27 ஏப்ரல், 2011

ஐ.நா. அறிக்கை தொடர்பாக இலங்கையுடன் விரைவில் பேச்சு:





ஐ.நா. அறிக்கை தொடர்பாக இலங்கையுடன் விரைவில் பேச்சு: இந்திய தெரிவிப்பு
ஐ.நா. அறிக்கை விரைவில் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் பேசவுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை கவனமாகப் ஆராய வேண்டிய தேவையுள்ளது என்றும் இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் விரைவில் இந்தியா தொடர்பு கொண்டு பேசும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு பேச்சாளர் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா அறிக்கைக்கு கனேடிய லிபரல் கட்சி ஆதரவு

ஐ.நா. அறிக்கைக்கு ஆதரவளிக்கப்போவதாக கனேடிய லிபரல் கட்சித் தலைவர் மைக்கல் இக்னேட்டிவ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் உண்மையான சமாதானத்தையும் நீதியையும் காண வேண்டுமாயின் ஐ.நா. நிபுணர்குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையிலுள்ள மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய அந்நாட்டு அரசை வலியுறுத்தும் வகையில் இந்தியா முன்னின்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் எதற்கும் அடிபணியாத இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

போர்க் குற்றங்கள் தொடர்பில் மேலும் விசாரணைகள் அவசியம்: நவநீதம்பிள்ளை வலியுறுத்து

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் மேலும் விசாரணைகள் அவசியமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவனீதம் பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரச மற்றும் விடுதலைப் புலிகளினால் யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக ஐ.நாவினால் நியமிக்கப்பட்ட 3 பேரைக்கொண்ட குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இது தொடர்பில் விசாரணை அவசியமென அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையானது சர்வதேச சமூகத்தினை மிகவும் பாதித்திருப்பதாகவும் பாரபட்சமற்ற விசாரணையொன்று அவசியமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

புதிய 20 தூதுவர்கள் மற்றும் ஓர் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் நியமனக் கடிதங்களை சமர்ப்பித்தனர்

புதிய 20 தூதுவர்கள் மற்றும் ஓர் உயர்ஸ்தானிகர் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் தமது நியமனக் கடிதங்களை சமர்ப்பித்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இவர்கள் தமது நியமனக் கடிதங்களைக் கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இத்தாலி, கொரியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளின் 5 தூதுவர்களும் தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகரும் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...

திருகோணமலை சிறையில் இருந்து நால்வர் தப்பியோட்டம்


திருகோணமலை சிறையிலிருந்து நான்கு பேர் தப்பிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

வர்த்தகர் ஒருவரிடமிருந்து கப்பம் பெற்றவர்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்ட நால்வரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

போதைப் பொருள் கடத்த முயன்ற நபர் ஒருவர் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 15 கிலோகிராம் கஞ்சாவை கடத்த முயன்ற நபர் ஒருவரை பேசாலைக் கடற்; பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

பேசாலையைச் சேர்ந்த இவர் கடற்படையிடமிருந்து கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியைப் பெற்ற போதும்; கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. அறிக்கையை வரவேற்கும் அமெரிக்கா

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை அமெரிக்கா வரவேற்பதாக ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சுசான் ரைஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீதான பதிலளிக்கும் கடப்பாடு குறித்து நிபுணர் குழுவின் அறிக்கை வலியுறுத்தியுள்ளதாகவும் போர்க் குற்ற விசாரணைகளையும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் இவ்வறிக்கை உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

உறுப்பு நாடுகள் இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே சுயாதீன சர்வதேச விசாரணை: பான் கீ மூன்

2009 மே மாதம் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. உறுப்பு நாடுகள் இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு தன்னால் உத்தரவிட முடியும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கையை வெளியிட்ட பின்னர் ஐ.நா. விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சர்வதேச விசாரணைகள் இடம் பெற இலங்கையின் ஒப்புதல் வேண்டும்.

அல்லது ஓர் பொருத்தமான சர்வதேச அரங்கத்தில் உறுப்பு நாடுகள் இதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பொருத்தமான சர்வதேச அரங்கம் என்று கருதப்படுவது யாது? என்பது தொடர்பில் பான் கீ மூனின் அறிக்கையில் எதுவும் பிரஸ்தாபிக்கப்படவில்லை. இது ஐ.நா. பாதுகாப்புச்சபை, பொதுச்சபை, அல்லது மனித உரிமைகள் அமைப்பாக இருக்க முடியும்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்கலாம். இதுவே யுத்தக் குற்றத்துக்கும் காரணமாகியிருக்கலாம். எனவே இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என ஐ.நா. நிபுணர்கள் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

மேலும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது ஐக்கிய நாடுகளின் நடவடிக்கை குறித்து ஓர் விசாரணை நடத்தப்படுமென ஐ.நா. செயலாளர் நாயகம் கூறியுள்ளார். இவ்வாறான விசாரணை ஒன்றை நடத்த வேண்டுமென பான் கீ மூன் நியமித்த குழு சிபார்சு செய்துள்ளமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இருதரப்பினரும் சர்வதேச மனித நேயம் மற்றும் மனித உரிமைச் சட்டங்களை மீறியமைக்கான குற்றஞ்சாட்டுமளவுக்கு ஆதாரமான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக மூவரடங்கிய நிபுணர்கள் குழுவின் 200 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் இணை நிறுவனங்கள் என்பனவும் பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டன என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் என்பவை பாரிய அளவில் இருதரப்பினாலும் மீறப்பட்டமைக்கு ஆதாரங்கள் உள்ளதாக கூறும் ஐ.நா. அறிக்கை அவற்றுள் சில யுத்தக் குற்றங்கள், ஏனையவை மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச் செயல்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முழுமையாக பொறுப்புக்கூறுதல் மற்றும் நீதியை நிலைநாட்டுதல் தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு அரசாங்கமும் விடுதலை புலிகளும் மேற்கொண்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படவேண்டும் என முன்வைத்த அறிக்கை நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையை பொது மக்களின் ஆர்வம் மற்றும் வெளிப்படைத்தன்மையை கருத்திற்கொண்டு பகிரங்கப்படுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக பான் கீ மூனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முழுமையான பொறுப்புக்கூறுதல் மற்றும் நீதியை நிலைநாட்டுதல் மூலம் இலங்கை அரசும் மக்களும் தேசிய நல்லிணக்க மற்றும் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று பான் கீ மூன் நம்புவதாக அவரது பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தினாலும் தமிழீழ விடுதலை புலிகளினாலும் மீறப்பட்டதாக கூறப்படும் சர்வதேச மனிதாபிமானம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிபுணர்கள் குழு முன்வைத்த தீர்மானங்களையும் விதந்துரைகளையும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மிகவும் கவனமாக ஆய்வு செய்தார். அதில் சில நம்பகத்தன்மையுடைய யுத்தக் குற்றச்சாட்டுக்களும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச் செயல்களும் அடங்கியுள்ளன.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பரந்தளவிலான ஷெல் தாக்குதல்கள் காரணமாக பொது மக்கள் படுகொலைகள் செய்யப்பட்டமை, மனிதாபிமான உதவிகளை மறுத்தமை உட்பட நம்பகத்தன்மையுடன் கூடிய ஐந்து வகையான மீறல்களை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டதாக நிபுணர்கள் குழு கண்டறிந்துள்ளது. அதேபோன்று பொது மக்களை மனித கேடயமாக பயன்படுத்தியமை, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தும் வெளியேற முயன்ற சிவிலியன்களை படுகொலை செய்தமை உ ட்பட ஆறு வகையான மீறல்களை புலிகள் மேற்கொண்டதாகவும் நிபுணர்கள் குழு குற்றஞ்சாட்டியுள்ளது. மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்புக்கூறும் தன்மை இலங்கை அரசாங்கத்துக்கு முதலில் உள்ளதாக நிபுணர் குழுவின் விதந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுக்கு வந்தததைத் தொடர்ந்து தெற்காசிய நாடுகளுக்கான விஜயத்தை பான் கீ மூன் மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த மூவரடங்கிய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.

இந்த மூவரடங்கிய நிபுணர் குழுவில் இந்தோனேஷியாவை சேர்ந்த மர்சுகி தருஷ்மன், தென்னாபிரிக்காவை சேர்ந்த யஸ்மின் சூக்கா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் அடங்கியுள்ளனர். அவர்கள் தங்கள் பணியை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அறிக்கையை நாம் நிராகரிப்பதனால் உள்ளடக்கம் குறித்து அக்கறையில்லை
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு இலங்கை தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளமையை உலகில் தோன்றியுள்ள புதுவிதமான நவீன அரசியல் காலனித்துவ முயற்சி என்று கூறலாம்.

இவ்வாறு ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு ஐ.நா. வின் யாப்பு சட்டம் மற்றும் பண்பியல் ரீதியாக எவ்விதமான உரி மையும் இல்லை என்று ஸ்ரீலங்கக்ஷி சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இந்த அறிக்கையை நாங்கள் முழுமையாக நிராகரிப்பதனால் அதன் உள்ளடக்கம் குறித்து பேசவிரும்பவில்லை. எனினும் ஐ.நா. நிபுணர் குழு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களில் ஒன்றையாவது நிரூபிக்கட்டும் பார்க்கலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் அழகப்பெரும மேற்கண்ட விடயங்களை கூறினார்.

அவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது: ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழுவுக்கு இவ்வாறு அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு எவ்விதமான உரிமையும் இல்லை என்று நாங்கள் ஆரம்பத்திலிருந்து கூறிவருகின்றோம்.

அதாவது இவ்வாறு ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு ஐ.நா. வின் யாப்பு சட்டம் மற்றும் பண்பியல் ரீதியாக எவ்விதமான உரிமையும் இல்லை. எனவே அந்த அறிக்கையை நாங்கள் நிராகரிப்பதனால் அதன் உள்ளடக்கங்கள் குறித்து பேசிக்கொண்டிருக்க விரும்பவில்லை.

ஆனால் ஐ.நா. நிபுணர் குழு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களில் ஒன்றையாவது நிரூபிக்கட்டும் பார்க்கலாம். ஆதாரமற்ற வகையில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதாவது இதனை உலகில் தோன்றியுள்ள புதுவிதமான நவீன அரசியல் காலணித்துவம் என்று கூற முடியும். நாங்கள் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி குறித்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை நடத்திவருகின்றோம்.

நாங்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு தேவையான வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருக்கின்ற நிலையில் ஐக்கிய நாடுகள் சபை நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.

30 வருடகால யுத்தத்தின் பின்னர் நாட்டில் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு தற்போதுதான் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ரஷ்யா மற்றும் சீனா கொடுத்த அழுத்தமே பான் கீ மூனின் பின்வாங்கலுக்கு காரணம்

ஐக்கிய நாடுகள் சபையின் சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு தயாரித்துள்ள அறிக்கையை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம். இது தொடர்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ளவுள்ளோம். உள்நாட்டில் மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் கருத்தரங்குகளை நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்று சுதந்திர பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விடயம் குறித்து ரஷ்யாவும் சீனாவும் கொடுத்த அழுத்தம் காரணமாகவே ஐ.நா. செயலாளர் நாயகம் தனது நிலைப்பாட்டில் பின்வாங்கியுள்ளார். அதாவது ஆரம்பத்தில் கடும் தொனியில் செயற்பட்ட பான் கீ மூன் தற்போது உறுப்பு நாடுகள் இணக்கம் வெளியிட்டால் மட்டுமே சர்வதேச விசாரணை ஒன்றுக்கு செல்ல முடியும் என்று கூறியுள்ளார் எனவும் சங்கம் குறிப்பிட்டது.

அந்த வகையில் ஐ.நா. வின் செயற்பாட்டினால் இலங்கையில் ஏதாவது குழப்பங்கள் ஏற்படின் அல்லது சமாதான நிலைமையில் விரிசல் ஏற்படின் அதற்கான முழுப் பொறுப்பையும் ஐ.நா. செயலாளரே ஏற்கவேண்டும் என்றும் விரிவுரையாளர் சங்கம் கூறுகிறது.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட இந்த சங்கத்தின் பிரதிநிதிகள் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டனர்.

சுதந்திர பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவரும் பேராதனை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளருமான கலாநிதி விஜித்த நாணயக்கார கருத்து வெளியிடுகையில் :

இந்த நெருக்கடியான சூழலில் நாட்டில் அனைவரும் இன மத கட்சி பேதமின்றி ஒற்றுமையுடன் செயற்படவேண்டும். ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை செயற்படுவதை ஏற்க முடியாது. 26 வருடகால பயங்கரவாதத்தையே அரசாங்கம் தோற்கடித்தது. அந்த வகையில் தற்போது பொருளாதார அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் எமது நாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஐ.நா. நிபுணர் குழு செயற்பட்டுள்ளது. அதனை ஏற்க முடியாது. எனவே எமது நாட்டின் இறைமைக்கு எதிராக செயற்படும் நிலைமை தொடர்பில் நாங்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும். நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை குழப்புவதற்கு இடமளிக்க முடியாது. யுத்தம் முடிவடைந்தததிலிருந்து புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர்கள் பாரியளவில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். தற்போது இந்த நிபுணர் குழு விடயமானது எமது நாட்டுக்கு எதிரான சதித்திட்டங்களின் ஒரு அங்கம் மட்டுமேயாகும். எனவே அனைவரும் முன்வந்து முழு மனதுடன் இந்த அறிக்கையை நிராகரிக்கவேண்டும் என்றார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் எம். எஸ். அனீஸ் கருத்து வெளியிடுகையில் :

உலகில் மிகவும் பலமான பயங்கரவாத அமைப்பையே அரசாங்கம் தோற்கடித்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் மக்களை மீட்கும் நோக்கிலேயே இந்த பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது யுத்தம் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு தயாரித்துள்ள அறிக்கையானது உள்நோக்கம் கொண்டது.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை காரணமாக முழுமையாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களே நன்மையடைந்தனர். அவர்கள் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். அந்த வகையில் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தி ஏற்படும் வகையில் நிபுணர் குழு செயற்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த அறிக்கையானது எமது நாட்டின் இறைமைக்கு சவால்விடக்கூடியதாக உள்ளது. 1983 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டுவரை புலிகளால் சுமார் 75 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தமிழ் சிங்களம் மற்றும் முஸ்லிம் என்ற வேறுபாடின்றி கொன்றொழித்தனர்.

அப்போது இந்த ஐக்கிய நாடுகள் சபை எங்கே இருந்தது? அதன் செயலாளர் என்ன செய்துகொண்டிருந்தார்? மக்களால் உருவாக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் செயற்பட முடியுமா?

1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜே.வி.பி. பிரச்சினையில் 60 ஆயிரம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அப்போது இந்த ஐக்கிய நாடுகள் சபை ஏன் வாய் திறக்கவில்லை? இந்த நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்நோக்கம் உள்ளது. இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே இதன் பின்னணியில் சர்வதேச சதித்திட்டம் ஒன்று உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் கட்சிபேதங்களை மறந்து நாட்டுக்காக ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்றார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர் பிரதீப மஹாஹேவா கருத்து வெளியிடுகையில் :

ஐக்கிய நாடுகள் இவ்வாறு குழுவை நியமித்து அறிக்கை தயாரித்துள்ளதை ஏற்க முடியாது. இந்த விடயத்தில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்படுகின்றன.

இந்த நாடுகளின் அழுத்தம் காரணமாக ஐ.நா. செயலாளர் நாயகம் பின்வாங்கியுள்ளார். அதாவது ஆரம்பத்தில் கடும் தொனியில் செயற்பட்ட பான் கீ மூன் தற்போது உறுப்பு நாடுகள் இணக்கம் வெளியிட்டால் மட்டுமே சர்வதேச விசாரணை ஒன்றுக்கு செல்ல முடியும் என்று கூறியுள்ளார்.

எனவே தற்போதைய நிலைமையில் ஐ.நா. வின் செயற்பாட்டினால் இலங்கையில் ஏதாவது குழப்பங்கள் ஏற்படின் அல்லது சமாதான நிலைமையில் விரிசல் ஏற்படின் அதற்கான முழுப் பொறுப்பையும் ஐ.நா. செயலாளரே ஏற்கவேண்டும். மேலும் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளமையினால் இந்த அறிக்கையினை ஐ.நா. வின் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்ல முடியாது.

மேலும் எமது வெளிநாட்டு தூதுவர்கள் சற்று உற்சாகமாக செயற்பட்டு சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தோற்கடிக்க முன்வரவேண்டும் என்றார்.

சுதந்திர பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஜித் திசாநாயக்க குறிப்பிடுகையில் :

இது எமது ஆரம்ப முயற்சி மட்டுமேயாகும். இந்த நாட்டின் இலவசக் கல்வியை பெற்ற நாங்கள் நாட்டுக்காக செயற்படவேண்டியது கட்டாயமாகும். எனவே ஐ.நா.வின் இந்த விடயம் தொடர்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ளவுள்ளோம்.

உள்நாட்டில் மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் கருத்தரங்குகளை நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளோம். கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் வெளிவரவுள்ளது. இந்நிலையில் அதற்கு முன்னர் இவ்வாறு அறிக்கை வெளியிடுவது முறையற்ற விடயமாகும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

குற்றச்சாட்டுக்கள் இன்றி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை விடுக்க பணிப்புரை: பிரதம நீதியரசர்

குற்றச்சாட்டுக்கள் இன்றி நீண்ட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர் யுவதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்ட மா அதிபருக்கும் பொலிஸாருக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

பி.பி.சி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமது இரண்டு வருட பதவிக்காலத்தில் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு உதவி புரிவதற்கு பல முயற்சிகளை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பயனாளிகளின் பெயர்ப்பட்டியல் விரைவில் கிடைத்தால் வீடமைப்புத்திட்டம் அமுலாகும்: இந்தியா

ஐம்பதாயிரம் வீடுகளை அமைப்பதற்கு வெளிப்படையான முறையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர்ப்பட்டியலை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெறுவதற்கு காத்திருக்கிறோம். பயனாளிகன் பெயர்ப்பட்டியல் விரைவில் கிடை த்தால் வீடமைப்புத்திட்டத்தின் செயற்பாடுகள் காலதாமதமின்றி நிறைவேற்றப்படும்என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை அமைத்தக்கொடுக்க இந்தியா இணக்கம் தெரிவித்திருந்தது. ஆனால், வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டு அண்மைக்காலமாக எழுந்திருந்தது.

இது குறித்து விளக்கம் அளிக்கும்வகையில் இந்திய தூதரகம் நேற்று அறிக்கையொன்றினை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்காக இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவியுடன் அமைக்கப்படவிருக்கும் 50,000 வீட்டுத் திட்டத்தின் முன்னேற்றம் பற்றிச் சமீபத்தில் சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை நாம் பார்வையிட்டோம்.

இவை சமீபத்தில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவையெனக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஊடகங்களில் வெளியிடப்பட்ட இந்தக் கருத்துக்கள் அடிப்படையற்றவையும் தவறான எண்ணத்தைத் தோற்று விப்பவையுமாகும். இதன் உண்மையான நிலவரம் கீழ்வருமாறானது.

இந்திய அரசாங்கம், முன்னோடித்திட்டமாக வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் அமைக்கப்படவிருக்கும் 1000 வீடுகளுக்கான திட்டத்தை நிறைவேற்றவும் அமுல் படுத்துவதற்குமாக வரையறுக்கப்பட்ட ஹிந்துஸ்தான் பிறிவாப் மற்றும் வரையறுக்கப்பட்ட கீகக இன்ப்றா புறொஜெக்ற்ஸ் ஆகிய நிறுவனங்களை முறையே திட்ட முகாமைத்துவ ஆலோசகர்களாகவும், ஒப்பந்தக்காரர்களாகவும் நியமித்துள்ளது.

இத்திட்டத்தை மேற்கொள்வதற்குத் தேவையான வளங்களை இந்த ஒப்பந்த நிறுவனங்கள் ஏற்கெனவே திரட்டியுள்ளன. எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்பட்டாலன்றி, கால அட்டவணைக்கேற்ப இந்த வீட்டுத் திட்டம் நிறைவேற்றப்பட்டு இவ்வாண்டின் பிற்பகுதியில் பயனாளிகளிடம் வீடுகள் கையளிக்கப்படும்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் முக்கியமான எதிர்காலத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான இந்திய வீடமைப்புத் திட்டமானது இலங்கை அரசாங்கத்தின் நெருங்கிய ஆலோசனையுடனும் ஒத்துழைப்புடனும் நிறைவேற்றப்படுகின்றது.

இரு நாடுகளும் இந்த முன்னோடித்திட்டத்திற்கான தங்களின் பங்கிலும் பொறுப்பிலும் கண்ட இணக்கப்பாட்டிற்கமையத் தேவையான ஆவணங்கள் இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ அசோக் கே. காந்தா அவர்களுக்கும் நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர அவர்களுக்குமிடையே 2010 நவம்பர் 26ஆம் திகதி பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டன.

இது சம்பந்தமாக விதிமுறைகளுக்கமைய வெளிப்படையான முறையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர்ப்பட்டியலை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெறக்காத்திருக்கிறோம்.

பயனாளிகளின் பெயர்ப்பட்டியலை விரைவில் கிடைக்கச் செய்வது இத்திட்டத்தின் செயற்பாடுகளை காலதாமதமற்ற முறையில் நிறைவேற்றலைச் சாத்தியமாக்கும்.

இந்த முன்னோடித் திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதானது மீதமாயுள்ள 49,000 வீடுகளை அமைப்பதற்கான ஒழுங்குகளைச் செய்வதையும் எளிதாக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
மேலும் இங்கே தொடர்க...