2 பிப்ரவரி, 2010

மதியாமடு மக்கள் இவ்வாரம் மீள்குடியேற்றப்படுவதாக வவுனியா அரச அதிபர் தெரிவிப்பு-

மீள்குடியேற்ற நடவடிக்கைகளின்கீழ் வவுனியா மதியாமடு பிரதேச மக்கள் இவ்வாரத்தில் மீள்குடியேற்றப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசஅதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மதியாமடு பிரதேசத்தில் கண்ணி வெடியகற்றும் நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளதையடுத்து அப்பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்வதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், இவ்வாரத்திற்குள் அப்பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெறுமெனவும் தெரிவித்துள்ளார். மதியாமடு பிரதேசத்தில் சுமார் 300குடும்பங்கள் மீள்குடியேற்றப்படுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை மீள்குடியேற்ற நடவடிக்கையின்கீழ் இன்று 1000; பேர் பூநகரியில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளை ஓய்வுபெறச் செய்ய நடவடிக்கை-

கடந்த தேர்தல் காலப்பகுதியிலும் அதன்பின்னர் விசேட பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியிலும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 12 இராணுவ அதிகாரிகளை பதவிகளைப் பாராது சேவையிலிருந்து ஓய்வுபெறச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சிலர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாக செயற்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படைப்பிரிவுகளில் அத்தியாவசியத் தேவைப்பாடாக காணப்படும் ஒழுக்கத்தைப் பேணுவது மற்றும் பாதுகாப்பு உறுப்பினர்கள் அரசியல் மயமாக்கப்படுதலை தடுக்கும் நோக்கிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமது சேவைக்காலத்தினுள் அரசியல் நடவடிக்கைகளில் தலையிட்டு இராணுவ ஒழுக்கத்திற்கு மாறாக செயற்பட்ட இராணுவ அதிகாரிகளை தொடர்ந்தும் பணியில் வைத்திருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு நேரடித் தாக்கம் செலுத்துமென பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக யாழ். மீனவர்களுக்கு அசௌகரியம்-

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகத் கூறப்படுகிறது. யாழ்ப்பாண கடற்பிரதேசத்திற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசிப்பதாகவும், இதனால் தமது ஜீவனோபாயத் தொழிலை மேற்கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தவேளை இந்த முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சில நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடி படகுகள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதாக யாழ். அரசஅதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் இவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதில்லை என்ற போதிலும் அடிக்கடி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறல்களை நடத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அமைச்சர் பொகொல்லாகம அறிவித்துள்ளார். 50 வீதமான மீன்பிடி உற்பத்திகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படுவதாக அரசஅதிபர் தெரிவித்துள்ளார். தற்போது வருடாந்தம் 2000 மெற்றிக்தொன் அளவில் மீன்உற்பத்தி செய்யப்படுவதாகவும், 1981ம் ஆண்டு காலப்பகுதியில் 4ஆயிரம் மெற்றிக்தொன் வரையில் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இன்று பூநகரியில் 1000ற்கும் மேற்பட்டவர்கள் மீள்குடியமர்வு-

நலன்புரி நிலையங்களிலுள்ள ஒரு தொகுதி மக்கள் இன்று மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த 1000ற்கும் மேற்பட்டவர்களே இன்றையதினம் மீள்குடியமர்த்தப்படுவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் முகாம்களில் எஞ்சியுள்ளவர்களை நெடுங்கேணி பிரதேசத்தில் மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களை எதிர்வரும் 05ம் மற்றும் 06ம் திகதிகளில் மீள்குடியமர்த்தத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த செயற்பாடுகள் தொடர்பாக எந்த வகையான விசாரணைக்கும் அனுமதியில்லை-பாதுகாப்புச் செயலாளர்-

புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் குறித்து எந்த வகையான விசாரணைக்கும் அனுமதியளிக்கப் போவதில்லை என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதி தேர்தலில், பிரதான எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டின் சட்டதிட்டங்களை மீறியுள்ளார் என்று பாதுகாப்புச் செயலர் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கையின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு ஜெனரல் சரத் பொன்சேகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார். இலங்கையில் இனங்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் அமைந்திருப்பது தவறு என்றும், அவை கொள்கைகளின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என தான் கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நவம்பர் 19ம் திகதி 02வது தடவையாக சத்தியப்பிரமாணம்-

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் நவம்பர்மாதம் 19ம்திகதி இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். தனது இரண்டாம் கட்ட பதவிக்காலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி ஆலோசனை கோரியிருந்தார். உயர்நீதிமன்ற நீதியரசர் அசோக டிசில்வா தலைமையிலான ஏழு நீதியரசர்கள் கொண்ட குழுவினர் இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதன்படி எதிர்வரும் நவம்பர் 19ம்திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2வது தடவையாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். இது தொடர்பிலான விளக்க அறிக்கையொன்று உயர்நீதிமன்றத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக பேச்சாளர் லிஸ்சியான் ராஜகருணா கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டியது ஜனாதிபதியின் தலையாய கடமையாகும்-புளொட்




இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டியது ஜனாதிபதியின் தலையாய கடமையாகும்-புளொட்- நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச அவர்கள் பெற்ற மாபெரும் வெற்றியையிட்டு எமது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம். எமது கட்சியின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை ஆதரித்த தமிழ் மக்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இத்தேர்தலில் தமிழ்மக்கள் குறைந்தளவிலேயே மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்திருந்தாலும் இந்த நாடு முழுவதற்குமான ஜனாதிபதி அவரே என்பது யதார்த்தமாகும்.. மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான கௌரவமான தீர்வை காண்பேன் என நாட்டு மக்களுக்கு தெரிவித்திருந்தார்.. இதற்கான ஆணையை மிகப் பெரும்பான்மையான மக்களும் வழங்கியுள்ளார்கள். எனவே இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டியது அவரது தலையாய கடமையாகும். இந்த இரண்டாவது ஆட்சிக்காலத்தில், ஏற்கனவே அவர் எமக்கு உறுதியளித்தவாறு இதனை நிறைவேற்றுவார் என நம்புகிறோம்.

ஆயுதப் போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள இன்றைய நிலையில், இனப்பிரச்சினைக்கான தீர்வானது ஐக்கிய இலங்கைக்குள்தான் என்பதும் ஜனாதிபதியுடன் பேசித்தான் தீர்வு காணவேண்டும் என்பதும் இன்று சகல தமிழ் அரசியல் தலைமைகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய யதார்த்தமாகும். யுத்த இறுதிக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் எம் அனைவரது நெஞ்சங்களிலும் மாறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் யுத்த அழிவுகளுக்கு பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை என கூறி சொல்லொணாத் துயரங்களை சுமந்து நிற்கும் எஞ்சியுள்ள எமது மக்களை தொடர்ந்தும் அவலத்துக்குள் சிக்கவைத்து சுயலாப அரசியலை மேற்கொள்ளும் தலைமைகளை இனங்கண்டு தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.

ஜனாதிபதி அவர்கள், ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்கு நீண்ட காலத்திற்கு முன்பே எமது கட்சிக்கு உறுதியளித்தவாறு இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், புலிகளால் பலவந்தமாக இணைக்கப்பட்டு தற்போது தடுப்பு முகாம்களில் உள்ள சிறுவர்களை அவர்களின் பெற்றோர்களிடம் கையளித்தல், வடக்கு - கிழக்கிற்கு முன்னுரிமை அடிப்படையிலான அபிவிருத்தி ஆகிய விடயங்களை தொடர்ந்தும் துரித கதியில் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

த.சித்தார்த்தன்

தலைவர்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
மேலும் இங்கே தொடர்க...



பொது வாக்கெடுப்பில் ஈழத்துக்கு ஆதரவு;​ நிராகரித்தது இலங்கை




கொழும்பு,​​ பிப்.​ 1:​ ஈழம் தொடர்பாக பிரிட்டனில் தமிழர்களிடையே நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் முடிவை இலங்கை நிராகரித்துவிட்டது.

பிரிட்டனில் கடந்த வாரம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.​ இதில் 64,692 பேர் பங்கேற்றனர்.​ இவர்களில் 64,256 பேர் ஈழத்துக்கு ஆதரவாகவும்,​​ 185 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.​ 251 பேர் வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது.

இந்த வாக்கெடுப்பு குறித்து இலங்கையின் மூத்த அமைச்சர் கெஹிலியா ரம்பக்வெல்லா திங்கள்கிழமை கூறியதாவது:

இலங்கை, ​​ பிரிட்டனின் காலனி ஆதிக்க நாடு அல்ல என்பதை வாக்கெடுப்பு நடத்தியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.​ இறையாண்மை மிக்க நாடு இலங்கை.​ மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப இங்கு ஆட்சி நடைபெறுகிறது.

இது போன்ற வாக்கெடுப்பு குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.​ எனவே,​​ இந்த வாக்கெடுப்பை நிராகரிக்கிறோம் என்றார்.

இலங்கை:​ 12 மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு




கொழும்பு,​​ பிப்.​ 1:​ இலங்கையில் 12 மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 3 மேஜர் ஜெனரல்கள்,​​ 2 பிரிகேடியர்களும் அடங்குவர்.

இவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும்,​​ அதிபர் தேர்தலின்போது அரசியலில் ஈடுபட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவர்கள் தவிர,​​ எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரும்,​​ முன்னாள் ராணுவத் தளபதியுமான பொன்சேகாவுக்கு ஆதரவாகக் கருதப்பட்ட பல்வேறு ராணுவ அதிகாரிகளையும் அதிபர் ராஜபட்ச இடமாற்றம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.







பார்லிமென்ட் தேர்தலில் கூட்டணி: பொன்சேகா மீண்டும் தீவிரமாகிறார்





கொழும்பு: "விரைவில் நடக்கவுள்ள பார்லிமென்ட் தேர்தலிலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தொடரும்' என, தமிழ் தேசிய கூட்டணி அறிவித்துள்ளது. இதனால், பொன்சேகா மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறார்.


இலங்கை தமிழ் தேசிய கூட்டணிக் கட்சி தலைவர்களில் ஒருவரான சம்பந்தன் கூறியதாவது: அதிபர் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் எதிர்க்கட்சி வேட்பாளர் பொன்சேகாவுக்கு அதிக ஓட்டுகள் விழுந்துள்ளன. இது, எதிர்க்கட்சி கூட்டணிக்கு உற்சாகம் தரும் தகவல். எனவே, விரைவில் நடக்கவுள்ள பார்லிமென்ட் தேர்தலிலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தொடரும். இவ்வாறு சம்பந்தன் கூறினார்.


எதிர்க்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுல் ஹக்கீம் கூறுகையில், "தமிழ் தேசிய கூட்டணி கட்சியுடன் கூட்டணி தொடரும். பொன்சேகாவை ஆதரிக்கும் விஷயத்திலும் மாற்றம் இல்லை. கூட்டணியை தொடர்வது குறித்து ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர்களிடமும் பேசி வருகிறோம்' என்றார்.




சிகரெட் விற்பனையை குறைக்க பிரிட்டன் முடிவு



லண்டன்: பிரிட்டனில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிரிட்டனில் கடந்த 2007ம் ஆண்டு முதல் பொது இடங்களிலும், பணி செய்யும் இடங்களிலும் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவால் தற்போது மூன்றரை லட்சம் பேர் புகைப்பதை விட்டு விட்டனர்.


தற்போது, பிரிட்டனில் 21 சதவீதம் பேர் புகைத்து வருகின்றனர். வரும் 2020ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 10 சதவீதமாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் ஆன்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். "சிகரெட் குறித்த கவர்ச்சி விளம்பரங்களை தடை செய்வது, சிகரெட் மீது அச்சிடப்படும் கவர்ச்சிப் படங்கள் மற்றும் வாசகங்களை தடை செய்வது, காசு போட்டால் சிகரெட் கொடுக்கும் இயந்திரங்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்' என, அமைச்சர் பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். "அரசின் இந்த கடுமையான நடைமுறை தனிமனித சுதந்திரத்தை பாதிப்பதாக உள்ளது' என, சிகரெட் உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

பிளாஸ்ரிக் பொருட்களிலிருந்து எரிபொருள் உற்பத்தி செய்ய திட்டம்



பாவனைக்குதவாத பிளாஸ்ரிக் பொருட்களில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்யும் திட்டமொன்றை மத்திய சுற்றாடல் அதிகார சபை அடுத்த மாதம் ஆரம்பிக்க உள்ளதாக சுற்றாடல் அதிகார சபைத் தலைவர் டபிள்யூ. அபேவிக்ரம தெரிவித்தார்.

இதற்காக யட்டியந்தோட்டையில் தொழிற்சாலை யொன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் இங்கு உற்பத்தி செய்யப்படும் எரிபொருள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாவனையில் இருந்து ஒதுக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் சூழல் மாசடைவதை தடுக்கும் வகையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

எரிபொருள் உற்பத்தி செய்வதற்காக வவுனியா நிவாரணக் கிராமங்களில் பாவிக்கப்படும் பிளாஸ்ரிக் போத்தல்களும் எடுத்துவரப்பட உள்ளதோடு நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்தும் பிளாஸ்ரிக் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளன. கிலோ 20 ரூபா வீதம் பிளாஸ்டிக் பொருட்கள் கொள்வனவு செய்யபட உள்ள தோடு அவை தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு எரிபொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபைத் தலைவர் கூறினார்.

பிளாஸ்ரிக்கில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை தனியார் ஒருவர் கண்டு பிடித்துள்ளார். மொரட்டுவ பல்கலைக்கழத்தின் ஆலோசனையை பெற்று மேற்படி எரிபொருள் உற்பத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இந்தத் திட்டத்திற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை 10 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது. ஆரம்பத்தில் சிறிய அளவில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளதோடு அதன் பெறுபேற்றின் படி பாரிய அளவில் எரிபொருள் உற்பத்தி செய் திட்டமிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலும் பிளாஸ்ரிக் மூலம் எரிபொருள் உற்பத்தி செய்யும் திட்டங்கள் வெற்றியளித்துள்ளதாக கூறிய அவர், முதற்கட்டமாக பெற்றோல் உற்பத்தி செய்யப்பட உள்ளது என்றார்.

இந்த உற்பத்தித் திட்டம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கும் உற்பத்தியாளருக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.





மதியாமடுவில் இவ்வாரம் மீள்குடியேற்றம்



மீள் குடியேற்ற நடவடிக்கைகளின் கீழ் வவுனியா மதியாமடு பிரதேச மக்கள் இவ்வாரத்தில் மீள் குடியேற்றப்படவுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

மதியாமடு பிரதேசத்தில் கண்ணி வெடியகற்றும் நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளதையடுத்து அப்பிரதேசத்தில் மீள் குடியேற்றம் செய்வதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், இவ்வாரத்திற்குள் அப்பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெறுமெனவும் தெரிவித்தார்.

மதியாமடு பிரதேசத்தில் சுமார் 300 குடும்பங்கள் மீள் குடியேற்றப்படுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை மீள்குடியேற்ற நடவடிக்கையின் கீழ் இன்று ஆயிரம் பேர் பூநகரியில் மீள்குடியேற்றம் செய்யப்படவு ள்ளமையும் குறிப்பிடத்தக்கது


இலங்கைக்கான உலக உணவு திட்ட நிதியுதவி ரூ.3288 மில். அதிகரிப்பு



ஐக்கிய நாடுகள் சபை உலக உணவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கும் நிதியுதவியை 3288 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

2010 ஆண்டுக்கான செயற்திட்டங்களுக்கு இந்நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் குறிப்பாக உள்நாட்டில் இடம்பெயர்ந்து மீளக்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான உணவுத் தேவைகளைக் கருத்திற் கொண்டே இந்நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேச நிர்மாண அமைச்சு தெரிவித்தது.

ஐ.நா.உலக உணவுத்திட்ட நிறுவனமானது ஏற்கனவே 2010 ஆம் ஆண்டுக்கென 134.45 மில்லியன் அமெரிக்க டொலரையே இலங்கைக்கென ஒதுக்கியிருந்தது. இடம்பெயர்ந்தோரின் உணவுத் தேவைகளைக் கருத்திற் கொண்டு பின்னர் இந்நிதி 163.50 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி ஜோஷெல் கூரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை உலக உணவுத் திட்டத்தின் கீழ் கல்வி நடவடிக்கைகளின் போதான உணவு, தாய் - சேய் சுகாதார உணவுத் திட்டம் யுத்தத்தினால் பாதிக்க ப்பட்ட மக்கள் மற்றும் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான உணவு, யுத்தப் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களில் வாழும் மக்கள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே நிதியுதவிகளை வழங்கி வருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...
35 இலட்சம் தனியார் ஊழியர்களுக்கு 15 சதவீதம் சம்பள உயர்வு

தொழில் திணைக்களம் பேச்சுவார்த்தை நடத்துகிறது



தனியார்த்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக சம்பள நிர்ணய சபைகளுடன் பேச்சு நடத்தி வருவதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 35 இலட்சம் தனியார் துறை ஊழியர்களுக்கு 15 சதவீதம் அல்லது அதனை விடக் கூடுதலான சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாகவும் இதன் மூலம் தனியார் ஊழியர்களுக்கு 2 ஆயிரம் ரூபா வரை சம்பள உயர்வு கிடைக்கும் எனவும் தொழில் திணைக்கள ஆணையாளர் ஜி. எஸ். பதிரண தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ள 2500 ரூபா சம்பள உயர்வுடன் இணைந்ததாக தனியார் ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி தனியார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக 43 சம்பள நிர்ணய சபைகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தனியார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கும் திட்டத்தின் படி தோட்ட ஊழியர்களுக்கு ஜனவரி 15 ஆம் திகதி முதல் சம்பள உயர்வு வழங்கப் பட்டுள்ளது. இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனியார்த்துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 5750 ரூபாவாகும். ஆனால் பல தனியார்த் துறை ஊழியர்கள் இதனை விட பல மடங்கு அதிக சம்ப ளம் பெறுவதாக கூறிய அவர், சம்பள நிர்ணய சபைகளுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் சம்பள உயர்வு தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

தற்பொழுது சகல தனியார் ஊழியர்களுக்கும் 100 ரூபா முதல் 300 ரூபா வரை வருடாந்த சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

2009 ஆம் ஆண்டில் தனியார்த் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. ஆனால் சம்பள நிர்ணய சபைகளுடனான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் துரிதமாக தனியார்த்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தனியார்த் துறைக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவதோடு அவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி, மேலதிக நேரக்கொடுப்பனவு மற்றும் கொடுப்பனவுக ளும் அதிகரிக்கப்படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...