6 டிசம்பர், 2010

கடற்படையினரால் தாக்கப்பட்ட பஸ் சாரதி மன்னார் வைத்தியசாலையில் அனுமதி




மடுவில் இருந்து மன்னாருக்கு பயணிகளை ஏற்றி வந்துகொண்டிருந்த தனியார் பஸ் சாரதி ஒருவர் கடற்படைக் குழுவினரால் நேற்று தாக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஆரோக்கியம் தவப்பிரகாசம் (வயது-41) என்பவரையே கடற்படைக் குழுவினர் தாக்கியுள்ளனர். முருங்கன் இசைமாளத்தாழ்வு பகுதியில் வைத்து கடற்படை குழுவினரால் இவர் வழிமறிக்கப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளார். பயணிகள் இவரைக் காப்பாற்றி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தாக்கதலுக்குள்ளான சாரதி ஆ.தவப்பிரகாசம் கருத்துத் தெரிவிக்கையில்,

"மடுத்திருத்தலப் பகுதியில் இருந்து நேற்று மாலை 2.15மணியளவில் சுமார் 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு மன்னார் நோக்கி வந்து கொண்டிருந்தோம். இதன் போது முருங்கன் இசைமாளத்தாழ்வு பகுதியூடாக வந்து கொண்டிருந்த போது பஸ்ஸுக்குப் பின்புறமாக கடற்படையினரின் டிரக் ரக வாகனம் வந்துகொண்டிருந்தது. டிரக் வண்டி பஸ்ஸை முந்திக்கொண்டு செல்ல வழிவிடப்படாததால், சுமார் 5 கடற்படை வீரர்கள் என்னைத் தாக்கினர்" என்றார்.

இது தொடர்பாக மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சாரதி தாக்கப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளாப்படாவிட்டால் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் இரத்து

இலங்கைக்கான 3 நாள் உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவிருந்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் எலஸ்டேயார் பர்ட்டின் விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் டொமினிக் வில்லியம் தெரிவித்துள்ளார்.

மாலைதீவு, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை நாளை செவ்வாய்க் கிழமை ஆரம்பிக்கவிருந்தார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் அழுத்தங்கள் காரணமாகவே அவர் இலங்கை விஜயத்தை இரத்துச் செய்துள்ளார் என டொமினிக் வில்லியம் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக் கம்யூனிஸ்ட் வாலிபர் சம்மேளனக் கூட்டத்தில் புளொட்

ஜி.ரி.லிங்கநாதன் உரை- இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் அமைப்பான இலங்கைக் கம்யூனிஸ்ட் வாலிபர் சம்மேளனத்தின் 13வது தேசிய காங்கிரஸ் கூட்டம் இன்றுமுற்பகல் 10.30மணியளவில் கொழும்பு, நாரெஹென்பிட்டி, சாலிகா மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலரும் அமைச்சருமான டியூ குணசேகர, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் பல இடதுசாரிக் கட்சிகளின் பிரதிநிதிகள், பத்மநாபா, ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலர் ரி.சிறிதரன், புளொட் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். இங்கு உரையாற்றிய புளொட் முக்கியஸ்தர் ஜி.ரி.லிங்கநாதன், இலங்கைக் கம்யூனிஸ்ட் வாலிபர் சம்மேளனத்தின் 13ம் காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்நிகழ்விற்கு புளொட் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. முன்பு புளொட் தலைவர் திரு.உமாமகேஸ்வரன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் பத்மநாபா ஆகியோர் இடதுசாரி கட்சிகளுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தனர். எனினும் இந்த நெருக்கமானது இடைப்பட்ட காலங்களில் அரிதாகவே காணப்பட்டது. தற்போதைய நிலையில் அவற்றை மீண்டும் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். இதன்மூலமே பரஸ்பரம் புரிந்துணர்வினை ஏற்படுத்த முடியும். இலங்கைக் கம்யூனிஸ்ட் வாலிபர் சம்மேளனக் கூட்டத்தின் இன்றைய தீர்மானங்களின்போது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை உடனடியாக முன்வைக்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தினையும் எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மற்றும் ஆயுதக் கலாச்சாரத்தை இந்நாட்டில் கொண்டு வந்தது தமிழ் இளைஞர்களே என்ற தப்பான அபிப்பிராயம் சிங்கள மக்கள் மத்தியில் நிலவி வருகின்றது. இது உண்மையல்ல, 1971களிலேயே ஆயுதக் கலாச்சாரம் சிங்கள இளைஞர்களால் இந்நாட்டில் கொண்டுவரப்பட்டது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தின் பின் தமிழர் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் நேர்மையாக செயற்படவில்லை: விஜித ஹேரத்

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் நேர்மையாக செயற்படவில்லை. இதனாலேயே, இன்று உலக நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் தமிழீழ தாயகமொன்றுக்காகக் குரல்கொடுக்க ஆரம்பித்துள்ளனர் என்று ஜே. வி. பி.யின் பிரசார செயலாளரும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

பிரித்தானியாவிற்கான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயமானது உத்தியோகபூர்வமானதொன்றல்ல. அங்குள்ள இலங்கைத் தூதரகம் இந்த விஜயம் தொடர்பில் எச்சரிக்கை விட்டிருந்த போதிலும் ஜனாதிபதி அதனை பொருட்படுத்தாமலேயே சென்றுள்ளார். எனவே அழையாத வீட்டில் மரியாதையை எவ்வாறு எதிர்பார்க்க முடியுமெனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

ஜே. வி. பி.யின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போதே விஜித ஹேரத் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். இவர் இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இலங்கையின் 30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தம் முடிவடைந்தது. அதே மாதம் 27 ஆம் திகதி கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தி மீள்குடியேற்றம் உட்பட தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வு யோசனைகளை ஜே. வி. பி. அரசாங்கத்திற்கு முன் வைத்தது. அதன் போது தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப இதுவே சிறந்த சந்தர்ப்பமாகும். இதனை தவற விட்டு விட்டு மீண்டும் தமிழ் மக்களை இரண்டாம் தரப்பிரஜைகளாக நினைத்தால் இன்னுமொரு பிரிவினை வாத ஆயுதப் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என அன்றே நாங்கள் எச்சரித்து இருந்தோம்.

யுத்தம் முடிவடைந்து சுமார் ஒரு வருடமும் 6 மாதங்களும் கடந்துள்ள நிலையில் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கோ, தேசியப் பிரச்சினைகளுக்கோ அரசாங்கம் முறையான தீர்வை ஏற்படுத்தவில்லை. இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் உட்பட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாது, அரசியல் இலாபம் தேடி ஏனைய கட்சிகளையும் வடக்கு கிழக்கிற்கு செல்ல விடாது அரசாங்கம் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டது.

இன்னும் இராணுவத்தை பயன்படுத்தி அடக்கு முறையிலான சூழலையே வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு அரசாங்கம் கொடுத்துள்ளது பயங்கரவாதத்தில் நாடு பெற்ற சுதந்திரத்தையும் சமாதானத்தையும் தமிழ் மக்களால் உணர முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடுகள் இன்று சர்வதேசத்தில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் எதிரொலித்துள்ளது. மீண்டும் தனி நாட்டு போராட்டத்திற்கு வித்திடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போராட்டத்தின் ஆபத்தான சூழலை அண்மையில் ஜனாதிபதி பிரித்தானியாவுக்கு சென்ற போது உணரக் கூடியதாக இருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக் கணக்கான புலம்பெயர் தமிழர்கள் தமிழீழக் கொடியுடன் விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். ஜே. வி. பி. இந்தப் போராட்டத்தை வன்மையாகக் கண்டிக்கின்றது. ஆனால் மேற்படி விஜயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வமான விஜயமல்ல.

ஒக்ஸ்போர்ட் யூனியனில் மாணவர் சங்கமொன்றின் அழைப்பின் பேரில் உரையாற்றவே ஜனாதிபதி பிரித்தானியா சென்றிருந்தார். இந்த யூனியனுக்கும் சர்வதேச தமிழ் அமைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்பது மேற்படி போராட்டங்களின் ஊடாக தெளிவாகின்றது. எனவே ஒரு மாணவர் சங்கத்தின் அழைப்பின் பேரில் நாட்டுத் தலைவர் ஒருவர் இவ்வாறு செல்வது தொடர்பாக சிந்திக்க வேண்டும்.

எவ்வாறாயினும் உள்நாட்டில் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் நேர்மையாக செயற்பட்டிருந்தால் மேற்படி போராட்டங்கள் சவால்களுக்கு உட்படுத்தியிருக்கலாம். கொழும்பிலிருந்து வெளியேற்றப்படும் தமிழ் மக்களை கூட விரும்பினால் வடக்கில் சென்று குடியேற்ற முடியும் என பாதுகாப்பு செயலாளர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான கருத்துக்களால் மீண்டும் தேவையற்ற பிரச்சினைகளையே சந்திக்க நேரிடும்.

எனவே தேசியப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கூடுதலான அவதானத்துடன் இனிமேலும் செயற்பட வேண்டும். மீண்டும் தமிழர்கள் இலங்கையில் முடக்கப்பட்டால் போராட்டங்கள் உருவெடுப்பதை தடுக்க முடியாது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

போக்குவரத்துச் சபை ஊழியர்களது வருமானத்தை அதிகரிக்க திட்டம்: குமார வெல்கம

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களது வருமானத்தை அடுத்த வருடம் முதல் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார்.

சேதமடைந்தநிலையில் இருந்து புதிப்பிக்கப்பட்ட 37 பஸ்களை தங்கல்லை பஸ் நிலையத்திற்கு கையளித்து உரையாற்றும்போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

''இலங்கை போக்குவரத்துக்குச் சபைக்கு சொந்தமான 6 ஆயிரம் பஸ்கள் தற்போது இயங்கி வருகின்றன. புதிதாக மேலும் ஆயிரம் பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
போக்குவரத்துச் சபைக்கு சிறந்த இலாபத்தை ஈட்டித் தரக்கூடியவகையில் ஊழியர்கள் செயற்படுவார்களாயின் அவர்களது வருமானத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தொலைபேசி உரையாடலை நிறுத்துமாறு தாய் புத்திமதி கூற மகள் தற்கொலை


தொலைபேசி உரையாடலை நிறுத்துமாறு தாய் கூறிய புத்திமதியை ஏற்க மறுத்து 21 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று அளவத்துகொடைப் பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது.

குறித்த யுவதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவரின் தாயார் சாட்சியத்தில் கூறியதாவது,

தனது மகள் தினந்தோறும் தொலைபேசி மூலம் தன் காதலனுடன் நீண்ட நேரம் உரையாடுவதால் தான் அதனைக் கண்டித்தேன். இதன் காரணமாக அவர் மனமுடைந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்தார்.

இம்மரணம் சமபந்தமான பிரேத பரிசோதனையை கண்டி போதனா வைத்தியசாலையின் வைத்தி அதிகாரி ஏ.பீ. செனவிரத்ன நடாத்தினார்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பு நகர் வாழ் மக்களுக்கு தொடர்மாடி வீட்டுத்திட்டம்: பாதுகாப்பு செயலாளர்

கொழும்பு நகரில் சட்டவிரோதமான குடியிருப்புக்களில் வாழும் மக்களுக்கு தொடர்மாடி வீடமைப்புத் திட்டங்கள் அமைத்துக் கொடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ''சுஜாதா ஜயவர்தன" நினைவுக் கருத்தரங்கில் ''கொழும்பு நகரின் அபிவிருத்தித் திட்டம்" என்ற தொனிப்பொருளில் உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

''கொழும்பு நகரில் சட்டவிரோத குடியிருப்புக்களில் வாழும் மக்களுக்கு கொழும்பு நகருக்குள்ளேயே அடிப்படை வசதிகளுடனான தொடர்மாடி வீடமைப்புத் திட்டங்கள் அமைத்துக் கொடுக்கப்படும். சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வீடுகளில் சுமார் 70 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இதனால் நகரில் பாரிய நெருக்கடிகள் தோன்றியுள்ளன.

இம்மக்கள் தமது வாழ்வாதாரத்தை நகரிலேயே தேடிக் கொள்கின்றனர். எனவே இவர்களை நகரிலிருந்து அப்புறப்படுத்த முடியாது.

எதிர்வரும் 2 வருடகாலப் பகுதிக்குள் 30 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்து முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்தோடு நகரில் உள்ள அரசாங்க அலுவலகங்கள் அனைத்தும் பத்தரதுல்லையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் செத்சிரிபாய இரண்டாம் கட்டிடத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளன" என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரிட்டனில் ஏற்பட்ட அவமானத்தை ஐ.தே.க. மீது சுமத்த அரசு முயற்சி: தயாசிறி


பிரித்தானியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் ஜனாதிபதியை அங்கு அழைத்துச் சென்ற காரண கர்த்தாவை கண்டறிய வேண்டும் என்று ஐ.தே.க. எம்.பி. யான தயாசிறி ஜயசேகர அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதிக்கு பிரிட்டனில் ஏற்பட்ட அவமானத்தை ஐ. தே.க . மீதும் ஜயலத் ஜயவர்த்தன எம்.பி. மீதும் சுமத்தாமல் அமைச்சரவையில் கலந்துரையாட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வரலாற்றை புரட்டி சபையின் நடுவே போட்டு நாற்றமெடுக்க விடாது வரலாற்றில் கற்றுக் கொண்ட பாடத்தை அடிப்படையாகக் கொண்டு நல்ல தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கொலைகாரனுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார். அது தவறு என்றாலும் ஜனாதிபதியினால் பலருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியும். பேச்சு சுதந்திரம் அன்று இல்லை. தணிக்கை அதிகாரி இருந்தும் அது தவறானது. ஆனால் பாற்சோற்றை கொடுத்து இன்று மாற்றுகின்றனர்.

சரத் பொன்சேகாவை அழைத்து சென்ற அதிகாரிகளில் இருவர் விசாரணைகள் இன்றியே கடமையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர். இவை தொடர்பில் புதிய அமைச்சர் தேடியறிய வேண்டும்.

ஜனாதிபதி எங்கள் ஜனாதிபதி அவருக்கு எதிரான செயற்பாட்டிற்கு எதிராக குரல் கொடுக்க நாமும் தயார். எனினும் கட்டணத்தை அதிகரித்து தருமாறு கோரி பிரித்தானியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் இக் காலத்தில் ஜனாதிபதியை அங்கு அழைத்து சென்றமைக்கான காரண கர்த்தா யார்? என்று கண்டறிய வேண்டும்.

அமைச்சரவையிலும் கலந்துரையாட வேண்டும். அவமானத்தை மறைப்பதற்கு அதன் குற்றத்தை ஐ.தே.க. வின் மீதோ, ஜயலத் எம்.பி.யின் மீதோ திணிக்க வேண்டியதில்லை.

பிரதியமைச்சர் அப்துல் காதர் மீதான வழக்கில் மூலப் பிரதியை காணவில்லை எனக் கூறி அந்த வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் வாபஸ் பெற்றுக் கொண்டது. அமைச்சர் ஹக்கீமுக்கு கண்டியில் ஐ.தே.க. இடம் கொடுத்தமையினால் காதர் எம்.பி. கட்சியுடன் கோபித்துக் கொண்டார். இன்று இவர்கள் இருவரும் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா அடங்கலாக மூவரும் கண்டியிலேயே இருக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்க ஆணைக்குழுவிடம் பொறுப்பு கூறுகின்ற தன்மையும் ஆணையும் இல்லை: சுமந்திரன்

நல்லிணக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த காலவோட்டத்தில் சரணடைந்திருக்கின்ற புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரைகளை செய்ய வேண்டும் அது அரசாங்கத்தின் மீதான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் என்பதுடன், கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவிடம் பொறுப்பு கூறுகின்ற தன்மையும் ஆணையும் இல்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

குற்றஒப்புதல் வாக்குமூலம் இல்லாமல் எவரையும் தடுத்து வைத்து புனர்வாழ்வளிக்க முடியாது. சரணடைந்தவர்கள் ஓரளவிற்கு குற்றத்தை ஏற்றுக்கொண்டவர்கள் எனினும் அவ்வாறு தடுத்து வைப்பதற்கு சட்டத்தில் இடமில்லை சரணடைந்த 11 ஆயிரம் பேருக்கும் இது பொருத்தமானது அல்ல ஏனெனில் அதில் ஒருவரேனும் சரணடையாதவராக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தின் சனிக்கிழமை நடைபெற்ற நீதியமைச்சு,புனர்வாழ்வளிப்பு ,சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தாய்லாந்தில் கைதான 50 இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு நாடு கடத்தல்

தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் கட்டம் கட்டமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 50 இலங்கைத் தமிழர்கள் கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்தின் குடிவரவுச் சட்டங்களை மீறி அங்கு தங்கியிருந்ததாகக் கூறி இரண்டு பாரிய சுற்றிவளைப்புகளின் போது சுமார் 200 வரையான இலங்கை தமிழர்களைத் தாய்லாந்து பொலிஸ் கைது செய்திருந்தது. மூன்றாவது நாடு ஒன்றில் அடைக்கலம் தேடும் நோக்கிலேயே அவர்கள் தாய்லாந்தில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இவர்களில் 50 பேர் வரையில் கடந்த இரண்டு வாரங்களில் இலங்கைக்கு கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்பட்டு ள்ளனர்.

ஏனையோர் பாங்கொக்கில் உள்ள தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான அவசரகாலக் கடவுச்சீட்டு மற்றும் விமானப் பயணச்சீட்டு ஆகியவற்றை ஒழுங்கு செய்து கொடுக்கும் முயற்சியில் தாய்லாந்து அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை இலங்கைத் தூதரகமும் இவர்களைக் கொழும்புக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஆயினும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்கள் தமது குடும்பத்துடன் இணைந்து கொண்டனரா என்பது பற்றி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

கார் - ஆட்டோ மோதி கோர விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ஸ்தலத்தில் பலி


கல்எலியவிலிருந்து பஸ்யால நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள் ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ஸ்தலத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த கோர விபத்துச் சம்பவம் நேற்றுக் காலை 8.15 அளவில் பஸ்யாலைக்கு அருகிலுள்ள மல்ஹேவ சந்தியில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்த மூன்று பெண்களும், மூன்று சிறுவர்களும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.

கல்எலியவிலிருந்து பஸ்யால நோக்கி வந்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடனே பஸ்யாலவிலிருந்து கல்எலிய நோக்கி வேகமாக சென்ற கார் மோதியுள்ளது.

பஸ்யால பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சியாத் (33), ஒரு பிள்ளையின் தந்தையான ரம்லான் (28) ஆகிய இருவருமே இந்த விபத்தில் ஸ்தலத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் மூன்று பெண்கள் படுகாயமடைந்துள்ளதுடன், ஒன்பது மாத குழந்தையும், நான்கு மற்றும் ஏழு வயது சிறுவர்களும் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நான்கு வயது சிறுவன் மேலதிக சிகிச் சைக்காக கொழும்பு லேடி றிச்வே வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளான். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

புதிய வரவு செலவு திட்டத்தின் பயன்; 80 இலட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஆரம்பம்

தற்போது ஓய்வூதிய சம்பளம் கிடைக்காத 80 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வூதியம் வழங்கும் நிதியத்தை உடனடியாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது.

அதன்படி தனியார் துறையில் பணிபுரியும் 20 இலட்சம் பேர், வெளிநாடுகளில் பணிபுரியும் 30 இலட்சம், விவசாய, மீன்பிடி, சுயவேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள 30 இலட்சம் பேர் என மொத்தமாக 80 இலட்சம் பேர் பயன் பெறுவர். இவ்வாறான இரு நிதியங்கள் முறையான ஏற்பாடுகளுடன் இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை முகாமைத்துவத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படவுள்ளன.

இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் தர்மா தீரசிங்க தெரிவித்தார்.

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும் வகையிலான நிதியத்தை ஆரம்பிக்க ஆயிரம் மில்லியன் ரூபாவும், நிலையற்ற துறைகளில் பணிபுரிவோர் தொடர்பாக நிதியத்தை ஆரம்பிக்க ஆயிரம் மில்லியன் ரூபாவும் ஒதுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் துறையில் பணிபுரிவோர் தமது சம்பளத்தில் 2 சதவீதத்தையும் வேலை வழங்குநர் 2 சதவீதத்தையும் இந்த நிதியத்துக்கு கொடுக்க வேண்டும்.

அதற்கு புறம்பாக சேவை வழங்குநரினால் சேவையாளரின் முழுமையான ஓய்வூதிய கொடுப்பனவுக்கான தொகையை இந்த நிதியத்துக்கு வழங்கவேண்டும். சேவையாளர் ஓய்வூதியம் பெறும்போது பெற்றுக்கொள் ளும் ஊழியர் சேமலாப நிதியத்தின் 2 சதவீதத்தை எதிர்கால ஓய்வூதிய சம்பளத்துக்காக இந்த ஓய்வூதிய சம்பள நிதியத்துக்கு பங்களிப்பு செய்ய வேண்டும்.

இந்த நிதியத்தில் இருந்து ஓய்வூதிய சம்பள நன்மையை பெற குறைந்தபட்சம் 10 வருடங்கள் அதற்கு பங்களிப்பு செலுத்தப்பட வேண்டும்.

விவசாய கைத்தொழில், மீன்பிடி, போக்குவரத்து நிர்மாணம் ஆகிய துறைகளில் உள்ள 30 இலட்சம் பேருக்கும் சமூக பாதுகாப்பு சபையின் உதவியுடன் பிரஜைகள் ஓய்வூதிய மற்றும் பாதுகாப்பு நிதியம் அமைக்கப்படுகிறது.

10 வருடங்கள் இந்த நிதியத்துக்கு பங்களிப்பு செய்யப்பட வேண்டியதுடன் 65 வயதை அடைந்த பின்னர் இதன் பயனை பெற உரித்துடையவர் ஆவார். இதேவேளை வெளிநாடுகளில் பணிபுரியும் 30 இலட்சம் பேருக்கு ஓய்வூதிய சம்பளமொன்றை பெற்றுக் தருவதாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியின்படி செயற்படுத்தப்படவுள்ள திட்டத்தின்படி இம்முறை வரவு - செலவு திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வேலை நாட்டு வேலை ஊக்குவிப்பு மற்றும் நலன் பேணல் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலை ஓய்வூதிய நிதியம் என பெயரிடப்பட்டுள்ள நிதியத்துக்கு வெளிநாட்டில் வேலை செய்பவர் வருடமொன்றுக்கு குறைந்த பட்சம் 12 ஆயிரம் ரூபாவை வைப்பிலிட வேண்டும். இவ்வாறு இரண்டு வருட காலத்துக்கு பணம் வைப்பிலிடப்பட வேண்டும். ஆண்கள் 65 வயதையும் பெண்கள் 60 வயதையும் தாண்டிய பின் இந்த நிதியத்தில் இருந்து ஓய்வூதிய சம்பளம் பெற முடியும்
மேலும் இங்கே தொடர்க...

அத். பொருட்களை தட்டுப்பாடின்றி இறக்குமதி செய்ய ஜனாதிபதி பணிப்பு

பண்டிகைக் காலத்திற்கென விசேட ஏற்பாடு;
ச. தொ. ச. கிளைகளில் குறைந்த விலையில் பொருட்கள்


பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி இறக்குமதி செய்து விநியோகிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நமக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க் கட்சியினர் எத்தனைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போதும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், ச. தொ. ச. கிளைகளில் குறைந்த விலையில் மக்கள் பொருட் களைக் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.

வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சின் குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது.

சகல நகர்களிலும் ச.தொ.ச. கிளைகளைத் திறக்க நிதியினை ஜனாதிபதி வழங்கி யுள்ளார். நெல் கொள்வனவு சம்பந்தமாக முறையான திட்டம் வகுத்து அதற்கான நிதியினையும் குறைவின்றி பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இதுபோன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் வல்லவராகத் திகழ்கிறார்.

நெல் கொள்வனவு பற்றி ஐ. தே. க.வினர் விமர்சிக்கின்றனர். அவர்களின் ஆட்சிக் காலத்தில் நெல் களஞ்சிய சாலைகள் மூடப்பட்டதை அவர்கள் மறந்துவிட்டார்கள்.

இலங்கையின் வரலாற்றில் இரண்டு இலட்சம் மெற்றிக்தொன் நெல்லை கொள்வனவு செய்தது இதுவே முதல் தடவை. 30 ற்கும் 34 ரூபாவிற்கும் நெல் கொள்வனவு நடைபெறுகிறது.

தற்போது உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக ஐ. தே. க. வினர் குற்றம்சாட்டுகின்றனர். எனினும் ச. தொ. ச. மூலம் குறைந்த விலையில் நாம் பொருட்களை விற்பனை செய்கிறோம்.

தேவையான பொருட்களை இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார். அதனால்தான் பிரேசிலில் இருந்து சீனி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். அமைச்சரவையானது கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கிய போதும் நாம் இதுவரை ஒரு கிலோ இறைச்சியையாவது இறக்குமதி செய்யவில்லை.

தேவையேற்படும் போது முட்டை, கோழி இறைச்சி, பெரிய வெங்காயம் போன்றவற்றை இறக்குமதி செய்வோம். பண்டிகைக் காலங்களில் இந்த இறக்குமதி நடைபெறும்.

கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இந்த வருடம் சகல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன. அரிசி, பருப்பு போன்றவற்றை இதில் குறிப்பிடமுடியும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருந்த சவால்கள் வேறு எந்த தலைவர்களுக்கும் இருந்ததில்லை.

வெல்ல முடியாது என்ற யுத்தத்தை வென்றார். யுத்தத்தோடு அபிவிருத்தியையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பியவர் அவர்.

தற்போது எதிர்க்கட்சித் தலைவர் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார். அரசாங்க ஊழியர்கள் பற்றி பேச எதிர்க் கட்சித் தலைவருக்கு எந்த அருகதையும் இல்லை. அரச ஊழியர்கள் தொகையை சரி பாதியாகக் குறைக்கத் திட்டமிட்டவர் அவர் எனவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புலி ஆதரவாளரின் லண்டன் ஆர்ப்பாட்டம்:


ஜனநாயகத்தை மதிக்கும் எந்தவொரு
நாடும் மெளனமாக இருக்க முடியாது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலக்கு வைத்து பிரிட்டனில் புலி ஆதரவாளர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடி க்கையையிட்டு ஜனநாயகத்தை மதிக்கும் உலகின் எந்தவொரு நாடும் மெளனமாக இருக்க முடியாது என்று பிரதமர் தி.மு. ஜயரட்ன கூறியுள்ளார்.

மக்கள் அபிமானத்துடன் கூடிய தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்க ழகத்தின் அழைப்பை ஏற்றுக் கொண்டதே அந்த பல்கலைக் கழகத்துக்கு பெருமை தருவதாகும்.

எனினும் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட இடைஞ்சல் மூலம் பயங்கரவாதத்துக்கு துணை போகும் சிலர் சர்வதேச ரீதியில் இருப்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இவ்வாறான செயல்கள் மூலம் இலங்கையர்கள் என்ற வகையில் நாம் மேலும் வலுப்பெறுகிறோம் எமது சிந்தனைகளை எந்தவொரு சக்தியாலும் பணியவைக்க முடியாது.

பயங்கரவாதத்துக்கு முகம்கொடுத்து அதனை முற்றிலும் ஒழித்துக்கட்டிய உலகிலுள்ள ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார்.

ஜனாதிபதி இந்த நாட்டில் இடம்பெற்றுவந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து இங்கு வசிக்கும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இனங்களும் கெளரவமாக வாழும் உரிமையை ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் நிலையில் பிரிட்டனில் புலி ஆதரவாளர்களின் இந்த செயலை சிறியது என்று கருதமுடியாது.

ஜனநாயகத்தை மதிக்கும் உலகின் எந்தவொரு நாடும் இதனை மெளனமாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

பயங்கரவாதம் தொடர்பான தமது நிலைப்பாடு என்ன என்பதை ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகள் உலகுக்கு வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்று பிரதமர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

அடைமழை: 75,000பேர் பாதிப்பு; வன்னிப் பிரதேசம் நீரில் மூழ்கின

நாடு முழுவதும் அவசர பணிக்கு ரூ.29 மில்லியன்

கிளிநொச்சி தட்டுவன்கொட்டி கிராமத்துடன் தொடர்பு துண்டிப்பு

படகுகள் மூலம் நிவாரணம் வழங்குவதில் இராணுவம் மும்முரம்



நாட்டின் பல பாகங்களில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக நாடு முழுவதிலும் 75 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் 70 ற்கும் அதிகமான முகாம்களில் தங்கவைக்கப்பட்டி ருப்பதுடன், வெள்ளப்பெருக்கால் இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

நாடு முழுவதிலுமுள்ள முகாம்களில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 15 முகாம்களும், கிளிநொச்சியில் 19 முகாம்களும் அமைக்கப்பட்டிருப்பதுடன், தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் முகாம்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென எதிர்பார்ப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

நவம்பர் 10ம் திகதியிலிருந்து நேற்று வரையான காலப்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் இடர் முகாமைத்துவ அமைச்சின் ஊடாக 29 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சமைத்த உணவு, தங்குமிடம், குடிநீர் மற்றும் மருத்துவம் போன்ற உடனடித் தேவைகளுக்கு இந்நிதி ஒதுக்கப்பட்டிருப் பதுடன், அரசாங்க அதிபர்கள் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர் மழையால் வடபகுதியின் அனைத்துப் பகுதிகளும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக அம்பாந் தோட்டை மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் தொடர்ச்சியான மழை பெய்து வருவதால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய சரியான தகவல்களைப் பெறமுடியாதிருப்பதாக அந்தந்த அரசாங்க அதிபர்கள் தெரிவித்தனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னாரிலுள்ள அனைத்து நீர்ப்பாசனக் குளங் களும் நிரம்பி வழிவதால் வெள்ளப் பெருக்கு மேலும் அதிகரித் திருப்பதுடன், மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களும் அதிகரித்துள்ளன.

மன்னார் மாவட்டத்தில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், பாதிக்கப்பட் டவர்களுக்கு உடனடியாக சமைத்த உணவுகளை வழங்க கிராம சேவகர்கள் ஊடாக நடவடிக்கை எடுத்திருப்பதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நிக்கலஸ் பிள்ளை தினகரனுக்குத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பலரைப் பாதுகாப்பாகப் பொது இடங்களில் தங்கவைத்திருப்பதுடன், உடனடியா கச் சமைத்த உணவு வழங்கப்பட் டாலும், ஒரு வாரத்துக்கான உலரு ணவுப் பொருள்களை நிவாரணமாக வழங்க நடவடிக்கை எடுத்துள் ளோம். அனைத்துக் குளங்களும் நிரம்பிவழிவதால் வெள்ளநீர் மேலும் அதிகரித்துள்ளது. குளங் களிலிருந்தும், நீர் தேங்கியிருக்கும் இடங்களிலிருந்தும் நீர்ப்பம்பிகள் மூலம் நீரை வெளியேற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், முல்லைத்தீவு மாவட்டத்தில் வவுனிக்குளம் மற்றும் தண்ணிமுறிப்புக் குளம் ஆகியன முற்றாக நிரம்பி வான்பாய்ந்து வருவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் வேதநாயகன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் தீர்த்தக்கரை கிராமம் முற்றாக நீரில் மூழ்கியிருப்பதால் அங்கு பாதிக்கப்பட்ட மக்களை படகுகளில் சென்று மீட்டுள்ளோம்.

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. சில பகுதிகளூடாக தொடர்புகள் பாதிக்கப்பட்டிருப்பதால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை சரியாகப் பெறமுடியாதுள்ளது என்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக் காரணமாக தட்டுவன்கொட்டி கிராமம் ஏனையயபகுதிகளுடனான தொடர்பை இழந்துள்ளது. இக்கிராமத்தைச் சூழ வெள்ளம் நிரம்பியிருப்பதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கண்டாவளை, கராய்ச்சி ஆகிய பகுதிகளே கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. பூநகரிப் பிரதேசமும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப் பட்ட மக்கள் பொது இடங்களிலும் அருகிலுள்ள அவர்களின் உறவினர் களுடனும் தங்க வைக்கப்பட்டுள் ளனர். தட்டுவன்கொட்டில் கிராம மக்களுக்கு படகுகள் மூலம் நிவார ணங்கள் வழங்கப்படுகின்றன. இதற் குப் பாதுகாப்புத் தரப்பினர் எமக்கு உதவி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

வெள்ள நீர் அதிகரித்திருப்பதால் யாழ் மாவட்டத்தின் தீவுப் பகுதிகளுக்கான போக்குவரத்துக்கள் இடைநிறுத்தப் பட்டுள்ளன. வேலணை, மண்கும்பான், அல்லைப்பிட்டி, காக்கைதீவு உள்ளிட்ட தீவகப் பகுதிகளும், பொம்மைவெளி, சூரியவெளி, இருபாலை, நாவற்காடு, பொன்னாலை, கரவெட்டி, சங்கானை உட்பட குடாநாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் 1880 பேரும், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவில் 2610 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 1724 பேரும், நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் 1245 பேரும் வேலணைப் பிரதேசத்தில் 1386 பேரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட் டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியிருப்பதுடன், அதற்கான அனைத்து அதிகாரங்களையும் வடமாகாண ஆளுநர் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு வழங்கியுள்ளார்.

வடபகுதி மாத்திரமன்றி மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல நீர்ப்பாசனக் குளங்கள் நிரம்பி யிருப்பதுடன், தாழ் நிலங்கள் பல வெள்ளத்தால் நிரம்பியுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...