3 பிப்ரவரி, 2011

கொழும்பு டொக்யார்டில் வெடிப்பு சம்பவம்: 10 பேர் காயம்

கொழும்பு டொக்யார்ட் பகுதில் சற்றுமுன்னர் இடம்பெற்ற தவறுதலான வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தெற்கின் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பரிசோதிக்கும் தொழில்நுட்ப வாகனம்





தெற்கின் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பரிசோதிக்கும் தொழில்நுட்ப வாகனம்
வீதிகளின் நிலைமை தொடர்பாக மதிப்பீடுகளை மேற்கொள்ளக்கூடிய விசேட உபகரணங்கள் பொருத்தப்பட்ட வாகனமொன்று தெற்கு மாகாண அதி வேக நெடுஞ்சாலைகளில் தனது பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது.

வீதிகளின் மேற்பரப்பு, சமதள மட்டம், வளைவுகளின் கோணங்கள், வழுக்கும் தன்மை, வேகத்தின் தன்மை தொடர்பில் இவ்வாகனம் மதிப்பீடு செய்யக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



மேலும் இங்கே தொடர்க...

தமிழக மீனவர் மீதான இந்திய அரசின் திடீர் அக்கறை தேர்தலுக்கான நாடகம்



தமிழக மீனவர்கள் மீதான இந்திய மத்திய அரசாங்கத்தின் திடீர் அக்கறையானது தேர்தலுக்கான நாடக அரங்கேற்றமாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

இந்த நாடகத்தின் ஓர் அங்கமே நிருபமா ராவின் இலங்கை விஜயம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடருமானால் இலங்கையுடனான உறவுகள் பாதிக்கப்படுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்திருப்பது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே டாக்டர் குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் இடம்பெறவுள்ளது. எனவே மீண்டும் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்பட வேண்டுமானால் தமிழகத்தின் வாக்குகள் அவசியமானதாகும். அதற்காகவே "மீனவப் பிரச்சினை' நாடகம் அரங்கேற்றப்படுகிறது.

மக்களை ஏமாற்றி வாக்குகளை பறிப்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிரூபமா ராவ் இங்கு விஜயம் செய்தார். இது போன்ற நாடகங்கள் தொடர்ந்தும் அரங்கேற்றப்படும். எனவே இவை தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. தேர்தல் முடிந்ததும் இவையனைத்து நாடக அரங்கேற்றங்களும் நின்றுவிடும்.

அதேவேளை, தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினரால் தாக்கப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை. இது விடுதலைப் புலி ஆதரவாளர்களான வை கோ போன்றோரால் மேற்கொள்ளப்படும் பொய் பிரசாரங்களாகும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவுக்கு உரிய வசதிகளை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு




சிறையிலுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு முன்னர் இராணுவ நீதிமன்றம் வழங்கும்படி கூறிய சகல வசதிகளையும் வழங்கும் படி வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர நேற்று புதன்கிழமை பணிப்புரை வழங்கியுள்ளார்.

முன்பு ஒரு தடவை சரத் பொன்சேகாவுக்கு சுடு தண்ணீர் மற்றும் மருந்து ஆகிய வசதிகளை ஏற்பாடு செய்யுமாறு நீதிமன்றம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பணித்த போதிலும் அவை வழங்கப்படவில்லை என சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் முறையிட்டபோதே நீதிபதி இவ்வாறு பணித்தார்.

இராணுவத்தை விட்டு ஓடியவர்களை மறைத்து வைத்திருந்தமை தொடர்பிலான வழக்குக்காக சரத் பொன்சேகா நேற்று புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

இராணுவ விடயங்களில் ஊழல் செய்தார் என குற்றம் காணப்பட்டு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு இராணுவ நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 30 மாத சிறைத் தண்டனை வழங்கியிருந்தமை தெரிந்ததே.
மேலும் இங்கே தொடர்க...

கே.பி.அரசியலுக்குள் வருவதில் தவறில்லை ஆனால் பொன்சேகா விடுவிக்கப்பட வேண்டும்

பயங்கரவாத தலைவர்களில் ஒருவரான கே. பி.எனப்படுகின்ற குமரன் பத்மநாதன் ஜனநாயக நீரோட்டத்துக்குள் நுழைவதில் எந்தத் தவறும் கிடையாது. இருப்பினும் எல்லாவற்றுக்கும் முதலாக சிறைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும் இந்நாட்டை மீட்டெடுத்தவருமான சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது கே. பி. புதிய அரசியல் கட்சியொன்றை ஸ்தாபிக்கவிருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், எமது நாடு ஒரு ஜனநாயக நாடாகும். எனவே எவரும் ஜனநாயக நீரோட்டத்திற்குள் இணைந்து கொள்ள முடியும். அந்த வகையில் கே. பி. யும் அரசியலுக்குள் பிரவேசிக்கவோ அரசியல் கட்சியை ஸ்தாபிக்கவோ முடியும். அதில் தவறு கிடையாது.

இருப்பினும் பயங்கரவாதத்தை அழித்து இந்நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தவரான முன்னாள் இராணுவத் தளபதி இன்று சிறைப்படுத்தப்பட்டிருப்பது வேதனையான விடயம். அவர் தொடர்பில் மக்களிடத்தில் இருக்கின்ற உணர்வுகளை எம்மால் காண முடிகின்றது. அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களினதும் ஆதங்கமாக இருக்கின்றது. எனவே கே. பி. புதிய கட்சி ஆரம்பிப்பது குறித்து பிரச்சினை இல்லை. ஆனால் அதற்கு முன்னர் சரத் பொன்சேகா விடுவிக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நெர்டோ – வடகிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் மக்கள் சந்திப்பு.







நெர்டோ அமைப்பு கடந்த 28, 29, 30 – 01 2011 ஆகிய தினங்களில் பாதிக்கபட்ட வடக்கு மக்களுடனான சந்திப்புக்களில் ஈடுபட்டது. நெர்டோ அமைப்பின் செயலாளர் திரு செல்வராசா பத்மநாதன் (கே.பி) தலைமையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் பாதிக்கப்பட்ட மக்களின்பால் கரிசனை கொண்ட புலம்பெயர் மனிதாபிமான செயற்பாட்டாளர்களும் பங்கு கொண்டிருந்தனர். முதலாவது நிகழ்வாக, கிளிநொச்சியில் நிறுவப்பட்டுள்ள நெர்டோவின் புதிய அலுவலகம் புலம்பெயர் குழுவினால் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

மேலும் இங்கே தொடர்க...

மீண்டும் கனத்த மழை கிழக்கில் பேரவலம்; மலையகத்தில் மண்சரிவு; வவுனியாவிலும் பாதிப்பு 3 பலி; இருவரை காணவில்லை





வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களில் மீண்டும் கனத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் ஆங்காங்கே வெள்ள நிலையும், மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் அவல நிலைக்கும் உள்ளாகியுள்ளனர்.

இம் மழை காரணமாக சுமார் 32 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் சுமார் 29,500 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 30க்கும் மேற்பட்ட முகாம்க ளில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத் தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.

ஏற்பட்டுள்ள வெள்ளம், மண் சரிவு காரணமாக மூவர் உயிரிழந்திருப்பதாகவும், இருவர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையின் காலநிலையில் மீண்டும் திடீரென மாற்றம் ஏற்பட்டிருப்பதால் அடுத்துவரும் இரண்டு, மூன்று தினங்களுக்கு மப்பும், மந்தாரத்துடன் கூடிய மழைக் காலநிலை நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சமிந்திர டி சில்வா நேற்று தெரிவித்தார்.

இலங்கைக்கு அருகில் தென் கிழக்கில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்க நிலையே இக்காலநிலைக்குக் காரணம். இதன் விளைவாக கிழக்கு, தென்கிழக்கு, மன்னார் குடாக்கடல் பரப்புக்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். அதனால் இக்கடற்பரப்புக்களில் கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி அதிக மழை அம்பாறையில் 217.1 மில்லி மீற்றர்கள் பதிவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மண்சரிவு:

போக்குவரத்து பாதிப்பு

இதேவேளை, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் நுவரெலிய அலுவலகப் பொறுப்பாளரான பூகற்பவியலாளர் லக்சிறி இந்திரதிலக்க குறிப்பிடுகையில், வலப்பனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மகாவெவ மண்சரிவு செயற்படத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக கீர்த்தி பண்டாரபுர மகா வித்தியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த ஆறு குடும்பங்களும் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

இதேநேரம் வெலிமடை, நுவரெலியா நெடுஞ்சாலையிலும், புஸ்ஸல்லாவ, நுவரெலியா நெடுஞ்சாலையிலும் நேற்றுக் காலையில் மண்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் இப்பாதைகள் ஊடான போக்குவரத்து உடனடியாக ஸ்தம்பிதமடைந்தது. மணல் திட்டுக்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீராக்கும் பணியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினரும், பொலிஸாருடன் இணைந்து உடனடியாக ஈடுபட்டனர்.

இதேவேளை பதுளை - கண்டி வீதியில் ரந்தெனிகலை நீர்த்தேக்க அணைக்கட்டுக்கு அருகில் ரஜ மாவத்தையில் மண்சரிவு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக நீர்த்தேக்க முகாமையாளர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் துரிதமாக செயற்பட்டு நீர் மட்டத்தைக் குறைத்துள்ளனர்.

இதேநேரம், இப்பாதை ஊடாக மண் ஏற்றும் லொறிகள் போன்ற கனரக வாகனங்கள் செல்லுவதற்கும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

வான் கதவுகள் திறப்பு

இவை இவ்வாறிருக்க அடை மழை காரணமாக நாட்டிலுள்ள 59 பிரதான குளங்களில் 58 குளங்கள் நிரம்பி வழிவதுடன், வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன கூறினார்.

அம்பாறை மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், பதுளை, குருநாகல் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, மொனறாகலை, அநுராதபுரம், ஆகிய மாவட்டங்களிலுள்ள சகல குளங்களும் நிரம்பி வழிவதாகவும், 22 குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர்வெளியேற்றப்படுவதாகவும் அவர் கூறினார்.

அந்தந்த பிரதேச மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய பின்னரே குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர்வெளியேற்றப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.

திருகோணமலை

குச்சவெளி தினகரன் நிருபர்

திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக 1361 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் டி. டி. ஆர். டி. சில்வா தெரிவித்திருக்கிறார்.

குச்சவெளி, கிண்ணியா, தம்பலகாமம், வெருகல், கோமரங்கடவல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள 1361 பேர் 8 தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நலன்களை அவ்வப்பிரதேச செயலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

குச்சவெளி வாழைப்யூற்றுக்கிராமம் சலப்பையாறு வீடமைப்புத் திட்டத்தில் ஏற்பட்ட வெள்ள நீரை வெளியேற்ற இறக்கக்கண்டி கடற்படையினர் றைகம் உப்புக் கூட்டுத்தாபன ஊழியர்கள் பொதுமக்களுடன் இணைந்து பெக்கோ இயந்திரத்தின் மூலம் ஈடுபட்டு வருகின்றனர். காற்றுடன் கூடிய மழை குளிர்காற்றுடன் வீசுவதால் மக்கள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

தம்பலகாமம் நிருபர்

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் தம்பலகாமம் பத்தினிபுரத்தில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் சித்திவிநாயகர் வித்தியாலயம், பத்தினிபுரம் முன்பள்ளி ஆகிய இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளநீர் அதிகமாயிருப்பதால் கந்தளாய் குளத்தின் 9 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் திருகோணமலை கண்டி வீதியில் 96வது மைல்கல் பகுதியில் வீதிக்கு மேலாக வெள்ளம் பாய்ந்து வருகிறது.

பல வயல் நிலங்கள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கின.

அனுராதபுரம்

மிஹிந்தலை தினகரன் நிருபர்

அனுராதபுரத்தில் பல பகுதிகளிலும் மீண்டும் பெய்துவரும் அடைமழையால் மல்வத்து ஓயா, கனந்தரவாவி பெருக்கெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ் ஆறுகளினது நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

அளுத்கமவிற்கும், கல்பொத்தேகமவிற்கும் குறுக்கே செல்லும் மல்வத்துஓயா ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்தன் மூலம் பாலத்திற்கு மேல் சுமார் ஐந்து (05) அடியிலிருந்து நீர் குறுக்கறுத்து செல்கின்றது. நாளாந்தம் அவ்வழியாக நகரத்திற்கு பயணிக்கும் வியாபாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து மேற்கொள்வதில் பெரும் அசெளகரிகத்திற்குள்ளாகின்றனர்.

இதே வேளை அஸரிகமவிற்கும், உடும்புகலவிற்கும் குறுக்கே செல்லும் கனந்தரவாவியின் நீர்மட்டம் மீண்டும் அதிகரித்திருப்பதன் மூலம் பல ஏக்கர் நெல் வயல்கள் பாதிப்படையும் அவல நிலை தோன்றியுள்ளது.

வவுனியா

வவுனியா விசேட நிருபர்

வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளம் காரணமாக 3005 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என செட்டிக்குளம் பிரதேச செயலாளர் எஸ். கமலதாஸ் தெரிவித்தார்.

பாவற்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதினால் வெளியேறும் நீரினால் கந்தசாமி நகர் தட்டான்குளம் கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதேச செயலாளர் பூவரசன்குளம்- செட்டிகுளம் வீதியும், நெளுக்குளம்- நேரியகுளம் வீதியும் போக்குவரத்திற்கு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது. 20 கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

இடம்பெயர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் நண்பர்கள், உறவினர் வீடுகளில் உள்ளனர். பொது இடங்களில் தங்கியுள்ளவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். வவுனியா தமிழ் பிரதேச செயலாளர் பிரிவில் 289 குடும்பங்களைச் சேர்ந்த 1238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செக்கடிப்பிளவு, சாளம்பைக்குளம், மூன்று முறிப்பு, தாண்டிக்குளம் கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர்ச்சியான மழையின் காரணமாக மரக்கறி செய்கை 200 ஏக்கர் வவுனியா மாவட்டத்தில் அழிவடைந்துள்ளது என மாவட்ட விவசாய விரிவாக்கல் உதவிப்பணிப்பாளர் திருமதி ஜே. ஜெகநாதன் தெரிவத்தார்.

சுமார் 4500 ஏக்கர் நெல் வேளாண்மை, மூவாயிரம் ஏக்கருக்கு மேல், உழுந்து, பயறு, கெளபீ, மிளகாய் தலா 100 ஏக்கர் முற்றாகவே அழிவடைந்துள்ளது. சோளமும் பப்பாசி செய்கையும் அழிந்துள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

அறுவடை நேரத்தில் மழை வந்தமையினால் விவசாயிகளுக்கு பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விளைந்த நெல் வேளாண்மைகள் நீரில் மிதக்கின்றது. உழுந்து பயறு போன்ற தானிய வகைகள் முளைக்கத் தொடங்கிவிட்டது.

விவாயிகள் அனைவருமே வவுனியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளதினால் நிவாரணங்கள் தொடர்ச்சியாக சில மாதங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை விவசாய பணிப்பாளர் ஊடாக அமைச்சுக்கு தெரியப்படுத்தியுள்ளது.

மலையகம்

மஸ்கெலியா குறூப் நிருபர்

கடந்த இரு தினங்களாக இரவும் -பகலும் இடைவிடாது, மஸ்கெலிய, சாமிமலை, பொகவந்தலாவை, நோர்வூட், அட்டன், டிக்கோயா பகுதிகளில் உள்ள மின்சார உற்பத்திக்காக கட்டப்பட்டுள்ள நீர் அணைக்கட்டுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வழிந்தோடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியாவை அடுத்துள்ள மெளசாக்கெல்லை நீர் தேக்கக்குளம், டிக்கோயாவைச் சேர்ந்த காசல்ரீ நீர்த்தேக்கக்குளம், அப்புகஸ்தலையைச் சேர்ந்த கென்யன் நீர்த்தேக்கக் குளம், நோர்ட்டன் பிரிட்ஜைச் சேர்ந்த லக்ஷபான நீர்த்தேக்கக்குளம் ஆகியவற்றில் நீர் பெருகி கரைகளில் மேலால் ரிழிந்தோடுகிறது.

அது அவ்வாறிருக்க, தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்களால் சிறுதோட்டங்களில் பயிர் செய்த மரக்கறி செடிகள், கன்றுகள் பழுதாகியுள்ளன. தோட்டங்களில் தேயிலை நேர்சரிஸ் கடும் பாதிக்கப்பட்டுள்ளன. பல தோட்டங்களில் சிறிய, சிறிய மண் சரிவுகள் இடம்பெற்றுள்ளன.

மாத்தளை சுழற்சி நிருபர்

மாத்தளை மாவட்டத்தில் மீண்டும் கடும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதன் காரணமாக ஏற்கனவே வெள்ள அபாயம் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மீண்டும் அவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இயற்கை அனர்த்தம் ஏற்படக் கூடிய பிரதேசங்களில் குடியிருப்பவர்கள் முன் எச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களில் குடியிருப்பது அவசியம் என மாத்தளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ காரியாலயம் பொறுப்பதிகாரி ஐ. கே. ரணவீர தெரிவித்தார்.

தற்போது மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதையடுத்து பள்ளேபொல பிரதேச செயலாளர் பிரிவில் நாகன கிராமத்தில் ஆறு குடும்பங்களும் யடவத்த பிரதேச செயலாளர் பிரிவில் செலகம தோட்டத்தில் 15 குடும்பங்களும் பாதுகாப்புக் கருதி அவர்களின் உறவினர்களில் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு இடர்முகாமைத்துவ அமைச்சினால் அவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாத்தளை, யடவத்த, உக்குவளை, இரத்தோட்டை, அம்பங்கங்க கோறளை ஆகிய ஐந்து பிரதேச பிரிவுகளில் வெள்ளம், மண்சரிவு ஏற்படும் பிரதேசமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊவா சுழற்சி நிருபர்

மலையகத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக மலையகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வீதி போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மலையகத்திலுள்ள பல பாடசாலைகள் இன்று 12 மணிக்கு மூடப்பட்டுள்ளது.

பதுளை, ஹாலி எல்லை, பண்டாரவளை, தியத்தலாவை, பொறலந்தை, வெலிமடை பிரதேச பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் மண் சரிவும், வெள்ள அனர்த்தமும் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுமார் 32 குடும்பங்கள் வெள்ள அனர்த்தத்திற்குட்பட்டு அனர்த்த இடைத்தங்கல் முகாமிலுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

வெள்ளம் வடிந்த பகுதிகளில்

மீண்டும் வெள்ளம்

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

கிழக்கு மாகாணத்தில் மீண்டும் பெய்து வரும் அடைமழையினால் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் வடிந்து காணப்பட்ட அனைத்து பகுதிகளிலும் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி, கிறான் மற்றும் வவுனதீவு, வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி, காத்தான்குடி ஆகிய பகுதிகள் உட்பட ஏறாவூர் நகர், பட்டிப்பளை, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மீண்டும் தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியிருக்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1346.5 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ். சிவதாஸ் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதத்தின் முதலாம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை இம் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

ஜனவரி மாதத்தில் 8 ஆம் திகதியன்று 331.2 மில்லி மீற்றர் ஒருநாளுக்கான அதிக மழை வீழ்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

சமைத்த உணவு வழங்க நிதி ஒதுக்கீடு

களுவாஞ்சிகுடி குறூப் நிருபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு 850 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது.

275 நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 42295 குடும்பங்களைச் சேர்ந்த 165491 பேருக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது.

அதேவேளை மக்கள் இடம்பெயர்வின் போது ஏற்பட்ட அவசர செலவுகளுக்காக 5 இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டது.

அம்பாறை

அம்பாறை தினகரன் நிருபர், மருதமுனை தினகரன் நிருபர்

அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக பாரிய வெள்ள நிலமை ஏற்பட்டுள்ளதுடன் சுமார் 40 ஆயரம் ஏக்கர் வயல் நிலங்களும் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தொடரும் மழையினால் நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, காரைதீவு, அட்டாளைச்சேனை, ஒலுவில், அக்கரைப்பற்று, இறக்காமம், திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில் அடங்கலான அனைத்து பிரதேசங்களிலும் மமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொதுப் போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன.

அத்துடன் பாடசாலைகள், பொது நிறுவனங்கள் என்பன நேரகாலத்துடன் மூடப்பட்டன.

அம்பாறை சுழற்சி நிருபர்

அம்பாறையில் தொடரும் மழையால் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அனேகமான உள் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

மழை காரணமாக அலுவலகங்களுக்குச் செல்லும் அரச தனியார் உத்தியோகத்தர்களும், பாடசாலை, மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது இம்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் ஒரு வெள்ளம் ஏற்பட்டுவிடுமோ என அச்சமடைந்துள்ளனர்.

மழை காரணமாக அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாழ்ந்த பிரதேசங்கள் நீரில் மீண்டும் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வீதிகளில் அதிகமான மழை நீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

10500 குடும்பங்கள்

பொத்துவிலில் பாதிப்பு

பொத்துவில் தினகரன் நிருபர்

தொடர்ந்து பெய்யும் அடை மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பொத்துவில் பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள 27 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் 10500 குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக பொத்துவில் பிரதேச செயலாளர் யு. எல். நியாஸ் தெரிவித்தார்.

இதேவேளை பொத்துவில் பொலிஸ் பாதுகாப்பு பிரிவிற்குட்பட்டதும் லகுகல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்டதுமான ஹுலநுகயில் சோளன் சேனையில் பாதுகாப்பு பரனில் இருந்த நான்கு பேர் ஹெட்ஓயா, கள்ளமுனை ஆற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர். இதில் திருமணமாகி இரு மாதங்கள் ஆன புதுமணத் தம்பதியர் இருவராவார்.

பொத்துவில், வானிலை அவதான நிலைய அறிக்கையின்படி நேற்றிலிருந்து இன்று (2) 24 மணித்தியாலத்தில் 190.5 மில்லி மீற்றராகும். அக்கரைப்பற்றில் 144.4 மில்லி மீற்றர் மழையும் பெய்துள்ளதாக வானிலை அவதான நிலயைப் பொறுப்பாளர் எம். ஐ. ஏ நஹீம் தெரிவித்தார்.

சம்மாந்துறை மேற்கு தினகரன் நிருபர்

கட்டார் செரிட்டி அமைப்பின் நிதி உதவியுடன் சிறிலங்கா முஸ்லிம் எயிட் அமைப்பினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் செறிந்து வாழும் சம்மாந்துறை – 10 கிராம மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கிராம சேவை உத்தியோகத்தர் எம். இப்ரலெப்பை தலைமையில் நடைபெற்றது.

இந்நிவாரணப் பொதிகள் ஒவ்வொன்றும் 2500 ரூபா பெறுமதி வாய்ந்த அரிசி, சீனி பருப்பு, உட்பட பால் உணவு வகைகள் என்பன உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

அத்தியாவசியப் பொருட்களின் விலைக ளைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கை






அத்தியாவசியப் பொருட்களின் விலைக ளைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர்கள், அதிகாரிகள் மத்தியில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள்; அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கான காரணங்களைக் கண்டறிந்து தேசிய விவசாயிகளைப் பலப்படுத்தி அவர்களுக்கு நிவாரணம் வழங்கி இதற்குத் தீர்வு காணும் வேலைத் திட்டங்களை உடனடியாக முன்னெடுக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவது தொடர்பான குழுவின் அமர்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.இதன் போது அவ்வமர்வில் பங்கேற்ற அமைச்சர்கள், அதிகாரிகள் மத்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ச.தொ.ச. மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களுக்கூடாக மக்களுக்குக் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் இவ்வமர்வின் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது சந்தையில் நிலவும் அதிகரித்த மரக்கறி விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டது. குறிப்பாக மரக்கறி போக்குவரத்து நடவடிக்கைகளின் போது இடம்பெறும் சேதங்களைக் கட்டுப்படுத்துவதற்கான உபாயமாக பாதுகாப்பான கொள்கலன்களை விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரமானியங்களை மேலும் முறையாகப் பெற்றுக் கொடுப்பது சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் விவசாயிகளின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வது சம்பந்தமாகவும் ஜனாதிபதி உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.

அதேவேளை, மொத்த மற்றும் சில்லறை வர்த்தகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்குக் குறைந்த விலையில் மரக்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

அதேபோன்று, அண்மைக் காலமாக அதிகரித்து வரும் தேங்காய் விலையேற்றம் தொடர்பிலும் நேற்றைய அமர்வில் கவனம் செலுத்தப்பட்டது. தேங்காய் விலையேற்றத்தைத் தடுக்கும் வகையில் தெங்கு அபிவிருத்தி அமைச்சினூடாக மக்களுக்குக் குறைந்த விலையில் தேங்காயைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு ஜனாதிபதி வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.

அத்துடன், கடற்றொழில் கூட்டுத்தாபனம் மீனவர்களிடமிருந்து கொள்வனவு செய்யும் மீனின் தொகையை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இவ்வமர்வில் அமைச்சர்கள் பெஷில் ராஜபக்ஷ, மஹிந்த யாப்பா அபேவர்தன, எஸ்.பி. நாவின்ன, பி.தயாரத்ன, மஹிந்த சமரசிங்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஜகத் புஷ்பகுமார ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

சேனநாயக்க சமுத்திரத்தின் 5 வான் கதவுகள் திறப்பு மக்கள் பீதி






இங்கினியாகல சேனநாயக்க சமுத்திரத்தின் அணை உடைப்பெடுக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக அதன் ஐந்து வான் கதவுகள் நேற்றுக் காலை (02) திறந்துவிடப்பட்டன.

இங்கினியாகல பிரதேசத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள் ளது. இதனால், அணை உடைப்பெடுத்துப் பாரிய அனர்த்தம் ஏற்படுவதைத் தவிர்க்க வான் கதவுகள் அரையடி உயரத்திற்குத் திறக்கப்பட்டதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்தனர்.

வான் கதவுகள் திறக்கப்படுவது குறித்து, அந்தப் பிரதேசத்தின் மக்களுக்கு அறிவுறுத்தியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

வான்கதவுகள் திறக்கப்படுவதால் கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, இங்கினியாகல, தமண ஆகிய பிரதேசங் களின் தாழ்ந்த பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகுமென எச்சரிக்கப்பட்டது.

வான்கதவுகள் திறக்கப்படும் செய்தி காட்டுத்தீ போல் பரவியதனால் நேற்று அம்பாறை மாவட்டத்தில் பதற்றமும், பீதியும் நிலவியது. பல பொலிஸ் நிலையங்களிலும் எச்சரிக்கை ஒலிபரப்பு செய்யப்பட்டது. இச் செய்தியால் பாடசா லைகள், அலுவலகங்கள் யாவும் காலை 9.30 மணியுடன் இழுத்து மூடப்பட்டன. மக்கள் பாதுகாப்பான இடம் தேடிச் சென்றனர். சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் காலையில் 104 அடியாகக் காணப்பட்டது. அதனால் வான்கதவு திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, மாவடிப்பள்ளி கிட்டங்கி தாம்போதிகளில் மீண்டும் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. போக்குவரத்து துண்டிக் கப்பட்டுள்ளது. மண்டூர் வெல்லாவெளி வீதியில் 3 தாம்போதிகளுக்கு மேல் 4 அடிவெள்ளம் பாய்கிறது. நவகிரி நீர்ப்பாசனக்குளம் திறந்துவிடப்பட்டதே காரணமாகும். அதனால் அப்பகுதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளநிலைமை படுமோசமாக மாறுகிறது. அடைமழையும் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஆஸ்பத்திரிகளில் அரச ஊழியர்களுக்கு தனியான ‘வார்ட்’







சகல ஆஸ்பத்திரிகளிலும் அரசாங்க ஊழியர்களுக்கென தனியான ‘வார் டு’களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக வரவு செலவுத் திட்டத்தினூடாக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கான முதலாவது வார்டு மொனரா கலை தம்பகல்ல கிராமிய ஆஸ்பத் திரியில் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு இந்த வார்ட் நாளை ஊவா மாகாண முதலமைச்சர் சடுந்ர ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படும் என தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதிய தலைவர் சேனக அபேகுணசேகர கூறினார்.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் அரச ஆஸ்பத்திகளில் அரச ஊழியர்களுக்கான வார்டுகளை தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் நிர்மாணித்து வருகிறது. தம்பகல்ல ஆஸ்பத்திரி வார்ட் 25 இலட்சம் ரூபா செலவில் சகல வசதிகளுடன் கூடியதாக நிர்மாணிக்கப் பட்டுள்ளது.

இந்த வருடத்தில் குறைந்தது 20 ஆஸ்பத்திரிகளிலாவது அரச ஊழியர்களுக்கான வார்டுகள் நிர்மாணிக்க உள்ளதாகவும் சேனக அபேகுணசேகர கூறினார். தேசத்துக்கு மகுடம் கண்காட்சி நாளை முதல் 10ஆம் திகதி வரை புத்தலயில் நடைபெறுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கச்சத்தீவு ‘தானம்’ அரசு ஒப்பந்தம்- வரலாற்று பார்வை





தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையில் உள்ளது கச்சத்தீவு. ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தூரத்திலும், இலங்கையில் இருந்து 13 மைல் தூரத்திலும் இது அமைந்துள்ளது.

முன்பு இந்தத் தீவு ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. ஆனால், இது தங்களுக்கே சொந்தம் என்று சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை உரிமை கொண்டாடியது. இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயக் டெல்லி வந்திருந்த போது, பிரதமர் இந்திரா காந்தியுடன் இதுபற்றி பேச்சு நடத்தினார். கச்சத்தீவு பிரச்சினையில் உடன்பாடு காண்பது என்று அப்போது தீர்மானிக்கப்பட்டது.

“கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தம். அதை இலங்கைக்கு தரக்கூடாது" என்று தமிழக அரசு வலியுறுத்தியது. முதல்_அமைச்சர் கருணாநிதி பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்த போது, இதை வலியுறுத்தினார்.

ஆனாலும் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது என்று, மத்திய அரசு முடிவு செய்தது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு 28_6_1974 அன்று டெல்லியிலும், இலங்கையிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில், பிரதமர் இந்திராகாந்தி கையெழுத்திட்டார்.

கச்சத்தீவு 280 ஏக்கர் பரப்புள்ளது. கிழக்கு மேற்காக ஒரு மைல் நீளமும், தெற்கு வடக்காக அரை மைல் அகலமும் உள்ளது. அங்கு கிறிஸ்தவ கோவில் ஒன்று இருக்கிறது. ஆண்டுதோறும் கச்சத்தீவில் திருவிழா நடைபெறும்போது, இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும் கிறிஸ்தவர்கள் படகுகளில் செல்வார்கள்.

இரு தேசங்களையும் சேர்ந்த மீனவர்களும் கச்சத்தீவுக்கு சென்று மீன் பிடிப்பது உண்டு. அங்கு சற்று ஓய்வு எடுத்து, மீன் வலைகளை காய வைப்பது உண்டு. கச்சத்தீவில் குடிதண்ணீர் இல்லை என்பதால், அங்கு மக்கள் நிரந்தரமாக தங்குவதில்லை.

கச்சத்தீவு தானம் கொடுக்கப்பட்டது பற்றி “ராமநாதபுரம் ராஜா" ராமசேதுபதி நிருபர்களிடம் கூறுகையில், “மத்திய சர்க்காரின் முடிவு துக்ககரமானது. கண்ணீர் விட்டு அழுவது தவிர வேறு வழி இல்லை" என்று கூறினார். தமிழரசு கழக தலைவர் ம.பொ. சிவஞானம் கூறியதாவது:-

“கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தமானது. இலங்கைக்கு அதன் மீது பாத்தியதை கிடையாது. சரியாகச் சொன்னால் தமிழகத்தின் ஒரு பகுதியாகவே அதனை கருதவேண்டும். இலங்கைக்கு அதனை வழங்கியது, சர்வதேச அரசிய லில் இந்தியா பலவீனமாக உள்ளதையே காட்டுகிறது.

தமிழகம் இந்திய அரசால் எவ்வளவு அலட்சியமாக நடத்தப்படுகிறது என்பதற்கு, இதுவும் ஒரு எடுத்துக்காட்டாகும். மத்திய அரசின் முடிவை மாற்ற முடிகிறதோ இல்லையோ, அதனை எதிர்ப்பதன் மூலம் தன்னுடைய தன்மான உணர்வை தமிழகம் வெளிப்படுத்தவேண்டும்.

மேலும் எதையும் சொல்வதற்கு முன்பு தமிழக அரசின் கருத்து அறிய காத்து இருக்கிறேன்." இவ்வாறு ம.பொ.சிவஞானம் கூறினார்.

பிரதமர் இந்திரா காந்திக்கு தந்தி ஒன்றையும் அனுப்பினார்.

முன்னதாக “கச்சத்தீவு பிரச்சினை பற்றி உங்கள் கருத்து என்ன?" என்று பிரதமர் இந்திரா காந்தி எழுதிய கடிதத்துக்கு 1974 ஜனவரி 6_ந்தேதி (அதாவது 6 மாதங்களுக்கு முன்பு) முதல்_அமைச்சர் கருணாநிதி பதில் எழுதினார். அந்த கடித விவரம் வருமாறு:-

“கச்சத்தீவு பிரச்சினை குறித்து வெளிநாட்டு இலாகா செயலாளர் கேவல்சிங் என்னுடன் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து, எனது இலாகா அதிகாரிகள் கச்சத்தீவு பற்றிய ஆதாரங்களை சேகரித்தார்கள். கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக ஒருபோதும் இருந்ததில்லை என்று நிரூபிப்பதற்கு தேவையான ஏராளமான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன.

நெதர்லாந்து நாட்டு மன்னருக்கும், கேன்டி அரசருக்கும் இடையே 14_2_1766_ல் ஏற்பட்ட ஒப்பந்தம், டச்சு நாட்டிடம் இருந்த கடற்கரை பகுதிகள் இங்கிலாந்து அரசுக்கு மாற்றம் செய்யப்பட்ட ஒப்பந்தம், 17_3_1762_ல் ஜான் சுரூடர் என்பவர் எழுதிய நினைவுக் குறிப்புகள், டச்சு, போர்த்துகீசிய மன்னர் காலத்து வரை படங்கள் ஆகிய எல்லா குறிப்புகளும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை காட்டவில்லை.

1954_ம் ஆண்டு வெளியான இலங்கையின் வரைபடத்திலும் (“மேப்") கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக குறிக்கப்படவில்லை.

நீண்ட நெடுங்காலமாக தமிழ்நாட்டு கடற்கரை பகுதியில் முத்து குளித்தல், சங்கு எடுப்பு ஆகிய உரிமைகள் ராமநாதபுரம் ராஜா உள்பட தென்இந்திய மன்னர்களுக்கே உரித்தானது என்பதை வரலாற்று ஆதாரங்கள் காட்டுகின்றன.

கச்சத்தீவுக்கு செல்லும் பாதையிலும், கச்சத்தீவின் மேற்குபகுதி கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு இருந்தது என்பதைக் காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக, அவர் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்கு கப்பம் கட்டியது இல்லை.

இப்போது கிடைத்து இருக்கும் இந்த ஆதாரங்களைக் கொண்டு கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த அகில உலக கோர்ட்டிலும் எடுத்துக்கூறி நிரூபிக்க முடியும் என்று சென்னை சட்டக்கல்லூரியின் ஆராய்ச்சிப்பிரிவு கருத்து தெரிவித்து இருக்கிறது.

எனவே, இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு வரும்பொழுது இந்த ஆதாரங்களை எடுத்துக்காட்டி “கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமல்ல" என்று நிரூபிக்க முடியும் என்று எண்ணுகின்றேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கருணாநிதி குறிப்பிட்டு இருந்தார்.

கச்சத்தீவு தானம் வழங்கப்பட்ட விவகாரத்தில் தமிழக காங்கிரசாரிடையே பிளவு ஏற்பட்டது. மத்திய அரசின் முடிவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ராமையா, முன்னாள் முதல்_மந்திரி பக்தவச்சலம் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் சட்டசபை இ.காங்கிரஸ் தலைவரான ஏ.ஆர்.மாரிமுத்து, முதல்_அமைச்சர் கூட்டிய அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, “கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கக்கூடாது" என்ற தீர்மானத்தில் கையெழுத்து போட்டார். இதேபோல் மேல்_சபை இ.காங்கிரஸ் உறுப்பினர் ஆறுமுகசாமியும், தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட்டார்.

இந்திரா காந்தியுடன் இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயக்.
கச்சத்தீவை இலங்கைக்கு மத்திய அரசு தானம் செய்தது பற்றி விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை முதல்_அமைச்சர் கருணாநிதி கூட்டினார்.

இந்த கூட்டத்தில் பொன்னப்ப நாடார் (ப.காங்கிரஸ்), ஏ.ஆர்.மாரிமுத்து (இ.காங்கிரஸ்), திருப்பூர் மொய்தீன் (முஸ்லிம் லீக்), அரங்கநாயகம் (அ.தி.மு.க.), வெங்கடசாமி (சுதந்திரா), ஈ.எஸ்.தியாகராஜன் (தமிழரசு கழகம்), ஏ.ஆர்.பெருமாள் (பார் வர்டு பிளாக்), மணலி கந்தசாமி (தமிழ்நாடு கம்ஸி னிஸ்டு), ம.பொ. சிவஞானம் (தமிழரசு), ஜி.சாமி நாதன் (சுதந் திரா), அப்துல் வகாப் (முஸ்லிம் லீக்), ஆறுமுகசாமி (இ.காங்.), சக்தி மோகன் (பா.பிளாக்), ஏ.ஆர். தாமோதரன் (ஐக்கிய கட்சி) ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

வ.கம்ஸினிஸ்டு பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. எஸ்.எஸ்.ராம சாமி படையாச்சி (உழைப்பாளர் கட்சி) வந்த கார், வழியில் பழுதடைந்ததால் கூட்டத்துக்கு அவரால் வரமுடியவில்லை. ஆயினும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஆதரிப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.

தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன் அ.தி.மு.க. பிரதிநிதி வெளிநடப்பு செய்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான வாசகம் வருமாறு:-

“இந்தியாவுக்குச் சொந்தமானது என்று நாம் கருதுவதும், தமிழ்நாட்டுக்கு நெருக்கமான உரிமை கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவை இந்தக் கூட்டம் விவாதித்து, தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதோடு மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தை திருத்தி அமைத்து தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது."

மேற்கண்டவாறு தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானம், பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதல்_அமைச்சர் கருணாநிதி நிருபர்களிடம் கூறினார். அவர் மேலும் சொன்னதாவது:-

“கூட்டத்துக்கு வந்திருந்த எல்லா கட்சித் தலைவர்களும் தீர்மானத்தில் கையெழுத்துப் போட்டு ஒப்புதல் தெரிவித்து இருக்கிறார்கள். அ.தி.மு.க. பிரதிநிதி, தீர்மானத்தில் கையெழுத்து போட மறுத்துவிட்டு போய்விட்டார். கச்சத்தீவு பிரச்சினையில் தமிழ்நாடு அரசு ராஜினாமா செய்யவேண்டும் என்று தீர்மானம் போடும்படி அவர் சொன்னார். அது ஏற்றுக்கொள்ளப்படாததால், வெளியேறினார்.

இ.காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிக்காரர்களும் கொடுத்த திருத்தங்களை ஏற்றுத்தான் இந்த தீர்மானம் முடிவு பெற்று இருக்கிறது."

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று ஜனசங்க தலைவர் வாஜ்பாய் அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு ஜனசங்க செயலாளர் கே.கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்தார்.
மேலும் இங்கே தொடர்க...