10 அக்டோபர், 2010

சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற ஆசனத்தை பாதுகாக்க ஜே.வி.பி முழு முயற்சியில் ஈடுப்படும்: ரில்வின் சில்வா

சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் அவருக்கே உரியது. எனவே அவருடைய ஆசனத்தைப் பாதுகாப்பதற்கு ஜே.வி.பி. முழு முயற்சி மேற்கொள்ளும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதனால் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற ஆசனம் இழக்கப்பட்டதென்பதனை ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் குறித்து மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பாதுகாப்பதற்கும், உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இரு வேறு மனுக்கள் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

மனிக்பாம் வலயம் 4இல் சுகாதார சேவைகள் திடீரென நிறுத்தப்பட்டிருப்பதனால் தொற்று நோய் பரவும் அபாயம்: த.தே.கூ


வவுனியா மனிக்பாம் வலயம் 4இல் இருந்து வேறு முகாமுக்குச் செல்வதற்கு விரும்பாத மக்களுக்கான அடிப்படை சுகாதார சேவைகளை நிறுத்தி, அந்த மக்களைத் துன்புறுத்துவதாக அந்த மக்கள் தம்மிடம் முறையிட்டிருப்பதாக வன்னி மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அடிப்படை சுகாதார சேவைகள் திடீரென நிறுத்தப்பட்டிருப்பதனால், அங்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

வவுனியா மனிக்பாம் முகாமின் வலயம் 4இல் இடம்பெயர்ந்த மக்கள் சுமார் 3700 பேர் வசிக்கின்றனர். இவர்களை இங்கிருந்த கதிர்காமர் முகாமிற்குச் செல்லுமாறு இராணுவத்தினர் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் இங்குள்ள மக்கள் கதிர்காமர் முகாமில் போதிய வசதிகள் இல்லையென்றும், ஒவ்வொரு முகாமாகத் தாங்கள் இடம் மாறுவதற்கு விரும்பவில்லை என்றும் தெரிவித்து, அவர்கள் அங்கேயே தொடர்ந்தும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து வலயம் 4இல் உள்ள மலசலகூடங்கள் நிறையாமல் இருப்பதற்காக அவற்றில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கு கிரமமாக அனுப்பப்படுகின்ற கலி எம்டியர் என்ற வாகன சேவையை பாதுகாப்புத் தரப்பினர் நிறுத்திவிட்டனர். அத்துடன் குப்பைகளை அகற்றும் வாகனங்களும் அங்கு அனுப்பப்படுவதில்லை. இதற்கு முன்னர் இந்த வாகனங்கள் தினசரி இந்த முகாமுக்கு வந்து மலசல கூடங்களைச் சுத்தப்படுத்துவதிலும் குப்பைகளை எடுத்துச் செல்வதிலும் ஈடுபட்டிருந்தன. இப்படி திடீர் என இந்த வாகனங்களின் சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பது அந்த மக்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த முகாமில் தங்கியிருப்பதனால், இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மலசலகூடக் குழிகள் நிறைந்து வழிகின்றன. இதனால் இவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றில் புழுக்கள் நெளிகின்றன. தாங்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருவதாக அங்குள்ள மக்கள் என்னிடம் முறையிட்டிருக்கின்றார்கள்.

தற்போது மழைகாலமானதால், கழிவுநீரும், மழைநீரும் சேர்ந்து மக்கள் குடியிருப்புக்களுக்குள் செல்வதால், தொற்று நோய்கள் பரவும் அபாயம் இங்கு ஏற்பட்டுள்ளது. முன்னர் இந்த முகாமுக்கு நடத்தப்பட்டு வந்த நடமாடும் வைத்திய சேவையும் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.

கதிர்காமர் முகாமில் விறகு, தண்ணீர் போன்றவற்றிற்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதன்காரணமாகவே வலயம் 4இல் உள்ள மக்கள் கதிர்காமர் முகாமுக்குச் செல்வதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த முகாமைவிட்டு வெளியேற மறுப்பதனால் அதிகாரிகள் இவ்வாறு தங்களைத் துன்புறுத்துவதாக அங்குள்ளவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள். எனவே இந்த விடயத்திற்கு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தித் தருமாறு அந்த மக்கள் என்னிடம் கேட்டுள்ளார்கள்.

இது குறித்து உரிய அதிகாரிகளிடம் கலந்து பேசி, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வலயம் 4ஐச் சேர்ந்த மக்களிடம் தெரிவித்துள்ளேன் என சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

கடலில் குழிக்கச் சென்ற இரு இளைஞர்கள் கடலில் மூழ்கி பலி

மட்டக்களப்பு வெளிச்ச வீடு அமைந்துள்ளபகுதிக் கடலில் குழிக்கச்சென்ற இரு இளைஞர்கள் கடலில் மூழ்கி இன்று உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை ஜந்து இளைஞர்கள் இக்கடலில் குழிக்கச் சென்றுள்ளனர். இதில் இரு இளைஞர்கள் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு நாவற்குடா பூநொச்சிமுனை கடற்கரை வீதியைச்சேர்ந்த சிங்கராசா ஜோபின்(19) மற்றும் நாவற்குடா கலாசார மண்டபத்திற்கு பின்பகுஙீதியில் வசித்துவரும் தெய்வேந்திரன் கிருஸ்னராஜ்(19) ஆகிய இரு இளைஞர்களுமே இதில் உயிரிழந்துள்ளனர். இதில் கிருஸ்ணராஜ் என்பவரின் சடலம் இன்று மாலை கண்டெடுக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஜோபின் என்பரின் சடலம் இதுவரை கண்டெடுக் கப்படவில்லை. பொதுமக்களும் மீனவர்களும் அப்பகுதி கடற்படையினருடன் இணைந்து சடலத்தை தேடி வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விரு இளைஞர்களில் ஒருவர் மேசன் தொழில் ஈடுபடுவரெனவும் மற்றயவர் பெயிண்டிங் வேலை செய்வரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

கடவுச்சீட்டை தொலைத்த இந்திய பெண் உயிரிழப்பு


கடவுச்சீட்டைத் தொலைத்துவிட்டு ஒமானியத் தலைநகர் மஸ்கட்டின் விமான நிலையத்தில் ஐந்து நாட்களாக சிக்கித்தவித்திருந்த ஒமானில் வீட்டுப் பணிப் பெண்ணாக வேலை பார்த்துவந்த இந்தியப் பெண்ணொருவர் விமான நிலையத்திலே உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.

நாற்பது வயதுடைய பீபி லுமாடா என்று அடையாளம் காணப்பட்டுள்ள இந்தப் பெண் மஸ்கட்டிலிருந்து கிளம்பி இந்தியா திரும்பும் வழியில் தோஹாவில் தனது கடவுச்சீட்டைத் தொலைத்ததாகத் தெரிகிறது.

இதனையடுத்து அப்பெண்ணை தோஹா விமான நிலைய அதிகாரிகள் அவரை இந்தியாவுக்கு செல்ல அனுமதிக்காமல் மஸ்கட்டுக்கே திருப்பி அனுப்பியிருந்தனர்.

கடவுச் சீட்டு இல்லாததனாலும், ஒமானுக்குள் மறுபடியும் நுழைவதற்கான விசா இல்லாததாலும் இவரை விமான நிலையத்திற்கு வெளியில் விட மஸ்கட் விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்திருந்தனர்.

இவரது நிலை குறித்து மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையம் வந்து இந்தப் பெண்ணைச் சந்தித்து அவருக்கு உதவிகள் வழங்குவோம் என்று இந்திய தூதரக அதிகாரிகள் உறுதியளித்திருந்தார்கள் என்றும் ஆனால் விமான நிலையத்திலுள்ள காவலர்கள் தொடர்புகொண்டும் இந்திய அதிகாரிகள் ஐந்து நாட்களாக அந்தப் பெண்ணை வந்துச் சந்தித்து உதவவில்லை என்று விமான நிலைய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி கல்ஃப் நியூஸ் பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.

பீபி லுமாடா வேலை செய்துவந்த வீட்டின் உரிமையாளரையும் தொடர்புகொள்ள முயன்றும் அது பலனளிக்காமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மஸ்கட் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் மாறுவதற்கான வளாகத்தில் விடுதிகள் எதுவும் இல்லை. ஆதலால் அந்தப் பெண்மணி வெளியிலேயே தங்கியிருந்துள்ளார். கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவனத்தார் அவருக்கு உணவும், போர்வையும் கொடுத்து உதவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடவுச் சீட்டு தொலைந்துபோன அதிர்ச்சியிலும் உதவி கிடைக்காத வருத்ததிலும் அவர் மனதை விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மன உளைச்சல் காரணமாக இந்தப் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என ஒமானிய அரசாங்க மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாஸ்போர்ட்டைத் தொலைத்திருந்த லுமாடாவுக்கு தற்காலிக பயண ஆவணங்களை தருவதற்குள்ளாக அவர் உயிரிழந்தது வருத்தம் அளிப்பதாக ஒமானுக்கான இந்தியத் தூதர் அனில் வாத்வா தெரிவித்துள்ளார்.

நடைமுறைகளில் ஏற்பட்ட தாமதம் விமான நிலையத்தில் சிக்கித் தவித்த இந்தப் பெண்ணுக்கு உதவிகள் கிடைப்பதை தாமதப்படுத்தியுள்ளது கவலை தருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்லார்.

தற்சமயம் பீபி லுமாடாவின் உடலை இந்தியாவின் அவர் தம் உறவினர்களுக்கு அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மஸ்கட் இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி தலைமையில் வடமேல் மாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டம் நாளை

வடமேல் மாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டம் நாளை மாதம்பையிலுள்ள கூட்டுறவுச் சங்க நடன மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நாளை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ள இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளதாக புத்தளம் மாவட்டச் செயலாளர் எம். கிங்ஸ்லி பெர்ணான்டோ தெரிவித்தார்.

புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரத்ன, மற்றும் குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகியோர் இக்கூட்டத்திற்குத் தலைமைதாங்கவுள்ளனர். வடமேல் மாகாண முதலமைச்சர் அத்துல விஜேசிங்க உட்பட மாவட்டங்களின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதே உளச்சுகாதார அபிவிருத்தி தினத்தை முன்னிட்டு கண்டியில் கண்காட்சி

சர்வதேச உளச்சுகாதார அபிவிருத்தி தினத்தை முன்னிட்டு கட்டுகஸ்தோட்டையில் அமைந்துள்ள கண்டி மாவட்ட உளவியல் அபிவிருத்தி மத்திய நிலையத்தில் இன்று கண்காட்சி ஒன்று இடம் பெறுகின்றது.

உளவிருத்தி மற்றும் உளச் சுகாதாரம் தொடர்பாக பொதுமக்களையும் பாடசாலை மாணவர்களையும் விழிப்படையச் செய்யும் வகையில் இது ஒழங்கு படுத்தப் பட்டுள்ளது.

பொதுவாக உடல் ஊன முற்றவர்களை மட்டுமே நாம் எளிதில் கண்டு கொள்வதுடன் அவர்களது பிரச்சினைகளை மட்டுமே சமுதாயம் அடிக்கடி பேசும்.

ஆனால் எம் சமூகத்தில் உளவியல் ரீதியாக ஊன முற்றவர்களும் எம்மத்தியில் பரவலாக இருக்கிறார்கள் என்பதை சமூகம் கண்டு கொள்வதில்லை. இதுபற்றி பொதுமக்களை விழிப்படையச் செய்வதே இக்கண்காட்சியின் நோக்கமென ஏற்பாட்டளர்கள் தெரிவித்தனர்.

பெறுமளவு பொதுமக்களும், பாடசாலை மாணவர்களும் இதனைப் பார்வையிட்டு வருகின்றனர். இன்னும் மூன்று தினங்களுக்கு இக்கண்காட்சி இடம் பெறவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டவர் கடித்து குதறிய நிலையில் சடலமாக மீட்பு

காத்தான்குடி வாவியில் நேற்று மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த போது முதலையினால் நீருக்கடியில் இழுத்துச் செல்லப்பட்ட மீனவர் இன்று காலை கடித்துக்குதறிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடற்படையினரும் பொலிஸாரும் பல மணித்தியாலங்கள் போராடி இச்சடலத்தை மீட்டுள்ளனர். கண் மற்றும் அவரது உடலின் பலபாகங்களை முதலை கடித்து உண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

குறித்த நபர் 5 பிள்ளைகளின் தந்தையான 60 வயதுடைய தம்பிலெப்பை புஹாரி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பத்காரி காமினி ஜெயவர்த்தன தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக இரண்டாவது நாளாகவும் மட்டு. மக்கள் சாட்சியம்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இன்று காலை 9.15மணிக்கு அமர்வுகள் ஆரம்பமாயின. இதில் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடியைச்சோர்ந்த தமிழ் முஸ்லிம் மக்கள் தமது சாட்சியங்களை அளித்து வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

போதைப்பொருள் பாவனை: ஆய்வுகள் வெளிப்படுத்தும் அதிர்ச்சித் தகவல்

உலகின் போதைப்பொருள் விற்பனை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகவும் எதிர்வரும் 2011ஆம் ஆண்டு அதன் விற்பனை 7 சதவீதத்தால் அதிகரிக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஐ.எம்.எஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் வளர்முக நாடுகளில் மது,போதை பாவனை அதிகரித்துச் செல்வதாக தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் 17 நாடுகளை 'போதை பாவனை அதிகம் உள்ள நாடுகளாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சீனா, பிரேசில், ரஸ்யா, இந்தியா, மெக்சிகோ, துருக்கி, வெனிசுலா, போலந்து, ஆர்ஜன்டீனா, இந்தோனேசியா, உக்ரெய்ன், தாய்லாந்து, தென்னாபிரிக்கா, எகிப்து, ருமேனியா, பாகிஸ்தான், வியட்னாம் ஆகிய நாடுகளே இவையாகும்.

இந்த அதிகரிப்பு வீதத்தினால் அந்த நாடுகள் பெரும் எதிர்விளைவுகளை ஏதிர்நோக்கும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

லிபியாவில் இலங்கையர்கள் நிர்க்கதி: அழைத்துவர அரசு ஏற்பாடு

லிபியாவில் நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மேற்கொண்டுள்ளது.

தென்னாபிரிக்க நிறுவனம் ஒன்றின் மூலம் லிபியாவுக்கு அழைத்துச்செல்லப்பட்ட 150 பேருக்கான சம்பளம் வழங்கப்படாமையாலே இப்பிரச்சினை உருவாகியுள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை அகதிகள் குறித்து சோனியாவுக்கு தமிழக முதல்வர் கடிதம்

இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 30 ஆயிரம் தமிழர்களை விடுவித்து, அவர்களை சொந்த வீடுகளுக்கு அனுப்பவும் அவர்களின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்யவும் இலங்கை அரசை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும்' என்று முதல்வர் கருணாநிதி சோனியாவிடம் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி, திருச்சி ஆகிய இடங்களில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா நேற்று மதியம் 2.05 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை வந்தார். உடன் உள்துறை அமைச்சர் சிதம்பரம் வந்தார்.

சென்னை வந்த சோனியாவை முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் மலர்ச் செண்டு கொடுத்து வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு குறித்த ஒரு கடிதத்தை முதல்வர் கருணாநிதி சோனியாவிடம் கொடுத்தார்.

"கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் இலங்கை சென்றார். பின் அங்குள்ள நிலவரம் குறித்து தமிழக தலைமைச் செயலருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் இன்னமும் 30 ஆயிரம் தமிழர்கள் இலங்கை முகாம்களில் துயரப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இலங்கை முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். இருப்பினும் இந்திய வெளியுறவுத் துறை செயலரே 30 ஆயிரம் பேர் அடைபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள நிலையில் முகாம்களில் துயரங்களை அனுபவித்து வரும் தமிழர்கள் விரைவில் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு அவர்களின் சொந்த வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். மேலும், அவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவற்றை விரைவாகச் செய்யும்படி இலங்கை அரசைஇ மத்திய அரசு வற்புறுத்த வேண்டும்" என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பாடசாலைகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை கட்டுப்படுத்தும் விசேட திட்டத்தை உடன் ஆரம்பிக்க ஜனாதிபதி பணிப்பு


மேல் மாகாணத்தில் பாடசாலைகளை அண்மித்த பிரதேசங்களில் வெவ்வேறு விதமான போதைப் பொருட்களின் விற்பனையும், அவற்றைப் பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்திருப்பதால் அவற்றைக் கட்டுப்படுத்தவென விசேட வேலைத் திட்டமொன்றை உடனடியாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நேற்று பணிப்புரை விடுத்தார்.

மேல் மாகாண அபிவிருத்தி முன்னேற்ற ஆய்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பாணந்துறை சிறி சுமங்கல வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், முத லமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதித் தலை வர்கள், பொலிஸ் மாஅதிபர், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள் என சகல தரப்பினரும் பங்குபற்றினர்.

மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானாவின் வரவேற்புரையோடு இக்கூட்டம் ஆரம்பமானது.

இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் கூறுகையில், நாட்டின் பல மாவட்டங்களில் மதுப்பாவனை அதிகரித்திருக்கையில் கொழும்பு மாவட்டத்தில் இப்பாவனை குறைவடைந்திருப்பதை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன என்றாலும் சட்ட விரோத மதுப்பாவனை அதிகரித்திருக்கலாமென நம்புகிறேன்.

இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு அருகில் வெவ்வேறு விதமான போதைப் பொருள் விற்பனை இடம்பெறுகின்றது. இந்நடவடிக்கையின் மூலம் மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்குப் பழக்கப்படுகின்றார்கள்.

போதைப் பொருள் பாவனையின் விளைவுகள் குறித்து ஆசிரியர்களும், மதத் தலைவர்களும் மாணவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

அதேநேரம் பாடசாலைகளுக்கு அருகில் போதைப் பொருள் விற்பனையையும், அவற்றை மாணவர்கள் பாவிப்பதையும் கட்டுப்படுத்துவதற்காக விசேட வேலைத் திட்டமொன்றை உடனடியாக செயற்படுத்த அரசியல் தலைவர்களையும், பொலிஸாரையும், அதிபர்களையும் மதத் தலைவர்களையும் உள்ளடக்கி இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுவது அவசியம் என்றும் கூறினார்.

இதேநேரம் விசேட வரிச் சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு முதலீட்டு வலையங்களில் செயற்படுகின்ற வேலைத் திட்டங்களில் எந்த மேம்பாட்டையுமே அடையாது தோல்வியுற்றிருக்கும் வேலைத் திட்டங்களை துரிதமாக அரசாங்கம் பொறுப்பெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுநலவாய நாடுகளின் 2018ம் ஆண்டு விளையாட்டுப் போட்டி இலங்கையில் நடைபெறவிருக்கின்றது. இப்போட்டியில் ஏனைய நாடுகளுடன் போட்டியிட்டு பதக்கங்களை அதிகளவில் வென்றெடுப்பதற்கு ஏற்றவகையில் நாம் தயாராக வேண்டும். தனியே விளையாட்டு மைதானங்களையும் கட்டங்களையும் நிர்மாணிப்பதால் மாத்திரம் இதனை அடைந்து கொள்ள முடியாது.

அபிவிருத்தி என்ற போர்வையில் நிர்மாணிக்கப்படும் சட்ட விரோத கட்டங்களை நிறுத்திவிடுவதற்குரிய வேலைத் திட்டத்தை துரிதமாக ஆரம்பிக்க வேண்டும். இவ்விடயத்தில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பொதுமக்களும் பொது இணக்கப்பாட்டுக்கு வருவது அவசியம் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, ஏ. எச். எம். பெளஸி, விமல் வீரவன்ச, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சுசில் பிரேம ஜயந்த், அனுர பிரியதர்ஷன யாப்பா, குமார வெல்கம, பிரதியமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ. எச். எம். அஸ்வர், பிரபா கணேஷன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழர்களின் மத்தியில் நம்பிக்கையின்மையை ஐ.தே.கவே வளர்த்தது மட்டக்களப்பில் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம்


தமிழ் மக்களுக்கு சிங்கள மக்கள் மீது வெறுப்பையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்த காரணம் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே என மட்டக்களப்பில் நேற்று (09) நடைபெற்ற கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு அமர்வில் சாட்சியமளித்த மட்டக்களப்பு அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் கே. குருநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கற்றிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக் குழுவின் அமர்வு இடம்பெற்றது.

இதில் ஆணைக்குழு உறுப்பினர்களான எம்.பி. பரணகம, ஹந்தவத்தை, ரொகான் பெரேரா, பளியக்கார, மனோகரி இராமநாதன், சி. சண்முகம் ஆகியவர்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இவ் அமர்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண் டிருந்தார்.

இங்கு மட்டக்களப்பு சமாதான அமைப்பின் தலைவர் அருட் தந்தை மில்லர் முதலில் தனது சாட்சியத்தை வழங்கி ஆரம்பித்து வைத்தார்.

இங்கு தொடர்ந்து சாட்சியமளித்த மட்டக்களப்பு அபிவிருத்திக் குழுவின் தலைவர் குருநாதன் காணி விடயங்களில் ஐக்கிய தேசியக் கட்சி நடந்துகொண்ட விதம் தமிழ் மக்களைப் பாதித்தது. தமிழர்களைப் பாதிக்கும் வகையில் திட்டமிட்டு காணிகளை அபகரித்தது. சமாதானம் சீர்குலைந்ததற்கு அடிப்படைக் காரணம் காணி விடயமேயாகும்.

தமிழ் மக்களுக்கு சமாதானத்தின் மீது நம்பிக்கையீனம் ஏற்படவும் யுத்தம் ஏற்படவும், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் செய்த மோசடி செயலும் திட்டமிட்ட நில அபகரிப்புமே காரணம் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஜனாதிபதி இவ் ஆணைக்குழுவை நியமித்தமைக்கு நான் நன்றி கூறுகின்றேன் என்றார்.

இவ் ஆணைக்குழு முன்னிலையில் நேற்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநாதன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர் செல்வேந்திரன் உட்பட பொதுமக்கள் பலரும் சாட்சியமளித்தனர்.

கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவினர் காத்தான்குடிக்கும் விஜயம் செய்தனர்.

ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி. சில்வா நேற்று சமுகமளிக்கவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் இளந்திரையன், புலிகளின் மட்டக்களப்பு புலனாய்வு பொறுப்பாளர் பிரபா ஆகியோரின் மனைவிமாரும் சாட்சியமளித்தனர்.

வண. பிதா மில்லர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் ஜி. காசிநாதன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த அ. செல்வேந்திரன் மட்டக்களப்பு அபிவிருத்தி சபையின் சார்பில் ஓய்வுபெற்ற காணி ஆணையாளர் க. குருநாதர் உட்பட காணாமல் போனோரின் மனைவிமார் பலரும் சாட்சியமளித்தனர்.

சுமார் 800 பேர் சாட்சியம் அளிக்க சமுகமளித்திருந்தனர். மாநாட்டு மண்டபம் நிரம்பி வழிந்தது.

பெண்களே அதிகூடிய அளவில் காணப்பட்டனர். காணாமல் போனவர்களின் மனைவி மார்களே பெரும்பான்மையினராகையால் அவர்களிடமிருந்து ஆவணங்கள் மட்டுமே பெறப்பட்டன.

ஒரு சிலரின் சாட்சியங்களே பதிவு செய்யப்பட்டன.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் சாட்சியங்கள் பதிவு செய்யப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியக் கடற்படையின் நான்கு கப்பல்கள் இலங்கைக்கு வருகை

இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் பிரிவின் நான்கு கப்பல்கள் இன்றுகாலை நாட்டை வந்தடைந்துள்ளன. இக்கப்பல்கள் கொழும்பு மற்றும் திருமலைத் துறைமுகங்களின் நங்கூரமிட்டுள்ளன. இந்திய கடற்படையின் தரங்கினி கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளதுடன், வீர, சர்துல் மற்றும் வருண ஆகிய கப்பல்கள் திருமலைத் துறைமுகத்திற்கு வந்துள்ளன. இவற்றில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 160 கடெற் அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். இக்கப்பல்கள் இம்மாதம் 15ம் திகதிவரை நாட்டில் தரித்து நிற்கவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் அத்துல செனரத் தெரிவித்துள்ளார். இந்தக் கப்பல்கள் இலங்கைக் கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகளிலும் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு குறைந்த வட்டியில் கடன்: இலங்கை அரசு அறிவிப்பு








விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளவர்களுக்கு குறைந்த வட்டியில் கடனை வழங்கும் திட்டத்தை இலங்கை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மீட்கப்பட்டவர்கள் ஏதாவது ஒரு தொழிலைத் தொடங்கி மறுவாழ்வைத் தொடங்குவதற்கு உதவும் நோக்கில் இந்தக் கடன் திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ஏதாவது ஒரு தேசிய வங்கியில் 4 சதவீதம் வட்டியில் கடன் வழங்கப்படும். தாங்கள் தொடங்கவிருக்கும் தொழில் குறித்த விவரத்தை அளித்தால் அதை அரசு பரிசீலித்து அதிகபட்சம் ரூ. 2.5 லட்சம் வரை கடன் வழங்க ஏற்பாடு செய்யும்.

இத்திட்டத்தின் கீழ், முன்னாள் விடுதலைப் புலிகள் மட்டுமல்லாது மறுகுடியமர்த்தப்பட்டுள்ள ஈழத்தமிழ் மக்களும் கடன் கோரி விண்ணப்பிக்கலாம் என்று அந்நாட்டின் மறுவாழ்வு ஆணையர் சுதந்த ரணசிங்கே தெரிவித்தார்.

கடன் கோரி வருபவர்களுக்கு உதவும் வகையில் வடக்கு வவுனியாவில் உதவி மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதவர்களுக்கு மன்னிப்பு கிடையாது: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை


வாஷிங்டன், அக். 8: பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத நாடுகளுக்கு மன்னிப்பே கிடையாது என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் இது குறித்து வாஷிங்டனில் மேலும் கூறியது:

÷பாகிஸ்தானில் மலைவாழ் மக்கள் வாழும் பகுதி பயங்கரவாதிகளின் கூடாரமாக உள்ளது. அங்கு தலிபான்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். அவர்களை ஒடுக்க பாகிஸ்தான் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பாகிஸ்தானின் இந்த செயல்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

÷இது தொடர்பாக அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க இருக்கிறோம். பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் பலவகைகளில் செயல்படாமல் உள்ளதாக அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

÷பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் அமெரிக்க கூட்டுப்படை, பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர். தவறாக நடந்து விட்ட இந்த சம்பவத்துக்காக பாகிஸ்தான் அரசிடம் அமெரிக்கா மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

÷பாகிஸ்தானுடன் உறவு சுமுகமாக இருக்க வேண்டுமென்றே அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் இதற்காக பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் வேகம்காட்ட வேண்டும் என்றார் அவர்.

பயங்கரவாதிகளுக்கு ஐஎஸ்ஐ உதவி -பென்டகன்: இதனிடையே ஆப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவி செய்துள்ளதாக அமெரிக்கா பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகன் கூறியுள்ளது. இது குறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் கர்னல் டேவிட் லாபன் கூறியுள்ளது:

÷ஐஎஸ்ஐ அமைப்பின் சில அதிகாரிகளுக்கும் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் செயல்படும் சில பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஐஎஸ்ஐ அதிகாரிகள் பல வகையில் உதவிகளைச் செய்துள்ளனர். இதற்கான வலுவான ஆதாரங்களும் கிடைத்துள்ளன என்றார் அவர்.

÷ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப்படை பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் நிலையில், அங்கு பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவியுள்ளது அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

÷இதுதவிர இப்போது முதல்முறையாக பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உண்டு என்பதை அமெரிக்கா பகிரங்கமாக அறிவித்துள்ளது. எனவே பாகிஸ்தானுக்கு அளித்து வரும் நிதியுதவிகளை அமெரிக்கா நிறுத்தலாம் என்றும், பாகிஸ்தான் மீது வேறு முறைகளில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கனடா விமானப்படையின் மாஜி கமாண்டர் சிக்கினார்

பெல்லிவில்லி: கனடா விமானப்படையின் மாஜி கமாண்டர் மீது 2 கொலை மற்றும் ஏராளமான பாலியல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன. தன் மீதான குற்றங்களை ஒப்புக்கொண்டு தண்டனை அனுபவிக்க தயாராகி விட்டார் கர்னல் ரூசல் வில்லியம்ஸ். இங்கிலாந்தில் பிறந்து கனடாவில் வளர்ந்தவர் ரூசல் வில்லியம்ஸ்(47). கனடா விமானப்படையில் பைலட்டாக சேர்ந்த இவர் பதவி உயர்வு பெற்று, விமானப்படை தளத்தின் கமாண்டராக உயர்ந்தார். மிகவும் திறமையுடன் விளங்கியதால் கனடா பிரதமருக்கு பைலட்டாக பணியாற்றியுள்ளார். இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்த 2005ம் ஆண்டில் கனடா சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, அவருக்கும் பைலட்டாக இருந்துள்ளார் ரூசல் வில்லியம்ஸ். இத்தகையை பெருமை வாய்ந்த உயர் அதிகாரிக்கு வக்கிர புத்தியும் இருந்துள்ளது. இவர் மீது ஏராளமான பாலியல் புகார்கள் கூறப்பட்டன. பெண்கள் அறையில் புகுந்து, அவர்களின் உள்ளாடைகளை குறிப்பாக பேண்டீஸ், பிராக்களை திருடியுள்ளார். இது தொடர்பாக அவர் மீது 82 புகார்கள் கூறப்பட்டுள்ளன. தனியாக இருக்கும் பெண்களிடம் அத்துமீறும் பழக்கமும் வில்லியம்சுக்கு இருந்துள்ளது. மறுப்பு தெரிவிக்கும் பெண்களை அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டுவார். இது ஒரு கட்டத்தில் எல்லை மீறி கொலையில் முடிந்துள்ளது. தனக்கு கீழ் பணியாற்றும் பெண் அதிகாரி மேரி காமியோ(38) என்பவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்துவந்தார் வில்லியம்ஸ். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேரியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வில்லியம்ஸ், தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். மேரி மறுத்ததால் அவரை கொலை செய்துவிட்டு தப்பினார். அதன்பின் கடந்த பிப்ரவரியில் ஜெசிகா லூலாய்ட்(27) என்ற இளம் பெண்ணை கொலை செய்துள்ளார். இந்த கொலைகள் தொடர்பாக நடந்த புலன் விசாரணையில் சிக்கினார் கமாண்டர். பதவி பறிபோன கமாண்டர் இப்போது கோர்ட் விசாரணையை எதிர்நோக்கியுள்ளார். அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொள்ள தயாராக இருப்பதாக தனது வக்கீல் மூலம் கோர்ட்டில் தெரிவித்துள்ளார் ரூசல் வில்லியம்ஸ். விமானப்படையில் உயர் அதிகாரியாக பணியாற்றிய வில்லியம்ஸ் பயங்கர குற்றவாளியாக இருந்துள்ளது கனடா அரசையும் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...