11 நவம்பர், 2009

11.11.2009 தாயகக்குரல்27

ஜனாதிபதி தேர்தல் ஒன்று அறிவிக்கப்படுமானால் பொது வேலைத்திட்டம் ஒன்றின்கீழ் பொது வேட்பாளர் ஒருவரை எதிரணி சார்பில் ஏகமனதாக நிறுத்தும் திட்டத்திற்கு ஒத்துழைக்கத் தயார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார். ஆனால் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத்தும் திட்டத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பி.யும் இணங்கவேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.

இதுவரைகாலமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பான பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் எதிர்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதுபற்றி செய்திகள் வெளியிட்டு வந்தன. குறிப்பாக பொது வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பெயர் அடிபட்டு வந்தன.
இப்போது சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் ஒப்புதல் பெறப்படவேண்டும் என்று ரணில் தெரிவித்திருக்கிறார். ஜே.வி.பி.யைப் பொறுத்தவரை சரத் பொன்சேகாவை பொது வேட்பளராக நியமிப்பதற்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா,

எதிர்கட்சி பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நியமிக்கக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணிக்கு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்படி இருந்தும் சரத் போன்சேகாவை பொது வேட்பாளராக நியமிக்கும் விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டால் தானும் ஆதரிப்பதாக ரணில் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிப்பதை ரணில் தட்டிக் கழிக்கிறாரா என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி கூட்டமைப்பை ஆதரிப்பதான ஒரு தோற்றத்தையும் ரணில் ஏற்படுத்தியுள்ளார்.

சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதென்றால் அவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறவேண்டும். இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெறும்போது அதை ஜனாதிபதி அங்கீகரிக்கவேண்டும். எனவே அவர் ஓய்வு பெறுவதை ஜனாதிபதியால் காலதாமதப்படுத்தவும் முடியும்.
இதன் அடிப்படையிலேயே எதிரணி வேட்பாளர் நியமனம் குறித்து கருத்து தெரிவித்த ரணில், சரத் பொன்சேகா தேர்தல் களமிறங்குவதற்கான தமது சம்மதத்தை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும் என்றும் தேர்தலில் போட்டியிடத் தகுதியுள்ளவராக தம்மை மாற்றிக்கொள்ளும் விதத்தில் படைத்துறைச் சேவையிலிருந்து வெளிவரவேண்டும் என்றும் தெரிவித்திருக்கலாம்.

சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக அறிவிக்க அவர் சில வாக்குறுதிகளை பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என்றும் ரணில் தெரிவிக்கிறார். அவை:-
சரத் பொன்சேகா ஜனாதிபதியாகி ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் ஜனாதிபதி ஆட்சிமுறையை அறவே ஒழிப்பதாக அறிவிக்கவேண்டும்.
ஜனாதிபதியானதும் காபந்து அரசை அமைத்து அதன் பிரதமராக தன்னை (ரணிலை) நியமிக்கவேண்டும்..
அவசரகாலச் சட்டத்தை நீக்கி 17வது திருத்தத்தை முழு அளவில் அமுல்படுத்தவேண்டும்.

குறுகிய காலத்துள் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு முழு அதிகாரத்துடன் தோற்றுவிக்கப்படும் பாராளுமன்றம் அமைதி, சமாதானம், தீர்வு ஆகியவை எட்டப்படுவதை உறுதிப்படுத்தப்பட வேண்டும். என்ற நிபந்தனைகளை ரணில் விதித்துள்ளார்.
எதிர்கட்சி கூட்டணியின் முக்கிய கோட்பாடு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது என கூறுகின்றனர். 1978 ஆகஸ்ட் மாதம் ஜே.ஆர். தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு புதிய அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டுவந்தது. அந்த அமைச்சரவையில் ரணில் விக்கிரமசிங்காவும் அமைச்சராக இருந்தார். தொடர்ந்து 17 வருடங்கள் ஜனாதிபதி ஆட்சி முறையை அனுபவித்த ஐக்கிய தேசியக் கட்சி இப்போது அதை ஒழிக்கவேண்டும்; என்ற பொது கோட்பாட்டின் அடிப்படையில் எதிர்கட்சிக் கூட்டணியை அமைத்துள்ளது. நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணியாக உள்ள இனப்பிரச்சினைக்கு எந்த தீர்வையும் முன்வைக்காத ஐக்கிய தேசியக் கட்சி இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கும் சரத் பொன்சேகாவிடம் உறுதிமொழி கேட்கிறார்.

ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கவேண்டும் என ரணில் விக்கிரமசிங்கா கூறும் அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் ஜனாதிபதி சட்டதரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.சொக்ஸி ஜனாதிபதி முறை தொடரவேண்டும் என்றும் அந்த பதவிக்கான அதிகாரங்களை மீள்பரிசீலனை செய்து தேவையான மாற்றங்களைக் கொண்டு வருவதே உசிதமானது என்றும் தெரிவிக்கிறார். 1978ல் புதிய அரசியலமைப்பை உருவாக்கியதில் கே.என்.சொக்ஸிக்கும் முக்கிய பங்குண்டு.
ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து பாராளுமன்றத்துக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அதன் பின்னர் ஏனைய பிரச்சினைகளை பாராளுமன்றம்தான் தீர்க்கவேண்டும். ஆனால் யார் ஜனாதிபதியாக வந்தாலும் ஜனாதிபதி முறையை ஒழிக்க அரசியலமைப்பில் மாற்றங் கொண்டு வரவேண்டும். அரசியலமைப்பின்படி ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கத்தவர் பலம் வேண்டும்.

பாராளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடனேயே ஜே.ஆர். ஜெயவர்த்தன புதிய அரசியலமைப்பில் விகிதாசாரத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்தினார். தொகுதிவாரியாக நடைபெறும் தேர்தலில் ஒரு கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கலாம். இப்போதுள்ள விகிதாசார தேர்தல் முறையால் தனித்து எந்தக் கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாது. நடந்து முடிந்த எட்டு மாகாணசபை தேர்தல் முடிவுகளின்படி பார்த்தால் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்கும் பலத்தையாவது பெறுமா என்பது சந்தேகமே.
தொகுதிவாரியான தேர்தல் முறையால்தான் 1970ல் சிறிமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து 1972ல் புதிய அரசியல் யாப்பின்மூலம் இலங்கை குடியரசானது.

1977ல் ஐக்கிய தேசியக் கட்சி ஐந்தில் நான்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தமிழர் விடுதலைக் கூட்டணி இரண்டாவது பெரும்பான்மை பெற்று எதிர்கட்சியானது. இந்த பெரும்பான்மை மூலமே 1978ல் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் யாப்பை மாற்றி ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்டுவந்தது.
எனவே எதிர்கட்சி கூட்டணி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி பாராளுமன்றத் தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் மாத்திரமே ரணில் தெரிவித்துள்ள நிபந்தனைகள் நிறைவேறமுடியும். இது சாத்தியமாகுமா? இதுவே சரத் பொன்சேகா முன் நிற்கும் கேள்வியாகும். மக்கள் முன் நிற்கும் கேள்வியும் இதுவேயாகும்
மேலும் இங்கே தொடர்க...
கப்பலிலுள்ள இலங்கையர்களில் எண்மர் இந்தோனேசியாவில்
தரையிறங்க இணக்கம்-







இந்தோனேசியக் கடற்பிராந்தியத்தில் தரித்துள்ள கப்பல் தங்கியிருக்கும் 78 இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறிகளையும் பிலிப்பைன்ஸின் இடைத்தங்கல் முகாமுக்கு கொண்டு செல்வது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்தக் குடியேறிகளை பிலிப்பைன்ஸக்கோ அல்லது நத்தல் தீவுக்கோ அழைத்துச்செல்வது அவுஸ்திரேலிய அரசாங்கம் கலந்துரையாடி வருவதாகவும் தெரியவருகிறது. சட்டவிரோத குடியேறிகளைக் கொண்ட ஓசியானிக் வைகிங் கப்பல் இந்தோனேசிய கடற்பிராந்தியத்தில் தரித்து நிற்பதற்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் நாளை மறுதினத்துடன் நிறைவடைகின்றது. ஏற்கனவே இந்த காலஅவகாசம் நவம்பர் 06ம் திகதியாக நிர்ணயிக்கப்பட்ட போதிலும் அவுஸ்திரேலியாவின் தீர்மானங்களுக்காக காலஅவகாசம் நீடிக்கப்பட்டது. இதனிடையே இவ்விடயம் தொடர்பில் சிங்கப்பூரிலும் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் மற்றும் இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் மார்டி நிழலோகாவோ ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில் இந்தோனேசியவில் தரித்துநிற்கும் கப்பலில் உள்ளோரில் எட்டுப்பேர் இந்தோனேசியாவில் தரையிறங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சின் இராஜதந்திர பாதுகாப்புச்சேவை பணிப்பாளர் சுஜத்மிகு இதனைத் கூறியுள்ளார். இக்கப்பலிலுள்ள ஏனைய இலங்கையர்களும், யாவா தீவின் மெரக் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள மற்றொரு கப்பலிலுள்ள 255இலங்கையர்களும் தொடர்ந்தும் அவுஸ்திரேலியா செல்வதற்கான எதிர்பார்ப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
அகதிகளுக்கு நியூசிலாந்து உதவவேண்டும் என கோரிக்கை


78 இலங்கை அகதிகளுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள கப்பலை ஏற்க நியூசிலாந்து அரசாங்கம் மறுத்துள்ள நிலையில்,ஆபத்தான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு நியூசிலாந்து அரசாங்கம் உதவவேண்டும் என அந்நாட்டின் அகதிகளுக்கான பேரவையின் தலைவர் நாகலிங்கம் இராசலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அகதிகள் தொடர்பாக அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு இராசலிங்கம் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் அகதிகளுக்கான பாதுகாப்பை நியூசிலாந்து அரசாங்கத்துக்கு வழங்க முடியும் என்றும் ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் அகதிகள் தொடர்பாக முறையான கொள்கையை நியூசிலாந்து பேணி வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், அவுஸ்திரேலியா இதற்கு தீர்வினை முன்வைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
எதிர்க்கட்சிப் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது எதிர்க்கட்சியே : ஐ.தே.க.தெரிவிப்பு


பொது வேட்பாளர் மிகவும் சந்தோஷமாகவும் சிறப்பாகவும் இருப்பதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது எதிர்க்கட்சியே என்பதை அரசாங்கத்திற்கு ஞாபகப்படுத்துவதாகவும் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் தற்போது எதிர்க்கட்சி வேட்பாளர்களை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் தெரிவு செய்யுமளவுக்கு புதிய கலாசாரம் உருவாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

இவ்வாறு அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தித் தேர்தலில் இவர் போட்டியிடலாம், இவரால் போட்டியிட முடியாது என்றெல்லாம் கருத்து தெரிவிப்பது, ஜனநாயகம் தொடர்பில் அவர்கள் கொண்டுள்ள தெளிவினைப் பறைசாற்றுவதாக உள்ளதெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

அத்துடன் எந்தத் தேர்தலை நடத்தினாலும் தாம் வெற்றி பெறுவதற்குத் தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், எவ்வாறான குளறுபடிகள் மற்றும் மோசடியில் ஈடுபட்டாலும் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

பொலிஸ் மாஅதிபரை பொதுமக்கள் வெள்ளிக்கிழமைகளில் சந்திக்கலாம்

வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்களை நேரடியாக சந்திக்க புதிய பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தீர்மானித்துள்ளார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 11.30 மணி முதல் 2.30 மணி வரை பொதுமக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு காண உள்ளதாக பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.

பொதுமக்களை காலை 11.30 மணி முதல் 1.30 மணி வரை சந்திக்கவே தான் முன்னர் தீர்மா னித்ததாகவும் முஸ்லிம்கள் வெள்ளி க்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக செல்வதால் ஒரு மணி நேரத்தினால் இதனை நீடித்ததாக வும் பொலிஸ் மாஅதிபர் தெரிவி த்தார். தேவை ஏற்பட்டால் 2.30 மணிக்குப் பின்னரும் தான் பொது மக்களை சந்திக்க தயாராகவுள்ளதா கவும் அவர் கூறினார்.


மேலும் இங்கே தொடர்க...

காணாமற்போனோர் தொடர்பான விசாரணை:

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை விரைவில் ஜனாதிபதியிடம்

காணாமற்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஐந்தாவது இடைக்கால அறிக்கை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமென குழுவின் தலைவரான மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மஹாநாம திலகரட்ன தெரிவித்தார்.

ஆணைக் குழுவின் விசாரணைகள் இன்னமும் நிறைவுபெறவில்லையெனக் கூறிய அவர், விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால், பொலிஸாரின் விசாரணை அறிக்கைகளை மேலதிகமாக கோரியிருப்பதாகவும் கூறினார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்றுக் காலை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே முன்னாள் நீதிபதி இதனைத் தெரிவித்தார்.

திருகோணமலை, கந்தளாய் பகுதிகளில் காணாமற்போனோர் தொடர்பான 134 முறைப்பாடுகள் குறித்து அங்கு நேரடியாகச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நேற்று இந்தச் செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது.

திருகோணமலையில் மேலும் 40 பேர் முறைப்பாடுகளைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் மேலதிகத் தகவல்களை எமக்கு வழங்கினார்கள்.


மேலும் இங்கே தொடர்க...