2 ஏப்ரல், 2010

அமைச்சர் அதாவுல்லாவின் மேடைக்கு சாய்ந்தமருது பிரதேசத்தில் கல்வீச்சு, ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு தினமும் சிகிச்சை-



அமைச்சர் அதாவுல்லாவின் மேடைக்கு கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் கல்வீச்சுக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றநிலை தோன்றியதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக கடும் இராணுவ, பொலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மேடையில் அமைச்சர் அதாவுல்லா உரைநிகழ்த்திவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை ஜெனரல் சரத் பொன்சேகாவை தினமும் கடற்படையின் விசேட வைத்திய நிபுணர்கள் பரிசோதித்து வருவதாக இராணுவப்பேச்சாளர் மேஜர்ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல் ஆரோக்கிய நிலை நன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவின் வைத்தியப் பரிசோதனைக்கு என விசேட மருத்துவ கவனம் செலுத்துமாறு இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம், ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

புளொட் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட புளொட் வேட்பாளர்களும், சர்வதேச கிளை அமைப்பாளர்களும் செல்வம், காண்டீபன்,தயா, ராஜா செட்டிகுளம் முகாமிற்கு விஜயம்

- நங்கூரம் சின்னத்தில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரான கந்தையா சிவநேசன் (பவன்), முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், துரைசாமி சுந்தர்ராஜ் (சிவசம்பு), வரோனிகா (இந்திரா) மற்றும் புளொட் அமைப்பின் கனடா, லண்டன், நோர்வே கிளைகளின் அமைப்பாளர்களான செல்வம், காண்டீபன், தயா, ராஜா ஆகியோரும், திரு.தர்மலிங்கம் உள்ளிட்ட புளொட் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும் இன்று வவுனியா செட்டிகுளம் சோன் 04 நிவாரணக் கிராமத்திற்கு விஜயம் செய்தனர். இதன்போது அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டனர். தாம் குடிநீர், வீட்டு வசதி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் துன்பப்படுவதாகவும், தாம் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டால் இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து விடுபடலாமென நம்புவதாகவும் அம்மக்கள் தெரிவித்தனர். இதன்போது கருத்துரைத்த புளொட் தலைவர் .சித்தார்த்தன் உள்ளிட்ட புளொட் வேட்பாளர்களும், புளொட் அமைப்பின் வெளிநாட்டு கிளைகளின் அமைப்பாளர்களும், இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அடிப்படைத் தேவைகள் யாவும் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென்பதில் மிகவும் அக்கறையாகவே இருக்கிறோம். முகாம்களில் உள்ளோரின் மீள்குடியேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். மீள்குடியமர்ந்துள்ள மக்கள் தமது விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அத்தியாவசிய உதவிகள் தேவைப்படுகின்றது. எனவே அதற்குத் தேவையான உதவிகளை வழங்கவும், திறக்காமலிக்கும் பல பாடசாலைகளையும் திறந்து கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கச் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. அத்துடன் தடுப்பு முகாம்களில் உள்ள சிறுவர் போராளிகளை விடுவிப்பது தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தி அவர்களை விடுவிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தோம். கணிசமானளவு சிறுவர் போராளிகள் தற்போது பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். எனினும் இன்னும் பல சிறுவர் போராளிகள் தடுத்து வைக்கபட்டுள்ளனர். அவர்களையும் விடுவித்து பெற்றோரிடம் சேர்ப்பிக்க மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றோம். இப்பணிகளைத் தொடர்வதற்கு மக்களின் பூரண ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்குத் தேவைப்படுகிறது. எனவே பொதுத் தேர்தலின்போது நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களுக்கு மக்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

பிரதமரின் மகன் இலக்கத்தகடு இல்லாத வாகனத்தில் பிரசாரம்




களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் மகன் விதுர விக்ரமநாயக்க இலக்கத்தகடு இல்லாத வகனத்தில் பிரசாரம் செய்துவருவதாக லங்கா ட்ரூத் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் விதுர விக்ரமநாயக்க பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிரசாரத்தின் போது இலக்கத்தகடு இல்லாத வாகனத்தைப் பயன்படுத்தியதாக அந்த இணையத்தளம் ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

மன்னார் பேசாலையில் 17 டெங்கு நோயாளர்கள்





மன்னார் பேசாலை பகுதியில் 17 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாக மன்னார் வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மேலும் நோய்த் தொற்றுவதற்கு வாய்ப்புள்ளதால் அப்பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மன்னார் மாவட்ட சுகாதார திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, மக்களை விழிப்புணர்வூட்டுவதற்காக சுகாதாரக் கல்வி தொடர்பான குறும்படக் காட்சியும் காண்பிக்கப்பட்டு வருவதாக எமது மன்னார் செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை அகதிகள் 8 பேருக்கு அவுஸ்திரேலிய விசா





8 இலங்கை அகதிகள் 8 பேருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் விசாவினை வழங்கியுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக செல்லமுற்பட்டு தடுத்து வைக்கபட்டிருந்த 41 பேருக்கு அவுஸ்திரேலியா விசாவினை வழங்கியுள்ளது.இவர்களுள் 27 ஆப்கானியர்களும், 8 இலங்கையர்களும் ஏனையோர் வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என குடிவரவு திணைக்களப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கிறிஸ்மஸ்தீவில் உள்ள 36 பேருக்கான விசாக்கள் இன்றைய தினம் முதல் அமுலுக்கு வருகின்றன. கிறிஸ்மஸ் தீவில் இருந்த அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்படி அவர்கள் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு தகுதி உடையவர்கள் என உறுதியானதன் பின்னரே அவர்களுக்கான விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று, கிறிஸ்மஸ் தீவில் இருந்து விசாரணைகளுக்காக மெல்பேர்னுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அகதிகளை கடத்தியமைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 இந்தோனேசிய படகு செலுத்துனர்களும் டார்வின் தீவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை வடக்குப் பகுதி மறுவாழ்வுப் பணிகளில் இந்தியா தீவிரம்






இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதில் இந்தியா தீவிரமாகப் பங்காற்றி வருகிறது என, இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே. கந்தா தெரிவித்தார்.

÷இரு நாடுகளுக்கு இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் வடக்குப் பகுதியில் போரால் சேதமடைந்த வீடுகளைச் சீரமைப்பதற்காக இந்தியா அனுப்பியுள்ள சிமெண்ட் மூட்டைகளை இலங்கையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கொழும்பில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியத் தூதர் அசோக் கந்தா மேலும் பேசியது:

இலங்கை அரசு முன்வைக்கும் தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் அடிப்படையில் இந்த உதவிகளை இந்தியா அளிக்கிறது.

இலங்கையின் வடக்குப் பகுதியில் மறுகட்டமைப்புப் பணிகள் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதால், இந்தியா தனது உதவிகளை விரைவுபடுத்தி வருகிறது என்றார் அவர்.

இலங்கையின் வடக்குப் பகுதியில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், வீடுகளைச் சீரமைக்கவும் இந்தியா மொத்தம் 4 லட்சம் சிமெண்ட் மூட்டைகளை வழங்கவிருக்கிறது. இதில் முதல் கட்டமாக 10,000 சிமெண்ட் மூட்டைகளை இலங்கையின் மறுகுடியமர்த்துதல் மற்றும் பேரழிவு நிவாரணப் பணிகள் அமைச்சகச் செயலர் யு.எல்.எம். ஹால்தீனிடம் இந்தியத் தூதர் அசோக் கந்தா ஒப்படைத்தார்.

எஞ்சியுள்ள சிமெண்ட் மூட்டைகளை அடுத்த 40-45 நாள்களில் இலங்கைக்கு தினமும் ஒரு தொகுப்பு என்ற அடிப்படையில் இந்தியா வழங்கும்.

இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள தங்களது வீடுகளில் மீண்டும்

குடியேறியுள்ள தமிழர்களுக்கு இந்த சிமெண்ட் மூட்டைகளை அதிகாரிகள் விநியோகிப்பர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 8 சிமெண்ட் மூட்டைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கொண்டு தங்களது வீடுகளை அவர்கள் சீரமைத்துக் கொள்ளலாம்.

இலங்கையில் போரால் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் தங்களது சொந்த வீடுகளைக் கட்டிக் கொள்வதற்காக, இந்தியா ஏற்கெனவே 5.30 லட்சம் தகர ஷீட்டுகளை வழங்கியுள்ளது. இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வுக்காக ரூ. 1,250 கோடி வழங்கப்படும் என இந்தியா கடந்த ஆண்டு, மே மாதம் அறிவித்தது. இந்த நிதியுதவியின் கீழ், இலங்கைக்கு மொத்தம் 4 லட்சம் சிமெண்ட் மூட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்தியா அளிக்கும் நிதியுதவியிலிருந்து இலங்கையின் வடக்குப் பகுதியில் பள்ளிகள், மருத்துவமனைகள் சீரமைக்கப்படும்.

இதுதவிர, இலங்கையின் வடக்குப் பகுதிகளை இணைக்கும் ரயில் பாதைகளைச் சீரமைக்க இந்தியா சுமார் ரூ. 1,912 கோடியை கடனுதவியாக அளிக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

நித்யானந்தா வழக்கு விசாரணை: ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக திடீர் பரபரப்பு;



திரைப்படம் திரைப்படம்
நித்யானந்தா சாமியார், நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் ஒன்றாக இருந்தது தொடர்பாக தமிழக, கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கை சி.பி.ஐ. ஏற்று நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் கார்த்திகேயன் மனு செய்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக நடிகை ரஞ்சிதா நேரில் இன்று சென்னை ஐகோர்ட்டுக்கு வந்து ஆஜராகி சில விளக்கங்களை அளிக்கப் போவதாக திடீரென ஒரு தகவல் பரவியது. இதனால் வக்கீல்களும், நிருபர்களும் பரபரப்பு அடைந்தனர்.

ரஞ்சிதா வரப்போகிறார் என்ற தகவல் சிறிது நேரத்தில் ஐகோர்ட்டு முழுவதும் பரவி விட்டது. எல்லாரும் ரஞ்சிதா வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆங்கில தொலைக்காட்சி நிருபர்கள் காமிரா மேன்களுடன் அவசரம், அவசரமாக வந்து சேர்ந்தனர். ஒரு ஆங்கில சானல் ரஞ்சிதாவின் ஐகோர்ட்டு வருகையை நேரடி ஒளிபரப்பு செய்யவும் தயாராகி விட்டது. பிறகு தான் தெரிந்தது, அது ஏப்ரல்-1 முட்டாள்கள் தின தகவல் என்று. ச்சே... யாரப்பா... இப்படி வதந்தியை கிளப்பி விட்டது என்றபடியே ரஞ்சிதாவை எதிர்பார்த்தவர்கள் கலைந்து சென்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

வாக்குப் பெட்டிகளின் உட்புரத்திலும் ஸ்டிக்கர் ஒட்ட நடவடிக்கை




எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது வாக்குப் பெட்டிகளின் உட்புரத்திலும் ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டுவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க அனுமதிவழங்கியுள்ளார்.

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் விடுத்த வேண்டுகோளை செவிமடுத்தே அவர் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி தேர்தல் தினம் வாக்கெடுப்பு ஆரம்பமாவதற்கு முன்னர் வாக்குப் பெட்டியை சீல் வைப்பதற்கு முன்னர் பெட்டியை பரிசோதித்து கட்சிப் பிரதிநிதிகள் பொட்டியின் உட்பகுதியில் கட்சி ஸ்டிக்கரை ஒட்டவேண்டும்.

அதேபோன்று வாக்கெடுப்பு முடிந்த பின்னரும் வாக்குகள் எண்ணும் நிலையத்தக்கு கொண்டுசெல்வதற்கு முன்னரும் ஸ்டிக்கர் ஒன்றை ஒட்ட வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மஹியங்கனையில் உணவு விஷமானது குறித்து விசாரணைகள் ஆரம்பம்





மாலை உணவு விஷமானதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 380 பெண்களில் தற்போது 33 பேர் மாத்திரம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் ஏனையோர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் மஹியங்கனை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் 33 பேரும் தொடர்ச்சியான வாந்தி காரணமாக உடல்பலவீனமடைந்து காணப்படுவதால் சிகிச்சைபெறுவதாகத் தெரிவித்த அவர்,இன்று நண்பகலிற்குபின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கவுள்ளாதாகவும் தெரிவித்தார்.

மஹியங்கனை ஆடைத்தொழிற்சாலையில் உணவு விஷமானது தொடர்பில் புலன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் , கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உஉணவு மாதிரிகள்தொடர்பான அறிக்கைகள் இன்னமும் 2 நாட்களில் கிடைக்கும் எனவும் மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 380 பெண் தொழிலாளர்கள் வாந்தி,தலைவலி போன்ற உபாதைக்களுக்கு ஆளாகியிருப்பதுடன் இரவு உணவு மீன் கறியில் காணப்பட்ட நச்சுத்தன்மை தான் விஷமானத்திற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வழங்கப்பட்ட உணவுடன் குடி நீர் போன்றவற்றின் மாதிரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இன்று இயேசு பாடுபட்டு மரித்ததை நினைவுகூரும் பெரிய வெள்ளிக்கிழமை





இன்று அனைத்துலக கிறிஸ்தவ, கத்தோலிக்கத் திருச்சபையானது இயேசு பாடுபட்டு மரித்ததை நினைவுகூரும் பெரிய வெள்ளிக்கிழமை தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.

இறை சித்தத்தை ஏற்று இயேசு தாம் பாடுபட்டு, சிலுவை சுமந்து கல்வாரியில் உயிர்விட்ட அந்தத் துயர சம்பவத்தை நாம் நினைவுகூருகின்றோம்.

இறைமகன் இயேசு மனுக்குலத்தின் மீட்க கல்வாரி மலையில் தம்மையே பலியாக்கினார்.

இயேசுவின் திருப்பாடுகளை நம் மனக்கண் முன் நிறுத்தி, நமது பாவங்களுக்காக வருந்தவும், மனந்திருந்தி வாழவும் மீட்பைப் பெறவும் அழைப்பதுதான் இன்றைய முக்கிய தேவையாக இருக்கின்றது.

கிறினதுவே இந்த உலகின் ஒளி. இதற்கு சாட்சியாகவே வாழ்ந்து தன்னையே அர்ப்பணித்தவர் இறைமகன் இயேசு.

இயேசுவின் திருப்பாடுகளித் தியானிக்கும் நாம் அவர் காட்டிய பாதையில் வாழ்கின்றோமா? இல்லையே. இன்னுமின்னும் பாவக் செய்கின்றோம். அவரது சுமையை மென்மேலும் அதிகரிக்கின்றோம்.

இன்றைய நாளிலே இயேசுவின்பாடுகளையும் மரணத்தையும் தியானிக்கும் நாம் சிலுவையின் மறை உண்மைகளாக வாழ உறுதி கொள்வோம்.

நாம் மனிதம் மிக்கப் புனிதர்களாக வாழ்ந்தால் தான் எஅம் பாவங்களுக்காக ஜீவ பலியான இயேசுவின் திட்டமும் நிறைவேறியதாக இருக்கும், இருக்க்வும் வேண்டும்.

இறைவனுக்கு உகந்த மக்களாக வாழும் வரம்வேண்டி இன்றைய வழிபாடுகளில் தூய மனதோடு இணைவோம், இறைவன் சித்தப்படி வாழ்வோம்.
மேலும் இங்கே தொடர்க...

புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன் உள்ளிட்ட பிரதிநிதிகள் செட்டிகுளம்,






நிவாரணக் கிராம மக்கள் மற்றும், வவுனியா மக்களுடன் சந்திப்பு- வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்) மற்றும் புளொட் முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் நேற்றுமுற்பகல் செட்டிகுளம், கதிர்காமர் நிவாரணக் கிராம மக்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது முகாம் மக்கள் தமது நிலைமைகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் என்பன தொடர்பில் எடுத்துக் கூறினர். இந்நிலையில் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்ட புளொட் தலைவரும் புளொட் அமைப்பாளரும், முகாம்களில் உள்ளோரின் மீள்குடியேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்றும், இதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் கட்சியின் கடந்தகால வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன், இப்பணிகளைத் தொடர்வதற்கு மக்களின் பூரண ஒத்துழைப்பும் ஆதரவும் வேண்டுமென்றும் எனவே பொதுத் தேர்தலின்போது நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களுக்கு மக்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆச்சிபுரம், எல்லப்பர் மருதங்குளம், கல்வீரன்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்த புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் ஆதரவாளர்கள் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். இக்கிராமங்களைச் சேர்ந்த மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மூன்று கூட்டங்களிலும் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் உரையாற்றினர். இதன்போது தமது கட்சியின் கடந்தகால வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் எடுத்துக் கூறியதுடன், தமது பணிகளை மேலும் தொடர்வதற்கு மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மிக அவசியமென்றும் குறிப்பிட்டனர். மேலும் பொதுத் தேர்தலின்போது நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களுக்கு மக்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

தி.மு.க., தலைவர் பதவிக்கு போட்டி: மத்திய அமைச்சர் அழகிரி பரபரப்பு பேட்டி






தி.மு.க., தலைமை பதவிக் கான தேர்தல் நடந்தால் அதில் நான் கண்டிப்பாக போட்டியிடுவேன்,'' என்று, மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.

'கருணாநிதிக்கு பிறகு தி.மு.க.,வில் நான் யாரையுமே தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன். கருணாநிதியின் இடத்தை நிரப்பும் தகுதியும், திறமையும் யாருக்கும் இருப்பதாக நினைக்கவில்லை,'' என்று, மத்திய அமைச்சர் அழகிரி ஒரு பேட்டியில் குறிப் பிட்டிருந்தார். கடந்த 31ம் தேதி இரவு 10.20 மணிக்கு மத்திய அமைச்சர் அழகிரி, ஆஸ்திரேலியா பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தார். நேற்று பகல் 12.30 மணிக்கு மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:

* கருணாநிதிக்கு பிறகு தி.மு.க.,வில் யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ளமாட்டேன் என கூறியுள் ளீர்களே?

ஆம். நான் தான் கூறினேன். எனக்கு தோன்றியதை கூறினேன். அப்படி கூறக் கூடாதா?

* ஜனநாயக முறையில் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது குறித்து உங்கள் கருத்து?

அவர் கூறியது சரிதான்.

* தி.மு.க., தலைமை பதவிக்கான தேர்தல் நடந்தால், நீங்கள் போட்டியிடுவீர்களா?

கண்டிப்பாக போட்டியிடுவேன்.

* ஸ்டாலினை கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வீர்களா?

இந்த கேள்விக்கு இப்போது அவசியம் இல்லை. கருணாநிதி தற்போது தலைவராக உள்ள நிலையில் ஏன் இதை பற்றி இப்போது பேச வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் அழகிரி பேட்டியளித்தார்.

மதுரை விமான நிலையத்தில் மு.க.அழகிரி கூறுகையில், ''அரசு சார்பில் துறை ரீதியான பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தேன். பயணம், பயன்தரும் வகையில் திருப்தியாக அமைந்திருந்தது,'' என்றார். கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

எதிரிகளை நாசமாக்கும் போர்க்கப்பல் 'சென்னை': கோலாகலமாக துவக்கம்






மும்பை : எதிரிகளை தாக்கி அழிக்கும் போர்க்கப்பல் 'சென்னை' துவக்க விழா, மும்பையில் நேற்று கோலாகலமாக நடந்தது.

கடந்த 2008ல் கடல் வழியாக மும்பையில் நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள், தாஜ் உட்பட முக்கிய ஓட்டல்களில் தாக்குதல் நடத்தினர். இதில், 160க்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர். இதையடுத்து, கடற்கரை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. கடல் வழியாக நாட்டுக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டியது அவசியம். அதற்கென கடற்படையில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும் என, ராணுவ அமைச்சர் அந்தோணி இவ்விழாவில் கூறினார். மேலும் அதிநவீன வசதி கொண்ட போர்க்கப்பல்களை குறுகிய காலத்தில் எல்லா திறன்களுடன் இந்தியாவே தயாரிக்கும் காலம் வந்து விட்டது; அன்னிய நாடுகளை நம்பியிருக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், மும்பை, மசகானில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் வடிவமைக்கப்படும் எதிரிகளை தாக்கி அழிக்கும் 'சென்னை' போர்க்கப்பலை, கடற்படை தலைமை தளபதி நிர்மல் வர்மா நேற்று பார்வையிட்டார். கடற்படையிடம் ஒப்படைக் கப்பட்ட 6,700 டன் எடையுடைய இந்தக் கப்பல், எதிரி முகாம்களை ரகசியமாக கண்காணித்து அழிக்கக்கூடிய அதிநவீன மூன்றாவது போர்க்கப்பலாகும். ராணுவ தளவாடங்கள் பொருத்தப்பட்டு, வரும் 2013ல் இந்திய கடற்படையில் தனது பணியை துவங்கும். இது குறித்து வர்மா கூறுகையில், 'இந்திய வரலாற்றில் இந்த நாள் மிகவும் முக்கியமான நாள். இந்த போர்க்கப்பலுடன் பிரமோஸ் ஏவுகணை பொருத்தப்படும். இதன் மூலம் எதிரிகளின் இலக்குகளை எளிதாக அழிக்க முடியும்' என்றார்
மேலும் இங்கே தொடர்க...

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்புனரமைப்பு: இலங்கைக்கு உதவி





கொழும்பு:'இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்பு பணிகளுக்கு, இந்தியா தொடர்ந்து உதவும்' என, இந்தியா தெரிவித்துள்ளது.இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் கே கந்தா கூறியதாவது:இலங்கையில் நீண்ட காலமாக நடந்து வந்த உள் நாட்டு போரால், வடக்கு பகுதி கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. அங்கு தற்போது முழு வீச்சில் புனரமைப்பு பணிகள் நடக்கின்றன.இந்த பணிகள், தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன. புனரமைப்பு பணிகளுக்காக இந்தியா ஏற்கனவே பல்வேறு உதவிகளை அளித்துள்ளது. இந்த விஷயத்தில், இலங்கைக்கு தேவைப்படும் உதவிகளை தொடர்ந்து வழங்க, இந்தியா தயாராக உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நெருங்கிய நட்பு உள்ளது.இவ்வாறு அசோக் கே கந்தா கூறினார்.

போரால் சேதமடைந்த வீடுகளை சீரமைப்பதற்காக, இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட சிமென்ட் மூட்டைகளையும், இலங்கை அதிகாரிகளிடம், இந்திய தூதர் ஒப்படைத்தார். இந்தியா சார்பில் நான்கு லட்சம் சிமென்ட் மூட்டைகள் வழங்கப்படவுள்ளன.இலங்கையின் வடக்கு பகுதிகளுக்கு இந்த சிமென்ட் மூட்டைகள் விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளன. இதன்பின்னர், அங்குள்ள மக்களுக்கு இது வழங்கப்படும் என, இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்தன
மேலும் இங்கே தொடர்க...

பெனசிர் படுகொலை குறித்து ஆப்கன் அதிபரிடம் விசாரிக்க பாகிஸ்தான் அதிபர் சர்தாரி கோரிக்கை




இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டது குறித்து ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் கண்டலீசா ரைஸ் உள்ளிட்ட நான்கு சர்வதேச தலைவர்களிடம் ஐ.நா., குழு விசாரணை நடத்த வேண்டும் என, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கோரியுள்ளார்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ, ஊழல் புகார் தொடர்பான கைது நடவடிக்கைக்கு பயந்து லண்டன் மற்றும் சவுதியில் தங்கியிருந்தார்.

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 2007ம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்த போது ராவல்பிண்டியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.இஸ்லாமாபாத்திலிருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் அதிபர் சர்தாரி குறிப்பிடுகையில், 'எனது மனைவி பெனசிர் புட்டோ படுகொலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே, ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய், அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் கண்டலீசா ரைஸ், ஐக்கிய அரபு எமிரேட்டின் புலனாய்வுத் தலைவர், சவுதி அரேபிய புலனாய்வுத் தலைவர் ஆகியோர் பெனசிரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த விஷயம் அவர்களுக்கு எப்படி தெரிந்தது என்பதை, பெனசிர் படுகொலை குறித்து விசாரிக்கும் ஐ.நா., குழு அவர்களிடம் விசாரிக்க வேண்டும்' என்றார்.சிலி நாட்டுக்கான ஐ.நா., தூதர் ஹெரால்டோ முனோஸ் தலைமையிலான மூவர் குழு பெனசிர் கொலையை விசாரித்தது. தற்போது விசாரணை முடிந்த நிலையில் அறிக்கையை ஐ.நா., பொதுச் செயலர் பான்-கி-மூனிடம் இந்த குழு ஒப்படைக்க உள்ளது.இந்த சமயத்தில் சர்தாரி, மேற்கண்ட நான்கு தலைவர்களிடம் விசாரிக்க கோரியுள்ளார். விசாரணைகள் அனைத்தும் முடிந்து விட்டதாக இந்த மூவர் குழு தெரிவித்துள்ளது.இந்த குழுவினர் நினைத்தால் கர்சாய் உள்ளிட்ட நான்கு தலைவர்களிடம் விசாரிக்கலாம். இதன் மூலம் இந்த கமிஷன் பெனசிர் கொலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்வது தாமதமாகலாம்.
மேலும் இங்கே தொடர்க...

பிரிட்டன் மேலும் ஒரு மில்லியன் பவுண் மனிதாபிமான உதவி




மனிதாபிமான உதவியாக மேலும் ஒரு மில்லியன் பவுண் நிதியை இலங் கைக்கு வழங்குவதாக பிரிட்டன் நேற்று அறிவித்தது. ஏற்கனவே கடந்த 18 மாத காலத்தில் பிரிட்டன் மொத்தம் 12.5 மில்லியன் பவுண் நிதியை மோதலினால் இடம்பெயர்ந்த மக்களின் ஆதரவுக்காக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வன்னியில் நிலக்கண்ணி அகழ்வு நடவடிக்கைகளுக்கும் பிரிட்டன் உதவியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட மேலதிக ஒரு மில்லியன் பவுண் நிதி நலிவடைந்த குடும்பங்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் மீளப் பெறுவதற்கான தொழில் நுட்ப நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் பீட்டர் ஹெய்ன்ஸ் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

புனர்வாழ்வளிக்கப்பட்ட 1365 பேர் நேற்று ஜனாதிபதியினால் பெற்றோரிடம் ஒப்படைப்பு





புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள 1365 பேர் நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்ட னர். இது தொடர்பான நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்றதாக அதற்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தினகரனுக்குத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 1365 பேரை நேற்று உத்தியோகபூர்வமாக அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்தார். குறிப்பிட்ட தொகையினர் நேற்று நேரடியாகவே ஜனாதிபதியினால் அவர்களது குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டனர். ஏனையோர் இரண்டொரு தினங்களில் உரிய முறையில் அவர்களது குடும்பத்தாரிடம் சேர்க்கப்படுவரெனவும் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க கூறினார்.

நாட்டின் 18 புனர்வாழ்வு முகாம்களிலுமிருந்து 1365 பேரே குடும்பத்தாரிடம் ஒப்படைக்க தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுள் 1170 பேர் அங்கவீனர்களாவர். அங்கவீனர்களுள் 12 பேர் பல்கலைக்கழக மாணவர்களாவர். மொத்தமாக 31 பல்கலைக்கழக மாணவர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட 164 சிறுவர் போராளிகள் இவ்வாறு ஒப்படைக்கப்பட விருப்பதாகவும் இவர்களை பொறுப்பேற்பதற்காக பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கே வருகை தந்திருப்பதாகவும் ஆணையாளர் மேலும் கூறினார்.

குடும்பத்தாரிடம் இவர்கள் அனைவரும் உரிய முறையில் ஒப்படைக்கப்படும் வரை தொடர்ந்தும் இவர்களுக்குத் தேவையான சமூக மற்றும் மருத்துவ ரீதியானபுனர்வாழ்வளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். புலிகள் இயக்கத்தினால் பலவந்தமாக படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு பின்னர் மோதல் இடம் பெற்ற வேளை கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களே நேற்று உத்தியோகபூர்வமாக குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு உயர் கல்வியை தொடரு வதற்கும் சுயவேலை வாய்ப்பில் ஈடுபடு வதற்கும் தேவையான உதவிகளும் பயி ற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தொழில்நுட்பம் பற்றிய அறிவும் பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் எதிர்காலத்தில் புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள ஏனையோருக்கு விசேட தொழில்நுட்பப் பயிற்சி வழங்க தீர்மானித்திருப்பதாகவும் ஆணையாளர் பிரிகேடியர் தெரிவித்தார்.

இதுவரையில் புனர்வாழ்வு நிலையங்களிலிருந்த சுமார் 2365 இற்கும் மேற்பட்டோர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் எண்ணாயிரம் வரையிலானோர் புனர்வாழ்வு நிலையங்களில் பயிற்சி பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

வவுனியாவில் 14 புனர்வாழ்வு நிலையங்களும் யாழ்ப்பாணத்தில் 02 புனர்வாழ்வு நிலையங்களும் மட்டக்களப்பிலும் கொழும்பிலும் முறையே ஒவ்வொரு புனர்வாழ்வு நிலையங்களுமாக 18 நிலையங்கள் இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

யோகேஸ்வரன் அரவிந்தன், ஹிந்துராஜா, இந்திரர் ஆகியோர் ஜனாதிபதியினால் நேரடியாக அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
மேலும் இங்கே தொடர்க...

மக்களுடன் வாழ்வதே எனது அரசியல்




மாகாண சபை உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா

தேர்தல் ஒன்று இருக்கும் போது மாத்திரம் அன்றி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களுடன் வாழ்வதே தமது அரசியல் செயற்பாடு என மாகாண சபை உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.

தாம் எப்பொழுதும் மக்களுடன் வாழுகின்ற ஒரு நபர் என்ற காரணத்தினாலேயே கொழும்பு மாவட்ட மக்கள் தம்மை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொலன்னாவை பிரதேசத்தில் அண்மையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

“நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவது தான் எனது அரசியல், ஜனாதிபதியின் இரு கரங்களையும் பலப்படுத்த அவருடன் இணைந்தமையானது, அவர் சிறந்த தலைமைத்துவத்தை வழங்குகிறார் என்பதனால் தான்.

ஐக்கிய தேசிய கட்சிக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இன்று நாடு தொடர்பாக எதிர்கால நோக்கு ஒன்று இல்லை. ஒருநாளுக்கான தேவையை பூர்த்தி செய்து கொண்டு வாழும் அரசியலைத் தான் அவர்கள் மேற்கொள்கிறார்கள்.

அதன் மூலம் இந்த நாட்டிற்கும், எதிர்கால சந்ததியினருக்கும் ஒரு பயனும் வரப்போவதில்லை. நாட்டை தெடர்ந்து படுகுழிக்குள் இழுத்துச் செல்வதையே இந்த பாரம்பரிய எதிர்க்கட்சி செய்கிறது.

இப்போது பாருங்கள்!! யுத்தம் காரணமாக அபிவிருத்தி நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டதா? நாட்டிற்காக இந்த அரசாங்கம் நாளாந்தம் ஏதேனும் ஒரு அபிவிருத்தி செயற்றிட்டத்தை செயற்படுத்துகிறது.

ரன்மிஹிதென்ன மஹிந்த ராஜபக்ஷ டெலி சினிமா திரைப்பட கிராமம் போன்ற ஒன்றை யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா? மேம்படுத்தப்படாத பாதையொன்று உள்ள கிராமம் ஒன்றை காண முடியுமா? ஜனாதிபதியின் முறையான தலைமைத்துவம் காரணமாகவே இவை அனைத்தும் உரிய வகையில் இடம் பெறுகின்றன.

பொது மக்களின் இதயத்துடிப்பை அறிந்த மக்களுடன் வாழ்கின்ற எங்களுக்கும் ஜனாதிபதி மேன்மையான ஆசீர்வாதத்தை வழங்குகிறார். குறுகிய இலாபம் தேடும் அரசியல் எமது குறிக்கோள் அல்ல. நாம் பிரதிநிதித்துவப்படும் மாவட்டத்திற்கு சேவையாற்றுவதே எமது குறிகோளாக இருக்கின்றது.

கொழும்பு மாவட்டத்தில் அனைத்து மக்களும் பேதங்களை மறந்து எங்களுடன் இணைந்திருப்பது அதனால் தான் என மாகாண சபை உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். ஐ.ம.சு.மு பிரசார கூட்டத்தில் மக்கள் திரள்:

நல்லூர் கந்தசுவாமி கோயிலில் ஜனாதிபதி வழிபாடு; நூலகத்தையும் பார்வையிட்டார்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கு நேற்று மக்கள் வெள்ளத்தில் நிறைந்திருந்ததுடன் இரண்டு பாரிய மேடைகள் அமைக்கப்பட்டு அப்பிரதேசமெங்கும் தேசிய மற்றும் கட்சிகளின் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஏற்பாடு செய்திருந்த இம் மாபெரும் பிரசாரக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலய முன்றலில் ஈ. பி. டி. பியின் செயலாளர் நாயமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மலர் மாலை சூடி வரவேற்றார்.

அதனையடுத்து நல்லூர்க் கந்தனைத் தரிசித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ். பொது நூலகத்திற்குச் சென்று அதன் செயற்பாடுகளை நேரில் பார்வையிட்டபின் தேர்தல் பிரசார மேடைக்கு வருகை தந்தார்.

‘இலங்கையை ஆசியாவின் அதிசயமாக்குவோம்’ என்ற தொனியில் நடைபெற்ற இப்பிரசாரக் கூட்டத்தில் யாழ். மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதுடன் மும்மதங்களையும் சார்ந்த மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், வேட்பாளர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

‘யாழ்ப்பாணத்தை வளமாக்குவோம்’, ‘முப்பது ஆண்டுகளுக்குப் பின் மலர்ந்த மகிழ்ச்சியை முழுமையாக்குவோம்’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளும் சுவரொட்டிகளும் பிரசார மேடையை அண்டிய பிரதேசத்தில் தொங்கவிடப்பட்டிருந்தன.

யாழ். மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் இம்முறை 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஈ. பி. டி. பி கட்சி வேட்பாளர்கள் ஏழு பேரும் முஸ்லிம் வேட்பாளர்களும் அடங்குகின்றனர்.

நேற்றைய இப்பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய வேட்பாளர்கள், 30 வருட காலத்திற்குப் பின் யாழ். மாவட்ட மக்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை வியந்து பேசினர். இன்றைய இந்த சுதந்திர சூழலுக்கு வழிவகுத்த ஜனாதிபதியை அவர்கள் மனமார வாழ்த்தினர். எதிர்ப்பு அரசியலை விட்டு இணைந்த அரசியலில் கலந்து மக்களுக்குச் சேவை செய்வோம் என்ற தொனியில் அவர்களின் உரைகள் அமைந்திருந்தன.

அத்துடன் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது, இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தல், தமிழ் – முஸ்லிம் உறவுகளை வலுப்படச் செய்தல் போன்றவற்றில் தமது முழுக் கவனத்தையும் செலுத்தவுள்ளதாகத் தெரிவித்தனர்.

யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்க வேண்டுமென மக்களைக் கேட்டுக் கொண்ட வாக்காளர்கள், வாக்கு எனும் தீக்குச்சியை வசந்த ஒளியேற்றுவதற்காக உபயோகிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டனர்.

இப்பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழில் உரையாற்றியதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற இத் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலரும் விமான மூலம் அழைத்துவரப்பட்டிருந்தனர்.

யாழ். மாவட்டத்தில் சேவையிலுள்ள அரச உத்தியோகத்தர்கள் பெருமளவில் கலந்துகொண்ட இக் கூட்டத்தில் யாழ். மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா வட மாகாண ஆளுனர் ஜீ. ஏ. சந்திரசிறி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் மக்கள் இழந்த அனைத்தையும் விரைவில் மீளப் பெற்றுக் கொடுப்போம்




யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

வடக்கை வளமாக்கும் திட்டம்

மகாவலி கங்கை வடக்கிற்கு திரும்பும்

ஆசியாவில் உன்னத நாடாக இலங்கையை கட்டியெழுப்ப பங்காளராகுங்கள்


தமிழ் மக்கள் கடந்த 30 வருடகாலங்களில் இழந்த அனைத்தையும் நாம் விரைவாக மீளப்பெற்றுக்கொடுப்போமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டர ங்கில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற் றிய ஜனாதிபதி;

வடக்கை வளமாக்கும் திட்டம் எம்மிடமுண்டு. பயம், சந்தேகம், அடக்குமுறையற்ற நாட்டைக் கட்டியெழுப்ப நாம் இன, மத, குல, பிரதேச பேதமின்றி இணைந்து செயற்படுவோ மெனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்து எனது வெற்றிக்குப் பங்களிப்புச் செய்தவர்களுக்கும், வேறு எந்தக் கட்சிக்கு வாக்களித்தாயினும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்று ஜனநாய கத்தை நிலை நிறுத்தியமைக் காகவும் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

விடுதலைப் புலிகளினால் வடக்கு, கிழக்கு மக்களின் வாக்களிக்கும் உரிமை தடுக்கப்பட்டிருந்தது. அந்த ஜனநாயக உரிமையை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது முக்கிய நோக்கமாக இருந்தது. அதனைச் செயற்படுத்திய மக்களுக்கு மீண்டுமொரு முறை பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 30 வருடகாலம் வடக்கு மக்களுக்குக் கிட்டாத அபிவிருத்தியினை மீளப் பெற்றுக்கொடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே எமது முக்கிய நோக்கமாகும்.

வடக்கு மக்களின் விவசாயம், ஏனைய தொழில்துறைகளை மேம்படுத்தி அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை நாம் இப்போதே ஆரம்பித்துவிட்டோம் என்பதை நான் குறிப்பிடவிரும்புகின்றேன். தெற்கிலிருந்து வாய்க்கால்கள் மூலம் யாழ்ப்பாணத்திற்கு நீரைப்பெற்றுக்கொள் வதற்கான திட்டமொன்றை நாம் விரைவில் நடைமுறைப்படுத்தத் தீர்மா னித்துள்ளோம். மக்களுக்கு குடி நீரும் விவசாயத்திற்கான நீரும் இதன் மூலம் கிட்டுவது உறுதி.

இரணை மடுக் குளத்தினூடாக இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதுடன் மகாவலி கங்கை நீரை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வருவதற்கான மற்றுமொரு திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சகல இன, மத, குல மாகாண மக்களையும் நாம் ஒன்றாகவே பார்க்கிறோம். எம்மிடம் எவ்வித வேறுபாடும் ஒருபோதுமில்லை. சகலருக்கும் ஒரே அகப்பையிலேயே அளக்கிறோம் என்பதை தமிழ் மக்கள் மறந்துவிடக்கூடாது.

இந்நாட்டினைப் பீடித்திருந்த 30 வருட பயங்கரவாதம் இன்றில்லை. சகல மக்க ளும் பயம் சந்தேகமின்றி சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ வழிவகுக்கப்பட்டுள் ளது. மக்கள் வழிபாட்டுத் தலங்களுக்கும், பாடசாலை, சந்தை என சகல இடங்க ளுக்கும் அச்சமின்றி போய்வரமுடியும். எம்மிடம் தமிழ், சிங்கள இனம் மற்றும் மாகாண பேதங்கள் இல்லை.

நாம் ஒரு தாய் மக்கள். இன ரீதியான அரசி யல் நோக்கங்கள் இனியும் இருக்கக்கூடாது. நாம் எதிர்காலத்தில் கிராம சபைகள் மற்றும் மக்கள் சபைகள் மூலம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம். இவற்றில் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் பிரதிநிதிகளே உள்ளனர். அவர்கள் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார்கள்.

வடக்கில் பல வருடகாலம் பின்னடைவு கண்டிருந்த அபிவிருத்தி இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. கல்வி, விவசாயம், சுகாதாரம், மீன்பிடி, நீர், போக்குவரத்து வசதிகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.

புலிகளும் ஐக்கிய தேசியக் கட்சியினரும் என்ன செய்தனர் என்பது மக்களுக்குத் தெரியும். ஆசியாவின் பிரபல நூலகமான யாழ் நூலகத்தை எரித்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரே. இது இந்நாட்டின் எதிர்கால சந்ததிக்குச் செய்யப்பட்ட பெருந்துரோகமாகும். இன்னும் பலர் புலிகளின் வலையில் சிக்கி செயற்படுகின்றனர்.

30 வருட துயர வாழ்க்கை இனியும் வேண்டுமா என நான் கேட்க விரும்புகிறேன். நாட்டி னதும் உங்கள் பிள்ளைகளினதும் எதிர்காலம் பற்றி சிந்தித்து புத்தியுடன் தீர்மானம் எடுப்பீர்கள் என நான் நினைக்கின்றேன். எமது முன்னணியில் தமிழ், முஸ்லிம் மக்களும் உள்ளனர். உங்கள் பிரதேசம் இன்னும் வளமாக மாறும். குறுகிய எண் ணம் வேண்டாம். ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையை மாற்றும் நோக்கில் நீங்களும் பங்காளர்களாகுங்கள். பயம், சந்தேகம், அடக்குமுறையற்ற நாட்டை நாம் இணைந்து கட்டியெழுப்புவோம்.

தவறான பொய்ப்பிரசாரங்களுக்கு துணைபோக வேண்டாம். வெற்றிலைச் சின்னம் உங்களினதும், உங்கள் பிள்ளைகளினதும் நாட்டினதும் வெற்றியாகுமெனவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...