22 ஜூன், 2011

பான் கீ மூன்: உறுதியற்ற நிலைப்பாடு




இலங்கையைப் பொறுத்தவரை ஐநா தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள் ஒரு உறுதியற்ற நிலைப்பாட்டையே கடைப்பிடித்தார் என்று மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் ஆசிய இயக்குனரான பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐநாவின் தலைமைச் செயலராக பான் கீ மூன் அவர்கள் இரண்டாவது பதவிக்காலத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் இலங்கை உட்பட பல நாடுகளில் மனித உரிமை மீறல்களை தடுக்கத் தவறிவிட்டார் என்று பல மனித உரிமை அமைப்புக்கள் கருத்து வெளியிட்டிருந்தன.

இது குறித்துக் கருத்துக் கூறுகையிலேயே பிராட் அடம்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பான் கீ மூனின் செயற்பாடு ஒரு கலவையான விஷயம், என்று கூறிய பிராட் அடம்ஸ் அவர்கள், '' பர்மா விஷயத்தில் அவர் நிறைய அறிக்கைகளை விட்டார். ஆனால் பர்மிய அரசுக்கு எதிராக செயல்படுவதில் அவர் மிகவும் பலவீனமாக இருந்தார். அவருக்கு ஒரு கோர்வையான திட்டம், யுக்தி இல்லை. சீனாவைப் பொறுத்த வரை கடந்த இரு தசாப்த காலத்தில் நடந்த மிகவும் மோசமான ஒடுக்குமுறையின் போது அவர் அமைதி காத்தார்'' என்று கூறியுள்ளார்.

இலங்கை நிலைமை குறித்தும் அவர் தமிழோசையுடன் பேசுகையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.

''இலங்கையைப் பொறுத்தவரை அவர் மிகவும் உறுதியற்ற நிலைப்பாட்டையே கடைப்பிடித்தார். போர் முடிந்த பின், இலங்கைக்கு சென்று, மஹிந்த ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளப்படுவதை அனுமதிக்க வேண்டாம் என்று நாங்களும் மற்றவர்களும் தந்த நல்ல அறிவுரையை மீறி,அங்கே சென்றார். மஹிந்த ராஜபக்ஷ, தனது அரசுக்கு நம்பகத்தன்மையைப் பெற அந்த விஜயத்தைப் பயன்படுத்திக் கொண்டார்'' என்றார் பிராட் அடம்ஸ்.

இலங்கையில் போர் தொடர்பான பிரச்சினைகள் பற்றி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு பொறுப்பு சுமத்தும் வழிமுறை உருவாக்கப்படும் என்று மஹிந்த கொடுத்த உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டதன் மூலம் ஒரு சரியான முடிவெடுப்பதில் பான் கீ மூன் தவறிழைத்துவிட்டார் என்றும் பிராட் அடம்ஸ் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுக்க விசா நடைமுறைகளில் மாற்றம்

இலங்கையுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ள ஐக்கிய இராச்சியம், இலங்கை மக்கள் தமது நாட்டுக்கு விஜயம் செய்வதையும் அங்கு கல்வியைத் தொடர்வதையும் பெரிதும் விரும்புகின்றது. இருந்தபோதிலும், சட்ட ரீதியற்ற முறையில் நாட்டுக்குள் நுழைவதையும் சட்டரீதியற்ற குடியேற்றத்தையும் தவிர்க்கும் வகையில், விதிமுறைகளில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளதோடு அவற்றை இறுக்கமாக நடைமுறைப்படுத்தவும் எதிர்பார்க்கின்றோம் என்று இலங்கைக்காக பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மார்க் கூடிங் தெரிவித்தார்.

இதன்பொருட்டு மாணவர் விசாக்கள் மற்றும் குறுங்கால விஜயத்திற்கான விசா நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டுவந்துள்ள அதேநேரம், வதிவிட விசா வழங்குவதற்கான நடைமுறைகளையும் அடுத்த வருடம் முதல் திருத்தியமைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய இராச்சியத்திற்கான குடிவரவு நடைமுறைகள், விசா வழங்கல் நடவடிக்கைககள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் நேற்று நடைபெற்றது. அங்கு விளக்கமளிக்கும் போதே பிரதி தூதுவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையும் பிரித்தானியாவும் நீண்ட கால பொருளாதார, காலாசார மற்றும் வர்த்தக உறவுகளைக் கொண்ட நாடுகளாகும். இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு பல்வேறு வழிகளிலும் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது. இந்நாடுகளுக்கிடையில் பயணம் செய்யும் நடவடிக்கை இப்போது முக்கிய கட்டத்தில் உள்ளது. இதற்கு இரு காரணங்கள் உள்ளன.

முதலாவது இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து இரு வருடங்கள் பூர்த்தியடைந்து விட்டன. இதனால் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமன்றி, இந்நாட்டில் இருந்து பிரித்தானியாவுக்கு செல்ல விரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமுள்ளது.

இரண்டாவது, உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருந்த வீழ்ச்சி நிலை இப்போது சீரடைந்து விட்டது. இதன் காரணமாக எதிர்விளைவுகளைச் சந்தித்திருந்த ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரமும் மீட்சியடைந்து, மீளவும் முன்னேறிச் செல்கின்றது. இதனால் வர்த்தக முயற்சிகளை முன்கொண்டு செல்லும் நோக்கிலும், வேறு நோக்கங்களுக்காகவும் பிரித்தானியாவுக்கு சென்று வருவோரின் தொகை அதிகரித்துச் செல்கின்றது.

எனவே இவ்வாறான ஒரு காலகட்டத்தில், நல்ல நோக்கங்களுக்காக பிரித்தானியாவுக்கு செல்ல விரும்புகின்ற அனைவராலும் நேர்மையான முறையில் சமர்ப்பிக்கப்படுகின்ற விசா விண்ணப்பங்களை நாம் வரவேற்கின்றோம். ஆனால், போலியான அல்லது குடிவரவு சட்டங்களுக்கு புறம்பான விண்ணப்பங்கள் குறித்து இறுக்கமான சட்ட நடைமுறைகளை கையாள வேண்டியுள்ளது. இதற்காக குடிவரவு கொள்கைகள் திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து பெருமளவானோர் பிரித்தானியாவுக்கு சென்றுள்ளனர்; செல்கின்றனர். இப்போது சட்டரீதயிக்ஷிக அங்கு 2 இலட்சம் இலங்கையர் வாழ்கின்றனர். கடந்த வருடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விசா விண்ணப்பங்களில் 70 வீதமானவற்றுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 20 ஆயிரம் பேர் விசாவினைப் பெற்றுள்ளனர். இவர்களுள் 8000 பேர் குறுங்கால விஜய (விசிட்) விசாவையும் 7000 பேர் மாணவர்களுக்கான விசாவையும் பெற்றுள்ளனர்.

சாதாரணமாக 15 நாட்களுக்குள் விசா வழங்கப்படுகின்றது. அது நிராகரிக்கப்படும் பட்சத்தில் அதற்கான காரணம் தெளிவாக விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படுகின்றது. விசா ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கான அனைத்து நடைமுறை தொடர்பிலும் எமது இணையத்தளத்தின் ஊடாக அறிந்து கொள்ளலாம். இதற்கென ஆலோசனை முகவர்களின் உதவி அத்தியாவசியமற்றது என்றே கருதுகின்றேன் என்றார்.

ஐக்கிய இராச்சியத்தின் கரையோர கண்காணிப்பு முகவரகத்தின் பிராந்தியப் பணிப்பாளர் கிரிஸ் டிக்ஸ் உக்பா விளக்கமளித்து உரையாற்றுகையில்,

தவிர்க்கமுடியாத பல்வேறு காரணங்களினால் பிரித்தானியா தனது குடிவரவு சட்ட விதிகளை இறுக்கமாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டவிரோத குவியேற்றத்தை தடுப்பதும் சட்டத்திற்கு முரணாக நாட்டில் தங்கியிருத்தலை கட்டுப்படுத்துவதுமே இப்புதிய நடைமுறைகளின் பிரதான நோக்கமாகும். இது தொடர்பாக உலக நாடுகளின் அரசங்கங்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம்.

பிரித்தானியாவில் உயர்தரம் வாய்ந்த கல்வியகங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில் பலர் நேர்மையாக கல்வி நடவடிக்கைகளை தொடர்கின்றனர். ஆனால், இதனை சில உள்நாட்டு விண்ணப்பதாரிகளும் ஏன் குறைந்த தரத்திலான ஒரு சில பிரித்தானிய கல்வியகங்களும் துஷ்பிரயோகம் செய்கின்றமை தெரியவந்துள்ளது.

இலங்கையில் பிறந்த 2 இலட்சம் பேர் பிரித்தானியாவில் சட்டரீதியாக வசிக்கின்றனர் என்றாலும் சட்டத்திற்கு முரணாக எத்தனைபேர் அங்குள்ளனர் என்பது குறித்த மிகச் சரியான தரவுகள் எம்மிடம் இல்லை. நிச்சயமாக அத்தொகை மேற்குறிப்பிட்டதை விட கணிசமானளவு அதிகமாகவே இருக்கும். அவர்களுள் 26 பேரே அண்மையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இலங்கையில் இருந்து விசாவுக்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுள் மாதத்திற்கு 200 விண்ணப்பங்கள் போலியான ஆவணங்களுடன் மோசடியாக தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படுகின்றன. அப்படியாயின் நாளொன்றுக்கு சராசரியாக இவ்வாறான 10 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுகின்றன.

பிரித்தானியாவுக்கு கடந்த வருடத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 30ஆயிரம் பேர் குடிபெயர்ந்து வந்துள்ளனர். இலட்சக் கணக்கில் உள்ள குடியேற்றவாசிகளின் தொகையை ஆயிரக்கணக்காக குறைப்பதற்கு எமது அரசாங்கம் விரும்புகின்றது.

இதற்கமைய கொண்டுவரப்படும் புதிய விதிமுறைகளின் படி, கல்வியைத் தொடர்வதற்காக மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கும் ஒருவர், கூடியபட்சம் 5 ஆண்டுகள் மட்டுமே ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருப்பதற்கும் கல்வி கற்கவும் அனுமதிக்கப்படுவர். அதன்பின்னர் அவர் இலங்கைக்கு திரும்பியாக வேண்டும். அவர் மீண்டும் பிரித்தானியாவுக்கு செல்ல விரும்பின், அவர் விசாவுக்காக விண்ணப்பிக்கும் போது அவருக்கு இன்னுமொரு விசா வழங்குவதா என்பது குறித்து கவனமாக ஆராயப்படும். காலாநிதி போன்ற பட்டப் படிப்புகளை தொடரும் குறிப்பிட்ட சில தரப்பினருக்கு இதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் எனினும் பொதுவாக இவ்விதி கடைப்பிடிக்கப்படும்.

பிரித்தானியாவில் கல்வியைத் தொடர விரும்பும் விண்ணப்பதாரி, பிரித்தனிய அரசாங்கத்தின் கண்காணிப்பில் இயங்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றால் மட்டுமே பகுதிநேரமாக தொழில்புரிவதற்கு அனுமதிக்கப்படுவர். அங்கீகரிக்கப்படாத, தனியார் கல்வியகங்களில் கற்கைகளுக்காக பதிவு செய்யும் எவருக்கும் வேலை செய்வதற்கான அனுமதி கிடைக்காது.

இவ் விதி புதிதாக விசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கே செல்லுபடியாகும். எவ்வாறிருந்த போதும், அவர்கள் இதற்குப்பிறகு வேறொரு கற்கை நெறிக்கு பதிவு செய்ய முற்படுகின்றபோதோ அல்லது தமது விசா காலத்தை புதுப்பிக்க முனையும் போதோ இப்புதிய நடைமுறைக்கு உள்வாங்கப்படுவர்.

அத்துடன் , பிரித்தானியாவில் பட்டப்படிப்பு ஒன்றை பூர்த்தி செய்யும் ஒருவர், தமது தகுதிக்கமைய தொழில் செய்வதற்கான அனுமதிப் பத்திரத்தை முறையாக பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் இரு வருடங்கள் தொழில்நிமித்தம் தங்கியிருக்க அனுமதி கிடைக்கும்.

அதேநேரம், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவினை மேம்படுத்தும் வகையில் இலங்கையில் உள்ள மிக முக்கிய கம்பனிகளின் அதிகாரிகளுக்காக எக்ஸ்பிரஸ் சேர்விஸ் எனப்படும் விஷேட விசா நடைமுறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அது மட்டுமன்றி, சிலர் என்னென்ன காரணங்களை மனதில் வைத்துக் கொண்டு பிரித்தானிய விசாவுக்கு விண்ணப்பிக்கின்றனர் என்பது எமக்குத் தெரியும். எனவே, மிகவும் சிறந்த, நேர்மையான பிரஜைகளுக்கு மட்டுமே வதிவிட விசாவை வழங்கும் வகையில் அடுத்த வருடம் ஏப்ரல் முதல் குடிவரவு விதிகளில் மாற்றம் கொண்டுவர தீர்மானித்துள்ளோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

2020 க்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டுவிடும்: தினேஷ்

வடக்கு கிழக்கை உள்ளடக்கியதாக இதுவரையில் 5594.89 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் மற்றும் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. எதிர்வரும 2020 ஆம் ஆண்டுக்குள் மேற்படி மாகாணங்களில் புதைக்கப்பட்டுள்ள சகல கண்ணிவெடிகள் மற்றும் மிதி வெடிகளும் அகற்றப்பட்டு விடும் என்று அரசாங்கம் நேற்று சபையில் அறிவித்தது.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பி.ப. ஒரு மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கையின் பின்னர் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.யான ரவி கருணாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார் .

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள நாடுகள், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள நிலப்பரப்புக்கள், எஞ்சியுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு எடுக்கும் காலப்பகுதி ஆகியவை தொடர்பிலேயே ரவி கருணாநாயக்க எம்.பி.கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தொடர்ந்தும் பதிலளிக்கையில், சுவிற்சர்லாந்து, டென்மார்க், பிரிட்டன் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்ணிவெடிகள் மற்றும் மிதிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் படி 258.51 சதுர கிலோ மீற்றர் பரப்பளவு சுவிற்சர்லாந்துக்கும் 1336.29 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு டென்மார்க்கிற்கும் 650.59 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கு 1273.90 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பும் ஒதுக்கப்பட்டுள்ளன.

2002 முதல் இன்று வரையில் மேற்படி நான்கு நாடுகளும் நிறுவனங்கள் மற்றும் இராணுவத் தரப்பினாலும் 5594.89 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புகளில் கண்ணிவெடிகள் மற்றும் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. இதற்கென இதுவரையில் 149 கோடியே 28 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா, சீனா,அவுஸ்திரேலியா, யு.என்.எச்.சி.ஆர். ஐ.ஓ.எம். மற்றும் பொருளாதார அமைச்சு ஆகியவை கண்ணிவெடிகள் மிதிவெடிகளை அகற்றுவதற்கான உபகரணங்களை வழங்கியுள்ள அதேவேளை யுனிசெப் மற்றும் அமெரிக்கா ஆகியன 65 வாகனங்களையும் வழங்கியுள்ளன.

மேற்படி நிறுவனங்கள் மற்றும் நாடுகள் வடக்கு கிழக்கில் கண்ணிவெடி, மிதிவெடிகளை அகற்றுவதற்காக அதிகமான நன்கொடைகளையும் வழங்கியுள்ளன.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள், மிதி வெடிகள் அனைத்தும் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் முற்றாக அகற்றப்பட்டுவிடும். இந்த இலக்கினை கொண்டே அரசு செயற்பட்டுவருகிறது. 2020 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே இந்த இலக்கினை எட்டுவதற்கு அரசு எதிர்பார்க்கிறது. கண்ணிவெடிகள் மிதிவெடிகள் அகற்றப்பட்ட பிரதேசங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதுடன் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் அரசாங்கம் நிறைவேற்றியிருக்கின்றது என்றார்
மேலும் இங்கே தொடர்க...

ஆணுறையில் மறைத்து தங்க பிஸ்கட் கடத்தல் : இலங்கை வாலிபர் கைது

கொழும்பில் இருந்து விமானத்தில் திருச்சி சென்ற இலங்கை வாலிபர் ஆணுறையில் தங்கக் கட்டிகளை கடத்தியதால் திருச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து இந்தியா சென்ற விமானத்தில் பயணி ஒருவர் தங்க பிஸ்கட்களை கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சென்னை, திருச்சி விமான நிலையங்களில் நேற்று முன்தினம் தீவிர சோதனை நடத்தினர்.

கொழும்பிலிருந்து திருச்சி விமான நிலையம் சென்ற விமானம் ஒன்றில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், இலங்கையைச் சேர்ந்த வாலிபர் முகமது நஜிமுன் என்ற பயணியை ஸ்கேன் செய்து பார்த்தபோது, வயிற்றில் சந்தேகப்படும்படியான பொருள் இருந்தது. அவரை அரசு மருத்துவமனையில் சேர்ந்து டாக்டர்கள் மூலம் உள்ளே இருந்த பொருளை வெளியே எடுத்தனர். ஆணுறைக்குள், 12 தங்க பிஸ்கட் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதன் மதிப்பு, 40 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. அவரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரித்தனர். நேற்று அவரை கைது செய்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 29ஆவது இடம்

மிகவும் தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 29ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியிடப்படும் பொரின் பொலிஸி (வெளிவிவகாரக் கொள்கை) எனும் சஞ்சிகையினால் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் சோமாலியா முதலிடத்திலும் சாட் இரண்டாவது இடத்திலும் சூடான் 3ஆவது இடத்திலும் உள்ளன.

இலங்கையின் அயல் நாடுகளில் பாகிஸ்தான் இதில் முன்னிலை வகிக்கிறது. இப்பட்டியலில் பாகிஸ்தான் 12ஆவது இடத்தில் உள்ளது. மியன்மார் 18ஆவது இடத்திலும் பங்களாதேஷ் 25ஆவது இடத்திலும் நேபாளம் 27ஆவது இடத்திலும் உள்ளன.

60 நாடுகளைக் கொண்ட இப்பட்டியலில் பூட்டான் 50 ஆவது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் உள்ள நாடுகளில் பெரும்பாலானவை ஆபிரிக்க நாடுகளாகும்.

இலங்கை தொடர்பான குறிப்பில் 2010 ஆண்டின் சர்வதேச நெருக்கடிக் குழுவின் அறிக்கையின் படி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் இறுதிக்கட்ட நடவடிக்கை பொதுமக்கள் மீது எறிகணைகள் வீசுவதிலும் ஏனைய அக்கிரமங்களிலும் தங்கியிருந்தது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் கடைசியாக வெளியான புள்ளிவிபரங்களின் படி 327,000 பேரில் சிலர் இன்னும் இடம்பெயர்ந்த நிலையில் உள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க பிளவுகள் இன்னும் நிலவுகின்ற போதிலும் சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தும் அரசாங்கம் கடந்த காலத்தை மறக்க ஆர்வம் கொண்டிருப்பதாக தோன்றுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இராணுவ பதிவுக்கு எதிராக கூட்டமைப்பு தாக்கல் செய்திருந்த மனு வாபஸ்

வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் இராணுவ பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளது என யாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்ததையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் யாழ்.கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது பதிவு நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக அவர் வழங்கிய உறுதிமொழியை அடுத்தே குறித்த மனுவை வாபஸ் பெற தீர்மானித்ததாக சிரேஷ்ட சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ்.சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக உயர் நீதிமன்றத்திடம் அறிவித்தனர்.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான என்.ஜே.அமரதுங்க, பி.ஏ.ரத்னாயக மற்றும் சந்திரா ஏக்கநாயக்க ஆகியோர் முன்னிலையில் கடந்த மார்ச் 3ஆம் திகதி விசாரிக்கப்பட்ட இந்த மனுவில் பிரதிவாதிகளான பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, யாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, இராணுவ பேச்சாளர் உபய மெதவல மற்றும் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அவர்கள் சார்பில் சட்டமா அதிபர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

பலாத்காரமான முறையில் பொதுமக்கள் பதிவு நடவடிக்கை இடம்பெறுவதுடன் புகைப்படம் பிடிக்கப்படுவதாகவும் இதற்கு மேலதிகமாக கிளிநொச்சி மாவட்ட மக்கள் சிங்கள மொழியில் அச்சடிக்கப்பட்ட பத்திரத்தில் பலவந்தமாக கைச்சாத்திட வைக்கப்படுவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தில் எவரும் கொல்லப்படவில்லை என்பதை யாரும் நம்பமாட்டார்கள்: கிரியல்ல



இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொது மக்களில் ஒருவர் கூடக் கொல்லப்படவில்லை என அரசு கூறுகின்றது. இதனை யாரும் நம்பமாட்டார்கள், இதனை அரசு சர்வதேசத்திடம் விளக்கிக் கூற வேண்டும் என்று ஐ.தே.க. எம். பியான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஒதுக்கீடு சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரிக்கப்பட்டு விட்டதாக அரசு கூறுகின்ற போதிலும் அந்த அறிக்கையில் கேட்கப்பட்டுள்ள 31 கேள்விகளுக்கும் அரசு மிகவும் இரகசியமான முறையில் பதிலளித்துள்ளது.

இலங்கை தொடர்பான ஐ. நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் சனல் 4 வீடியோ காட்சி தொடர்பாகவும் சர்வதேசத்திற்கு விளக்கமளிக்க அரசு இதுவரையில் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இவை தொடர்பில் சர்வதேச நாடுகளுடன் பேச்சுக்களை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அரசு அதனை செய்யவில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்பு சனல் 4இல் வீடியோ காட்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. இதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அப்போது கூறியது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நாட்டிற்கு ஏற்படும் ஆபத்துக்கள் அவப் பெயர்களை தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். இது தொடர்பாக ஊடகங்களுடனோ நாட்டு மக்களுடனோ அல்லது பாராளுமன்றத்திலோ பேசுவதில் எந்த பயனும் இல்லை சர்வதேசத்துடன் தான் பேச வேண்டும்.

ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையை பொய்யென நிரூபிப்பது அரசின் கைகளில் தான் இருக்கிறது. ஆனால் இது தொடர்பில் அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது தொடர்பில் உடனடியாக சர்வதேசத்துடன் பேச வேண்டும்.

ஐ. நா. மனித உரிமைகள் சபையின் அலுவலகம் ஒன்றை கொழும்பில் திறந்து இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை பொய்யாக்குவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...