17 ஜூன், 2011

சேனல் 4 ஆவணப்படம் ஆதார பூர்வமானதுகெலம் மெக்ரே பிபிசியிடம் தெரிவித்தார்."



இலங்கையின் இறுதிப்போரில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சேனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் காட்சிகளின் நம்பகத்தன்மையை உரிய துறைசார் வல்லுனர்களை கொண்டு தாம் உறுதி செய்த பிறகே அவற்றை ஒளிபரப்பியதாக அந்த ஆவணப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கெலம் மெக்ரே பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த ஆவணப்படத்தின் பல படக்காட்சிகள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் சில அமைப்புகளால் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆவணப்படத்தில் இருக்கும் காட்சிகளின் நம்பகத்தன்மையை எப்படி உங்களால் உறுதிப்படுத்த முடியுமென்று கெலம் மெக்ரே அவர்களிடம் பிபிசி சார்பில் கேட்கப்பட்டபோது அவர் மேற்கண்ட பதிலை அளித்தார்.

“இதில் காண்பிக்கப்பட்ட இரண்டு படக்காட்சிகளின் தொகுப்புகள் இலங்கையில் போர் நடைபெற்ற போது எடுக்கப்பட்டவை. அதுவும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எடுக்கப்பட்டவை. அதற்குப்பிறகு வரும் படக்காட்சிகள் இலங்கை இராணுவத்தினர் மொபைல் தொலைபேசியில் எடுக்கப்பட்டவை. அதில் நிராயுதபாணிகளாக இருப்பவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை காட்டும் படங்கள், இறந்தவர்களின் நிர்வாண உடல்கள், கொல்லப்படுவதற்கு முன்னர் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்பது ரீதியிலான காட்சிகள் ஆகியவை இலங்கை இராணுவத்தினரால் எடுக்கப்பட்டவை," என்றார் கெலம் மெக்ரே.

அந்தப் படங்களை தாங்கள் மிகவும் கவனமாக ஆராய்ந்து அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும், அறிவியல் ரீதியாக பல்துறை வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்தபிறகே இதன் நம்பகத்தன்மையை தாங்கள் உறுதி செய்து கொண்டதாகவும் அவர் கூறினார்.

இதை போலியானது என்று கூறுபவர்களுடன் வாதிடுவது கடினமான விடயம் என்று தெரிவித்த அவர், இது போலியானது அல்ல என்று தங்களால் கூற முடியும் என்றும் ஏனென்றால் மிகக்கடுமையான சோதனைகளுக்கு இந்தப் படக்காட்சிகள் உட்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

“இந்த காட்சிகள் எந்த வகையான தொலைபேசியில் எடுக்கப்பட்டன், என்ன தேதியில் இவை எடுக்கபப்பட்டன என்பது குறித்தெல்லாம் எமது தரப்பில் என்னவெல்லாம் சோதனைகளை நடத்தப்பட வேண்டுமோ அதை உரிய வல்லுநர்களை கொண்டு நடத்தி உறுதிப்படுத்திக் கொண்டோம். அந்த வல்லுநர்கள், காயங்களின் தன்மை, துப்பாக்கிச் சூட்டின் தாக்கம் ஆகியவற்றை ஆராய்ந்தார்கள். இவை சுயாதீனமான வல்லுநர்களால் பரிசோதிக்கப்பட்டன. எனவே இவை உண்மையற்றவை என்றோ மோசடி செய்யப்பட்டவை என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. உண்மையாக நடைபெற்ற சம்பவங்களை உண்மைத்தன்மையுடன் நாங்கள் காட்டியுள்ளோம்", என்றார் கெலம் மெக்ரே.

அதேசமயம் இலங்கை அரசாங்கம் இந்த ஆவணப்படத்தில் இருக்கும் சில காட்சிகளை அறிவியல் வல்லுநர்களை கொண்டு ஆய்வு செய்ததாகவும், அவை கோர்வையாக இல்லாமல், படத்தொகுப்பு செய்யப்பட்டு, சில இடங்களில் குரல்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்களே என்று அவரிடம் கேட்கப்பட்டது.

இந்த கேள்விக்கு பதிலளித்த கெலம் மெக்ரே, இலங்கை அரசாங்கம் ஒரு வல்லுநரை பயன்படுத்தியுள்ளதாக அறிவதாகவும், வல்லுநர்களை விமர்சிப்பது தனது பணி கிடையாது என்றும் தெரிவித்தார்.

“இலங்கை அரசு ஒருவரை பயன்படுத்தியுள்ளனர்; ஐ நாவோ நான்கு வல்லுநர்களை பயன்படுத்தியது; நாங்கள் இருவரை பயன்படுத்தியுள்ளோம். இலங்கை அரசு மேற்கோள்காட்டும் ஆஸ்திரேலிய வல்லுநரைத்தவிர இந்தப் படத்தை பார்த்து ஆராய்ந்த அனைத்து வல்லுநர்களும் இவை ஆதாரமானவைதான் என்று கூறியுள்ளனர். எனவே இந்தப் படக்காட்சிகள் நம்பகமானவைதான் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஒரு செய்தியாளர் என்கிற முறையில் ஆராய்ந்து செய்தி வெளியிடுவதுதான் எனது பணி. அந்த ஒரு வல்லுநருக்கும் மற்ற வல்லுநர்களுக்கும் இடையே ஒரு விவாதத்தை ஏற்படுத்துவது எனது பணி இல்லை", என்றார் கெலம் மெக்ரே.
மேலும் இங்கே தொடர்க...

த.தே.கூ கூட்டத்தில் இராணுவத்தினர் தாக்குதல்' நடத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.



யாழ்ப்பாணம் அளவெட்டியில் வியாழனன்று நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சரவணபவன், சிறிதரன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

அந்தப் பகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டம் அங்கிருந்த ஒரு மண்டபத்தில் நடந்துகொண்டிருந்த போது, திடீரென அங்கு வந்த இராணுவத்தினர், கூட்டம் நடத்த அனுமதி இருக்கிறதா என்று கேட்டு அனைவர் மீதும் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதாக பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதலில் அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளும், பல பொதுமக்களுமாக பலர் காயமடைந்ததாகவும், சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து தாம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பை அடைந்த தஞ்சக் கோரிக்கையாளர்கள்


பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் பிரிட்டனில் வாழ்கிறார்கள்
பிரிட்டனில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள் கொழும்பு சென்றடைந்துள்ளதாக பிபிசி கொழும்புச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது இவர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

பிரிட்டனில் இருந்து 26 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக இங்கு பிரிட்டனில் எல்லை கட்டுப்பாட்டு துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பி அனுப்பப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களாவர்.

இவர்களுக்கு இலங்கையில் பாதுகாப்பு இருக்குமா என்பது சந்தேகமே என்று மனித உரிமைக் குழுக்கள் அச்சம் வெளியிட்டுள்ளன.

இலங்கைத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்



ஐக்கிய ராஜ்ஜியத்தில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட ஒரு தொகுதி தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் வியாழன் மாலை இலங்கை கொண்டு செல்லப்படுகின்றனர்.

மனித உரிமை அமைப்புக்கள் இது தொடர்பாக வெளியிட்ட கவலைகளை மீறி
தஞ்சம் நிராகரிக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடைசி நேரம்

இலங்கை அனுப்பப்படுவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட ஒருவரின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு பெற்றதையடுத்து அவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்.

அந்த நபர் தமிழோசையிடம் பேசுகையில், விமானத்தில் 48 ஆண்களும் 6 பெண்களும் இருந்ததாக குறிப்பிட்டார். விமானம் மாலை 6 மணி அளவில் லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் அவர் கூறினார்.

மேலும் தன்னோடு விமானத்தில் ஏற்றப்பட்ட வேறு இரண்டு நபர்களும் இறக்கிவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரம் விமானத்துக்குள் ஏற்றப்பட்ட பெண்கள் கதறி அழுததாகவும் அவர் கூறினார்.

ஆனால் இது குறித்து பிரிட்டிஷ் அரசு தரப்பு விவரங்களை எம்மால் பெறமுடியவில்லை.

எதிர்ப்பு

அகதித் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை மீண்டும் அங்கு அனுப்பப்படக் கூடாது என்று மனித உரிமை அமைப்புக்களோடு பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரும் இணைந்து குரல் எழுப்பியிருந்தாலும், இது தொடர்பில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. காரணம் ஏதும் தெரிவிக்கப்படாமல் ஒரு சிலரை திருப்பி அனுப்பும் நடவடிக்கை இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளது.

இருந்தும் பெரும்பான்மையானோர் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட உள்ளார்கள். இந்த விடயம் தொடர்பாக பிரிட்டிஷ் நாடாளுமன்ற மக்களவையில் ஒரு விவாதத்துக்கு தான் விடுத்த கோரிக்கையை, சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார் என்று மக்களவை உறுப்பினர் சியோபான் மெக் டோனா தமிழோசையிடம் தெரிவித்தார்.

திருப்பி அனுப்பப்படுபவர்களில் ஒரு சிலரின் பாதுகாப்புக்கு பங்கம் வரலாம் என்று, தான் அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தான் இலங்கைக்கு அனுப்பப்படுவதை எதிர்த்து 30 வயதுடைய தமிழ் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக அவரின் வழக்கறிஞர்கள் தமிழோசையிடம் தெரிவித்தனர்.

ஐக்கிய ராஜ்ஜியம் தனது சர்வதேசக் கடமைகளை மிகவும் முக்கியமாக எடுத்துக் கொள்வதாகவும், ஒரு நபர் தனக்கு சர்வதேச பாதுகாப்பு வேண்டும் என்பதை உணர்த்தினால் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று குடியரவுத் துறை அமைச்சர் டேமியன் கிரின் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சென்றால் தமக்கு பாதிப்பு வரும் என்று தமிழோசையிடம் தெரிவித்த சில தஞ்சம் கோரிகள், அங்கு தமக்கு கருணா குழுவால் அச்சம் ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.

ஆனால் அது போன்ற அச்சங்கள் தேவையற்றது என்று அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

மேலும் இங்கே தொடர்க...

ஆட்டோ மீது மரம் முறிந்து விழுந்தது; பெண் ஸ்தலத்தில் பலி


பதியத்தலாவ பகுதியில் பயணித்த ஆட்டோவொன்றின் மீது வீதியோரத்தில் காய்ந்து பட்டுப் போன நிலையில் நின்றிருந்த பாரிய மரமொன்று திடீரென முறிந்து விழுந்ததில் ஆட்டோவில் பயணித்த பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே பலியானார். மேலும் சிறுபிள்ளை யொன்றும், ஆட்டோ சாரதி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மஹியங்கனை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாக பதியத்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்று நண்பகல் 2.30 மணியளவில் பதியத்தலாவ அக்ரியன்கும்புர - கெஹல்உல் பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதியில் முன்பள்ளி விட்டு தனது பிள்ளையை கூட்டிச் சென்ற அப்பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவரே இந்த அனர்த்தத்திற்கும் முகம் கொடுத்துள்ளார்.

குறித்த பெண்ணின் சிறிய குழந்தை மற்றும் ஆட்டோ சாரதி ஆகியோரை பிரதேசவாசிகள் மரத்தை வெட்டி மீட்டு மஹியங்கனை அரசினர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பதியத்தலாவப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

100 இலங்கையர்கள் அமெ. செனட்டர்களுடன் சந்தித்துப் பேச்சு இலங்கையின் உண்மை நிலை குறித்து விளக்கம்

அமெரிக்காவில் வசிக்கும் சுமார் 100 இலங்கையர்கள் அமெரிக்க கொங்கிரஸ் உறுப்பினர்களைச் சந்தித்து இலங்கையின் உண்மை நிலையினை விளக்கியுள்ளதோடு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கப்பாடு குறித்தும் எடுத்துக் கூறினர்.

அமெரிக்க - இலங்கையர் தினமான திங்கட்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் அனுசரணையுடன் அமெரிக்க செனட்டர்களை சந்திக்கும் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் உலகின் மிகப் பயங்கரமான பயங்கரவாத இயக்கமான எல். ரி. ரி. ஈயை அடிபணிய வைத்த பின்னர் நாடு பொருளாதார மற்றும் சமூக விடயங்களில் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி அவர்கள் அமெரிக்க செனட்டர்களுக்கு ஆதாரபூர்வமாக விளக்கி கூறினார்கள். ஒரேநாளில் அமெரிக்க காங்கிரஸின் ஐந்தில் ஒரு உறுப்பினர்களை சந்தித்து விளக்கமளித்தமை ஒரு பாராட்டத்தக்க விடயமாகும்.

இலங்கை விவகாரங்களுக்கு பொறுப்பான அமைப்பின் இணைத்தலைவரான ரொபட் எடர் ஓல்ட் அங்கு கருத்து தெரிவிக்கையில், 2004 சுனாமி அனர்த்தத்தை அடுத்து தாம் இலங்கைக்கு சென்று அங்கு ஏற்பட்ட பேரழிவை அவதானித்ததாக சொன்னார். இன்று இலங்கை துரிதமாக அபிவிருத்தி அடைந்திருப்பதனால் இன்று நான் இலங்கைக்கு சென்றால் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை பார்த்து சில சந்தர்ப்பங்களில் அதிர்ச்சி கூட அடைய முடியுமென்று தெரிவித்தார்.

செனட் சபையின் மத்திய கிழக்கு, தென்கிழக்காசிய உப குழுவுக்கு தலைமை தாங்கும் ஹெண்டர் ஹோல் மற்றும் ஸ்டீவ் சார்பொட் ஆகியோர் புலம்பெயர்ந்து சென்ற இலங்கையருடன் பகற் போசனத்திலும் கலந்து கொண்டனர். கடந்த திங்களன்றே அமெரிக்காவில் முதற்தடவையாக இலங்கை, அமெரிக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கம் யுத்தத்திற்கு பின்னர் மேற்கொண்டுவரும் முன்னேற்ற செயற்பாடுகள் குறித்தும் நிரந்தர சமாதானத்தை நிலை பெறச் செய்வதற்காகவும் நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு விடுக்குமாறு அமெரிக்க செனட்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆசியாவிலுள்ள ஜனநாயக நாடுகளில் இலங்கையுடன் கடந்த 63 வருடங்களாக அமெரிக்கா 1948 ஆம் ஆண்டுமுதல் இராஜதந்திர உறவை வைத்துள்ளது. இவ்விரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகள் 200 வருட காலமாக நீடித்து வருகின்றன. இலங்கையில் சர்வதேச அபிவிருத்திக்கான அமைப்பு பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவியை வழங்கி வருகின்றது. யுத்தத்திற்கு பின்னர் நாட்டின் வடபகுதியில் புதைக்கப்பட்டிருந்த 12 இலட்சம் கண்ணிவெடிகளை அகற்றுவதற் காக பெருமளவு நிதி உதவியையும் இயந்திர உபகரணங்களையும் வழங்கியுள்ளது.

வொஷிங்டனுக்கு வந்த புலம்பெயர்ந்த இலங்கையருக்கு அங்குள்ள இலங்கைத் தூதுவர் சாலிய விக்ரமசூரிய வரவேற்பு உபசாரம் ஒன்றை வழங்கி கெளரவித்தார். இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போலி குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை தெட்டத்தெளிவாக எடுத்துரைத்தார். 2009 மே மாதத்தின் பின்னர் பயங்கரவாதிகளினால் ஒருவர் கூட மரணிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

2009 மே மாதத்தில் பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டியதன் பின்னர் நாட்டில் மனித உரிமைகளுக்கு மீண்டும் உத்தரவாதம் அளித்தது என்றும் மனித உரிமைகளுக்கு இனிமேல் எவ்வித ஆபத்தும் ஏற்படப்போவதில்லை என்றும் எடுத்துரைத்தார்.

அமெரிக்க செனட்டர்களை சந்தித்த புலம்பெயர்ந்த இலங்கையரில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் மற்றும் பலர் இடம்பெற்றனர். இவர்கள் அமெரிக்காவில் 25 மாநிலங்களில் வாழ்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

யுத்தம் முடிவடைந்ததனால் இலங்கையில் மீண்டும் சகஜநிலை ஏற்பட்டு இப்போது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...