2 ஜூன், 2010

கிளிநொச்சியில் தேர்தல் அலுவலகம் திறப்பு

கிளிநொச்சியில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தேர்தல் செயலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதித் தேர்தல் ஆணையாளர் தேஷபிரிய மற்றும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் தேர்தல் செயலகத்தைத் திறந்து வைத்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் பதிவுகளை மக்கள் இனிமேல் அங்கேயே மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

அமைச்சர பசில் தலைமையிலான குழு முல்லைத்தீவு விஜயம்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் றாஜபக்ச தலைமையிலான குழுவொன்று இன்றைய தினம் முல்லைத்தீவுக்குச் சென்றுள்ளது.

முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மீள்குடியேற்றப் பணிகளைப் பார்வையிடுவதும் அங்கு மேற்கொள்ளப்பட உள்ள அபிவிருத்திப் பணிகளை மேற் பார்வையிடுவதும் இந்த விஜயத்தின் நோக்கம் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
மேலும் இங்கே தொடர்க...

புத்தளம் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் இளஞர்கள் தொடர்ந்து தடுப்புக் காவலில்

புத்தளம் பிரதேசத்தில் நேற்றிரவு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் இளஞர்கள் நீதிமன்றப் பணிப்பின் கீழ் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வங்கிக் கொள்ளையில் ஈடுபட முற்பட்டார்கள் என்ற சந்தேசகத்தில் புத்தளம் பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்டனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் நரக்கலி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை புத்தளம் வந்த தாம் இருவரும் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையிலேயே வங்கிக்கு அருகாமையில் நின்றதாக வாக்குமூலம் அளித்திருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்திருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

தடுத்து வைக்கப்பட்டுள்ள துவாரகாவை விடுவிக்கக் கோரி மனு

பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி இராசையா துவாரகாவை விடுதலைச் செய்யக்கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று பிற்பகல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவி துவாரகாவின் பெற்றோர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகளை நேற்று நன்பகல் பார்வையிட்ட பெற்றோர் அதனைத் தொடர்ந்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் மனுவொன்றினையும் தாக்கல் செய்துள்ளனர்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரத்னவினால் இதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு மனுவைத் தாக்கல் செய்ய வந்த துவாரகாவின் பெற்றோர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் தமது பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தனது பிள்ளை சிறையில் உரிய முறையில் நடத்தப்படுவதில்லை எனவும் குறிப்பிட்டனர்.

தொடர்ந்தும் கண்ணீர் மல்க கருத்து தெரிவித்த பெற்றோர் நிலைமை இப்படியே சென்றால் தனது பிள்ளை மரணித்துவிடும் நிலை ஏற்படும் எனவும் ஆகையால் தயவு செய்து அவரைக் காப்பற்றி விடுதலைப் பெற உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.

அதுமாத்திரமன்றி கிளிநொச்சியில் பிறந்த தனது மகள் கிளிநொச்சியிலேயே வளர்ந்து பாடசாலையில் விளையாட்டு மற்றும் கல்வி என்பவற்றில் சிறப்பு சித்தி பெற்றதாகவும் இதனால் அன்று கிளிநொச்சியில் தலைவராக திகழ்ந்த வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் தனது மகள் சான்றிதழ் மற்றும் பதக்கத்தையும் பெற்றதாகவும் குறிப்பிட்டார்.

இவ்வாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கையால் சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்றது ஓர் குற்றமா? என கேள்வி எழுப்பிய பெற்றோர், அப்பகுதியின் தலைவர் என்ற ரீதியில் யார் பதக்கம் மற்றும் சான்றிதழ்களைக் கொடுத்திருந்தாலும் வாங்கிக்கொள்ள வேண்டியது தமது கடமை எனவும் சுட்டிக்காட்டினர்.

இந்த ஒரு காரணத்தினால் தனது மகள் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு மிகவும் கஷ்டமான நிலையில் சிறையில் தமது காலத்தைக் கழித்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.

இதனால் அவரின் கல்வியையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அவர் குற்றமற்றவர் என்ற ரீதியில் விடுதலைச் செய்யப்படவேண்டும் எனவும் துவராகாவின் பெற்றோர் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பு-கட்டுநாயக்கா சொகுசு ரயில் : வெளிநாட்டவர் ஆர்வம்

கட்டுநாயக்க முதல் கொழும்புவரை ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய சொகுசு ரயில் சேவையில் வெளிநாட்டவர்கள் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டிவருவதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார்.

சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா நாளை ஆரம்பமாகவுள்ளது. அதில் பங்கேற்பதற்காக ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள் இலங்கை வந்தவண்ணம் உள்ளனர். இவர்களில் பலர் தாம் புதிய ரயிலில் பயணிக்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகளைக் கோரியுள்ளனர்.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கென விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த ரயிலில் மேலதிக வசதிகளை வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக போக்குவரத்துச் சபையின் திட்டமிடல் பிரிவின் பொறுப்பாளர் சுமணசிறி எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மலேஷிவாவில் அகதிகள் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

மலேஷியாவில் கடந்த எட்டு தினங்களாக இலங்கைத் தமிழ் அகதிகள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதம் நேற்று செவ்வாய்க்கிழமை மலேஷிய நேரப்படி 2.00 மணிக்குக் கைவிடப்பட்டது.

மலேஷிய பிரதமர் அலுவலகம் அவர்களது கோரிக்கையைப் பரிசீலிப்பதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்தே அவர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி 6 பெண்கள் 8 குழந்தைகள் உட்பட 75 இலங்கையர் தங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் நாட்டுக்கு புறப்பட்டனர்.

அவர்களின் படகு பழுதடைந்ததால் நடுக்கடலித் தத்தளித்தனர் இந்நிலையில் மலேஷிய படையினர் அவர்களை கரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அகதிகள் மலேஷிய பினாங்கு கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே இலங்கை அகதிகள் தம்மை விடுதலை செய்ய வேண்டும் அல்லது அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் நாடொன்றுக்கு அனுப்பிவைக்க வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர் . இதனை யடுத்து உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்றும் அல்லது அனைவரும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் எனவும் சிறை அதிகாரிகளினால் எச்சரிக்கப்பட்டனர்.

இருந்த போதிலும் உண்ணாவிரதிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. இதனையடுத்து மலேஷிய பிரதமர் அலுவலகத்துக்கு தொலைநகல் மூலம் அகதிகளின் நிலை தெளிவுபடுத்தப்பட்டதுடன் மலேஷிய ஆணையாளர் டத்தோ அப்துல் ரகுமானை மாற்று செயலணி அமைப்பின் உறுப்பினரான கலைவாணர் சந்தித்து உரையாடினார்.

இதனைத் தொடர்ந்து, பிரதமரின் அந்தரங்கச் செயலாளரிடமும் அகதிகளான மக்களின் துயர நிலை குறித்து அவர் எடுத்துக் கூறினார். இறுதியில் அகதிகளான மக்களின் உயிர் காக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது, கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

நடிகர் அமிதாப்பச்சன் கலந்துகொள்ள மாட்டார்

பல வாரங்களாக நிலவிய ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல பொலிவூட் சூப்பர் ஸ்டாரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய கதாநாயகனுமான அமிதாப் பச்சன் கொழும்பில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளமாட்டார் என்று தெரிவித்துள்ளக்ஷிர் என இந்திய என்.டி.ரி.வி. தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

பச்சனை இலக்கு வைத்து அவரது மும்பாய் இல்லத்திற்கு வெளியே கடந்த மாதம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ் குழுக்கள், கொழும்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டாமென அவரிடம் கேட்டுக் கொண்டன. இதனையடுத்து, நாம் அனைவரது உணர்வுகளையும் மதித்து நடப்பதாக பச்சன் தெரிவித்திருந்தார். இலங்கை 30 வருடகால சிவில் யுத்தத்திலிருந்து மீண்டு நிம்மதிப் பெருமூச்சு விடுவதை சித்திரிக்குமென கருதப்பட்ட 2010ஆம் வருட இந்திய சர்வதேச திரைப்பட விழாவை நடத்துவதற்கென தெரிவு செய்யப்பட்ட இடம் குறித்து தென்னிந்திய குழுக்கள் சில அதிருப்தி தெரிவித்ததை அடுத்து விழா கேள்விக்குரிய விடயமாக மாறிவருகிறது. தமிழ் திரைப்பட உலகின் பிரபலஸ்தர்களான ரஜினிகாந்த், கமலஹாஸன், விஜய், அஜித், சூர்யா ஆகியோர் இந்திய திரைப்பட விழாவில் எவ்வகையிலும் சம்பந்தப்பட மறுப்பு தெரிவித்த தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் விழா நடத்தப்படுவது குறித்து அதிருப்தி கொண்டனர்.

அநேகமான நட்சத்திரங்கள் ஏற்கனவே விழாவில் கலந்துகொள்ள முடியாமை பற்றி அறிவித்துவிட்டனர். ஷாருக்கான், அர்ஜுன் ரம்பால் விழா ஏற்பாட்டாளர்களுக்கு நழுவல் பதில்களை அளித்து வந்தனர். இந்திய, இலங்கை கிரிக்கட் மற்றும் திரை நட்சத்திரங்கள் பங்கு பற்றும் தருமசாதன நிதிக்கென ஒழுங்கு செய்யப்பட்ட கிரிக்கட் போட்டியில் கலந்துகொள்ளும் பொலிவூட் அணியின் தலைவராக விளையாட இருந்த ஷாருக்கானுக்கு பதிலாக தற்போது ஹிர்திக் விளையாட இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோரும் வேறுபணிகளில் ஈடுபட்டிருப்பதாக கூறி விழாவை தவிர்த்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்க் கூட்டமைப்புடன் விரைவில் பேச்சுவார்த்தை-அரசாங்கம் தகவல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தனுடன் அண்மையில் உத்தியோகப்பற்றற்றயில் பேச்சுவார்த்தை ஒன்றில் நான் ஈடுபட்டேன். இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் அண்மையில் பேச்சு நடத்தினார் என்று வெளிவந்த தகவல்கள் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் இந்த விடயம் தொடர்பில் மேலும் கூறியதாவது

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்மந்தனை அண்மையில் நான் சந்தித்து பேச்சு நடத்தினேன். இந்த சந்திப்பு உத்தியோகபற்றற்ற முறையில் நடைபெற்றது.

இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. இது ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை என்று கூறலாம். காரணம் அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த நாங்கள் எதிர்பார்க்கின்றோம். முக்கியமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்க்கின்றார். விரைவில் இது தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெறும்.
மேலும் இங்கே தொடர்க...

முல்லை.அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்: தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கும் அழைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்யும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், ஜனாதிபதியின் முக்கிய ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் மாவட்டத்தின் மீள் கட்டுமான, மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஆராயவுள்ளனர்.

இதற்கான கூட்டம் முல்லைத்தீவு கச்சேரியில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திலும் கள விஜயங்களிலும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.

அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் உலக வங்கி அதிகாரிகள் கொண்ட குழுவொன்றும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு முதலில் செல்லும் அமைச்சர் மற்றும் உலக வங்கி அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஒட்டுசுட்டான் மற்றும் வித்தியாபுரம் ஆகிய இடங்களுக்கும் செல்வர்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பிரதேச செயலக மட்ட அதிகாரிகள், கிராமிய மட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருடனான சந்திப்பும் கலந்துரையாடலும் நடைபெறும். இதில் அந்தப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றப் பணிகள் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடி முடிவுகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் அமைச்சர் தலைமையிலான குழுவினர் முல்லைத்தீவு கச்சேரிக்கு விஜயம் செய்து அந்த மாவட்டத்தின் திணைக்களத் தலைவர்கள் அடங்கிய உயர் மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்புக்களிலும் கூட்டங்களிலும் வன்னி மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வார்களா என்பது பற்றிய தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

வாகன இறக்குமதி மீதான தீர்வை 50 சதவீதத்தினால் திடீர் குறைப்பு

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீதான தீர்வை வரியை இலங்கை 50 சதவீதத்தினால் குறைத்துள்ளது.

அத்துடன், நாட்டின் பொருளாதாரம் விருத்தியடைந்ததையும் வாகனங்களுக்கான கிராக்கி அதிகரித்ததையும் அடுத்து அரசாங்கம் சகல பொருட்களினதும் இறக்குமதியில் விதிக்கப்பட்டு வந்த 15 சதவீத மேலதிக வரியை நீக்கியுள்ளதுடன் இலத்திரனியல் பொருட்கள் மீதான தீர்வையையும் குறைத்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வரிக்குறைப்பின்படி, உதாரணமாக, அதன் பெறுமதியில் சுமார் 183 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டுவந்த இந்திய தயாரிப்பான மாருதி கார் ஒன்றுக்கு தற்போது 90 சதவீத வரி மட்டுமே அறவிடப்படும் என்று இலங்கையின் நிதிக் கொள்கை பணிப்பாளர் நாயகம் எஸ்.ஆர். அட்டிகல தெரிவித்தார்.

கடந்த வருடம் உயர் வரிகளுக்கு மத்தியிலும் கார் இறக்குமதிகள் அதிகரித்த நிலையில,“ தற்போது கார் இறக்குமதியால் மேலும் கூடுதல் வருமானத்தை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததோடு வாகனங்களுக்கான கிராக்கியும் சுற்றலா வருமானமும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக அட்டிகல தெரிவித்தார்.

ஏற்கெனவே, சில்லறை வியாபாரத்தை ஊக்குவிப்பதற்காக விசேடமாக வெளிநாட்டவர்களை கவர்வதற்காக கைக்கடிகாரங்கள், கமெராக்கள் ஆகியன மீதான இறக்குமதி வரிகள் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

தொழிற் பயிற்சிகளை முடித்த முன்னாள் போராளிகளுக்குச் சான்றிதழ்

புனர்வாழ்வளிக்கப்பட்ட 120 முன்னாள் போராளிகளுக்கு தச்சுத்தொழில், மேசன், வயரிங், வெல்டிங் போன்ற தொழில்துறைசார் பயிற்சிகள் வழங்கப்பட்டு சான்றிதழ் அளிக்கும் நிகழ்வு இன்று இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இலங்கை வர்த்தக சம்மேளனங்களின் சங்கம் முன்னெடுத்த இந்தத் திட்டத்துக்கான நிதியுதவியை, ஐரோப்பிய ஒன்றியத்தின் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியம் வழங்கியது. அதேவேளை ஒக்ஸ்பாம் நிறுவனம் இந்தத் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

இந்நிகழ்வில் புனர்வாழ்வுக்கான ஆணையாளர்நாயகம் பிறிகேடியர் சுதந்த ரணசிங்க, புனர்வாழ்வு மற்றும் நீதிமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் டியூ. குணசேகர, பிரதி அமைச்சர் விஜித முனி சொய்ஸா, இராணுவ உத்தியோகத்தர்களின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான ஆலோசகர் விலி வன்டென்பெர்க் மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனங்களின் சங்கத் தலைவர் கோசல விக்கிரமநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

பயிற்சிகளை முடித்துக் கொண்டவர்களுக்கு இலங்கை வர்த்தக சம்மேளனங்களின் சங்கம் மற்றும் ஜேர்மன் அரசு அங்கீகரித்த சான்றிதழ் வழங்கப்பட்டது. அத்துடன் வங்கி வைப்பு புத்தகமும் கையளிக்கப்பட்டது. அதேவேளை சிறப்பாக பயிற்சிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கு டூல்ஸ் கிட்டும் வழங்கப்பட்டது. அதேவேளை பயிற்சியை சிறப்பாக பூர்த்தி செய்த இரு மாணவர்களுக்கு விசேட விருதுகள் வழங்கப்பட்டன.

அங்கு உரையாற்றிய அமைச்சர் டியு குணசேகர-

வரலாற்றில் முதல் தடவையாக முன்னாள் போராளிகளும் இராணுவத்தினரும் ஒன்றிணைந்து நாட்டை மாத்திரமல்ல மக்களையும் மீள இணைக்கும் நடவடிக்கையை மேற்கொள்வது வரவேற்கத்தக்க விடயமாகும். புனர்வாழ்வளிப்பது என்பது சவால்மிக்கதும் செலவுமிக்கதுமான விடயமாகும்.

மனிதாபிமான முறைப்படி இவர்களுக்கு புனர்வாழ்வளித்து சமுதாயத்தில் சிறப்பாக வாழ வைக்க வேண்டும் என்பதே எமது குறிக்கோள். சரணடைந்த 10ஆயிரம் பேரில் 2 ஆயிரம் பேரை விடுதலை செய்துள்ளோம் ஏனையோரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம்.

சர்வதேசத்தின் முன் இலங்கை குறித்துத் தப்பான அபிப்பிராயம் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச சமூகம் உண்மைத்தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று நாம் நிரூபித்துள்ளோம். இவ்வாறான செய்திகள் சர்வதேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...