31 ஜனவரி, 2010

தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை வழங்குவதில் மெத்தனப் போக்கே தொடர்கிறது


அமெரிக்காவில் வெளிவரும் வோல் ஸ்றீட் ஜேர்னலில் தெரிவிப்பு

தமிழர்களுக்கான அரசியல் உடன்படிக்கைகளில் முக்கியமாக ஜனநாயக தமிழர் தலைவர்கள் பல வருடங்களாக சட்ட ரீதியாக கோரும் உரிமைகளை வழங்குவ தில் மெத்தனப் போக்கே தொடர்கிறது. அதிகாரத்தை அனைத்து மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிப்பதே இதற்கு தீர்வாக அமையும் என அமெரிக்காவில் வெளியாகும் வோல் ஸ்ட்றீட் ஜேர்னல் பத்திரிகையில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்ப் புலிகள் மீது ராணுவத்தை வைத்து குண்டு மழை பொழிந்த போது "ராஜபக்ஷவிற்கு இது மிகப் பெரிய சவால்" என வருணிக்கப்பட்டது. மே 2009இல் புலிகளை அழித்து குண்டு மழை முற்றிலும் ஓய்ந்து நாட்டில் அமைதி நிலவிய போது ராஜபக்ஷ அந்தச் சவாலில் வெற்றி பெற்றார். இப்போது போர் வெற்றியோடு தேர்தல் வெற்றியும் சேர்ந்து ஸ்ரீலங்காவை எப்படியான ஒரு நாடாக ஆக்க வேண்டும் என்ற பொறுப்பை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ராஜபக்ஷ இருக்கின்றார்.

கடந்த செவ்வாயன்று நடந்த தேர்தலில் 58 சதவீத வாக்குகளை பெற்று மிகப் பெரிய வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட புலிகளைப் போரில் வென்ற முன்னாள் இராணுவ தளபதியை தோற்கடித்தாலும் தேர்தல் இதற்கு முன் போல் இல்லாமல் அமைதியாகவே நடைபெற்றது.

கடும் குறைபாடுகளுக்கு மத்தியிலும் தேர்தல் சில நன்மைகளை கொண்டு வந்துள்ளது. மிக முக்கியமாக இரண்டு சிங்கள தலைவர்களும் தமிழர் வாக்கு ளுக்காக போட்டியிடும் சூழ்நிலை உருவானது. முன்னதாக பொன்சேகா மிகப் பெரிய தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் கூட்டணி ஏற்படுத்தினார். இதுதானாக தமிழர் வாக்குகளை சேகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ராஜபக்ஷவை தள்ளியது.

இதன் விளைவாக அரசு தமிழ் அகதி முகாம்களில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. தேர்தல் அரசியல் சிங்கள இனவெறிக்கு எதிராக அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராஜபக்ஷவின் முதல் முடிவு தொடர்ந்தும் இதே பாதையில் பயணிப்பதா இல்லையா என்பது தான். பயணிப்பார் என்பதையே அறி குறிகள் காட்டுவதாக உள்ளன.

கடந்த சில மாதங்களாக விடுதலைப் புலிகள் வசம் இருந்த வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் போரின் போது அடித்து நொறுக்கப்பட்ட மற்றும் சிதிலமடைந்த கட்ட மைப்புகளை மீண்டும் புனரமைப்பதில் கொழும்பு பணத்தை வாரி இறைத்தது.

அதிபரும் இந்த புனரமைப்புக்கள் தொடரும் என தேர்தலின் போது வாக்குறுதி அளித்ததோடு நேர்மையாக நடப்பதாகவே காட்டிக் கொண்டுள்ளார். இருப்பினும் தமிழர்களுக்கான அரசியல் உடன்படிக்கைகளில் முக்கியமாக ஜனநாயக தமிழர் தலைவர்கள் பல வருடங்களாக சட்டரீதியாக கோரும் உரிமைகளில் மெத்தனமே தொடர்கிறது.

அதிகாரத்தை அனைத்து மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிப்பதே இதற்கு தீர்வாக அமையும். ஆனால் அரசின் கவனம் ஆட்சியை கொழும்பில் இருந்து மாற்றுவதிலும் அதற்கான அரசியல் சட்டத்தை மாற்றியமைப்பதிலும் உள்ளது.

இதற்கு மாற்றாக தேர்தல் பிரச்சாரங்களின் போது பொருளாதார வளர்ச்சி சுட்டிக்காட்டப்பட்டது. இந்த சமாதானங்கள் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது ஏப்ரலில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் தெரியும்.

பலதரப்பட்ட முறைகளை அமுல்படுத்தி பார்த்த பின்னரே எந்த முறை சரியாக வரும் என்பதை பல வருடங்களுக்கு பின் முடிவு செய்ய முடியும். ராஜபக்ஷவின் இரண்டாவது முக்கிய பொறுப்பு இலங்கைக்கான அரசியல் திட்டத்தை வரையறுப்பது. சுதந்திரமான பத்திரிகைகள் மற்றும் ஆரோக்கியமான எதிர்கட்சிகள் கொண்ட முறையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவது.

பத்திரிகை சுதந்திரம் இலங்கையில் எப்போதும் மோசமாகவே உள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்த பல பத்திரிகை நிருபர்களும் ஆசிரியர்களும் படுகொலை செய்யப்பட்டதே இதற்கு சான்று.

தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்த வலைத் தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பரந்த மனப் பான்மையுடன் விவாதிப்பதே வேறுபாடுகளை அமைதியான முறையில் களைய வழிவகுக்கும்



இந்திய பாதுகாப்பு ஆலோசகர் மேனன் கொழும்பு வருகை
No Image

இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள சிவ்சங்கர் மேனன் விரைவில் கொழும்பு வரவுள்ளதாக புதுடில்லி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த நாராயணன் அண்மையில் மேற்குவங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து, புதிய ஆலோசகராக சிவ்சங்கர் மேனன் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று மீண்டும் ராஜபக்ஷ பொறுப்பேற்றுள்ள நிலையில், சிவ்சங்கர் மேனனின் கொழும்பு வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அவரது கொழும்பு பயணத்தின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதுடன், நலன்புரி மையங்களில் உள்ள தமிழர்களை மீள்குடி யேற்றுவது, அவர்களுக்கான புனர்வாழ்வுக் கான நடவடிக்கைகளை வேகப்படுத்துவது குறித்தும் மேனன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

மேனனின் வருகையை அடுத்து, இலங்கையிலிருந்து முக்கிய அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று புதுடில்லி சென்று அடுத்தக்கட்ட ஆலோசனைகளில் ஈடுபடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன



நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான ஜே.வி.பி.யின் கோரிக்கை .தே..வினால் நிராகரிப்பு




நாடாளுமன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஜே.வி.பி. முன்வைத்த கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவரும் முன்னாள் அமைச்சருமான ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி பதவிக்கு ஒருவரே தெரிவு செய்யப்படுவார் என்பதற்கமையவே நாம் ஜெனரல் சரத் பொன்சேகாவை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தினோம். ஆனால் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுமாறு எம்மைக் கோருவது வேடிக்கையானதொரு விடயம்.

இந்த நாட்டில் சக்திவாய்நத கட்சியாகவும் வாக்குப் பலமிக்கதாகவும் எமது ஐக்கிய தேசிய கட்சி உள்ளது. எமது யானைச் சின்னம் கூட மக்கள் மனதில் பதிந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க உட்பட மேலும் பலர் எமது கட்சியில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் தகுதியைக் கொண்டுள்ளனர். ஆகவே இவர்களை விட்டு வெளியே வேறு யாரையும் தேட வேண்டிய தேவை எமக்கு இல்லை. அது போன்றே எமது கட்சிச் சின்னத்தை நாம் அழிந்து போக விட மாட்டோம்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிக் கட்சி அதனுடன் கூட்டுச் சேரும் கட்சிகளுடன் இணைந்து யானைச் சின்னத்திலேயே போட்டியிடும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. ஆனால் எம்முடன் இணைந்து போட்டியிடும் கட்சிகளுக்குச் சில இடங்களை விட்டுக் கொடுப்பது என்பது வேறு விடயம்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை எடுத்துப் பார்த்தால் தென்னிலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஆதரவு அதிகரித்துள்ளதனைக் காணக் கூடியதாகவுள்ளது. ஆனால் ஜே.வி.பி. க்கு மக்கள் ஆதரவு குறைந்துள்ளது. தெற்கில் அவர்களது கோட்டைகள் சரிந்துள்ளன.

அவர்களது சரிவை எமது கட்சியே இன்று சமப்படுத்தியுள்ளது இந்த உண்மையை அவர்கள் மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுமாறு ஜே.வி.பி. எம்மைக் கோருவதானது அவர்களது தோல்வியை மறைக்க எம்மைப் போர்வையாகப் பயன்படுத்தும் ஒரு முயற்சியே இது ஒரு போதும் நடக்காது என்றும் கூறினார்.

எனக்கு ஏதாவது நேர்ந்தால் இரகசியங்கள் அம்பலமாகும்;அரசாங்கத்திற்கு சரத் பொன்சேகா எச்சரிக்கை


தனக்கு ஏதாவது நேர்ந்தால் அரசாங்கத்தின் இரகசியங்கள் அம்பலப்படுத்தப்படும் என படையதிகாரிகளின் முன்னாள் பிரதானியும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா எச்சரித்துள்ளதுடன் தன்னை தொந்தரவுக்குட்படுத்துவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடத் தீர்மானித்ததிலிருந்து தன்னை தொந்தரவுக்குள்ளாக்கும் அரசாங்க அதிகாரிகளின் முறைகேடுகள் தொடர்பான விபரமான ஆவணங்களை தாம் கோவைப்படுத்தியுள்ளதாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

எனக்கு ஏதாவது நேர்ந்தால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பவர்கள் தொடர்பான விபரங்களையும் தேர்தல்களில் நடந்த பாரியளவிலான மோசடிகளையும் வெளியிடுவேன் என சரத்பொன்சேகா கூறியுள்ளார்.

தனது அலுவலகம் அதிரடிப்படையினரால் சோதனையிடப்பட்டமை, தனது பாதுகாப்பு முற்றாக குறைக்கப்பட்டமை, தனக்கு நெருக்கமான அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டமை நீக்கப்பட்டமை அல்லது தொந்தரவுக்குட்படுத்தமை முதலான சம்பவங்கள் அரசாங்கம் தன்னை கொல்லத் தயாராகிறது எனக் கருதச் செய்வதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்

"எனது பாதுகாப்புக்கு இருந்த 90 படைவீரர்களுக்கு பதிலாக 4 பொலிஸ் உத்தியோகஸ்தர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் பிஸ்டல்கள் மாத்திரமே உள்ளன. இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக ஓய்வு பெற்றவர்களும் எனக்கு நெருக்கமானவர்களுமான 3 ஜெனரல்கள், 3 பிரிகேடியர்கள், 2 கேணல்கள் உட்பட பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் லசந்தவின் கொலையுடன் தொடர்புடையவர் என அரசாங்கம் கூறுகிறது. இது அப்பட்டமான பொய்யாகும். எனது அலுவலகத்தின் ஊழியர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 23 கணனிகள் குற்றப்புலனாய்வு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் சட்டம் ஒழுங்கு குலைந்துள்ளது. யாரும் நீதிமன்றத்திற்கோ பொலிஸுக்கோ செல்ல முடியாது. ஒருவர் எந்தவேளையிலும் கைது செய்யப்படலாம். ஊடக சுதந்திரம் இல்லை. தமது பணிகளைச் செய்வதில் அனைவரும் அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர் என்றார்.

நாட்டைவிட்டுச் செல்ல முற்படுகிறீர்களா என வினவப்பட்டபோது"இப்போது என்னிடம் வெளியேறும் திட்டம் எதுவுமில்லை. நான் இங்கிருந்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறேன். உயிரைப் பாதுகாப்பதற்காக மறைந்து வாழவேண்டியிருந்தால் அதுவேறு விடயம். ஆனால் நானோ எனது குடும்பத்தினரோ நாட்டைவிட்டு வெளியேற முடியாதவாறு விமான நிலையத்தில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளோம்" என பதிலளித்தார்.

தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், இந்தியா, அமெரிக்கா ஆகியன அரசாங்கத்தை கோரியுள்ளதாகவும் ஆனால் அரசாங்கம் யார் சொல்வதையும் கேட்பதில்லை எனவும் சரத் பொன்சேகா கூறினார்.

ஜனாதிபதியைக் கொல்லவதற்கு திட்டமிட்டதாகக் குற்றம் சுமத்தப்படுவது குறித்து சரத் பொன்சேகாவிடம் வினவப்பட்டபோது"எதிர்க்கட்சித் தலைவரை அல்லது என்னை கொலை செய்ய திட்டமிடப்படுவதாக தகவல் கிடைத்தபின் நாம் எமது பாதுகாப்புக்காகவே சினமன் லேக்சைட் ஹோட்டலில் 20 அறைகளை பதிவு செய்து தங்கியிருந்தோம். இப்போது அரசாங்கம் கதையை மாற்ற முயற்சிக்கிறது"என சரத் பொன்சேகா கூறினார்.


பெரும்பான்மையோரின் அங்கீகாரத்துடனேயே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு


இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு அனைத்து பிரஜைகளினதும் பெரும்பான்மை அங்கீகாரம் அவசியமானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். எதிர்வரும் ஏப்ரலுக்கு முன்னர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து அதில் தெரிவாகும் தமிழ்த் தலைமைகளுடன் கலந்துரையாடி, இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கப்போவதாக ஜனாதிபதி அளித்த உறுதிமொழி தொடர்பாக கேட்டபோதே மஹிந்த ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அச்செவ்வியில் அவர் மேலும் கூறுகையில்:

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு பெரும்பான்மையினர் இணக்கம் தெரிவிக்க வேண்டும். பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளாத தீர்வை நடைமுறைப்படுத்த முடி யாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தநிலையில் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அவசியம் தமக்கு உள்ளது. ஏற்கனவே இந்தியாவின் உதவியுடன் 13 ஆவது அரசியலமைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டது. எனினும் அதற்கு மேலதிகமாக அதிகாரத்தை தமிழ் தரப்பு கோருகிறது. இதற்கு பெரும்பான் மையினரின் இணக்கம் தேவைப்படுகிறது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் இதுவரை காலமும் தமது வாக்குகளை வழங்கமுடியாத நிலையில் இருந்தனர். எனினும் தற்போது அவர்கள் எதிர்க்கட்சி வேட்பாளரான சரத் பொன் சேகாவுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர் இதிலிருந்து அவர்களின் கருத்து வெளிப்பட்டுள்ளதுதானே எனக்கேட்டமைக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு கிழக்கு மக்கள் தமது வாக்குகளை வழங்க சந்தர்ப்பம் கிடைத்தமை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் முறைகேடுகள் நடந்திருக்கிறது என்ற சரத் பொன்சேகாவின் குற்றச்சாட் டுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். "இக்குற்றச்சாட்டுக்கு அவர் நீதி மன்றத்தில் பதில் தேடிக்கொள்ள முடியும். பிரஜைகளின் 58 சதவீத வாக்குகள் கிடைத் திருப்பது போதிய ஆதாரமாகும். அந்தளவு வாக்குகள் முறைகேடுகள் மூலம் எப்படி கிடைக்கும்" என ஜனாதிபதி கேள்வி கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...