29 செப்டம்பர், 2010

அமெரிக்காவில் மத்திய மந்திரி பிரபுல்படேல் விமான நிலையத்தில் தவிப்பு; சந்தேகத்தில் 2 மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டார்






மத்திய விமான போக்கு வரத்துதுறை மந்திரி பிரபுல் படேல் கனடா சென்றுள்ளார். வழியில் அவர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ விமான நிலையம் சென்றார். அங்கு சந்தேகத்தின் பேரில் அவர் 2 மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டார். மேலும் அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை இரவு நடந்தது.

இதனால் அவர் தவித்தார் இது பற்றிய தகவல் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதருக்கு தெரிய வந்தது. உடனே அவர் விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினார்.

அதன் பின்னர் அவர் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார். பொதுவாக மத்திய மந்திரி பிரபுல்படேல் சோதனை எதுவுமின்றி பயணம் செய்ய அமெரிக்க விமான நிலையங்களில் அனுமதி உள்ளது.

ஆனால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு பயணிகள் பட்டியலில் அவரது பெயர் மற்றும் பிறந்த தேதியில் மற்றொரு நபர் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்துக்கு அமெரிக்க உள் பாதுகாப்பு அதிகாரி, மத்திய மந்திரி பிரபுல் படேலிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். ஆனால் இதை மத்திய மந்திரி பிரபுல்படேல் பெரிய விஷயமாக எடுத்து கொள்ளவில்லை. பெயர் மற்றும் பிறந்த தேதி குழப்பத்தால் இது போன்று ஏற்பட்டது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

மணிக்கு 416.6 கி.மீ. வேகத்தில் மின்னலாக பறந்த சீன ரெயில்; புதிய உலக சாதனை படைத்தது







சீனாவில் அதிவேக ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் 24-ந்தேதி பெய்ஜிங்- தியான்ஷின் நகரங்களுக்கு இடையே மணிக்கு 394.3 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. இதன் மூலம் உலகிலேயே அதிவேக ரெயில் என்ற சாதனையை படைத்தது. தற்போது, அதை விட அதிக வேகமாக இயங்க கூடிய ரெயிலை சீனா உருவாக்கியுள்ளது.

இந்த ரெயில் ஷாங்காய்- ஹாங்ஹீ நகரங்களுக்கு இடையே பரிசோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது மணிக்கு 416.6 கி.மீட்டர் மின்னல் வேகத்தில் பறந்து சாதனை படைத்தது.

இந்த ரெயில் மணிக்கு 350 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் அளவு வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இது ஷாங்காய்- ஹாங்ஹீ நகரங்களுக்கு இடையே 202 கி.மீட்டர் தூரத்தை 40 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்பு இந்த தூரத்தை ரெயில்கள் 2 மணி நேரத்தில் கடந்து சென்றன. தற்போது மிக குறைந்த நேரத்தில் சென்றதன் மூலம் உலகிலேயே மிக நீளமான அதிவேக விரைவு ரெயில் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

இதன்மூலம் நவீன ரெயில்வே தொழில் நுட்பத்தை சீனா பெற்றுள்ளது என்று சீன ரெயில்வே அமைச்சகத்தின் தலைமை என்ஜினீயர் கிகுவாவூ தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியில் பேராதனை பல்கலை மாணவர்கள்

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாபெரும் ஆர்ப்பட்ட பேரணி ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பேராதனையில் புறப்பட்ட பேரணி தற்பொழுது கண்டி நகரை வந்தடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நான்கு மாணவத் தலைவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியே இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க பேராதனை பல்கலைகழகத்திற்கு விஜயம் செய்த போது, அவரை தடுத்து வைத்ததாகக் கூறி மேற்படி மாணவர்களை பேராதனை பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

அயோத்தி தீர்ப்பு : சென்னையில் பலத்த பாதுகாப்பு

அயோத்தி வழக்கு தீர்ப்பையொட்டி சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி உள்ளோம். முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர்கள் கூறி இருக்கிறார்கள். நகரில் 10 ஆயிரம் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்."

சென்னை பொலிஸ் கமிஷனர் ராஜேந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அயோத்தி வழக்கு தீர்ப்பையொட்டி சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பினரையும் அழைத்து பேசி உள்ளோம். முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர்கள் கூறி இருக்கிறார்கள். சென்னை நகரில் 10 ஆயிரம் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பொலிஸ் ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோவில்கள், மசூதிகள், பொதுமக்கள் கூடும் வணிக வளாகங்கள், பஸ், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். சமூக விரோதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.

தீர்ப்பு தொடர்பாகக் கண்டன சுரொட்டிகள் அச்சடிக்கவும், ஒட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அச்சக உரிமை யாளர்களை அழைத்து இது தொடர்பான சுவரொட்டிகள் அச்சடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். இதை கண் காணித்தும் வருகிறோம்.

சோதனை சாவடிகளிலும் மற்றும் வழக்கமான இடங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

உடல்நிலை மோசம் : பௌத்த தேரர் அம்பாறைக்கு மாற்றம்



மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பௌத்த தேரர் உடல் நிலை மோசமடைந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக இன்று மதியம் 1.30 மணியளவில் அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தம் தெரிவித்தார்.

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் தேரர் அம்பாறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஞாயிறன்று மட்டக்களப்பில் வைத்துத் தன்னை அவமானப்படுத்தியதைக் கண்டித்தே தான் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேரடியாக வந்து தன்னிடம் மன்னிப்புக் கோரும் வரை சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் தொடருமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐக்கியத் தேசியக் கட்சி இருமுகம் காட்டுகிறது : அரியநேத்திரன்

"தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைகளைக் கையாளும்போது ஐக்கியத் தேசியக் கட்சி இருமுகம் காட்டுகிறது. தமிழரைத் திருப்திப்படுத்த தமிழர்களுக்கு சார்பாகவும் சிங்களவரைத் திருப்திப்படுத்த சிங்களவர்களுக்கு சார்பாகவும் பேசி, அரசியல் நடத்துகிறது."

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று ஐக்கியத் தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தமிழ் மக்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக கருத்துக்களுக்குப் பதிலளித்து இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் முடிந்து விட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க எவ்வாறு கூறமுடியும்? புலிகளின் ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்ததை நாங்கள் அங்கீகரிக்கின்றோம்.

ஆனால் தமிழ்ப் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுப் போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை. இந்த ஜனநாயகப் போராட்டத்தின் வெற்றியில்தான் தமிழ்ப்பேசும் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், போராட்டத்தின் முடிவுடன் எல்லாம் முடிந்து விட்டதாக அத்தநாயக்க கூறுவது எந்த வகையில் நியாயம்?

தமிழ் மக்களை நேசிப்பதாகக் காட்டிக் கொள்ளும் ஐக்கியத் தேசியக் கட்சி இவ்வாறு கூறுவதன்மூலம் அதன் இரட்டை முகத்தை வெளிப்படுத்துகிறது" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

அரியாலையில் நடந்த ஏர்பூட்டு விழா உழவர்களின் ஏர்பூட்டு விழா நேற்று யாழ்ப்பாணம் அரியாலையில் நடைபெற்றது.


இந் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி உட்பட பல அதிகாரிகள் பங்குபற்றினர். அப்பிரதேசத்தை சேர்ந்த சுமார் 2000 விவசாயிகளும் இதில் கலந்துகொண்டனர்.

மேற்படி நிகழ்வுக்கென கமநல சேவைகள் திணைக்களத்தினால் சுமார் 17 டிரக்டர்களும் பிராந்திய விவசாய அமைச்சினால் 13 டிரக்டர்களும் வழங்கப்பட்டிருந்தன.

பெரும் போகத்திற்கென விவசாயிகளுக்கு நெல்விதைகளும் வழங்கப்பட்டன.

இம்முறை சுமார் 102,000 ஏக்கர் நிலத்தில் பெரும்போகச் செய்கை மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

மன்னார் தனியார் பஸ் நடத்துனர்கள் குறித்து முறைப்பாடு

மன்னாரில் இருந்து தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் சிலவற்றில் நடத்துனர்கள் தம்முடன் தகாத முறையில் நடந்து கொள்வதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக மன்னாரில் இருந்து வவுனியா செல்லும் தனியார் பஸ்கள் சிலவற்றின் நடத்துனர்கள் இவ்வாறு தகாத முறையில் நடந்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நடத்துனர் இளம் பெண்களிடம் பயணக் கட்டணத்தைப் பெற்றுவிட்டு பயணச்சீட்டு வழங்குகையில், அதன் பின்புறத்தில் காதல் வார்த்தைகள் எழுதிக் கொடுப்பதாகவும் அவரின் தொலைபேசி இலக்கங்களை எழுதிக் கொடுத்து போன் எடுக்குமாறு கூறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சம்பவங்களால் இளம்பெண்கள் தனியாக பஸ்ஸில் பயணிக்க அச்சம் தெரிவிக்கின்றனர். அதேவேளை, இத்தகைய சம்பவங்களை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்டோரிடம் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

40 தினங்களில் 9 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு : சந்தேகத்தில் இருவர் கைது



கல்பிட்டி, முந்தல் மற்றும் புத்தளம் பொலிஸ் பிரிவுகளில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி விற்பனை செய்து வந்ததாகச் சொல்லப்படும் இருவர் சந்தேகத்தின் பேரில் கல்பிட்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 40 தினங்களுக்குள் ஒன்பது மோட்டார் சைக்கிள்கள் இவர்களால் திருடப்பட்டுள்ளன. அந்த ஒன்பது மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள நுரைச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர்களில் ஒருவர் தனியார் பஸ் ஒன்றின் நடத்துனர் எனவும், மற்றவர் அவருக்கு உதவியவர் எனவ்ய்ன் பொலிசார் தெரிவித்தனர்.

இந்த மோட்டார் சைக்கிள்கள் புத்தளம், மதுரங்குளி, முந்தல், புளிச்சாக்குளம் போன்ற பிரதேசங்களில் திருடப்பட்டு அவை நுரைச்சோலை, பாலக்குடா, பாலாவி போன்ற பிரதேசங்களில் விற்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

ஒரு லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள் முப்பதாயிரம், நாற்பதாயிரம் என்று குறைந்த விலைக்கே, சந்தேக நபர்கள் விற்று வந்துள்ளனர்.

பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களைத் திருடும் இவர்கள் அவற்றின் இலக்கத் தகட்டினை மாற்றிவிட்டே விற்பனை செய்துள்ளனர் என மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து அறிய முடிந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

பிரதேச சிவில் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய தகவலையடுத்து முதலாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் லக்ஷ்மன் ரண்வலஆராச்சி தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

சரத் பொன்சேகா உறுப்புரிமை ரத்து : மனுவை ஏற்க மறுப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் உறுப்புரிமையை ரத்து செய்யக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹப்புத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்த் மோகன்தாஸ் என்பவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் இது தொடர்பாகத் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

எனினும் மனுவில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது எனத் தேர்தல்கள் ஆணையாளர் சார்பாக முன்னிலையான அரச சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர், மனுதாரரின் சட்டத்தரணி, குறித்த மனுவை மீளப்பெறுவதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தார்.

அதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்வது தொடர்பாக எதிர்காலத்தில் மனு தாக்கல் செய்வதற்கு தடையேதும் கிடையாது என அறிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தொடர் மழை : மலையகத்தில் மண் சரிவு அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையினால் மலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கண்டி - நுவரெலியா வீதியில் ரம்பொட நீர்வீழ்ச்சிக்கு அருகில் இரண்டு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி.குமாரசிறி தெரிவித்துள்ளார்.

நீர்வீழ்ச்சிப் பகுதிகளினூடாக வாகனத்தில் செல்வோர் அவதானமாக இருக்கும்படியும், மலைப்பகுதிகளில் வாகனங்களைத் தரித்து வைக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

அதேவேளை, கலாவேவ ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், புத்தளம்-மன்னார் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காலியில் வெள்ளத்தில் அடிபட்டுசென்ற ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், எனினும் இதுவரை அவரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெப்ரவரி மாதத்தில் நடைபெறும் சாத்தியம்

அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறும் சாத்தியம் அதிகமாகவே உள்ளது. அதற்கிடையில் உள்ளூராட்சிமன்ற திருத்தச் சட்டமூலத்துக்கு மாகாண சபைகளின் அனுமதியை பெறுவதும் மற்றும் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறும் நடவடிக்கையும் ஒக்டோபர் மாதத்துக்குள் முடிவடைந்துவிடும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் விபரிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்

உள்ளூராட்சிமன்ற தேர்தல் பெரும்பாலும் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெறுவது உறுதியாகும். அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. அதாவது உள்ளூராட்சிமன்ற சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொண்டு புதிய தேர்தல் முறைமைக்கு அமையவே உள்ளூராட்சிசபை தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக திருத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அடுத்ததாக மாகாண சபைகளின் அங்கீகாரத்தை பெறும் நோக்கில் செயற்பாடுகள் இடம்பெறும். அதனையடுத்து திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றார்.

இதேவேளை உள்ளூராட்சிசபை தேர்தலில் ஒரு கோடியே 43 இலட்சத்து 15 ஆயிரத்து 417 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக தேர்தல் திணைக்கள தகவல்ககள் தெரிவித்துள்ளன. கடந்த பாராளுமன்ற தேர்தலைவிட எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் இரண்டு இலட்சத்து 26 ஆயிரத்து 917 பேர் அதிகமாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இதேவ÷ளை உள்ளூராட்சிமன்ற சட்டமூலத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருத்தங்களின் பிரகாரம் மாநகரசபை நகரசபை அல்லது பிரதேச சபை ஒன்றின் வரவு செலவுத்திட்டம் தோல்வியடையும் பட்சத்தில் குறித்த சபையின் தலைவர் அல்லது மேயர் பதவி விலகவேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் புதிய திருத்தங்களின் பிரகாரம் உள்ளூராட்சிசபை ஒன்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 வீதத்தை ஒரு கட்சி பெறுமாயின் உள்ளூராட்சிமன்றத்துக்குரிய தலைவர் அல்லது மேயரை தெரிவு செய்யும் உரிமை அந்தக் கட்சிக்கு கிடைக்கும். ஆனால் உள்ளூராட்சிசபை ஒன்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 வீதத்தை எந்தக் கட்சியும் பெறாவிடின் சபைக்கான தலைவர் அல்லது மேயரை நியமிக்கும் பொறுப்பு குறித்த சபைக்கே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வுகள் இன்று வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெறுகின்றன.



புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் டியூ குணசேகர இந் நிகழ்வுகளில் கலந்து கொண்டு நஷ்டஈடுகளை வழங்கவுள்ளார்.

இதற்கிணங்க முல்லைத்தீவில் 150 குடும்பங்களுக்கும், வவுனியாவில் 30 குடும்பங்களுக்கும் இன்று நஷ்ட ஈடுகள் வழங்கப்படுகின்றன. இன்று காலை வவுனியாவிலும், பிற்பகல் முல்லைத்தீவிலும் நஷ்டஈடு வழங்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

யுத்தத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்கு நஷ்ட ஈட்டுக் காசோலைகள் அமைச்சரினால் இந் நிகழ்வுகளின் போது வழங்கப்படுகின்றன.

இதேவேளை, புனர்வாழ்வளிக்கப்பட்ட 402 புலி உறுப்பினர்கள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். வவுனியாவில் இந் நிகழ்வு இடம் பெறுவதுடன் அமைச்சர் டியூ குணசேகர இந் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.

அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்டு தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்ட 7000 இற்கும் மேற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்குத் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் வேலை வாய்ப்புச் சந்தையொன்றும் இன்று வவுனியாவில் நடைபெறவுள் ளது.

புனர்வாழ்வு சிறைச்சாலைகள் அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் வேலை வாய்ப்புச் சந்தையில் தெற்கிலிருந்து பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு அவர்கள் பெற்றுக் கொண்டுள்ள பயிற்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஆடைக் கைத்தொழில், இலத்திரனியல் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை இந் நிகழ்வில் கலந்து கொள்ளும் வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளவர்களை திறமை அடிப்படையில் தேர்ந்தெடுப்பரென அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

அணுசக்தி ஊடாக மின்சாரம்; இலங்கையில் அணு உலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய விஞ்ஞானிகள் குழு



2020ல் இலங்கையின் அணுசக்தி ஊடாக மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக அணு உலையொன்றை அமைப்பதற்கான சாத்தியக் கூற்றை ஆராய்வதற்காக ஐந்து விஞ்ஞானிகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு ள்ளது.

இந்தக் குழு ஆறு மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதோடு அதன் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க கூறினார்.

அண்மையில் வியன்னாவில் நடைபெற்ற உலக அணுசக்தி அதிகார சபையின் வருடாந்த அமர்வு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

1950களிலே அணு சக்தியூடாக மின்சாரம் உற்பத்தி செய்வது குறித்து இந்தியா கவனம் செலுத்தியது. பல நாடுகள் அணுசக்தி மூலமே கூடுதலாக மின்சாரம் உற்பத்தியில் செய்கின்றன. இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் மொத்த மின் உற்பத்தி இரண்டு வீதத்தை அணுசக்தி மூலமே மேற்கொள்கின்றன.

அணுசக்தியினூடாக மின் உற்பத்தி செய்வது மிகவும் பெரிய சவாலாகும். அதற்கு முகம் கொடுத்து வெற்றிகொள்ள நாம் தயாராக உள்ளோம். இதற்கு வெளிநாடுகளின் உதவி தேவைப்படும்.

அணுஉலையை எங்கு அமைப்பது? எந்த நாட்டின் உதவியைப் பெறுவது, முதலீட்டார்களின் உதவி போன்ற விடயங்கள் குறித்து இது வரை தீர்மானிக்கப்படவில்லை.

இலங்கையின் பொருளாதாரம் 8.5 வீதத்தை எட்டியுள்ள நிலையில் எமது மின்சக்தி பாவனை கடந்த 8 மாதத்தில் 8 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 2018 ஆகும் போது எமது மின்சக்தி தேவை இரண்டு மடங்கால் அதிகரிக்கும்.

அந்த நிலையில் 2020ன் பின் நாடு இருட்டில் புதையும் நிலையே ஏற்படும். அதனால் அணுமின் உற்பத்தி போன்ற மின் உற்பத்திகள் குறித்து இப்பொழுது கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் அணு உலையொன்றை அமைக்க 15 வருடங்கள் பிடிக்கும் 2020-25ற் இலங்கையில் அணு உலையொன்றை அமைக்க இப்பொழுது பூர்வாக பணிகளை முன்னெடுக்க வேண்டும். இதற்கு உதவி வழங்க சர்வதேச அணுசக்தி அதிகார சபை இணக்கம் தெரிவித்துள்ளதோடு வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளது. அந்த வழிகாட்டல்களை பின்பற்றி நாம் அணு உலை அமைப்பதற்கான பணிகளை முன்னெடுக்க உள்ளோம்.

வியன்னா மாநாட்டின் போது இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, பிரான்ஸ் நாட்டு பிரதிநிதிகளுடனும் பேசினோம்.

அணு உலைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யா வழங்குவதோடு அணு உலையில் இருந்து வெளியாகும் கழிவுகளை அந்த நாடு பொறுப்பேற்கும். இது தொடர்பில் ரஷ்யாவுடன் பேச உள்ளோம்.

அணு உலைகளில் யுரேனியத்திற்குப் பதிலாக தோரியத்தை பயன்படுத்தும் புதிய முறையொன்றை இந்தியா கண்டுபிடித்துள்ளது. 30 வீதமான தோரியம் இலங்கை கடற்பரப்பில் காணப்படுகிறது. அது குறித்து நாம் கவனம் செலுத் தியுள்ளோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சட்டவிரோத ஆட்கடத்தலைத் தடுக்கும் இலங்கையின் நடவடிக்கைக்கு கனடா ஆதரவு


விசேட பிரதிநிதி விரைவில் கொழும்பு வருகை

‘ஓஸன் லேடி’, ‘சன் சீ’ ஆகிய கப்பல்கள் மூலம் சட்ட விரோதமாக கனடாவுக்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கையர் தொடர்பாக இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு உதவும் நோக்கில் கனேடிய அரசு நியமித்துள்ள விசேட பிரதிநிதி விரைவில் கொழும்புக்கு வரவுள்ளார்.

சட்ட விரோத ஆட்கடத்தலை தடுப்பதற்கு இலங்கையும், கனடாவும் இணைந்து செயற்படுவதென இரு நாடுகளினதும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களும் இணக்கம் கண்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (25) நியூயோர்க்கில் சந்தித்து பேசியபோதே இவர்கள் இணக்கம் கண்டிருக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 65 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக நியூயோர்க் சென்ற வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அங்கு கனடா, ஸ்பெயின் மற்றும் கொரிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கனேடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் லோரன்ஸ் கனோன், ஸ்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மிகெல் ஏஞ்சல் மொராட்டினஸ் கியூயோடே மற்றும் கொரிய குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சின் கன் யூ ஆகியோரை கடந்த சனிக்கிழமை (25) நியூயோர்க்கில் வைத்து அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் சந்தித்துப் பேசியுள்ளார்.

கனேடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது பயங்கரவாதத்தை தோற்கடித்த பின்னர் மீந்துள்ள விடுதலை புலிகளின் செயற்பாடுகள் கனடா உள்ளிட்ட வேறு நாடுகளில் இடம் பெறுவதாக அமைச்சர் பீரிஸ் கனேடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சரிடம் விபரித்தார்.

அதேவேளை கனடாவில் விடுதலைப் புலிகள் மற்றும் முன்னணி அமைப்புகளின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கனடா எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி கனேடிய அமைச்சர் இலங்கை அமைச்சர் பீரிஸிடம் விளக்கினார். விடுதலைப் புலிகள் இயக்கம் கனடாவில் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதையும் கனேடிய அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.

ஸ்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மிகேன் ஏஞ்சல் மெரராடி கியூயோடேயுடனான பேச்சுவார்த்தையின் போது பயங்கரவாதத்தை வெற்றிகரமாக முறியடிப்பதற்கு இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகளை ஸ்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பாராட்டினார். உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கையும் ஸ்பெயினும் பங்களிப்பு வழங்குவது பற்றியும் அங்கு கலந்துரையாடப்பட்டது.

கொரிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடனான சந்திப்பின் போது கொரிய குடியரசு பல்வேறு துறைகளில் இலங்கைக்கு வழங்கும் ஆதரவு தொடர்பாக அமைச்சர் பீரிஸ் கொரிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். இலங்கையின் மனித வளத்தை கொரியாவுக்கு பெற்றுக் கொள்வதை எதிர்காலத்தில் அதிகரித்துக் கொள்ள தீர்மானித்துள்ளதையிட்டும் அமைச்சர் பீரிஸ் பராட்டினார்.

405 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 20 வேலைத் திட்டங்களை கொரிய அரசாங்கம் தற்போது இலங்கையில் செயற்படுத்தி வருகிறது. அத்துடன் கொரிய வேலை வாய்ப்புகளில் இலங்கைக்காக வழங்கப்பட்ட ஒதுக்கீட்டில் 44 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

குடாநாட்டிலுள்ள வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை


யாழ். போதனா வைத்தியசாலை உட்பட குடாநாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளினதும் குறைபாடுகளை நிவர்த்திப்பதுடன் தாதியர் பற்றாக்குறை மற்றும் சிற்றூழியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்திக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் நடைபெற்ற உயர் மட்ட கலந்துரையாடல் ஒன்றிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் சுகாதார அமைச்சில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது யாழ். போதனா வைத்தியசாலைக்கென சிற்றூழியர்களை நியமித்தல், சுத்திகரிப்புச் சேவையின் குறைபாடுகள், சமையலறைக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் பாத்திரங்களைப் பெற்றுக் கொள்ளல், சமையலறையில் விறகு உபயோகத்தைத் தவிர்த்து எரிவாயு பயன்படுத்துதல், பராமரிப்புப் பகுதி ஒன்றை ஏற்படுத்துதல், விடுதி எழுதுநர்களுக்கான நிரந்தர நியமனங்களைப் பெற்றுக் கொள்ளல் வைத்தியசாலையின் பழைய பொருட்களை அகற்றுதல், தாதிய உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை, வெளிநோயாளர் பகுதியை நோயாளர்களது வசதி கருதி விரிவாக்குதல், விடுதி வசதி, வைத்தியசாலையின் மேலதிகத் தேவைகளுக்காக காணி வசதியைப் பெற்றுக் கொள்ளல், அதிகாரிகளுக்கான வாகன வசதிகள், தாதியர் பயிற்சிக் கல்லூரியின் தேவைகள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் ஏனைய வைத்தியசாலைகளில் நிலவும் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

போதனா வைத்தியசாலையின் பராமரிப்புச் செலவுக்கென 01 மில்லியன் ரூபாவை ஒதுக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டதுடன் விடுதி எழுதுநர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.

கொழும்பிலிருந்து விசேட குழுவொன்றை அனுப்பி வைத்தியசாலைகளிலுள்ள பழைய பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதென்றும் தாதியர் பற்றாக்குறை மற்றும் தாதியர்களுக்கான விடுதி அமைப்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கும் ஏனைய வைத்தியசாலைகளுக்கும் சென்று நிலைமைகளை நேரில் கண்டறிந்து கொண்டதன் பயனாகவும் அங்குள்ள பல்வேறு தரப்பினருடன் நடத்திய கலந்துரையாடல்களின் மூலமும் மேற்படி தேவைகள் மற்றும் குறைபாடுகள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மைத்திரிபால சிறிசேன வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரிசிறி, சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள், யாழ். வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி வைத்திய கலாநிதி ரவிராஜ், தாதியர் சங்கப் பிரதிநிதிகள், தாதியர் பயிற்சிக் கல்லூரி அதிபர் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டு. நகரில் இந்திய உதவியுடன் ரூ. 10 ஆயிரம் மில். செலவில் நவீன வசதிகள் கொண்ட வைத்தியசாலை



மட்டக்களப்பில் இந்திய நிதியுதவியுடன் 10,000 மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளையும் கொண்ட புதிய வைத்திய சாலையொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்கான ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுகாதார அமைச்சில் நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், சுகாதார அமைச்சின் செயலாளர் ரவிரு பேரூ, இந்திய நிறுவனத்தின் தலை வர் சுனில் அகர்வால் மற்றும் இந்திய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சுகாதார, அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் விடுத்த வேண்டுகோளுக்கி ணங்கவே மேற்படி வைத்தியசாலை மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

தற்போது மட்டக்களப்பில் இயங்கும் போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளைக் கருத்திற்கொண்டு அதற்குப் பதிலாக இப்புதிய வைத்தியசாலை நிறுவப்படவுள்ளது.

அத்துடன் இதுவரை காலமும் பெரும் குறைபாடாக விருந்த புற்றுநோய்ச் சிகிச்சை பிரிவொன்றும் இதனுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்ப டவுள்ளது. இந்தியாவின் என். ஐ. பீ. எச். ஐ. அபிவிருத்தி திட்ட நிறுவனமும் இந்திய வங்கியொன்றும் இணைந்தே மேற்படி நிதியுதவியை வழங்கவுள்ளன. சிறு கடன் திட்ட அடிப்படையில் இதற்கான நிதி வழங்கப்படவுள்ளது.

இதனையடுத்து சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான உயர் மட்டக் குழுவொன்று இரண்டொரு தினங்களில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேரில் விஜயம் செய்ய வுள்ளது. இக்குழு அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிக்கையை கைய ளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

காலி, களுத்துறை மாவட்ட தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கும் அபாயம்


பரவலாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக காலி, களுத்துறை மாவட்டங்களின் சில தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மழை மேலும் தொடருமாயின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களும் நீரில் மூழ்கக் கூடிய வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

நாடெங்கிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேரமழை வீழ்ச்சி பதிவில் ஆகக்கூடிய மழைவீழ்ச்சி மன்னாரில் 70.5 மி.மீட்டர்களாகப் பதிவாகியுள்ளது என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி நேற்றுத் தெரிவித்தார்.

இதேவேளை நேற்றுக் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையுமான காலப்பகுதியில் காலி மாவட்டத்திலேயே அதிக மழை வீழ்ச்சியாக 50.7 மி.மீ. மழை பெய்துள்ளது எனவும் அவர் கூறினார்.

அடை மழை காரணமாக காலி மாவட்டத்தின் பலப்பிட்டி, எல்பிட்டி, கரந்தெனியா போன்ற பிரதேசங்களின் தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் உள்வீதிகளின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் காலி மாவட்ட இணைப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் அசித ரணசிங்க கூறினார்.

எல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் திடீர் மண்சரிவு காரணமாக இரு வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளரான ஜயசிங்க ஆராய்ச்சி மேலும் கூறுகையில், தற்போதைய மழைக் காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்க முடியும்.

இன்று பிற்பகல் அல்லது மாலை வேளையில் இடி, மின்னலுடன் நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்ய முடியும். இச்சமயம் கடும் காற்றும் வீசலாம். அதனால் இடி, மின்னல் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்வதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

இதேவேளை இடைப்பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி அடுத்த வாரத்திற்குள் ஆரம்பமாகலாமென எதிர்பார்க்கின்றோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஆஸி. இந்தியருக்கு ஆயுள் தண்டனை

வியன்னா் ஆஸ்திரியாவில் சீக்கிய மத குருவை கொலை செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஆஸ்திரியாவில் தேரா சச் காண்ட்டில் சீக்கிய கோயில் ஒன்று உள்ளது. இங்கு குருவாக இருந்தவரை கடந்த 2009ம் ஆண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் கொலை செய்தார். வியன்னா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இதுதொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. அதில் சீக்கிய குருவை கொலை செய்த இந்தியருக்கு ஆயுள் தண்டனையும்இ இதில் தொடர்புடைய மேலும் 4 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது.



மேலும் இங்கே தொடர்க...