22 மே, 2010

கச்சத்தீவை கண்காணிக்க இந்திய கடற்படை ஆயத்தம்






ராமநாதபுரம் : கச்சத்தீவை கண்காணிக்க இந்திய கடற்படையினர் ஆயத்தமாகி வருகின்றனர். இந்தியா வசமிருந்த கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது முதல், தமிழக மீனவர்கள் அப்பகுதிக்கு செல்வது அபாயகரமாகி வருகிறது. மீன்கள் குவிந்து வாழும் கச்சத்தீவு பகுதியில், மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். அங்கு சீன வீரர்களை வைத்து இலங்கை ராணுவம் பயிற்சி மேற்கொண்டு வருவதாக குற்றசாட்டும் உள்ளது. தொடர்ந்து அமைதி காத்து வந்த இந்திய அரசு, தற்போது கச்சத்தீவு விவகாரத்தில் கவனம் செலுத்த களமிறங்கி உள்ளது. இதற்காக இந்திய கடற்படை வீரர்களை, இந்தியாவின் எல்லைப் பகுதியில் தீவிர ரோந்து மேற்கொள்ளவும், இலங்கை கடற்படை வீரர்களால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம் விவரங்களை அறிந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கடற்படையினர் ஹெலிகாப்டரில், ரோந்து மேற்கொண்டு வருவதற்கும் இதுவே காரணம். மத்திய அரசின் இந்த முடிவு பலனளிக்கும் பட்சத்தில், இலங்கை கடற்படைக்கு மட்டுமின்றி சீனாவுக்கும் சவாலாக அமையும்.
மேலும் இங்கே தொடர்க...

வாஷிங்டன் : உயிரியல் உலகின் உச்சக்கட்ட சாதனையாக, செயற்கை செல்லை உருவாக்கி, அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.







செல் என்பது, ஒரு உயிர் அணு. இது உட்கரு, மரபணுவை நிர்ணயிக்கும் டி.என்.ஏ., சைட்டோபிளாசம், செல் சுவர் உட்பட பல பாகங்கள் உள்ளன. "குளோனிங்' முறையில், ஒரு உயிரினத்தின் செல்லிலிருந்து, மரபணுவை எடுத்து, மற்றொரு செல்லில் புதைத்து பலபடியாக்கி, அதே உயிரினத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் வெற்றி கண்டனர். இப்போது, அதையும் மீறி, ஒரு புதிய செல்லையே உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். இதை "சிந்தடிக் செல்' என்றழைக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதற்கான முயற்சியை, ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் துவக்கினர்.


ஒரு செல்லின் மொத்த மரபணுவையும், வேறு ஒரு புதிய செல்லுக்கு மாற்றி, அதன் வளர்ச்சியை கண்காணித்தனர். இதில் முக்கிய பங்காற்றியவர் மேரிலாண்டை சேர்ந்த கிரெய்க் என்ற விஞ்ஞானி. அவர் தன் குழுவுடன் நடத்திய ஆய்வு வெற்றி பெற்றிருக்கிறது. தொடர்ந்து, ஒரு செல் உயிரினமான பாக்டீரியாவின் செல்லில், செயற்கையாக உருவாக்கப்பட்ட டி.என்.ஏ., மூலக்கூறுகளை செலுத்தி, அதன் வளர்ச்சியை கண்காணித்தனர். அதில் ஒரு மரபணு ஜோடி பொருத்தத்தில் தவறு நேர்ந்ததை, கம்ப்யூட்டர் உதவியுடன் கண்டறிந்தனர். பின், அதை சரி செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து, அதை மீண்டும், வேறு ஒரு செல்லில் பயன்படுத்தினர். அதன் வளர்ச்சியை கண்டு ஆச்சரியமடைந்த அவர்கள், அந்த செல்லின் முற்றிலும் மாறுபட்டிருந்த மரபணுவை, மீண்டும், வேறு ஒரு உயிரினத்தின் செல்லில் செலுத்தினர். அப்போது தான் ஆச்சரியம் நிகழ்ந்தது.


செயற்கையாக உருவாக்கப்பட்ட டி.என்.ஏ., புதிய மரபணுவுடன், தாய் செல் போலவே, வளர்ச்சி அடைய துவங்கியது. வேறு விதமாக சொன்னால், ஆட்டின் உயிரணு மாட்டின் உயிரணுவாக மாறியது. அப்படியானால் மரபணுவிலுள்ள குரோமசோம்களையே மாற்றி வேறுவிதமாக செய்யும் சாதனை இது. "செயற்கையாக உருவாக்கப்பட்ட புதிய செல், மருத்துவ உலகில் பல புதிய பரிணாமங்களை தோற்றுவிக்கும்' என இந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதை அவர்கள் "சிந்தடிக் செல்' என்று அழைக்கின்றனர்.


பாரம்பரிய நோய்கள் உட்பட பலவற்றுக்கும், இந்த புதிய கண்டுபிடிப்பு உதவும். உதாரணத்திற்கு அழுக்கு தண்ணீரை மிகவும் சுத்தமான தண்ணீராக்குவது, குறுகிய காலத்தில் தடுப்பூசி மருந்துகளை தயாரிப்பது போன்றவைகளுக்கு உதவும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே சமயம் "உயிரி ஆயுதமாக இது பயன்படுத்தப்படலாம்' என்ற அச்சமும் பேசப்படுகிறது. ஆகவே மரபுப்படி பாதுகாக்கும் நடைமுறைகள் குறித்த கமிஷன் தலைவர் அமி குட்மானுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடிதம் எழுதியுள்ளார். இந்த வெற்றியை பாராட்டிய அவர், " மருத்துவ, சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகிய துறைகளில் இது எந்த அளவு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மன்னார் பகுதியில் தோண்ட, தோண்ட தமிழர் பிணங்கள்: மிகப்பெரிய புதை குழி கண்டுபிடிப்பு




இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த போரின் போது சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்கள் அகதிகளாக தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்களை, அவர்களது சொந்த ஊர்களில் மீண்டும் குடியேற்ற வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தியதால் இலங்கை பணிந்தது.

என்றாலும் தமிழர் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றிய பிறகுதான் மக்களை மீண்டும் குடியமர்த்த முடியும் என்று சிங்கள அரசு திட்டவட்டமாக கூறியது. அதன்படி தமிழர்களின் கிராமங்களில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டன. அதன் பிறகு தமிழர்கள் குடி அமர்த்தப்பட்டனர்.

மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்ட நிலையில் நாச்சிக்குடா பகுதியில் மட்டும் மக்கள் மீண்டும் குடியேற தடை விதிக்கப்பட்டது. அங்கு கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளையும் சிங்கள ராணுவம் மேற்கொள்ளவில்லை.

நாச்சிக்குடா பகுதிக்குள் மக்களை ராணுவத்தினர் வர விடவில்லை. இது ஈழத்தமிழர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அங்கு மனித புதை குழிகள் இருக்கலாம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் சம்பந்தன் கூறி இருந்தார்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் மன்னார் நாச்சிக்குடாவில் பெரிய, பெரிய மனித புதை குழிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிபுணர்கள் அந்த புதை குழிகளை கண்டுபிடித்தனர். நாச்சிக்குடா முழுவதும் புதை குழிகளாக இருப்பதாக அவர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

புதை குழிகளை தோண்ட, தோண்ட ஈழத்தமிழர்களின் பிணங்கள் வருகிறது. புதைக்கப்பட்ட அவர்கள் அனைவரும் சிங்கள ராணுவத்தால் சித்ரவதை செய்யப்பட்டு கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

போரின்போது பல்லாயிரக்கணக்கான விடுதலைப்புலிகள் பிடிபட்டனர். மேலும் தடுப்பு முகாம்களில் இருந்தவர்களில் பெரும்பாலான இளைஞர்கள், இளம்பெண்களை ராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்றனர். அவர்கள் அனைவரும் காணாமல் போய் விட்டனர்.

அவர்கள் கதி என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்தது. அவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற ராணுவம், நாச்சிக்குடாவில்தான் புதைத்தது தெரிய வந்துள்ளது.

பெரும்பாலான பிணங்கள், எலும்புக்கூடுகளாக இருந்தன. எண்ண முடியாத அளவுக்கு இந்த பிணக்குவியல் இருப்பதாக வெளிநாட்டு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே சிங்கள ராணுவம் நடத்திய இனப்படுகொலை குறித்து அமெரிக்க அதிகாரிகள் கடந்த ஆண்டு விசாரணை நடத்தினர். இதன் அறிக்கை அடுத்த மாதம் (ஜூன்) 16-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

ஆனால் இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு எந்தவித நெருக்கடியும் ஏற்படவில்லை. இந்திய அரசு மவுனமாக இருந்து ஓசையின்றி பின்னணியில் இருப்பதால் ராஜபக்சே தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

கர்நாடக மாநில மங்களூருவில் விமானம் வெடித்து 163 பேர் பலி(இணைப்பு02)

இந்திய கர்நாடக மாநில மங்களூருவில் அதிகாலையில் தரையிறங்க முயன்ற விமானம், மலையில் மோதி வெடித்துச் சிதறியதில் 163பேர் பலியாகினர். துபாயிலிருந்து திரும்பிய விமானம் தரையிறங்கிய வேளை, மழை, போதிய வெளிச்சமின்மை காரணமாக விபத்துக்குள்ளானதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்களில் 19 பேர் குழந்தைகளாவர். மீட்புப் படையினரும் தீயணைக்கும் படையினரும் விமான நிலையத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈட்பட்டு வருகின்றனர். இதுவரை 35 பேரின் சடலங்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி மேலும் தெரிவிக்கின்றது. 6 பேர் படுகாயமடைந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் பெரும் புகை மூட்டம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவர்களில் அநேகர் கர்நாடக, கேரள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்துக்கு இந்திய மத்திய, மாநில அமைச்சர்கள் விரைந்துள்ளனர். இது தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சரிடம் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்ததுடன் விபத்து பற்றிய விபரங்களையும் கேட்டறிந்தார். மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தும்படியும் அவர் உத்தரவிட்டுள்ளார். விமான விபத்து குறித்து விசாரணைகளைத் துரிதப்படுத்தும்படியும் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இடம்பெற்ற பாரிய விமான விபத்து இது என வர்ணிக்கப்படுகின்றது. விபத்தையடுத்து மங்களூரு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.











மேலும் இங்கே தொடர்க...

மீனவர் பிரச்னை:​ இந்தியாவுடன் பேச்சு​​- இலங்கை அறி​விப்பு


மீனவர் பிரச்னை தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னா கூறினார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் இதுகுறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசியதாவது:

மீனவர்கள் மீன்பிடிக்கும் சில சமயங்களில் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி வந்து விடுகின்றனர்.​ இதனால் அவர்களை கைது செய்யும் நிலை ஏற்படுகிறது.​ இதனால் இரு நாட்டு மீனவர்களுக்கும் பிரச்னை ஏற்படுகிறது.

இந்த பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரைவில் இந்தியா செல்வேன் என்றார் அவர்.

ஆனால் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக இந்தியா செல்லும் தேதியை ரஜிதா சேனரத்னா குறிப்பிடப்படவில்லை என்று டெய்லி மிர்ரர் பத்திரிகையில் வெளியான செய்தி கூறுகிறது.

ரஜிதா சேனரத்னா மேலும் கூறியதாவது:​ மேலும் இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கச் கடலுக்குச் செல்லும்போது சர்வதேச கடல் எல்லையைத் தாண்டாமலிருக்க அவர்களுக்கு எச்சரிக்கை வழங்க புதிய திட்டம் ஒன்றை இலங்கை அரசு வகுத்துள்ளது.​ இதற்காக ஒரு கண்காணிப்பு முறை கொண்டு வரப்படும்.

ஜப்பான் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.​ இதன்மூலம் மீனவர்களின் படகுகள் சர்வதேச எல்லையைத் தாண்டும்போது அவர்களது படகில் வைக்கப்பட்டுள்ள கருவியிலிருந்து எச்சரிக்கை மணி ஒலிக்கும்.​ இதன்மூலம் மீனவர்கள் எச்சரிக்கையடைந்து சர்வதேச எல்லையைத் தாண்ட மாட்டார்கள்.​ இதேபோல மற்ற நாட்டு மீனவர்கள் சர்வதேச எல்லைப் பகுதியில் வரும்போதும் எச்சரிக்கை மணி ஒலிக்கப்படும்.

அப்படியும் அவர்கள் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்க வந்தால் அவர்கள் தெரிந்தே எல்லையைத் தாண்டி வருகிறார்கள் என்று அர்த்தமாகும்.

இலங்கை மீனவர்களைக் கைது செய்யும்போது இந்திய அதிகாரிகள் ஐக்கிய நாடுகள் சபையின் கடல் எல்லை விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை.

மற்றொரு நாட்டு கடல் எல்லைக்குள் மீனவர்கள் நுழையும்போது அவர்களைக் கைது செய்யவோ அல்லது தண்டிக்கவோ எந்தச் சட்டமும் இல்லை.​ அவர்களை உத்தரவாதத்தின்பேரில் உடனடியாக விடுவிக்கவேண்டும்.

2009-ம் ஆண்டில் 996 இலங்கை மீனவர்களை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.​ இவர்களில் இன்னும் 87 பேரை இந்திய அரசு விடுவிக்கவில்லை.​ தற்போது அவர்களில் 31 பேரை விடுவிக்க ஏற்பாடு செய்து அவர்களுக்கான விமான டிக்கெட்டையும் அனுப்பியுள்ளோம்.

இலங்கை மீனவர்களை தமிழக அரசு அதிகாரிகள் கைது செய்யும்போது அவர்களை ஒருமாதத்துக்குள் விடுவித்துவிடுகிறோம்.​ தமிழக மீன்வளத்துறை அமைச்சர்,​​ தமிழகத்திலுள்ள இலங்கை துணைத் தூதர் ஆகியோரின் உதவியோடு இதைச் செய்கிறோம்.

ஆனால் இலங்கை மீனவர்கள்,​​ ஒரிசா,​​ கேரளம்,​​ ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் கைது செய்யப்படும்போது அவர்களை விடுவிக்க 8 மாதங்களாகி விடுகிறது.

அந்தமான்-நிகோபார் தீவுகளில் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை மீட்பதற்குள் பெரும்பாடாகி விடுகிறது.​ இந்தத் தீவுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.​ இதனால் அவர்களை விடுவிப்பதில் ஏராளமான சிரமங்கள் உள்ளன என்றார் அவர்.​ இவ்வாறு டெய்லி மிர்ரர் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் 60 ஆயிரம் இலங்கை தமிழ்ச் சிறுவர்கள்

பள்ளிக்குச் செல்ல முடியாமல் இலங்கையில் 60 ஆயிரம் தமிழ் மாணவ,​​ மாணவிகள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும்,​​ இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி தலைவருமான டி.எம்.​ சுவாமிநாதன் நிருபர்களிடம் கொழும்பில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

விடுதலைப்புலிகளுடனான போரில் இலங்கை அரசு வெற்றி பெற்று ஓராண்டு கடந்துவிட்டது.​ ஆனால் வன்னி உள்ளிட்ட வடக்கு இலங்கைப் பகுதியில் பள்ளிகள் சரிவர நடைபெறுவதில்லை.

இந்தப் பகுதிகள் போருக்கு முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன.​ இந்த நிலையில் போரில் வெற்றி பெற்றதையடுத்து இப்பகுதி முழுவதும் இலங்கை ராணுவத்தின் வசம் வந்துவிட்டது.

வடக்கு இலங்கைப் பகுதியில் மொத்தம் 300 பள்ளிகள் உள்ளன.​ இவற்றில் 194 பள்ளிகள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகின்றன.​ இங்கு 86 ஆயிரம் சிறுவர்கள் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தனர்.​ ஆனால் தற்போது வெறும் 26 ஆயிரம் சிறுவர்கள் மட்டுமே பள்ளி செல்ல முடிகிறது.

எஞ்சியுள்ள 60 ஆயிரம் சிறுவர்கள்,​​ பள்ளிக்குச் செல்ல முடிவதில்லை.​ காரணம் அங்குள்ள பள்ளிகள் திறக்கப்படவில்லை.​ இலங்கை அரசு இப்போதாவது நடவடிக்கை எடுத்து பள்ளிகளைத் திறக்கவேண்டும்.

சமுதாயத்துக்கு அடிப்படைத் தேவையான கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.​ பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் மாணவ,​​ மாணவியர்களுக்கு உதவவேண்டும்.

மேலும் போரின்போது வன்னிப்பகுதியில் 60,900 வீடுகள் நாசமாக்கப்பட்டன.​ இதனால் அப்பகுதி மக்கள் வீடிழந்து தவித்து வருகின்றனர்.​ வீடிழந்துள்ள தமிழர்களுக்கு,​​ தமிழ் வம்சாவளியினர் வீடுகளைக் கட்டித் தருவதாக உறுதியளித்துள்ளனர்.​ இந்த வாய்ப்பை இலங்கை அரசு பயன்படுத்திக் கொண்டு யாழ்ப்பாண மக்களுக்கு வீடுகளைக் கட்டித் தர ஏற்பாடு செய்யவேண்டும்.

போரின்போது இலங்கையின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபை மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் ரூ.1,590 கோடியை இலங்கைக்கு வழங்கியது.​ ஆனால் இதில் வெறும் ரூ.38 கோடி நிதியை மட்டுமே இலங்கை அரசு பயன்படுத்தியுள்ளது.

இதன்மூலம் வடக்குப் பகுதியில் மறுசீரமைப்புப் பணிகளை செய்வதில் இலங்கை அரசு எவ்வளவு ஆர்வம் காட்டுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

அதேபோல வீடுகளைக் கட்டிக் கொள்வதற்காக 4 லட்சம் சிமென்ட் மூட்டைகளை இந்திய அரசு இலங்கைக்கு வழங்கியது.​ இதன்மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் 8 சிமென்ட் மூட்டைகள் கிடைக்கும்.​ ஆனால் இது போதுமானதாக இல்லை.​ மற்ற நாடுகள் தரும் உதவியுடன் இலங்கை அரசும் இணைந்து மறுசீரமைப்புப் பணிகளைச் செய்யவேண்டும் என்றார் அவர்.
மேலும் இங்கே தொடர்க...