17 நவம்பர், 2009

ஜோன் ஹோம்ஸ் இன்று இலங்கை வருகை


அழைப்பின் பேரில் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை 8.50 மணியளவில் அமெரிக்காவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் இலங்கை வந்துள்ளார்.

நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர் இன்று யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்குச் செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள மக்களின் நலன் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கை குறித்தும் இவர் ஆராய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...
சரத் பொன்சேகா அரசுக்கு சவாலாக விளங்குவார் : ஏஎப்பி கருத்து


சரத் பொன்சேகாவால் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முடியுமானால், எதிர்காலத்தில் தேர்தலில் அவர் அரசுக்குக் கடும் சவாலாக விளங்குவார். ஜனாதிபதி, தேர்தல் குறித்த அறிவிப்பை அவர் ஞாயிறன்று வெளியிடாமைக்கு இதுவே காரணம்" என ஏ.எவ்.பி. செய்திச் சேவை கருத்துத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளதாவது :

"ஜெனரல் சரத் பொன்சேகா அரசியலில் நுழைவது நிச்சயம். அவர் தற்போது அதிலிருந்து பின்வாங்க முடியாது" எனப் பேராதனைப் பல்கலைக்கழக அரசியல் பேராசிரியர் சுமணசிறி லியனகே தெரிவித்திருக்கின்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை வெளியிடாமல் தவிர்த்தமைக்கு சரத் பொன்சேகாவின் சவாலே காரணம் என சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் கிடைத்துள்ள ஆதரவைப் பயன்படுத்துவதற்காக மஹிந்த ராஜபக்ஷ தேர்தலை நடத்துவார், இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை காணப்பட்டது.

சரத் பொன்சேகாவினால் எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்த முடியுமானால் தேர்தலில் அவர் ஜனாதிபதிக்குக் கடும் சவாலாக விளங்குவார் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"நாட்டில் இராணுவத்தின் செல்வாக்கை அதிகரித்தமை அரசுக்கு இறுதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக அரசியல் விரிவுரையாளர் டெரன்ஸ்புரசிங்க தெரிவிக்கிறார்.

இராணுவத் தலைவர் ஒருவர் ஊழலற்ற, சுத்தமான அரசு ஒன்றை உருவாக்கித் தருவார் என மக்கள் கருதுகின்றனர். அதேவேளை, சரத் பொன்சேகா தேர்தலில் குதிப்பது ஜன நாயகத்திற்கு ஆபத்தாக மாறலாம் என்றும் பலர் எச்சரிக்கின்றனர்.

சரத் பொன்சேகா ஜனாதிபதியாவது இலங்கையை பாகிஸ்தான், மியான்மார் போன்ற நிலைக்குக் கொண்டு செல்லலாம் என மற்றுமொரு விரிவுரையாளர் தெரிவிக்கின்றார்.ஜெனரல் சரத் பொன்சேகாவின் 40 வருட கால இராணுவ சேவையே அவரது அரசியல் பங்களிப்புக்கான அடி நாதமாக அமையும்.

"குறுகிய கால அளவில் அவர் அரசியலில் நுழைவது ஜனநாயகத்திற்கு நல்லது. காரணம், அவர் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கிறார்" என்று தெரிவித்துள்ள சுமணசிறி லியனகே, "ஜனநாயகம் செழிப்பதற்கு வலுவான எதிர்க்கட்சி அவசியம்" என்றார்.

அதேவேளை, நீண்டகால அடிப்படையில் இது ஆபத்தானது என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இதற்கிடையில், சரத் பொன்சேகாவுக்கும் அரசுக்கும் இடையிலான பிளவு மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களின் கரங்களைக் குறுகிய காலத்திற்கேனும் பலப்படுத்தியுள்ளது என மனித உரிமை ஆர்வலரும் சட்டத்தரணியுமான நிமால்கா பெர்னாண்டோ கூறுகிறார்
மேலும் இங்கே தொடர்க...
உடுவில் மகளிர் கல்லூரியில் 20 மாணவர்கள் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி (பட இணைப்பு)


நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் உடுவில் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 20 மாணவ, மாணவியர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இந்த மாணவ, மாணவிகள் அதிபர் சிராணி மில்ஸ், ஆரம்பப் பிரிவு பொறுப்பாசிரியர் கலா மகேந்திரன் மற்றும் வகுப்பாசிரியர்களான பா.பிறேம்ரஞ்சித், யூதாசன் ஸ்டெலா, றோவினி சுஜித்தா யோகராஜா, லிற்றா ஸ்ரீகமலநாதன் ஆகியோருடன் காணப்படுவதைப் படத்தில் காணலாம்.



மேலும் இங்கே தொடர்க...
பல்லாயிரக்கணக்கானோர் வாழும் முகாம்களில் அடிப்படை வசதிகளை எதிர்பார்க்க முடியாது:ஸ்ரீகாந்தா


மக்கள் வாழ்கின்ற முகாம்களில் முழுமையான வசதி வாய்ப்புகளை எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் திருப்தியான அளவுக்கு செய்துகொடுக்கப்பட்டு இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான விடிவினைப் பெற்றுக்கொள்வதற்கு ஆக்கபூர்வமான அணுகுமுறைகளையே கையாள வேண்டும். அதற்கு எமது வன்னிப் பயணம் உதவும் வகையில் அமைந்துள்ளது. இந்தப் பயணத்தின் மூலம் பல விடயங்களை நேரடியாக அவதானிக்கக் கூடியதாவும் இருந்தது என்றும் அவர் சொன்னார்.

இடம்பெயர்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள வவுனியா நலன்புரி முகாம்களுக்குச் செல்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கம் முதன் முதலாக அனுமதி அளித்ததன் அடிப்படையில், அக்கட்சியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட எம்.பி.க்கள் குழு நேற்று திங்கட்கிழமை செட்டிக்குளம் முகாம்கள் மற்றும் வடக்கின் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கு விஜயம் செய்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களான என். ஸ்ரீகாந்தா, சிவநாதன் கிஷோர், செல்வம் அடைக்கலநாதன், தோமஸ் வில்லியம், வினோ நோகராதலிங்கம், பி. அரியநேத்திரன் மற்றும் ஆர்.எம். இமாம் ஆகியோரே இந்த விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, வட மாகாண ஆளுநர் மற்றும் வன்னிக் கட்டளைத் தளபதி ஆகியோரும் அரசு தரப்பில் இக்குழுவில் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

வன்னி விஜயம் தொடர்பில் ஸ்ரீகாந்தா எம்.பி. மேலும் கூறுகையில்,

"முகாம்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. அவர்களுடன் உரையாடுவதற்கும் மற்றும் அவர்களது குறை நிறைகளைக் கேட்டறிவதற்கும் எம்மால் முடியுமாக இருந்தது.

விரைவில் சொந்த இடங்களுக்கு...

ஆயினும், முகாம் வாழ்க்கை நீண்ட காலத்திற்குத் தொடரமுடியாது. எனவே, தமது சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்பிவிட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது.

அத்துடன், அருகே உள்ள முகாம்களுக்குச் சென்று தமது உறவினர்களைப் பார்ப்பதற்கும், அவர்களின் தேவைகளை நிறைவுசெய்து கொள்ளும் வகையில், பாஸ் நடைமுறைகளை இலகுபடுத்துவது தொடர்பிலும் அவர்களது கோரிக்கை அமைந்திருந்தது.

அத்துடன், உணவு விடயத்தைப் பொறுத்தவரையில் போதுமான மரக்கறிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொண்டனர்.

மேலும், புலிச் சந்தேக நபர்கள் என வேறுபடுத்தப்பட்டவர்களின் மனைவி, பிள்ளைகள் எந்தவித வசதிகளும் அற்றவர்களாக இருப்பதனால், அந்தத் தேவைகளையும் நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டனர்.

இவ் விடயங்கள் தொடர்பில் நாம் உடனடியாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி மற்றும் வன்னிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சமல் குணரட்ன ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவந்தோம்.

இங்கு குழந்தைகளுக்கான பால் மா மற்றும் சுகாதார வசதிகள் போதியளவில் காணப்படுவது அவதானிக்க முடிந்தது. அதுமட்டுமல்லாது, அங்கு வாழ்கின்ற மக்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டு இருக்கின்றனர். எது எவ்வாறிருப்பினும் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு, வீடுகளுக்குச் செல்லாத வரையில் அவர்களது மனக் கவலை நீடித்துக் கொண்டே தான் இருக்கும்.

இதனையடுத்து, மீள்குடியேற்ற பிரதேசங்களான விடத்தல்தீவுக்கு அருகிலுள்ள சில கிராமங்களுக்கும் துணுக்காய் மற்றும் கருங்கண்டல் ஆகிய பிரதேசங்களுக்கும் நாம் சென்று அங்குள்ள நிலைமைகளை அவதானித்தோம்.

மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் பல்வேறு இழப்புக்களை சந்தித்திருந்தாலும் தமது சொந்த இடங்களுக்கு வந்து விட்டோம் என்ற உற்சாகத்தையும் திருப்தியையும் அவர்களில் காணக்கூடியதாக இருந்தது. இவர்களுக்கு அரசாங்கம் உதவி வழங்கியுள்ள போதிலும் அதற்கும் மேலதிகமான தேவைகளை எதிர்நோக்கியிருப்பதால் சமூக தொண்டு நிறுவனங்களின் உதவிகளும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளும் இங்கு எதிர்பார்க்கப்படுகின்றன.

இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் கடந்த காலங்களில் தமது சொத்து, வீடு, காணிகள், விவசாய நிலங்கள், விவசாய உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் என சகலதையும் இழந்துள்ளனர் என்பதை மறந்து விடக்கூடாது.

துரிதகதியில் மீள்குடியமர்வு

மீள்குடியேற்றத்தை பொறுத்தவரையில் அது துரிதகதியில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதை காண முடிகின்றது. அதேபோல் கண்ணிவெடி அகற்றும் பணிகளும் தங்குதடையின்றி சீராக இடம்பெற்று வருவதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

பல இடங்களில் பாரியளவில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதன் காரணத்தாலேயே மீள்குடியேற்ற பணிகள் சற்று தாமதம் அடைந்திருப்பதாக எம்முடன் வந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். கண்ணிவெடி அகற்றும் பணிகளில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரும் அதனை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், நவீன இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இப்படியான விடயங்களை அவதானிப்பதற்காகவே நாம் அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்தோம். அதற்கமைய தற்போது இந்த சந்தர்ப்பத்தை ஒரு ஆக்கபூர்வமான பயணமாகவே கருதுகிறோம். விரும்புகிறோம். இதன் மூலம் பல்வேறு விடயங்களை சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எடுத்துக் கூறவுள்ளோம்.

எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் பூரணப்படுத்தப்படும் என்றும் அதே காலப் பகுதிக்குள் பெரும்பாலானோர் மீள்குடியேற்றப்பட்டு விடுவார்கள் என்றும் அதிகாரிகள் எமக்குத் தெரிவித்தனர்.

இதேவேளை, மன்னார் வீதியில் முருங்கனுக்கருகே உள்ள இராட்சத குளத்தின் அணையின் புனர்நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜப்பான் உதவியுடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமக்கு தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் மன்னார் பிரதேச மக்களின் விவசாய தேவைகளுக்கு இது பேருதவியாகவும் ஆறுதலாகவும் இருக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது மற்றும் அவர்களின் விடயங்களில் தலையிடுவது தொடர்பில் குறிப்பிட்ட வரையறைக்கு மேல் செல்ல முடியாதிருப்பதை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டும் புரிந்துகொண்டும் இருக்கின்றனர்" என்றார்
மேலும் இங்கே தொடர்க...
அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளிடையே மோதல்: நால்வர் காயம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் இன்று அதிகாலை இரு கைதிகளிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறியதில் நால்வர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து உதவி சிறைச்சாலை ஆணையாளர் கெனத் பெர்னாண்டோவைத் தொடர்பு கொண்டு கேட்ட போது,

"இன்று அதிகாலை அதிகாரி ஒருவர் கைதிகளைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்த சமயம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் நான்கு கைதிகள் கயமடைந்துள்ளனர். இவர்கள் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதுடன் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வாரியபொல பொலிஸ் நிலையத்திலிருந்து அதிகாரி ஒருவர் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ்-சிங்கள கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட கைக்கலப்பிலும் ஐந்து பேர் வரை காயமடைந்திருந்தனர். இதுதொடர்பாக விசாரணைகளை நடத்தக் கோரி நேற்றைய தினம் தமிழ் கைதிகள் உண்ணாவிரதம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...
எனது எதிர்கால நடவடிக்கை தொடர்பில் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பேன் அதுவரை காத்திருங்கள் என்கிறார் ஜெனரல் சரத் பொன்சேகா


நாடும், நாட்டு மக்களும் திருப்தியடையும் வகையில், உயரியதொரு சேவையினை வழங்கும் நோக்கிலான வேலைத்திட்டமொன்றில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும் ஓய்வுபெற்ற கூட்டுப்படைகளின் பிரதானி யுமான ஜெனரல் சரத் பொன்சேகா தனது பிரியாவிடை உரையில் தெரிவித்தார். இராணுவத்தின் பல்வேறு தரங்களிலும் பணியாற்றிய,போது தன்னால் முடிந்தளவு நாட்டுக்காக முழு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய மன மகிழ்வுடன் ஓய்வு பெறுவதாகத் தெரிவித்த ஜெனரல் சரத் பொன்சேகா, தனது எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து ஜெனரல் சரத் பொன்சேகா ஓய்வு பெறுவதை முன்னிட்டு, நேற்றுக்காலை இராணுவ தலைமையகத்தில் பிரியாவிடை நிகழ்வொன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த ஜெனரல் சரத் பொன்சேகா சகல ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.

இதனையடுத்து அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறுகையில்,

நாட்டில் ஊடுருவியிருந்த பயங்கரவாதத்திலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்காக எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய படை வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்கள், உறவினர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதோடு போர் நடவடிக்கைகளின் போது உயிர்த் தியாகம் செய்த, அங்கவீனமுற்ற படை வீரர்களையும் நினைவு கூருகிறேன்.

எது எவ்வாறெனினும் நாட்டுக்கு நான் உயரிய சேவையொன்றை வழங்கியுள்ளேன் என்னும் திருப்தி எனக்குள் உள்ளது. அந்த நாற்பது வருடகால திருப்திகரமான சேவை மகிழ்வுடன் இன்று (16ஆம் திகதி) ஓய்வு பெறுகின்றேன்.

மக்களுக்கான இந்த சேவை எதிர்வரும் காலங்களிலும் தொடரும். அதற்கான வேலைத்திட்டமொன்றில் ஈடுபடவுள்ளேன். அது எவ்வாறானதொரு வேலைத்திட்டம் என்பதை இன்னும் ஓரிரு நாட்களில் அறியத்தருகிறேன்.

நான் இந்த இடத்தில் சீருடை அணிந்த ஒரு பாதுகாப்பு அதிகாரி. அதனால் குறித்த வேலைத்திட்டம் எவ்வாறானது என்பது தொடர்பில் இப்போது எதனையும் தெரிவிக்க முடியாது. அதனால் இன்னும் ஓரிரு நாட்கள் எனக்கு அவகாசம் தாருங்கள். என்னுடைய தீர்மானம் தொடர்பில் அறியத்தருகிறேன். இதேவேளை என்னுடைய ராஜினாமாக் கடிதம் தொடர்பிலும் சில விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன. நான் ஊடகங்களுக்கு வெளியிட்ட கடிதத்திலும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதத்திலும் மாற்றங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. எது எவ்வாறெனினும் நான் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதமே ஊடகங்களிலும் வெளியிடப்பட்டிருந்தது என்பதே உண்மையாகும் என்றார்
மேலும் இங்கே தொடர்க...
சரணடைந்த புலிகளுக்கு 20 புனர்வாழ்வு நிலையங்கள் : ஆணையாளர் தகவல்



படையினரிடம் சரணடைந்த மற்றும் மனிதாபிமான நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கென 20 புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.

புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க இதனைத் தெரிவித்ததாக அரச இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் தேசிய அபிவிருத்தி தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பணிப்பின்பேரில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிறுவப்படவுள்ள இப்புனர்வாழ்வு நிலையங்களில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பத்தாயிரம் பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்படவுள்ளது.

இதன் முதல்கட்டமாக வவுனியா மெனிக்பாம் பகுதியில் 10 நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இம்மாதம் இவை அமைக்கப்படுவதுடன் மேலும் 10 நிலையங்கள் அடுத்த மாதம் அமைக்கப்படவுள்ளன.

எவ்வாராயினும் இவர்கள் அனைவருக்கும் உரிய முறையில் புனர்வாழ்வு அளிக்கும் திட்டம் ஜனவரி முதல் ஆரம்பமாகவுள்ளன.

ஒரு வருட காலத்திற்குள் அதனைப் பூர்த்திசெய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப புனர்வாழ்வுக்கான காலத்தை நீடிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

புனர்வாழ்வு அளிக்கப்பட உள்ளவர்களுள் 1854 பெண் உறுப்பினர்களும் 566 பாடசாலை மாணவர்களும் அடங்குகின்றனர். பாடசாலை செல்லும் மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குச் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

கல்வியைத் தொடரத் தகுதியான 273 மாணவர்கள் இலங்கையிலே மிகவும் பிரபல்யம் வாய்ந்த இரத்மலானை இந்துக்கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் மகிழ்ச்சிசியாகத் தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மாணவர்களுக்கான சகல வசதிகளையம் செய்து கொடுக்க 35 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த இவர்களது செயற்பாடுகளையும், சிந்தனைகளையும் முழுமையாக மாற்றியமைத்து சமாதான சிந்தனையுடன் வாழ்வதற்குத் தேவையான வகையில் உச்சக்கட்ட புனர்வாழ்வு வழங்குவதே இந்நிலையங்களின் பிரதான நோக்கமாகும்.

பெருந்தொகை போராளிகளுக்கு இதுபோன்று புனர்வாழ்வு அளிக்கப்படுவது உலகிலேயே இதுவே முதற் தடவையாகும்.

பயங்கரவாதத்தை முறியடித்ததன் பின்னர் அரசாங்கம் முன்னெடுத்து வரும் புனர்வாழ்வு திட்டத்தைப் பாராட்டும் வகையில் உலகின் பல நாடுகள் மற்றும் முன்னணி அமைப்புக்கள் என்பன இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்க முன்வந்துள்ளன" என புனர்வாழ்வு ஆணையாளர் மேலும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

சந்திரனில் காணி விற்பனை சூடு பிடிக்கிறது

ஒரு ஏக்கர் 20 டாலர்கள் மட்டுமே 34 இலட்சத்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பு

நிலவில் நீர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து நிலவு தொடர்பான பல்வேறு ஆய்வுகளில் பெரும் திருப்பு முனைகள் ஏற்பட்டுள்ளன. அதேவேளை, நிலவில் காணி வாங்கும் ஆர்வமும் மக்கள் மத்தியில் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பூமியில் இருந்து சுமார் 240,000 மைல் தொலைவில் உள்ள சந்திரனில் முதன் முதலாக மனிதன் கால் பதித்து 40 வருடங்கள் நிறைவடையும் நிலையிலே மனிதனின் நீண்ட கால கனவு நனவாகியுள்ளது.

அங்கு நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வானியல் ஆய்வில் மிகப் பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.

1969 ஆம் ஆண்டு அமெரிக்க விண்கலமான ‘அப்பலோ - விண்கலம்’ முதன் முதலாக நிலவில் இறங்கியது. அன்றில் இருந்து ரஷ்யாவும் அமெரிக்காவும் பல தடவைகள் விண்கலங்களை அனுப்பி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டன.

ஆனால் மருந்துக்குக் கூட சந்திரனில் தண்ணீர் இருக்கும் தடயம் கிடைக்கவில்லை. ஆனால் விஞ்ஞானிகள் சந்திரனில் தண்ணீரை தேடும் ஆய்வுகளை கைவிடுவதாக இல்லை.

ந்த நிலையிலே இந்தியா சந்திராயன் - 1 எனும் விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பியது. இதன் போது நிலவில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன் நாசா நிறுவனம் எல்கிராஸ் எனும் ராக்கெட்டை சந்திரனுக்கு அனுப்பி ஆய்வு நடத்தியது. சந்திரனில் எதிர்பார்த்தைவிட அதிகளவு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் தற்பொழுது தெரிவித்துள்ளது.

இந்த ராக்கெட்டில் இணைக்கப்பட்ட ஒரு கருவியை சந்திரனில் சூரிய ஒளியேபடாத பரப்பின் மீது விஞ்ஞானிகள் மோதச் செய்தனர். மோதலின் விளைவை, ராக்கெட் மூலம் எடுக்கப்பட்ட படங்களை வைத்து நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

மிகக் குறைந்த அளவிலேயே நிலவில் தண்ணீர் இருப்பதாக இதுவரை நம்பியிருந்தோம். ஆனால், சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் வியக்கத்தக்க வகையில் உள்ளன. ராக்கெட் மோதிய இடத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் குறைந்தது 25 கலன் தண்ணீர் இருக்கக் கூடும். சந்திரனை வறட்சியான பாலைவனப் பகுதி என்ற கருத்து இதன் மூலம் சிதைக்கப்பட்டு விட்டது என்று நாசா ஆய்வுக் குழுவில் உள்ள விஞ்ஞானியான ஜோன் லோக்ஸ்டோன் கூறியுள்ளார்.

சந்திரனில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது, சந்திரன் தொடர்பான பல்வேறு புதிய ஆய்வுத் தளங்களுக்கு அடிப்படையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில வாரத்திற்கு முன் ரொக்கெட்டை நிலவில் மோதச் செய்து அப்போது ஏற்படும் அதிர்வு மூலம் நிலவின் மேற்பரப்பை தகர்த்து அதில் தண்ணீர் இருக்கிறதா? என நாசா ஆய்வு மேற்கொண்டது. இதில் தற்போது ஆச்சரியப்படும் வகையிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொத்தம் 2 ரொக்கெட்கள் மோத விடப்பட்டன. இரண்டுமே வெற்றிகரமாக நிலவின் தளத்தில்மோதி நின்றதாக நாசா தெரிவித்துள்ளது.

முதலில் சென்டார் என்ற ராக்கெட்டை மோத விட்டனர். நிலவின் தென் முனையில் இந்த ராக்கெட் மோத விடப்பட்டது,

2000 கிலோ எடை கொண்ட அந்த ரொக்கெட் மணிக்கு 900 கிலோ மீற்றர் வேகத்தில பாய்ந்து சென்று மோதியது.

இதையடுத்து வெபர்டிங் என்ற 2வது ராக்கெட் மோதவிடப்பட்டது, முதல் ராக்கெட் மோதிய நான்கு நிமிடங்களில் 2வது ரொக்கெட் மோத விடப்பட்டது. அதே கோணத்தில் இந்த ராக்கெட்டும் விடப்பட்டது.

எது எப்படியோ நிலவில் நீர் இருப்பது உறுதியாகி விட்டது. இதனால் அங்கு ஜீவராசிகள் வாழ முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நிலவில் காணி வாங்குவதற்கு மக்கள் போட்டி போடத் துவங்கியுள்ளதாக பல நாடுகளில் இருந்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல நாடுகளில் தண்ணீருக்குப் பஞ்சமாக இருக்கையில் நிலவில் குறைந்த விலையில் காணி கிடைக்குமென்றால் யார் தான் வேண்டாமென்பார்கள்.

நிலவில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து நிலவில் இடம் வாங்க மக்களிடையே ஆர்வம் பிறந்துள்ளதாம். இது குறித்துதான் இப்போது இன்டர்நெட்டில் சூடான விவாதம் இடம்பெறுகிறது.

நிலவில் ஒரு ஏக்கர் நிலம் சுமாராக 20 டாலருக்கு விலை பேசப்படுகிறதாம். அமெரிக்காவைச் சேர்ந்த லூனார் எம்பசி என்ற நிறுவனம் இவ்வாறு நிலவின் காணிகளை விற்பனை செய்யும் வியாபாரத்தை ஆரம்பித்துள்ளது.

இந்நிறுவனம் இன்று நேற்றல்ல, கடந்த 29 ஆண்டுகளாக இந்த வேலையைத் தான் செய்து வருகிறதாம், நிலவில் இடத்தைப் தபிவு செய்வதும் விற்பது தாம் இந்த நிறுவனத்தின் வேலை. இந்த நிறுவனத்தின் இணையத் தளத்தில் நிலவில் இடம் வாங்குவது தொடர்பான அனைத்து விபரங்களையும் பதிவு செய்துள்ளனர்.

சிலர் இதனை ஏமாற்று வியாபாரம் என்று நினைப்பர். ஆனால் இது மோசடி வேலை அல்ல என்றும் ஒரு விளக்கத்தை இந்த நிறுவனம் கூறுகிறது.

சந்திரன் மற்றும் பிற கிரகங்களில் நிலத்தை விற்பனை செய்யவும், பதிவு செய்யவும் அங்கீகாரம் பெற்ற ஒரே கம்பனி எங்களுடையதுதான் என்று இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுவரை தங்களது நிறுவனத்தில் 34 இலட்சத்து 70 ஆயிரத்து 72 பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.

பிற கிரகங்களில் காணிகளை விற்பதற்கு இவர்களுக்கு யார் உரிமை வழங்கினார்கள்? அதற்கும் ரு விளக்கம் இந்த இணையத் தளத்தில் உள்ளது. அதாவது ஐ. நா. சபையிலும் அமெரிக்கா மற்றும் ரஷ்ய அரசுகளிடமும் இது குறித்து முறையாக பதிவு செய்து உரிமையைப் பெற்றுள்ளனராம்.

லூனார் எம்பசியைச் சேர்ந்த டென்னிஸ் ஹோப் என்பவர் இது தொடர்பான உரிமத்தை 29 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி விட்டாராம். பின்னால் சட்டப் பிரச்சினை வந்து விடக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடாம். தங்களது உரிமையை இதுவரை எந்த நாடும் கேள்வி கேட்கவில்லை என்றும் வாதிடுகிறார்கள்.

கடந்த 1979 ஆம் ஆண்டு சர்வதேச நிலவு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 1984ம் ஆண்டு அமுலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தப்படி எந்த ஒரு தனி நபரும் நிலவில் உரிமை கோர முடியாது., 2008 ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி நிலவரப்படி இந்த ஒப்பந்தத்தை இதுவரை 13 நாடுகள் மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளன.

இதில் விசேஷம் என்னவென்றால் எந்த ஒரு நாடும் சட்டரீதியாக லூனார் எம்பசியின் உரிமையை §க்ளவி கேட்கவில்லை என்பதே. ஒரு ஏக்கர் காணி 22.49 டொலர்களாம். பதிவு செய்வதற்கு 15 டொலர்கள் செலுத்த வேண்டுமாம். வேறு கிரகங்களுக்கான பதிவுக்கு 22 டாலர்கள் தானாம்
மேலும் இங்கே தொடர்க...

ஈழக்கொடியை மீண்டும் உயர்த்த எவருக்கேனும் இடமளிக்கப்போவதில்லை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

ஈழக் கொடியை வீழ்த்த உதவியவர்கள் மீண்டும் அதனை உயர்த்த இடமளிக்க முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

இவர்கள் வெளிநாடுகளில் ஈழக்கொடி யினை உயர்த்த முற்படுவார்களேயானால் நாட்டு மக்கள் அதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பர் என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

அரச காணிகளிலுள்ள விஹாரைகளுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கிவைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அங்கு மேலும் பேசுகையில், இனத்துரோகிகளுக்கு வீரர்களை உருவாக்க முடியாது. தேசப்பற்று உள்ளோரால் மாத்திரமே அது முடியும். நாம் சரியான பாதையை வகுத்துவருகிறோம். எத்தகைய சவால்களை எதிர்கொள்ளவும் நாம் தயாராகவுள்ளோம் என்றார்.

அமைச்சர்களான ஜீவன் குமாரதுங்க, தினேஷ் குணவர்தன, பண்டு பண்டார நாயக்க, பிரதியமைச்சர் சந்ரசிறி சூரியாரச்சி உட்பட பெளத்த நாயக்கதேரர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;

ஈழக் கொடியை வீழ்த்துவதற்கு எம்மோடு உறுதுணையாக பெளத்த மதகுருமார்களுடன் மேலும் பலர் இருந்தனர். அதற்குத் தலைமைத்துவம் வழங்கியும் செயற்பட்டனர். அவர்கள் எவருமே இந்த நாட்டில் ஈழக் கொடியைக் காண விரும்பமாட்டார்கள்.

எனினும் எவருக்காகவாவது உலகில் எங்காவது ஈழக்கொடி உயர்த்தப்படுமானால் அதற்கு இந்நாட்டு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பது உறுதி, சர்வதேச சூழச்சிகள் வெற்றி பெறுவதற்கு உதவியாக இந்நாட்டில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளுக்கு ஆயுள் மிகக் குறைவானது என்பது உறுதி.

எஸ். எம். எஸ். மூலம் ஜனாதிபதியாக முடியாமற்போனது போல இணையத்தளங்கள் மூலம் ஈழக் கொடியை உயர்த்த முற்படுவதும் முடியாத காரியம். அதற்கு இந்நாட்டின் தேசப்பற்றுள்ளவர்கள் இடமளிக்க மாட்டார்கள்.

எவராவது அவ்வாறு கனவு காண்பார்களானால் அது ஒருபோதும் பலிக்காது.

இனத் துரோகிகளால் வீரர்களை உருவாக்க முடியாது. வரலாற்றில் தொடர்ச்சியாக தேசப்பற்றாளர்களே நாட்டை நேசிக்கும் மனிதர்களை உருவாக்கியுள்ளனர். நாட்டிற்கான புதிய பாதையை நாம் வகுத்துள்ளோம். அன்று போலவே என்றும் பயமின்றி சவால்களை வெல்வோம் என ஜனாதிபதி அங்கு கூறினார்.

பெளத்த மத விஹாரைகள் கடந்த காலங்களில் சந்தித்த அவலங்கள் சம்பந்தமாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி; கிழக்கில் பெளத்த மதத்தவர்கள் வழிபாடுகளில் ஈடுபட முடியாதிருந்த காலகட்டத்தைக் குறிப்பிட்டதுடன், திருகோணமலையில் புத்தர் சிலை முட்கம்பிகளால் வளைக்கப்பட்டு அதனருகே பெளத்த மதத்தவர்கள் சென்று வழிபடமுடியாமலிருந்த சம்பவத்தையும் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கில் பெளத்த தேரர்கள் கஷ்டமான வாழ்க்கையை அனுபவித்தனர். வெளியில் நடமாட முடியாதிருந்தனர். அதற்கான சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கவில்லை. அரந்தலாவையில் பிக்குமார் கொலை செய்யப்பட்ட போதும், அவர்கள் அப்பிரதேசத்தைக் கைவிட்டு ஓடவில்லை. விஹாரைகளைப் பாதுகாத்தனர்.

இதனால் நாம் பெளத்த விஹாரைகளை புனரமைக்க நடவடிக்கை எடுத்தோம். இப்போதும் சூழ்ச்சிகள் உள்ளன. எனினும் மீண்டும் இந்த நாட்டில் விஹாரைகள் முள்வேலிகளுக்குள் அடைக்கப்படும் யுகம் உருவாக இடமளிக்கப் போவதில்லை. இது எமது பொறுப்பு மட்டுமல்ல எமது உரிமையுமாகும்.

மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேற்றம், நிவாரணக் கிராமங்கள் குறித்து கூட்டமைப்பு திருப்தி

‘நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வசதி; அரசுக்கு நன்றி’

நிவாரணக் கிராமங்களுக்கும், மீள்குடி யேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களுக்கும் நேற்று நேரில் விஜயம் செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் இங்குள்ள மக்களுக்கு செய்து கொடுத்துள்ள வசதிகளையிட்டு திருப்தி தெரிவித்துள்ளனர்.

நிவாரணக் கிராமங்கள் உட்பட மன் னார், கிளிநொச்சி, துணுக்காய் பிர தேசங்களுக்கு நேரில் சென்று பார்வை யிடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கி யிருந்தது.

இதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று அங்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துவிட்டு திரும்பியது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், யாழ். மாவட்ட எம். பிக்களான எஸ். சிறிகாந்தா, எம். இமாம், மட்டக்களப்பு மாவட்ட எம். பி. அரியநேந்திரன் மற்றும் அம்பாறை மாவட்ட எம். பி. தோமஸ் வில்லியம் ஆகியோரே மேற்படி பிரதேசங்களுக்கு விஜயம் செய்து நிலைமைகளை விரிவாக ஆராய்ந்ததுடன், நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இவர்களது இந்த விஜயத்திற்கான விமான மற்றும் ஹெலிகொப்டர் வசதிகளையும் அரசாங்கம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தது.

இந்த விஜயம் தொடர்பாக சிவநாதன் கிஷோர் எம். பியுடன் தினகரன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கருத்து தெரிவிக்கையில்:-

“நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறுகிய காலத்திற்குள் எமது மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்து அவர்களை மீளக்குடியமர்த்தவும் செய்துள்ளது.

நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும், மீளக் குடியமர்ந்துள்ள மக்களையும் நாங்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்த மக்கள் மிகவும் திருப்தியான முறையில் உள்ளனர்.

அந்த மக்கள் மத்தியில் சந்தோஷத்தை காணக் கூடியதாக இருந்தது. மக்களின் சந்தோஷமே எமது திருப்தியாகும் என்று தெரிவித்த அவர் இதற்காக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

இரத்மலானை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் வன்னி சென்றடைந்த எம். பிக்களை வரவேற்ற வன்னி தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன மீள்குடியேற்றம் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி தொடர்பாக விரிவான விளக்கத்தை வழங்கியுள்ளார். இந்த நிகழ்வு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பெற் றுள்ளது.

அதனைத் தொடர்ந்து எம். பிக்கள் செட்டிக் குளம், ஆனந்த குமாரசுவாமி, அருணாச்சலம் ஆகிய நிவாரண கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து கலந்துரையாடி யுள்ளனர்.

இதேவேளை மன்னார் கட்டுக்கரைக்குளம், மன்னார் பாலம் புனரமைப்பு வேலைத் திட்டம் நடைபெறும் இடங்களுக்கும் விஜயம் செய்ததாக வன்னி எம்.பி. சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

அடம்பன், மல்லாவி, துணுக்காய், மாங்குளம் போன்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்த இவர்கள் மீளக் குடியேறிய மக்களுடனான சந்திப்பிலும் கலந்து கொண்டனர். இவர்களுடன் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் றிசாட் பதியுதீன், வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, வட மாகாண ஆளுநர் உட்பட பாதுகாப்பு தரப்பு உயர் அதிகாரி களும் கலந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில் உயிலங்குளம் கருங்கண்டல் ஆகிய இடங்களுக்கும் இவர்கள் விஜயம் செய்தனர்.

மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வன்னியில் இடம் பெறும் மீள்குடியேற்றம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் நிலக் கண்ணி வெடி அகற்றல் இடம்பெறும் இடங்களையும் பார்வையிட இவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 2010 ஆண்டு ஜனவரியுடன் நிவாரண கிராமங்களில் தங்கியுள்ளவர்களின் மீள்குடியேற்றம் நிறைவுக்கு வரும் என படை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...