17 ஜூன், 2010

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தோருக்கு 50 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். இதற்கான நிதி அவர்களுக்கு நேரடியாகவே வழங்கப்படும் என்ற இந்திய அரசாங்கத்தின் கூற்றை இலங்கை மறுத்துள்ளது.

இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான நிதி மக்களுக்கு நேரடியாகவே வழங்கப்படும் எனவும் மத்திய நிதி அமைச்சர் பா. சிதம்பரம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக இன்று கருத்து வெளியிட்ட தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, அரசினூடாகவே நிதி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

"இந்தியா இலங்கைக்குப் பல வழிகளிலும் உதவி வருகிறது. இடம்பெயர்ந்த மக்களுக்கு 50ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான திட்டத்தை அமைச்சர் சிதம்பரம் முன்வைத்தார். அதன்போதே, வீடமைப்பதற்கான நிதி மக்களிடம் நேரடியாக வழங்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிதி நேரடியாக வழங்கப்படும் எனக் கூற முடியாது. நாட்டின் இறைமையை அது பாதிப்பதால் அரசாங்கத்தினூடாகவே நிதி வழங்கப்பட வேண்டும்" என கெஹெலிய மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இடம்பெயர்ந்த 585 பேர் இன்று ஒட்டு சுட்டானில் மீள்குடியேற்றம்

3500 பேர் கிளிநொச்சி, முல்லை மாவட்டங்களில் அடுத்த வாரம் மீள்குடியேற்றப்படுவர்



முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மூன்று கிராமசேவகர் பிரிவுகளில் இன்று (17) 178 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் மீள்குடியேற்றப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் கூறியது.

மாங்குளம் ஏ-9 வீதிக்கு மேற்கே இன்றுபுரம் மற்றும் திருமுருகண்டி ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலேயே இவர்கள் மீள்குடியேற்றப்படுவதாக மாவட்ட திட்டப் பணிப்பாளர் எஸ்.

ஸ்ரீரங்கன் கூறினார். இவர்கள் மெனிக்பாம் நிவாரணக் கிராமங்களில் இருந்து விசேட பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட உள்ளனர். இதேவேளை இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டவாளி பிரதேச செயலகப் பிரிவில் 35 பேர் மீள்குடியேற்றப்பட உள்ளனர்.

இதேவேளை அடுத்தவாரம் சுமார் 3500 பேர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங் களில் மீள்குடியேற்றப்பட உள்ளனர். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிலுள்ள பனிச்சன்குளம் மற்றும் அம்பகாமம் கிராமசேவகர் பிரிவுகளில் எதிர் வரும் 21ஆம் திகதி 175 குடும் பங்களைச் சேர்ந்த 550 பேர் மீள்குடியேற்றப்பட உள்ளதாக முல் லைத்தீவு திட்டப் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் கூறினார்.

இது தவிர எதிர்வரும் 21ஆம், 22ஆம் திகதிகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 16 கிராமசேவகர் பிரிவுகளிலும் மீள்குடியேற்றப் பணிகள் இடம் பெற உள்ளதாக கிளிநொச்சி அரச அதிபர் கேதீஸ்வரன் ரூபாவதி கூறினார்.

உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ள சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்த 1500 பேர் இங்கு மீள் குடியேற்றப்பட உள்ளனர்.

இது தவிர கரச்சி கிழக்கு, வட்டக்கச்சி, மாவடியம்மன், ராம நாதபுரம் உட்பட 6 கிராம சேவகர் பிரிவுகளில் எதிர்வரும் 22 ஆம் திகதி சுமார் 1500 பேர் மீள்குடியேற்றப்பட உள்ளதாகவும் அரச அதிபர் கூறினார். இவர்கள் மெனிக்பாம் நலன்புரி முகாம்களில் இருந்து விசேட பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட உள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

நெடுங்கேணி, நொச்சிமோட்டை பகுதிகளில் பிரதேச செயலகங்கள்


அமைச்சர்கள் பசில், ஜோன் ஆகியோரினால் நாளை உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு


வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி மற்றும் நொச்சிமோட்டை பகுதிகளில் 19 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரதேச செயலகங்கள் நாளை 18ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வுகளில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, ஜோன் செனவிரத்ன ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டு திறந்து வைக்கவுள்ளனர். நெடுங்கேணி பிரதேச செயலகம் 9 இலட்சம் ரூபா செலவிலும், நொச்சி மோட்டை ‘சேவா பியச’ நிலையம் 10 இலட்சம் ரூபா செலவிலும் நிர்மாணி க்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை பொது நிர்வாக அமைச்சு வழங்கியுள்ளது.

அத்துடன் வவுனியாவில் சமுர்த்தி சங்க காரியாலயமொன்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுவதை அரசு நிராகரிப்பு


இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுவதை அரசாங்கம் மீண்டும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று (16) இதனை அறிவித்தார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷியுடனான சந்திப்புக்குப் பின்னர் வெளிவிவகார அமைச்சில் அவருடன் கூட்டாக நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே பேராசிரியர் பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கூறப்படுவது பற்றி ஜப்பானின் நிலைப்பாடு யாதென்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு அகாஷி பதிலளித்ததன் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சர் பீரிஸ் விளக்கினார். அதேநேரம், அரசியல் தீர்வு விடயமாக சிறுபான்மைக் கட்சிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த் தைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

போர்க்குற்ற விசாரணை தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த ஜப்பானிய விசேட தூதுவர் அகாஷி, இலங்கைக்கு சர்வதேச அமைப்புகள் அழுத்தம் கொடுக்க வேண்டியதில்லையென்றும், தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதனை ஜப்பான் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

வடமாகாணத்தின் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தலா 200 மில்.நிதி

மேம்பாட்டுத் திட்டத்திற்கு உலக வங்கி உதவும்

வட மாகாணத்தின் உள்ளூராட்சி சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தலா 200 மில்லியன் ரூபா வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவி த்தார்.

வட மாகாணத்தில் உள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இந் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு உள்ளூர் சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (சஉகநஐட) ஊடாக அரசாங்கம் இந்த நிதியை வழங்கவுள்ளது. இத்திட்டத்திற்கு உலக வங்கி கடன் உதவி வழங்கவுள்ளது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

ஆளுநர் தலைமையில் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தின் தேசிய திட்ட இணைப்பாளராகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் வியானி குணதிலக்கவும், வட மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் பிரான்ஸிஸ் ஜோன்ஸன் உட்பட உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்கள் நியமிக்கப்ப ட்டுள்ளனர்.

2010 முதல் 2013 வரையான நான்கு ஆண்டு காலப்பகுதிக்குள் இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பிரான்ஸிஸ் ஜோன்ஸன் தினகரனுக்குத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக வழங்கப்படும் உள்ளூராட்சி சேவை களை மேம்படுத்தும் வகையிலேயே இந்தத் திட்டம் அமுல்படுத்தப் படவுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நூறு வீத மக்களின் பூரண பங்களிப்புக்களின் மூலமே இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் மூலம், அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேவைப் படும் வசதிகள், நடவடிக்கை உட னடியாக செய்து கொடுக்கப்படும்.

ஆண்டிறுதி கணக்கறிக்கை, கணக்காய்வு மற்றும் மக்களின் பங்களிப்பு என்பவற்றைச் சரியான முறையில் காண்பிக்கும் உள்ளூ ராட்சி மன்றங்களுக்கே இந்த நிதி வழங்கப்படும் என்றும் குறிப் பிட்டார்.

இந்தத் திட்டத்தைத் துரிதப் படுத்தும் வகையில் எதிர்வரும் 21ம் திகதி வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தலைமையில் வரோதய நகரிலுள்ள விவசாய திணைக்கள கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரை யாடல் நடைபெறவுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

மில்ரோய் - முரளிதரன் இன்று யாழ். விஜயம்



மீள்குடியேற்றத்துறை அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் இன்று யாழ்ப்பாணம் பயணமாகின்றனர்.

இதன் போது அவர்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் மற்றும பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்பு ஒன்றும் அங்கு இடம்பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே இவர்கள் இருவரும் கிழக்கில், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

சகல கட்சிகளும் வன்னி மக்களின் வாழ்வை மேம்படுத்த முன்வர வேண்டும் : ஜேவிபி

அனைத்தையும் இழந்து நிற்கும் வன்னி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

சகல மக்களும் சமத்துவத்தோடும் சம உரிமையோடும் வாழும் சூழ்நிலை உருவானால் மட்டுமே இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு எட்டப்படும் என மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜே.வி.பியினர் நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினர்.

மாநாட்டில் உரையாற்றிய சோமவன்ச அமரசிங்க அங்கு மேலும் தெரிவித்ததாவது :

"யுத்தம் முடிவடைந்து 13 மாதங்கள் கடந்த நிலையிலும் மகிந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கான எந்தவித அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்யவில்லை. யாழ்ப்பாணத்திற்கு முன்னர் மூன்று தடவைகள் நாம் சென்றிருந்தோம். யுத்தம் முடிவடைந்த நிலையில் முதன் முதலாக வடபகுதிக்கு இந்த வாரம் விஜயம் செய்தோம்.

வன்னியில் மீள்குடியேறிய தமிழ் மக்களின் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டோம். உண்மையிலேயே அவர்களுடைய நிலைமை பரிதாபகரமாகவே உள்ளது.

மகிந்த அரசாங்கம் அங்கு மீள்குடியேறிய மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட இன்னமும் பூர்த்தி செய்யவில்லை. அத்துடன் அவர்களின் வாழ்வியலை மேம்படுத்தக்கூடிய திட்டங்களேனும் அரசாங்கத்திடம் இதுவரை இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பொருளாதார ரீதியாக வளப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதைவிட்டு, அரசாங்கம் பாதுகாப்புக்கென வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

யுத்தம் முடிவடைந்து ஆறுமாத காலத்துக்குள் தமிழ்மக்களின் சகல பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது. இருப்பினும் 13 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அடிப்படைத் தேவைகள் கூட இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என்பதே உண்மை.

வடபகுதியில் காணாமற் போனவர்களின் விவரங்களைக் கூட அறிக்கையாக வெளியிடமுடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.

அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் செல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

தடுப்பு முகாம்களில் உள்ள இளைஞர், யுவதிகளை விசாரணைக்குட்படுத்தி, நீதிமன்றில் ஆஜர்செய்து, குற்றமற்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று எமது கட்சி அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

மக்களிடையே நல்லிணக்கம் வேண்டும்

மக்களிடையே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று அரசாங்கம் பேச்சளவில் சொல்லிக்கொண்டிருக்கிறதே தவிர, செயலளவில் அதற்கு முரணாகவே நடந்து வருகிறது.

எல்லாவற்றையும் இழந்து நிற்கும் வன்னி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.

நாட்டில் சகல மக்களும் சமத்துவத்தோடும் சம உரிமையோடும் வாழும் சூழ்நிலை உருவாக்கப்பட்டாலே இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு எட்டப்படும். பிரச்சினைக்கான தீர்வு உரிய காலத்தில் எட்டப்படாவிட்டால் வெளிநாடுகளின் தலையீடு மேலும் அதிகரிக்கும்."

இவ்வாறு அவர் கூறினார்.

மாநாட்டில் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், அனுரகுமார திஸநாயக்க, விமல் ரத்னநாயக்கா, முத்துபண்டார ஐயக்கோன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

போர்க்குற்ற விசாரணை குறித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் : பிரி.அமைச்சர்

போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக ஐ.நா.சபை பொதுச் செயலருக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்று தெற்காசிய விவாகாரங்களுக்கான பிரிட்டிஷ் பிரதி அமைச்சர் அலிஸ்டர் பர்ட் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக்குழு விவாதம் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்து, சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் நேரடியாக ஆதரிக்கவில்லை.

விவாதத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய தொழிற்கட்சி உறுப்பினர் சியோபன் மிக் டொனால்ட், சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச நெருக்கடிக்கான குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருந்த விடயங்களையும், செனல் 4 இல் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகள் போன்றவற்றையும் ஆதாரம் காட்டிப் பேசினார்.

போர்க் குற்றங்கள் குறித்த ஒரு சுயாதீன சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டியதன் முதல் கடமை இலங்கை அரசுடையது என்று சர்வதேச சட்டம் கூறுகிறது. இந்நிலையில் இது தொடர்பில் ஒரு விசாரணையை இலங்கை மீது திணிக்க முடியாது என்று அமைச்சர் அலஸ்டர் பர்ட் தெரிவித்தார்.

இந்த விவாதத்தில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொழிற்கட்சியைச் சேர்ந்த கீத் வாஸ், இலங்கை அரசாங்கம் யுத்த குற்றங்கள் குறித்த சாட்சியங்களை அழிக்கும் பணியைச் செய்ய ஒரு சீன நிறுவத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஊடக தகவல்கள் மூலம் தான் அறிந்ததாக தெரிவித்தார்.

தென் ஆபிரிக்க அரசின் இன வெறிக் கொள்கையை எதிர்க்கும் விதமாக அந்நாட்டுப் பொருட்களை புறக்கணித்தது போன்று, இலங்கைப் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...