19 மே, 2011

தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினிகாந்த்

சுவாசத்தை மேம்படுத்துவதற்காக நடிகர் ரஜினிகாந்த் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக டாக்டர்கள் குழு தெரிவித்துள்ளது.

சுவாச கோளாறு மற்றும் குடல்நோய் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 13ஆம் திகதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், 18.05.2011 அன்று இரவு அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அவரது உடல்நிலை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர்கள் குழு 18.05.2011 அன்று நள்ளிரவு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

நடிகர் ரஜினிகாந்த் சுவாச கோளாறு மற்றும் குடல்நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த 13ந் தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசத்தை மேம்படுத்துவதற்காக அவர் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.

அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மருத்துவ குழுவினர் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். சிகிச்சையின் காரணமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

போர்க் குற்ற விசாரணைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு ஆதரவை வழங்க வேண்டும்: ச.ம.ச

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை சுயாதீன பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

போர் முடிவடைந்த 10 நாட்களில் அதாவது 2009 ஆம் ஆண்டு மே 27 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம், பிரேரணை ஒன்றை நிறைவேற்றியது. அதில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அமைதி குறித்து வலியுறுத்தப்பட்டது.

எனினும் இரண்டு தரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் அந்த பிரேரணையில் எவ்வித கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை என்று மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டியுள்ளது.

தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு இலங்கையின் இறுதிப் போரின் போது போர்க் குற்றங்கள் இடம்பெற்றிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இதற்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் தனது ஆதரவை வழங்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.

2009 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட படை நடவடிக்கையின்போது சுமார் 3 இலட்சம் மக்கள் முற்றுகையிடப்பட்டனர்.

இதன்போது நடாத்தப்பட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலர் காயங்களுக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் பான் கீ மூனின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் போர்க் குற்றம் நிகழ்ந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச விசாரணை பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று பான் கீ மூனின் நிபுணர் குழு வலியுறுத்தியுள்ளது.

எனவே பான் கீ மூன், இலங்கையின் போர்க் குற்றங்களை விசாரணை செய்ய சர்வதேச பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.அத்துடன் அதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்ஆணைக்குழுவின் ஆதரவையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நிரந்தரமாக மீளக்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் 117,888பேர்: ஐ.நா.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்னும் 117,888 பேர் நிரந்தரமாக குடியேற்றப்படாமலுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த சுமார் 300,000 பேர் செட்டிகுளம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்ததாகவும் இவர்களில் 4981 குடும்பங்களைச் சேர்ந்த 16401 பேர் செட்டிகுளம் முகாமில் தற்போது இருப்பதாகவும் ஐ.நா. அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் தமக்கு முறையான குடியிருப்புகள் இல்லையெனவும் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாக கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த 18589 பேரும் மன்னாரைச் சேர்ந்த 4928 பேரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 94371 பேரும் இன்னும் நிரந்தரமாக மீளக்குடியேற்றப்படாமல் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவின் உதவியுடனேயே பிரபாகரனை தோற்கடித்தோம்

இந்தியாவின் உதவியுடனேயே பிரபாகரனை தோல்வியடையச் செய்தோம். அதேபோன்று ஐ.நா.வின் பக்கச் சார்பான அறிக்கையையும் இந்தியாவின் ஒத்துழைப்புடன் தோல்வியடையச் செய்வோம் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை இந்திய கூட்டறிக்கை இன்றைய காலத்தின் தேவையாகுமென்றும் அமைச்சர் கூறினார். இது தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும் இன நல்லுறவு தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெளிவுபடுத்துகையில்,

இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி 13 ஆவது திருத்தத்தை முன்னெடுத்து தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை முன்னெடுப்பதை உறுதி செய்து கூட்டறிக்கை விடப்பட்டுள்ளமை இன்றைய காலத்தின் தேவையாகும். ஐ.நா. அறிக்கை எமது நாட்டுக்கு எதிராக பக்கச் சார்பாக தயாரிக்கப்பட்டது.

உலகில் எமது நாட்டை தனிமைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது. எனவே இதற்கு பலம் மிக்க எமது அயல்நாடான இந்தியாவின் உதவியை நாடுவதில் எதுவிதமான தவறும் இல்லை. அத்தோடு அவசர காலச் சட்டம் நீக்கம் மனித உரிமைகள் தொடர்பாக விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளமை போன்றவை தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகள் இந்தியாவிற்கு அடிபணிவதாக கருதப்படாது. ஏனெனில் பிரபாகரனை தோல்வியடையச் செய்வதற்கு இந்தியாவே எமக்கு உதவியது. எமது எந்தப் பிரச்சினைக்கும் வேறெந்த நாடுகளைவிட எமது அயல் நாடான இந்தியாவின் உதவியே அவசியமானதாகும். இலங்கையும் இந்தியாவும் இணக்கப்பாட்டு ரீதியில் பிரிக்க முடியாத உறவுகளைக் கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளால் 13 ஆவது திருத்தத்தை முன்னெடுப்பதை தடுக்க முடியாது. 18 ஆவது திருத்தத்திற்கு எனக்குள் விருப்பமில்லை. ஆனால் அரசாங்கத்திற்குள் உள்ளேன். எனவே ஆதரவாக வாக்களித்தேன் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா.வின் யுத்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்கவே இந்தியாவின் உதவியை நாடி நிற்கிறது அரசாங்கம்

ஐ.நா.வின் யுத்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்புவதற்காகவே அரசாங்கம் இந்தியாவின் உதவியை நாடி நிற்கின்றது. இன்று இந்தியாவின் அழுத்தத்தினால் அதிகாரப் பரவலாக்கத்திற்கு அரசாங்கம் இணங்கியுள்ளது. இந்தியாவின் கோரிக்கைக்கு இணங்க அரசாங்கம் விரைவாக அரசியல் தீர்வுக்கு செல்ல வேண்டியது அவசியமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கையில் நீதி நியாயம் இல்லை. எனவே உள்நாட்டு மனித உரிமை விசாரணைகளை சர்வதேச ஏற்றுக்கொள்ளாது. –தமிழ் மக்களுக்கு யுத்தம் இல்லாமல் அரசியல் தீர்வை வழங்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டத்தை தவிடுபொடியாக்கியவர்கள் யுத்தம் செய்து அழிவுகளை ஏற்படுத்தி இந்தியாவின் அழுத்தத்திற்காக இன்று அதிகாரப் பரவலாக்கலை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய அதிகாரத்தை பரவலாக்குவதுடன் அவசரகால சட்டத்தை நீக்கவேண்டும் என்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியிருந்தது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்து இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்தப் பேச்சவார்த்தையை அடுத்து இரு நாடுகளும் கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தன. இந்த அறிக்கையிலேயே இவ்விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

இது குறித்து கருத்து தெரிவித்த போதே ஐ.தே.க. வின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர்.

இவ்விடயம் குறித்து ஐ.தே.க.வின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கையில் இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக்கள் யதார்த்தமானவையாகவே தோன்றுகின்றன. காரணம் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது அவசரகால சட்ட விதிகள் அவசியமில்லை என்றே ஐக்கிய தேசிய கட்சியும் கருதுகின்றது.

எனவே இது தொடர்பில் அரசாங்கம் ஆராயவேண்டியது அவசியமாகும். யுத்தம் முடிவுக்கு வந்து நாடு முழுவதும் அமைதி நிலவுகின்ற நிலையில் அவசரகால சட்ட விதிகளை படிப்படியாக குறைத்து முழுமையாக அகற்றிவிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகவுள்ளது.

இதேவேளை அரசியல் தீர்வு விடயத்திலும் இந்தியாவின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே அமைந்துள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. இந்நிலையில் இதுவரை அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படாமல் உள்ளது.

அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்கவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பத்திலிருந்து வலியுறுத்திவருகின்றது. அதாவது சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு செல்லவேண்டியது அவசியமாகும்.

வேறு நாடுகள் வலியுறுத்துவதற்கு முன்பாக அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படவேண்டியது அவசியமாகும். அதிகாரப்பகிர்வுடன் கூடிய தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு செல்லவேண்டும். இந்தியாவுக்கு தமிழகத்திலிருந்து பாரிய அழுத்தங்கள் உள்ளன என்பதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும். எனவே இந்தியாவின் கருத்துக்கள் யதார்த்தகரமானவையாகவே உள்ளதாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இதேவேளை தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் விடயத்தில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். குற்றம் செய்யப்பட்டிருந்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம். இவ்வாறான விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்பதனை சுட்டிக்காட்டுகின்றோம் என்றார்.

லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.

இலங்கைக்கு இந்தியா விடுத்துள்ள வலியுறுத்தல் குறித்து ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல கருத்து தெரிவிக்கையில்; எமது கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அன்று புலிகளுடன் யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டதோடு 13 ஆவது திருத்தத்திற்கு அமைய அதிகாரப் பரவலாக்களை மேற்கொள்ளவும், திட்டங்களை முன்னெடுத்தார். இதன் மூலம் யுத்தம் இல்லாமல் மக்கள் இழப்புக்கள் இல்லாமல், அழிவுகள் இல்லாமல் சமாதானத்தை ஏற்படுத்துவதே எமது இலக்காக இருந்தது.

ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் அன்று நாம் நாட்டை பிரிக்கப்போவதாக கூச்சலிட்டு சந்திரிக்காவைப் பயன்படுத்தி ஆட்சியை கவிழ்த்தனர். இன்று யுத்தம் செய்து பல உயிர்களை காவுகொடுத்து அழிவுகளை ஏற்படுத்திய பின்னர் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரப் பரவலாக்களை வழங்க ஆட்சியாளர்கள் முன்வந்துள்ளனர். ஐ.நா.வின் யுத்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்புவதற்கு அரசாங்கத்திற்கு வழியில்லை.

இதனாலேயே இந்தியாவின் உதவியை அரசாங்கம் நாடி நிற்கின்றது. இச் சூழ்நிலையில் இந்தியாவும், அரவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரப் பரவலாக்களை வழங்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்டே கூட்டறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்திற்காக நாம் பாராளுமன்றத்திலும், வெளியேயும் குரல் கொடுத்து வந்தோம். ஆனால் அரசாங்கம் எமது கூற்றை வெசிமடுக்க வில்லை. இன்று இந்தியாவின் அழுத்தத்தினால் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான விமல் வீரவன்ச ஐ.நா. செயலாளர் பான் கீ மூனின் உருவப் பொம்மைக்கு தீ வைத்தார்.

தருஷ்மன் பணத்தை வாங்கிக் கொண்டு அறிக்கையை தயாரித்தார் என விமர்சித்தார். ஆனால் இன்று சாமியாரைப் போல் நியூயோர்க் சென்று ஐ.நா. சபையில் தர்ம உபதேசம் செய்துள்ளார். உள்நாட்டில் சிங்கமாக கர்ச்சிக்கும் அரச தரப்பினர் வெளிநாடுகளுக்கு சென்றவுடன் பூனையாக மாறிவிடுகின்றனர் என்று தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...