24 ஜூன், 2011

பொருளிடம் அறியும் புதிய பொறிமுறை டாக்டர். சிதம்பரநாதன் சபேசன் விஞ்ஞானி சபேசன் செவ்வி




பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய மின்னணு பொறிமுறை ஒன்றை தமிழ் விஞ்ஞானி ஒருவர் இங்கு பிரிட்டனில் கண்டுபிடித்திருக்கிறார்.

பிரிட்டனின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவரான, இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட டாக்டர். சிதம்பரநாதன் சபேசன் அவர்களே இந்தக் கண்டுபிடிப்பை செய்திருக்கிறார்.

ஒரு பொருளுடன் இந்தப் பொறிமுறை அலகு பொருத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்தப் பொருள் திருடப்பட்டாலோ அல்லது காணாமல் போனாலோ, அந்தக் கணத்தில் அது எங்கு இருக்கிறது என்பதை இந்தப் பொறிமுறை காண்பிக்கும். இதன் மூலம் காணமால் போன பொருளை இலகுவாகத் தேடிக் கண்டுபிடிக்க முடியும்.



விமானப் பொதிகள் தொலைவதை தவிர்க்கலாம்
ஏற்கனவே இப்படியான பொருட்களை தேடியறியும் பொறிமுறை கண்டுபிடிக்கப்பட்டு, அப்பிள் கைத்தொலைபேசி போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்ற போதிலும், தற்போதுள்ள பொறிமுறைகள் மின்கலம் இல்லாமல் இயங்க முடியாத குறைபாட்டுடன் காணபடுகின்றன. அத்துடன் அவற்றின் விலையும் மிகவும் அதிகமாகும்.

ஆனால், 26 வயதான சபேசனின் கண்டுபிடிப்பைப் பொறுத்தவரை, அதற்கு மின்கலம் தேவையில்லை என்பதுடன் அதன் உற்பத்திச் செலவும் வெறுமனே 5 பிரித்தானிய பென்சுகள் மாத்திரமே என்கிறார் சபேசன்.

இந்த பொறிமுறையை பெரிய விமான நிலையங்களில் பயன்படுத்துவது குறித்து ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும், அப்படி பயன்படுத்தும் போது பயணப் பொதிகள் காணாமல் போதல், பயணிகள் தமது விமானத்தை தவற விடுதல் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் என்றும் சபேசன் கூறுகிறார்.

இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமைக்கும் தற்போது விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விபரித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஆப்கனில் அமெரிக்கத் துருப்புகள் குறைப்பு: ஒபாமா திடீர் அறிவிப்பு



ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கத் துருப்புகள் 2014-க்குள் முற்றாக விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறார் அதிபர் பராக் ஒபாமா.
வாஷிங்டன், ஜூன் 23: அல்-காய்தா தலைவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை அழித்து நம்முடைய லட்சியத்தை நிறைவேற்றிவிட்டதால் ஆப்கானிஸ்தானிலிருந்து அதிக எண்ணிக்கையில் அமெரிக்கத் துருப்புகளை இனி ஆண்டுதோறும் விலக்கிக் கொள்வோம் என்று அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் 30,000 துருப்புகள் விலக்கிக் கொள்ளப்படுவர் என்றும் எஞ்சியுள்ள 68,000 பேர் கட்டம் கட்டமாக விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு முதல் கட்டமாக 10,000 அமெரிக்கத் துருப்புகள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா திரும்புவர். 23,000 பேர் 2012 செப்டம்பரில் நாடு திரும்புவர்.

2012 நவம்பரில்தான் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார்.

வெள்ளை மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய தொலைக்காட்சி, வானொலி உரையில் துருப்பகளைத் திரும்பப் பெறும் திட்டத்தை அறிவித்தார் ஒபாமா. 13 நிமிஷங்களுக்கு இந்த உரை நிகழ்த்தப்பட்டது. அந்தப் பேச்சு சாதாரண வானொலி, தொலைக்காட்சி உரையாக இல்லாமல் அதிபரின் தேர்தல் பிரசார பொதுக்கூட்ட பேச்சு போலவே இருந்தது.

""ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இது ஆரம்பம்தான், முடிவல்ல. ஆப்கானிஸ்தானில் தலையிட்டதன் மூலம் நமக்குக் கிடைத்த நன்மைகளை அப்படியே தக்கவைத்துக் கொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும்.

நம்முடைய துருப்புகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு தங்கள் நாட்டை பாதுகாக்கும் பொறுப்பை ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்கள்தான் ஏற்க வேண்டும்.

2014-ம் ஆண்டில் நம்முடைய துருப்புகள் அனைவரையும் நாம் விலக்கிக் கொண்டுவிடுவோம். நாட்டை பாதுகாக்கும் முழுப்பொறுப்பு ஆப்கன் ஆட்சியாளர்களிடம் தரப்பட்டுவிடும்.

பத்தாண்டுகளுக்கு முன்னால் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு நியூயார்க் நகரமும் வாஷிங்டனும் ஆளாயின. (இரட்டைக் கோபுர கட்டடத்தையும் பென்டகனையும் அல்-காய்தா பயங்கரவாதிகள் தாக்கியதைக் குறிப்பிடுகிறார்)

ஜப்பானியர்கள் இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் நிகழ்த்திய பேர்ல்-ஹார்பர் (முத்துத் துறைமுகம்) தாக்குதலை விடக் கொடிதானது அந்தச் செயல். இந்தப் படுகொலைகளை அல் காய்தா இயக்கமும் அதன் தலைவர் ஒசாமா பின் லேடனும் திட்டமிட்டு நிகழ்த்தினர்.

இந்தத் தாக்குதல் நமக்குப் புதியதொரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாதிகளின் இலக்கு போர்க்களத்தில் ஆயுதங்களுடன் நின்று சண்டை போடவல்ல நம்முடைய ராணுவ வீரர்கள் அல்ல; என்ன நடக்கிறது என்றே தெரிந்துகொள்ள முடியாத அப்பாவி மக்கள். ஆடவர், மகளிர், குழந்தைகள் என்று சூதுவாது அறியாத அப்பாவிகள் எண்ணில் அடங்காமல் இத் தாக்குதலுக்கு உயிரிழக்கத் தொடங்கினர்.

இதன் பிறகே நாம் தேச அளவில் ஒன்றுபட்டோம். இந்த அல்-காய்தா இயக்கத்தையும் அவர்களுக்குத் துணை நிற்கும் தலிபான்களையும் பூண்டோடு அழிக்க சபதம் பூண்டோம். இப்போது ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஒடுக்கப்பட்டுவிட்டனர். அல்-காய்தா தலைவர்களில் பாதிக்கும் மேற்பட்டோரை அழித்துவிட்டோம்.

இராக்கிலும் நாம் இரண்டாவது போரை நடத்த வேண்டியிருந்தது. அங்கே மக்களுடைய ஆதரவுடன் பதவிக்கு வந்த அரசைக்காக்க நாம் கோடிக்கணக்கான ரூபாய்களை மட்டும் அல்ல நம்முடைய ராணுவத்தின் விலைமதிக்க முடியாத வீரர்களின் உயிர்களையும் பலி கொடுக்க வேண்டியிருந்தது.

அல்காய்தா தலைவர்கள் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓடி பதுங்கினர். தலிபான்கள் அணி சேர்ந்து நம்மை எதிர்க்கத் தொடங்கினர். நம்முடைய எதிரிகள் யார் என்று அடையாளம் கண்டுவிட்டோம். அவர்களுக்கு அடைக்கலம் தரும் பாகிஸ்தானியப் பகுதிகளும் நம்முடைய தாக்குதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. நான் அதிபராக இருக்கும்வரை பயங்கரவாதிகளையும் அவர்களுடைய பதுங்கு தளங்களையும் விட்டுவைக்கவே மாட்டேன். நம்மைக் கொல்ல நினைப்பவர்கள் நம்மிடமிருந்தும் நீதியிடமிருந்தும் தப்பவே முடியாது.

பயங்கரவாதிகளை ஒழிப்பதில் பாகிஸ்தான் அரசுடன் இணைந்து செயல்படுவோம். அவர்களை ஒழிப்பது அவசியம் என்பதை பாகிஸ்தான் அரசுக்கு வலியுறுத்துவோம். பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடுவோம் என்று அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுங்கள் என்று பாகிஸ்தானிடம் கண்டிப்புடன் கூறுவோம்.

தலிபான்கள் அல் காய்தாவுடனான தங்களுடைய தொடர்பைத் துண்டித்துக்கொள்ள வேண்டும்.

அரசுடன் சமாதானப் பேச்சு நடத்தும் முன் ஆயுதங்களை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்; ஆப்கானிஸ்தான் நாட்டு அரசியல் சட்டத்தை மதித்து நடப்போம் என்று உறுதி அளிக்க வேண்டும்.

நாம் கொண்டுள்ள லட்சியம் எளிதில் அடையக்கூடியதுதான். அது மிகவும் வெளிப்படையானது. அல் காய்தாவோ அவருடைய சார்பு அமைப்புகளோ நம் மீதும் நம்முடைய நட்பு நாடுகள் மீதும் மறந்தும் கைவைக்கக்கூடாது என்பதுதான் நமது முக்கிய நிபந்தனை.

நாம் இப்போது அமெரிக்காவின் மிகப்பெரிய சொத்தான அமெரிக்க குடிமக்கள் மீது முதலீட்டை அதிகப்படுத்த வேண்டும்.

புதிய வேலைவாய்ப்பையும் தொழில்துறை உற்பத்தியையும் அதிகரிக்கும் தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டும். நம்முடைய அடித்தள கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். தூய்மையான, இயற்கைக்கு கேடில்லாத ஆற்றல்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் வழிமுறைகளை அதிகம் நாடியாக வேண்டும்'' என்றார் ஒபாமா.

நெருக்கடி ஏன்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது என்று தீர்மானித்துள்ள ஒபாமா அமெரிக்க மக்களிடையே சரிந்துவரும் செல்வாக்கைத் தூக்கி நிறுத்தும் நோக்கத்திலேயே இந்த அறிவிப்பைத் திடீரென வெளியிட்டிருக்கிறார்.

அவர் உறுதியளித்தபடி பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் நடைபெறாததால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. நாட்டின் தொழில்துறை உற்பத்தியில் ஏற்பட்ட தேக்க நிலையும் குறையவில்லை, வேலையில்லாத் திண்டாட்டமும் மறையவில்லை. எனவே ஒபாமாவுக்கு மக்களிடையே செல்வாக்கு சரிந்தது.

இந்த நிலையில்தான் ஒசாமா பின் லேடனை அமெரிக்கத் துருப்புகள் திடீர் நடவடிக்கையில் கொன்றனர். அதனால் சரிந்த செல்வாக்கு ஓரளவுக்கு கூடியது என்றாலும் பழையபடி மக்களிடையே அமோக ஆதரவுபெற அது போதுமானதாக இல்லை என்று அதிபர் கருதியிருப்பதைப் போலத் தெரிகிறது.

ஆப்கானிஸ்தான் அரசிலும் அந்த ஆட்சியாளர்கள் தலிபான்களுடன் ரகசியமாகப் பேச்சு நடத்துகின்றனர், சுமுகமாகப் போக பேரம் நடக்கிறது என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன. அமெரிக்கா தரும் நிதியில் பெரும்பகுதியை ஆட்சியாளர்களே கையாடல் செய்கின்றனர் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மாதந்தோறும் 10,000 கோடி டாலர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள துருப்புகளின் பராமரிப்புக்காகவே செலவாகிறது. இதை அமெரிக்க மக்களால் தாங்க முடியவில்லை. உள்நாட்டில் வரியைக் குறைக்கவோ வசதிகளைப் பெருக்கவோ நிதி இல்லை என்று கூறிவிட்டு ஆப்கானிஸ்தானில் கொண்டுபோய் இத்தனை கோடி டாலர்களைத் தண்டமாக கொட்டி அழ வேண்டுமா என்று ஆத்திரத்துடன் கேட்கின்றனர். எனவேதான் துருப்புகளைக் குறைப்பது என்ற முடிவுக்கு அமெரிக்க அதிபர் வந்திருக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா - பாகிஸ்தான் இணைந்து செயல்படும்'

இஸ்லாமாபாத், ஜூன் 23: பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் நிலையிலான பேச்சு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை தொடங்கியது.

அப்போது இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்காதது, மும்பை பயங்கரவாதத் தாக்குதல் விசாரணையில் தாமதம் குறித்து பாகிஸ்தானிடம் கவலை தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், இஸ்லாமாபாத்துக்கு வியாழக்கிழமை வந்தார். தொடர்ந்து அவர் பாகிஸ்தான் வெளியறவுச் செயலர் சல்மான் பஷீரை சந்தித்து முதல் சுற்று பேச்சுகளைத் தொடங்கினார்.

இருநாடுகளிடையே அமைதி, பாதுகாப்பு, நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சி என மூன்று பிரிவுகளாகப் பேச்சு நடைபெறுகிறது.

முதல் கட்டப் பேச்சுக்குப்பின் செய்தியாளர்களிடம் நிருபமா ராவ் கூறியது:

நாடுகளின் அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாதம் உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்படும். பயங்கரவாதம் என்பது ஒரு பகுதியில் மட்டும் உள்ள பிரச்னையில்லை, சர்வதேச அளவில் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் என்றார் அவர்.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளுடன் அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு தொடர்பு உள்ளது வெளிப்பட்டுள்ள நிலையில் நடைபெறும் இப்பேச்சு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

அதிகாரப்பகிர்வு: அரசுடன் ததேகூ பேச்சுவார்த்தை சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக அரசுடன் பேச்சு நடத்திவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்வைத்த அதிகாரப்பகிர்வு தொடர்பான பரிந்துரைகளை ஏற்க இலங்கை அரசு மறுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

சுரேஷ்பிரேமச்சந்திரன் செவ்வி

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சு நடத்திவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் குழுவினர் வியாழக்கிழமை அரசு பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்கள்.

இந்த பேச்சுவார்த்தைகளின் ஒருபகுதியாக, மாகாணசபை களுக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பில் ததேகூ சார்பில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளில் மாகாண சபைக்கான அதிகாரங்கள் மற்றும் மத்திய அரசுக்கான அதிகாரங்கள் என்று தெளிவான வரையறை இருக்க வேண்டும் என்று கூறியிருந்ததாகவும், ஆனால் இலங்கை அரசு அதை ஏற்க மறுத்துவருவதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

அதற்கு மாற்றாக, மாகாணசபை, மத்திய அரசு என்கிற இரண்டு அதிகார பட்டியல் தவிர இரண்டுக்கும் பொதுவான அதிகாரங்களை கொண்ட பொதுப்பட்டியல் ஒன்று இருக்கவேண்டும் என்று இலங்கை அரசு கூறுவதாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டு பொருளாதாரத்தில் கட்டியெழுப்ப முற்படும் போது சர்வதேசத்தின் உறுதுணையுடன் காலை வாரி விடும் சூழ்ச்சிகள்

நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டு பொருளாதாரத்தில் கட்டியெழுப்ப முற்படும் போது சர்வதேசத்தின் உறுதுணையுடன் காலை வாரி விடும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

'செனல்-4', தாருஸ்மன் அறிக்கை என எமக்கெதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, அதில் குறிப்பாக எனது பெயருடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ என எம் மூவரது பெயர்களே குறிப்பிடப்படுகின்றன. நம் நாட்டுத் தாய்மாரின் கண்ணீரைத் துடைத்த எம்மை மின்சாரக் கதிரைக்குக் கொண்டு செல்லும் சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எல்லாவற்றையும் விட எமக்கு எமது நாடு பெரிது அதன் கீர்த்தியும் பெரிது. நாட்டை மீட்பதில் உதவியது போல் சவால்களை வென்று நாட்டைக் கட்டியெழுப்புவதிலும் சகலரதும் ஒத்துழைப்பு அவசியம் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற விவசாய மாநாட்டிற்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், துறைசார்ந்த உயரதிகாரிகளுடன் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

மனித உரிமை மீறல் குற்றம் சுமத்தப்படுகிறது. மக்களை வாழவைப்பதைவிட மேலான மனித உரிமை எதுவென நான் கேட்க விரும்புகிறேன்.

தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது என்பது நாட்டின் அரசியல் வேலைத்திட்டமல்ல. அது மக்களைப் பலப்படுத்தும் திட்டமாகும்.

நாட்டை மீட்டெடுத்து மக்களைப் பலப்படுத்தி தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நாம் மேற்கொள்ளும் திட்டங்கள் சிலருக்கு பார்க்கப் பொறுக்கவில்லை.

நாம் பயங்கரவாதிகள் சீரழித்த நாட்டை மட்டுமன்றி பல்வேறு வியாபாரிகள் பல்வேறு நோக்கங்களுக்காக அபகரித்த காணிகள் இழக்கப்பட்ட வளங்களையும் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.

பொருளாதார ரீதியில் எம்மை வீழ்ச்சியுறச் செய்வதற்கு சில சக்திகள் முயற்சி செய்கின்றன. இனங்களுக்கிடையில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பி சகல மதங்களுக்குமான உரிமைகளை வழங்கி முன்னேற்றம் கண்டு வரும் வேளையில் எம்மைக் காலை வாரிவிட முயல்கின்றன.

விவசாயிகளின் உரிமையை அவர்களிடமிருந்து அபகரித்ததுடன் ச.தொ.ச. போன்ற நிறுவனங்களை விற்றனர்.

நாம் தேசிய பொருளாதாரத்தை முன்னேற்ற முயல்கையில் அதனைத் திரிபுபடுத்தி தருஸ்மன் அறிக்கை, மனித உரிமை மீறல் என குற்றங்கள் சுமத்தப்படுகின்றன. தமிழாயிருக்கட்டும், சிங்களமாயிருக்கட்டும் நம் தாய்மாரின் கண்ணீருக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்.

‘சனல் 4’ எனக் கூறிக்கொண்டு எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். அத்தகைய சதிமுயற்சிகளுக்கு எமக்கு எதிராகச் செயற்படும் சக்திகள் துணை போகின்றன. இது விடயத்தில் அனைவரும் அவதானமாயிருக்க வேண்டியது அவசியம்.

நாட்டுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் நாட்டு மக்களுக்கு எதிராகச் செயற்படுகின்றார்கள். அப்பாவி விவசாயிகளின் உரிமைகளைச் சூறையாட இடமளிக்க முடியாது.

இத்தகைய சதிமுயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். பயிர்ச் செய்கையைப் போலவே நாட்டிற்கு எதிரான செயற்பாடுகளிலும் விவசாய சமூகம் விழிப்பாகச் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அளவெட்டி தாக்குதல் சம்பவம்: அரசு - கூட்டமைப்பு பேச்சை பாதிக்காது


அளவெட்டி தாக்குதல் சம்பவம் அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தையைப் பாதிக்காது என்று அமைச்சரும், அமைச்சரவைப் பதில் பேச்சாளருமான அனுர பிரிய தர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் அளவெட்டி தேர்தல் பிரசார கூட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெறு கின்றன.

இது விடயமாக பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்றுமுன்தினம் பாரா ளுமன்றத்தில் விசேட அறிக்கை விடுத்தார். எனவும் அவர் கூறினார். அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முற்பகல் நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை மற்றொரு ஊடகவியலாளர் கட்டுநாயக்க ஆர்ப்பாட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யவென நியமிக்கப்பட்ட தனிநபர் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்திருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இவ்விடயம் தொடர்பான விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை பரிசீலனை செய்து ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்.

அச்சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைகள் நடக்கின்றன மரண விசாரணை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் இந்த அறிக்கையை வெளியிட்டால் இச்சம்பவம் தொடர்பான நீதி விசாரணைகளை பாதிக்கும். அதனால் அந்த அறிக்கை உரிய நேர காலத்தில் வெளியிடப்படும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய வீசா பெறுவதற்கான காலதாமதம் நீக்கம் விண்ணப்பித்த மறுதினமே விசா

இந்தியாவுக்கு செல்வதற்கான வீசா கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தினால் விண்ணப்பம் கையளிக்கப்பட்ட அடுத்த வேலை நாளில் பெற்றுக் கொள்ள முடியுமென்று தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது பற்றி மேலும் விளக்கமளித்த அவர், யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையர் ஒருவர் குறிப்பாக ஒரு தமிழர் இந்தியாவிற்கு செல்வதற்கான வீசா விண்ணப்ப படிவமொன்றை தூதரகத்தில் ஒப்படைத்தால், அது இந்தியா விற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து சம்பந்தப்பட்டவருக்கு வீசா வழங்கலாம் என்ற அங்கீகாரம் கிடைத்த பின்னரே வீசா வழங்கப்பட்டது என்றும், இதனால், ஒருவர் இந்திய வீசாவைப் பெறுவதற்கு காலதாமதம் ஏற்பட்டதென்றும் சுட்டிக்காட்டினார்.

இன்று இலங்கையில் யுத்தம் முடி வுற்று நாட்டில் சமாதானமும் அமைதி யும் திரும்பிக் கொண்டிருப்பதனால், பாதுகாப்பு நடைமுறைகள் தளர்த்தப்பட்டு ஒருவரின் வீசா விண்ணப்பம் அன்றைய தினமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அடுத்த வேலைநாளில் வீசா சம்பந்தப்பட்டவருக்கு வீசா கொடுக்கப்படும் என்று கூறினார்.

இப்போது இலங்கையில் அமைதி நிலைகொண்டிருப்பதனால் வெகு விரைவில் வீசாவை இந்தியா செல்லும் பயணிக்கு விமான நிலையத்தில் வைத்தே வழங்குவதற்கான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தை தாங்கள் தீவிர பரிசீலனைக்கு எடுத்திருப்பதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கச்சதீவை மீண்டும் இந்தியா இலங்கையிடமிருந்து சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்றும் இலங்கை அரசாங்கத்தின் மீது தமிழர் பிரச்சினை குறித்து அழுத்தங்களை கொண்டுவர வேண்டுமென்றும் இந்திய மத்திய அரசாங்கத்தின் வேண்டுகோள் விடுத்திருப்பது குறித்து அந்த அதிகாரி தகவல் தருகையில், அரசியலில் எவருக்கும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கும் உரிமையை இந்திய அரசியல் சட்டம் உத்தரவாதம் செய்திருக்கிறதென்றும் எவர் எந்தக் கருத்தை தெரிவித்தாலும் இந்திய மத்திய அரசாங்கமே இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையை வகுக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கிறதென்றும் கூறினார்.

2009ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் புல்மோட்டையிலும், வவுனியாவில் மெனிக்பாம் முகாமிலும் 50ஆயிரம் நோயாளிகளுக்கு இந்திய வைத்தியக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சையளித்தனர். இவ்விரு இடங்களிலும் இந்திய அரசாங்கம் நடத்திய தற்காலிக நடமாடும் ஆஸ்பத்திரிகளில் 3,000 நோயாளிகளுக்கு பாரிய மற்றும் சிறிய சத்திரசிகிச்சைகளும் செய்யப்பட்டன.

உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் 20ஆயிரம் மெற்றிக்தொன் நிறையுடைய 4 இலட்சம் சீமெந்து மூடைகள் 2010ம் ஆண்டு மீள்குடியேறிய குடும்பங்களுக்காக வழங்கப்பட்டன. இதற்கென இந்திய அரசாங்கம் 1.75மில்லியன் டொலர்களை செலவிட்டது.

இந்திய அரசாங்கம் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த இருப்பிடங்களில் சென்று மீள்குடியேறுவதற்கும் தங்கள் வயல்களில் விவசாயம் செய்வதற்கும் கண்ணி வெடி ஆபத்துக்களில் இருந்து அவர்களை முற்றாக பாதுகாக்கும் எண்ணத்துடன் 2009ம் ஆண்டில் தரைக் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக 7 வெவ்வேறு இந்திய கண்ணி வெடிகளை அகற்றும் குழுக்களை ஈடுபடுத்தியது.

இந்தக் குழுக்களுக்கு உள்ளூரில் உள்ள இளைஞர்கள் மற்றும் யுவதிகளும் தங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கினர். இந்த கண்ணி வெடிகளை அகற்றும் குழுக்களில் சில குழுக்கள் ஒவ்வொன்றாக தங்கள் கைகளாலே அகற்றும் ஆபத்தான பணியை மேற்கொண்டார்கள். இதற்கென இந்திய அரசாங்கம் 10மில்லியன் டொலர்களை செலவிட்டது.

வடபகுதியில் யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுமுகமாக இந்திய அரசாங்கம் 500 நான்கு சக்கர உழவு இயந்திரங்களையும் அவற்றிற்கு தேவையான இயந்திர உபகரணங்களையும் 2010ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வழங்கியது. இதற்கு இந்திய அரசாங்கம் 6மில்லியன் டொலர்களை செலவிட்டது.

இந்திய அரசாங்கம் 2010ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 5,500 கிலோகிராம் பயறுவிதைகளையும் 4,300கிலோகிராம் உழுந்து விதைகளையும் விவசாயிகளுக்கு வழங்கியது. கிழக்கிலங்கையின் வாகரையில் இடம்பெயர்ந்த மீனவர்களுக்காக இந்திய அரசாங்கம் பலநாட்கள் ஆழ்கடலில் இருந்து மீன்பிடிக்க வசதிகளுடனான டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட மீன்பிடி படகுகளையும், மீன்பிடிப்பதற்கான வலைகள் மீனை கெட்டுவிடாமல் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான குளிர் அறைகளையும், குளிர்சாதன வசதி கொண்ட லொறிகளையும் வழங்கியது. இதற்கென ஒரு மில்லியன் டொலர் செலவிடப்பட்டது.

2010ம் ஆண்டு மார்ச் 13முதல் ஏப்ரல் 8ம் திகதி வரையில் இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரிலிருந்து 19 செயற்கை கை, கால்களை பொருத்தும் நிபுணர்கள் அழைத்துவரப்பட்டனர். இவர்கள் கை, கால்களை இழந்து ஊனமுற்ற 1,400 பேருக்கு செயற்கை கை, கால்களைப் பொருத்தினார்கள். இவ்வாண்டில் இது போன்று இன்னுமொரு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்திய அரசாங்கம் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பாவனைக்காக பஸ்களை அன்பளிப்பு செய்துள்ளது. முதல் கட்டமாக 17மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான 10 பஸ்கள் கிழக்கு மாகாணத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டன. இவை பாடசாலைப் பிள்ளைகளை ஏற்றிச் செல்வதற்கும் வைத்திய சேவைகளை மேற்கொள்வதற்கும் அங்கு பயன்படுத்தப் படும்.

சிறிய அபிவிருத்தி திட்டங்கள் என்ற தலைப்பின் கீழ் வடபகுதியில் உள்ள 80 பாடசாலைகளின் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் மன்னாரிலுள்ள மீனவர்களுக்கு 170 மீன்பிடி படகுகள் வழங்கப்பட்டன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆஸ்பத்திரிகளின் அவசர சிகிச்சை பிரிவுக்கு தேவையான உபகரணங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டன. யாழ்ப்பாண துரையப்பா விளையாட்டரங்கு, அச்சுவேலி கைத்தொழில் தொழிற்சாலையிலும் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. வடபகுதி ரயில் பாதையை நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கம் 800மில்லியன் டொலரையும் வழங்கியுள்ளது.

வடபகுதியிலும், கிழக்கு மாகாணத்திலும் மலையகப் பிரதேசங்களிலும் 50ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளுக்காக இந்திய அரசாங்கம் 300 முதல் 400மில்லியன் டொலர்களை செலவிடவுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 27ம் திகதியன்று முன்மாதிரி திட்டமான 1000 வீடுகளை அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

டபகுதியின் ஒரே ஒரு வணிகத் துறைமுகமான காங்கேசன்துறை துறை முகத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கும் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பலாலி விமான நிலையத்தின் விமான இறங்கு தரையின் திருத்தப் பணிகளும் இப்போது இந்தியாவினால் வெற்றிகரமான முறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கம் நாடெங்கிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் இணைந்து செயற்பட விரும்புபவர்கள் தங்கள் திட்ட கொள்கை விளக்கத்துடன் கொழும்பிலுள்ள இந்திய துணைத்தூதுவரிடம் நேரடியாக விண்ணப்பம் செய்யலாமென்று தூதரகத்தின் ஒரு சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

2000 கோடி ரூபாவில் குறைநிரப்பு பிரேரணை பாதுகாப்பு அமைச்சுக்கு சபையில் சமர்ப்பிப்பு



பாதுகாப்பு தலைமையக கட்டட நிர்மாணப் பணிகளுக்கென 2000 கோடி ரூபாவை பாதுகாப்பு அமைச்சுக்கு பெற்றுக் கொள்வதற்கான குறைநிரப்பு பிரேரணையொன்று நேற்று பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் சார்பில் ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன இப்பிரேரணையை சபையில் நேற்று சமர்ப்பித்தார்.

பாராளுமன்றம் நேற்று பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. அரச தரப்பு பிரதம கொரடா தினேஷ் குணவர்தன பிரேரணையை சமர்ப்பித்த போது,

2011 ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் 2011 டிசம்பர் 31ம் திகதி வரையிலான நிதி ஆண்டினுள் அரசாங்கத்தின் இணைந்த நிதியிலிருந்தோ அல்லது அரசின் வேறு ஏதேனுமொரு நிதியத்தினால் அல்லது பெற்றுக் கொள்ளும் ஏதேனும் கடன் தொகையினால் 2000 கோடி ரூபாவை குறைநிரப்பு தொகையாக பெற்றுக் கொள்ளல் என குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அமைச்சையும், பாதுகாப்பு நிறுவனங்களையும் விரைவில் மீளமைப்பதற்காகவும், மீண்டும் அபிவிருத்தி செய்வதற்காகவும் முறையாகவும் பயனுடையதாகவும் நிதி ஈடுபடுத்துவதை சான்றுபடுத்துவதற்காக காணிகள் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் நிதிகளை கழிக்க முடிந்த விசேட கருத்திட்டம் ஒன்றை ஆரம்பித்து, பாதுகாப்பு அமைச்சின் பொதுச் செயற்பாடுகளிலிருந்து அப்பாற்பட்ட அத்தகைய விசேட செயற்பாடுகளை செயற்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் கீழான மதிப்பீட்டிற்கு பாதுகாப்பு தலை மையகக் கட்டமைப்பு’ எனும் பெயரில் விசேட கருத்திட்டமொன்றிற்கு ஒதுக்கீடுகள் பெற்றுக் கொள்ள வேண்டியுள் ளது.

இக்கருத் திட்டம் 2011, 2012 ஆண்டுகளில் செயற்படுத்தவுள்ளதோடு அதற்காக 2011 ஆம் ஆண்டில் ரூபா பில்லியன் 20 ஆன முழுப் பெறுமதியுடைய குறை நிருப்பு ஒதுக்கீடுகளை பெற்றுக் கொள்ளல் என்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விளக்கமளித்துள்ளார்.நிதியத்தினால் அல்லது பெற்றுக் கொள்ளும் ஏதேனும் கடன் தொகையினால் 2000 கோடி ரூபாவை குறைநிரப்பு தொகையாக பெற்றுக் கொள்ளல் என குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

போதைவஸ்துக்கு அடிமையான 4000 கைதிகளுக்கு புனர்வாழ்வு

இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள சுமார் 500 கைதிகள் போதைவஸ்துக்கு அடிமையாகி நோயாளிகளாக பெரும் வேதனைக்கு உட்பட்டிருப்பது இப்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து, அவர்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து, சுகதேகிகளாக மாற்றுவதற்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்டி. சில்வா இப்போது நவீன திட்டம் ஒன்றை தயாரித்துள்ளார்.

இவர்கள் அனைவரையும் பல்லேகலயில் புதிதாக ஆரம்பித்துள்ள சிறைக் கைதிகளுக்கான புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி, இந்த கொடிய போதைப் பொருள் பாவனைப் பழக்கத்திலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கு சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் இவ்விதம் நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரிய விடயமாகும்.

இவ்விதம் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ள சிறைக்கைதிகளுக்கு இந்திய தீய பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வைத்திய சிகிச்சைகளை அளிப்பதுடன், அவர்களுக்கு நல் ஆலோசனை செய்யும் வகுப்புகளையும் இவர் ஒழுங்கு செய்துள்ளார்.

சுமார் ஓராண்டு காலம் இவ்விதம் போதைப் பாவனைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளவர்களுக்கு பயிற்சியளித்தால் அவர்களை முற்றாக திருத்தி நல்வழிப்படுத்த முடியும் என்று சிறை அதிகாரிகள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

இவற்றுடன் சிறைச்சாலை திணைக்களம் இந்த கைதிகளுக்கு தொழிற்பயிற்சிகளையும் வழங்கும். இந்த பயிற்சிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் போதைப் பொருள் பாவனை பழக்கத்திலிருந்து முற்றாக விடுவிக்கப்படும் இந்த கைதிகள் மீண்டும் சமூகத்தில் சங்கமிப்பதற்கு ஏதுவாக விடுவிக்கப்படுவார்கள்.

இந்த பல்லேகல புனர்வாழ்வு நிலையத்தின் இரண்டாவது கட்ட சிகிச்சையின் போது, மேலும் நாலாயிரம் சிறைக்கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்: குடிநீர், அடிப்படை வசதிகளின் மேம்பாட்டுக்கு பிரான்ஸ் உதவி 35 மில்லியன் யூரோக்களை பெற அமைச்சரவை அங்கீகாரம்

யாழ்ப்பாணம் மற் றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான குடிநீர் வழங்கல் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்தவென பிரான்ஸ் அரசாங்கத்திடமிருந்து 35 மில்லியன் யூரோக்களை நிதியுதவியாக பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரும், அமைச்சரவைப் பதில் பேச்சாளருமான அனுரபிரியதர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச் சரவையின் வாராந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறுகையில், விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் உதவியோடு இரணைமடு குளத்தின் ஆற்றுப்படுக்கை அபிவிருத்தி செய் யப்படவுள்ளது. இதற்கென 20 மில்லி யன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப் பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவிருக்கின்ற யாழ். மாவட்ட குடிநீர் விநியோக மேம்பாடு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள குடிநீர் வழங்கல் மற்றும் அடிப்படை சுகாதார வசதி வேலைத்திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியும் ஏற்கனவே 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.

இவ்விரு வேலைத்திட்டங்க ளுக்கும் அரசாங்கம் 20.04 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளது. இந்த வேலைத்திட்டம் 164.04 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் பூர்த்தி செய்யப்படவிருக்கின்றது.

அதேநேரம் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், லஹுகல, பதியத்தலாவ ஆகிய மூன்று பிரதேச செயலகங்களுக்கும் புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...