11 அக்டோபர், 2010

ரூ.4 கோடி பரிசு அறிவிக்கப்பட்டஅல்-குவைதா தலைவர் பலி


பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், அல்- குவைதா அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார்.லிபியா நாட்டைச் சேர்ந்தவர் அதியா அப்த் அல் ரஹ்மான். இவர், அல்-குவைதா அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர். இவரைப் பற்றிய தகவல் தருவோருக்கு 4 கோடி ரூபாய் பரிசு தருவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்நிலையில், பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான வடக்கு வாசீரிஸ்தானில் கடந்த வாரம் அமெரிக்க ராணுவம், ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில், ரஹ்மான் மற்றும் அவருடன் இருந்த மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அல்-குவைதாவைச் சேர்ந்த மற்றொரு முக்கிய தலைவரான காலித் முகமது அப்பாஸ் அல் ஹராபியும் இதேபோன்ற ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

டி.எம்.வி.பி.க்கு எதிராக சாட்சியம்


இலங்கையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக் குழுவின் விசாரணையில் சிலர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மீது தமது சந்தேகங்களை வெளியிடும் வகையில் சாட்சியமளித்துள்ளனர்.

இந்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி நாள் அமர்வு செங்கலடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றபோது காணாமல் போனவர்கள் தொடர்பாக மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாய் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் தமது சாட்சியங்களை பதிவு செய்து கொண்டனர்.

சாட்சியமளித்தவர்களில் பலர் காணாமல் போனவர்கள் தொடர்பாக பாதுகாப்பு தரப்பினரைத் தொடர்புபடுத்தியிருந்தனர். அடையாளம் தெரியாத ஆட்கள் என்று குறிப்பிட்டு ஒரு சிலர் தமது சாட்சியங்களில் குற்றஞ்சாட்டியிருந்தனர். ஆனால் வேறு சில சாட்சிகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது சந்தேகங்கம் தெரிவிக்கும் விதமாக வாக்குமூலம் வழங்கினர்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான சுடரொலியின் தயார் மாரிமுத்து இரத்தினசிகாமனி சாட்சியமளிக்கையில், "விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய தமது மகனை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்தான் அழைத்துச் சென்றார்கள், அவர்களை விசாரித்தால்தான் காணாமல் போன தமது மகன் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள முடியும்" என்று கூறியிருந்தார்.

ஏறாவூரைச் சேர்ந்த எச்.எம். முபீன் 2007 ம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ம் திகதி தனது தொழிலின் நிமித்தம் ஏறாவூரிலிந்து மோட்டார் சைக்கிளில் கறுவாக்கேணிக்கு சென்ற தனது தந்தை தொடர்பாக எவ்வித தகவல்களும் இதுவரை இல்லை என்று தெரிவித்தார்.

"எனது தந்தைக்கு தொழில் ரீதியாக அறிமுகமான தமிழர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கருணா பிரிவினரே தனது தந்தையை கடத்திச் சென்றுள்ளனர்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

வெருகல் சிறீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் முன்னாள் நிர்வாகிகளில் ஒருவரான இராசையா ஞானகணேசன், " எமது பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வேளை ஆயுத முனையில் விடுதலைப் புலிகளினால் ஆலய பாரம்பரிய நிர்வாக முறை மாற்றி அமைக்கபட்டது" என்று குறிப்பிட்டார்.

மீண்டும் பாரம்பரிய முறையில் ஆலய நிர்வாகம் கொண்டுவரப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

தீவிரவாதிகளை கண்டுபிடிக்க விமான பயணிகளின் காதுகளை “ஸ்கேன்” செய்ய முடிவு





உலகில் தீவிரவாதம் பெருகிவிட்டது. எனவே தீவிரவாதிகளை கண்டு பிடிக்க விமான நிலையங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. போலி பாஸ்போர்ட் மூலம் பயணம் செய்வதால் கைரேகை பரிசோதிக்கப்படுகிறது. ஆயுதங்கள் எடுத்து செல்லப்படுகிறதா? என்பதை அறிய உடல் முழுவதும் “எஸ்க்ரே” மூலம் ஸ்கேன் செய்யப்படுகிறது.

தற்போது புதிய முறையை கடை பிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பொதுவாக மனிதர்களின் காது அமைப்பு ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

எனவே விமானத்தில் பயணம் செய்பவர்களின் காதுகளை ஸ்கேன் செய்தால் போதும். அதில் இருந்தே பயணம் செய்பவர் தீவிரவாதியா? அல்லது சாதாரண நபரா? என தெரிந்துவிடும்.

இது சரியான திட்டம் என இங்கிலாந்தில் உள்ள சவுதாம் டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏனெனில், முகத்தில் “மேக் அப்” போட்டு உருவத்தை மாற்ற முடியும். மேலும் முக பாவனைகள் மூலமும் தப்பிக்க முடியும்.

ஆனால் மனித உறுப்புகளில் “காது” தனிச்சிறப்பு வாய்ந்தது. அவை ஆளுக்கு ஆள் மாறுபடும். எனவே காதின் அமைப்பை துள்ளியமாக ஸ்கேன் செய்தாலே போதும். பாஸ்போர்ட்டுடன் வருபவர் ஒரிஜினலா? அல்லது போலியா? என தெரிந்து விடும் என தெரிவித்துள்ளனர். இக்கருத்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

கோட்டைக் கல்லாறு பகுதியில் மீனவர் இறங்கு துறை அமைக்க அனுமதி.

கோட்டைக் கல்லாறு பகுதியில் மீனவர் இறங்கு துறை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் மற்றும் பிரதி அமைச்சர் எம். எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கோட்டை கல்லாறு பகுதி கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் கடற்கரை ஓரங்களில் சவுக்கு மரங்கள் நடப்பட்டு தற்போது வனப் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அறியமுடிகிறது.

ஆனால் உண்மையில் சுனாமி அனர்த்தம் இடம்பெறுவதற்கு முன்னர் அப்பிரதேச மீனவர்கள் அங்கு மீனவர் தங்குமிடங்களை அமைத்து தங்களது தொழில்களை மேற் கொண்டனர்.

ஆனால் தற்போது அங்கு அமைக்கப்பட இருந்த இறங்கு துறையினை அமைப்பதில் பல்வேறு இடர்பாடுகளை தாம் எதிர் நோக்கி வருவதாக அப் பிரதேச மீனவர்கள் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு தெரியப்படுத்தியதையடுத்து இன்று இது தொடர்பில் முதலமைச்சர் சந்திரகாந்தன் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்தாலோசித்து அப் பிரதேசம் உண்மையில் மீனவர்களுக்கான பிரதேசமாக இருப்பதனால் அங்கு இறங்கு துறையினை அமைப்தற்கு மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு அனுமதி வழங்கியது.
மேலும் இங்கே தொடர்க...

கோலாலம்பூரில் ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு வரவேற்பு


இலங்கையின் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ 4 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு மலேஷியா சென்றுள்ளார்.

கோலாலம்பூரில் நடைபெறும் முதல் பெண்மணிகளின் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.

கோலாலம்பூர் சென்றடைந்த ஷிராந்தி ராஜபக்ஷவை மலேஷியப் பிரதமரின் பாரியார் டட்டின் பதுகாசேவி ரொசமாப் மன்சோர் வரவேற்றார்.
மேலும் இங்கே தொடர்க...

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பு



கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பு மக்களுக்கு சாட்சியம் வழங்குவதற்காக கால அவகாசம் வழங்கியிருந்தது. கண்ணீர் மல்க சாட்சியமளிக்க வருகை தந்திருந்த அவர்களைப் பார்க்கும்போது இந்தப் பரிதாப நிலைக்கு யார் காரணம் என்றே வினா எழுப்பத் தோன்றுகிறது.

இறுதிக்கட்ட மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலர் காணாமல் போயுள்ளனர். படையினரால் கைது செய்யப்பட்ட பலரின் நிலை என்னவானது என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது.

இந்தத் தகவலை வெளிப்படையாகச் சொல்லி நேற்றும் நேற்று முன்தினமும் ஆணைக்குழுமுன் நீதிகேட்டு நின்ற பெற்றோர், மனைவிமார் வெளிப்படுத்திய தகவல்கள் அதிர்வலைகளை உண்டுபண்ணுகின்றன.

"2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி ஓமந்தை திறந்தவெளி மைதானத்தில் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் எனது கணவரும் இருந்தார். ஆனால் அவரைக் கண்ட இறுதி தினம் அதுவாகத்தான் இருக்கும் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. தயவு செய்து அவரை மீட்டுத் தாருங்கள்"

"இறுதிக்கட்ட மோதலின்போது சரணடைந்தவர்களும் கைது செய்யப்பட்டவர்களும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு எதுவுமே நடக்கவில்லை என வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். அது உண்மையா?"

"எனது கணவர் கொழும்பில் வெள்ளைவானில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டார். உங்களைப்போன்ற பலரிடம் கண்ணீர்விட்டு முறைப்பாடு செய்தேன். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது எனது கணவரைக் காட்டுங்கள்"

இவ்வாறு ஏராளமானோர் கதறியழுது கேட்ட கேள்விகளுக்குச் சம்பந்தப்பட்ட தரப்பினர் அளிக்கும் பதில்தான் என்ன?

கருணா, பிள்ளையான் குழுவினர் எனக் கூறி தங்களது உறவுகளைக் கடத்திச்சென்றோர் குறித்தும் பொதுமக்கள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர்.

இரகசிய சாட்சியங்கள்

அந்த சாட்சியங்கள் இரகசியமாகப் பதிவுசெய்துகொள்ளப்பட்டன.

இராணுவ சீருடையில் வந்து கடத்தியோர் குறித்து பொலிஸ் நிலையங்களிலும் அரச தரப்பினரிடமும் முறைப்பாடு செய்திருந்தாலும் இதுவரை அவர்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் மூலம் முறையான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் சாட்சியமளித்துள்ளார்கள். அந்த நம்பிக்கைக்குப் பதிலாக நியாயமான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

கிளிநொச்சி, முல்லைத் தீவு பகுதிகளில் ஆணைக்குழுவின் விசாரணை நடைபெற்ற போது இதேபோன்று பெருந்திரளானோர் ஏக்கம் நிறைந்த, கவலை தோய்ந்த முகத்துடன் காத்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

குற்றவாளிகள் எனின் தண்டனை வழங்கப்பட வேண்டும். நிரபராதிகள் எனின் விடுவிக்கப்பட வேண்டும். இவை இரண்டுமே இல்லாமல் தண்டிக்கப்பட்டோரின் நிலை என்ன? இத்தனை குடும்பங்களின் சுமைகளையும் யார் தாங்கப்போகிறார்கள்?

இந்தக் கண்ணீருக்கு விடை என்ன என்பது போன்ற கேள்விகள் மனதின் மையங்களிலிருந்து எழுந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஆணைக்குழு தரும் பதில் மூலம் விரைவில் நியாயம் கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருப்போம்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வாதிகாரிகளிடம் மன்னிப்புக் கோர மாட்டேன் : சரத் பொன்சேகா



சர்வாதிகாரிகளிடம் ஒருபோதும் மன்னிப்புக் கோரப் போவதில்லை என ஜனநாயகத் தேசியக் கட்சித் தலைவர் சரத் பொன்சேகா இன்று தெரிவித்தார்.

வௌ்ளைக் கொடி வழக்கு தொடர்பில் நீதிமன்றுக்கு இன்று அழைத்து வரப்பட்ட போதே அவர், நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த மக்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

"நாட்டின் சர்வாதிகாரிகளிடம் நான் எப்போதும் தலை குனியவும் மாட்டேன், மன்னிப்புக் கோரவும் மாட்டேன். வாழ்நாள் முழுவதும் சிறை வாசம் அனுபவிக்க நேரிட்டாலும் ஒருவருக்கும் அடிபணிந்து போக மாட்டேன்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தாய்லாந்தில் தேடுதல் நடவடிக்கைஇ 130ற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் கைது..!

தாய்லாந்தில் தாய்லாந்து பொலிசாரும் கனேடியன் இன்ரர்போலும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது 130ற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யபட்டவர்களிள் 60 ஆண்கள் 50 பெண்கள் 7 கர்ப்பணித்தாய்மார்கள் 13 குழந்தைகளும் உள்ளனர் இவர்களுள் விசா இன்றி அங்கு தங்கியிருந்த தம்மை அகதிகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதிவு செய்திருந்த இலங்கை அகதிகளும் கப்பலில் கனடாவிற்கு செல்வற்காக வந்திருந்த அகதிகளும் கைதுசெய்யப்பட்டு தாய்லாந்து குடிவரவு திணைக்கள சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுள் உள்ளடங்கியுள்ளனர். இன்றுகாலை 06.30அளவில் தாய்லாந்தின் ஒஞ்சபூன் சபான்மை பொம்சிங் மற்றும் சபான்மை பிக்சி சுற்றுவட்டாரப் பிரதேசங்களை திடீரென சுற்றிவளைத்த தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தாய்லாந்து இராணுவத்தினர் மற்றும் கனேடிய இன்ரர்போல் பொலீசார் இவர்களைக் கைதுசெய்து கொண்டு சென்றுள்ளனர். அத்துடன் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையினை கனேடியன் இன்ரர்போலும் தாய்லாந்து இராணுவத்தினரும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தாய்லாந்திலிருந்து கப்பலில் கனடாவுக்கு இலங்கையர்களை அனுப்பிவரும் நடவடிக்கையினை கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்இ இவர்களை அனுப்பிவைக்கும் பிரதான முகவர்கள் உதவி முகவர்கள் சந்தேகநபர்கள் தப்பியோடி விட்டதாகவும் தாய்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தரப்பில் பேசப்படுகின்றது. அத்துடன் இன்றுகாலை இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்டு சிறப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டவேளை தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகளைத் தாக்கிவிட்டு 15 இலங்கையர்கள் தப்பியோடி விட்டதாகவும் இதனைத் தொடர்ந்து தாய்லாந்து இராணுவமும் கனேடியன் இன்ரர்போலும் தொடர்ந்து தேடுதல்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது. இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மற்றும் கைது என்பவற்றின் பின்னணியின் இலங்கை தூதரகமும்இ கனேடியன் இன்டர்போலும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தாய்லாந்தில் தங்கியுள்ள தம்மை ஐக்கிய நாடுகள் அமைப்பில் அகதிகளாக பதிவு செய்துகொண்டுள்ள இலங்கை அகதிகள் பெரும் பதற்றத்துடன் உள்ளனர். அத்துடன் இவ்வாறான சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென்றும் அத்துடன் பிரதான முகவர்கள் உதவி முகவர்கள் சந்தேகநபர்கள் ஆகியோரின் பெயர் விபரம் மற்றும் புகைப்படங்கள் என்பன வெளியிடப்படுமென்றும் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்திலிருந்து ராம்
மேலும் இங்கே தொடர்க...

தங்கம் கடத்த முயன்ற இரு யுவதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமாகப் பெங்களூருக்குத் தங்கம் கடத்த முற்பட்ட யுவதிகள் இருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து இவர்கள் நேற்று முன் தினம் சோதனையிடப்பட்டபோதே, கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவர்களைக் கைது செய்தனர்.

யுவதிகள் இருவரும் தம் உடலில் மறைத்து வைத்திருந்த 475 கிராம் தங்கம் முதலில் கைப்பற்றப்பட்டது. தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களுக்குச் சுங்க அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அபராதத் தொகையைச் செலுத்திய பின்னர் இவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட பின்னர் இவர்களின் நடை, உடை பாவனையில் மீண்டும் சந்தேகம் ஏற்படவே, சுங்க அதிகாரிகள் இவர்களைத் திரும்பவும் சோதனையிட்டதில் மேலும் தங்கம் கைப்பற்றப்பட்டது.

மொத்தமாக இவர்களிடமிருந்து ஒரு கிலோ 173 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் பெறுமதி 51 லட்சம் ரூபாவாகும் என மதிப்பிடப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட தங்கம் அரசுடைமையாக்கப்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புனித ஹஜ் : இலங்கையர் 5800 பேருக்கு இம்முறை சவூதி அரசு அனுமதி

புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இம்முறை இலங்கை முஸ்லிம்கள் 5800 பேருக்கு சவூதி அரேபிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

முதலாவது ஹஜ் குழு எதிர்வரும் 17ஆம் திகதி இங்கிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளதென இஸ்லாமிய கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம். நபவி தெரிவித்தார்.

இதற்கான ஏற்பாடுகளை இலங்கை ஹஜ் விவகாரக் குழ மேற்கொண்டு வருகிறது.

முதலாவது ஹஜ் குழுவில் செல்பவர்களைக் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் ஹஜ் குழுவின் தலைவர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கையிலிருந்து புனித ஹஜ் கடமைக்காகச் செல்லும் ஹாஜிகளின் நலன் கருதி வைத்தியர் குழுக்களும் சவூதி அரேபியா செல்ல உள்ளது. இந்த வைத்தியக் குழுக்கள் மக்கா, மினா, அரபா, முஸ்தலிபா போன்ற இடங்களில் தமது சேவைகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் ஆலயங்கள் அழிப்பு : ததேகூ

தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் ஆலயங்கள் அமைந்திருந்த இடங்கள் அழிக்கப்படுவதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. இதனை நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். நாங்கள் அண்மையில் பிரதம மந்திரியைச் சந்தித்துக் கலந்துரையாடினோம். அவர் எதிர்வரும் வாரங்களில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்து என்னுடன் சென்று ஆலயங்களைப் பார்வையிடவுள்ளதாகக் கூறியுள்ளார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய 'கடலலையோடு' என்ற இறுவட்டு வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர்,

"இந்துமதம் ஆதிகாலத்தில் தோன்றிய மதம். இதனை வரலாறுகள் கூறுகின்றன. ஆனால் யுத்தம், சுனாமி போன்றவற்றால் அழிக்கப்பட் ஆலயங்கள் இன்னமும் புனரமைக்கப்படவில்லை. ஆலயங்கள் இருந்த இடங்கள் இன்னும் ஆக்கிரமிப்புகளுக்குள்ளாகி வருகின்றன.

அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு, அவர்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இதற்கு யாரும் இடமளிக்கக்கூடாது. அத்துடன் விழிப்பாக இருங்கள். நமது இந்து ஆலயங்களில் கோழி, ஆடு போன்ற உயிரினங்களை உயிர்ப்பலி எடுப்பதனை உடனடியாக நிறுத்துதல் வேண்டும். நேர்த்திக்கடன் என்பது வேறு, உயிர்ப்பலி என்பது வேறு" எனத் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்,

"அம்பாறை மாவட்ட கச்சேரியில் இனிமேல் நடைபெறும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் எமது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொள்ளவுள்ளார். இது சம்பந்தமான அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடன் இன்று திங்கட்கிழமை பேசவுள்ளோம்.

கிழக்கில் யுத்தத்தாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட கோவில்கள் புனரமைக்கப்படவில்லை என்று கூறுகிறீர்கள். வடக்கில் சென்று பார்த்தீர்களானால் கோவில்கள் இருந்த தடங்களே இல்லை. ஆகவே நாங்கள் எங்களுடைய பூர்வீக விடயங்களில் அக்கறை செலுத்தாமல் விடுகிறோம் என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது.

நாங்கள் வாக்குக் கேட்கும் போது அபிவிருத்திகளைச் செய்வோம் என்றோ வேலைவாய்ப்புக்களைப் பெற்றுத் தருவோம் என்றோ கூறவில்லை. அதற்காக வாக்களித்த மக்களை ஒருபோதும் கைவிடமாட்டோம்.

அம்மன் ஆலய பரிபாலன சபைத்தலைவர் எஸ்.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இறுவட்டு வெளியீட்டு விழாவில் பிரதம அதிதிகளாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.யோகேஸ்வரன், பொன். செல்வராசா, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு, கல்லாறு பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி எம்.எஸ்.பைசுல் அமீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். சென்றுள்ள சிங்கள மக்கள் தொடர்பில் எதனையும் செய்ய முடியாது:அமைச்சர் மில்ரோய்

தம்மை யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றக்கோரி சுமார் 300 சிங்கள மக்கள் உரிய தரப்பினருக்கு எந்த அறிவிப்பையும் செய்யாமலும் எந்தவிதமான முறைமையையும் பின்பற்றாமலும் யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ளனர்.

இவ்வாறு எந்தவிதமான நடைமுறையையும் பின்பற்றாமல் அவர்கள் அங்கு சென்றால் எதனையும் செய்ய முடியாது என்று மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மீள்குடியேற்ற அமைச்சர் என்ற வகையில் என்னிடமோ அமைச்சின் அதிகாரிகளிடமோ அல்லது வடக்கு மாகாண ஆளுநரிடமோ கலந்துரையாடவில்லை. எனவே அவர்கள் வந்து என்னுடன் அல்லது வடக்கு மாகாண ஆளுநரிடம் பேசவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தம்மை யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றக்கோரி சுமார் 300 சிங்கள மக்கள் யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ளமை குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அமைச்சர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது:

மீள்குடியேற்ற அமைச்சர் என்ற வகையில் என்னிடமோ அல்லது அமைச்சின் அதிகாரிகளிடமோ அல்லது வடக்கு மாகாண ஆளுநரிடமோ கலந்தாலோசிக்காமலும் அறிவிக்காமலுமே சுமார் 300 சிங்கள மக்கள் தம்மை யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றக்கோரி நிற்கின்றனர்.

இவ்வாறு எவ்விதமான நடைமுறையையும் பின்பற்றாமல் யாழ்ப்பாண ரயில் நிலையத்துக்கு போனால் நான் என்ன செய்ய முடியும்? எதற்கும் ஒரு நடைமுறை இருக்கின்றது. அதனை பின்பற்றவேண்டும்.

என்னிடம் அல்லது அமைச்சு அதிகாரிகளிடம் அல்லது வடக்கு மாகாண ஆளுநரிடம் அறிவித்திருந்தால் நாங்கள் அதற்குரிய நடவடிக்கைளை எடுத்திருப்போம். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவகர்கள், ஆகியோரை தொடர்புகொண்டு விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்திருக்கலாம். அதனைவிடுத்து திடீரென அங்கு சென்றால் மீள்குடியேற்ற அமைச்சினால் என்ன செய்ய முடியும்? எனவே அவர்கள் என்னுடனோ அல்லது வடக்கு மாகாண ஆளுநருடனோ பேச்சு நடத்தவேண்டும். அதன் பின்னர் அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க முடியும்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா விடுதலை : கட்டுகஸ்தோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம்

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி கண்டி கட்டுகஸ்தோட்டை நகரில் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.

கண்டி மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் கட்சியின் ஹரிஸ்பத்துவ கிளையினர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு எம்.எச்.ஏ.ஹலீம், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஷாபி, எஸ்.எம்.பீ.டி. அல்விஸ், பூஜாப்பிட்டிய பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எம்.கலீல் உட்படப் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டுமென்ற பல்வேறு விதமான பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த ஆர்ப்பாட்டத்தினால் கண்டி மாத்தளை வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பில் இன்று கறுப்புப் பட்டி போராட்டமும் கண்டனக் கூட்டமும்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் சிறைத் தண்டனை மற்றும் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு ஆகியவற்றுக்கு எதிராக தலைநகரில் இன்று பாரிய கறுப்புப்பட்டி போராட்டத்தை நடத்தவிருப்பதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது. கொழும்பு ஹைட்பார்க் மை தானத்தில் இன்று மாலை 3.30க்கு ஆரம்பமாகும் இந்த கறுப்புப்பட்டி போராட்டம் மற்றும் கண்டனக் கூட்டத்தில் கறுப்பு நிற உடையில் கலந்து கொள்ளுமாறு சகல ஜனநாயக விரும்பிகளுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

சரத் பொன்சேகாவுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பில் இந்த நாடே அறிந்துள்ளது. பல வழிகளிலும் பழிவாங்கப்பட்டுள்ள யுத்த வீரரான சரத் பொன்சேகாவை விடுதலை செய்து கொள்வதும் அவரது உரிமைகளைப் பாதுகாகத்துக் கொடுக்க வேண்டியதும் மக்களின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

பொன்சேகாவுக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நாடு முழுவதிலும் நாம் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம். ஆனாலும் எமது போராட்டங்களையும் மக்கள் சக்தியையும் அரசாங்கம் தடுப்பதற்கு சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இடையூறுகளை ஏற்படுத்தி அடக்கி ஒடுக்கப் பார்க்கின்றது. அரசாங்கத்தின் எந்தவிதமான அழுத்தங்களுக்கும் ஜே.வி.பி. அடிபணிந்து போய் விடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நாடு முழுவதிலும் நாம் பொன்சேகாவுக்கு ஆதரவாக மக்கள் மகஜரை தயாரித்து வருகின்றோம். இதுவரையில் அந்த மகஜரில் 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும் எதிர்க்கட்சிகளும் மாற்றுத்தரப்புக்களும் பொன்சேகாவுக்காக குரல் கொடுத்து வருவதையும் அவரது சிறைத் தண்டனைக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருவதையும் காண்கின்றோம். இது உண்மையில் வரவேற்கக்கூடியது.

இருப்பினும் சில கட்சிகள் பொன்சேகாவையும் பாதுகாத்து ஜனாதிபதியையும் பாதுகாக்க முயற்சிக்கின்றன. இது இயலாத காரியமாகும். எம்மைப் பொறுத்தவரையில் பொன்சேகா மட்டுமே பாதுகாக்கப்பட வேண்டும். அடுத்ததாக மக்கள் சக்தியுடன் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அந்த வகையில் இன்று திங்கட்கிழமை மாலை 3.30க்கு கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் பொன்சேகாவுக்கு ஆதரவாகவும் அரசாங்கத்தின் மோசமான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கறுப்பு போராட்டம் மற்றும் கண்டனக் கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். இந்த கறுப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்க முன்வருமாறு சகல ஜனநாயக விரும்பிகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சூப்பர் ஸ்டாரின் குப்பை படம்! பிரபல வில்லன் நடிகர் தாக்கு!!







கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை. சூப்பர் ஸ்டார்கள் நடிக்கும் குப்பை படங்களால் மக்களுக்கு என்ன பயன்? என்று பிரபல வில்லன் நடிகர் திலகன் கடுமையாக சாடியிருக்கிறார். தமிழ் மற்றும் மலையாள படங்களில் வில்லன் கேரக்டரில் கலக்கிய திலகன் சமீப காலமாக சினிமாவில் நடிக்கவில்லை. அவரை நடிக்க விடாமல் மலையாள நடிகர் சங்கம் மற்றும் முன்னணி நடிகர்கள் இடையூறு செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி :

நான் வேஷம் கட்டிப் பல நாளாயிடுச்சு. எனக்குள்ள இருக்கும் கலைஞன் பெருங்குரல் எடுத்து அழுறான். ஆனால் மலையாளப் படவுலகை ஆட்டி வைக்கிற மாஃபியாக்கள் என்னை நடிக்கவிடாமல் தடுக்கிறாங்க. இதே நிலை தொடர்ந்தா தூக்கில் தொங்குவதுதான் என் இறுதி முடிவு என அறிவித்துவிட்டேன். அப்படி நான் தொங்கினால் அதுதான் ஆசையா சூப்பர் ஸ்டார்களே? உண்மையான கலைஞன் என்றால் உணர்ச்சி வசப்படணும்.

அடித்தால் திருப்பி அடிப்பேன். காரணம், என் நாடி நரம்பெல்லாம் உணர்ச்சிகள்தான் பொங்கி வழியுது. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்டார்ட் என்ற சத்தத்தைக் கேட்டதும் இந்தத் திலகன் மறைந்து அந்த கேரக்டர்தான் கேமரா முன்னாடி நிற்கும். ஒரே டேக்கில் அந்த ஸீனை அடித்து நொறுக்கிட்டுப் போய்க்கொண்டே இருப்பேன். அதைப் பார்த்துக் கைதட்டிய டைரக்டர்ஸ் எல்லாம் இன்னைக்கு என்னை ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்.

விநயனும் ஒரு விஷய ஞானமுள்ள இயக்குநர்தானே? அவரது படத்தில் நடித்ததற்காகத் தடை போடுவது என்ன நியாயம்? கலையை வளர்க்கத்தான் சங்கம் வேண்டுமே தவிர, கலைஞனை அழிப்பதற்கு இல்லை. என் மீது வந்து விழும் கல்லுக்கு எல்லாம் சூத்ரதாரி மம்முட்டி என்று எனக்குத் தெரியும். அவருக்கும் மோகன்லாலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இப்போது சொல்கிறேன்... கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை.

மம்முட்டி அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார். மலையாளப் படவுலகம் இன்று சிலரது கைக்குள் சிக்கிச் சின்னாபின்னாமாகிக் கொண்டு இருக்கிறது. அவர்கள் எல்லாம் உருப்படாத கதைகளில் நடிக்கிறார்கள். மற்ற மொழி சினிமாக்களை காப்பியடித்து, காப்பியடித்து மலையாள சினிமாவின் உன்னதத்தைக் கெடுத்துவிட்டார்கள்.

ஒருவர் திரும்பினால் பத்து கார்கள் பறக்கின்றன. இன்னொருவர் கண் மூடிய மாத்திரத்தில் ஹீரோயினுடன் வெளிநாட்டில் குத்தாட்டம் போடுகிறார். இந்தப் படங்கள் மூலம் என்ன சொல்லப் போகிறார்கள். கேரளத்தின் கலாசாரத்தைத் திரையில் பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. இந்தப் படங்கள் எல்லாம் கேரளவாசிகளுக்கு தேவையில்லாத குப்பைகள்தான்.

கேரள சினிமாக் கலையை அழிப்பவர்களைத்தான் அப்படித் தாக்குகிறேன். அது யாராக இருந்தால் எனக்கென்ன? என் நடிப்பை இந்த நாடறியும். இடையில் எனக்கு உடல் நலம் குறைந்தது உண்மைதான். அதற்காக என்னை புக் பண்ண வரும் டைரக்டர்களிடம், திலகனை புக் செய்தால் கூடவே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வேண்டும். எதற்கு பணத்தை வேஸ்ட் பண்றீங்க? என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். என்னை "அம்மாவில் இருந்தும் தூக்கி எறிந்து விட்டார்கள். சீரியலில் நடிப்பதையும் தடுத்து நிறுத்தி விட்டார்கள்.

நாட்டின் சிறந்த கலைஞன் கமல்ஹாசனுக்கு கேரள அரசு விழா எடுக்கிறது. அதில் கலந்து கொள்ள கூடாது என அறிக்கைவிடுகிறார்கள். அப்போது இந்த மலையாள சினிமாவின் பிரம்மாக்கள் எல்லாம் எங்கே போனார்கள். நடிப்பதற்கான எனது வாய்ப்புகள் மறுக்கப்படுவது குறித்து கேரள கலாசாரத் துறை அமைச்சர் பேபியிடம் பலமுறை புகார் சொல்லிவிட்டேன்.

ஆனால், அவர் தொடர்ந்து சூப்பர் ஸ்டார்களுக்குச் சாதகமாகவே நடக்கிறாரே தவிர, உரிய நடவடிக்கை இல்லை. கொஞ்ச காலம் பொறுப்பேன். எல்லாத் திசைகளும் இப்படி சூனியமாகி விட்டால், பேபியின் வீட்டு முன் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு திலகன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்கு 9000 கோடி ரூபா செலவீடு

அம்பாறை மாவட்டத்தின் கடந்த ஐந்து வருட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 9,000 கோடி ரூபாவை செலவிட்டுள்ளது.

மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்றைய தினம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற போதே இச் செலவினங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டன.

இந்நிதியின் மூலம் அம்பாறை மாவட்டத்தில் விவசாயம், நீர்ப்பாசனம், வீதி அபிவிருத்தி, கல்வி, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் துறைகளில் 53,000 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்களான பஷில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த, ஏ.எல்.எம். அதாஉல்லா, ரிசாட் பதியுதீன், பி. தயாரட்ன, மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நேற்றைய இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்டச் செயலாளர் சுனில் கன்னங்கர அபிவிருத்தி தொடர்பான விபரங்களை வெளியிட்டார்.

அம்பாறை மாவட்டத்தில் 20 பிரதேச செயலகப் பிரிவுகளும் 503 கிராம சேவகர் பிரிவுகளும் உள்ளன. இந்த சகல பகுதிகளையும் உள்ளடக்கியதாக 2016ம் ஆண்டை இலக்காகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஐந்து வருட அபிவிருத்திச் செயற்திட்டத்தின் கீழ் விவசாயத்திற்காக பெருமளவு நிதி செலவிடப்பட்டுள்ளது. 2936 கோடி ரூபா நிதி இதற்கென செலவிடப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் 34,486 விவசாயிகள் நன்மையடைந்துள்ளனர்.

2005ம் ஆண்டில் தேசிய நெல் உற்பத்தியில் 15.38 வீதத்தை அம்பாறை மாவட்டம் பெற்றுள்ளதுடன் 2010ம் ஆண்டில் அது 22.70 வீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இக்காலகட்டத்தில் 2890 கோடி ரூபாவை அரசாங்கம் உரமானியத்திற்காக செலவிட்டுள்ளது.

இதேவேளை, அம்பாறை மாவட்ட மக்கள் முகம்கொடுத்த குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் 2552 கோடி ரூபா செலவில் 600 க்கும் மேற்பட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் மாவட்டத்தின் சமுர்த்தி அபி விருத்தி, கிராமிய பாதைகள் திட்டத்திற்கென தேவைப்படுகின்ற 120 மில்லியன் ரூபாயை உடனடியாகப் பெற்றுக்கொடுக்க அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் இன்று உயர்மட்ட மாநாடு; ஆளுநர் தலைமை; அரச அதிபர்கள் பங்கேற்பு

வட மாகாண அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் விசேட மாநாடு இன்று திங்கட்கிழமை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

வடக்கில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாகவும் இந்த மாநாட்டின் போது விரிவாக ஆராயப்பட உள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தினகரனுக்குத் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், கிளிநொச்சி மாவ ட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகம், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி. எம். எஸ். சார்ள்ஸ், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நிக்கலஸ்பிள்ளை ஆகியோர் மாவட்டங்களில் முன்னெடுக்கப் பட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பான பூரண அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

அ’புரம் - வவுனியா ரயில் சேவை வழமைக்கு திரும்பியது






ரயில் பாதை திருத்த வேலைகள் காரணமாக கடந்த இரு தினங்களாக தடைப்பட்டிருந்த அநுராதபுரம் வவுனியா ரயில் சேவைகள் நேற்றிரவு முதல் வழமைக்குத் திரும்புயுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

அநுராதபுரம்- வவுனியா பிரதான ரயில் பாதையில் சாவியபுரம் மிஹிந்தலை பகுதிகளில் மேற்படி பாதை சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கென கடந்த 8ம் திகதி முதல் அநுராதபுரம் –வவுனியாவுக்கிடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. இதற்கிணங்க கொழும்பு வவுனியா ரயில் சேவைகள் அநுராதபுரம் வரை மட்டுப்படுத்தப் பட்டிருந்தன.

ரயில் பாதை திருத்த நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து நேற்றைய தினம் இரவு ஏழு மணியுடன் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பிய தாக ரயில்வே பிரதி பொது முகாமை யாளர் விஜய சமரசிங்க தெரி வித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.கவும் எல்.ரீ.ரீ.ஈ.யுமே யுத்தநிறுத்த முறிவுக்கு பொறுப்பு ஓட்டமாவடியில் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம்


யுத்த நிறுத்த உடன்படிக்கை முறிவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியும், எல்.ரீ.ரீ.ஈ.யுமே பொறுப்பு என ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் நேற்று (10.10.2010) நடைபெற்ற கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு அமர்வில் சாட்சியமளித்த சுயாதீன சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் வை.எல். மன்சூர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது:

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும் எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாத இயக்கமும் செய்து கொண்ட பிழையான ஒப்பந்தமும் அந்த ஒப்பந்தத்தில் புலிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சுதந்திரமும் அப்பாவிப் பொது மக்களையும் உயர் இராணுவ அதிகாரிகளையும் மதகுருமார், புத்தி ஜீவிகளையும் கொன்று குவிப்பதற்கும் கப்பம் அறவிடுவதற்கும் பொது மக்களின் சொத்துக்களை சூறையாடுவதற்கும் உறுதுணையாக இருந்தது.

வாழைச்சேனைக்கு சமையல் வேலைக்காகச் சென்றோர் எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டனர். வாழைச்சேனை நகரில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் பாடசாலை எரிக்கப்பட்டன. இத்தனைக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருக்கும் போதே இவை நடந்தன.

நாட்டின் பாதுகாப்புக்கு விரோதமானதும் முஸ்லிம் சமூகத் தின் புறக்கணிப்புக்கு ஏதுவானது மாக ரணில் விக்கிரமசிங்க தலை மையிலான அரசாங்கத்தினதும் எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளினதும் உடன்படிக்கையும், செயற்பாடுக ளும் அடக்கு முறைகளும் இருந் தன. யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினரின் முறையற்ற செயற்பாடு களும் போர் நிறுத்த உடன்படிக்கை செயழிலப்புக்கு காரணமாக அமைந்தன.

கல்குடாத் தொகுதி முஸ்லிம்களுக் கும், தமிழர்களுக்கும் இடையில் பல கசப்பான சம்பவங்கள் ஏற்படு வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியே காரணமாக இருந்தது.”

இவ்வாறு அவர் சாட்சிய மளித்தார்.

கடத்தப்பட்டு காணாமல் போனோர் கடத்தப்பட்டு சிறையி லுள்ளோர் மற்றும் காணிப் பிரச்சினை தொடர் பான அறுநூறு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் முப்பது பேரின் நேரடி வாக்கு மூலங்களும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.

கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்களான எம். பி. பரணகம, கரு கஹவத்த, ரொஹான் பெரேரா, சீ. சண்முகம், மனோகரி இராமநாதன் ஆகியோர் சாட்சியங்களைப் பதிவு செய்தனர்.

இதன்போது கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோறளைப் பற்று மத்திவாழைச்சேனை, கோற ளைப்பற்று வாழைச்சேனை, கோற ளைப்பற்று வடக்கு வாகரை போன்ற பிரதேசங்களில் இருந்து பொது மக்கள் சாட்சியங்களை அளித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் பலகோடி ரூபா செலவில் முதலீடு; ஆறு முன்னணி நிறுவனங்கள் முன்வருகை ஆளுநர் சந்திரசிறி வர்த்தக பிரதிநிதிகளுடன் சந்தித்துப் பேச்சு


வட மாகாணத்தில் பல கோடி ரூபா செலவில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள ஆறு முன்னணி தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறிக்கும், முன்னணி தொழிற்சாலைகளின் முக்கிய பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது வட மாகாணத்தில் முதலீடு செய்வது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு, இணக்கம் காணப்பட்டுள்ளது.

வட பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முடிவுற்று வரும் நிலையில் கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டும் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையிலுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலை பிரதேசத்தில் சுமார் 100 கோடி ரூபா செலவில் ஒமேகா லைன் என்ற நிறுவனம் பாரிய ஆடைத் தொழிற்சாலை ஒன்றை நிறுவ திட்டமிட்டுள்ளது.

இதற்காக வட மாகாண சபை 10 ஏக்கர் நிலப்பரப்பு காணியை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அடுத்த மாதமளவில் இந்த தொழிற்சாலையை நிறுவு வதற்கான நடவடிக்கைகள் முன் னெடுக்கப்படவுள்ளன என்றும் சுட்டிக் காட்டினார்.

ஹைதராமணி நிறுவனம் வவுனி யாவின் நெலுங்குளத்திலும், மாஸ் ஹோல்டிங் நிறுவனம் ஓமந்தை யிலும், ஒரிட் அபரல் நிறுவனம் செட்டிக்குளத்திலும், பிரன்டிக்ஸ் நிறுவனம் வவுனியா அல்லது மன்னாரிலும் தொழிற்சாலைகளை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளன.

ட்ரைஸ்டார் நிறுவனம் கிளி நொச்சி நகரில் பாரிய ஆடைத் தொழிற்சாலை ஒன்றை நிறுவு வதற்காக அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகளை ஆரம்பித் துள்ளது என்றும் ஆளுநர் குறிப் பிட்டார். வட மாகாண அபிவிருத் திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் பொருளாதார அபி விருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்க மைய இந்த நடவடிக்கை முன்னெ டுக்கப்பட்டுள்ளது.

இலங்கை முதலீட்டுச் சபை ஊடாக மேற்படி தொழிற்சாலைகள் தமது செயற்பாடுகளை முன்னெடுக் கவுள்ளதாக தெரிவித்த ஆளுநர் இதற்குத் தேவையான சகல ஒத்து ழைப்புக்களையும் வட மாகாண சபை மேற்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இதுபோன்ற தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதன் மூலம் வட மாகாணத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்றும் இவர்களுக்குத் தேவையான புதிய தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் ஆளுநர் சுட்டிக் காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதிகளின் பாரியார் மாநாடு கோலாலம்பூரில் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ பயணம்


மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள ஜனாதிபதிகளின் பாரியார் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல் பெண்மணி திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று மலேசியா பயணமானார்.

நேற்றுக்காலை 7.00 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான விசேட விமானமொன்றில் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ பயணமானதுடன் முற்பகல் 11 மணியளவில் அவர் மலேசியாவின் கோலாலம்பூர்

விமான நிலையத்தைச் சென்றடைந்ததாக ஜனாதிபதி செயலகம் தெரிவித் தது.

மலேசியாவில் நடைபெறும் ஜனாதி பதிகளின் பாரியார்கள் மாநாட்டுக்கு மலேசியப் பிரதமர் மொகமட் நஜீட் நுன் அப்துல் ரஸாக் தலைமை தாங்கவுள்ளார்.

இம்மாநாட்டில் 22 நாடுகளைச் சேர்ந்த ஜனாதிபதிகளின் பாரியார்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கையிலிருந்து முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவுடன் மகளிர் விவகார சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, பாராளுமன்ற உறுப்பினர் கமலா ரணதுங்க ஆகியோரும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள வுள்ளனர்.

‘இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்’ எனும் தொனிப் பொருளில் மேற்படி மாநாடு மலேசியாவில் நடைபெறவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இரண்டு இலட்சத்து 85 ஆயிரம் இடங்களில் ஒரே நாளில் டெங்கு நுளம்பு சோதனை




4,464 பேர் மீது வழக்கு: 11,002 எச்சரிக்கைகள்

டெங்கு ஒழிப்பு வாரத்தின் மூன்றாவது நாளான நேற்று முன்தினம் (09) டெங்கு நுளம்புகள் பரவக் கூடிய அனைத்து இடங்கள், வீடுகள், மற்றும் மக்கள் வசிக்கும் இடங்கள் என 2 இலட்சத்து 85 ஆயிரத்து 918 இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதில் 67 ஆயிரத்து 798 இடங்கள் நுளம்புகள் பரவக் கூடிய இடங்களாக இனங்காணப்பட்டன.

இதில் 11 ஆயிரத்து 02 இடங்களில் டெங்கு நுளம்புகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களின் உரிமையாளர்கள் மீது கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதில் 4464 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகமான இடங்கள் வட மேல் மாகாணம், சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களிலேயே இனங்காணப்பட்டுள்ளன.

வடமேல் மாகாணத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 68 ஆயிரத்து 525 இடங்களில் 15 ஆயிரத்து 588 இடங்கள் டெங்கு நுளம்புகள் பரவக் கூடிய இடங்களாக இனங்காணப்பட்டுள்ளன. 2947 இடங்களில் டெங்கு நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் 872 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 17 ஆயிரத்து 655 இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 4748 இடங்கள் டெங்கு பரவக் கூடிய இடங்களாக இனங்காணப்பட்டுள்ளன. 1138 இடங்களில் டெங்கு நுளம்புகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் 725 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

வட மாகாணத்தில் 17 ஆயிரத்து 365 இடங்கள் பரிசோதனைக்குள்ளாகின. இதில் 2391 இடங்களில் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களாக இனங்காணப்பட்டன.

988 இடங்களில் டெங்கு நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்ட அதேவேளை அவ்வாறான இடங்களின் உரிமையாளர் களான 102 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. டெங்கு ஒழிப்பு வாரத்தின் நான்காவது தினமான நேற்று (10) நாட்டின் அனைத்து சுடுகாடுகள் உள்ளிட்ட பொது இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...