15 அக்டோபர், 2009

14.10.2009 தாயகக்குரல் 23

நடந்து முடிந்துள்ள தென் மாகாண சபை தேர்தலில் ஆளும் கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 38 உறுப்பினர்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று வெற்றியடைந்துள்ளது. புலிகளுக்கெதிரான இராணுவ வெற்றியையும், தென்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் முன்வைத்து தேர்தலில் இறங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 80 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்து வந்தது. ஆனால் அவர்களுக்கு கிடைத்தது 67 வீதமான வாக்குகளே.

இதை அரசாங்கத்துக்கு கிடைத்த தோல்வியாகவே எதிர்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ பெற்ற வாக்குகளை விட 20ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் இந்த மாகாண சபைத் தேர்தலில் குறைவாகப் பெற்றுள்ளதாகவும் ஆகவே இது அரசுக்கு மக்களிடையே செல்வாக்கு குறைந்திருப்பதை காட்டுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கிறது. இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு 72ஆயிரத்து 379 வாக்குகளுடன் மூன்று உறுப்பினர்களைப் பெற்ற ஜே.வி.பி. கடந்த ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல், மகாணசபைத் தேர்தல் ஆகியவற்றில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆதரித்திருந்தது. அதன் மூலம் கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஜே.வி.பி. 14 உறுப்பினர்;களைப் பெற்றிருந்தது.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் நிலை என்ன? கடந்த மாகாணசபையில் 19 உறுப்பினர்களை கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி இப்போது 14 உறுப்பினர்களை மாத்திரம் பெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிமசிங்கா பெற்ற வாக்குளைவிட தென்மாகாண சபை தேர்தலில் சுமார் இரண்டு இலட்சம் வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி இழந்துள்ளது.. ஆனால் இந்த வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு போனதாகவும் தெரியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்குகள் குறைந்ததாலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறுதிப் பெரும்பான்மை பெற முடிந்ததே அல்லாமல் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மக்கள் ஆதரவு அரசுக்கு அதிகரித்துள்ளதாக கருதமுடியாது.

தென்மாகாண சபைதேர்தலில் 17 இலட்சத்து 61ஆயிரத்து 859 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த போதிலும் 12 இலட்சத்து 20 ஆயிரத்து 42 பேரே வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில் 5 இலட்சத் 41ஆயிரத்து 817 பேர் வாக்களிக்கவில்லை.

92 வீதமான பெரும்பான்மை இன வாக்காளர்களைக் கொண்ட தென்மாகாண சபை காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். அது மாத்திரமல்ல ஜனாதிபதியின் சொந்த மாவட்டமாகும். ஜனாதிபதி இந்த மாவட்டங்களில் பாரிய அபிவிருத்தி வேலைகளை மேற்கோண்டுள்ளார். அம்பாந்தோட்டையில் 360 மில்லியன் அமெரிக் டொலர் செலவில் சர்வதேச துறைமுகம் நிர்மாணிக்கப்படுகிறது.

தென் மாகாணத்தில் தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளுராட்சி சபைகளில் உள்ள உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் என பலர் அக்கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்தப்போவதாக தெரிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டனர். இப்படிப்பட்ட பல சாதகமான சூழ்நிலைகள் அரசுக்கு இருந்த நிலையில் அவர்கள் பெற்ற இந்த வெற்றியை பெரிய வெற்றியாக கருதமுடியாது. இந்த வெற்றி ஜனாதிபதி தேர்தலுக்கு அனுகூலமாக அமையுமா என்ற சந்தேகம் பல மட்டங்களில் தெரிவிக்கப்படுகின்றன.

மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனேயே பாரிய தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்கத் தயாராகுமாறு ஜனாதிபதி அரசாங்க கட்சிகளுக்கு அறிவித்துள்ளார். பாரிய தேர்தல் ஜனாதிபதி தேர்தலா அல்லது பொது தேர்தலா என்பது தெரிவிக்கப்படவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நியமிப்பது தொடர்பான முயற்சிகளில் எதிர்கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன. யுத்த காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்து ஜெனரல் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் முயற்சிகளையும் எதிர்கட்சிகள் மேற்கொள்வதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஜெனரல் சரத்பொன்சேகா எதிர்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் கடுமையான போட்டி இருக்கும் என்பதில் ஐயமில்லை.

யுத்தத்;தை முன்னின்று நடத்தியவர் என்பதாலும் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் சிங்கள மக்கள் சரத் பொன்சேகாவை ஆதரிக்கலாம் என்று அரசியல் அவதானிகள் அபிபிராயம் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் வடமாணம் தவிர்ந்த எட்டு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு எட்டு மாகாண சபைகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றிக் கொண்டுள்ளது. இந்த எட்டு மாகாண சபைகளுக்குமான தேர்தல்களில் 130 இலட்சத்து 13 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த போதிலும் 85 இலட்சத்து 47 ஆயிரம்பேர் மாத்திரமே வாக்களித்துள்ளர். சுமார் 44 இலட்சத்து 65ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை. இது மக்களின் விரக்தி நிலையையே காட்டுகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் வாக்காளர் தொகை அதிகரித்த நிலையிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்குகள் அதிகரிக்காததையும் ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வியையும் கணக்கில் எடுத்தால் இரண்டு தேசியக் கட்சிகளிலுமே மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர் என்பது தெரிகிறது.

இரண்டு கட்சிகளுமே இனப்பிரச்சினை தொடர்பாக நிலையான கொள்கைகளை கொண்டிருக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு யுத்த வெற்றிகளால் கிடைத்துள்ள மக்களின் ஆதரவு நிரந்தரமானதல்ல. யுத்தம் முடிந்துள்ள நிலையில் யுத்தத்தை மக்கள் மெல்ல மெல்ல மறந்து வருகின்றனர். யுத்த தளபாட கண்காட்சிகள் மூலம் நீண்ட காலத்துக்கு யுத்தத்தை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கவும் முடியாது.

இந்த நிலையில் அனைத்து மக்களின் ஆதரவையும் அரசாங்கம் பெறவேண்டுமானால் நாட்டைக் கட்டியெழுப்புவதிலும், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதிலும் சிறுபான்மை மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளை வழங்கவும் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவேண்டும்.

மேலும் இங்கே தொடர்க...
தமிழர் இறந்தால் என்ன? இந்திய-இலங்கை உறவு நன்றாக இருந்தால் போதும் என்ற நினைப்போ? : விஜயகாந்த் கேள்வி



காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்த சில மணிநேரங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

"தமிழகத்திலிருந்து இலங்கைக்குச் சென்று வந்த நாடாளுமன்றக் குழுவால் அங்குள்ள தமிழர்களுக்கு எதுவித நன்மையும் கிடையாது. அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷவுடன் இனித்துப் பேசி, கைகுலுக்கி, புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துவிட்டு, நாடு திரும்பியுள்ளது நாடாளுமன்றக் குழு.

இந்தப் பயணம் ராஜபக்ஷவுக்குத்தான் அனுகூலமாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் தமக்குத் தாமே நற்சான்றிதழ் கொடுத்துவிட்டார்கள் என்று அவரை குறை சொல்லக்கூடிய ஐ.நா. சபைக்கும் மற்ற ஜனநாயக நாடுகளுக்கும் ராஜபக்ஷ இதை பயன்படுத்திக் கொள்வார்.

மாணவர்கள் கேள்வி

"இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டமைக்காக, இதுவரை ஒரு லட்சம் தமிழர்கள் பழிவாங்கப்பட்டு விட்டனர்.

இன்னும் எத்தனை தமிழர்களைக் கொல்லப் போகிறீர்கள்" என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நாடாளுமன்றக் குழுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேரழிவு ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களை இலங்கை இராணுவம் சுட்டு வீழ்த்திக் கொண்டிருந்தபோது, போர் நின்றுவிட்டது என்று அறிவித்த முதல்வர் கருணாநிதியை உலகத் தமிழர்களின் தலைவர் என்று எப்படி அழைக்க முடியும் என்று மற்றொரு மாணவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தக் கேள்விகளுக்கு நாடாளுமன்றக் குழு பதிலளித்ததாகத் தெரியவில்லை.

"எங்கள் கூட்டணி சார்பில் பிரதமரை சந்தித்து மனு கொடுத்தோம். அதை ஏற்றுக்கொண்டு இலங்கை செல்ல அனுமதி அளித்தார். இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் எதிர்க்கட்சிகளும் இதுபோல் செய்யட்டும்" என்று முதல்வர் கருணாநிதி அறிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்திலேயே இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒற்றுமை வேண்டும் என்றபோது அதை அன்று சீரழித்தவர் இதே கருணாநிதிதான்.

பிரித்தாளும் சூழ்ச்சி

இவர் என்றைக்கு அரசியலில் புகுந்தாரோ அன்று முதல் இன்று வரை பிரித்தாளும் சூழ்ச்சி மூலமே முன்னுக்கு வந்தவர் என்பதை உலகம் அறியும்.

நாடாளுமன்றக் குழு இங்கிருந்து இலங்கை சென்றுதான் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றால் இலங்கையில் இந்தியத் தூதரகம் எதற்கு?

பேராபத்தில் தமிழர்கள் இருந்தபோது, இந்திய அரசு, மௌனம் சாதிப்பது யாருக்காக? இந்த அரசு எவருக்காக செயற்படுகிறது என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

தமிழர்கள் இறந்தாலும் பரவாயில்லை இந்திய - இலங்கை உறவு நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்கிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது" என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...
அவுஸ்திரேலியா இன்றேல், வேறு எங்காவது அனுப்புங்கள் : 9 வயது இலங்கை சிறுமி கோரிக்கை

உங்களது பிள்ளைகள் போல நினைத்துக் கொள்ளுங்கள். தயவு செய்து எங்களையும், எங்களது உயிர்களையும் காப்பாற்றுங்கள். எங்களால் இலங்கையில் வாழவே முடியாது. அவுஸ்திரேலியா இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, வேறு எந்த நாட்டுக்காவது எங்களை அனுப்பி விடுங்கள்" என இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகில் தவித்துக் கொண்டிருக்கும் 9 வயது தமிழ்ச் சிறுமி உருக்கமுடன் கேட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து பெருமளவில் பணம் கொடுத்து மலேசியா சென்று அங்கிருந்து சிறிய கப்பல் மூலம் 300 பேர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனர்.ஆனால் அவர்களை இந்தோனேஷிய கடற்படையினர் தடுத்து தற்போது மேற்கு ஜாவா தீவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இவர்களை தற்போது கப்பலிலிருந்து இறக்க கடற்படையினர் முயற்சித்து வருகின்ற போதிலும் தங்களை கப்பலிலிருந்து அப்புறப்படுத்த முயன்றால், காஸ் சிலிண்டர்களை வெடிக்க வைத்துத் தற்கொலைசெய்து கொள்வோம் என தமிழர்கள் கூறி வருவதால் கடற்படையினர் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கின்றனர்.

இந்த நிலையில் தங்களது உயிர்களையும், தங்களையும் காப்பாற்றுமாறும், புகலிடம் அளிக்க வேண்டும் என்றும் கோரி தமிழர்கள் உருக்கமான கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்தக் கப்பலில் உள்ள 9 வயது சிறுமி பிருந்தா கதறியபடி விடுத்துள்ள உருக்கமான கோரிக்கையை ஆஸ்திரேலியாவின் ஏ.பி.சி .டிவி ஒளிபரப்பியுள்ளது.

சிறுமி பிருந்தா,

" உலக அரசுகளே, உங்களது கதவுகளை எங்களுக்காகத் திறந்து வையுங்கள். தயவு செய்து எங்களையும், எங்களது உயிர்களையும் காப்பாற்றுங்கள். நாங்கள் உங்களது பிள்ளைகள். தயவு செய்து, எங்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

ஐயா, தயவு செய்து எங்கேயாவது எங்களை அழைத்துச் செல்லுங்கள். அது அவுஸ்திரேலியாவாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எங்களை ஆதரிக்கும் எந்த நாடாக இருந்தாலும் பரவாயில்லை. எங்களால் இலங்கையில் வாழவே முடியாது" என்று கண்களில் நீர் வழிய உருக்கமாக கூறியுள்ளார்.

மிகவும் சிறிய கப்பலில் 290 பேர் அடைபட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அவர்கள் அதில் அடைபட்டுத் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையே, அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் இதுபோல புகலிடம் கோரி வருவோருக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன. 1200 பேர் மட்டுமே தங்கக் கூடிய வசதி முன்பு இருந்தது. தற்போது மேலும் 280 தற்காலிக படுக்கைகள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் 1400 பேருக்கும் மேல் தங்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அஸ்திரேலியாவுக்குச் சட்டவிரோதமாக அகதிகளாக வருவோர் இங்கு அனுப்பப்பட்டு முறையான விசாரணைக்குப் பின்னர் புகலிடம் கோருவதற்கான காரணங்கள் முறையாக இருந்தால் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுகின்றனர்.

தற்போது இந்தத் தடுப்பு முகாமில் ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மேலும் பல தற்காலிக தங்குமிடங்களை ஏற்படுத்துவது குறித்து அவுஸ்திரேலிய அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் 1650 இற்கு மேற்பட்ட இலங்கையர்கள் இங்கு வந்துள்ளனர். இவர்களில் 1305 பேர் தற்போது இத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...
தீபாவளிக்குப் பிறகு கவனயீர்ப்புப் போராட்டம் குறித்து அறிவிப்பு : எஸ்.சதாசிவம்
"கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராகக் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்துவது குறித்துத் தீபாவளி பண்டிகைக்குப்பிறகு தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்படும்" என இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது :

"தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புதிய கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில சரத்துக்கள் தொடர்பாக பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன.

தோட்டத் தொழிலாளரின் அடிப்படை நாட்சம்பளம் 285 ரூபாவாகவும், ஒரு நாள் வேலையின் இலக்குக்கான கொடுப்பனவாக 30 ரூபாவாகவும், தோட்ட நிர்வாகம் வேலை வழங்கும் நாட்களில் 75 வீத வருகைக்காக 90 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளதாக புதிய கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்தச் சம்பளக் கொடுப்பனவை அனைத்துத் தொழிலாளர்களும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 405 ரூபா சம்பளத்தினை தீர்மானிப்பதில், தோட்ட நிர்வாகங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதற்கான சந்தர்ப்பமும் அதிகரித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலைமை காரணமாக தோட்டத்தொழிலாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை வலுவாகக் காணப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக தொழிலுறவு ஆணையாளருக்கு செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்திற்கு இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை. சாதகமன பதிலே கிடைக்குமென்று எதிர்பார்க்கின்றோம்.

இவ்வாறானதொரு நிலையில் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிரான மலையக தொழிற்சங்க அமைப்புக்களை ஒன்று திரட்டி மேற்கொள்ளப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டங்கள் குறித்துத் தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம்.

தீபாவளி பண்டிகைக்குப்பிறகு இந்தப்போராட்டம் குறித்து தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்படும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...
முதல் கட்டமாக 58,000 பேர் 15 நாட்களுக்குள் மீளக்குடியமர்த்தப்படுவர்-கருணாநிதி


வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து முகாம்களில் உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரில் முதல் கட்டமாக 58,000 பேர் 15 நாட்களுக்குள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று இலங்கை மஹிந்த ராஜபக்ச உறுதி அளித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்று திரும்பிய திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழு எம்.பிக்கள் நேற்று சென்னை திரும்பினர். பின்னர் அவர்கள் முதல்வர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து 9 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தனர்.பின்னர் முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"இந்தியக் குழுவை அனுப்பி இலங்கை நிலவரத்தை நேரில் தெரிந்து கொள்ளுமாறு எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் நான் செயல்படுவது முறையல்ல என்பதால் மத்திய அரசுக்கு அனுப்பினேன். அதன் பிறகு தமிழர்கள் அங்குள்ள முகாம்களில் அடைக்கப்பட்டு அல்லலுறுவதாக செய்திகள் வந்தன.

திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் டெல்லி சென்று பிரதமர் மற்றும் சோனியா காந்தியை சந்தித்தனர். இலங்கை ஜனாதிபதியின் கடிதத்துக்கு இணங்க ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். அதன் பேரில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் சென்னை வந்து என்னை சந்தித்தார். இருவரும் பேசி, 10 எம்.பி.க்கள் கொண்ட குழுவை அனுப்ப முடிவு செய்தோம்.

திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் செலவில் குழு செல்ல தீர்மானிக்கப்பட்டது. அதற்கு இலங்கை அரசின் ஒப்புதல் பெற்றோம்.இதன் அடிப்படையில் 10ஆம் திகதி இந்தியக் குழு இலங்கைக்கு சென்றது. அங்கு அவர்கள் யாரையெல்லாம் சந்தித்தார்கள், தமிழர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று அந்த குழு என்னிடம் அறிக்கை தந்துள்ளது. அது தவிர இந்த பயணத்தால் ஏற்பட்ட பயன்களையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

அங்குள்ள முகாம்களில் 2 லட்சத்து 53 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர். மழைக்காலம் தொடங்குமுன் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியக் குழு வலியுறுத்தியது.

அதை ஏற்று முதல் கட்டமாக 58 ஆயிரம் பேரை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறோம் என்று உறுதி அளித்துள்ளனர். எஞ்சியிருப்பவர்களை படிப்படியாக அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும் உறுதியளித்தனர். அந்த பணி நாளை தொடங்குகிறது. இந்த ஆறுதலான செய்தியை தமிழக மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்னும் நிறைய கண்ணி வெடிகளை அகற்ற வேண்டியிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதற்கு இந்திய அரசு உதவியை கேட்டுள்ளது. அப்படி உதவுவது தமிழர்களின் துன்பத்தை விரைவில் நீக்கும் என்று மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டி இருக்கிறோம். அனாதை குழந்தைகள், ஊனமுற்றவர்கள் ஆகியோரை தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயற்சி எடுக்கப்படும் என்றும் இலங்கை உறுதி அளித்திருக்கிறது.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி விட்டது என்பதை குழு விளக்கியுள்ளது. இனி அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதற்கு இந்திய அரசு ஒத்துழைப்பு வேண்டும் என கேட்டுள்ளது" என கருணாநிதி
மேலும் இங்கே தொடர்க...