25 பிப்ரவரி, 2011

லிபியாவிலுள்ள இலங்கையரை திருப்பி அழைக்க விசேட ஏற்பாடு


லிபியாவில் பணியாற்றும் இலங்கையர் களை நாட்டுக்கு அழைத்துவர கப்பலொன்று அனுப்பிவைக்கப்பட்டி ருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.தனியான விமானத்தில் அழைத்து வரஅரசாங்கம்நடவடிக்கை

லிபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான கப்பலொன்று அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் டிலான் பெரேரா தொடர்ந்தும் வெளிநாட்டுத் தூதரகங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

லிபியாவிலுள்ள இலங்கையர்கள் அந்நாட்டு அரசாங்கத்தின் ஊடாக இத்தாலிய எல்லையில் வைத்துக் கையளிக்கப்படுவார்கள் என்றும் அவர்களை அழைத்து வருவதற்கும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கும் அரசாங்கம் தயாராகவுள்ளது. அங்குள்ள நிலைமைகளை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.

பாராளுமன்றில் அமைச்சர் டிலான்


திரிபோலியைத் தவிர சகல விமான நிலையங்கள் பூட்டு; மோல்டாவுக்கு கப்பல் அனுப்ப தீர்மானம்

லிபியாவில் உள்ள 344 இலங்கை பணியாட்களை நாட்டுக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா கூறினார். இவர்கள் இன்று அல்லது நாளை விமானம் மூலம் இலங்கையை வந்தடைய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அவசரகால சட்டம் தொடர்பில் இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில், உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது :-

லிபியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையையடுத்து பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை திருப்பி அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 37 பணியாட்கள் கிரீஸ் நாட்டுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவர். லிபியா தூதரகத்தில் 200 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.

அவர்களை விமானம் மூலம் நாட்டுக்கு திருப்பி அழைத்து வர உள்ளோம். விமானம் கிடைக்காவிட்டால் தனியான விமானம் ஒதுக்கி அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளோம்.

திரிப்போலி விமான நிலையம் தவிர ஏனைய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், கப்பல் மூலம் மோல்ட்டா அல்லது லிபியாவை அண்டிய நாட்டுக்கு அவர்களை அழைத்து வந்து அங்கிருந்து நாட்டுக்கு கொண்டுவர உள்ளோம். 107 பேர் எம்முடன் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களை லிபிய தூதரகத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களையும் இரண்டு தினங்களுக்குள் நாட்டுக்கு அழைத்து வருவோம். லிபியாவில் உள்ள பணியாட்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான விமான டிக்கெட்டுகளுக்கான நிதி தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. லிபியாவில் 1200 இலங்கை பணியாட்கள் உள்ளனர். அனைவரும் அரசியல் நெருக்கடியினால் பாதிக்கப்படவில்லை. நாடு திரும்ப விருப்பமானவர்கள் மீள அழைத்து வரப்படுவர்.

அங்குள்ள இலங்கையரை பாதுகாக்கவும் நாட்டுக்கு அழைத்து வரவும் சகல ஒழுங்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அரசியல் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டு ள்ள இலங்கையர் குறித்து ஆராய 24 மணி நேரமும் இயங்கக் கூடிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அவசரகால சட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்வுக்கு பாதிப்பில்லை சகல உரிமைகளையும் தமிழரும் அனுபவிக்க வேண்டும்: அரசின் இலக்கு






அவசரகால சட்டத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும், நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்புக்காகவே அச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் டி. எம். ஜயரட்ண பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அவசியமில்லையென பாதுகாப்புப் படையினர் உத்தரவாதமளிக்கும் பட்சத்தில், அதனை நீக்கிவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனவும் பிரதமர் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என ஜே.வி.பி. எம்.பி. அநுரகுமார திசாநாயக்க சபையில் முன்வைத்த குற்றச்சாட்டை முற்றாக மறுத்த பிரதமர், நாட்டின் ஏனைய பகுதி மக்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுகிறது எனவும், குறிப்பாக அம்மக்களின் கெளரவத்தைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜே.வி.பி. எம்.பி. அநுர குமார திசாநாயக்க அவசரகால சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டுமெனக் கோரி சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை முன்வைத்தார்.

இதன் மீதான விவாதத்தை ஆரம்பித்துவைத்து அநுரகுமார திசாநாயக்க எம்.பி. முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் டி. எம். ஜயரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் பிரதமர் மேலும் தெரிவித்ததாவது:

அநுர குமார திசாநாயக்க எம்.பி. எதிர்வரும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை இலக்காக வைத்தே அவசரகால சட்டம் என்ற போர்வையில் சபையில் உரையாற்றியுள்ளார். அது மட்டுமல்ல, 1971ம் ஆண்டிலிருந்து தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட ஜே.வி.பி.யினர் இப்போது வடக்கு, கிழக்கு மக்களுக்காக பரிந்து பேசுகின்றனர் என்றால் அது விந்தையே.

ஊடக சுதந்திரம் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் அவர் தமதுரையில் குறிப்பிட்டார். அது இத்தேர்தல் காலத்தில் ஊடகங்களின் ஆதரவை அதிகமாக பெற்றுக்கொள்வதற்காகவே என்பதை சகலரும் அறிவர்.

அவசரகால சட்டம் எவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. அதிலிருந்த சில கடுமையான சரத்துக்கள் அண்மையில் நீக்கப்பட்டன. தற்போது சாதாரண சட்டமே அதில் நடைமுறையிலுள்ளது.

அண்மையில்கூட சில பிரதேசங்களில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. புலி உறுப்பினர்கள் 5000 பேர் தற்போதும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்களுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்கி தொழில்களைப் பெற்றுக்கொடுப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவர்களை நாம் எதிரிகளாகப் பார்க்கவில்லை.

யுத்தம் முடிவடைந்த போதும், நாட்டில் சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கு அவசரகால சட்டம் எவ்வகையிலும் காரணமல்ல. பாராளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ எத்தகைய சம்பவங்களிலும் சம்பந்தப்படவில்லை. அதேபோன்று ஊடகங்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொண்டதில்லை.

அவசரகால சட்டத்தினால் பிரயோசனம் பெறுவதற்கு அரசு ஒருபோதும் நினைக்கவில்லை. நாட்டில் சகலரும் எவ்வித பயமும் அச்சமும் இன்றி சுதந்திரமாக வாழும் சூழலை ஏற்படுத்துவதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

வேறு நாடுகளில் தினமும் ஆயிரக்கணக்கான மனிதப் படுகொலைகள் நடைபெறுகின்றன. எனினும் எமது மக்களில் 100ற்கு 94 வீதமானோர் படிப்பறிவுள்ளவர்கள். எத்தகைய பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கக்கூடிய வாய்ப்பு இங்குள்ளது.

அநுரகுமார திசாநாயக்க எம்.பி. செய் நன்றி மறந்து பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மற்றும் சட்டமா அதிபரையும் குற்றஞ்சாட்டுகிறார் என்றார் பிரதமர்.
மேலும் இங்கே தொடர்க...

மீனவர் பிரச்சினைக்கு இணக்கப்பாட்டுடன் நிரந்தர தீர்வு





கடற்றொழில் தொடர்பான பிரச்சினைக்கு இரு நாடுகளுக்குமிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறினார். இது தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் கூட்டுக்குழுவொன்றை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் நேற்று உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,மீனவர் தொடர்பான பிரச்சினையின் போது இரு நாட்டுக்குமிடையிலான நல்லுறவின் அடிப்படையில் கெளரவமாகவே நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பூரண விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. இதற்கான முழு அதிகாரம் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற கடல் எல்லை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு எமது கடற்படை படகுகள் எதுவும் செல்லவில்லை.

இந்திய மீன்பிடிப்படகுகளை சந்திக்க நேரிட்டால் எமது கடற்படையினர் மனிதாபிமானமாகவே செயற்பட்டு வந்துள்ளனர்.

யுத்தம் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக வடக்கு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அந்த நிலை மாறியுள்ளது. வடபகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப ஆரம்பித் துள்ளனர்.

மீன்பிடி பிரச்சினை தொடர்பில் நாம் இந்திய வெளியுறவுச் செயலாளருடன் பேச்சு நடத்தி வருகிறோம். மனிதாபிமான ரீதியில் இதற்கு தீர்வு காண முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

கடல் எல்லையை தாண்டிச் சென்று மீன்பிடிப்பது தொடர்பில் நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும். இதற்கு தற்காலிக தீர்வு காண்பது நல்லதல்ல. பல தடவைகள் இரு நாடுகளும் பேச்சு நடத்தியுள்ளன.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடிய தெளிவான அரச இயந்திரம் உள்ளது. இதனூடாக இரு நாடுகளும் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண உள்ளோம்.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல்: சகல பிரதேசங்களிலும் ஐ.ம.சு.மு அமோக வெற்றிபெறும்





கிராமிய மக்களாலேயே தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக நடத்தப்படுகின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றிபெறும் என முன் னணியின் தலைவர்கள் தெரிவித்தனர்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற முன்னணியின் செய்தியாளர் மாநாட்டிலேயே முன்னணியின் தலைவர்களான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க, அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை ஒன்றாக ஒரே நேரத்தில் நடத்துவதையே அரசாங்கம் விரும்புகிறது. விட்டுவிட்டு நடத்தவோ, கட்டம் கட்டமாக நடத்துவதோ அரசின் எண்ணமில்லை.

தேர்தல்கள் பின்போடப்பட்ட இடங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றிபெறும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனது முதலாவது மாநாட்டை எதிர்வரும் 28ம் திகதி அனுராதபுரத்திலிருந்து ஆரம்பிக்கிறது என்றும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப் பட்டால் அதற்கெதிராக நீதிமன்றம் செல்வது தவறு என ஜே. வி. பி.யினர் கூறுகின்றனர். தேர்தல் ஆணையாளர் என்ன முடிவை எடுக்கிறாறோ அதனை ஏற்றுக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். ஐ. ம. சு. மு. வினதும் ஐ. தே. க. வினதும் சுயேச்சை குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டவுடன் அவை அமைதியாக இருந்துவிட வேண்டும் என ஜே. வி. பி. கூறுகிறது. ஆனால் முன்பு ஒருமுறை ஜே. வி. பி.யின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் ஜே. வி. பி. யினரே அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றது.

இந்த ஞானம் ஏன் அன்று ஜே. வி. பி.யினருக்கு வரவில்லை. ஜே. வி. பி.யினருக்கு இன்று இனங்காண முடியாத அரசியல் நோய் ஒன்று பீடித்துள்ளது. ஐ. ம. சு. முன்னணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் திஸ்ஸமகாராம, ஹோமாகம, எம்பிலிப்பிட்டிய போன்ற இடங்களில் ஓரளவேனும் தமது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளலாம் என்ற நட்பாசையுடன் இருந்த அவர்களுக்கு நாம் நீதிமன்றம் சென்றது அச்சத்தை கிளப்பிவிட்டிருக்கிறது. அவர்கள் கோட்டைகள் சரிந்து விடுவது நிச்சயம்.

ஐ. தே. க. வின் தலைவர் இன்று நாட்டிலேயே இல்லை. தேர்தல் காலத்தில் நிற்கும் தமது வேட்பாளர்கள் பற்றி அவருக்கு அக்கறை இல்லை. வேட்பாளர்களும் விரக்தியடைந்த நிலையில் இருக்கிறார்கள். ஐ. தே. க.வில் சஜித் பிரேமதாசா உட்பட 50 வீதமானவர்கள் ஐ. ம. சு. மு.வுக்கே வாக்களிக்கவுள்ளனர். மீதமானவர்கள் வாக்களிப்பிலிருந்து ஒதுங்கிக் கொள்வார்கள்.

எதிர்வரும் 17ம் திகதி தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் ஐ. ம. சு. மு. அமோக வெற்றி! ஐ. தே. க. 10ஆவது தடவையாகவும் தோற்றது! ஜே. வி. பி.யின் திஸ்ஸ மகாராம கோட்டையும் சரிந்தது!!! என்ற பிரதான தலைப்பை தாங்கிய செய்திகள் வெளிவரும் என்றும் விமல் வீரவன்ச கூறினார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிராமிய மக்கள் நிச்சயமாக ஐ. ம. சு. முன்னணிக்கே ஆதரவை வழங்குவார்கள்.

அரசாங்கத்தை அச்சுறுத்தவோ, அல்லது அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கவோ பாடம் புகட்ட வேண்டும் என்றோ மக்கள் எண்ணவில்லை.

குடிநீர், நீர்ப்பாசனம், மின்சாரம், வீதிகள் உள்ளிட்ட உட்கடமைப்பு வசதிகளையும் கிராம மட்டத்திலிருந்து பெற்றுக் கொடுப்பதே உள்ளூராட்சி தேர்தல்களின் நோக்கமாகும். அம்மக்களுக்கு தெரிந்த ஒரு பிரதிநிதியை அவர்களாகவே தெரிவு செய்வதற்காக ஒரு சந்தர்ப்பம் கமநெகும, மகநெகும, திவிநெகும போன்ற திட்டங்களின் ஊடாக கிராமங்களிலிருந்து நாட்டை அபிவிருத்தி செய்வதே அரசின் நோக்கமாகும். எனவே, இதனை உறுதி செய்யும் வகையில் மக்கள் அரசுக்கு நிச்சயமாக வாக்களிப்பார்கள் என்றும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் திட்டம்






திருகோணமலையில் பாரிய கைத்தொழில் பேட்டையொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்பொழுது அதிகரித்திருக்கும் வெளிநாட்டு முதலீடுகளை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் அனைத்து உட்கட்டுமான வசதிகளுடன் கூடிய வலயமொன்றைத் திருகோணமலையில் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாரிய தொழில்துறை வலயமொன்றை அமைப்பதாயின் துறைமுக வசதிகள் அவசியம் என்பதால் திருகோணமலை சம்பூரில் தொழில்பேட்டையொன்றை அமைப்பதற்கும், இதற்கு 97 சதுரக் கிலோமீற்றர் நிலப்பரப்பை ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். நிலக்கரி சூழை,இரும்பு உருக்குச் சூழை, பாரிய இயந்திரங்களைப் பொருத்தக்கூடிய வலயமொன்றை மிஷேல் பல்தேசிய நிறுவனம் அவுஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் இணைந்து உருவாக்குவதற்கான திட்டமொன்றும் தயாரிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைய இந்த வலயம் தொடர்பான தகைமைகாண் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அறிவித்தார். இந்த வலயத்தின் முதற்கட்டத்திற்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர் தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான தொழில்பேட்டையால் இயற்கைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இவ்வாறு அமைக்கப்படவிருக்கும் பாரிய தொழில் பேட்டையானது சுற்றாடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவகையில் அமைக்கப்படும். உலக நாடுகள் தற்பொழுது எதிர்நோக்கியிருக்கும் இரண்டு முக்கிய பிரச்சினைகளான உணவுப் பிரச்சினை மற்றும் சூழல் மாசடைதல் ஆகியவற்றில் இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது என்றார்.

இதேவேளை, முதலீட்டுச் சபையால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் சில திட்டங்கள் காலதாமதமடைவதாக முதலீட்டாளர்கள், பலர் விசனம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக கருத்துரைத்த அமைச்சர், சில திட்டங்களில் காலதாமதம் காணப்படுகிறது. இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றார்.

இதுவரை காலமும் எந்தவொரு நிறுவனமும் இலங்கையில் ஒரு ரூபாவைக்கூட முதலிட முன்வரவில்லை. ஆனால், நாட்டில் அமைதிநிலை தோன்றிய பின்னரே முதலீடுகள் அதிகரித்துள்ளன. கடந்த 18 மாதங்களாகவே இவ்வாறான பிரச்சினைகள் ககாணப்படுகின்றன. நாளாந்தம் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படும். இவற்றைத் தீர்ப்பதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது எஎன்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

உலக கிண்ண கிரிக்கெட்; இசைக் கருவிகளை எடுத்துச் செல்ல தடை





இலங்கை- பாகிஸ்தான் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை கண்டுகளிக்க கெத்தாராம விளையாட்டரங்கிற்குள் செல்லும் ரசிகர்கள் இசைக்கருவிகள் (ரம்பர்ட்) எடுத்துச் செல்வதனால் அதற்காக முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும்.

071-8687768 (நிஷாந்த) என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அனுமதியை பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பணிப்பாளர் சுராஜ் தந்தெனிய தெரிவித்தார்.

கிரிக்கெட் அரங்கிற்குள் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், வெற்றியை கொண்டாடுவதற்காகவும் ரசிகர்கள், ஆரவாரம் செய்யும்போது இசைக்கருவிகளை (ரம்பர்ட்) இசைத்தும் தமது உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள்.

இதற்காக ரம்பர்ட் ஒன்றை எடுத்து செல்வ தானால் முன்கூட்டியே குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அனுமதி பெற வேண்டும்.

அனுமதி கோரும் நபர் தொடர்பாக ஆராய்ந்த பின்னரே ரம்பர்ட் எடுத்துச் செல்ல அனுமதி பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

உலக கிண்ணம்: ஆர். பிரேமதாச மைதானத்துக்கு கடும் பாதுகாப்பு





இலங்கை - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளதால் மாளிகாவத்தை பிரேமதாச அரங்கிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்றுத் தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொலிஸ், இராணுவம், விசேட அதிரடிப்படை, எம். எஸ். ரி. போன்ற சிறப்பு பாதுகாப்புகள் வழங்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சங்கராஜ மாவத்தை, வின்சன்ட் பெரேரா மாவத்தை, பபாபுள்ளே மாவத்தை, பிரதீபா மாவத்தை, ஜும்மா மஸ்ஜித் ரோட், மாளிகாவத்தை லேன், ஸ்டேஸ் ரோட் போன்ற வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

0 ரூபா, 100 ரூபா, 500 ரூபா டிக்கட் பெற்றுக் கொண்டுள்ளவர்கள் பிரதீபா மாவத்தை சந்தி வழியாக கெத்தாராம அரங்கிற்குள் பிரவேசிக்கலாம்.

மேலும் 50 ரூபா, 100 ரூபா டிக்கெட் பெற்றுக்கொண்டுள்ளவர்கள் ஜும்மா மஸ்ஜித் வீதி வழியாக சென்று பி.1 மற்றும் பி.2 என்ற நுழைவாயில் ஊடாக கெத்தாராம அரங்கிற்குள் செல்லலாம்.

250 ரூபா, 500 ரூபா டிக்கெட் பெற்றுக் கொண்டவர்கள். புதிய போதிராஜ மாவத்தையூடாக சென்று கெத்தாராம அரங்கிற்குள் பிரவேசிக்க முடியும். உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் உத்தியோகபூர்வ அதிகாரிகள், அலுவலர்கள், ஊடகத்துறை என அடையாளமிடப்பட்ட வாகனங்கள் மற்றும் 5000 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை கொண்ட அனுமதி சீட்டை கொண்டவர்கள் பாபாபுள்ளே மாவத்தை ஊடாக சென்று அரங்கிற்குள் பிரவேசிக்கலாம் என்றும் பொலிஸ் மா அதிபர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

கடலுக்கு குளிக்க சென்ற களுவாஞ்சிக்குடி மாணவன் மரணம்







பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி களுவாஞ்சிக்குடி கடலில் குளிக்கச் சென்ற கோபாலரத்தினம் ரவிகுமார் (வயது 18) என்ற க. பொ. த (சா/த) வகுப்பு மாணவன் கடலில் மூழ்கி நேற்று காணாமல் போயுள்ளார்.

இராணுவத்தினரும், பொலிஸாரும் மீனவர்களும் சடலத்தைத் தேடும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

மட்டக்களப்பு குறுமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் எட்டுப் பேர் டியூசன் செல்வதாகக் கூறி களுவாஞ்சிக்குடி கடலுக்கு நேற்று குளிக்கச் சென்றுள்ளனர்.

குளித்துக்கொண்டிருந்தபோது குறிப்பிட்ட மாணவன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...