மூன்று இலட்சம் பேர் மீள்குடியமர்வு; அரசு மனிதாபிமான நல்வாழ்வளிப்பு

அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச
அமைப்புகள் உதவியுடன் நிறைவேற்றம்



பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தினால் உள்ளூரில் இடம்பெயர்ந்த சுமார் மூன்று இலட்சம் மக்களுக்கு நல்வாழ்வளிக்கும் சமூகப் பணியை மனிதாபிமான முறையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வந்துள்ளது.

அரச சார்பற்ற சர்வதேச அமைப்புக்கள் மற்றும் வெளிநாடுகளின் ஒத்துழைப்புடன் மீள்குடியேற்றப் பணிகள் வெற்றிகரமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என அரசாங்கத்தின் கொள்கை விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசினால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்பாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்தும், மன்னாரில் இருந்தும் வெறுமனே 48மணி நேர முன்னறிவித்தலை கொடுத்த பின்னர் அங்கிருந்து எல்.ரி.ரி.ஈயினரினால் விரட்டியடிக்கப்பட்ட 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தும் பணிகளையும் அரசாங்கம் தங்கு தடையின்றி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

யுத்தம் நடந்து கொண்டிருந்த போது கூட யாழ்ப்பாண குடாநாட்டுக்கும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத வன்னிப் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு தேவையான அளவு அத்தியாவசிய உணவுப் பொருட்களை பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கியிருந்த போதும் அரசாங்கம் அனுப்பி வைக்கத் தவறவில்லை.

எல்.ரி.ரி.ஈயினர் இந்த உணவுப் பொதிகளை தங்களின் சொந்தத் தேவைக்காக அபகரித்துக் கொண்டது மட்டுமன்றி அவற்றை இப்பிரதேசங்களுக்கு ஏற்றிச் சென்ற லொறிகளையும், கப்பல்களையும் தாக்கி சேதப்படுத்திய போதிலும், பல்வேறு அச்சுறுத்தல்களின் மத்தியிலும் அரசாங்கம் உணவுப் பண்டங்களை இந்த அப்பாவித் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தது.

2009ம் ஆண்டு மே மாதத்தில் இரண்டாவது வாரத்தில் வன்னியில் யுத்தம் கொடூரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அங்குள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை எல்.ரி.ரி.ஈ யினர் கேடயங்களாக வைத்து, அவர்களுக்கு பின்னால் மறைந்திருந்தவாறு இலங்கை ஆயுதப் படை வீரர்களை நோக்கி தாக்குதல்களை மேற்கொண்ட போதிலும், இலங்கை இராணுவத்தினர் ஆத்திரமடையாமல் சாதாரண மக்களுக்கு உயிராபத்து ஏற்படாத வகையில் எல்.ரி.ரி.ஈ தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து, இறுதியில் எந்தவொரு உலகநாடும் செய்ய முடியாத ஒரு பெரும் சாதனையை புரிந்துள்ளார்கள்.

யுத்தத்தின் போது பணயக் கைதிகளாக எல்.ரி.ரி.ஈயினர் வைத்திருந்த சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் பொதுமக்களை இலங்கைப் படையினர் பாதுகாப்பான முறையில் மீட்டெடுத்து அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதற்காக நலன்புரி முகாம்களில் சேர்த்து அங்குள்ள மக்களுக்கு உணவு விநியோகம் உட்பட சகல சுகாதார வசதிகளையும், இருப்பிட வசதிகளையும் செய்து கொடுத்தார்கள்.

இவ்விதம் பல்லாண்டு காலம் எல்.ரி.ரி.ஈ கொடுமையினால் தங்கள் உரிமைகளையும் சுய கெளரவத்தையும் இழந்து, அல்லல்பட்டுக் கொண்டிருந்த அப்பாவி தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட மனிதாபிமான மீள்வாழ்வு செயற்பாடுகளினால் அவர்கள் எதிர்பாராதவாறு ஒரு அமைதியான புதுவாழ்வு இன்று கிடைத்திருக்கிறது. நலன்புரி முகாம்களில் இருந்த பிள்ளைகளின் கல்விக்காக அரசாங்கம் அங்கு பாடசாலைகளை ஆரம்பித்து, அப்பிள்ளைகளை ஜி.சி.ஈ சாதாரண பரீட்சையில் சித்தியடைவதற்கு ஏற்றவகையில் கல்வியையும் புகட்டிய சாதனையை புரிந்துள்ளது.

யுத்தத்தினால் வாழ்வாதாரத்தை இழந்து, துன்பத்தில் மூழ்கியிருந்த மக்களுக்கு புதிய வாழ்வாதாரங்களை பெற்றுக்கொள்வதற்கு உதவியதுடன் அம்மக்களுக்கு தொழிற்பயிற்சியையும் இந்த முகாம்களில் வழங்கி வந்தது.

இவ்விதம் அரசாங்கம் தனது தேசிய பொருளாதாரத்தின் பெரும் பகுதியை யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக செலவிட்டுள்ளது. இப்போது வடபகுதியில் பாதைகளை அமைத்தல், ரயில் பாதையை நீடித்தல், யுத்தத்தினால் சிதைந்து போன பாடசாலை கட்டடங்கள், அரசாங்க கட்டடங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளை திருத்தியதீ மத்தும் வருகின்றது.

யுத்த காலத்தில் வடபகுதிக்கு 60 சதவீதமான வைத்திய உபகரணங்களை யும், மருந்து வகைகளையும் அரசாங்கம் அனுப்பி வைத்து, அங்குள்ள நோயாளிகளுக்கு உதவி செய்தது. எஞ்சிய 40 சதவீத மருந்துகளை தென் இலங்கைக்கு விநியோகித்தது.

இவ்விதம் யுத்தம் முடிவடைந்த பின்னரும் யுத்தம் நடந்து கொண்டிருந்த போதும் அரசாங்கம் தனது மனிதாபிமான பணிகளை சரியான முறையில் மேற்கொண்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு பேருதவி புரிந்திருக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர் இராமச்சந்திரன் நெதர்லாந்தில் கைது

முக்கிய கோப்புக்களுடன் சிக்கியது ‘பென்டிரைவ்’

ஐரோப்பிய வங்கிகளில் பெருந்தொகை பணம் வைப்பு

நெதர்லாந்தில் செயற்பட்டு வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் எஸ். இராமச்சந்திரன் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் பிரிவொன்றின் தலைவராகவும், முக்கிய தளபதிகளில் ஒருவராகவும் செயற்பட்டு வந்த நெடியவன் எனப்படும் சிவரூபன் நோர்வேயில் கைது செய்யப்பட்டதன் பின் நெதர்லாந்தில் இராமச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராமச்சந்திரனின் வீட்டை சோதனை யிட்ட பொலிஸார் ‘பென் டிரைவ்’ (யு எஸ் பி)வில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கோப்புகளை கைப்பற்றியுள்ளனர். இதில் 136 மில்லியன் பணம் தொடர்பான விபரங்கள் அடங்கியுள்ளதாகவும் அப்பணம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் ஆயுதக் கொள்வனவுக்காக ஐரோப்பிய வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது.

நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்யும் ‘ஒபரேசன் கொன்னிக்’ நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே இராமச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய நெதர்லாந்து அலுவலகத்தில் பிரதானியாக செயற்பட்ட ஞானம் என்பவரும் நெதர்லாந்தின் இரகசியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், இவர்களுடன் தொடர்பைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் ஹேக், ட்ராசெய்ஸ்ட், அம்ஸ்டர்டாம், ரல்டே மற்றும் அம்சோடம் ஆகிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளையடுத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்புத் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நெதர்லாந்து அதிகாரிகள் இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிக ளிடம் விசாரணை நடத்த அனுமதி கோரியுள்ளனர்.

இது தொடர்பாக நெதர்லாந்து வானொலி வெளியிட்டுள்ள தகவலில், குமரன் பத்மநாதன் உள்ளிட்ட 13 பேரை அடுத்த மாதம் விசாரிக்க இலங்கையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை சட்டமா அதிபர் மொகான் பீரிசுடன் நெதர்லாந்து அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

அதேவேளை, இந்த விவகாரம் பற்றிய சாட்சியங்களைப் பெறுவதற்காக நெதர்லாந்து நீதவான்களும், சட்டவாளர்களும் அமெரிக்காவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

அமெரிக்காவில் இவர்கள் புலிகளின் ஆயுதக் கொள்வனவு நடவடிக்கைகளில் தொடர்புடைய பிரதீபன் தவராசாவிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.

இவர் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் விடுதலைப் புலிகளுக்கு வெடிபொருட்கள், இயந்திரத் துப்பாக்கிகள், ஏவுகணைகள், ஆட்டிலறிகள், ரேடர்கள் போன்ற ஆயுதங்களை கொள்வனவு செய்திருந்தார்.

இவரது மடிக் கணனியில் 20 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான முன்னுரிமைப் பட்டியல் ஒன்றை அமெரிக்காவின் சமஸ்டி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தனர்.

அந்தப் பட்டியலில் ஒவ்வொன்றும் 160,000 டொலர் பெறுமதியான 25 மி.மீ. விமான எதிர்ப்புப் பீரங்கிகள் ஆறு, ஒவ்வொன்றும் 30,000 டொலர் பெறுமதியான ரைப் – 69 ரகத்தைச் சேர்ந்த இரட்டைக் குழல் 30 மி.மீ. கடற்படைப் பீரங்கிகள் ஆறு, ஆயிரக் கணக்கான தன்னியக்கத் துப்பாக்கிகள், மில்லியன் கணக்கான ரவைகள், கிரனேட் செலுத்திகள், 50 தொன் சி – 4 வெடிமருந்து, 5 தொன் ஆர்டிஎக்ஸ் வெடிபொருள், 50 தொன் ரிஎன்ரி சீன வெடிபொருள், விமானக் குண்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் 50 தொன் ட்ரைரோனல் வெடிபொருள் ஆகியவை இருந்ததாக அமெரிக்காவின் சமஸ்டிப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நெதர்லாந்தில் உள்ள இராமச்சந்திரன் என்பவர் இந்த ஆயுதக் கொள்வனவுகளுடன் தொடர்புபட்டிருந்ததாக பிரதீபனின் மடிக் கணனியில் இருந்த தகவல்களின் மூலமே தெரியவந்துள்ளது.

இதேவேளை நெதர்லாந்து விசாரணைக் குழுவொன்று நேற்று ஒஸ்லோவுக்கு புறப்பட்டுச் சென்றது.

சந்தேக நபர்களின் சட்டவாளர்களை உள்ளடக்கிய இந்தக் குழுவினர் நெடியவனிடம் விசாரணை நடத்தவே ஒஸ்லோ செல்கின்றனர்.

இவர் விடுதலைப் புலிகளுக்கு மில்லியன் கணக்கான டொலர் பணத்தை வழங்கியதாக நெதர்லாந்து அதிகாரிகள் நம்புகின்றனர்.

‘ஒப்பரேசன் கொனிக்’ என்ற பெயரில் நெதர்லாந்து அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் இந்த நிதி வலையமைப்பு மீதான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கையில் நெதர்லாந்தில் 90 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நூற்றுக் கணக்கான வீடுகளில் நடத்தப்பட்ட தேடுதல்களில் கணனிகள், இறுவட்டுக்கள், ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டு ள்ளன என்றும் நெதர்லாந்து வானொலி தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை இராணுவத்தினர் தகவல்

நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்வதற்கு இலங்கை இராணுவத்தினரின் தகவல்களே உதவியதாக நெதர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களில் இருந்து விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புத் தொடர்பாகக் கிடைத்த தகல்களைக் கொண்டே இலங்கை இராணுவத்தினர் நெதர்லாந்தில் செயற்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தொடர்பான தகவல்களை வழங்கியிருந்தனர்.

அதனை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலமாகவே விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இலங்கை இராணுவத்தினரின் தகவல்களைக் கொண்டே நெதர்லாந்தில் செயற்பட்ட விடுதலைப் புலிகளின் வலையமைப்பைக் கண்டறிந்து அதன் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய முடிந்துள்ளதாக நெதர்லாந்தின் அரச வானொலியும் செய்தியொன்றை ஒலிபரப்பியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ. தே. க. சபையினுள் ஆர்ப்பாட்டம் அமளிதுமளிக்கு மத்தியில் சட்டமூலம் நிறைவேற்றம்






பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவப் பயிற்சி வழங்குவதற்கு எதிராக ஐ. தே. க. நேற்று பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டது.

ஐக்கிய தேசியக் கட்சியினர் சபையில் பதாகைகளைத் தாங்கிய வண்ணம் ஆர்ப் பாட்டத்தை மேற்கொண்ட போதிலும் நேற்றைய தினம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பீடைக் கொல்லிகளைக் கட்டுப்படுதல் திருத்தச் சட்டமூலம் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு எதுவுமின்றி சபையில் நிறைவேற்றப்பட்டது.

ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், ஐக்கிய தேசியக் கட்சியினர் சபையில் எழுந்துநின்ற போதும் விவசாய அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேற்படி சட்ட மூலத்தை சபையில் சமர்ப்பித்தார். இதற்கான விவாதத்தில் எத்தரப்பினரும் உரையாற்றவில்லை. அதனையடுத்து சபையின் இணக்கப்பாட்டுடன் அந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது.

க்கிய தேசியக் கட்சியினர் சுமார் ஒரு மணிநேரம் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திய போதும் சகல நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்றன. அதனையடுத்து பிற்பகல் 3.15 மணியளவில் ஐ. தே. க. ஆர்ப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டது.

ஐ. தே. க. மேற்படி ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பிக்க முன் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா விசேட அறிக்கையொன்றை சபையில் முன்வைக்க முயன்ற போது சபாநாயகர் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. அதற்கான அனுமதியை ஏற்கனவே பெற்று பிறிதொரு நாளில் அதனை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் அவரைக் கேட்டுக் கொண்டார். அதனை யடுத்து ஐ. தே. க. வினர் பதாகைகளை ஏந்தி சபையில் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர். சிறிது நேரத்திலேயே ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்தது.
மேலும் இங்கே தொடர்க...

சிறுநீரகங்கள் பாதிப்பு:நடிகர் ரஜினிக்கு லண்டனில் சிகிச்சை






சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மேலதிக சிகிச்சைக்காக நடிகர் ரஜினி அடுத்த சில நாட்களில் லண்டன் கொண்டு செல்லப்படவுள்ளார்.

முன்னதாக அவரை அமெரிக்கா அழைத்துச் செல்ல திட்டமிட்டனர். பின்னர் அமெரிக்க டாக்டர் குழு சென்னைக்கு வரவழைக்கப்பட்டது. இந்நிலையில் அவரை லண்டனுக்கு

கொண்டு செல்ல முடிவு செய்ய ப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29ம் திகதி ராணா படப்பிடிப்பில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்பதைச் சொல்லாமல் மூடி மறைத்தனர் அவரது குடும்பத்தினர்.

இதையடுத்து முதலில் இசபெல்லா மருத்துவமனையிலும் இப்போது ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையிலும் ரஜினி சிகிச்சை பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 1 மாத காலமாகவே ரஜினி உடல் நலக்குறைவுடன் உள்ளார்.

மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கு முன்பே ரஜினிகாந்துக்கு உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை ஆரம்ப நிலை சர்க்கரை நோய் ஆகியவை இருந்துள்ளன. இவற்றுக்கு உரிய சிகிச்சையை எடுக்காமல் இருந்ததால் சிறுநீரகங்களும் பாதிக்கப்பட் டன. சிறுநீரகச் செயல்பாடு பாதிப்பு காரணமாக அவருக்கு ஹீமோ டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அவருக்கு 5 முறை ஹீமோ டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலை, சிறுநீரக பாதிப்புக்கு உயர் சிகிச்சை அளிக்க அவரை லண்டன் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரம் அவர் லண்டன் பயணமாவார் என ரஜினி குடும்பத்துக்கு வேண்டியவர்கள் தெரிவித்தனர். பயண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை - இந்திய நட்புறவை சீர்குலைக்க ஜே.வி.பி முயற்சி

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையி லான நெருங்கிய நட்புறவைப் பலப்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ள வேளையில் இந்த நட்புறவைச் சீர்குலைக்கும் செயற்பாடுக ளையே ஜே. வி.பி. மேற்கொள்வதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜே. வி.பி. எம்.பி. அநுர குமார திசாநாயக்க இலங்கை- இந்திய வெளிநாட்டமைச்சர் களின் அண்மைய கூட்டறிக்கை தொடர்பான விசேட அறிக்கையொன்றை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் உரையாற்று கையில், இவ்வறிக்கையானது இலங்கையின் இறைமை, பாதுகாப்பு, பொருளாதார நடவடிக்கைகளில் இந்தியா தலையீடு செய்வதையே காட்டுகிறது எனவும் இதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன; வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தற்போது வெளிநாட்டு விஜயமொன்றில் ஈடுபட்டுள்ளதால் அவர் நாடு திரும்பி யதும் அநுர குமார திசாநாயக்கவின் கேள்விகளுக்கு அவர் விரிவான பதிலளிப்பார் எனவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஹசான் திலகரத்ன தலைமறைவு தேடித்தருமாறு ஐ.தே.கவிடம் அமைச்சர் மஹிந்தானந்த கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஆட்ட நிர்ணய சதியில் தொடர்பு பட்டிருந்ததாக ஐ.தேக. மாகாண சபை உறுப்பினர் ஹசான் திலகரத்ன குற்றஞ்சாட்டியிருந்தார்.

அது குறித்து விசாரிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் உறுப்பினர்கள் இலங்கை வந்த போது அவர் தலைமறை வாகி விட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுக்கமகே கூறினார்.

வாய்மூல விடைக்காக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

இலங்கை வீரர்கள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக ஹசான் திலகரத்ன ஊடகமொன்றினூடாக குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால் அது தொடர்பாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இதனையடுத்து இது பற்றிய தகவல்களை பெறுமாறு நான் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்தேன்.

இதன் படி இரு தடவைகள் ஹசான் திலகரத்னவை பொலிஸார் விசாரித்தனர். ஆனால் அவர் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

பாதுகாப்பு வழங்கினால் உண் மையை வெளியிடுவதாக அவர் தெரிவித்தார். அதன்படி அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்தோம். ஆனால் அவரை தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரின் மனைவிதான் பதில் வழங்கினார். சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் பிரதிநிதிகள் இங்கு வந்தனர்.

அவர்கள் ஹசான் திலகரத்னவை சந்திக்க முயன்ற போதும் முடியவில்லை. அவர் தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடித்தருமாறு ஐ.தே.க. தலைவரையும் ஐ.தேக. வையும் கோருகிறேன்.

2010 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் சபையுடன் பல கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் டொலர் முதல் 10 ஆயிரம் டொலர் வரை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் சபையில் நிதி நெருக்கடி எதுவும் கிடையாது. ஊழியர்களுக்கு உரிய படி சம்பளம் வழங்கப்படுகிறது. கிரிக்கெட் சபை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கிறேன்.
மேலும் இங்கே தொடர்க...

23 மே, 2011

பின்லேடனை கொன்றதையொத்த நடவடிக்கை மீண்டும் பாகிஸ்தானில் முன்னெடுக்கப்படலாம்: ஒபாமா

பாகிஸ்தானின் போராளிக் குழுத் தலைவர் இன்னொருவர் இருப்பது கண்டறியப்பட்டால் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை கொல்வதற்கு முன்னெடுக்கப் பட்டதை யொத்த இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார்.

தனது ஐரோப்பிய விஜயத்தை முன்னிட்டு "பிபிசி' செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானிலோ அல்லது ஏனைய இறைமையுள்ள பிராந்தியமொன்றிலோ அல் கொய்தாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரோ அல்லது தலிபான் தலைவர் முல்லாஹ் ஓமரோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என பராக் ஒபாமாவிடம் வினவப்பட்ட போது அமெரிக்கா தேவைப்பட்ட நடவடிக்கையை எடுக்கும் என ஒபாமா தெரிவித்தார்.

""அமெரிக்காவை பாதுகாப்பது தான் எமது வேலையாகும்'' நாங்கள் பாகிஸ்தானின் இறைமைக்கு மிகுந்த கௌரவமளிக்கின்றோம். ஆனால் எமது மக்களையும் எமது நட்புறவு நாடுகளிலுள்ள மக்களையும் கொல்வதற்கு எவராவது திட்டமிடுவதை எம்மால் அனுமதிக்க முடியாது'' எனக் கூறிய பராக் ஒபாமா எமது நடவடிக்கையை மீறி இத்தகைய செயற்றிட்டங்கள் செயலுருவம் பெறுவதை நாம் அனுமதிக்க முடியாது'' என வலியுறுத்தினார்.

சவூதி அரேபியாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒசாமா பின்லேடன் அமெரிக்க விசேட படையினரால் பாகிஸ்தானின் அபோதாபாத்திலுள்ள வசிப்பிடத்தில் வைத்து கொல்லப்பட்டார் என்பது தெரிந்ததே .
மேலும் இங்கே தொடர்க...

இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் சர்வதேச சமூகம் செயல் முனைப்பற்றிருந்தமைக்கு காரணம் என்ன?:

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் அனைத்துலக சமூகம் செயல் முனைப்பு அற்ற நிலையில் இருந்ததென நோர்வே தமிழ் கற்கை மையத்தின் கருத்தரங்கில் நோர்வேயின் வெளியுறவு அரசியல் ஆய்வு மையத்தின் தலைவரும் முன்னாள் நோர்வே பிரதி வெளியுறவுத் துறை அமைச்சரும் ஐ.நா. பிரதிநிதியுமான ஜான் இஜ்லண்ட் தெரிவித்துள்ளார்.ஆசியாவின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவுகளையும் உதவிகளையும் வழங்கியமை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்துலக போரின் விளைவாக விடுதலைப் புலிகளை வேறொரு அணுகு முறையில் அனைத்துலக சமூகம் எதிர்கொள்ளும் நிலைக்குள் தள்ளப்பட்டமை என இரண்டு மூல காரணிகளாலேயே அனைத்துலக சமூகம் செயல் முனைப்பு அற்ற நிலையில் இருந்ததென அவர் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலங்களுடன் போர் முடிவுக்கு வந்த 2 ஆவது ஆண்டு நிறைவினையும் நிபுணர் குழு அறிக்கையினையும் முன்னிறுத்தி தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் மீதான கவனக் குவிப்பினைப் பெறுவதற்கும் நோர்வே உட்பட்ட அனைத்துலக சமூகத்தின் கடப்பாடுகளை வலியுறுத்தவும் கடந்த 10 ஆம் திகதி நோர்வே தமிழ் கற்கை மையம் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் இக் கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது.

இக் கருத்தரங்கு ஒஸ்லோ பல்கலைக் கழகத்தின் சமூக மானிடவியல் துறைப் பேராசிரியர் தலைமையில் இடம்பெற்றது.

ஜான் இஜ்லண்ட் தனது கருத்துரையில் மேலும் தெரிவிக்கையில், உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி நிலை நாட்டப்படுவது வன்முறை சார்ந்த அவலங்களுக்கு முகம் கொடுத்த தேச மக்களுக்கு மிகவும் அவசியமானதாகும். தவறுகள் வெளிப்படுத்தப்பட்டு பொறுப்புக் கூறப்பட்டு திருத்தப்படாவிடின் நடந்தேறிய அவலங்களும் தவறுகளும் மீண்டும் நடந்தேறும் அபாயம் உள்ளது. எனவே உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும்.

இரு தரப்பு மீதான போர்க் குற்றச் சாட்டுகளும் விசாரிக்கப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். வென்ற தரப்பான கொழும்பு அதிகார மையத்தின் மீதே பொறுப்புக் கூறும் வகையிலான கவனம் குவிக்கப்பட வேண்டும்.

தேசிய அரசுகள் தமது சொந்த மக்களை இன அழிப்பு, போர்க்குற்ற மீறல்கள், இனத்துடைப்பு மற்றும் மனிதத்திற்கு எதிரான மீறல்களிலிருந்து பாதுகாக்கத் தவறும் பட்சத்தில் நாங்கள் ஒருமித்தும் விரைவாகவும் வலுவானதுமான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என 2005 இல் இடம்பெற்ற ஐ.நா. உயர் மட்டக் கூட்டத்தில் 190 நாடுகள் உறுதியெடுத்திருந்தன.

இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலான விரைந்த செயற்பாடு லிபியா விவகாரத்தில் நடைமுறைப்பட்டது. ஏலவே எச்சரிக்கப்பட்டிருந்த போதும் 2009 இல் இலங்கைத் தீவில் ஐ.நா உட்பட்ட அனைத்துலக சமூகம் நடந்தேறிய அவலமான பேரழிவினைத் தடுக்கத் தவறிவிட்டன.

இறுதிக் கட்டப் போரின் போது நலன்சார் அரசியல் காரணிக்கு அப்பால் அனைத்துலக சமூகம் இரண்டு மூலக் காரணிகளால் செயல் முனைப்பு இல்லாதிருந்தது. முதலாவது காரணி, ஆசியாவின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவுகளையும் உதவிகளையும் வழங்கின.

இரண்டாவது காரணி, பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்துலக பேக்ஷிரின் விளைவு, விடுதலைப் புலிகளை வேறொரு அணுகு முறையில் அனைத்துலக சமூகம் எதிர்கொள்ளும் நிலைக்குள் தள்ளப்பட்டமையாகும்.

நோர்வேக்கு முக்கிய பொறுப்புகள் உள்ளன. அதேவேளை, அதன் வகிபாகம் எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமையும். இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் மூலம் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது மிக அவசியமானது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. மனித உரிமை பேரவை கோரினால் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை: மார்ட்டின்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில் இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படுகின்ற யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த முடியும் என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான முதன்மையான அதிகாரம் இலங்கை அரசாங்கத்திடமே காணப்படுகின்றது. அது மட்டுமல்லாது, அவ்வாறான குற்றச் செயல்களுக்கு தண்டனைகளை பெற்றுக் கொடுப்பதற்கான அதிகாரமும் அவ்வரசாங்கத்துக்கே உரித்துடையதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பேச்சாளர் நெசர்கீ மேலும் கூறியுள்ளதாவது,

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை, மனித உரிமைகள் பேரவை மற்றும் பொதுச் சபை ஆகியவற்றினால் கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில் இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படுகின்ற யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள முடியும். மேற்படி அமைப்புகள் எந்தவித கோரிக்கைகளையும் எடுக்காத நிலையில் இலங்கை அரசாங்கம் அவ்வாறானதொரு விசாரணைக்கு கோரிக்கை விடுக்கும் பட்சத்திலேயே யுத்தக் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 30 ஆம் திகதி முதல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாகவிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

மன்னார் பெரிய தம்பனை பகுதியில் ஆயுதங்கள் மீட்பு

மன்னார் பெரிய தம்பனையில் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

பெரிய தம்பனைக் குளக்கரையில் உள்ள மரமொன்றின் கீழ் புதைக்கப் பட்டிருந்த 25 ரவைகள் மீட்கப்பட்டதாகவும் இவற்றுள் 15 ரவைகள் துருப்பிடித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மிகுதி ரவைகள் பெரிய தம்பனை இராணுவ முகாமில் ஒப்படைக்கப் பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

கிழக்கு மாகாண சபை உறுப்பினர; கிருஸ்ணானந்தராஜாவை பார்வையிட உறவினர்களுக்கு பொலிஸார் அழைப்பு

கிழக்கு மாகாண சபை உறுப்பினர; கிருஸ்ணானந்தராஜாவை பார்வையிட உறவினர்களுக்கு பொலிஸார் அழைப்பு செயலாளர் தெரிவிப்பு
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கிருஸ்ணானந்தராஜா அவர்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைச் செயலகத்திலிருந்து கடந்த 16-05-2011 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு சந்தேகத்தின் பேரில், எதுவித காரணங்களும் வீட்டாருக்கோ அல்லது கட்சித் தலைமைக்கோ தெரிவிக்காமல் விசாரனைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட மாகாண சபை உறுப்பினரின் குடும்பத்தார் நாளை சனிக்கிழமை (21-05-2011) கொழும்பு 4ம் மாடிக்குச் சென்று காலை 09-00 –12-00 மணிக்குள் பார்வையிடலாம் என மட்டக்களப்பு பொலிஸார் அறிவித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கௌரவ கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் திரு.சி.சந்திரகாந்தன் அவர்கள் தலைமையில் கொழும்புக்குச் சென்ற கட்சியின் உயர்மட்டக் குழுவினருக்கும் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபப்~ அவர்களுக்கும் இடையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்று முடிந்த பேச்சுவார்த்தையின் பயனாகவே குறித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கிருஸ்ணானந்தராஜா அவர்களை உறவினர்கள் நாளை பார்வையிடுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது என்றார்.
கைது செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர் மட்டக்களப்பில் அண்மையில் மதியழகன் என்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரின் கொலைச் சம்பவத்தில் இவருக்கும் சம்மந்தம் இருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே விசாரணைக்கென்று கொழும்பிலிருந்து வந்த குற்றத் தடுப்பு பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார் என்றும், அவரின் விடுதலை இன்னும் ஒரு வாரத்திற்கு விசாரணைகள் முடிந்த பிறகே விடுவிக்கப்படுவார் அல்லது நீதி மன்றத்தில் ஆஜராக்கப்படுவார் என்றும் நேற்றைய ஜனாதிபதி சந்திப்பின் போது கூறப்பட்டதாகவும் செயலாளர் எ.சி.கைலேஸ்வரராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

2400 பேருக்கு நாளை ஆசிரியர் நியமனம் அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் வைபவம்

தேசியக் கல்வியியல் கல்லூரிகளில் மூன்று வருடகால டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த சுமார் 2400 பேருக்கு நாளை (24ம் திகதி) ஆசிரியர் நியமனம் வழங்கப் படவுள்ளது.

இவர்களுக்கு ஆசிரிய சேவை நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் அலரி மாளிகையில் காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது. கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனா தலைமையில் நடைபெறவுள்ள வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஆசிரியர் நியமனக் கடிதம் கையளிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் கே. முகம்மட் தம்பி தெரிவித்தார்.

இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ள தாகவும் உரிய நேரத்திற்கு சமுகமளித்து ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும், மேலதிக செயலாளர் முகம்மட்தம்பி மேலும் தெரிவித்தார்.நாடளாவிய ரீதியில், தேசிய கல்வியியற் கல்லூரிகளில் மூன்று வருட டிப்ளோமாப் பாடநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த சுமார் 2400 பேர் நாளைய தினம் நியமனக் கடிதம் பெறவுள்ளனர். இலங்கை ஆசிரியர் சேவை வகுப்பு – 03 தரம் ஒன்றுக்கு இவர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

புதிய டிப்ளோமாதாரிகளில் அதிகமானவர்கள் நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளுக்கே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நியமனத்தின் மூலம் நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம் முற்றாக நிவர்த்திக்கப்படும் என மேலதிக செயலாளர் முகம்மட்தம்பி குறிப்பிட்டார்.

தேசிய பாடசாலைகளுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தவிர்ந்த எஞ்சியவர்கள், மாகாணப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாகாணப் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களின் அடிப்படையிலும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் வழங்கிய பட்டியலின் பிரகாரமும், மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களையும் கல்வி அமைச்சே வழங்கவுள்ளது.

நாளைய வைபவத்தின் போது, மாகாணப் பாடசாலை ஆசிரியர்களும், ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதம் பெறவுள்ளனர்.

ஆசிரியர்களில் அதிகமானவர்கள், அவர்களின் வதிவிடத்தை அண்டிய பாடசாலைகளுக்கே நியமிக்கப்பட்டுள்ளனர். வெற்றிடங்களின் அடிப்படையில், பாட ரீதியாக ஒருசில ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கும், மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடங்களைப் போன்று பிற மாகாணப் பாடசாலைகளுக்கு எந்தவொரு ஆசிரியரும் நியமனம் செய்யப்படவில்லை. கடந்த வருடங்களில் பிற மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் எதிர்கொண்ட கஷ்டங்களை கருத்திற்கொண்டு இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலதிக செயலாளர் குறிப்பிட்டார்.

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இரு வருட உள்ளகப் பயிற்சியினையும் ஒரு வருட பாடசாலைக் கற்பித்தல் பயிற்சிகளையும்பெற்ற டிப்ளோமாதாரிகளே ஆசிரியர் நியமனக் கடிதம் பெறவுள்ளனர். இவர்களில் தமிழ், ஆங்கிலம், சிங்களம், மொழி டிப்ளோமாதாரிகள் அடங்குவர்.
மேலும் இங்கே தொடர்க...

ஆளுமை பயிற்சித்திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்கவில்லை

பல்கலைக்கழகம்

உயர் கல்வியமைச்சு அறிவிப்பு; திட்டமிட்டபடி தொடரும்

பல்கலைக்கழகத்துக்குத் தகுதி பெறும் மாணவர்களுக்கு ஆளுமை பயிற்சி வழங்கும் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது.

உச்சநீதிமன்றம் பல்கலைக்கழகத்துக்குத் தகுதி பெறும் மாணவர்களுக்கான ஆளுமை பயிற்சியை இடைநிறுத்துமாறோ அல்லது ஒத்திவைக்குமாறோ எந்தவித மான உத்தரவுகளையும் பிறப்பிக்கவி ல்லையென உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரட்ண அரசாங்கத் தகவல் திணைக்களத் துக்குத் தெரிவித்துள்ளார்.

ஆளுமை பயிற்சித்திட்டத்தை ஒத்திவைக்க முடியுமா என உச்சநீதிமன்றம் எம்மிடம் கோரியிருந்தது. எனினும், இப்பயிற்சித் திட்டத்தை 23ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப் பட்டிருப்பதுடன், இதற்கு 90 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருப்பதாகவும் நாம் நீதிமன்றத்துக்குப் பதிலளித்துள்ளோம் என்றார்.

மூன்று வாரங்களைக்கொண்ட இந்த ஆளுமை பயிற்சித் திட்டத்தில் கலந்து கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தங்குமிட வசதிகள், உணவு, சீருடை என்பன வழங்கப்படும். 185 மில்லியன் ரூபா செலவில் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் 22,000 மாணவர்களுக்கும் ஆளுமை பயிற்சி கட்டாயமாக வழங்கும் திட்டமொன்றை உயர்கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது. இத்திட்டம் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளது. 10,000 மாணவர்கள் இன்று தமது பயிற்சிகளை ஆரம்பிக்கின்றனர்.

இந்த ஆளுமை பயிற்சியானது மாணவர்களுக்கான இராணுவப் பயிற்சி இல்லையென்று தெரிவித்திருக்கும் அவர், பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் மாணவர்கள் தமது திறமைகளையும், ஆளுமையையும் வளர்த்துக்கொள்ளும் நோக்கிலேயே இப்பயிற்சி வழங்கப்படுவதாகவும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

நெடியவன் கைது: உன்னிப்பாக கவனிக்கிறது இலங்கை

புலிகளின் முக்கியஸ்தர் நெடியவன் நோர்வேயில் கைது செய்யப்பட்டதன் பின்னரான நிலைமைகளை உன்னிப் பாகக் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நெடியவனின் கைது மற்றும் அவர் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் பற்றி அவதானித்து வருவதுடன், நெடியவனின் பயங்கரவாத நடவடிக்கைகள் இலங்கையைப் பாதிக்குமா என்பது பற்றி ஆராயப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நோர்வேயில் புலிகள் அமைப்பைத் தடை செய்யவேண்டுமென அந்நாட்டு எதிர்க்கட்சியான கொன்ச வேர்டிவ் கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது. புலி பயங்கரவாதிகள் நோர்வேயில் செயற்படுவதை அனுமதிக்க முடியாது என நோர்வே எதிர்க்கட்சி குறிப்பிட்டு ள்ளது.

புலிகள் அமைப்புக்காக ஐரோ ப்பா உட்பட பல்வேறு நாடுகளில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நோர்வேயில் வசித்து வந்த நெடியவன் ஹொலன்ட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

சிறைச்சாலைகளில் கூரையில் ஏறி கைதிகள் போராட்டம்

வெலிக்கடை, போகம் பரை மற்றும் மஹர சிறைச் சாலைகளின் கூரைகளில் ஏறி சுமார் 50 பேர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். வெலிக்கடை சிறையின் கூரையில் 25 கைதிகளும், போகம் பரை சிறையில் 21 கைதிகளும், மஹர சிறையில் நால்வரும் இவ்வாறு கூரைகளில் ஏறி உண்ணாவிரத போராட்ட த்தில் ஈடுபட்டதோடு பதாதைகளையும் தாங்கி நின்றனர்.

கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை வெலிக்கடை சிறையின் கூரையில் ஏறிய நான்கு கைதிகள் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்.

1989க்கு முன்னர் இடம்பெற்ற பொது மன்னிப்பு காலத்தை மீண்டும் செயற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மரண தண்டனை மற்றும் ஆயுட் தண்டனை கைதிகளே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.

இந்நிலையில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நேற்று சிறைக் கைதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகநிலை தோன்றியதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ.திசாநாயக்க தெரிவித்தார்.

மேற்படி பேச்சுவார்த்தையையடுத்து மஹர சிறைச்சாலையின் கூரையில் ஏறி உண்ணாவிரத போராட்டம் நடத்திய கைதிகள் போராட்டத்தைக் முடித்துக்கொண்டு கீழே இறங்கியுள்ளதாகவும், போகம்பரை சிறையின் கூரையில் ஏறி உண்ணாவிரத போராட்டம் நடத்திவரும் கைதிகளும் இதேபோன்று தமது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்வார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

நல்ல ஒழுக்கத்தை பேணும் கைதிகள் வருடத்துக்கு ஒரு முறை வீடுகளுக்கு செல்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பான சிபாரிசு நீதி அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை கைதியின் பிரதிநிதிகள் ஏற்றிக்கொண்டுள்ளதாகவும் செயலாளர் மேலும் கூறினார்.

கூரையில் ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபடும் கைதிகளை கீழே இறங்கச் செய்யும் அடிப்படையில் செயலாற்றவில்லை என்றும், அவர்களுக்கு வழங்கக் கூடிய நிவாரணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

புனர்வாழ்வு பெற்ற 900 பேர் 5ம் திகதி சமூகத்தில் இணைப்பு






புனர்வாழ்வு பெற்ற 900 பேர் எதிர்வரும் 5ஆம் திகதி சமூகத்தில் இணைக்கப் படவுள்ளனர்.

அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் சீர்திருத்த அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க தெரிவித்தார்.

சமூகத்தில் இணைத்துக் கொள்ளப்படு வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள 900 பேரின் பட்டியல் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். புனர்வாழ்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் சுயதொழில் பயிற்சிகள் வழங் கப்பட்டுள்ளதாகவும் பிள்ளைகளுடன் உள்ள முன்னாள் புலிகள் உறுப்பினர்கள் தொடர்பாக இம்முறை அக்கறை செலுத் தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 4095 பேர் தற்போது புனருத்தாரண முகாம்களில் உள்ளதாகவும் அவர்கள் படிப்படியாக புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்படுவார்களென்றும் அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

20 மே, 2011

நோர்வேயில் நெடியவன் ஐரோப்பிய பயங்கரவாத சட்டத்தின் கீழ்கைது

நோர்வேயில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக செயற்பட்டு வந்த நெடியவன் கைது செய்யபட்டு பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் நீதிமன்றில் நிறுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹொலன்ட் நாட்டு சர்வதேச பொலிசாரால் நெடியவனின் வீடு சுற்றி வளைக்கபட்ட போதே நெடியவன் கைது செய்பட்டதுடன் அவர் உடனடியாக நோர்வே தலைநகரம் ஒஸ்லோவுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டுவரபட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்.

இவர் ஐரோப்பிய பயங்கரவாத சட்டப்படியான வழக்கை எதிர் நோக்கி உள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மீனவர்கள் கைது

இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 10 பேரை இந்திய கடலோரப் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணைக்குப் பிறகு இவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிப்பதற்கு இலங்கைக்கு இந்தியா ஆலோசனை

போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக உள்ளக நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஒரே வழி என்று இலங்கைக்கு இந்தியா ஆலோசனை கூறியுள்ளது. புதுடெல்லி அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ""இந்து'' நாளேடு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த செவ்வாயன்று புதுடில்லியில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உயர் மட்டங்களுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஜி.எல்.பீரிஸ் நடத்திய பேச்சுக்களின் போதே இந்தியாவின் இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா வின் அறிக்கையில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.

நாம் அவர்களுக்கு கூறியுள்ள செய்தி உள்ளக ரீதியான நடவடிக்கைகளை எடுங்கள் என்பதே. அதற்கு இந்தியா உதவும். போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகின்ற நிலையில் அரசியல் நல்லிணக்கம் உள்ளிட்ட பல கவலைகள் இந்தியாவுக்கு உள்ளன.

அவர்கள் உள்ளக ரீதியாக நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் வேறு இடங்களிலிருந்து அழுத்தங்கள் வரும் என்று இந்திய அரசாங்க வட்டாரம் ஒன்று கூறியுள்ளது. அரசியல் ரீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை துரிதப்படுத்துமாறு இந்திய தலைவர்கள் இலங்கையிடம் கேட்டுள்ளனர்.

13வது திருத்தத்தின் அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு ஒன்றை இந்தியா வலியுறுத்தியுள்ளது. அத்துடன் போரின் பின்னர் காணாமல் போனவர்களின் பட்டியல் ஒன்றை தயாரிக்கும் படியும், அவர்களின் மரணத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கைக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

அத்துடன் உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கி, அவசரக்கால சட்டத்தையும் விலக்கிக்கொள்ளுமாறும் இந்தியா வலியுறுத்தியுள்ளது என்றும் இந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இரு அமெரிக்கப் பிரஜைகள் விமானநிலையத்தில் கைது

அமெரிக்காவுக்கு செல்லவிருந்த விமானத்தின் மூலம் துப்பாக்கியொன்றை கொண்டு செல்ல முயற்சித்த இரு அமெரிக்கர்களை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸார் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

பிஸ்டல் போன்ற துப்பாக்கியொன்றை பாகங்களாக பிரித்து கொண்டு செல்ல முயற்சித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாங்கள் அமெரிக்க இராணுவத்தை சேர்ந்தவர்கள் எனவும் விடுமுறையை கழிக்க இலங்கை வந்ததாகவும் அவர்கள் தெரிவித்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பொருள் ஸ்கேனர் இயந்திரத்தில் தெரிந்தவுடனேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளைக் கொடி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பிலான வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றபோது முன்னாள் இராணுவத் தளபதியின் உடல்நிலை தொடர்பிலான மருத்துவ அறிக்கையொன்றை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையில் சரத் பொன்சேகாவின் உடல் நிலை இதுவரை தேறாமையினால் அவருக்கு இரண்டு வாரங்கள் ஓய்வு தேவை என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய வழக்கை இம்மாதம் 23 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு நீதிபதிகள் தீர்மானித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் தாம் விடுதலை செய்யப்படாததை ஆட்சேபித்து கைதிகள் சிலர் கூரை மீது ஏறி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயுள் கைதிகள் ஏழு பேரே இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

19 மே, 2011

தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினிகாந்த்

சுவாசத்தை மேம்படுத்துவதற்காக நடிகர் ரஜினிகாந்த் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக டாக்டர்கள் குழு தெரிவித்துள்ளது.

சுவாச கோளாறு மற்றும் குடல்நோய் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 13ஆம் திகதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், 18.05.2011 அன்று இரவு அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அவரது உடல்நிலை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர்கள் குழு 18.05.2011 அன்று நள்ளிரவு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

நடிகர் ரஜினிகாந்த் சுவாச கோளாறு மற்றும் குடல்நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த 13ந் தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசத்தை மேம்படுத்துவதற்காக அவர் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.

அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மருத்துவ குழுவினர் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். சிகிச்சையின் காரணமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

போர்க் குற்ற விசாரணைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு ஆதரவை வழங்க வேண்டும்: ச.ம.ச

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை சுயாதீன பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

போர் முடிவடைந்த 10 நாட்களில் அதாவது 2009 ஆம் ஆண்டு மே 27 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம், பிரேரணை ஒன்றை நிறைவேற்றியது. அதில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அமைதி குறித்து வலியுறுத்தப்பட்டது.

எனினும் இரண்டு தரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் அந்த பிரேரணையில் எவ்வித கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை என்று மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டியுள்ளது.

தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு இலங்கையின் இறுதிப் போரின் போது போர்க் குற்றங்கள் இடம்பெற்றிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இதற்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் தனது ஆதரவை வழங்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.

2009 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட படை நடவடிக்கையின்போது சுமார் 3 இலட்சம் மக்கள் முற்றுகையிடப்பட்டனர்.

இதன்போது நடாத்தப்பட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலர் காயங்களுக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் பான் கீ மூனின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் போர்க் குற்றம் நிகழ்ந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச விசாரணை பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று பான் கீ மூனின் நிபுணர் குழு வலியுறுத்தியுள்ளது.

எனவே பான் கீ மூன், இலங்கையின் போர்க் குற்றங்களை விசாரணை செய்ய சர்வதேச பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.அத்துடன் அதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்ஆணைக்குழுவின் ஆதரவையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நிரந்தரமாக மீளக்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் 117,888பேர்: ஐ.நா.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்னும் 117,888 பேர் நிரந்தரமாக குடியேற்றப்படாமலுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த சுமார் 300,000 பேர் செட்டிகுளம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்ததாகவும் இவர்களில் 4981 குடும்பங்களைச் சேர்ந்த 16401 பேர் செட்டிகுளம் முகாமில் தற்போது இருப்பதாகவும் ஐ.நா. அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் தமக்கு முறையான குடியிருப்புகள் இல்லையெனவும் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாக கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த 18589 பேரும் மன்னாரைச் சேர்ந்த 4928 பேரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 94371 பேரும் இன்னும் நிரந்தரமாக மீளக்குடியேற்றப்படாமல் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவின் உதவியுடனேயே பிரபாகரனை தோற்கடித்தோம்

இந்தியாவின் உதவியுடனேயே பிரபாகரனை தோல்வியடையச் செய்தோம். அதேபோன்று ஐ.நா.வின் பக்கச் சார்பான அறிக்கையையும் இந்தியாவின் ஒத்துழைப்புடன் தோல்வியடையச் செய்வோம் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை இந்திய கூட்டறிக்கை இன்றைய காலத்தின் தேவையாகுமென்றும் அமைச்சர் கூறினார். இது தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும் இன நல்லுறவு தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெளிவுபடுத்துகையில்,

இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி 13 ஆவது திருத்தத்தை முன்னெடுத்து தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை முன்னெடுப்பதை உறுதி செய்து கூட்டறிக்கை விடப்பட்டுள்ளமை இன்றைய காலத்தின் தேவையாகும். ஐ.நா. அறிக்கை எமது நாட்டுக்கு எதிராக பக்கச் சார்பாக தயாரிக்கப்பட்டது.

உலகில் எமது நாட்டை தனிமைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது. எனவே இதற்கு பலம் மிக்க எமது அயல்நாடான இந்தியாவின் உதவியை நாடுவதில் எதுவிதமான தவறும் இல்லை. அத்தோடு அவசர காலச் சட்டம் நீக்கம் மனித உரிமைகள் தொடர்பாக விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளமை போன்றவை தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகள் இந்தியாவிற்கு அடிபணிவதாக கருதப்படாது. ஏனெனில் பிரபாகரனை தோல்வியடையச் செய்வதற்கு இந்தியாவே எமக்கு உதவியது. எமது எந்தப் பிரச்சினைக்கும் வேறெந்த நாடுகளைவிட எமது அயல் நாடான இந்தியாவின் உதவியே அவசியமானதாகும். இலங்கையும் இந்தியாவும் இணக்கப்பாட்டு ரீதியில் பிரிக்க முடியாத உறவுகளைக் கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளால் 13 ஆவது திருத்தத்தை முன்னெடுப்பதை தடுக்க முடியாது. 18 ஆவது திருத்தத்திற்கு எனக்குள் விருப்பமில்லை. ஆனால் அரசாங்கத்திற்குள் உள்ளேன். எனவே ஆதரவாக வாக்களித்தேன் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா.வின் யுத்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்கவே இந்தியாவின் உதவியை நாடி நிற்கிறது அரசாங்கம்

ஐ.நா.வின் யுத்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்புவதற்காகவே அரசாங்கம் இந்தியாவின் உதவியை நாடி நிற்கின்றது. இன்று இந்தியாவின் அழுத்தத்தினால் அதிகாரப் பரவலாக்கத்திற்கு அரசாங்கம் இணங்கியுள்ளது. இந்தியாவின் கோரிக்கைக்கு இணங்க அரசாங்கம் விரைவாக அரசியல் தீர்வுக்கு செல்ல வேண்டியது அவசியமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கையில் நீதி நியாயம் இல்லை. எனவே உள்நாட்டு மனித உரிமை விசாரணைகளை சர்வதேச ஏற்றுக்கொள்ளாது. –தமிழ் மக்களுக்கு யுத்தம் இல்லாமல் அரசியல் தீர்வை வழங்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டத்தை தவிடுபொடியாக்கியவர்கள் யுத்தம் செய்து அழிவுகளை ஏற்படுத்தி இந்தியாவின் அழுத்தத்திற்காக இன்று அதிகாரப் பரவலாக்கலை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய அதிகாரத்தை பரவலாக்குவதுடன் அவசரகால சட்டத்தை நீக்கவேண்டும் என்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியிருந்தது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்து இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்தப் பேச்சவார்த்தையை அடுத்து இரு நாடுகளும் கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தன. இந்த அறிக்கையிலேயே இவ்விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

இது குறித்து கருத்து தெரிவித்த போதே ஐ.தே.க. வின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர்.

இவ்விடயம் குறித்து ஐ.தே.க.வின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கையில் இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக்கள் யதார்த்தமானவையாகவே தோன்றுகின்றன. காரணம் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது அவசரகால சட்ட விதிகள் அவசியமில்லை என்றே ஐக்கிய தேசிய கட்சியும் கருதுகின்றது.

எனவே இது தொடர்பில் அரசாங்கம் ஆராயவேண்டியது அவசியமாகும். யுத்தம் முடிவுக்கு வந்து நாடு முழுவதும் அமைதி நிலவுகின்ற நிலையில் அவசரகால சட்ட விதிகளை படிப்படியாக குறைத்து முழுமையாக அகற்றிவிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகவுள்ளது.

இதேவேளை அரசியல் தீர்வு விடயத்திலும் இந்தியாவின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே அமைந்துள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. இந்நிலையில் இதுவரை அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படாமல் உள்ளது.

அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்கவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பத்திலிருந்து வலியுறுத்திவருகின்றது. அதாவது சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு செல்லவேண்டியது அவசியமாகும்.

வேறு நாடுகள் வலியுறுத்துவதற்கு முன்பாக அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படவேண்டியது அவசியமாகும். அதிகாரப்பகிர்வுடன் கூடிய தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு செல்லவேண்டும். இந்தியாவுக்கு தமிழகத்திலிருந்து பாரிய அழுத்தங்கள் உள்ளன என்பதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும். எனவே இந்தியாவின் கருத்துக்கள் யதார்த்தகரமானவையாகவே உள்ளதாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இதேவேளை தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் விடயத்தில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். குற்றம் செய்யப்பட்டிருந்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம். இவ்வாறான விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்பதனை சுட்டிக்காட்டுகின்றோம் என்றார்.

லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.

இலங்கைக்கு இந்தியா விடுத்துள்ள வலியுறுத்தல் குறித்து ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல கருத்து தெரிவிக்கையில்; எமது கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அன்று புலிகளுடன் யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டதோடு 13 ஆவது திருத்தத்திற்கு அமைய அதிகாரப் பரவலாக்களை மேற்கொள்ளவும், திட்டங்களை முன்னெடுத்தார். இதன் மூலம் யுத்தம் இல்லாமல் மக்கள் இழப்புக்கள் இல்லாமல், அழிவுகள் இல்லாமல் சமாதானத்தை ஏற்படுத்துவதே எமது இலக்காக இருந்தது.

ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் அன்று நாம் நாட்டை பிரிக்கப்போவதாக கூச்சலிட்டு சந்திரிக்காவைப் பயன்படுத்தி ஆட்சியை கவிழ்த்தனர். இன்று யுத்தம் செய்து பல உயிர்களை காவுகொடுத்து அழிவுகளை ஏற்படுத்திய பின்னர் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரப் பரவலாக்களை வழங்க ஆட்சியாளர்கள் முன்வந்துள்ளனர். ஐ.நா.வின் யுத்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்புவதற்கு அரசாங்கத்திற்கு வழியில்லை.

இதனாலேயே இந்தியாவின் உதவியை அரசாங்கம் நாடி நிற்கின்றது. இச் சூழ்நிலையில் இந்தியாவும், அரவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரப் பரவலாக்களை வழங்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்டே கூட்டறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்திற்காக நாம் பாராளுமன்றத்திலும், வெளியேயும் குரல் கொடுத்து வந்தோம். ஆனால் அரசாங்கம் எமது கூற்றை வெசிமடுக்க வில்லை. இன்று இந்தியாவின் அழுத்தத்தினால் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான விமல் வீரவன்ச ஐ.நா. செயலாளர் பான் கீ மூனின் உருவப் பொம்மைக்கு தீ வைத்தார்.

தருஷ்மன் பணத்தை வாங்கிக் கொண்டு அறிக்கையை தயாரித்தார் என விமர்சித்தார். ஆனால் இன்று சாமியாரைப் போல் நியூயோர்க் சென்று ஐ.நா. சபையில் தர்ம உபதேசம் செய்துள்ளார். உள்நாட்டில் சிங்கமாக கர்ச்சிக்கும் அரச தரப்பினர் வெளிநாடுகளுக்கு சென்றவுடன் பூனையாக மாறிவிடுகின்றனர் என்று தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

18 மே, 2011

பாகிஸ்தானில் இராணுவ காவலரண் மீதுஅமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்

பாகிஸ்தானுக்குள் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ஹெலிகொப்டர்கள் நடத்திய தாக்குதலில் 2 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நேட்டோ படையின் அமெரிக்கப் பிரிவினர், ஆப்கானிஸ்தான் எல்லையான வடக்கு வசீர்ஸ்தான் பகுதியில் பாகிஸ்தானின் இராணுவ காவலரண்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஹெலிகொப்டர்கள் குண்டு மழை வீசியதில் இருபாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்தனர்.

ஹெலிகொப்டர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் தான் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதாக நேட்டோ கூறியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியது பாகிஸ்தான் இராணுவத்தினர் என்றும் உறுதியாகியுள்ளது.

மிரான்ஷா என்ற இடத்தில் வச்சா பிபி என்ற இடத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இப்பகுதியில் பாகிஸ்தான் இராணுவ காவலரண்கள் இருந்தாலும் அந்த மாகாணம் முழுக்க முழுக்க பழங்குடியினரின் ஆட்சியில் உள்ளது. இங்கு பாகிஸ்தான் நாட்டு சட்ட திட்டங்கள் செல்லுபடியாவதில்லை. அது ஒரு சுயேச்சையான மாகாணமாகும்.

இதனால் இப்பகுதி, தீவிரவாதிகளின் சொர்க்கமாக திகழ்ந்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்கப் படையினர் பாகிஸ்தான் வான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் கைது

போலி நாணயத்தாள்கள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கெக்கிராவை பகுதியிலுள்ள மக்கள் வங்கிக்கு முன்பாக நேற்று முன்தினமிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் 2000 ரூபா நாணயத்தாள் ஒன்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் மூன்றும் வைத்திருந்ததாக பொலிஸார் கூறினர். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

கனடாவுக்கு செல்லவிருந்த கப்பலில் விடுதலைப் புலிகளின் பிரசாரப் பொருட்கள்

விடுதலைப் புலிகளின் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக்கூடிய பெருந்தொகையான பதாகைகள் மற்றும் புத்தகங்கள் கொழும்புத் துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து கனடா நோக்கிச் சென்ற கப்பல் கொழும்புத்துறை முகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில் சந்தேகத்தின் பேரில் அதன் சரக்குப் பெட்டியை சோதனையிட்ட போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று சுங்கத்திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பதாதைகள் மற்றும் பிரச்சார விளம்பரங்கள் ஆகியன இந்தச் சரக்குப் பெட்டியிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்டுள்ள இந்தப் பொருட்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பது குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கனடா முகவரியிடப்பட்ட விடுதலைப்புலிகளின் பிரசாரத்துக்கு உதவக்கூடிய புத்தகங்கள் 45 பெட்டிகளுக்குள் பொதியிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கே.பி. எந்த சட்டத்தின் கீழ் எப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்: ஐ.தே.க கேள்வி

விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி. எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் உள்ளடக்கப்படும் குற்றங்கள் என்ன? எப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்? அவரை நாடு கடத்துமாறு எந்த நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் கையொப்பமிட்டு சமர்ப்பிக்கப்பட்டு திகதி குறிப்பிடப்படாத பிரேரணையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பிரேரணையில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க,பாலித ரங்கே பண்டார, லக்ஷ்மன் கிரியெல்ல, ஜயலத்ஜயவர்தன, ஆர். யோகராஜன், பாலித தெவரப்பெரும,நிரோஷன் பெரேரா, அப்துல் ஹலீம் மற்றும் இரான் விக்கிரமரத்ன ஆகியோர் கையொப்பமிட்டுள்ளதுடன் அந்த பிரேரணை ஒழுங்குப்பத்திரத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இலங்கை அரசாங்கம் 2009 ஆகஸ்ட் 7 ஆம் திகதி அறிவித்ததன் பிரகாரம் குமரன் செல்வராசா என்றழைக்கப்படும் கே.பி ஒராண்டுக்கு மேலாக அதன் பாதுகாப்பில் இருக்கின்றார். அவர் ஆயுதக் கடத்தல் மற்றும் குற்றவியல் சதித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சர்வதேச பொலிஸாரினால் தேடப்படும் பட்டியலில் அவரும் இருக்கின்றார்.

1991 ஆம் ஆண்டு இடம்பெற்ற முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாக பயங்கரவாதச்சட்டம் மற்றும் இந்திய வெடிபொருட் சட்டம் ஆகியவற்றை மீறியமைக்காக அவர் தேடப்படுகின்றார். இலங்கையில் மஹாபோதி மற்றும் புத்தபெருமானின் புனிதத்தந்தம் வைக்கப்பட்டுள்ள கோயில் ஆகியவை மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதல்களில் அவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதுடன் விடுதலைப்புலிகளுக்கு ஆயுத கொள்வனவாளராகவும் இருந்துள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான 19 கப்பல்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பெருந்தொகையான சொத்துக்களை அவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதுமட்டுமன்றி அவ்வியக்கம் அப்பாவி மக்களை கொன்று கொடுமைகளை இழைத்துள்ளதாக ஐ.நா அறிக்கை கூறுகின்றது. அத்துடன் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு நிதியளிப்பதற்கு சர்வதேச ரீதியில் பணம் சேகரித்தவர் கே,பி என அரசாங்கம் கூறுவதனால் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையிடுவதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படவேண்டும்.

அந்த குழு கே.பி எச்சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவர், அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் என்னென்ன குற்றங்கள் உள்ளடக்கப்படும், அவருக்கு எதிராக எப்போது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்தகைய குற்றச்சாட்டுகள் எந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அவரை நாட்டை விட்டு அனுப்புமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதா, அவ்வாறாயின் எந்த நாடுகள் அவ்வாறான வேண்டுகோளை விடுத்துள்ளன. அவரை நாட்டை விட்டு வெளியேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளதா? அத்துடன் கே.பி வசமிருந்த குறிப்பாக தங்கம், கப்பல்கள் உள்ளிட்ட புலிகளின் சொத்துக்கள் எங்கே? அவற்றின் கதி என்ன?

நாட்டின் சட்டங்களின் கீழ் கே.பிக்கு எதிராக வழங்குத்தொடராமல் அவரை வைத்திருப்பதில் எந்த உத்தியோகஸ்தர் தேசத்துரோக நடவடிக்கை குற்றவாளிகளாக இருக்கின்றனரா? என்பது தொடர்பில் அக்குழு பரிசீலிக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...