24 அக்டோபர், 2009

நலன்புரி நிலைய மக்களை மழைக்கு முன்னர் மீள்குடியேற்ற அழுத்தம் கொடுக்குமாறு தமிழக நாடாளுமன்றக்குழு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தல்-
மலேசிய தீக்கந்தனா தடுப்புமுகாம் இலங்கையர்களின் உண்ணாவிரதம் தொடர்கிறது-

மலேசிய தீக்கந்தனா தடுப்புமுகாமில் இலங்கையர்கள் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது. இவர்கள் உண்ணாவிரதத்தினை கடந்த 07நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர். ஐ.நாவின் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பிலான ஆணையாளரைச் சந்திக்க தமக்கு அனுமதி வழங்கக் கோரியே இவர்கள் உண்ணாவிரதத்தினை மேற்கொண்டுள்ளனர். மலேசிய முகாம்களிலுள்ள சுமார் 108இலங்கையர்களில் பெண்ணொருவர் உள்ளிட்ட ஆறுபேர் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் குறித்த இலங்கையர்களின் உண்ணாவிரதம் தொடர்பில் தான் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஐ.நாவின் இடம்பெயர்ந்தோர்க்கான மலேசிய அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார். மலேசிய முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை விடுவிக்க தான் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை மழைக்குமுன் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்குமாறு இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங்கிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கை வந்துசென்ற தமிழக நாடாளுமன்றக் குழுவினர் இந்தியப் பிரதமரை நேற்று சந்தித்தபோது இவ்விடயத்தை வலியுறுத்தியுள்ளனர். இலங்கை வந்திருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ரி.ஆர்.பாலு, தமது குழுவின் விஜயம் குறித்து இந்தியப் பிரதமருக்கு விளக்கமளித்ததுடன், இலங்கை விஜயம் தொடர்பிலான அறிக்கையொன்றையும் சமர்ப்பித்துள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...
முல்லைத்தீவில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கென 5லட்சம் யூரோக்களை வழங்கவிருப்பதாக பிரித்தானியா தெரிவிப்பு-
வடபகுதியில் நிலக்கண்ணிகளை அகற்றும் பணிகளுக்கு வியட்னாம் ஒத்துழைப்பு-

இலங்கையின் வடபகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வியட்னாம் முன்வந்துள்ளது. இதற்கான விசேட பயிற்சிகளையும் தொழில்நுட்ப அனுபவங்களையும் வழங்குவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் ஒஸ்வின் நகர பொதுமக்கள் சபையின் தலைவர் லேகொவின் குவான் தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வியட்னாமுக்கான மூன்றுநாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் ஒஸ்வின் நகருக்கு நேற்றுபிற்பகல் விஜயம் செய்திருந்தனர். அங்கு ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கும் பொதுமக்கள் சபையின் தலைவருக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக 5லட்சம் யூரோக்களை வழங்கவிருப்பதாக பிரித்தானிய சர்வதேச அபிவிருத்தியமைச்சர் மைக்பொஸ்டர் தெரிவித்துள்ளார். இந்நிதி வடக்கில் நிலக்கண்ணிகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள எட்டுக் குழுக்களுக்கான கண்ணிவெடிகளை அகற்றும் இயந்திரக் கொள்வனவுக்காக பயன்படுத்தப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்படும்போது அவர்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்கவென 2லட்சத்து 50ஆயிரம் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிதி 41ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தமது சொந்த இடங்களுக்கு இலகுவதாக செல்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும். இதனடிப்படையில் மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு மக்கள் அனுப்பப்படும்போது அவர்களுக்காக பேருந்து மற்றும் பாரஊர்தி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதேவேளை ஐ.நா.சபையின் ஊடாக வன்னிப் பிராந்தியத்தின் சுமார் 8500குடும்பங்களுக்கு தலா 3புசல் விதைநெல்கள் வழங்கும் பொருட்டு 2லட்சத்து 20ஆயிரம் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...

கடந்த .17.10.09

வவுனியாவில் துப்பாக்கி முனையில் பணம், நகைகள் கொள்ளை!கொள்ளையரை கைது செய்ய முனைந்தபோது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் பொதுமகன் ஒருவர் பலி! நீங்கள் அறிந்ததே


வவுனியா எல்லப்பர் மருதங்குளம் என்ற இடத்தில் கடந்த17 . 10.2009 . தனி நபர் ஒருவர் பணம், நகை என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார். அவரைத் துரத்திப்பிடித்த ஊரவர்களை நோக்கி இந்நபர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்; மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளானார்.

ராமமூர்த்தி புலேந்திரன்(36 வயது) என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே மரணமானார். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . திருநாவுக்கரசு கிருபாகரன் என்பவரே படுகாயமடைந்தவராவார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருநாவுக்கரசு கிருபாகரன்
இன்று மரணமானார்
மேலும் இங்கே தொடர்க...
இலங்கை வந்த தமிழகக் குழு - பிரதமர் மன்மோகன் டில்லியில் சந்திப்பு


இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவடைந்த நிலையில், போர்ப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் தமிழர்களை பல்வேறு முகாம்களில் இலங்கை அரசு தங்க வைத்துள்ளது.

முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு தேவையான நிவாரண பணிகளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலமாக இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

போர் நடைபெற்ற பகுதிகளில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு உள்ளதாகவும், அவற்றை அகற்றிய பிறகு தமிழர்கள் அவரவர் வீடுகளில் குடியமர்த்தப்படுவார்கள் என்றும் இலங்கை அரசு கூறி வருகிறது.

முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை என்று பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து தமிழர் முகாம்களை நேரில் பார்வையிடுவதற்காக, மத்திய அரசின் அனுமதியுடன், தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் 10 பேர் கொண்ட குழு, கடந்த 10ஆந் திகதி இலங்கை சென்றது.

அவர்கள் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட்டனர். அதிபர் ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்பட பலரை சந்தித்துப் பேசினர்.

தமிழகம் திரும்பிய அந்த குழுவினர் முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலவரம் குறித்து தமிழக முதலமைச்சர் கருணாநிதியிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். இதையடுத்து, இலங்கைத் தமிழர்களை அவரவர் சொந்த ஊர்களில் குடியமர்த்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை சென்று திரும்பிய தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள், டி.ஆர்.பாலு தலைமையில் டில்லியில் நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

அப்போது, இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலைமை, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம் வினியோகிக்கப்படும் நிவாரண உதவிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் விளக்கிக் கூறினர்.

இலங்கைக்கு கூடுதலாக வழங்கப்பட வேண்டிய நிதி மற்றும் நிவாரண உதவிகள் குறித்தும் பிரதமருக்கு யோசனை தெரிவித்தனர்.

இலங்கையில் பருவமழை தொடங்குவதற்கு முன்பு, தமிழர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும்படி இலங்கை அரசை வற்புறுத்துமாறு கேட்டுக்கொண்டனர். தங்கள் பயணம் குறித்த அறிக்கையையும் சமர்ப்பித்தனர். இச்சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது.

இந்தச் சந்திப்பின் விவரங்கள் குறித்து தி.மு.க. எம்.பி. கவிஞர் கனிமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

"இலங்கையில் டிசம்பர் மாதம் பருவமழை தொடங்கும். அதற்கு முன்பாக, முகாம்களில் உள்ள தமிழர்களை அவரவர் சொந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும்படி இலங்கை அரசை வற்புறுத்துமாறு பிரதமரைக் கேட்டுக்கொண்டோம்.

இதனை ஏற்று இலங்கை அரசிடம் வலியுறுத்துவதாக பிரதமர் உறுதி அளித்தார். இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணி குறித்தும் தெரிவித்தோம். நாங்கள் கூறியவற்றை பிரதமர் பொறுமையாக கேட்டார். தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதாக உறுதி அளித்தார்.

தற்போது முதல்கட்டமாக 50 ஆயிரம் பேர் சொந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருவது நிவாரண பணிகளின் முன்னோட்டம் ஆகும். தமிழர் பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றம் நடைபெறுவதாக கூறப்படுவது தவறு.

இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரும் கண்காணித்து வருகிறார். விடுதலைப்புலிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை பார்வையிட எங்களை அனுமதிக்கவில்லை. "
மேலும் இங்கே தொடர்க...
வாரண பொருட்கள் அரசிடம் ஒப்படைப்பு




இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்கென புலம்பெயர் தமிழர்களால் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கொழும்பு துறைமுகத்தில் பல மாதங்களாகத் தேங்கிக் கிடந்த வணங்கா மண் நிவாரணப் பொருட்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைத்துள்ளது.

சங்கத்தின் செயலணித் தலைவர் திஸ்ஸ அபேவிக்கிரமவினால் கையளிக்கப்பட்ட இந்நிவாரணப் பொருட்களை அரசாங்கத்தின் சார்பில் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி பெற்றுக்கொண்டார். இந்நிவாரணப் பொருட்கள் இன்னும் ஓரிரு தினங்களுக்குள் வவுனியாவைச் சென்றடையும் என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...
இலங்கை மீது காஸா மாதிரியிலான விசாரணை நடத்தப்பட வேண்டும்-ஐக்கிய நாடுகள் சபை

இலங்கையில் நடைöற்ற 26 வருட கால யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் யுத்தக் குற்றச் செயல்கள் புரியப்பட்டனவா என்பதைக் கண்டறிவதற்கு, காஸாவில் இடம்பெற்ற யுத்தம் குறித்து நடத்தப்பட்ட விசாரணை போன்றதொரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. யுத்தத்தின் இறுதி மாதங்களில் என்ன நடந்தது அல்லது என்ன நடக்கவில்லை என்பது குறித்து பூரண விசாரணை ஒன்று நடத்தப்படவில்லை என்று மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரின் பேச்சாளர் றுபேர்ட் கொல்வில் தெரிவித்தார்.

இலங்கை படையினரும், விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் ஜுரர் றிச்சட் கோல்ட்ஸ்ரோன் தலைமையில் நடத்தப்பட்ட காஸா யுத்த விசாரணை போன்றதொரு விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சிவில் யுத்த முடிவில் இடம்பெற்ற அட்டூழியங்கள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விவரமாக அறிக்கை வெளியிட்ட மறுநாள் றுபேர்ட் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...
இலங்கை மீதான சர்வதேச விசாரணையை அமெரிக்காவின் அறிக்கை வலியுறுத்துகிறது-சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்



இலங்கையின் யுத்த வன்முறைகள் தொடர்பில் ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையானது இது தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றுக்கான அவசியத்தை வலியுறுத்துகின்றது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் யுத்த வன்முறைகள் தொடர்பில் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. யுத்த காலத்தின் இறுதி மாதங்களில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பிலான சந்தேகங்களை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை தெளிவுபடுத்த வேண்டும் என கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய பணிப்பாளர் பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.

யுத்த குற்றம் தொடர்பில் விசாரணை செய்ய இலங்கை அரசாங்கம் தோல்வி கண்டு விட்ட நிலையில், முழுமையான சர்வதேச சுயாதீன விசாரணையே இதனை தெளிவுபடுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் சர்வதேச யுத்த சட்டமீறல், இரு தரப்பினரும் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விடயங்களை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில் குறித்த அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு, சர்வதேச அரசாங்கங்கள் இலங்கைக்கு எதிரான சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை - வியட்நாமிடையே ஐந்து ஒப்பந்தங்கள்

லங்கை- வியட்நாம் நாடுகளுக்கிடை யிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இருநாடுகளுக்குமிடையில் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வியட்நாம் ஜனாதிபதி நுயேன் மின் ட்ரயட் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து மேற்படி ஐந்து உடன்படிக்கைகளும் கைச்சாத்தாகியுள்ளன.

இருநாடுகளுக்குமிடையிலான முதலீடு, கலாசார ஒத்துழைப்பு, விவசாய அபிவிருத்தி, கடற்றொழிலுக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பு குற்றத்தடுப்பு மற்றும் தேடுதல் தொடர்பான சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு, ஆகிய ஐந்து உடன்படிக்கைகள் நேற்றுக் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இருநாடுகளுக்குமிடையிலான முதலீட்டுத் துறைகளை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான உடன்படிக்கையில் இலங்கையின் சார்பில் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் வியட்நாமின் சார்பில் அந்நாட்டின் முதலீடு மற்றும் திட்டமிடல் அமைச்சர் வோ ஹொங்புக் கும் கைச்சாத்திட்டுள்ளனர்.

இருநாடுகளுக்குமிடையிலான கலாசார ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கலாசார அமைச்சரின் சார்பில் வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் அந்நாட்டின் கலாசார, விளையாட்டுத்துறை மற்றும் கலாசார அமைச்சரான நுயேன் டன் தையும் கைச்சாத்திட்டுள்ளனர்.

விவசாயத்துறையை ஊக்குவிக்கும், முன்னேற்றும் வகையில் 2010-2011ம் ஆண்டுக்கான விவசாயத்துறை அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் விவசாய அபிவிருத்தி அமைச்சரின் சார்பில் வெளி நாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் வியட்நாம் விவசாய, கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சருமான வூ வான் டம்மும் கைச்சாத்திட்டுள்ளனர்.

அதேபோன்று வியட்நாம் அரசாங்கம் இலங்கையின் கடற்றொழில் துறைக்கு 2010 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் தொழில் நுட்ப ஒத்துழைப்பினை வழங்குவதற்கான ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இவ் உடன்படிக்கையில் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் அந்நாட்டின் விவசாய, கிராமிய அபிவிருத்தி அமை ச்சின் அதிகாரிகளும் கைச்சாத்திட்டுள் ளனர்.

அதேவேளை, மற்றுமொரு முக்கிய உடன்படிக்கையான குற்றத்தடுப்பு மற்றும் சுற்றி வளைப்பு தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகைகள் சம்பந்தமான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத்தும் வியட்நாம் அரசின் சார்பில் அந்நாட்டின் மக்கள் பாதுகாப்பு அமைச்சின் நிரந்தர பிரதிநிதி ருயேன் கான் ஜோன் ஆகியோரும் கைச்சாத்திட்டுள்ளனர்.

இவ் உடன்படிக்கைகள் இரு நாட்டுத் தலைவர்களினதும் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.



மேலும் இங்கே தொடர்க...

இடம்பெயர்ந்த மக்களுக்காக கப்பலில் வந்த பொருட்கள் அமைச்சர் அமீர் அலியால் பொறுப்பேற்பு

இடம்பெயர்ந்தவர்களுக்கு விநியோகிக்க கப்பலில் வந்த பொருட்களை அரசாங்கத்தின் சார்பில் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அரிசி, மா, நூடில்ஸ், டின் உணவு, டின் மீன், தேயிலை, சீனி, பால் மா, குழந்தை உணவு, பழச்சாறு மற்றும் உலர் உணவுப் பொதிகள் இந்த பொருட்களில் அடங் கியிருக்கின்றன.

இந்த பொருட்களின் மாதிரிகள் பரிசோதனைகளுக்காக அனுப் பப்பட்டு தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. ஒரு கோடியே பதின்மூன்று இலட்சத்து நூற்றி இருபத்தி ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான இப்பொருட்களைச் செஞ்சிலுவைச் சங்க செயலணித் தலைவர் திஸ்ஸ அபேவிக்ரம ஒப்படைத்தார்.

இந்த பொருட்களை எடுத்துச் செல்வதற்காக தொண்டர் குழு ஒன்று தயாராக இருப்பதாக திஸ்ஸ அபேவிக்ரம தெரிவித்தார். இந்த பொருட்கள் வவுனியா அரச அதிபரூடாக விநியோகிக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.


மேலும் இங்கே தொடர்க...
இலங்கையில் போர் குற்றத்தை விசாரிக்க சர்வதேச அமைப்புகளுக்கு அனுமதி: அமெரிக்கா வலியுறுத்தல்


வாஷிங்டன், அக். 23: இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச அமைப்புகளை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போதும் போருக்குப் பின்னரும் அப்பாவித் தமிழ் மக்கள் மீது இலங்கை ராணுவம் கொடூரமாக நடந்து கொண்டதாக குற்றச் சாட்டுகள் எழுந்தன. இது குறித்து இதுவரை எவ்வித கருத்தையும் அமெரிக்கா தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது முதல் முறையாக அங்கு நடைபெற்ற அத்துமீறல்களை விசாரிக்க சர்வதேச அமைப்புகளை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இயான் கெல்லி செய்தியாளர்களிடம் கூறியது:


முதலில் அகதி முகாம்களில் உள்ள மக்களை சர்வதேச அமைப்புகள் சந்தித்துப் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும். இலங்கையில் போரின்போதும் போருக்குப் பின்னரும் என்ன நடக்கிறது என்பதை வெளியுலகிற்குத் தெரியப்படுத்த இலங்கை அரசு முயல வேண்டும். போர் குற்றங்களைப் புரிந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் அக்டோபர் 21-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.


இந்த 73 பக்க அறிக்கை தயாரிப்பதற்கு என்னென்ன அடிப்படை காரணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதையும் அதற்குரிய தீர்வுகளையும் இதில் குறிப்பிட்டு அவற்றை இலங்கையிடம் தெரிவித்துள்ளதாக கெல்லி கூறினார்.
இந்த அறிக்கையில் இலங்கை அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள், அதாவது போரின்போது மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் உள்ளிட்டவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஆனால் ஒபாமா நிர்வாகமோ, மறு சீரமைப்பு நடவடிக்கைகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.


இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையான காலத்தில் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க வேண்டும் என சுட்டிக் காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையில் உள்நாட்டு போர் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற போதிலும் அது தீவிரமடைந்தது 2009 ஜனவரி மாதத்திலிருந்து மே மாதம் வரைதான். இந்த காலகட்டத்திற்குள் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டனர்.
ஜனவரி முதல் மே மாதம் வரையான காலத்தில் விடுதலைப் புலிகள் தங்கள் ராணுவத்தில் 12 வயதுக்கும் குறைவான சிறுவர், சிறுமியர்களை ஈடுபடுத்தினரா?. மேலும் விடுதலைப் புலிகளை ஒழிப்பதாகக் கூறி அப்பாவி மக்கள் மீது ராணுவம் நடத்திய அத்துமீறல் நடவடிக்கைகளை விசாரிக்க வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இலங்கை ராணுவம் பல விதிமீறல், கொலைகளைப் புரிந்ததாக குற்றச்சாட்டுகள் பலதரப்பிலிருந்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக கெல்லி கூறினார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின்போது, பலர் சரணடைய முன்வந்தபோதிலும் அவர்களை ராணுவம் கொன்றுள்ளது. சரணடைந்த சில விடுதலைப் புலிகளை ராணுவத்தினர் கொன்றதோடு, அப்பாவித் தமிழர்களையும் கொன்றுள்ளனர். அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களைக் கொன்றதாக புகார்கள் வந்துள்ளன.
சில தமிழ் இளைஞர்களை அவர்களது உறவினர்களுக்குத் தெரிவிக்காமல் அடையாளம் தெரியாத இடத்துக்கு ராணுவத்தினர் கொண்டு சென்றுள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளன.


சோதனைச் சாவடி மற்றும் முகாம்களில் உள்ளவர்கள் மிகவும் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. அகதி முகாம்களில் ராணுவத்தினர் காவல் புரிவதால், சர்வதேச அமைப்புகள் அங்குள்ளவர்களைச் சென்றடைய முடியவில்லை.
ஜனவரி முதல் மே மாதம் வரையான காலத்தில் உயிரிழப்பு குறித்த விவரம் அறிக்கையில் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்ட கெல்லி, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 6,170-பேர் உயிரிழந்ததாகவும் 15,102 பேர் காயமடைந்ததாகவும் ஒரு தனியார் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
ஆனால் உயிரிழப்பு இதைவிட அதிகமாக இருக்கும் என கருதுவதாக கெல்லி கூறினார்.


இதனிடையே மனித உரிமைகள் அமைப்பு, இலங்கையில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சர்வதேச தனியார் அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனியார் விசாரணை அமைப்பை அனுமதிப்பது ஒன்றுதான் தற்போது உள்ள வழி என்று மனித உரிமைகள் அமைப்பின் ஆசிய பிரிவு இயக்குநர் பிராட் ஆடம்ஸ் தெரிவித்தார்.

மேலும் இங்கே தொடர்க...