13 ஜனவரி, 2011

இந்தியாவிற்கான கூகுளின் முக்கிய பொறுப்பில் இலங்கை வம்சாவளி தமிழர்





மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இந்தியாவிற்கான முன்னாள் முகாமைத்துவ இயக்குனரான ராஜன் ஆனந்தன் கூகுளின் இந்திய விற்பனை மற்றும் இயக்கங்களுக்கான உப தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

ராஜன் ஆனந்தனின் தந்தை வி.எஸ். குமார் ஆனந்தன் இலங்கையைச் சேர்ந்தவராவார்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குமார் ஆனந்தன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தவர் என்பதுடன் பல கின்னஸ் சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார்.

கூகுளானது இந்தியாவில் சுமார் 2000 ஊழியர்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவை வேகமாக வளர்ந்து வரும் ஒரு முக்கிய நாடாக இந்தியா கருதுகின்றது. இந்தியாவின் இணையப்பாவனையாளர்களின் விதம் வருடாந்தம் 50 % ஆக வளர்ந்து வருகின்றது.

கூகுளில் இணைவதற்கு முன்னர் ராஜன் ஆனந்தன் மைக்ரோசொப்ட், டெல், ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

காதலியை கொலைசெய்து சீமேந்தினால் மறைத்த நபர்





கடந்த டிசம்பர் மாதம் காணமல் போன அமெரிக்க லாஸ் வேகாஸ் நடன மங்கை ஒருவரின் உடலானது துண்டுகளாக வெட்டப்பட்டு, பிளாஸ்ரிக் வாளியில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்கொலையுடன் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் அப்பெண்ணின் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளான்.

டிபோரா புலோரஸ் நரஹேஸ் என்ற 31 வயதான அப்பெண் தனது காதலனாலேயே இவ்வாறு மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் லாஸ் வேகாஸில் உள்ள பிரபல விடுதியொன்றில் பணிபுரிந்து வந்த நடன மங்கையவார். ஜேசன் கிரிபித் என்ற அவரின் காதலனிற்கும் டிபோராவிற்கும் இடையில் இடம்பெற்ற வாய்த்தகராறு முற்றியதன் விளைவாகவே இக்கொலை இடம்பெற்றுள்ளது.

குறித்த அந்நபர் தனது காதலியை துண்டு துண்டாக வெட்டியது மட்டுமல்லமால் அதனை இரு வாளிகளில் அடைத்து அதனுள் சீமேந்துக் கலவையை இட்டு மறைத்துள்ளார்.

எனினும் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளை அடுத்து இந் நபர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நாமல் ராஜபக்ஷ மீதான புகார் விசாரிப்பு






நாமல் ராஜபக்ஷ
இலங்கை ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷவுக்கு கடந்த மாதம் இலங்கை சட்டக் கல்லூரியில் நடந்த தேர்வின் போது விசேட சலுகைகள் வழங்கப்பட்டதாகக் கோரி முன்வைக்கப்பட்ட ஒரு புகார் மீதான விசாரணை கொழும்பில் துவங்கியது.

இந்தப் புகாரை விசாரிக்க கொழும்பு சட்டக் கல்லூரியால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி உதித இகலஹேவ தலைமையிலான ஒரு நபர் ஆணையம் சட்டக் கல்லூரி வளாகத்தில் ஒன்றரை மணி நேரம் விசாரணையை நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விசாரணையின் போது புகார்தாரர் டி எம் துஷார ஜெயரத்ன விசாரணைக் குழு முன் நேரில் ஆஜராகி, இந்த விசாரணை தொடர்பாக தனது ஆட்சேபணையை முன்வைத்தார். தற்போது கல்லூரி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவுக்கு இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்று அவர் ஆட்சேபம் தெரிவித்தார்.

சட்டக் கல்லூரியின் வினாத் தாள்கள் சட்டவிரோதமாக வெளியானது என்றும், ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷ குளிருட்டப்பட்ட அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார் என்றும் அவர் புகார் அளித்திருந்தார்.

இந்த இரு புகார்களும் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளன. ஆனால் புகார் செய்ததன் காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜெயரத்ன கூறிய குற்றச்சாட்டை காவல் துறையினரிடம் முறையிடுமாறு ஆணையம் அறிவுறுத்தியது.

இந்தப் புகார் குறித்தும் விசாரணை நடைமுறைகள் குறித்தும் மறுதரப்புக் கருத்துக்கள் கிடைக்கப் பெறவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

விடுதலைப் புலி ஆதரவாளர்கள்" கைது




சுவிஸ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பத்து இலங்கை தமிழர்கள் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


புலிகள் ஆதரவு போராட்டங்கள்
கைது செய்யப்பட்டுள்ள பத்து ஆண்களும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுவதாக சுவிஸ் நாட்டின் தலைமை அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் மீது சட்டவிரோதமான பண பரிவர்த்தனைகள் மற்றும் குற்றக் குழுக்களின் உறுப்பினர்கள் என்கிற குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இருபது இடங்களில் தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டதாக சுவிஸ் நாட்டின் மத்திய குற்றவியல் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கைதுகளுக்கான புலனாய்வு நடவடிக்கைகள் 18 மாதங்களுக்கு முன்னர் தொடங்கின என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

கைது செய்யப்பட்டிருப்பவர்கள், சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் மற்ற தமிழர்களை விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி அளிக்கும்படி அழுத்தம் கொடுத்தனர் என்று நாட்டின் தலைமை அரச வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளவர்கள், அங்குள்ள தமது நாட்டைச் சேர்ந்த தமிழர்களை பெருந்தொகையான பணத்தை கடனாகப் பெற்று தம்மிடம் கையளிக்கும்படி மிரட்டியும், அச்சுறுத்தியும் பணிய வைத்தனர் என்று அரச தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை பல ஆண்டுகள் இடம் பெற்றன என்றும், அது அவர்களுக்கு பல மில்லியன் டாலர்களை ஈட்டிக் கொடுத்தது என்றும் அரச வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

சுவிஸ் நாட்டில் சுமார் 40,000 தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து சாட்சியம் அளிக்கும் வகையில் ஒரு சிறப்பு தொலைபேசி வசதியையும் சுவிஸ் நாட்டு அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் கட்சிகளின் அரங்கம் சந்திப்பு-





தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் சார்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக ஆராய்ந்து தீர்வினை முன்வைப்பதற்கென நியமிக்கப்பட்ட ஆறுபேர் கொண்ட உபகுழுவானது இன்றுபிற்பகல் 2.30 அளவில் கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் கூடியது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிறேமச்சந்திரன், சுமந்திரன் ஆகியோரும், தமிழ் அரங்கம் சார்பில் புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அ.இராசமாணிக்கம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் இடத்திற்கு தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன்போது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக குறித்த உபகுழுவானது ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுப்பதுடன், பேச்சுவார்த்தைகளின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரோ மேற்படி உபகுழு சார்பில் எடுக்கப்பட்ட பொது நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புளொட் உதவி- மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு படகுகளில் கொண்டுசெல்லும் பணிகளிலும், பிரதேச செயலகங்களிலிருந்து வழங்கப்படும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவுப் பொருட்களை எடுத்துச்சென்று விநியோகிக்கும் நடவடிக்கையிலும் புளொட் உறுப்பினர்கள் கடந்த நான்கு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.சூட்டி, உதவி அமைப்பாளர் திரு.கேசவன் உட்பட புளொட் உறுப்பினர்கள் பலர் இயந்திரப்படகுகளைப் பயன்படுத்தி இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்றையதினம் புதுமண்டபத்தடி, குறிஞ்சாமுனை, கரையாக்கன்தீவு, கொத்தியாவளை பகுதிகளில் புளொட் உறுப்பினர்கள் பிரதேச செயலகங்களில் இருந்து உலருணவுப் பொருட்களை இயந்திரப் படகுகளில் எடுத்துச்சென்று விநியோகிக்கும் நடவடிக்கையிலும், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லும் பணிகளிலும் ஈடுபட்டு வருவதுடன், நோயினால் பாதிக்கப்பட்ட மக்களை மட்டக்களப்பு வைத்தியசாலைக்கும், வைத்தியர்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் அழைத்துச் செல்வதிலும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...