12 நவம்பர், 2009

சீருடையை கழற்றிய பின்னரே முடிவை அறிவிப்பேன் - பொன்சேகா


இராணுவப் பதவியில் இருப்பதாகவும் சீருடையை கழற்றிய பின்னரே தமது முடிவை அறிவிப்பதாகவும் கூட்டுப்படைகளின் பிரதானி சரத் பொன்சேகா களனி விகாரையில் தெரிவித்துள்ளார்.

விசேட வழிபாட்டுக்கென களனி விகாரைக்கு இன்று மாலை சென்ற அவர் அங்கு ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதலளிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் எமது இணைத்திற்கு தெரிவித்தனர்.

“இதுவரையும் தாய் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செயற்பட்டேன். இனியும் அவ்வாறுதான் செயற்படுவேன். அரசாங்கத்தின் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. எனது சாதாரண பதவிக்காலத்திலும் பார்க்க நான்கு வருடங்கள் அதிகமாக சேவை செய்துள்ளேன்.

நான் மிகுந்த சந்தோசத்துடனேயே எனது பதவியிலிருந்து ஓய்வு பெறத் தீர்மானித்தேன். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை எதுவும் சொல்ல முடியாது. இந்த மாத இறுதியுடன் நான் ஓய்வுபெறவுள்ளதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளேன். அதன் பின்னரேயே எனது எதிர்கால நடவடிக்கைகள் குறித்துக் கூற முடியும் எனக் கூறியுள்ளார்.

சரத் பொன்சேகா

சரத் பொன்சேகா என்றழைக்கப்படும் கார்டிஹேவா சரத் சந்திரலால் பொன்சேகா இலங்கை பாதுகாப்புத் துறையில் முப்படைகளின் தலைமை அதிகாரி எனும் அதிகாரிகள் தரத்திலான உயர் பதவிக்கு ஜனாதிபதியினால் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.

இலங்கை இராணுவத்தின் வரலாற்றில் வெற்றித் தளபதி என வர்ணிக்கப்படும் சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை வெற்றிகொள்ள பெரும் பங்காற்றியிருந்தார்.

அம்பலங்கொடை தர்மாசோக்க கல்லூரியிலும் கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் கல்வி கற்ற பொன்சேகா சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்துள்ளார். இலங்கை இராணுவத்தில் 1970 ஆம் ஆண்டு பெப்ரவரி 5ஆம் திகதி இணைந்த சரத் பொன்சேகா 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 18ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டார்.

2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்கதலுக்கு உள்ளாகி பின்னர் ஐ{லை மாதம் தமது கடமைக்குத் திரும்பினார். பதவிக்காலத்தில் "பலவேகய", "ஜயசிக்குரு" ஆகிய இராணுவ நடவடிக்கைகளை சிறப்பாக செயற்படுத்திய பின்னர் இராணுவத்தின் ஒவ்வொரு உயர் பதவிகளில் கடமையாற்றினார்.

தனது தலைமையில் இராணுவத்தினருக்கு சிறப்பான தந்திரோபாயங்களை வழங்கி, வெற்றிபெறச் செய்தால் இவ்வாண்டு ஐ{லை மாதம் 15ஆம் திகதி விசேட சட்டத்தின் பிரகாரம் கூட்டுப் படைகளின் பிரதானியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார்
பிரான்ஸ் அமைப்பாளர் பிரபாவுக்கு புளொட் தலைவர் சித்தார்த்தன் அஞ்சலி!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின் பிரான்ஸ் அமைப்பாளர்
தோழர் பிரபாவின் இறுதி நிகழ்வுகள் இன்று பிரான்ஸில் நடைபெறுகின்றது. இதானைமுன்னிட்டு கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் தலைவர்சித்தார்த்தன் உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்துஅஞ்சலி கூட்டம் ஒன்றும் கொழும்பு அலுவலக பொறுப்பாளர் பற்றிக்தலைமையில் அஞ்சலி கூட்டம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
__________________________________________________________________
































மேலும் இங்கே தொடர்க...

பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல்



இலங்கைத் தீவில் பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல் என்பது இன்னமும் தொடங்கவில்லை. நாடு இப்பொழுதும் ஒரு இடைமாறு காலகட்டத்தில்தான் நிற்கிறது. பிரபாகரன் இல்லை என்பதை ஜீரணித்துக்கொள்ள முடியாத தமிழர்களே அதிகமாகத் தென்படுகிறார்கள். அவரை ஒரு சாகாவரம் பெற்ற மாயாவியாக உருவகித்து வைத்திருந்த அநேகமானவர்களுக்கு அவரில்லாத ஒரு உலகத்தை நினைத்துப் பார்க்கவே முடியாதிருக்கிறது. குறைந்தபட்சம் அவருடைய ஆவியோடாவது கதைத்துவிடவேண்டும் என்ற தவிப்போடு அவர்கள் கண்ணாடிக் குவளைகளை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், பிரபகாரன் அரங்கில் இல்லை என்பதே உண்மை. அவர் தப்பியோடி எங்காவது பர்மியக் காடுகளில் ஒளிந்திருந்தாலும்கூட இனி அவரால் அரசியல் செய்யமுடியாது. அவருடைய அரசியல் எப்பொழுதோ காலாவதியாகிவிட்டது. அவர் உயிருடன் தப்பியிருந்தாலும் கூட அரசியல்த் துறவறம் பூண்டு ஒரு தலைமறைவுச் சாட்சியாக இருக்கலாம். அவ்வளவுதான். அதாவது பிரபாரனின் யுகம் முடிந்துவிட்டது. நவீன தமிழ் அரசியலில் தோன்றிய ஒரு வீரயுகம் முடிந்துவிட்டது. அதை ஒரு வீரயுகம் என்று அழைக்கலாமா என்பதும் இப்பொழுதும் விவாதத்துக்குரியதே.

விடுதலைப் புலிகளின் வீரம் தியாகம் என்பவற்றைச் சூழ்திருந்த புனிதத்திரைகள் யாவும் நாலாம்கட்ட ஈழப்போரில் கிழிந்துபோய்விட்டன. தன்னையும் தன்னுடைய அதிகாரத்தையும் தக்கவைப்பதற்காக அவர் ஆடிய சூதாட்டம் அவரை உலகின் மன்னிக்கப்படமுடியாத போர்க்குற்றவாளிகள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர்களின் பட்டியலில் சேர்த்துவிட்டது.

மாவிலாற்றிலும், முகமாலையிலும் தோற்கடிக்கப்பட்டபோது பிரபாகரன் நிதானமிழந்துவிட்டார். அவர் ஆட்சிசெய்த அரை அரசைப் பாதுகாப்பதற்காக அவருடைய பிரஜைகள் என்று அவர் நம்பிய சுமார் மூன்று இலட்சம் மக்களை அவர் வதைத்த விதம் அதை நியாயப்படுத்த அவருடைய ஆட்கள் சொன்ன பொய்கள் தோல்விகளையும் இயலாமைகளையும் மறைக்க அவர் தனது சொந்த மக்களிற்கே அவிழ்த்துவிட்ட கட்டுக்கதைகள் எல்லாமே அவருடைய தலையைச் சுற்றி அவருடைய அபிமானிகளால் வரையப்பட்டிருந்த ஒளிவட்டத்தை அழித்துவிட்டன. முதலில் அவர் வீட்டுக்கு ஒரு பிள்ளை என்று கேட்டார். முடிவில் வீட்டிலுள்ள வலுவுள்ள எல்லோரையும் கேட்டார். வராதவர்களைக் கடத்திச் சென்றார். எதிர்த்த உறவினர்களைச் சுட்டுக்கொன்றார் அல்லது அடித்து நொறுக்கினார்.

தனது பிடியிலிருந்து தப்பி அரச படைகளை நோக்கி ஓடிய தனது இனத்தவரையே புறமுதுகில் சுட்டுக்கொன்றார் அல்லது தப்பியோடிப் பிடிபட்டவர்களை அடித்து நொறுக்கினார்.
நவீன தமிழ் அரசியலில் தனிநபர் வழிபாட்டின் உச்சமாகக் காணப்படுவது அவர்தான். அதேசமயம் தனது சொந்த மக்களாலேயே வேறெந்தத் தமிழ்த் தலைவரையும் தூற்றியிராத அளவுக்கு கேவலமான வசைச் சொற்களால் தூற்றப்பட்ட ஒரு தலைவராகவும் அவரே காணப்படுகிறார். அவர் தொடக்கி வைத்த தமிழின் நவீன வீரயுகம் எனப்படுவது அவரைத் தமிழ் வீரத்தை அதிகம் துஷ்பிரயோகம் செய்த ஒரு தலைவராகவே நிறுவிவிட்டு முடிந்திருக்கிறது.

பிரபாகரன்தான் எல்லாமும் என்று நம்புகிறவர்களைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டதுதான். 38 ஆண்டுகாலத் தமிழ் அரசியல் முழுவதும் வீணாகிவிட்டதுதான். ஆனால், பிரபாகரனோடு முடிவுக்கு வந்தது தமிழ் மிலிட்டரிசம் தான். தமிழ் அரசியல் அல்ல. தமிழின் நவீன வீரயுகம் ஒன்று அவருடன் முடிந்துவிட்டது இனி அறநெறியுகம் ஒன்று வரும். அதற்கிடையிலான ஒரு இடைமாறு காலகட்டத்திலேயே இப்பொழுது தமிழ் அரசியல் நிற்கிறது.
அறநெறிக்காலம் என்றதும் நாயன்மார்களும், ஆழ்வார்களும் வந்து உதித்து அதிசயங்கள், அற்புதங்களைச் செய்து தேவாரத் திருப்பதிகங்களைப் பாடப்போகிறார்கள் என்ற அர்த்தத்தில் அல்ல. மாறாக, தமிழின் முன்னைய வீரயுகங்களைப்போல யுத்தத்தின் படிப்பினைகளிலிருந்து வீரத்திற்குப் பதிலாக அறிவைப் போற்றும் ஒரு புதிய மரபின் எழுச்சியை அதாவது மரபு மாற்றத்தைக் கருதியே இங்கு இவ்வாறு கூறப்படுகிறது. அதாவது, புலிகளின் வீழச்சியிலிருந்து பெற்ற படிப்பினைகளிலிருந்து ஒரு புதிய தமிழ் அரசியல் வெளியை உருவாக்குவது என்ற அர்த்தத்தில்.

பிரபாகரன் ஒரு கெடுபிடிப்போரின் குழந்தை, அவர் கெடுபிடிப்போரின் இரு துருவ போட்டி அரசியலுக்கு ஊடாகவே வளர்ந்தவர். ஆனால், கெடுபிடிப்போரின் பின்னரான ஒரு துருவ உலக ஒழுங்கை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அல்லது அவரது தலையைச்சுற்றி வரையப்பட்டிருந்த ஒளிவட்டம் ஒரு புதிய உலக ஒழுங்கைப் புரிந்துகொள்ள அவரை விடவில்லை. அல்லது அதை இடித்துரைக்க வல்ல புத்திஜீவிகளை அவர் நெருங்கிச்செல்லவில்லை. முள்ளிவாய்க்காலில் அவருடைய வீழ்ச்சியின் இறுதிக்கட்டத்திலும் அவர் எதற்காகவோ காத்திருந்தும் கூட ஒரு துருவ உலக ஒழுங்கைச் சரியாக உள்வாங்காததன் விளைவுதான்.

ஒரு துருவ உலக ஒழுங்கை அவர் மட்டுமல்ல அவரைப்போன்ற ஒற்றைப் பரிமாண அரசியலை அவாவும் எவராலும் சுதாகரித்துக்கொள்ள முடியாதுதான். ஏனெனில், ஒரு துருவ உலகம் எனப்படுவது தகவல் தொழில்நுட்பம், நிதி மூலதனம் இரண்டினதும் திரட்சியாக எழுச்சிபெற்ற ஒன்று. தகவல் தொழில்நுட்பமானது தகவல்களை ஒரு மையத்தை நோக்கிக் குவித்தது. நிதி மூலதனமானது நிதியை ஒரு மையத்தை நோக்கிக் குவித்தது. தகவல் தொழில்நுட்பம் தகவலை அதாவது அறிவைத் திறந்துவிட்டது. நிதி மூலதனம் சந்தைகளைத் திறந்துவிட்டது. இரண்டும் சேர்ந்து தேசங்களின் எல்லைகளையும், கண்டங்களின் எல்லைகளையும் கரைத்து வருகின்றன. இவ்விதம் எல்லைகள் கரைந்துருவாகி வரும் பூகோளக் கிராமத்தில் எதுவும் தூயதாக இருக்க முடியாது. எல்லாமே ஒன்று மற்றதுடன் கலந்துதான் இருக்கமுடியும்.

இதில் தூய விடுதலையும் இல்லை. தூய இலட்சியங்களும் இல்லை. தூய தியாகமும் இல்லை. தூய துரோகமும் இல்லை. தூய வீரமும் இல்லை. தூய கோழைத்தனமும் இல்லை. எல்லாமே ஒன்று மற்றதிலிருந்து பிரிக்கப்படவியலாதபடி ஏதோவொரு விதத்திற்கு கலந்துதான் காணப்படுகின்றன. அதாவது கலப்பு நிறங்களின் யுகம் இது. அல்லது சாம்பல் நிற ஓரங்களின் யுகம் இது. தூயது என்று எதுவுமே தனித்து நிற்கமுடியாதளவுக்கு தொழில்நுட்பமும் நிதிமூலதனமும் உலகங்களை இணைத்துகொண்டுவருகின்றன.

இதனால் எதிலும் ஒற்றைப் பரிமாணம் என்பது நடைமுறைச் சாத்தியம் அற்றதாகி வருகிறது. அரசியல், பொருளாதாரம், அறிவியல், கலை, இலக்கியம் அனைத்திலுமே பல்பரிமாணம் அல்லது பல்லொழுக்கம் -மல்டி டிசிப்பிளின்- எனப்படுவதே முழுமையானது என்றாகி வருகிறது. எதிலும் பல்பரிமாணத்தை அல்லது பன்மைத்துவத்தை அல்லது கூட்டு ஒழுக்கத்தை ஏற்றுக்கொள்ளாத எவரும் முழுமைத்துவத்துக்கு எதிரானவர்களாக காணப்படுகிறார்கள். இப்பூமியில் எதுவும் ஏதோவொரு முழுமையின் தவிர்க்கப்படவியலாத ஒரு பகுதியாகவே காணப்படுகிறது. எனவே, முழுமைத்துவம் எனப்படுவது அதன் பிரயோக அர்த்தத்தில் பன்மைத்துவம்தான். பன்மைத்துவம் எனப்படுவது அதன் அரசியல் பிரயோகத்தில் ஜனநாயகம்தான். இந்த யுகமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத எவரும் அரசியல்க் கூர்ப்பில் காலாவதியாகவேண்டியதுதான். பிரபாகரனுக்கும் இதுதான் நடந்தது.

கெடுபிடிப்போரின் குழந்தையான அவரால் கெடுபிடிப்போரின் பின்னரான ஒரு துருவ உலக ஒழுங்குடன் அனுசரித்துப்போக முடியவில்லை. எனவே அவர் காலாவதியாகி அரங்கிலிருந்து அகற்றப்பட்டார். அவரால் எதையுமே கறுப்பு வெள்ளையாகத்தான் பார்க்க முடிந்தது. அவரிடம் இரண்டே இரண்டு பெட்டிகள்தான் இருந்தன. ஒன்று கறுப்பு மற்றது வெள்ளை. இரண்டு பட்டியல்கள்தான் இருந்தன. ஒன்று தியாகிகளின் பட்டியல் மற்றது துரோகிகளின் பட்டியல். இந்த இரண்டுக்கும் வெளியே இந்த இரண்டுக்கும் இடையே சாம்பல் நிறத்திலும் பெட்டிகள் இருக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள அவருடைய ஒற்றைப் பரிமாண ஒழுக்கம் விட்டுக்கொடுக்கவில்லை. பூமி சாம்பல் நிற ஓரங்களை நோக்கிச் சுற்றிக்கொண்டிருக்க பிரபாகரனோ கறுப்பு வெள்ளை அரசியலை நடத்த முற்பட்டார். முடிவில் அரங்கிலிருந்து அகற்றப்பட்டார்.

எனவே பிரபாகரனிடமிருந்து கற்றுக்கொள்வது என்பது சாம்பல் நிற ஓரங்களை ஏற்றுக்கொள்வதுதான். அது நிச்சயமாக புலிகளின் சாம்பலில் இருந்துதான் வரவேண்டியிருக்கிறது.
பிரபாகரன் எல்லாவற்றையுமே பிரித்து வைத்திருந்தார். அவர் இலங்கைத் தீவை மட்டும் பிரிக்க முயலவில்லை. முதலில் அவர் தமிழ் அறிவைத் தமிழ் வீரத்திலிருந்து பிரித்தார். பின்னர் சிங்கள முற்போக்குச் சக்திகளை தமிழர்களிடமிருந்து பிரித்தார். பின்னர் அவர் தமிழர்களை தியாகி; துரோகி; மாற்று இயக்கம் என்று கூறுபோட்டுப் பிரித்தார். பின்னர் முஸ்லிம்களைத் தமிழர்களிடமிருந்து பிரித்தார். பின்னர் கிழக்குத் தமிழர்களை வடக்கிலிருந்து பிரித்தார். இவை தவிர ரஜீவ் காந்தியைக் கொல்லுமாறு உத்தரவிட்டதன் மூலம் இந்தியாவைத் தமிழர்களிமிருந்து பிரித்தார். பின்னர் நாலாம் கட்டம் ஈழப்போருக்கான புறநிலமைகளை உருவாக்கியதன் மூலம் மேற்கு நாடுகளை தன்னிடமிருந்து பிரித்தார். பின்னர் நாலாம்கட்ட ஈழப்போரில் தன்னையும் தன்னுடைய அதிகாரங்களையும் பாதுகாப்பதற்காக அவர் முன்னெடுத்த ஆட்பிடி அரசியலும் அதன் தொடர் விளைவுகளும் அவரை அவருடைய ஆட்சிக்குட்பட்டிருந்த சுமார் மூன்று இலட்சம் மக்களில் பெரும்பாலாலனவர்களிடமிருந்து பிரித்தன.

முடிவில் முள்ளிவாய்க்காலில் அவர் சுற்றிவளைக்கப்பட்டிருந்தபோது கவச குண்டலங்களை இழந்த கர்ணணைப்போலக் காணப்பட்டார்.
எனவே பிரபாகரனிடமிருந்து கற்றுக்கொள்வது என்பது என்னவெனில் தனது மெய்யான பலங்கள் எவையெவையோ அவற்றையெல்லாம் தன்னிடமிருந்து பிரித்துவைத்த அல்லது பிரிந்துபோகவைத்த ஒரு மனிதனின் வீழ்ச்சியைத்தான். எனவே, பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல் வெளி எனப்படுவது அவர் பிரித்துவைத்த எல்லாவற்றையும் ஒரு மெய்யான தேசிய அடித்தளத்தில் ஒன்றுசேர்த்து வைப்பதுதான்.

மேற்கத்தைய அறிஞர்களின் முடிவுகளின்படி தேசியம் எனப்படுவது ஜனநாயகத்தை அதன் உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது. இதன்படி கூறின் தேசியம் எனப்படுவது பன்மைத்துவத்தை அதன் உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது. அதாவது சாம்பல் நிற ஓரங்களைக் கொண்டதாக இருப்பது. எனவே பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல் எனப்படுவது சாம்பல் நிற ஓரங்களை உடையதொன்றாக உருவாகவேண்டும்;. தமிழர்கள் தமக்குள்ளும் தமக்கு வெளியே தீவு முழுவதும் தீவுக்கு வெளியே பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலும் சாம்பல் நிற ஓரங்களை உருவாக்கவேண்டும். அதாவது மையத்தில் நிறங்களின் தனித்துவங்கள் துலங்கும் அதேசமயம் ஓரங்களில் கலப்பு நிறங்களை அதாவது சாம்பல் நிற ஓரங்களைக் கொண்ட ஒரு முழுமை.

சாம்பல் நிற ஓரம் அல்லது சாம்பல் நிறத் தமிழ் அரசியல் வெளி எனப்படுவது, குறிப்பாக புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் அதைப்பற்றி உரையாடுவது என்று சிலருக்கு சரணாகதி அரசியலோ என்று தோன்றக்கூடும். அதாவது வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் இடையிலான கோழைத்தனமான ஒர் உடன்படிக்கைக்கான கோட்பாட்டு விளக்கமா இது என்று கேள்விகள் வரும்.
இல்லை. நிச்சயமாக இல்லை.
சாம்பல் நிறம் என்று இங்கு கூறப்படுவது எதுவும் தனது தனித்துவத்தை இழந்து மற்றதுடன் இரண்டறக் கரைந்து சங்கமாகிவிடுதல் என்ற அர்த்தத்தில் அல்ல. ஒன்று மற்றதுடன் கரைந்து எல்லாமும் ஒரே கலவையாக மாறிவிடுதல் என்பதும் ஒற்றைப் பரிமாண வாதம்தான்.

அது பன்மைத்துவத்துக்கு எதிரானதுதான். மாறாக, இங்கு சாம்பல் நிறம் என்று கூறப்படுவது எதுவெனில், எதையும் கறுப்பு வெள்ளையாக மட்டும் பார்க்கக்கூடாது என்ற அர்த்தத்தில்தான். எதுவும் தனது தனித்துவத்தை இழந்துவிடாமலிருக்கும் அதேசமயம் மற்றொன்றுடன் கலந்து வாழ்தலே இது. மையத்தில் நிறத்தின் தனித்துவம் துலங்கும் அதேசமயம் ஓரத்தில் கலப்பு நிறங்கள் (சாம்பல் நிறம்) காணப்படும். இதுதான் மெய்யான பன்மைத்துவம். அதாவது தனித்துவம் மிக்க இரண்டு சிறு முழுமைகள் ஒன்று மற்றதுடன் இணைந்து ஒரு பெரிய முழுமை உருவாகிறது. இதன்படி ஒன்று அது அதுவாக இருக்கும் அதேசமயம் ஒரு பெருமுழுமையின் தவிர்க்கப்படவியலாத ஒரு பகுதியாகவும் இருக்கும்.

தொழில்நுட்ப வார்த்தைகளில் இதுதான் இன்ரநெற் உலகம். அரசியல் அர்த்தத்தில் இதுதான் பன்மைத்துவம். இதுவே மெய்யான ஜனநாயகத்துக்கான தகர்க்கப்படமுடியாத அடித்தளமும்கூட. இதற்குத்தான் ஒப்பீட்டளவில் அதிகளவும் வீரம் தேவை. சுத்த வீரர்களால்தான் தமது தனித்துவங்களை இழந்துவிடாதிருக்கும் அதேசமயம் மற்றவர்களின் தனித்துவங்களையும் அங்கீகரிக்க முடியும்.

எனவே சாம்பல் நிற ஓரங்களின் அரசியல் எனப்படுவது அதன் பிரயோக இயக்கத்தில் பன்மைத்துவம்தான். ஒற்றைப் பரிமாண அரசியல் எதுவுமே பன்மைத்துவத்துக்கு எதிரானது. தமிழ் அரசியல் எனப்படுவது கடந்த சுமார் கால்நூற்றாண்டுக்கும் மேலாக பெருமளவுக்கு ஒற்றைப் பரிமாண அரசியலாகவே உருவாகி வந்திருக்கிறது. ஒற்றைப் பரிமாண அரசியல் எனப்படுவது அதன் பிரயோக வடிவத்தில் இராணுவ அரசியல்தான். தமிழ் மக்கள் கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக இராணுவமயப்பட்டு வந்துள்ளார்கள்.
இதனால் தமிழ் அரசியலை பன்மைத்துவத்தை நோக்கிக் கொண்டு வருதல் என்பது அதை இராணுமயநீக்கம் செய்வதுதான். ஒரு சமூகத்தை இராணுவமயநீக்கம் செய்வது என்றால் அதை ஃபியர் சைக்கோஸிஸ் (அச்ச உளவியல்) இலிருந்து விடுவிக்கவேண்டும். ஏகப்பரிமாண அரசியலின் பிரதான தோற்றப்பாடே ஃபியர் சைக்கோஸிஸ்தான். எனவே ஃபியர் சைக்கோஸிஸ் இலிருந்து தமிழ்ச்சமூகத்தை முதலில் விடுவிக்கவேண்டும். அதற்கு சிவில் கட்டமைபுக்களை உருவாக்கவேண்டும்.

ஒரு சமூகத்தை ஃபியர் சைக்கோஸிஸ் இலிருந்து விடுவிப்பதென்றால் அங்கே மூடப்பட்டிருக்கும் எல்லாக் கதவுகளையும் திறக்கவேண்டும். மக்களை அவர்களுடைய பதுங்கு குழிகளை விட்டு வெளியே வருமாறு ஊக்குவிக்கவேண்டும். சுமார் கால்நூhற்றாண்டுக்கும் மேலாக ஏன் அதற்கு முன்பிருந்த தமிழர்கள் ஏதோவொரு பதுங்கு குழிக்குள்தான் வசித்துவருகிறார்கள். ஒன்றில் பண்பாட்டுப் பதுங்குகுழி அல்லது சாதிப் பதுங்குகுழி அல்லது பிரதேசவாத மற்றும் ஊர்வாதப் பதுங்குகுழி. இவற்றுடன் பிரபாகரன் கொண்டுவந்த இராணுவப் பதுங்குகுழி.
எனவே, தமிழர்களை முதலில் பதுங்குகுழிகளுக்குள் இருந்து வெளியே எடுக்கவேண்டும். அதற்குவேண்டிய எல்லாவிதமான உரையாடல்களுக்கும் சுயவிமர்சனங்களுக்குமான கதவுகள் அகலத் திறக்கப்படவேண்டும். பிரபாகரனின் ஆவியோடு உரையாட விரும்புவோர் முதல் தமது மனச்சாட்சிகளோடு உரையாடட்டும் அப்பொழுதுதான் ஒரு அறநெறி யுகத்தின் பிறப்பை அவர்களால் ஆமோதிக்க முடியும்.

அப்பொழுதுதான் சாம்பல் நிற ஓரங்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியும். இது விடயத்தில் இலங்;கைத் தீவுக்குள்ளும் தீவுக்கு வெளியே தமிழ் நாட்டிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் உள்ள அனைத்து புத்திஜீவிகளும் கலைஞர்களும் அக்கறை கொண்ட எல்லாரும் ஒன்றுதிரளவேண்டும்.
கறுப்பு வெள்ளை அரசியல் எனப்படுவது நாடுகளையும், கண்டங்களையும், உலகங்களையும் மூடுவது.
ஆனால், சாம்பல் நிற ஓரங்களின் அரசியல் எனப்படுவது நாடுகளையும், கண்டங்களையும், உலகங்களையும் திறந்துவிடுவது:
கறுப்பு வெள்ளை அரசியல் அறிவின் எதிரி. சாம்பல் நிற அரசியலோ அறிவின் தோழன்.
கறுப்பு வெள்ளை அரசியல் ஒரு சமூகத்தை இராணுவமயப்படுத்தும். சாம்பல் நிற அரசியலோ ஒரு சமூகத்தை இராணுவமய நீக்கம் செய்து சிவில் கட்டமைப்புக்களை உருவாக்கும்.

கறுப்பு வெள்ளை அரசியல் ஏகப்பரிமாண அரசியலில் போய் முடியும். சாம்பல் நிற அரசியலோ பன்மைத்துவத்தை ஸ்தாபிக்கும்.
கறுப்பு வெள்ளை அரசியல் அச்ச உளவியலைப் பாதுகாக்கும். சாம்பல் நிற அரசியலோ மனித உரிமைகளைப் பாதுகாக்கும்.
கறுப்பு வெள்ளை அரசியல் கசப்பை, வெறுப்பை, வன்மத்தை, பழிவாங்கும் உணர்ச்சியைப் பேணும். சாம்பல் நிற அரசியலோ சகிப்புத்தன்மையையும், நல்லிணக்கத்தையும் பேணும்.
கறுப்பு வெள்ளை அரசியல் தன்னுடைய மெய்யான பலங்களைத் தன்னிலிருந்து பிரித்து முடிவில் எதிர்த்தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்குள் போய் வீழ்ந்துவிடும்.

ஆனால், சாம்பல் நிற அரசியலோ எல்லாத் தரப்பினரையும் தன்வசப்படுத்தி எதிர்ப்பையும் தனது நிகழ்ச்சி நிரலுக்குள் வந்துவிழச் செய்துவிடும்.
பிரபாகரனின் கறுப்பு வெள்ளை அரசியலாசை முடிவில் அவரது “பகைவர்களுக்கே” வெற்றியைப் பெற்றுக்கொடுத்துவிட்டது. 38 ஆண்டுகாலப் போராட்டத்தின் முடிவில் தமிழர்கள் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற இழிநிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
ஆனாலும் வீழ்ச்சியுற்றிருப்பது பிரபாகரனிஸம் மட்டும்தான். நிச்சயமாகத் தமிழ் அரசியல் அல்ல. எனவே, பிரபாகரன் விட்ட தவறுகளிலிருந்து பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் ஒரு புதிய தமிழ் அரசியல்வெளி உருவாக்கப்படவேண்டும்.

இனிப் பதுங்கு குழிகளும் வேண்டாம். புதை குழிகளும் வேண்டாம்.
தியாகிகள் பட்டியலும் வேண்டாம். துரோகிகள் பட்டியலும் வேண்டாம்.
வீரத்தை வழிபடப்போய் முடிவில் மரணத்தை மகிமைப்படுத்தி வாழ்வை நிராகரித்தது போதும்.
இனி அறிவை வழிபடுவதிற் தொடங்கி வாழ்வை ஆமோதிக்கும் ஒரு புதிய அரசியல் நாகரீகம் தேவை.
தான் சாகத் தயாராக இருந்த ஒரே காரணத்திற்காக பிற உயிர்களை ஒரு பொருட்டாகத்தானும் மதிக்காத ஒரு வீரமரபு இனி வேண்டாம்.
பதிலாக, தன்னுடைய உயிரின் பெறுமதி தெரிந்த காரணத்தினாலேயே பிற உயிர்களையும் தன்னுயிர்போல நேசிக்கும் ஒரு புதிய அரசியல் நாகரீகமே இனித் தமிழர்களுக்கு வேண்டும்
அதாவது புதிய சாம்பல் நிற அரசியல்வெளி ஒன்று வேண்டும்
மேலும் இங்கே தொடர்க...
நாட்டுக்கு இராணுவத் தலைமைத்துவம் அவசியமில்லை - ஊடக அமைச்சர்



நாட்டுக்குத் தேவை அரசியல் தலைமைத்துவமேயன்றி இராணுவத் தலைமையல்ல என்றும் உலக வரலாறு இதற்குச் சிறந்ததொரு சான்றாகும் எனவும் ஊடக மற்றும் தகவல் தொடர்பாடல்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

ஊடக அமைச்சில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கூட்டுப் படைகளின் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா அரசியலில் ஈடுபடுவது குறித்து பல்வேறு வகையிலான ஊகங்கள் எழுந்துள்ள நிலையில், இராணுவத் தலைமைத்துவமானது முன்னேற்றகரமான செயற்பாட்டுக்கு வித்திடுவதாய் அமையாது என அமைச்சர் கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், "எந்தவொரு ஜனநாயக நாட்டுக்கும் அரசியல் தலைமைத்துவமே அவசியமாகும். இரண்டாம் உலகப் போரை எடுத்துக்கொண்டால், திறமைமிக்க, சவால்களை வெற்றிகொண்ட இராணுவ அதிகாரிகள் இருந்தார்கள் என்பதை அறிய முடியும். ஆயினும் அவர்கள் அரசியலுக்குள் நுழைந்து அல்லது நுழைய முற்பட்டு தோல்வியையே அடைந்தனர்" என்றார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் வினவியபோது, "இராணுவத்தில் உயர்பதவியில் சேவை செய்யும் அதிகாரியாக மட்டுமே அவரை நான் பார்க்கிறேன். அதைவிடுத்து வேறெதுவும் எனக்குத் தெரியாது" என பதிலளித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
ஜனாதிபதி - சரத் விசேட சந்திப்பு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அலரி மாளிகையில் ஜனாதிபதித் தலைமையில் பாதுகாப்புச் சபைக் கூட்டமொன்று நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து சரத் பொன்சேகா - ஜனாதிபதி இடையில் தனிப்பட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவுக்கு விஜயம் செய்து நாடு திரும்பியதன் பின்னர் முதல் தடவையாக ஜனாதிபதியை, சரத் பொன்சேகா சந்தித்துள்ளார்.

இருவரும் பகல் போசன விருந்துபாசாரம் ஒன்றில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, தேர்தல் குறித்த சரியான அறிவிப்புக்கள் விடுக்கப்படும் வரை, பதவி விலக வேண்டாம் என ஐக்கிய தேசிய முன்னணி, ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் கோரியுள்ளதாகவும் தெரிகிறது
மேலும் இங்கே தொடர்க...
அவசரகால சட்டவிதிகளை உடனடியாக நீக்கமுடியாது- அமைச்சர் யாப்பா



முடிவடைந்து விட்டது என்பதற்கõக, உடனடியாக அவசரகாலச் சட்டத்தை நீக்கிவிட முடியாது. அதற்கு மேலும் காலம் தேவைப்படுகின்றது. பயங்கரவாதத்தின் எச்சங்கள் இன்னும் நாட்டில் காணப்படுகின்றன. அவற்றை அடையாளம் காணவேண்டியுள்ளது. எனவே, பகுதி பகுதியாகவே அவசரகாலச் சட்ட விதிகளைத் தளர்த்த முடியும் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சில் நேற்று புதன்கிழமை காலை நடைபெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது: .

யுத்தம் முடிவடைந்து நாட்டில் அமைதி நிலை திரும்பியுள்ளது. ஆனால், நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளை எந்த விதத்திலும் மாற்றமுடியாது. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டிருப்பினும், அதன் எச்சங்கள் தொடர்ந்தும் நாட்டில் உள்ளன. அவற்றை அடையாளம் கண்டு முடக்க வேண்டும். யுத்தம் முடிந்த பின்னர் கூட நாட்டில் பல கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றமை உங்களுக்குத் தெரியும். ஜனாதிபதியை கொலைசெய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் பேரில் சிலர் கைதுசெய்யப்பட்டனர். இதில் ஒரு உதவி பொலிஸ் அத்தியட்சரும் உள்ளடங்கியிருந்தமை உங்களுக்குத் தெரியும். எனவே, இவற்றை அடையாளம் காணவும், பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தவும், அவசரகாலச் சட்டவிதிகள் அவசியமாகவுள்ளன. எனினும், அதனை பகுதி பகுதியாகத் தளர்த்தலாம் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம். ஆனால், அவசரகாலச் சட்டத்தை உடனே நீக்கிவிட முடியாது. கைதுகள் மற்றும் சோதனைகள், விசாரணைகள் என்பனவற்றுக்கு அவசரகால விதிகள் தேவையாகும். .

தற்போது அனைத்து எம்.பி.மார்களுக்கும் வட பகுதிக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டால் அதற்கு ஏற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு கோருபவர்கள், நாட்டில் நாளை ஏதாவது ஒரு அசம்பாவிதம் இடம்பெறின் என்ன கூறுவார்கள்? அதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூறவேண்டும்
மேலும் இங்கே தொடர்க...
மியன்மார் நாட்டின் தலைவர் இன்று இலங்கைக்கு வருகிறார்- ஜனாதிபதியை சந்தித்து பேசுவார்

மியன்மார் அரச சமாதான மற்றும் அபிவிருத்திச் சபை ஒன்றியத்தின் தலைவரும், சிரேஷ்ட உயரதிகாரியுமான தன் சூவி இன்று வியாழக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று, மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று பிற்பகல் வருகை தருகின்ற தன் சூவியை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் பைலா தலைமையிலான வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரவேற்பர்.இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அவர் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம மற்றும் உயரதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்.

அத்துடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்புகளில் இலங்கையில், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற மூதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்படுவதுடன், இரு நாடுகளுக்கும் இடையில் நிலவுகின்ற கலை, கலாசார, வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தல் தொடர்பில் ஆராயப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர், அண்மையில் அந்நாட்டிற்கு விஜயம் செய்திருந்த போது விடுத்திருந்த அழைப்பை ஏற்றே அவர் இலங்கைக்கு விஜயம் செய்கின்றார் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது
மேலும் இங்கே தொடர்க...
இலங்கைக்கு வாடகைக்குக் கொடுத்த யுத்தக் கப்பல்களை இந்தியா திரும்பக் கோருகிறது


வருடாந்தம் புதுப்பிக்கும் ஒப்பந்த அடிப்படையில் இலங்கை கடற்படைக்கு 2007ஆம் ஆண்டில் வழங்கிய இரண்டு யுத்தக் கப்பல்களை தற்போது திரும்பப் பெறுவது குறித்து இந்திய கரையோரக் காவல்படையினர் நிச்சயமற்ற நிலையில் உள்ளனர் என்று இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த நடவடிக்கைக்குத் தயார் செய்து கொண்டிருந்த போது ஹெலிகொப்டர்கள், துரிதமாக சுடும் இயந்திரத் துப்பாக்கிகள் ஆகியன பொருத்தப்பட்ட 'வரஹா', 'விக்ரஹ' என்ற இரண்டு கரையோர காவல் கப்பல்களை இலங்கைக்கு வாடகைக்கு இந்தியா வழங்கியிருந்தது.

ஆனால், தற்போது இந்திய கரையோர காவல் படையினர் மேற்படி யுத்தக் கப்பல்கள் இரண்டையும் திருப்பிக் கேட்கவே இலங்கை கடற்படையினர்,'வரஹா' கப்பலுக்கு சாகர என்றும் 'விக்ரஹ' கப்பலுக்கு 'சயுரல' என்றும் பெயர் மாற்றம் செய்த நிலையில் என்ன பதிலளிப்பது என்ற சங்கடமான நிலையில் உள்ளனர்.

இரண்டு கப்பல்களையும் தந்து உதவியமை குறித்து இலங்கை இந்தியாவுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது என்று இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் அதுல சேனாரத் தொலைபேசி மூலம் இந்தியாவுடன் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

கரையோர காவற்படையின் கோரிக்கைக்கு இணங்குவதற்காக இலங்கையுடன் ராஜதந்திர தொடர்பை ஒதுக்குவது இந்திய அரசாங்கத்திற்கு சிரமமாக இருக்கலாம்.

அதேவேளை, இலங்கையின் இராணுவ தேவைகளை நிறைவேற்றிவரும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு விட்டுக் கொடுக்கவும் அது விரும்பவில்லை.

தம்மை இனங்காண்பிக்க விரும்பாத இலங்கையின் சிரேஷ்ட பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர், தற்போது விடுதலைப் புலிகள் மடிந்து போன வேளையில் இலங்கை கடற்படைக்கு இக்கப்பல்கள் தேவைப்பட மாட்டா என்று இந்திய கரையோர காவற்படையினர் கருதியிருக்கலாம் என்று கூறினார்.

இலங்கைக்கு தந்த கப்பல்களுக்கு பதிலாக இந்திய அரசாங்கம் கரையோர காவற்படைக்கு புதிய கப்பல்களை வழங்கவும்கூடும் என்று அவர் தெரிவித்தார். மும்பாய் பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து கரையோர காவற் படைக்கு இந்திய அரசாங்கம் மேலும் 55 யுத்தக் கப்பல்களையும் 45 விமானங்களையும் கொள்வனவு செய்ய அங்கீகாரம் அளித்துள்ளது.

இத்தகைய சொத்துக்களை ஒரேநாளில் பெற்று பொருத்திவிட முடியாது. பல்வேறு கப்பல் கம்பனிகளுக்கு கொள்வனவு கட்டளைகள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆனால் இவற்றை விநியோகிக்க இரண்டு வருடங்களாயினும் எடுக்கும்.

இந்த நிலையில் தங்களுக்கு கப்பல் பற்றாக்குறை இருந்து வருகிறது என்று கரையோர காவற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய கரையிலிருந்து 12 மைல் தூரம் கடற்பரப்புக்குள் பாதுகாப்புக்கு கரையோர காவற் படையே பொறுப்பாகும். இந்திய கடற்படையின் மேற்பார்வையில் கரையோர காவற்படையினர் செயற்பட்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

ராஜமனோகரன் பிரபாகரன் (தோழர் பிரபா)
மக்கள் விடுதலையை நேசித்த மகத்தான வீரர்களில் ஒருவனாக தோழர் பிரபா இயற்கையெய்திய செய்தி எம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 1983ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவிமக்கள் கொல்லப்பட்டபோது, தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கு அரசியல் மயப்படுத்திய மக்கள் புரட்சியே சரியான பாதை என்பதை உணர்ந்து கொண்ட தோழர் பிரபா அவர்கள் 83களின் நடுப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

பள்ளிப்பாரயம் முதலே விடுதலையில் ஆர்வம் கொண்ட தோழர் பிரபா, பல்வேறு சத்தியக்கிரக போராட்டங்கள், மாணவர் எழுச்சி ஊர்வலங்கள் என தன்னையும் ஒருவராக மாணவர் பேரவையுடன் இணைந்து செயலாற்றியதுடன் படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்டார். 1984களின் நடுப்பகுதியில் இந்தியாவிற்கு சென்ற தோழர் பிரபா அரசியல், இராணுவ கற்கை நெறிகளை தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் பாசறைகளில் கற்றுக்கொண்டு ஒர் சிறந்த மக்கள் போராட்ட வீரனாக தன்னை தயார்படுத்திக் கொண்டவர்.

1987ம் ஆண்டு இலங்கை-இந்திய அரசுகளிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பினார். தாயகத்திலும் தனது கழக செயற்பாடுகளை முன்னெடுத்த நிலையில், பாசிசபுலிகள் இலங்கை அரசிடம் உதவிகளை பெற்றுக்கொண்டு கழக உறுப்பினர்களையும், சகோதர அமைப்பின் உறுப்பினர்களையும் கொன்றொழித்தபோது நயவஞ்சக கொலைகளை எதிர்த்து வந்தார். பாசிசம் உச்சம் கட்டதாண்டவம் ஆடியபோது விடுதலை உணர்வுடன் போராட்ட அமைப்புக்களில் இணைந்து கொண்டவர்களில் பலரும் வெளிநாடுகளிற்கு இடம்பெயர வேண்டிய நிலையில்தான் பிரபாவும் இடம்பெயர்ந்தார். அவ்வாறாக இடம்பெயர்ந்து பலர் வந்தபோதும், அவர்களில் கணிசமானோர் தமது குடும்பவாழ்வில் அமைதியாக ஈடுபட விரும்பியபோதும், பிரபா அவர்கள் அவ்வாறில்லாமல் தான் நேசித்த கொள்கையில் உறுதியாக கழகத்தின் வழியில்; தனது போராட்டப் பாதையில் சுவிற்சர்லாந்தில் கழகத்தின் பணிகளை முன்னெடுத்த தோழர்களுடன் இணைந்து கொண்டு செயலாற்றினார். அக் காலகட்டத்திலும் பாசிசத்தின் பல்வேறு சாவல்களுக்கு முகம்கொடுத்து கழகத்தின் பாதையில் வழிதவறாது தொடர்ந்து செயலாற்றிவந்தார்.

சுவிற்சர்லாந்தில (தமிழன்குரல் வானொலி, வீரமக்கள்தினம் போன்றவற்றை ஆரம்பிப்பதற்கு முன்நின்று உழைத்த தோழர்களில் ஒருவராவர்

கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் ஏனைய தோழர்களுடன் தோளோடு தோள்நின்று செயலாற்றியதுடன், கால நீரோட்டத்தில் பிரான்ஸ்க்கு இடம்பெயரவேண்டிய சூழ்நிலையிலும் அங்கேயும் பாசிசத்திற்கு துணிந்து முகம் கொடுத்து தனது செயற்திறனால் கழகத்தின் (அமைப்பாளராக) பணிகளை முன்னெடுத்து வந்ததுடன், வன்னியில் மோதல்களால் இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு வந்த மக்களிற்கு உதவிடும் தலைமையகத்தின் பணியில் பிரான்ஸ் கிளையும் இணைந்து உதவியதுடன், நிற்கதியாகிய நிலையி;ல் வந்த மக்களுக்கான மறுவாழ்வில் தொடர்ச்சியான பணிகளை கழகத்தின் மற்றைய கிளைத் தோழர்களுடன் இணைந்து முன்னெடுத்து வந்தார். கழகத்தின் கொள்கை வழியில் சகோதர அமைப்புக்களுடனும் ஒர் நல்லுறவை ஏற்படுத்தி அவர்களுடனான உறவையும் சிறந்தமுறையில் பிரான்ஸ் மண்ணில் முன்னெடுத்த ஒரு சிறப்புமிக்க தோழர் ஆவர்.

மக்கள் புரட்சியியே மக்களின் சுதந்திர விடியலுக்கு ஒரே தீர்வு என்ற இலட்சிய வேட்கையுடன் தனது இறுதி மூச்சுவரை உழைத்த தோழர் பிரபாவின் நினைவுகளோடும், கனவுகளோடும் கழகத்தின் பாதையில் எமது பயணம் தொடரும் என்று கூறி அவருக்கு எமது கண்ணீர் அஞ்சலியை செலுத்தி நிற்கின்றோம்.


தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (P.L.O.T.E)

ஜனநாயகமக்கள் விடுதலை முன்னணி (D.P.L.F)

சர்வதே ஒன்றியம் சார்பாக

மேலும் இங்கே தொடர்க...