6 ஜனவரி, 2011

தமிழ் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில்


தைப்பொங்கல் பண்டிகையை
யாழ்ப்பாணத்தில் கொண்டாட ஏற்பாடு



உழவர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை யாழ்ப்பாணத்தில் கொண்டாடு வதற்கு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் முழு அளவில் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஸ்குமார் தெரிவித்தார்.

யாழ். மத்திய கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்படவிருப்பதுடன், அன்றைய தினம் தமிழ் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் கலை நிகழ்வுகள் நடைபெறவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அன்றைய தினம் முன்னணி இசை கலைஞர்களைக் கொண்டு இசை நிகழ்ச்சியொன்றையும் ஏற்பாடு செய்திருப்பதாக சதீஸ்குமார் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

நாவலப்பிட்டியில் சட்டவிரோத கேபிள் டிவி நிலையம் முற்றுகை

நவீன தொழில்நுட்ப உபகரணங்களுடன் பிரதான சந்தேக நபர் கைது

மலையகப் பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கிவந்த சட்டவிரோத கேபிள் தொலைக்காட்சி நிலையமொன்றை நாவலப்பிட்டி பொலிஸார் முற்றுகையிட்டு ள்ளனர்.

இதனை நடாத்திவந்த பிரதான சந்தேக நபரை தொலைத் தொடர்பு சாதனங்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாவலப்பிட்டி நகரத்தை அண்மித்த கடுகஞ்சேனை கெட்டபிலா தோட்டத்தை உள்ளடக்கியதாகவே இச்சட்டவிரோத கேபிள் தொலைக்காட்சி நிலையம் இயங்கி வந்துள்ளது.

கைவிடப்பட்டிருந்த வீடொன்று இதற்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன், இங்கிருந்தே கேபிள் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்டதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இச்சட்டவிரோத கேபிள் தொலைக்காட்சி நிலையம் நீண்டகாலமாக இயங்கிவந்த போதும் இதன் பயனாளர்கள் மற்றும் இயக்குபவர்கள் பற்றிய தகவல்கள் மிகவும் இரகசியமாகப் பேணப்பட்டு வந்திருப்பதாக நாவலப்பிட்டிப் பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த நிலையத்திற்கும் புலிகள் இயக்கத்துக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்பது பற்றி விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக நாவலப்பிட்டிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையத்திலிருந்த அன்டனாக்கள், ரிமோட் கொன்டோலர்கள் உட்பட பல இலத்திரனியல் சாதனங்களையும், புலிகள் இயக்கத்துக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட மோதல்கள் குறித்த சீடிக்களையும் மீட்டிருப்பதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் நாவலப்பிட்டி மஜிஸ்திரேட் முன்னிலையில் நிறுத்தப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்க முயற்சி முறியடிக்க சூட்சுமமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - சபையில் பிரதமர்

புலிகள் இயக்கம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகளின் மூலம் மீண்டும் தலைதூக்க முயற்சிப்பதாகவும் இதனை முறியடிக்க சூட்சுமமாக செயற்பட வேண்டுமெனவும் பிரதமர் டி. எம். ஜயரத்ன நேற்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புலிகள் இயக்கத்திற்கென அண்மையில் பாரியளவு நிதி சேகரிக்கப்பட்டுள்ளது. சில அரச சார்பற்ற நிறுவனங்களும், வெளி நாடுகளும் பணத்தை வாரி வழங்கியுள்ளன. மேற்குலக நாடுகள் இன்னமும் தமது செயற்பாடுகளை மாற்றிக்கொள்ளாமல் உள்ளன.

அவற்றுக்கு இலங்கைத் தூதரகத் தின் மூலமாகவே அறிவுறுத்தல்களை வழங்க முடியும் என்று நேற்று அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேர ணையைச் சமர்ப்பித்து உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘வடக்கு மக்கள் உன்னத நிலையில் வாழ்பவர்கள் அவர்களின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுவாக்க வேகமாக செயற்படவேண்டும். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 3619 பேரும் 67 பெண்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 4585 ஆண்களும் 72 பெண்களும் விடுவிக்கப் படவுள்ளனர்.

சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற 50 பேர் கடந்த டிசம்பர் மாதம் தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்டனர். அதேநேரம் பாதுகாப்புத் தரப்பினர் வடக்கில் நடத்திய தேடுதலின்போது 1014 விமான எதிர்ப்புக்குண்டுகள், பீரங்கிக் குண்டுகள் உள்ளிட்ட பெருந்தொகை ஆயுதங்களை மீட்டுள்ளனர். எனவே, புலிகளின் செயற்பாடுகளை மீண்டும் தலைதூக்காது முறியடித்து சமாதானத்தை நிலைநாட்ட அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்க வேண்டும் என்றார் பிரதமர்.
மேலும் இங்கே தொடர்க...

உள்ஃராட்சி மன்றங்கள் கலைப்பு: விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று


சகல உள்ளூராட்சி மன்றங்களும் இன்று நள்ளிரவு முதல் கலைக்கப்பட உள்ளதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக கூறினார். இது தொடர்பான விசேட வர்த்தமானி அறி வித்தல் இன்று வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பெப்ரவரி, மார்ச் மாதங்களில் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளின் சில போட்டிகள் இலங்கையில் நடைபெற உள்ளதால் போட்டிகள் நடைபெறும் கொழும்பு, கண்டி மற்றும் ஹம்பாந் தோட்டை பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்படாது எனவும் அவற்றுக்கான தேர்தல் வேறொரு திகதியில் நடைபெறும் எனவும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்தது.

மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சருக்குள்ள அதிகாரங்களின் பிரகாரமே உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் குறைக்கப்படவுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிக்க பெருமளவு உல்லாசப் பிரயாணிகள் இப் பகுதிகளுக்கு வருகை தருவதாலும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் சுதந்திரமாக தேர்தல் கெடுபிடிகள் இன்றி விளையாடு வதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்ப ட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் தேர்தல் நடைபெற்ற யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை என்பனவும் கலைக்கப்படாது என அமைச்சு தெரிவித்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளதோடு இதற்கான திகதியை மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் அறிவிக்க உள்ளார். அதன் பின்னர் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களம் முன்னெடுக்கும் என பிரதித் தேர்தல் ஆணையாளர் சுமணசிறி கூறினார்.

உள்ளூராட்சி மன்றங்களை கலைப்பது தொடர்பில் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா அமைச்சு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட போதும் அதில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டே வெளியிடப்படுவதாக அமைச்சின் மேலதிகச் செயலாளர் டி. பி. ஹெட்டியாரச்சி கூறினார். உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படும் முன்னரே பிரதான கட்சிகள் வேட்பாளர்களிடம் விண்ணப்பங்களை கோரியுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...