26 மே, 2011

ஹசான் திலகரத்ன தலைமறைவு தேடித்தருமாறு ஐ.தே.கவிடம் அமைச்சர் மஹிந்தானந்த கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஆட்ட நிர்ணய சதியில் தொடர்பு பட்டிருந்ததாக ஐ.தேக. மாகாண சபை உறுப்பினர் ஹசான் திலகரத்ன குற்றஞ்சாட்டியிருந்தார்.

அது குறித்து விசாரிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் உறுப்பினர்கள் இலங்கை வந்த போது அவர் தலைமறை வாகி விட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுக்கமகே கூறினார்.

வாய்மூல விடைக்காக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

இலங்கை வீரர்கள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக ஹசான் திலகரத்ன ஊடகமொன்றினூடாக குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால் அது தொடர்பாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இதனையடுத்து இது பற்றிய தகவல்களை பெறுமாறு நான் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்தேன்.

இதன் படி இரு தடவைகள் ஹசான் திலகரத்னவை பொலிஸார் விசாரித்தனர். ஆனால் அவர் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

பாதுகாப்பு வழங்கினால் உண் மையை வெளியிடுவதாக அவர் தெரிவித்தார். அதன்படி அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்தோம். ஆனால் அவரை தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரின் மனைவிதான் பதில் வழங்கினார். சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் பிரதிநிதிகள் இங்கு வந்தனர்.

அவர்கள் ஹசான் திலகரத்னவை சந்திக்க முயன்ற போதும் முடியவில்லை. அவர் தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடித்தருமாறு ஐ.தே.க. தலைவரையும் ஐ.தேக. வையும் கோருகிறேன்.

2010 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் சபையுடன் பல கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் டொலர் முதல் 10 ஆயிரம் டொலர் வரை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் சபையில் நிதி நெருக்கடி எதுவும் கிடையாது. ஊழியர்களுக்கு உரிய படி சம்பளம் வழங்கப்படுகிறது. கிரிக்கெட் சபை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக