5 பிப்ரவரி, 2011

நிபுணர் குழுவின் ஆரம்ப நடவடிக்கைகள் பூர்த்தியடையாத நிலையில் உள்ளன


இலங்கை விவகாரம் தொடர்பில் தன்னால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அதன் ஆரம்பக்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் தொடர்ந்தும் அது தொடர்பில் இலங்கையுடன் பேச்சு நடத்துவதாகவும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வைத்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு பான் கீ மூன் மேலும் கூறுகையில், நான் உங்கள் கவலையை பகிர்ந்து கொள்கிறேன். இலங்கை அரசாங்கம் ஒரு முடிவுக்கு வராமல் இருந்து வருவது என்னையும் கவலையடையச் செய்கின்றது. நான் இலங்கைக்கு இரு தடவைகள் விஜயம் செய்துள்ளேன்.

ஜனாதிபதியுடனும் இலங்கை அரச தலைவர்களுடனும் நான் மிகவும் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டேன்.

மிகவும் நீண்டதும், மிகவும் நெருக்கடி மிக்கதும், ஒருவகையில் குழப்பகரமானதுமான உரையாடல்களைத் தொடர்ந்து என்னால் நிபுணர்கள் குழுவொன்றை அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை திருப்தியடையச் செய்ய முடிந்தது.

அந்தவகையில் நிபுணர்கள் குழுவின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியாதிருப்பது, தற்பொழுது தெரியவருகின்றது. அதனால் அவர்கள் தொடர்ந்தும் இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.

பொறுப்புடைமை என்று கூறும்போது, அது எங்கு எப்படி நடப்பினும் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிவதுடன் குற்றம் செய்தவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். அதுவே நீதியின் அடிப்படைத் தத்துவமாகும்.

சிலவேளைகளில் எவ்வாறு நீதி, அரசியல்பலம், அரசியல் ஸ்திரத்தன்மை என்பவற்றை கட்டியெழுப்புவது என்பது ஆச்சரியமாகவுள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை சில வேளைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது. இன்னும் அது நீதியோடு துணைபோகாத பட்சத்தில், அந்த அரசியல் ஸ்திரத்தன்மையினால் நிலைத்து நிற்க முடியாது.

அதேபோன்று அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத பட்சத்தில் நீதியை எம்மால் நிலைநாட்ட முடியாமல் போகலாம். அதனால் இதுவரை எமக்கு அதற்கான சந்தர்ப்பம் உள்ளது. எனவே, அரசியல் ஸ்திரத்தன்மையும் நீதியும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்துச் செல்ல முடியும்.

இலங்கையிலும் அதனை அடையவே முயன்று வருகிறேன் தொடர்ந்தும் அதனை அடைய முயலுவேன் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் பங்கேற்கவில்லை



கதிர்காமத்தில் நேற்று நடைபெற்ற 63ஆவது சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் தி.மு.ஜயரட்ண உட்பட அமைச்சர்கள் சிலரும் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை.

அதேநேரம், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் இத்தேசிய நிகழ்வில் கலந்துகொள்ளாது புறக்கணித்திருந்தனர்.

இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் 63ஆம் சுதந்திர தின நிகழ்வு கதிர்காமம் புனித நகரில் நேற்று இடம்பெற்றன. கட்டியெழுப்பிய தேசத்தைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் சபாநாயகர், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட வெளிநாட்டு பிரதி நிதிகளும் ராஜதந்திரிரிகளும் கலந்துகொண்டிருந்தனர். சம்பிரதாயப்படி சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் வருகையை அடுத்து பிரதமரின் வருகை இடம்பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பிரதமரே தனக்கு அடுத்ததாக வருகை தரும் ஜனாதிபதியை வரவேற்பதும் வழமையாகும். இருந்தபோதிலும் நேற்றைய நிகழ்வுக்கு பிரதமர் தி.மு. ஜயரட்ண வருகை தரவில்லை.

அதேநேரம் சிரேஷ்ட அமைச்சரும் முன்னாள் பிரதமருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க, அமைச்சர்களான பஷில் ராஜபக்ஷ, டியு குணசேகர, ஆறுமுகன் தொண்டமான், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேம்ஜயந்த, எஸ்.பி. திஸாநாயக்க, ராஜித சேனாரத்ன ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

அத்துடன், பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன், விதுர விக்ரமநாயக்க எம்.பி. உட்பட மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் சிலரும் இத் தேசிய நிகழ்வில் பங்கேற்கவில்லை.

இதேவேளை, நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அவற்றின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்ததில் ஒருவர் பலி






முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்ததில் ஒருவர் பலி பாதையில் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது பாரிய மரமொன்று விழுந்ததில் மடவளையைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பன்விலைப் பொலிஸ் பிரிவிலுள்ள மடுல்கலை என்ற இடத்தில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதில் மரணமானவர் மடவளை பஸார் என்ற இடத்தைச் சேர்ந்த முஹமட் நிஸார் முஹம்மட் நதீம் (35) என்பவராகும். அதே இடத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான அப்துல் ஹசன் முஹம்மத் இர்பான்(28) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.க. வின் ஆர்ப்பாட்டத்தின் மீது சரமாரி தாக்குதல்: ஊடகவியலாளர்கள் படுகாயம்

இலங்கையின் 63 ஆவது சுதந்திர தினமான நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஐக்கிய தேசியக் கட்சியினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திரத்துக்கான குரல் எனும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது இனந்தெரியாத குழுவொன்றினால் சரமாரியான தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் ஆர்ப்பாட்டக்காரர்களான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்களும் படுகாயமடைந்துள்ள அதேவேளை அக்கட்சி எம்.பி.க்களது வாகனங்களும் கடுமையான சேதத்துக்குள்ளாகியுள்ளன.

இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கமே திட்டமிட்டவகையில் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரியும் ஜனநாயகத்தை வலியுறுத்தியும் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி ஆர்ப்பாட்டம் சின்ன பொரளை சந்தியில் நேற்று மாலை 7.00 மணியளவில் ஆரம்பமானது. இதில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் என சகலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டம் ஆரம்பமான சில நிமிடங்களில் அவ்விடத்துக்கு திடீரென வந்த இனந்தெரியாத குழுவினர்ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சரமாரியான தாக்குதலை நடத்தினர். தாக்குதலை நடத்துவதற்காக அங்கு குவிந்திருந்த அனைவரது கைகளிலும் பொல்லுகள் இருந்ததாக கூறப்படுகிறது. அவற்றின் மூலமும் கற்களாலும் அவர்கள் தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் நாலா பக்கமும் சிதறி ஓடினர். இதனையடுத்து சின்ன பொரளை பிரதேசத்தில் பதற்றம் நிலவியது.

இதேவேளை செய்தி சேகரிப்பதற்காக அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள் மீதும் இக்குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதனால் சில ஊடகவியலாளர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகினர். தினக்குரல் பத்திரிகையின் புகைப்படப்பிடிப்பாளர் எஸ். கிர்ஷான் காயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ரவி கருணாநாயக்க எம்.பி. யின் சாரதி உட்பட மேலும் பலரும் படுகாயமடைந்துள்ளனர்.

சிரச ஊடக நிறுவனத்தின் வீடியோ கெமரா, தாக்குதல் நடத்தியவர்களால் பலவந்தமாக பறித்துச் செல்லப்பட்டது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, எம்.பி. க்களான தயாசிறி ஜயசேகர, ரவி கருணாநாயக்க, ரோசி சேனாநாயக்க உள்ளிட்டோரின் வாகனங்கள் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.இது இவ்வாறிருக்க மேலும் சில ஊடகவியலாளர்கள் குறித்த இடத்துக்கு செல்லவிடாது தடுக்கப்பட்ட அதேவேளை அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

செய்வதறியாத பொலிஸார்

ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது இனந்தெரியாத குழுவினால் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பதற்ற நிலைமை ஏற்பட்ட அதேவேளை அங்கு என்ன நடைபெறுகிறது என்பதை உடனடியாக புரிந்துகொள்ள முடியாத பொலிஸார் செய்வதறியாது அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.

எனினும் அவர்களால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அது மட்டுமல்லாது இரவு நேரம் என்பதால் அங்கு நடைபெறுவது என்னவென்பதை உடனடியாக உணர்ந்து கொள்ள முடியாத நிலைமை சகலருக்கும் ஏற்பட்டிருந்தது.

இதேவேளை, ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு போதியளவில் பாதுகாப்பு கொடுக்கப்படவில்லையென்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாமல் பக்கச்சார்பாக நடந்து கொண்டதாகவும் பொலிஸாரை விமர்சித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்குவாதத்திலும் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டனர்.

எவ்வாறிருப்பினும் சிறிது நேரத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதேநேரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாம் கைகளில் ஏந்தியிருந்த தீப்பந்தங்களை வீதியில் போட்டு எரித்தனர். அத்துடன் அரசாங்கத்துக்கும் பொலிஸாருக்கும் எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

இந்த தாக்குதலின் பின்னணியில் அரசாங்கமே இருந்து செயற்பட்டிருப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலமாக கோஷமிட்டதை அவதானிக்க முடிந்தது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை அகதி தற்கொலை முயற்சி






தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான சிறப்பு முகாமில் விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதம் இருந்துவந்த இலங்கை தமிழ் அகதி ஒருவர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சென்னையில் இருக்கும் பூந்தமல்லி சிறப்பு முகாமில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழ் அகதிகள் நான்கு பேர் தம்மை விடுதலை செய்யக்கோரி நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

அவர்களில் ஒருவரான அமலன் என்பவர் வெள்ளிக்கிழமை காலை அதிகப்படியான தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அதையடுத்து அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சையளித்து வருவதாகவும் அவரது வழக்கறிஞர் ராஜீவ் காந்தி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு அவரை சந்திக்க தம்மை அதிகாரிகள் அனுமதித்ததாக தெரிவித்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, அமலனின் உடல் நிலை தற்போது சீரடைந்து வருவதாகவும், ஆனால் அமலனும் மற்ற மூன்று பேரும் விடுதலை கோரி தொடர்ந்தும் உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும் ராஜீவ் காந்தி தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் தீவிர உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்பதாலும், விடுதலைப்புலிகளுக்கு ஆயுத பாகங்கள், மற்றும் மருந்துப் பொருட்களை தமிழ்நாட்டிலிருந்து கடத்த முயன்றது உட்பட பல்வேறு வழக்குகள் இவர்களுக்கு எதிராக நிலுவையில் இருப்பதாலும் இவர்களை வெளியில் விடுவதை தமிழக காவல்துறையினர் எதிர்ப்பதாக கூறப்படுகிறது.

அதேவேளை இவர்களின் மீதான வழக்குகளில் நீதிமன்றத்தின் முறையான முன்-ஜாமீன் பெற்றிருப்பதாக கூறும் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி முன்-ஜாமீன் பெற்ற பிறகும் இவர்களை சிறையில் அடைத்துவைத்திருப்பது சட்டவிரோதம் என்று வாதாடுகிறார்.
மேலும் இங்கே தொடர்க...

தத்தளித்தோரை மீட்டு வரும்போது படகு கவிழ்ந்து விபத்து கடற்படை வீரர் உட்பட ஐவர் மாயம் கந்தளாய் சிற்றாறில் சம்பவம்

திருகோணமலை - கந்தளாய் பகுதியில் வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டிருந்த வர்களை மீட்டு வரும் பொழுது படகு கவிழ்ந்ததில் கடற் படை வீரர் ஒருவர் உட்பட ஐந்து பேர் காணாமற் போயுள்ளனர்.

கந்தளாய் சிற்றாறு பகுதியில் நேற்று முன்தினமிரவு 11.30 மணி அளவில் இடம்பெற்றதாகவும் காணா மற் போனவர்களைத் தேடி வருவதாகவும் கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தினகரனுக்குத் தெரிவித்தார். கந்தளாய் சிற்றாறு பாலத்தில் வெள்ளத்தில் சிக்குண்டு 16 பேர் தத்தளித்துக் கொண்டிருப்பதாக இரவு 11 மணியளவில் கடற் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மூன்று கடற் படை வீரர்களும் நான்கு இராணுவ வீரர்களும் ‘டிங்கி’ப் படகில் சென்று அவர்களை மீட்டு வந்துள்ளனர். வரும் வழியில் வெள்ளப் பெருக்கு அதிகமானதால் படகு கவிழ்ந்துள்ளது. உடனடியாக 12 பேரை படையினர் காப்பாற்றியுள்ளனர். ஆனால், ஓர் ஆணும், பெண்ணும் இரண்டு குழந்தைகளும், கடற் படையின் மாலுமி ஒருவருமாக ஐந்து பேர் காணாமற் போய்விட்டதாக கமாண்டர் கோசல தெரிவித்தார்.

இந்தச் செய்தி நேற்று எழுதப்படும் வரை காணாமற் போனவர்களைத் தேடும் பணி நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

கிட்டங்கி ஆற்றில் தோணி கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு

கல்முனை கிட்டங்கி ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் இருவரைக் காணவில்லை என சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர். சேனைக்குடியிருப்பிலிருந்து சவளக்கடை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தோணி பலத்த காற்றின் காரணமாக கிட்டங்கி ஆற்றில் கவிழ்ந்துள்ளது. அதில் பயணித்த 06 பேரில் நால்வர் (04) தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும், ஏனைய இருவரைக் காணவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நாவிதன்வெளி மற்றும் அன்னமலைக் கிராமங்களைச் சேர்ந்த சதீஸ், கணேஸ் ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளனர்.

கல்முனை நகரையும், நாவிதன்வெளி குடியேற்ற கிராமங்களையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதியின் மேலாக 5 அடிக்கு மேலாக வெள்ளம் கடந்த சில நாட்களாக பாய்ந்து வருவதால் வீதிப் போக்குவரத்து முற்றாக தடைப் பட்டுள்ளதையடுத்து, வியாழக்கிழமை தொடக்கம் தோணியினூடாகவே மக்கள் பயணத்தை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இச்சம்பவத்தை யடுத்து நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எம். கோபாலரெத்தினம் கல்முனை மற்றும் சவளக்கடை பொலிஸாருக்கு இவ்வீதியூடாக சகல மார்க்க போக்குவரத்தையும் தடை செய்யுமாறு அறிவித்ததையடுத்து, கல்முனை மற்றும் சவளக்கடை பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்து வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

வவுனியாவில் கன மழை: ஏ-9 வீதியும் தடைப்பட்டது






வவுனியாவில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளம் காரணமாக 17 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்களுக்காக 40 தற்காலிக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

கொட்டும் மழையினால் கால்நடைகள் வவுனியாவிலும் செட்டிகுளத்திலும் இறக்க ஆரம்பித்துள்ளன. கடும்குளிர், உணவு இன்மையினால் மாடுகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையில் செட்டிகுளம் பகுதியில் சண்முகபுரம், கந்தசாமி நகர் கிராமங்களிலிருந்து 250 பேர் இடம்பெயர்ந்து செட்டிகுளம் மகாவித்தியாலயத்திலும் தங்கியுள்ளனர்.

மெனிக்பாம் மீள்குடியேற்ற பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் செட்டிகுளம் கலாசார மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாண்டிக்குளம், திருநாவல்குளம், பண்டாரிகுளம், தோணிக்கல், பூந்தோட்டம், சிறிநகர், பட்டகாடு, நெளுக்குளம், சாம்பல்தோட்டம் பெரிதும் பாதிக்கப்பட்ட இடங்களாக அடையாளம் காணப்பட்டுள் ளன.

வவுனியாவின் அனைத்து குளங்களும் நிரம்பி வழிகின்றன. குளங்களுடைய நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது. பிரதேசங்கள் வெள்ளக் காடாகவே காட்சியளிக்கின்றன.

மதவாச்சிக்கும் – பூனாவைக்கும் இடையில் பிரதான வீதியில் 5 அடிக்கு மேல் வெள்ளம் பாய்வதினால், வவுனியாவிற்கும் – மதவாச்சிக்குமான தரை வழி பாதை (கண்டி வீதி) தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி புறப்பட்டு வந்த இரவு பஸ்கள் மதவாச்சியில் தரித்துள்ளன. இந்த பகுதியில் குளம் உடைப் பெடுத்ததினாலேயே இந்த வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் வவுனியாவிலிருந்து கொழும்பிற்கான புகையிரத சேவைகள் வழமைபோல் இடம்பெறும்.
மேலும் இங்கே தொடர்க...

மீட்புப் பணிகளில் கடற்படை படகுகள், ஹெலிகொப்டர்கள் மீட்டெடுத்த கர்ப்பிணி ஹெலியினுள் பிரசவம்








வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற் கொள்ளவென கடற்படையின் 24 உயிர் பாதுகாப்புப் குழுக்களை ஈடுபடுத்தியுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

அனுராதபுரம், மட்டக்களப்பு, திருகோண மலை ஆகிய பகுதி களுக்கு இந்தக் குழுக்கள் அனு ப்பி வைக்கப்பட்டுள்ள தோடு, மேலும் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதா கவும் அவர் கூறினார்.

இதேவேளை, விமானப் படை ஹெலி கொப்டர்களும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதன்போது மீட்கப்பட்ட பெண்ணொருவர் ஹெலிகொப்டரில் குழந்தையைப் பிரசவித்துள்ளார். நேற்றுக்காலை 212 ஹெலிகொப்டரிலேயே பிரசவம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து தாயையும் குழந்தையையும் அனுராதபுரம் வைத்தியசாலையில் விமானப் படையினர் அனுமதித்தனர்.

பொலன்னறுவை பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பிரதேசங்களில் கர்ப்பிணிப் பெண்களையும் நோயாளர்களையும் ஹெலிகொப்டரில் விமானப் படையினர் மீட்டெடுத்துள்ளனர். கடற்படை படகுகள் செல்ல முடியாத பகுதிகளில் விமானப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

விமானப் படையினரின் நான்கு ஹெலிகொப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப் படையின் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணாயக்கார தெரிவித்தார்.

பெல் – 212 2 ஹெலிகொப்டர்களும், எம். . – 17 இரண்டு ஹெலிகொப்டர்களும் அனுராதபுரம் மாவட்டத்தில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதுடன், ஒரு ஹெலிகொப்டர் உலருணவு, சமைத்த உணவு விநியோகத்தில் ஈடுபடுத்தப்பட்டு ள்ளதாகவும் ஜனக நாணாயக்கார தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

500 மீற்றர் நீளம்; 100 மீற்றர் அகலம்; 20 ஏக்கர் நிலப்பரப்பில் பாரிய மண்சரிவு * வலப்பனையில் மக்கள் வெளியேற்றம் * கால்நடைகள் உயிரிழப்பு மர்லின் மரிக்க

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பலப்பத்தன, தியனில்ல என்ற இடத்தில் சுமார் இருபது ஏக்கர் நிலப்பரப்பில், மண்சரிவு ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வுகள் மற்றும் சேவை பிரிவு தலைவர் ஆர். எம். எஸ். பண்டார நேற்று தெரி வித்தார்.

500 மீற்றர் நீளமும், 100 மீற்றர் அகலமும் கொண்ட மண்சரிவினால் இரண்டு வீடுகள் மூடுண்டுள்ளதுடன், சுமார் ஐம்பது குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு ராகல சிங்கள மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருப்ப தாகவும் அவர் கூறினார். அதேநேரம், அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்குக் கனத்த மழை பெய்யக்கூடிய காலநிலை நிலவுவதால் நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் நிலவுவதாகவும், பிரதேசவாசிகள் விழிப்பாக இருப்பதும் அவசியம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலைய நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் கூறுகையில்,

தியனில்ல மண்சரிவில் சிக்குண்டு ஏழு மாடுகள் உயிரிழந்துள்ளன. இப்பகுதி யில் வசிக்கின்ற மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதேநேரம், வலப்பனை மகாவெல என்ற இடத்திலும், வெவன்தோட்டத்திலுள்ள கரண்டியெல்ல என்ற இடத்திலும், கும்பல்கமுவவிலும் மண் சரிவு ஏற்படக் கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

கும்பல்கமுவ பகுதியில் வசித்து வந்த 19 குடும்பங்களும் மகாவெல பகுதியிலிருந்து 15 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேரும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

இதேவேளை, கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மண் சரிவு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்டி மாவட்ட அலுவலகப் பூகற்பவியலாளர் விஜேவிக்கிரம கூறினார்.

இதன் காரணத்தினால் மண் சரிவு தொடர்பான தகவல்களை 081-2575063 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறியத் தருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டு., அம்பாறை, திருமலை, பொலன்னறுவை, அ’புரம் வெள்ளத்தில் ஆறரை இலட்சம் பேர் பாதிப்பு 430 முகாம்களில் மக்கள் தஞ்சம்






அடைமழை தொடர்ச்சியாகப் பெய்து வருவதால் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் நீரில் மூழ்கி வெள்ளக் காடாகக் காட்சியளிப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட மட்ட இணைப்பாளர்கள் நேற்று தெரிவித்தனர்.

இதேநேரம் மலையகத்தின் பல பிரதேசங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட மட்ட பூகற்பவியலாளர்கள் குறிப்பிட்டனர்.

தற்போதைய மப்பும், மந்தாரத்து டன் கூடிய மழைக் காலநிலை இன்று (5ம் திகதி) நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் கடமை நேர வானிலையாளர்களுக்கான பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி கூறினார். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி ஆகக்கூடிய மழை பொலன்னறுவையில் 232.4 மில்லி மீற்றர்கள் பெய்துள்ளது. அத்தோடு திருகோணமலை, அரலகங்வில, கெளடுல்ல, வவுனியா, அநுராதபுரம், போவத்தென்ன, மட்டக்களப்பு, கட்டுகஸ் தோட்டை ஆகிய பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டைச் சூழவுள்ள கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும், கிழக்கு, தென் கிழக்கு மற்றும் மன்னார் கடற்பரப்புக்களில் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு கடற்றொழிலில் ஈடுபடுவது அவசியம் எனவும் அவர் கூறினார்.

கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கனத்த மழை காரணமாக நாட்டிலுள்ள 59 பிரதான குளங்களும் நிரம்பி வழிவதுடன், இவற்றில் 40 குளங்களின் வான்கதவுகளும் திறந்து மேலதிக நீர் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன கூறினார். இம்மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் கிழக்கு, வட மத்திய மாகாணங்கள் அடங்களாக நாட்டிலுள்ள 13 மாவட்டங்களில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 553 குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 42 ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி தெரிவித்தார்.

வெள்ளம், மண்சரிவு காரணமாக மூன்று தினங்களில் அறுவர் உயிரிழந்திருப்பதுடன் ஏழுபேர் காணாமல் போயுள்ளனர்.

அதேநேரம் வெள்ளம், மண்சரிவு காரணமாக 37 ஆயிரத்து 675 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 39ஆயிரத்து 391 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறி 430 முகாம்களில் தங்கியுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

திருமலை மாவட்டம்

வெள்ளம் காரணமாக திருமலை மாவட்டத்தில் 24 ஆயிரத்து 405 குடும்பங்களைச் சேர்ந்த 94 ஆயிரத்து 825 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து 714 குடும்பங்களைச் சேர்ந்த 42 ஆயிரத்து 175 பேர் 123 முகாம்களில் தங்கியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 ஆயிரத்து 151 குடும்பங்களைச் சேர்ந்த 47 ஆயிரத்து 725 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5074 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 503 பேர் 56 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 347 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 741 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2107 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 940 பேர் 32 முகாம்களில் தங்கியுள்ளனர்.

பொலன்னறுவை மாவட்டத்தில் 4113 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 405 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4042 குடும்பங்கள் 83 முகாம்களில் தங்கியுள்ளனர். அனுராதபுரம் மாவட்டத்தில் 85 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு ள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை வெள்ளம் காரணமாக வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மாத்தளை, கேகாலை, மொனறாகலை ஆகிய மாவட்டங்களும், மண்சரிவினால் நுவரெலியா, பதுளை, கண்டி ஆகிய மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வெள்ள நிலை காரணமாக கிழக்கு, வட மத்திய மாகாணங்களில் பெரும்பாலான வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் தரைவழி போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இவ்விரு மாகாணங்களிலும் பல கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. இவ்வாறான இடங்களில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணியிலும் அவர்களுக்கு நிவாரணமளிக்கும் நடவடிக்கைகளிலும் கடற்படையினரும், விமானப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். வெள்ள நீரால் சூழப்பட்டிருக்கும் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள கர்ப்பிணிகளையும், நோயாளர்களையும் விமானப் படையினர் ஹெலிகொப்டர்களி னதும், கடற் படையினர் படகுகளினதும் உதவியோடு மீட்டுள்ளனர். பாதிக்கப்பட்டு ள்ள மக்களுக்கான நிவாரணப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் மாவட்ட மட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர்கள் கூறினர்.

(திறப்பனை தினகரன், ஹாலிஎல தினகரன், இறக்காமம் தினகரன், களுவாஞ்சிகுடி குறூப், அம்பாறை மத்திய குறூப், அம்பாறை சுழற்சி, ஒலுவில் விசேட, காரைதீவு குறூப், சாய்ந்தமருது குறூப், குச்சவெளி தினகரன், திருமலை மாவட்ட விசேட நிருபர்கள்)
மேலும் இங்கே தொடர்க...

சவால்களுக்கு முகம் கொடுத்து நாட்டை முன்னேற்றுவேன் தேசிய சுதந்திரதின விழாவில் ஜனாதிபதி







முப்பது வருடகாலம் யுத்தத்தினால் இழக்கப்பட்ட மனித உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் நாட்டு மக்களுக் குப் பெற்றுக்கொடுக்கும் சவாலை பொறுப்பேற்றுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இயற்கை அழிவுகளைத் தடுக்க முடியாத போதும், அதனால் பாதிக்கப்பட் டோருக்கு உடனடி நிவாரணங்களை வழங்கி அவர்களது இயல்பு வாழ்க்கையைக் கட்டியெழுப்ப சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

எத்தகைய சவால்களுக்குள்ளும் நாட்டைப் பாதுகாத்து, பொருளாதார அபிவிருத்தியில் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தைக் காலந்தாழ்த்தப் போவதில்லை என தெரிவித்த ஜனாதிபதி, ஜனரஞ்சகமான தீர்மானங்களை எடுப்பதைவிட கஷ்டமான தீர்மானங்களை நிறைவேற்றி சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்புவதே சகலரதும் தேசிய பொறுப்பாகுமெனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் 63வது சுதந்திர தின விழா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கதிர்காமம் ராஜ வீதியில் நடைபெற்றது. பிரதமர் டி.எம். ஜயரட்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, சிரேஷ்ட அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், ராஜதந்திரிகள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

யுத்தத்தினால் அழிவுற்ற பிரதேசங்கள் குறுகிய காலத்தில் மீளக்கட்டியெழுப்பப்பட்டு பசுமையான பிரதேசங்களாகப் பரிணமிப்பதற்கான செயற்பாடுகளை எம்மால் மேற்கொள்ள முடிந்துள்ளது.

சுதந்திரமடைந்த மக்கள் என்ற வகையில் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும். சுதந்திரத்தை வெற்றி கொள்ள நாம் உழைத்தது போல அதனைப் பாதுகாப்பதிலும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். பயங்கரவாதத்தினால் இழக்கப்பட்ட உயிர்களைவிட ஏனைய அனைத்தையும் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் சவாலை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். அச்சவாலை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவோம்.

நாடு பாரிய அழிவைச் சந்தித்த போதும் அதனை மீளக்கட்டியெழுப்புவதில் நாம் மேற்கொண்ட செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கவை.

அழிவுகளில் பாதிக்கப்பட்ட சகல மக்களினதும் வாழ்க்கைத் தரத்தை நாம் மேம்படுத்தி வருகிறோம். அதற்காக பெருமளவு நிதியினை ஒதுக்கி செயற்பட்டு வருகிறோம்.

எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேரிடினும் நாட்டிற்கான அபிவிருத்தியை நாம் காலந்தாழ்த்தப் போவதில்லை. வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கண்ணிவெடிகளை அகற்றி அப்பகுதிகளை நாம் அபிவிருத்தி செய்து வருகிறோம்.

1030 டொலராக இருந்த தனி மனித வருமானத்தை கடந்த ஐந்து வருட காலத்திற்குள் 2,400 டொலராக அதிகரிப்பதற்கு எம்மால் முடிந்துள்ளது. மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடிந்துள்ளதோடு மின்சாரத் திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் வீதி அபிவிருத்திகள், கல்வி, சுகாதாரத்துறைகளில் வசதிகளையும் முன்னெடுத்து வருகிறோம்.

அரச துறை மட்டுமன்றி தனியார் துறையும் முன்னேற்றப்பட்டு பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களை இரண்டு வருட காலங்களில் மீளக்குடியமர்த்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான சகல திட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம்.

கிண்ணியா, மன்னம்பிட்டி, சங்குப்பிட்டி போன்ற பாலங்களையும் நாட்டின் சகல பகுதிகளிலும் மேம்பாலங்களையும் அமைந்துள்ளோம். சுதந்திரத்தின் மூலம் பெற்ற அமைதியை அபிவிருத்தியின் மூலம் அர்த்தமுள்ளதாக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உலக நாடுகள் பெற்று அனுபவிக்கும் வெற்றிகளை எமது மக்களும் அனுபவிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம். அந்த வகையில் வறுமையை ஒழித்து சகல மக்களினதும் வாழ்க்கையை உயர்த்தும் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனநாயகம் போன்றே தாய் நாட்டின் இறைமையும் ஒருமைப்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும். நாம் சிறந்த வெளிநாட்டுக் கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறோம். அதனால் சகல நாடுகளுடனான தொடர்புகளும் மேம்படுத்தப்பட்டு சிறந்த நல்லுறவுகள் கட்டியெழுப்பப்பட்டு ள்ளன.

2500 வருட வரலாற்றுப் பெருமையைக் கொண்டவர்கள் நாம் என்ற ரீதியில் இயற்கையைப் பாதுகாப்பது போலவே மனித உரிமை, மனித கெளரவம் ஆகியவற்றையும் பாதுகாத்து வருகிறோம். தனி மனித உரிமையைப் பாதுகாப்பது மட்டுமன்றி தாய் நாட்டின் உரிமை மற்றும் கெளரவத்தைப் பாதுகாப்பது கட்சிகள் அமைப்புகள் உட்பட சகலரதும் உரிமையும் பொறுப்புமாகும்.

நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரத்துக்கு ஆசீர்வாதம் வழங்கிய புனித பூமி கதிர்காமமாகும். இன்று ஒரு தீர்க்கமான யுகத்தில் பிரவேசித்துள்ள நாம் எச்சமயத்திலும் தாய் நாட்டை நேசிப்பதிலும் அதன் பெருமையைக் கட்டிக்காப்பதிலும் ஷிட்னிற்க வேண்டும்.

சுதந்திரப் போராட்டங்கள் ஒரு காலத்தின் பதிலாக முடியாது. பெற்றுக் கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் பெற்றுக் கொண்ட வெற்றிகளை எமது மக்களும் அனுபவிப்பதற்கு நாம் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்போம்.

ண்ட்டின் தலைவர் என்றவகையில் முக்கியமானதும் தீர்க்கமானதுமான இந்த யுகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நீங்கள் எம்முடன் இணைந்திருப்பது போல் நாட்டை நேசிப்பவர்களாகவும் நீங்கள் திகழ வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மத்திய வங்கி இன்று புதிய நாணயத்தாள்களை வெளியிட்டுள்ளது



இலங்கை மத்திய வங்கி இன்று இலங்கையின் 63வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய நாணயத்தாள்களை வெளியிட்டுள்ளது இந் நாணயத்தாள்கள் அபிவிருத்தி, சுபீட்சம் மட்டும் இலங்கை நடனக்காரர் என்று தொனிபொருளுடன் வெளியிடப்பட்டுள்ளன .

புதிய தொடர்கள் ரூ.20 , ரூ.50, ரூ.100 , ரூ.500, ரூ.1,000 மற்றும் ரூ.5000 பெறுமதி கொண்ட நாணயத்தாள்களாக உள்ளடக்கின்றன . ஒவ்வொரு தாளும் முன்பக்கம் நாட்டின் சுபீட்சத்திற்கு பொருளாதார முன்னேற்றத்தின் அடையாளத்தைச் சித்தரிக்கிறது .



மேலும் இங்கே தொடர்க...