19 மே, 2011

போர்க் குற்ற விசாரணைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு ஆதரவை வழங்க வேண்டும்: ச.ம.ச

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை சுயாதீன பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

போர் முடிவடைந்த 10 நாட்களில் அதாவது 2009 ஆம் ஆண்டு மே 27 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம், பிரேரணை ஒன்றை நிறைவேற்றியது. அதில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அமைதி குறித்து வலியுறுத்தப்பட்டது.

எனினும் இரண்டு தரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் அந்த பிரேரணையில் எவ்வித கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை என்று மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டியுள்ளது.

தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு இலங்கையின் இறுதிப் போரின் போது போர்க் குற்றங்கள் இடம்பெற்றிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இதற்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் தனது ஆதரவை வழங்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.

2009 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட படை நடவடிக்கையின்போது சுமார் 3 இலட்சம் மக்கள் முற்றுகையிடப்பட்டனர்.

இதன்போது நடாத்தப்பட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலர் காயங்களுக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் பான் கீ மூனின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் போர்க் குற்றம் நிகழ்ந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச விசாரணை பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று பான் கீ மூனின் நிபுணர் குழு வலியுறுத்தியுள்ளது.

எனவே பான் கீ மூன், இலங்கையின் போர்க் குற்றங்களை விசாரணை செய்ய சர்வதேச பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.அத்துடன் அதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்ஆணைக்குழுவின் ஆதரவையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக