26 மே, 2011

புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர் இராமச்சந்திரன் நெதர்லாந்தில் கைது

முக்கிய கோப்புக்களுடன் சிக்கியது ‘பென்டிரைவ்’

ஐரோப்பிய வங்கிகளில் பெருந்தொகை பணம் வைப்பு

நெதர்லாந்தில் செயற்பட்டு வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் எஸ். இராமச்சந்திரன் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் பிரிவொன்றின் தலைவராகவும், முக்கிய தளபதிகளில் ஒருவராகவும் செயற்பட்டு வந்த நெடியவன் எனப்படும் சிவரூபன் நோர்வேயில் கைது செய்யப்பட்டதன் பின் நெதர்லாந்தில் இராமச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராமச்சந்திரனின் வீட்டை சோதனை யிட்ட பொலிஸார் ‘பென் டிரைவ்’ (யு எஸ் பி)வில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கோப்புகளை கைப்பற்றியுள்ளனர். இதில் 136 மில்லியன் பணம் தொடர்பான விபரங்கள் அடங்கியுள்ளதாகவும் அப்பணம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் ஆயுதக் கொள்வனவுக்காக ஐரோப்பிய வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது.

நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்யும் ‘ஒபரேசன் கொன்னிக்’ நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே இராமச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய நெதர்லாந்து அலுவலகத்தில் பிரதானியாக செயற்பட்ட ஞானம் என்பவரும் நெதர்லாந்தின் இரகசியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், இவர்களுடன் தொடர்பைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் ஹேக், ட்ராசெய்ஸ்ட், அம்ஸ்டர்டாம், ரல்டே மற்றும் அம்சோடம் ஆகிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளையடுத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்புத் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நெதர்லாந்து அதிகாரிகள் இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிக ளிடம் விசாரணை நடத்த அனுமதி கோரியுள்ளனர்.

இது தொடர்பாக நெதர்லாந்து வானொலி வெளியிட்டுள்ள தகவலில், குமரன் பத்மநாதன் உள்ளிட்ட 13 பேரை அடுத்த மாதம் விசாரிக்க இலங்கையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை சட்டமா அதிபர் மொகான் பீரிசுடன் நெதர்லாந்து அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

அதேவேளை, இந்த விவகாரம் பற்றிய சாட்சியங்களைப் பெறுவதற்காக நெதர்லாந்து நீதவான்களும், சட்டவாளர்களும் அமெரிக்காவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

அமெரிக்காவில் இவர்கள் புலிகளின் ஆயுதக் கொள்வனவு நடவடிக்கைகளில் தொடர்புடைய பிரதீபன் தவராசாவிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.

இவர் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் விடுதலைப் புலிகளுக்கு வெடிபொருட்கள், இயந்திரத் துப்பாக்கிகள், ஏவுகணைகள், ஆட்டிலறிகள், ரேடர்கள் போன்ற ஆயுதங்களை கொள்வனவு செய்திருந்தார்.

இவரது மடிக் கணனியில் 20 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான முன்னுரிமைப் பட்டியல் ஒன்றை அமெரிக்காவின் சமஸ்டி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தனர்.

அந்தப் பட்டியலில் ஒவ்வொன்றும் 160,000 டொலர் பெறுமதியான 25 மி.மீ. விமான எதிர்ப்புப் பீரங்கிகள் ஆறு, ஒவ்வொன்றும் 30,000 டொலர் பெறுமதியான ரைப் – 69 ரகத்தைச் சேர்ந்த இரட்டைக் குழல் 30 மி.மீ. கடற்படைப் பீரங்கிகள் ஆறு, ஆயிரக் கணக்கான தன்னியக்கத் துப்பாக்கிகள், மில்லியன் கணக்கான ரவைகள், கிரனேட் செலுத்திகள், 50 தொன் சி – 4 வெடிமருந்து, 5 தொன் ஆர்டிஎக்ஸ் வெடிபொருள், 50 தொன் ரிஎன்ரி சீன வெடிபொருள், விமானக் குண்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் 50 தொன் ட்ரைரோனல் வெடிபொருள் ஆகியவை இருந்ததாக அமெரிக்காவின் சமஸ்டிப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நெதர்லாந்தில் உள்ள இராமச்சந்திரன் என்பவர் இந்த ஆயுதக் கொள்வனவுகளுடன் தொடர்புபட்டிருந்ததாக பிரதீபனின் மடிக் கணனியில் இருந்த தகவல்களின் மூலமே தெரியவந்துள்ளது.

இதேவேளை நெதர்லாந்து விசாரணைக் குழுவொன்று நேற்று ஒஸ்லோவுக்கு புறப்பட்டுச் சென்றது.

சந்தேக நபர்களின் சட்டவாளர்களை உள்ளடக்கிய இந்தக் குழுவினர் நெடியவனிடம் விசாரணை நடத்தவே ஒஸ்லோ செல்கின்றனர்.

இவர் விடுதலைப் புலிகளுக்கு மில்லியன் கணக்கான டொலர் பணத்தை வழங்கியதாக நெதர்லாந்து அதிகாரிகள் நம்புகின்றனர்.

‘ஒப்பரேசன் கொனிக்’ என்ற பெயரில் நெதர்லாந்து அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் இந்த நிதி வலையமைப்பு மீதான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கையில் நெதர்லாந்தில் 90 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நூற்றுக் கணக்கான வீடுகளில் நடத்தப்பட்ட தேடுதல்களில் கணனிகள், இறுவட்டுக்கள், ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டு ள்ளன என்றும் நெதர்லாந்து வானொலி தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக