6 ஜனவரி, 2010

தாயகக்குரல்

புதன்கிழமை (06.01.2010)

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பான தங்களது நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய கட்சிகள் தெரிவித்துவிட்டன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் தொடர்பாக ஆராயவேன பலமுறை கூடியும் எந்த முடிவும் அறிவிக்கமுடியாது குழப்பத்தில் உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷஇ எதிர்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா ஆகியோரை பலமுறை சந்தித்து பேசியுள்ளனர். ஆனாலும் இறுதி நேரத்தில் தமது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்பதை முன்கூட்டியே தீர்மானித்துவிட்டதாக தெரிகிறது. கடந்த வெள்ளியன்று இரவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தமிழ் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் சந்தித்து பேசிய பின்னர் இந்தச் சந்திபபு வெற்றியளிக்கவில்லை என இவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா விடுத்துள்ள செய்தியில் ஜனாதிபதி தேர்தலில் எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு பெற்றுக்கொள்ளும் நோக்கில் தமிழ் தேசியக் கூட்மைப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இடம் பெற்றதாகவும் அவர்கள் முடிவுகளை அறிவிப்பதற்கு சிலகாலம் எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
1982ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது தமிழர் விடுதலைக் கூட்டணியும் 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜனாதிபதி தேர்தலுக்கும் தமிழ் மக்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என கூறி இரண்டு பக்கத்திற்கும் நல்ல பிள்ளையாக ஒதுங்கியிருந்தனர். நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் போட்டியிடுவதில்லை எனவும் அதே நேரம் தேர்தலை பகிஷ்கரிப்பதில்லை எனவும் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தது. ஆனால் இப்போது இந்த முடிவுகள் கட்சிககுள் மீறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்க முன்னரே தேர்தல் அறிவிக்கப்பட்டால் யாரை ஆதரிப்பது என்பதில் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடு இருந்தது. சிலர் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதுஇ என்றும் இன்னும் சிலர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷாவை ஆதரிப்பது என்றும் மற்றும் சிலர் தேர்தலை பகிஷ்கரிப்பது என்றும் மூன்றுவிதமான கருத்து நிலவியிருந்து. எனவே தங்களது நிலைப்பாட்டை வெளியிட முடியாது தமது நிலைப்பாட்டை இறுதி நேரத்தில் அறிவிப்பதாக தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில்தான் ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தமிழ் மக்களின் பொது வேட்பாளராக தாம் களம் இறங்கப்போவதாக அறிவித்து அவரும் ஒரு வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலை பகிஸ்கரிப்பது என முடிவெடுத்தால் தான் அதை ஆதரிப்பதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவிக்கிறார்.
இன்னொரு பக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கமான தமிழ் காங்கிரஸ் தேர்தலை பகிஸ்கரிக்கப்பது என முடிவெடுத்துள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்திடம் எவ்வித அடிப்படை திட்டமும் இல்லை. கடந்த நான்கு வருடங்களாக அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முறையான பேச்சுவார்த்தை வைக்கவில்லை. எனினும் டக்ளஸ் தேவானந்தா, கருணா அம்மான், பிள்ளையான் ஆகியோரை இணைத்து வடக்கு கிழக்கில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதை நியாயப்படுத்த முடியாது என ஜனாதிபதியின் சந்திப்பின் பின்னர் மாவை, சம்பந்தன் ஆகியோர் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பாக பேசுவதற்கு பலமுறை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதியும், சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரணவும் அழைப்பு விடுத்திருந்த போதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு காரணங்களைக் கூறி அழைப்பை நிராகரிதிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்களின் நிராகரிப்பு குறித்து பலர் அப்போது விமசனம் செய்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை எதிர்க்கும் கட்சிகள் அரசாங்கத்தில் இணைந்திருப்பதாலேயே ஜனாதிபதியின் அழைப்பை ஏற்கவில்லை என்று அப்போது சம்பந்தன் கூறியிருந்தார். இப்போது ஆட்சி மாற்றத்தின்மூலம் ஜே.வி.பி.யின் வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்க தீவிரமாக உள்ளனர். இந்த சரத் பொன்சேகாதான் தனது இராணுவ உடையை கழையமுன்னர், இலங்கை சிங்களவர் நாடு. சிறுபான்மை இனம் இங்கு விருந்தினர்களாக வாழலாம் எனக் கூறியிருந்தார். அது மாத்திரமல்ல வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும்; இராணுவமுகாம்களை நிறுவி வடக்க கிழக்கின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு ஆலோசனை கூறியவர். வடமாகாண ஆளுநராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியை நியமித்த அரசாங்கத்துடன் இனப்பிரச்சினைக்கான தீர்வுபற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை என்று சம்பந்தன் தெரிவித்திருந்தார்.
நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஒரு அறிக்கையில் இலங்கையில் ஒரு அரசியல் மாற்றம் வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளது. அரசியல் மாற்றம் வரவேண்டுமானால் சரத் பொன்சேகாவுக்கே வாக்களி;க்கவேண்டும் என்பதையே மறைமுகமாக தெரிவிக்கின்றனர். ஆட்சி மாற்றம் மூலம் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்க நினைப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சந்தர்ப்பவாதமாக்கும்.
இந்த தேர்தலில் சரத் பொன்சேகாவை வெற்றிகொள்ளச் செய்வதில் மேற்குலக நாடுகள் அதிக அக்கறை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷசிய ஆசிய நாடுகளுடனும் மத்திய கிழக்கு நாடுகளுடனும் நெருக்கமான அரசியலுறவுகளை வைத்திருப்பதை ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் விரும்பவில்லை. எனவேதான் இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தி இலங்கையில் ஒரு அட்சி மாற்றத்தைக் கொண்டு வர இந்த நாடுகள் முயற்சிக்கின்றன என்பதாக அரசு தெரிவிகிறது. அதேபோல அரசியல் விமர்சகர்களும் தெரிவிக்கின்றனர்.
எதிர்கட்சிகளின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மேடைகளில் ஒலிக்கும் முக்கிய கருப்பொருள் ஆட்சி மாற்றம், ஜனாதிபதி முறையை ஒழித்தல் என்பனவே. இந்த வரிசையில் இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதித் தேர்தல் குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பேசும் மக்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக அக்கறையுடன் பரிசீலித்துள்ளது. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு பல தடவைகள் சந்தித்து பரிசீலித்தது.
தமிழ்ப் பேசும் மக்களின் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் புத்திஜீவிகள், சிரேஷ்ட பிரஜைகள், இளைஞர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரின் கருத்துக்களை அறிவது குறித்து அவர்களுடன் தீவிர கலந்துரையாடல்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடத்தியுள்ளது.
புராதன வேட்பாளர்களான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் நாம் கலந்துரையாடல்களை நடத்தி, தமிழ்ப் பேசும் மக்களின் உடனடித் தேவைகள் குறித்தும் தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதும் நிலைத்து நிற்கக் கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றைக் காணுவது குறித்தும் அவர்களின் அபிப்பிராயங்களைத் தெரிந்து கொண்டோம்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு தடவை பதவி வகிப்பதற்கான ஆணையை இத்தேர்தல் மூலம் கோரி, நாட்டு மக்களிடம் விண்ணப்பித்திருப்பதற்கு ஆதரவளிக்க முடியாது. ஆதரவளிக்க கூடாது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த அபிப்பிராயமாகும்.

இம்முடிவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது நான்கு ஆண்டு கால பதவிக்காலத்தின் செயற்பாடுகளை வைத்தும் அவருடன் நாம் நடத்திய பல கலந்துரையாடல்களின் பெறுபேறுகளை வைத்தும் எடுக்கப்பட்டதாகும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு தடவை பதவி வகிப்பது நாட்டுமக்களின் சிறந்த நலன்களை பேணுவதற்கும் குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்ப் பேசும் மக்களின் சிறந்த நலன்களைப் பாதுகாப்பதற்கும் உதவாது என்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகும்.

தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு ஒன்றைக் காண்பது குறித்து ஒரு முன்னேற்றமும் காணப்படாத அதே வேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தீர்மானங்களும் செயற்பாடுகளும் பின்னோக்கியதாகவே காணப்படுகின்றன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில், அம்மக்களின் கலாசார மற்றும் மொழி அடையாளத்தைப் பாதுகாப்பதற்குத் தீங்கு விளைவிப்பதாகவே அமைகின்றன.

இரகசியமாகவும் வெளிப்படைத் தன்மையற்றவிதமாகவும் அமையும் இந்த நடவடிக்கைகள் தமிழ்ப் பேசும் மக்களுக்குச் சமத்துவத்தையும் நீதியையும் மறுக்கும் செயலாகவே உள்ளது. அத்துடன் தமிழ்ப் பேசும் மக்களின் இன, மத, விகிதாசார நலன்களைப் பாதிக்கும் வகையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும், தேசிய பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண்பதற்குக் குந்தகத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் நாட்டில் வாழ்கின்ற மக்களிடையே இன ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதற்கும் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு ஊக்கமளிப்பதாகவும் அமையாது.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றை தேசிய பிரச்சினைக்குக் காண்பதில் ஏற்படும் தாமதம், தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்றுப் பாரம்பரிய வாழ்விடம் தொடர்பான மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மறைமுக நிகழ்ச்சி நிரலை நடைமுறைபடுத்துவதாகும்.

தமது தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை முற்றாகப் புறக்கணித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை முற்றாக ஓரங்கட்டி, தன்னிடம் அடிபணிந்து போகத் தயாராக இருக்கும் நண்பர்களைத் தமிழ் மக்களின் தலைவர்களாக வெளிகாட்டும் நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னெடுத்து வருகின்றார்.

அவ்வாறான நபர்களுடன் மாத்திரமே வேலை செய்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தயாராக இருக்கின்றனர். இதன் மூலம் தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளை மாத்திரமல்ல, தமிழ் மக்களையும் அவர் புண்படுத்தியுள்ளார். இவர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாத இந்நிலவரம் தொடரவே உதவும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம்இ என். ரவிராஜ், கே.சிவனேசன் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரின் அரசாங்கத்துடன் இணைந்திருந்த சக்திகளால் படுகொலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாதபடி அரசாங்கத்தைப் பலப்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைந்திருந்த சக்திகளால் இரு தடைவைகள் தடுக்கப்பட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக மற்றும் செயற்திறனை உள்ளடக்கிய செயற்பாடுகள் மீதான பாரதூரமான தாக்குதல்கள் குறித்து அரசாங்கத்தின் அணுகுமுறை உணர்ச்சியற்றதும் அக்கறையற்றதுமாக அமைந்திருந்தது.

மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விடயங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடு கவலை தருவதாக உள்ளது. சட்டத்திற்கு அப்பாற்பட்ட கொலைகள் மற்றும் கட்டாயப்படுத்தி காணாமற் போகச் செய்தல் ஆகியன சர்வ சாதாரணமாக இடம் பெற்றிருக்கின்றன. இவற்றால் மோசமாகத் தமிழ் மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆட்சி அதிகார அமைப்புக்கள் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சட்டம், ஒழுங்கு நடைமுறைப்படுத்தல் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளன. ஊழல் கட்டுக்கடங்காமல் போயுள்ளது. சட்டம் - ஒழுங்கு மற்றும் நல்லாட்சி ஆகியன கீழ் மட்டத்திற்குச் சென்று விட்டன.

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் இத்துக்ககரமான நிலவரத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்ப் பேசும் மக்கள் தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காரணங்களுக்காகத் தான் மேலும் ஒரு தடவை பதவி வகிப்பதற்கான ஆணையைத் தருமாறு ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கையை மறுப்பது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகோபித்த முடிவாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு அரசியல் அமைப்புக்களைக் கொண்ட ஓர் அணியாகும். தமிழ்ப் பேசும் மக்களின் கூடிய நலன் கருதி செயற்படுவது அதிமுக்கியமானது எனக் கருதப்படுகிறது.

ஜனாதிபதி மேலும் ஒரு தடவை பதவியில் இருக்க அனுமதிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எதிர்ப்பதனால் பொது எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

சிங்களவருக்கு மட்டுமே நாடு சொந்தம் என்று கூறவில்லை : சரத் பகிரங்க அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, இநாடு சிங்களவர்களுக்கு மாத்திரம் சொந்தமானது என எந்தவொரு வெளி நாட்டு ஊடகத்திற்கும் தான் தெரிவிக்கவில்லை எனப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடியில் நேற்று மாலை மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம். முபீன் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ள அவர் தான் தெரிவித்த கருத்து அந்த ஊடகத்தில் திரிபுபடுத்தப்டப்டிருந்ததாகவும் கூறினார்.
"இலங்கையில் வாழும் சகல இனங்களுக்கும் நாடு சொந்தமானது என்பதை திட்டவட்டமாக கூறுகின்றேன்" என்றும் தனது உரையில் குறிப்பிட்ட அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், "நாட்டில் வாழும் சகல இன மக்களும் சமாதானமாகவும், சமத்துவமாகவும் வாழ வேண்டும் என்பதே எனது இலட்சியமாகும் .இதனைத் தான் அரசியல் யாப்பும் உறுதிப்படுத்துகின்றது.
நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்பு, வடக்கு கிழக்கு மக்கள் ஏனைய மக்கள் போல சம அந்தஸ்துடன் வாழக் கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.
இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களுக்கு ஒரு பாரிய பொறுப்பு உண்டு. அதாவது சிறுபான்மை மக்களின் பாதுகாப்பினையும் உரிமையையும் உறுதிப்படுத்துவது" என்றும் குறிப்பிட்டார்.
1990ஆம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை, குருக்கள் மடத்தில் ஹஜ் யாத்திரிகர்கள் படுகொலை போன்ற சம்பவங்களையும் தனது உரையில் நினைவுபடுத்திய ஜெனரல் சரத் பொன்சேகா தனது கண்டனத்தையும் வெளிப்படுத்தினார்.
குறித்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட ஹஜ் யாத்திரிகர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.
இத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் பின் கல்முனை மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களிலும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா உட்பட, பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கல்முனை செல்லும் வழியில் ஆரையம்பதி கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாட்டிலும் இவர்கள் கலந்து கொண்டனர்.
ஆலய முன்றலில் கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கைகளை அசைத்து தமது ஆதரவை வெளிப்படுத்தியதைக் காணக் கூடியதாக இருந்தது.
மேலும் இங்கே தொடர்க...

உறவினருடன் தங்கியிருந்தோர் கிளிவெட்டி முகாமுக்கு அனுப்பி வைப்பு

மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது சொந்தக் கிராமங்களில் மீள் குடியேற்றமின்றி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்த குடும்பங்களில் ஒரு பகுதியினர் நேற்று கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
6 பஸ்களில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 125 பேர் வாகரை ஊடாக அங்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மாவட்ட புனர்வாழ்வு திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஏ.எல்.எம். ஷெரீப் தெரிவித்தார்.
சுய விருப்பத்தின் பேரிலேயே இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர் மேலும் 48 குடும்பங்கள் தொடர்ந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த 791 குடும்பங்களைச் சேர்ந்த 5159 பேர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அகதிகளை மீளக்குடியமர்த்த விடாது பொன்சேகாவே தடுத்து வைத்திருந்தார்-ரிஷாத் பதியுதீன்

அகதிகளை மீள்குடியமர்த்தவிடாது அவர்களை முகாம்களில் தடுத்துவைத்திருந்தவர் அப்போதைய படைத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாதான் என்று மீள் குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று நாடாளுமன்றில் கூறினார். நாடாளுமன்றில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது ஐ.தே.கட்சி யின் எம்.பி. ரவி கருணாநாயக்க கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்தபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை, நாம் இப்போது அகதிகளை மீளக்குடியமர்த்தி வருகின்றோம். இந்த அகதிகளை மீள்குடியமர்த்த விடாது அப்போதைய படைத்தளபதியாகவிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாதான் அகதிகளைத் தடுத்து வைத்திருந்தார். அம்மக்களை முகாம்களில் தடுத்து வைத்திருக்குமாறு பொன்சேகா படையினருக்கு உத்தரவிட்டார்.
அம்பாறை மாவட்ட அகதிகளை மீள்குடியமர்த்து வதற்காகத் நான் அவர்களை வீடுகளுக்கு அனுப்பியபோது அவர்களை பொன்சேகா மீண்டும் அகதிமுகாம்களுக்குத் திருப்பி அனுப்பினார்.
அவர் பதவியில் இருந்து விலகிய பிறகு இரண்டு லட்சம் அகதிகளை அரசால் மீள்குடியமர்த்த முடிந்துள்ளது. எஞ்சியுள்ள அகதிகளுள் அதிகமானவர்களை நாம் இம்மாதம் 31 ஆம் திகதிக்குள் மீள்குடியமர்த்தி முடிப்போம் என்றார். அப்படியாயின், முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்ன செய்துகொண்டிருந்தார் என்றும், ஏன் பொன்சேகாவுக்கு ஜெனரல் பதவி கொடுக்கப்பட்டது என்றும் ரவி கருணாநாயக்க அமைச்சரிடம் திருப்பிக் கேள்வி எழுப்பினார்.
மேலும் இங்கே தொடர்க...

குறுகிய அரசியல் இலாபத்துக்காக அரசு அவசரகால சட்டத்தை நீடிக்காது-பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க

குறுகிய அரசியல் இலாபத்துக்காக அரசாங்கம் ஒரு போதும் அவசர கால சட்டத்தை நீடிக்கமாட்டாது. அவ்வாறான தேவைகள் அரசுக்கு இல்லை என்று பிரதமரும், பிரதிப் பாதுகாப்பு அமைச்சருமான ரத்னசிறி விக்ரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பயங்கரவாதம் வலுப்பெற வேண்டுமென விரும்புகின்றவர்கள் மட்டுமே அவசர கால சட்டத்தை எதிர்ப்பார்கள். உள்நாட்டு வெளிநாட்டு சதிகளின் சதிவேலைக்கு பதிலளிக்க அவசர கால சட்டம் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்றுக் காலை கூடியபோது, அவசரகால சட்ட நீடிப்புக்கான பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பிரதமர் தனது உரையில் மேலும் கூறியதாவது.
2005 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதிலும் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இறுதி அமர்வின் போதும் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ஒருவர் பயணம் ஒன்றை ஆரம்பிப்பதை விட அதனை முடிப்பது தான் மிக முக்கியமானது. முடிவில் தான் பெறுபேறு தங்கியுள்ளது. எமது அரசாங்கம் அன்று அடிப்படை நோக்கம் ஒன்றை வைத்துத் தான் எமது பணிகளை ஆரம்பித்தது. அது தான் பயங்கரவாதத்திற்கு முற்றிப்புள்ளி வைத்து மக்களுக்கு மீண்டும் சமாதானத்தை பெற்றுக் கொடுப்பதாகும். இன்று அது நிறைவேற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டு மக்கள் தற்பொழுது நிம் மதியாகவும், சந்தோசமாகவும் வாழ்கின்றனர்.
வடக்கு கிழக்கில் மாத்திரம் அல்ல தென்பகுதி மக்களும் சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றனர். ஏ-9 வீதி ஊடாக தடைகள் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான மக்கள் இந்த வீதி ஊடாக தற்பொழுது சென்று வருகின்றனர். மீனவர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளன. தற்பொழுது அந்த மக்களின் வாழ்வாதாரம் சிறந்த முறையில் காணப்படுகின்றது.
பெரும் எண்ணிக்கையிலான மக் கள் தற்பொழுது மீளக் குடியமர்த்தப் பட்டுள்ளனர். புனர்வாழ்வும் புத்துணர்ச்சியும் நிறைந்த வருடமாக இந்த வருடம் உருவாகியுள்ளது. எமது நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தை நாம் இன்னும் முழுமையாக அடையவில்லை.
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு அழுத்தங்கள் காணப்படுகின்றது. அவசர கால சட்டம் நீடிப்பானது நாட்டுக்கு கிடைக்கப் பெற்ற வெற்றிக்கு காரணமாகவும் அமைந்திருந்தது. குறுகிய அரசியல் இலாபத்துக்காக அரசாங்கம் ஒரு போதும் அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தப்போவதுமில்லை. அதற்காக நீடிக்கவும் மாட்டோம். அவ்வாறான தேவைகள் எமக்கு இல்லை.
பாதுகாப்புப் படையினர் மீட்டெடுக்கப்பட்ட பிரதேசங்களில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் மீட்டெடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.
ஆயுதம் மீட்டெடுக்கப்பட்ட பிரதேசங்களில் படையினர் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றார்கள். 3 சதாப்தங்களுக்கு பின்னர் மக்களுக்கு விடிவு கிடைத்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

அதிபர் - ஆசிரியர் சம்பளம் இவ்வாண்டு உயரும் - கல்வி அமைச்சர்

2006 ஆம் ஆண்டின் அரச நிர்வாக சுற்றறிக்கைக்கு ஏற்ப அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள உயர்வு இவ்வருடம் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நீதிமன்றத் தீர்ப்பின்படி செலுத்த உள்ள தொகையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அதன்படி 1005 ரூபா முதல் 1685 ரூபா வரையிலான தொகை சம்பள அதிகரிப்பாக வழங்கப்படவுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி முதலான நிலுவைத் தொகையும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...