5 நவம்பர், 2009

பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை இரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானம்-

புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தந்தையான திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை ரத்துசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வேலுப்பிள்ளையை படையினர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதால், அவரது முகவரி குறித்த பிரச்சினை காரணமாக தற்காலிகமாக ஓய்வூதியக் கொடுப்பனவுகளை ரத்துச்செய்ய தீர்மானித்துள்ளதாக ஓய்வூதிய ஆணையாளர் கே.ஏ.திலகரட்ன கூறியுள்ளார். வேலுப்பிள்ளை, 1943 பெப்ரவரி மாதம் 01ம் திகதி இலங்கை புகையிரதத் திணைக்களத்தில் பணியில் சேர்ந்துள்ளார். அவர் படையினரால் கண்டுபிடிக்கப்படும் வரையில் கிளிநொச்சி அரசஅதிபர் திணைக்களத்திலிருந்து 16ஆயிரத்து 865ரூபா ஓய்வூதியமாகப் பெற்றுக் கொண்டுள்ளார். வேலுப்பிள்ளையிடம் விசாரணைகள் பூர்த்தியடைந்தபின் நிரந்தர முகவரி அறிவிக்கப்படும் பட்சத்தில் நிலுவை ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் கே.ஏ.திலகரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
சிகிச்சைக்காக இராணுவத்தினர் அழைத்துச் சென்ற மனைவியைத் தேடித் தருமாறு கணவர் கோரிக்கை


- தனது மனைவி இராணுவத்தினரால் சிகிச்சைக்காக அநுராதபுரத்திற்கு அழைத்துச் சென்ற பின்பு அவர் இருக்குமிடம் தெரியாதுள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் மாத்தளன் பகுதியில் இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி நடந்த கடுஞ்சமரின் போது, பதுங்கு குழியில் பாதுகாப்பு கருதி இருந்த வேளை, அவர் காயமடைந்தார். அச்சமயம் இராணுவத்தினர் அவரை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அவரைக் கண்டுபிடிப்பதற்கு அவரது கணவர் சுந்தரலிங்கம் தயாபரன் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரின் உதவியை நாடியுள்ளார். இது தொடர்பாக சுந்தரலிங்கம் தயாபரன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.

தற்போது அவர் வவுனியா நெளுக்குளம் பிரதேசத்தில், அம்மன்கோவில் வீதி, சாம்பல் தோட்டத்தி்ல் இருக்கின்றார். அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"கிளிநொச்சி டிப்போ சந்தி ஐந்து வீட்டுத் திட்டத்தில் நான் எனது மனைவி வேணி என்றழைக்கப்படும் அருந்ததி, எனது மகன் அனுஜனுடன் வாழ்ந்து வந்தேன். ஷெல் தாக்குதல்கள் விமான தாக்குதல் நிலைமைகள் காரணமாக நாங்கள் இடம்பெயர்ந்து பல இடங்களுக்கும் சென்று இறுதியாக முல்லைத்தீவு மாவட்டம் மாத்தளன் பிள்ளையார் கோவிலில் தஞ்சமடைந்திருந்தோம்.

அந்தப் பகுதியில் நடைபெற்ற கடுஞ்சமர் காரணமாக, பதுங்கு குழியில் நாங்கள் இருந்தபோது ஷெல் தாக்குதலில் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி எனது மனைவி தலையில் காயமடைந்தார். அடுத்தநாள் காலை அவரை நாங்கள் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றோம். ஆயினும் அந்தப் பகுதியில் இடம்பெற்ற கடும் மோதல்கள் காரணமாக அவரை மாத்தளனில் இருந்த எனது மாமியார் வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு தங்கியிருந்தோம்.

மறுநாள் எங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துசேர்ந்தோம். இராணுவத்தினர் எங்களை கைவேலி பாடசாலைக்கு அழைத்துச் சென்று, என்னையும் காயமடைந்த எனது மனைவியையும் வைத்துக்கொண்டு எனது குழந்தையை எனது மாமியார் குடும்பத்தினருடன் ஓமந்தைக்கு அனுப்பி வைத்தார்கள். அதன் பின்னர், எனது மனைவியை சிகிச்சைக்காக அநுராதபுரத்திற்கு ஹெலிக்கொப்டரில் கொண்டு சென்றார்கள். பெயர் விபரங்கள் எதனையும் எடுக்கவில்லை.

என்னை ஓமந்தைக்கு அனுப்பி வைத்தார்கள். நான் எனது மாமியார் குடும்பத்துடன் இணைந்துகொண்டேன். அங்கிருந்து மனிக்பாம் ஸோன் 4 முகாமுக்கு நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டு, கடந்த மாதம் 26 ஆம் திகதி எங்களை முகாமில் இருந்து விடுதலை செய்தார்கள்.

அதன் பின்னர் எனது மனைவியை, செட்டிகுளம், வவுனியா, வைத்தியசாலைகளிலும், பூந்தோட்டம் உட்பட பல முகாம்களிலும் புல்மோட்டை, கண்டி, அனுராதபுரம் என பல இடங்களிலும் தேடினோம். ஆனால் எனது மனைவியைக் காணவில்லை. எனவே எனது மனைவியைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
எல்லா உதவிகளையும் அரசு உங்களுக்குச் செய்யும்: வன்னி மக்கள் மத்தியில் ஜனாதிபதி



(பட இணைப்பு)
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திடீர் விஜயமாக நேற்று புதன்கிழமை வன்னிப்பகுதிக்குச் சென்று திரும்பியுள்ளார்.

அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், மோசமான யுத்தம் நடைபெற்ற அந்தப் பகுதிக்கு முதல் முறையாக அவர் சென்றுள்ளார்.

அந்தப் பகுதியில் நடைபெற்று வருகின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகளையும் அபிவிருத்தி வேலைகளையும் அவர் நேரடியாகப் பார்வையிட்டார். அத்துடன் மீள்குடியேறுவதற்காக செவ்வாய்க்கிழமை அங்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த மக்களையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டு துணுக்காய் பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த சுமார் 1200 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில்,

"யுத்தம் காரணமாக ஏற்பட்டிருந்த கஷ்டகாலம் முடிவடைந்து, புதிய வாழ்க்கையைத் தொடங்கும் காலம் வந்துவிட்டது" எனக் குறிப்பிட்டார்

. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் மத்தியிலும் அவர் உரையாற்றினார். துணுக்காய் பிரதேசத்தில் பொதுமக்கள் மத்தியில் அவர் தமிழில் உரையாற்றியபோது மேலும் தெரிவித்ததாவது:

"நீங்கள் எல்லோரும் நீண்ட காலமாக அனுபவித்து வந்த கஷ்டங்கள் ஏராளம். அதை நான் நன்றாக அறிவேன். பயங்கரவாதிகள் உங்களைத் தவறான வழியில் கொண்டு சென்றார்கள். அது பெரிய பாவம், அநியாயம். நீங்கள் மனித கேடயங்களாகப் பணயக் கைதிகளாக ஆக்கப்பட்டிருந்தீர்கள்.அந்த கஷ்ட காலம் இனிமேல் இல்லை.

புதிய வாழ்க்கை வாழ வேண்டும். அதற்காக நாங்கள் செயற்படுகின்றோம். இந்த நாட்டில் வாழ்கின்ற எல்லோரையும் பாதுகாக்க வேண்டியது எனது பொறுப்பு. அது எனது கடமை. நான் அதை நிச்சயமாகச் செய்வேன். இந்த நாட்டில் வாழும் எல்லா மக்களும் பயமும் சந்தேகமும் இன்றி பாதுகாப்பாக வாழ வேண்டும். எல்லோரும் சம உரிமையுடன் வாழ வேண்டும். துப்பாக்கிக் கலாசாரம் மீண்டும் எடுபடாத வகையில் செயற்பட வேண்டும்.

இனிமேல் நீங்கள் எல்லோரும் பாதுகாப்பாகவும், சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும். இந்த நிலைமையை நீங்கள் பாதுகாக்க வேண்டும். நான் உங்கள் தோழன். நான் உங்கள் சொந்தக்காரன். நீங்கள் என்னை நம்பலாம். எமது அரசாங்கம் உங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்யும். நாம் எல்லோரும் ஒன்றுபடுவோம். இந்த அழகிய தேசத்தை ஒரே தேசிய கொடியின் கீழ் கட்டியெழுப்புவோம்." இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்த ஜனாதிபதியுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய, விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, புதிய பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய உட்பட பல முக்கிய உயரதிகாரிகளும் சென்றிருந்தனர்.

கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பகுதிக்குச் சென்ற ஜனாதிபதி புனரமைக்கப்பட்டு வரும் முழங்காவில் வைத்தியசாலையையும், அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் நேரடியாகப் பார்வையிட்டார்.

கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள டேனிஷ் நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்களையும் சந்தித்து கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றும் படையினர் மத்தியில் உரையாற்றுகையில், யுத்தத்தின்போது இராணுவத்தினர் காட்டிய தீரத்தையும் உறுதியையும் பாராட்டியதுடன், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர்களது சம்பளம் உயர்த்தப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.



மேலும் இங்கே தொடர்க...
ஜெனரல் சரத் பொன்சேகா இன்று காலை நாடு திரும்பினார்



முன்னாள் இராணுவத் தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவிலிருந்து இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.

கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்த இராணுவத் தளபதி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க கிறீன் காட் உரிமை பெற்றுள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஒக்லஹோமாவிலுள்ள தமது இரு மகள்மாரையும் பார்ப்பதற்காகவே அங்கு சென்றிருந்தார்.அங்கு சென்ற இராணுவத்தளபதி போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள அமெரிக்க பிரஜா உரிமை பெற்றுள்ள பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக சாட்சியங்கள் வழங்கக் கூடுமென அரசாங்கம் அச்சமடைந்திருந்ததாக ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் எவ்வித விசாரணைகளுக்கும் உட்படாமல் இராணுவத் தளபதி இன்று காலை நாடு திரும்பியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் இங்கே தொடர்க...
04.11.2009 தாயகக்குரல்26

அடுத்து நடைபெறும் தேர்தல் ஜனாதிபதி தேர்தலா பொதுத் தேர்தலா என்ற கேள்விக்கும் எதிர்க்கட்சி சார்பில் நிறுத்தப்படும் பொது வேட்பாளர் யார் என்ற கேள்விக்கும் உறுதியான பதில் கிடைக்காதபோதும் 2010 ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுகின்றன.
முதலில் நடத்துவது ஜனாதிபதி தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா என்பது பற்றி கருத்தறிவதற்காக அரசுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சந்தித்து அவர்களின் அபிப்பிராயங்களை கேட்டுள்ளார். கட்சிகளின் தலைவர்கள் பலரும் ஜனாதிபதி தேர்தலையே முதலில் நடத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.


குறிப்பாக ஜனாதிபதியின் ஆலோகர் வாசுதேவ நாணயக்கார மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயக அணியின் தலைவர் எம்.எச்.முகமது ஆகியோர் ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துவது நல்லது எனத் தெரிவித்துள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியூன் ஆகியோர் பொது தேர்தலை முதலில் வைப்பது நல்லது என தெரிவித்துள்ளனர்.


கட்சித் தலைவர்களின் கருத்தை அறிந்து கொண்ட ஜனாதிபதி மகிந்த, தேர்தல் பற்றிய தீர்மானம் எடுக்குமுன் அரசாங்கத்தை ஆதரிக்கும் கட்சித் தலைவர்களுடன் தனித்தனியாக பேச்சு நடத்தப்போவதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளைகளை அமைக்கும் வேலை தீவிரமாக நடைபெறுகிறது. இன்னொரு பக்கம் வடக்கில் சுதந்திரக் கட்சி கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளும்; மேற்கொள்ளப்படுகின்றன. இவை எல்லாம் பார்க்கும்போது ஜனாதிபதி தேர்தல் 2010 ஜனவரியில் நடைபெறுவற்கான அறிகுறியாக இவற்றைக் கருதலாம்.


யுத்தத்தால் இடம் பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் 2010 ஜனவரிக்கு முன்னர் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வன்னியில் நடைபெறும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளைப் அவதானிக்கும்போது 2010 ஜனவரி; ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பெரும்பாலான இடங்களில் மீள்குடியேற்றம் நடைபெறும் எனத் தெரிகிறது.


ஜனாதிபதி தேர்தல் முதலில் நடைபெற்றால் அதை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாக தெரிவிக்கும் அதேவேளை தேர்தலை எதிர்கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் வியூகம் வகுக்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் அதுபற்றி கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமைப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் அங்கம் வகிப்பதாகவும் வேறு கட்சிகளும் இந்தக் கூட்டமைப்பில் இணையவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டில் புதிய கட்சிகளை சேர்க்;கும் முயற்சிகள் முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய இரு கட்சிகளுக்கும் நெருக்கடிகளை தோற்றுவிக்கலாம். ஐக்கிய தேசியக் கட்சி இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான எந்த யோசனையையும் இதுவரை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிலோ அல்லது மக்கள் முன்னோ தெரிவிக்கவில்லை. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டில் இணைவதாக கூறும் கட்சிகள் ஒற்றையாட்சிக்குள்ளேயே இனப்பிரச்சினைக்கு தீர்வு என்றும் பொருளாதார நடவடிக்கைகளில் பூமிபுத்திரர்களுக்கு அதாவது சிங்கள மக்களுக்கே முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. இக்கருத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் அவர்கள் கருத்து அங்கு எடுபடவில்லை.


இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என்பதில் எதிர்கட்சிகள் மாத்திரமல்ல ஐரோப்பிய நாடுகளும் குறியாக உள்ளன. இலங்கையில் சீனாவும் இந்தியாவும் வலுவாக காலூன்றுவதையும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் செல்வாக்கு இலங்கையில் குறைந்து வருவதையும் அவதானிக்கமுடிகிறது. இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியாவும் தென்பகுதிகளில் சீனாவும் காலூன்றியுள்ளன.


புலிகளுடனான யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இலங்கை அரசு ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுடன் முரண்பட்டுக் கொண்டதுடன் அந்நாடுகளின் பகை நாடுகளுடன் கூடிய உறவுகளை வைத்துக்கொண்டுள்ளது இதனாலேயே ஐரோப்பிய நாடுகள் இலங்கை அரசின்மேல் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தியும் பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியும் இலங்கை அரசை அடிபணிய வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.


ஜீ.எஸ்.பி. சலுகையை இல்லாமல் செய்யப்போவதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவித்து வருவது இலங்கைக்கு பொருளாதார நெருக்கடிகளை தோற்றுவிப்பதன் ஒரு அங்கமாகவே கருதவேண்டும். ஜீ.எஸ்.பி சலுகை தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மகாநாட்டில் மத்திய வங்கியின் ஆளுநர் கருத்து தெரிவிக்கையில், ஜீ.எஸ்.பி சலுகை நிறுத்தப்பட்டாலும் முழுநாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடையாது. அந்த சலுகை இல்லாமலேயே முன்னேறிச் செல்வதற்கான தயார் நிலைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


மேற்கத்திய நாடுகளுடனான பகை இலங்கையை பேராபத்தில் தள்ளிவிடும் என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
யுத்த வெற்றிகள் மூலம் மக்கள் செல்வாக்கைப் பெற்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்துவது எதிர்கட்சிகளுக்கு விருப்பம் இல்லை. முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை அரசு நடத்துமானால் ஜே.வி.பி. ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கும் என ஜே.வி.பி. பாராளுமன்றக் குழுவின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தேர்தலை நோக்கி அரசாங்கமும், எதிர்கட்சிகளும் சிறுபான்மை இனங்களை தங்கள் பக்கம் இழுக்கும் நடவடிக்கைளையும் ஆரம்;பித்துள்ளன. சிறுபான்மை இனங்கள் இவர்களிடம் எதிர்பார்ப்பது இனப்பிரச்சினைக்காக இவர்கள் என்ன அரசியல் தீர்வை முன்வைக்கப் போகிறார்கள்; என்பதேயாகும்.

மேலும் இங்கே தொடர்க...
வவுனியா வைத்தியசாலை அவசர சிகிச்சைபிரிவு மற்று மகப்பேற்று விடுதி திறப்பு விழாவில்புளொட் தலைவர்!


வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் மகப்பேற்று விடுதி திறப்பு விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுகாதார அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி.சில்வா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

அந்த நிகழ்விற்கு புளொட் தலைவரும் முன்னைநாள் வன்னிமாவட்ட பா. மாகிய .சித்தார்த்தன் அவர்கள் கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். வவுனியா வைத்தியசாலை இன்று இவ்வளவு தூரம் தரமுயர்ந்து நிற்பதற்கு, புளொட் தலைவர் 1994ம் ஆண்டு பா.உறுப்பினராக இருந்த காலத்தில் போடப்பட்ட அத்திவாரங்களும் அதற்கான முன்னெடுப்புக்களுமே இன்று மாடி கட்டிடங்களுடன் சிறந்த
வைத்தியசாலையாக தரமுயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

படம் இணைக்கப்பட்டுள்ளது






.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வன்னிப் பகுதிக்கு விஜயம்-


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்றையதினம் காலையில் வன்னிக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். இவ்விஜயத்தினை மேற்கொண்ட ஜனாதிபதி, அங்கு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து படையினரால் மீட்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்டுள்ளதுடன், வன்னி முழங்காவிலில் உள்ள 651வது இராணுவ படைத்தளத்தில் இராணுவ உயரதிகாரிகளுடன் அவர் சந்திப்பினையும் மேற்கொண்டுள்ளார். அத்துடன் படைவீரர்கள் மத்தியிலும் ஜனாதிபதி உரையாற்றியுள்ளார். இதேவேளை கிளிநொச்சி மற்றும் துணுக்காய் பகுதிகளில் இடம்பெயர்ந்த நிலையில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களையும் ஜனாதிபதி இன்று சந்தித்து அவர்களின் நிலைமைகளையும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணையுமா?:நாளை முடிவு


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரச கட்சிக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் எதிர்க்கட்சிகள் அடங்கிய ஐக்கிய தேசிய முன்னணி அணி திரண்டுள்ளது. இதில் ததேகூ இணைவது குறித்த முடிவு நாளை தெரியவரும் என அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

இந்தப் புதிய கூட்டு முன்னணியில் இணைவது என தமிழ்த் தேசிய கட்சியின் சார்பில் கொள்கையளவில் முடிவு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இது குறித்த இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நாளை கொழும்பில் கூடி, இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என அந்த முக்கியஸ்தர் மேலும் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை மாற்ற வேண்டும் என்பதே ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகின்ற போதிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தமிழ் மக்களின் அரசியல் நலன்களை முதன்மைப்படுத்துவதாகவே இருக்கின்றது.

இந்த நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியில் எந்த வகையில், என்ன வகையான முடிவோடு இணைந்து செயற்படுவது என்பது குறித்து நாளைய கூட்டத்தில் விரிவாக ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்த முக்கியஸ்தர் தெரிவித்தார்
பிரிட்டனுக்கான புதிய விசா விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தம்


புதிய விசா விண்ணப்பங்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 23 ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாதென கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

விசா வழங்கும் செயன்முறையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளமையால் புதிய விசா விண்ணப்பங்கள் தற்காலிகமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாதென தூதரக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

புதிய விசா விண்ணப்பங்கள் எதிர்வரும் 18 ஆம் புதன்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அதன் பின்னர் விசா விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் மீண்டும் எதிர்வரும் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையே ஆரம்பமாகும் என்றும் உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது
வவுனியாவிலிருந்து யாழ். வந்தோர் தொடர்மழையால் பெரும் பாதிப்பு



இடைத்தங்கல் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட மக்கள் தற்போது பெய்துவரும் தொடர்மழையால் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று இரவு வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து 3150 இற்கும் மேற்பட்டவர்கள் பஸ் மூலம் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டு துரையப்பா விளையாட்டரங்கில் இறக்கி விடப்பட்டனர்.

அடைமழையின் மத்தியில் இரண்டு கட்டங்களாக அழைத்து வரப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் நேற்று மாலை துரையப்பா விளையாட்டரங்கிற்கு வந்து சேர்ந்தனர். இவர்களுக்கான பதிவுகள் மற்றும் பணக் கொடுப்பனவுகள் செயலக அலுவலர்கள் மற்றும் நல்லூர் சண்டிலிப்பாய உடுவில் பிரதேச செயலக ஊழியர்கள் மேற்கொண்டார்கள்.

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த மக்களுக்கான மீள் குடியேற்றக் கொடுப்பனவுகளை வழங்கினார். யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.கணேஸ் உட்பட மற்றும் அலுவலர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.

இரண்டாம் கட்டமாக மேலும் 1500 இற்கும் மேற்பட்டவர்கள் இரவு பத்து மணியளவில் அழைத்து வரப்பட்டனர். நள்ளிரவு தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் பொதுமக்கள் கொண்டுவந்த உலர்உணவுப் பொருட்களான அரிசி, மா மற்றும் கருவாடு போன்றவை மழையில் நனைந்துவிட்டதாக பொது மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

நள்ளிரவு வேளை அழைத்து வரப்பட்ட மக்கள் மழை காரணமாக இருக்கக் கூட இடமில்லாது பெரும் துன்பங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, November 3, 2009

அவுஸ்திரேலிய கடலில் மூழ்கிய படகில் இருந்தவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை தொடர்கிறது-

அவுஸ்திரேலியாவின் கோகொஸ் தீவுகளுக்கு வடமேற்குக் கடலில் நேற்று முன்தினமிரவு மூழ்கிய படகில் இருந்தவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணி இடம்பெறுவதாக தெரிவித்துள்ள கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகம், கடல்வழி புலம்பெயர்வின் ஆபத்தை இச்சம்பவம் வெளிப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை இரு வெளிநாட்டு வர்த்தக கப்பல்கள் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவி வருவதாகவும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் அவுஸ்திரேலிய அதிகாரிகளும் ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. 42பேருடன் படகு மூழ்கியபோது 27பேர் காப்பாற்றப்பட்டிருப்பதுடன், ஏனையோர் நீரில் மூழ்கி பலியாகியிருக்கலாமென அஞ்சப்படுகிறது. அத்துடன் காணாமற் போனோரில் இதுவரை 03 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காணாமற் போனவர்கள் தொடர்பாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் காதி குளுக்மான் ஆழ்ந்தை கவலை வெளியிட்டுள்ளார். கடல்வழியாக ஆட்களைக் கடத்திச்செல்லும் அபாயத்தை இந்த துன்பகரமான சம்பவம் வெளிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். மக்களின் துன்பத்திலிருந்து ஆதாயம் தேடுவதற்கு ஆட்களைக் கடத்திச் செல்வோர் தயாராகவுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். இச்சம்பவத்தில் சுமார் 12பேர்வரை கடலில் மூழ்கியிருக்கலாமென அஞ்சப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...