28 ஜனவரி, 2010


மேலும் இங்கே தொடர்க...
வெற்றிபெற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் வாழ்த்து-

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக கூறியுள்ள பிரதீபா பட்டேல், தனது வாழ்த்துச் செய்தியில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின்கீழ் இலங்கை மிக வேகமாக முன்னேற்றமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் இலங்கைக்கிடையில் வரலாற்றுரீதியாக மிக நெருங்கிய நட்பு காணப்படுவதாக கூறிய அவர், இலங்கையுடனான அனைத்து உறவுகளும் மேலும் வலுவடைய இந்தியா உறுதியாகவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இருநாட்டு மக்களும் பயன்பெறும் வகையில் இலங்கையுடன் இணைந்து வளர்ச்சிப் பணிகளில் பணியாற்ற இந்தியா தயாராகவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் கட்சி முகவராக செயற்பட்டவரின் தந்தையின் கடைக்கு தீவைப்பு-

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கடையொன்றுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.00மணியளவில் இந்த தீவைப்பு இடம்பெற்றுள்ள நிலையில் பெறுமதியான பொருட்களுடன் கடை முற்றாக எரியுண்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கடையின் உரிமையாளர் ஏறாவூர் பொலீசில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இதுபற்றி ஏறாவூர் பொலீசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடையின் உரிமையாளரின் மகன் தேர்தலன்று கட்சியொன்றின் முகவராக செயற்பட்ட நிலையில் ஏற்பட்ட விரோதமே இச்சம்பவத்திற்கு காரணமென்று அப்பகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டு. மாநகரமேயர் சிவகீதா பிரபாகரனின் இல்லம்மீது தாக்குதல்-

மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீதா பிரபாகரனின் உத்தியோகபூர்வ இல்லத்தின்மீது நேற்று கிரனேட் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதனால் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவு மற்றும் முன்பகுதி என்பன சேதமடைந்துள்ளன. இதேபோன்று மேயருக்கு சொந்தமான வீடு மற்றும் அவரின் கணவனின் வர்த்தகநிலையம் என்பனவும் நேற்று உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவங்கள் இடம்பெற்றபோது மேயர் சிவகீதாவோ அல்லது அவரின் குடும்பமோ அங்கு தங்கியிருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு மாநகரசபை மேயர் திருமதி சிவகீதா ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரித்து பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அவசியமென சரத்பொன்சேகா கோரினால் வழங்கத் தயார்-அரசு-

ஜெனரல் சரத்பொன்சேகா தனக்குப் பாதுகாப்பு அவசியமெனக் கோரும்பட்சத்தில் அவருக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கத் தயாரென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனை இன்று பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சரத்அமுனுகம செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவருக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எனினும் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த உத்தரவு நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறிள்ளார். இந்நிலையில் ஜெனரல் சரத்பொன்சேகா தனக்கு பாதுகாப்பு அவசியமென கோரும் பட்சத்தில் அவருக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கான இராணுவப் பாதுகாப்பு நீக்கம்-

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு வழங்கப்பட்டிருந்த வாகனங்களை மீளளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இராணுவப்பேச்சாளர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை மாலைமுதல் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு அகற்றப்பட்டது. இராணுவத்திலிருந்து விலகிச்சென்று அவருடன் இருந்த 09இராணுவ அதிகாரிகள் தற்போது இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ளனர். ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருந்த கவசவாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்களை மீளளிக்குமாறு கேட்டபோதும் இன்று நண்பகல்வரை அவை கையளிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருநாட்டு மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஏற்பாடு-

கடற்தொழிலில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தாம் இந்தியாவுடன் இணைந்து தீர்வு காணவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் இலங்கை கடலோர எல்லைப்பகுதிகளில் இருநாட்டு மீனவர்களுக்கிடையில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது ஏற்படும் பிரச்சினைகள் என்பவற்றுக்கு விரைவில் தீர்வு காணவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கான விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்தியக் கடல் எல்லையில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக இந்தியாவுடன் கலந்துரையாடி வருவதாகவும் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் 09ம்திகதி மீன்பிடிப்பதற்கென மன்னார் சிறுதோப்பு பகுதியிலிருந்து புறப்பட்டுச் சென்ற நிலையில் இந்திய கடல் எல்லையில் வைத்து இந்தியக் கடலோரக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருந்த இரு இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இலங்கைக் கடற்படையினரிடம் நேற்று கையளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலுக்கு இன்றுமுதலே தயாராவதாக அரசாங்கம் அறிவிப்பு-

இன்றுமுதலே அடுத்த பொதுத் தேர்தலுக்குத் தயாராவதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் அமைச்சர் சுசில் பிறேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளை இன்றுமுதல் ஆரம்பிக்க எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்துகொண்டு பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்ட எதிர்பார்த்துள்ளதாகவும், இதன்மூலம் நாட்டில் அரசியல் ஸ்திரநிலையை ஏற்படுத்தி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்வைத்துள்ள மகிந்த சிந்தனைத் திட்டத்தின் பிரகாரம் வளமானதும் சுபீட்சமானதுமான நாட்டை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஹோட்டலிலிருந்து சரத் வெளியேற்றம் : இந்தியாவிடம் உதவி கோரவும் முடிவு


ஜெனரல் சரத் பொன்சேகா நேற்றிரவு சினமன் லேக் வியூ ஹோட்டலிலிருந்து வெளியேறினார் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

அவரை இராணுவத்தினர் பாதுகாப்பாக அவரது இல்லத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால், தனக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு இந்தியாவிடம் உதவி கேட்க சரத் பொன்சேகா முடிவு செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தல் முடிவு வெளியான சிறிது நேரத்தில், சரத் பொன்சேகா தங்கியிருந்த ஹோட்டலை இராணுவம் முற்றுகையிட்டது.

இதனால், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சரத் பொன்சேகா அச்சம் தெரிவித்துள்ளார். மேலும் சிறிது காலத்துக்கு இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தங்கப் போவதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இது குறித்துக் கூறுகையில்,

"சரத் பொன்சேகா, பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அண்டை நாடான இந்தியாவின் தூதரக அதிகாரிகளை சந்தித்து, பொன்சேகாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கவிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
சக்திமிக்க நாடாக இலங்கையை கட்டியெழுப்ப கிடைத்த வெற்றி

அமைச்சர் மைத்திரிபால



சக்திமிக்க நாடாக இலங்கை யைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாட்டு மக்கள் பெற்றுக் கொடுத்துள்ள மாபெரும் வெற்றியதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரி பால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஈட்டியுள்ள வெற்றி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சிறிசேன; சரத் பொன்சேகா இத்தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால் இந்நாட்டில் இராணுவ ஆட்சியொன்றே அமைந்திருக்கும்.

அதனை நாட்டு மக்கள் ஒன்றிணைந்து தடுத்துள்ளார் கள். இந்த வெற்றியானது ஜன நாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்பதுடன் ஜனாதிபதிக்கு மட்டு மன்றி நாட்டுக்கும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி எனக் கூறுவதே பொருத்தமாகும்.

நாட்டு மக்கள் நன்றி மறவாத வர்கள். தாய் நாட்டைப் பயங்கர வாதத்திலிருந்து பாதுகாத்து சகலரு க்கும் சுதந்திரம் பெற்றுக்கொடுத்த மைக் காக நாட் டுத் தலைவனான ஜனாதிபதிக்கு நன்றிக் கடனாக இம்மாபெரும் வெற்றி யைப் பெற்றுக்கொடுத்துள்ளார்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
பட்டாசு கொளுத்தி மக்கள் ஆரவாரமாக கொண்டாட்டம்

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகப்படியான வாக்குகளால் அமோக வெற்றிபெற்றதையடுத்து நாடெங்கிலும் மக்கள் பட்டாசு கொளுத்தி, தேசியக் கொடிகளை ஏந்திய வண்ணம் மகிழ்ச்சி ஆரவாரங்களில் நேற்று ஈடுபட்டனர்.

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இத்தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார்.

இதனையிட்டு நாடெங்கிலும் மக்கள் பட்டாசு கொளுத்தி, இனிப்புக்கள் வழங்கி தேசிய கொடிகளை ஏந்தி அசைத்த வண்ணம் மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபட்டனர். மக்கள் சந்திக்கு சந்தி கூடி இருந்து றபான் அடித்து பாற்சோறு பரிமாறி மகிழ்ந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா, தேர்தல் ஆணையாளரை வீட்டு காவலில் வைத்துள்ளதாக கூறும் செய்தி பொய்யானது

அனுதாபம் தேட முயற்சிக்கிறார் பொன்சேகா - அமைச்சர் சமரசிங்க



எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவையும், தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவையும் வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் அரசாங்கம் அவற்றை முழுமையாக மறுப்பதாகவும் மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.

தனது தோல்வியை தாங்கிக் கொள்ள இயலாத பொன்சேகா சர்வதேச ஊடகங்கள் வாயிலாக பொய்ப் பிரசாரங்களைச் செய்து அனுதாபம் தேட முயல்கின்றார். இது போன்ற இழிவான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கு கலங்கத்தையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்த வேண்டாமெனவும் அமைச்சர் சமரசிங்க பொன்சேக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொன்சேகா வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை. அவர் நினைத்த நேரம் அந்த ஹோட்டலை விட்டு வெளியே செல்லலாம். ஒரு ஜனாதிபதி வேட்பாளரென்ற வகையில் பாதுகாப்பு வழங்குவதற்காக அவ்வீதியில் பாதுகாப்பு படையினர் சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர் அதனை தவறாக கருத்தில் கொண்டுள்ளதுடன் ஊடகங்களில் போலி பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்.

மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று மாலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையி லேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட் டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த், மைத்திரிபால சிறிசேன, ஜீ. எல். பீரிஸ், பாட்டளி சம்பிக்க ரணவக்க, அனுர பிரியதர்ஷன யாப்பா, ரிஷாட் பதியுதீன், விமல் வீரவன்ச எம்.பி, சட்டத்தரணி காலிங்க இத்ததிஸ்ஸ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜ பக்ஷ அமோக வெற்றியீட்டியிருப்பதனை புரிந்து கொண்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த சதிகார கும்பல், மேற்கூறியது போன்ற கட்டுக்கதைகளை குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள், இணையத் தளங்களினூடாக பரப்பி வருகின்றது.

அது மட்டுமன்றி எதிரணி வேட்பாளரும் கட்சித் தலைவர்க ளும் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். பொன்சேகாவை யாரும் வீட்டுக் காவலில் வைக்கவில்லை. அவர் இருப்பது வீடு அல்ல அது பல உள்நாட்டு வெளிநாட்டவர்கள் வந்து போகும் பிரபலமான ஹோட்டலாகும் என்றும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

எமக்கு கிடைத்த தகவலடிப்படையில் 26ம் திகதி மாலை 4.30 மணியளவில் பொன்சேகாவும் அவருடனிருந்த கட்சித் தலைவர்களும் மற்றும் ஆதரவாளர்களும் குறித்த ஹோட்டலிருந்த இரண்டு மாடிகளிலிருந்த 70 அறைகளை வாடகைக்கு அமர்த்தி தங்கியிருந்துள்ளனர். இவரை அரசாங்கம் அங்கே அழைத்து செல்லவில்லை. தானாக விரும்பியே அவர் அங்கு சென்றுள்ளார்.

குறித்த ஹோட்டல் அமைந்திருக்கும் பகுதி அதியுயர் பாதுகாப்பு வலையம் என்பது சகலரும் அறிந்ததே. ஹோட்டலுக்கு முன்பாகவே விமான படைத் தளம் அமைந்திருப்பதனால் எப்போதுமே அப்பகுதியில் படையினர் குவிக்கப்பட்டி ருப்பது வழமை.

அதேவேளை, இராணுவத்திலிருந்து தப்பி வந்த ஒன்பது பேர் ஆயுதங்களுடன் ஹோட்டலுக்குள் இருந்துள்ளனர். இவர்கள் குறித்த விபரங்கள் கிடைத்ததும் மேற்படி ஒன்பது பேரும் ஹோட்டலுக்கு வெளியே வரவழைக்கப்பட்டே கைது செய்யப்பட்டனர்.

இதன் காரணமாகவும் வழமைக்கு மாறாக பாதுகாப்புப் படை யினர் இப்பகுதியில் சேவைக்கு அமர்த் தப்பட்டுள்ளனர். இவற்றை காரணமாக காட்டி சர்வதேச நாடுகளிடம் அனுதாபம் தேட முயற்சிக்கிறார் பொன்சேகா எனவும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

19 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஜனாதிபதி அமோக வெற்றி


இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டியுள்ளார். சுமார் 20 இலட்சம் மேலதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறார். இதன் மூலம் நாட்டில் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காக மக்கள் அவருக்கு ஆணை வழங்கியுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 22 மாவட்டங்களுக்குள் 17 மாவட்டங்களில் 60 இலட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளைப் பெற்று 57.88 வீதத்தில் வெற்றியீட்டியிருக் கின்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜே.வி.பி., .தே.. கூட்டணியின் வேட்பாளரான சரத் பொன்சேகா 41 இலட்சத்து 73 ஆயிரத்து 185 வாக்குகளைப் பெற்று 40.15 விகிதத்தைப் பெற்றுள்ளார். ஐந்து மாவட்டங்களில் மாத்திரமே பொன்சேகா வெற்றி பெற்றிருக்கிறார். வடக்கு, கிழக்கில் இவருக்குக் கூடுதல் வாக்குக் கிடைத்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உட்பட 22 பேர் போட்டியிட்டனர். இலங்கை தேர்தல் வரலாற்றில் இவ்வளவுபேர் போட்டியிட்டது இதுவே முதற்தடவையாகும்.

நாட்டின் சனத்தொகையில் ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 50 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். நாடு முழுவதும் 11098 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்புக்கு மத்தியில் மக்கள் வாக்களித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. வாக்கெடுப்பு நிறைவின் பின்னர் மாலையில் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படலாமென்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த தையடுத்து எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. ஆங்காங்கே சிறு சிறு சம்பவங்கள் இடம்பெற்றபோதிலும் பாரிய வன்முறைகள் எதுவும் ஏற்படவில்லை.

முதலாவதாகத் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இரவு 10.30 மணியிலிருந்து வெளியிடப்பட்டன.

முதன்முதலில் இரத்தினபுரி மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு முடிவு வெளியானது. ஜே.வி.பி., .தே.. கூட்டணிக் கட்சியின் வேட்பாளராகத் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பூரண ஆதரவைப் பெற்றிருந்தும் முன்னாள் இராணுவத் தளபதி படுதோல்வியைத் தழுவினார்.

ஜே.வி.பி.யினதும், .தே..வினதும் கோட்டைகளாக விளங்கிய பல முக்கிய பிரதேசங்களிலும் ஜனாதிபதி மஹிந்த அமோக வெற்றியீட்டினார். ஜே.வி. பி.யின் கோட்டையான திஸ்ஸமஹராம, .தே..வின் கோட்டையான மீரிகம ஆகிய பிரதேசங்களையும் அவர்களின் கூட்டணி கோட்டை விட்டுவிட்டது.

தெவிநுவர தொகுதியில் 19, 209 மேலதிக வாக்குகளைப் பெற்றும், பலப்பிட்டிய, அம்பலாங்கொடை, மொனறாகலை, கலவான, புளத்சிங்கள, கெகிராவ, அநுராதபுரம், மேற்கு, மத்துகம, மூதூர், தெனியாய, எகலியகொட உள்ளிட்ட தொகுதிகளிலும் ஜனாதிபதி கூடுதல் மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டியதுடன், திஸ்ஸமஹராமவில் 34055 மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டியுள்ளார்.

மேலும் அகலவத்தையில் 23600 மேலதிக வாக்குகளாலும், கம்புறுபிட்டியவில் 45649 மேலதிக வாக்குகளாலும், கரந்தெனியவில் 24000 மேலதிக வாக்குகளாலும் வெற்றிபெற்றதுடன், சில இடங்களில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளால் வெற்றியீட்டினார்.

அதேநேரம் 527 போன்று மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வத்தளை தொகுதியில் ஜனாதிபதி வெற்றியீட்டினார். குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பகுதிகளிலும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா - நுவரெலியா தொகுதியிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறவில்லை.

எனினும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மங்கள சமரவீர, சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க ஆகியோரின் தொகுதிகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெரும்பாலான தொகுதிகளில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார்.

கண்டி தொகுதியில் 54.16 வீதமும், கொழும்பில் 52.93 வீதமும், களுத்துறையில் 63.06 வீதமும், குருநாகலையில் 63.08 வீதமும், அம்பாந்தோட்டையில் 67 வீதமும், இரத் தினபுரியில் 64 வீதமும், பொலன்னறுவையில் 65 வீதமும், மாத்தறை தொகுதியில் 60 வீதமும் பெற்று பெருவெற்றியீட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...