15 ஜூன், 2011

மதவாச்சி - தலைமன்னார் ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பம்



மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையிலான ரயில் பாதைகள் அமைப்பதற்கான வேளைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக கடந்த காலத்தில் ரயில் பாதைகள் அமைக்கப்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டு தற்போது அப்பாதைகள் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன.

இதேவேளை ரயில் பாதைகளுக்கான தண்டவாலங்களும் கொண்டு வரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

மன்னார் தீவுப்பகுதிக்குள் முதல் கட்டமாக மன்னார் தோட்டவெளி கிராமத்தில் பயணிகள் தரிப்பிடம் மற்றும் ரயில் தரிப்பிடம் ஆகியவை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கில் ரயில் சேவையினை மேற்கொள்ளுவதற்காக போக்குவரத்து அமைச்சு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பின்லேடன் குறித்து சிஐஏக்கு தகவல் அளித்தவர்கள் கைது

அல் காய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன்னரே அவரைப்பற்றி சிஐஏக்கு தகவல் அளித்தவர்களை பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ கைது செய்தது தெரியவந்துள்ளது.

பின்லேடன் தங்கி இருந்த மாளிகையை கண்காணிப்பதற்காக அமெரிக்க உளவுத்துறை சிஐஏ வாடகைக்கு எடுத்திருந்த வீட்டின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவராவார்.

பின்லேடனை அமெரிக்கா கொல்வதற்கு முன்பாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் பாகிஸ்தானியர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக "நியூயார்க் டைம்ஸ்" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பின்லேடன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பாக, சிஐஏக்கு தகவல் அளித்தவர்கள் எனக் கருதப்படும் 5 பேர் ஐஎஸ்ஐயால் கைது செய்யப்பட்டனர் என்று பாகிஸ்தானில் உள்ள மேற்கத்திய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் நிலை என்னவாயிற்று என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் பாகிஸ்தான் இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை சந்திக்க இஸ்லாமாபாதுக்கு கடந்த வாரம் வந்திருந்த சிஐஏ இயக்குநர் லியோன் பெனட்டா இந்த விவகாரத்தை எழுப்பியதாகவும் அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

21.வது தியாகிகள் தினம் .சுவிஸ்

அழிந்து போன மிருகங்களால்?(புலிகளால்) கொலை செய்யப்பட்ட மா மனிதர்களில் ஒருவர்
தோழர் திரு.பத்மநாபா
மேலும் இங்கே தொடர்க...

இன்றிரவு பூரண சந்திரகிரகணம்



இன்று இரவு பூரண சந்திர கிரகணம் ஏற்படும் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று இரவு 11.52 மணிக்கு ஆரம்பமாகும் கிரகணம் அதிகாலை 3.32 மணிக்கு முடிவடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கிரகண அதிபதியாக சந்திரன் வருவதால், கிரகணத்துக்குப் பிறகு வரும் காலத்தில் சூறாவளி காற்று வீசும்; நல்ல மழை பெய்யும் எனவும் கூறப்படுகிறது. இன்றைய சந்திரகிரகணத்தை 21-ஆம் நூற்றாண்டின், அடர் இருள் சந்திர கிரகணம் என்கின்றனர். இதே போன்ற சந்திரகிரகணம் 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் திகதி ஏற்பட்டது.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது நிகழ்வதே சந்திர கிரகணம். பூமியின் நிழலானது சந்திரனின் மீது விழுவதால், அது மறைக்கப்படுகிறது. அடுத்து இதே போன்ற அடர் சந்திரகிரகணம் 2141 ஆம் ஆண்டு ஏற்படும் என்றும் இந்திய வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை

நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக் குழுவின் இறுதி பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்று ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மக்களிடமிருந்து பெறப்பட்ட சாட்சிகள், அவதானிப்புக்கள் மற்றும் நிபுணர்களின் யோசனைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இறுதி அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே உயர் அதிகாரி மேற்கண்டவாறு கூறினார்.

ஆணைக்குழுவின் உயர் அதிகாரி இது தொடர்பில் மேலும் கூறுகையில், நல்லிணக்க ஆணைக்குழு தற்போது சாட்சியங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை அரைவாசிக்கும் மேற்பட்ட சாட்சியங்கள் ஆய்வு செய்யப்பட்டு விட்டன.

இந்நிலையில் இவ்வருடம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும். அதாவது ஏற்கனவே மே மாதம் 15 ஆம் திகதி இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க ஏற்பாடாகியிருந்தது. எனினும் அதிகமான சாட்சியங்களை ஆய்வு செய்ய வேண்டியிருந்ததால் ஆறு மாத கால நீடிப்பு கோரப்பட்டது.

அந்த வகையிலேயே நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கையை சமர்ப்பிக்க ஏற்பாடாகியுள்ளது. மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட சாட்சியங்கள் அவதானிப்புக்கள் மற்றும் நிபுணர்களிடம் பெறப்பட்ட யோசனைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இறுதி அறிக்கை தயாரிக்கப்படும் என்றார். நல்லிணக்க ஆணைக்குழு கொழும்பிலும் வெளி மாவட்டங்களிலும் அதிகளவிலான விசாரணை அமர்வுகளை கடந்த காலங்களில் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் தீர்வில் அரசாங்கத்தின் இழுத்தடிப்பானது பாரதூரமான பின்விளைவுகளையே தோற்றுவிக்கும் :ஐ.தே.க. எச்சரிக்கை





வடக்கு கிழக்கு பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள சர்வதேசம் அழுத்தத்தையும் பிரயோகித்து வருகின்றது. இந்தியா உட்பட உள்நாட்டு தமிழ் சிங்கள அரசியல் கட்சிகளும் இதே நிலைப்பாட்டில் உள்ளன. ஆனால், இவ்விடயத்தில் அரசாங்கத்தின் இழுத்தடிப்புக்கள் பாரதூரமானதும், பயங்கரமானதுமான பிரச்சினைகளையே உருவாக்கப் போகின்றன என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்க் கட்சிகளுடனும் இந்தியாவுடனும் நடத்தப்படுகின்ற பேச்சுக்களின் உண்மைத்தன்மை என்னவென்று இதுவரையில் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ள அக்கட்சி அரசியல் தீர்வினை இழுத்தடித்து இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் விரிசலை ஏற்படுத்திவிட முயற்சிக்காது அணுகுமுறைகளைக் கையாளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் கூறுகையில்,

வெற்றி கொள்ளப்பட்ட யுத்தத்தை வைத்து அரசாங்கம் இன்று அரசியல் இலாபம் தேடிக் கொண்டிருக்கின்றது. எமது நாட்டில் உள்ள பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் விடயத்தில் உள்நாட்டில் ஒன்றும் சர்வதேசத்துக்கு வேறொன்றும் அரசாங்கத்தினால் கூறப்பட்டு வருகின்றது. தருஸ்மன் அறிக்கையைக் காரணம் காட்டி ஐ.நா.வுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்ட அரசாங்கம் உண்ணாவிரதம் இருந்தும் தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியது.

நிலைமை இவ்வாறிருக்க அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கின்ற ராஜித்த சேனாரத்ன தனது கூட்டமொன்றில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக வருகின்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் போது சாரத்தை உயர்த்திக் கொண்டு கத்துவதில் பயனில்லை என்றும் இவ்விடயத்தை மூளையைப் பாவித்து அணுக வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதேவேளை, அரசாங்கத்தின் பங்காளியான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாஸ அமரசேகர தனது செவ்வியொன்றில் கூறுகையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைக் கூட்டி மக்கள் மத்தியில் ஒருவித அச்சத் தன்மையைத் தோற்றுவித்துள்ள அரசாங்கம் நாட்டு மக்களின் அனுதாபத்தைப் பெற்றுக்கொள்ளவே முயற்சிக்கின்றது என்று கூறியுள்ளார்.

உண்மையில் அவர் கூறியதுதான் உண்மை. இதனைத்தான் ஐக்கிய தேசியக் கட்சியும் கூறி வருகின்றது. எந்தவொரு இலங்கையரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான சட்டம் இல்லை. அதற்கான வழிவகைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் இங்கு தருஸ்மன் அறிக்கையைக் காரணம் காட்டி பொய்யான பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

உண்மைத்தன்மை தெரியாது

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அங்கு உயர் மட்டத்துடன் பேச்சு நடத்தி பின்னர் கூட்டு இணக்கப்பாட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டதாக கடந்த வாரத்தில் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் இந்த இணக்கப்பாட்டு அறிக்கையின் பிரகாரம் வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி, அரசியல் தீர்வு மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் இந்தியாவிடம் இலங்கையை தாரைவார்ப்பதற்கு அல்ல, இலங்கையின் அபிவிருத்தியில் இந்தியாவின் பங்களிப்பையே அதில் வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். எனினும் இந்த இணக்கப்பாட்டு அறிக்கையின் உண்மைத் தன்மை என்னவென்று எவருக்கும் தெரியாது. இந்த அறிக்கை தொடர்பில் எமக்கு பாரிய கேள்வியாக இருக்கின்றது.

பேச்சுக்கள் இடம்பெறுகின்றன

தமிழர் பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் அரசாங்கம் வடக்கின் தமிழ்க் கட்சிகளுடன் பேசி வருகின்ற அதேவேளை இந்தியாவுடனும் பேச்சு நடத்தி வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை வந்திருந்த இந்திய உயர் மட்ட தூதுக்குழுவுடன் அரசு பேச்சு நடத்தியது. உண்மையில் இந்த பேச்சுவார்த்தைகளில் வெளிப்படைத் தன்மை இல்லாதிருக்கின்றது.

13 பிளஸ் என்று முன்னர் கூறிய அரசாங்கம் தற்போது பொலிஸ் காணி அதிகாரம் இல்லையென்றும் இது தொடர்பில் சர்வ கட்சிக் குழுவொன்றினை அமைக்கப் போவதாகவும் கூறியிருக்கின்றது.

வீணடிக்கும் செயல்

அரசியல் தீர்வு விவகாரத்துக்காக இதற்கு முன்னரும் இவ்வாறு பல குழுக்கள் அமைத்து ஆராயப்பட்டன. இறுதியில் அவை ஒன்றுமில்லாமையாகிவிட்டன. ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் அரசியல் தீர்வை முன்வைக்கும் விடயத்துக்காக சர்வகட்சிக்குழு அமைக்கப்படும் திட்டமானது காலத்தை வீணடிக்கும் செயலாகும். இதில் நம்பிக்கை கொள்ள முடியாது. அவ்வாறு அமைக்கப்படுகின்ற குழு அர்த்தமுடையதாகவும் அமையாது.

அழுத்தம் அதிகரிப்பு

இதேவேளை, நியாயமான அரசியல் தீர்வினை முன்வைக்குமாறு வடக்கின் தமிழ்க் கட்சிகள் மட்டுமன்றி உள்நாட்டு அரசியல் கட்சிகளும் இந்தியாவும் சர்வதேசமும் தமது அழுத்தத்தை அதிகரித்திருக்கின்றன. இந்நிலையில் அரசாங்கம் இவ்வாறு இந்த பிரச்சினையை இழுத்தடித்து வருவதானது எங்கு சென்று முடியும் என்று தெரியாதுள்ளது. அரசாங்கத்தின் இந்த போக்கு உள்நாட்டையும், உலக நாடுகளையும் ஏமாற்றுகின்ற செயற்பாடாகும்.

நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம்

இந்தியாவுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற தமிழர் பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் இழுத்தடிப்புக்களையும் ஏமாற்றுக்களை மேற்கொண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகளில் நெருக்கடியை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றது.

கடமையும் பொறுப்பும்

யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் தமிழ் மக்களின் உரிமைகளையும் அவர்களுக்கான அரசியல் தீர்வினையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் இருக்கின்றது. பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் பாரிய வெற்றியை ஈட்டியிருக்கின்றோம். அதே போல் நாட்டின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். யுத்த வெற்றியை வைத்துக்கொண்டு அதில் அரசியல் இலாபம் தேட வேண்டாம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இன்று பொசன் பெளர்ணமி தினம்: அநுராதபுரம், மிஹிந்தலையில் வைபவங்கள்: 15 இலட்சம் பக்தர்கள் வருவரென எதிர்பார்ப்பு

பொசன் பெளர்ணமி தினம் இன்றாகும். இதனையிட்டு அநுராதபுரம், மிஹிந்தலை பகுதிகளில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுமார் 15 இலட்சம் பக்தர்கள் இன்று அநுராதபுரத்திற்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் சுகாதார, குடிநீர், வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

திஸாவெவ, நுவரவெவ ஆகிய இரு குளங்களிலும் குளிப்பதற்கு அனுமதியளிக்கப்பட மாட்டாது. எனினும் பசவக்குளம், கும்பிச்சான்குளம், கனதராவ ஆகிய குளங்களில் நீராட முடியும்.

மேற்குறிப்பிட்ட குளங்களில் நீராடுவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நீராடுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இப் பகுதியில் அவசர உயிர்காப்பு பிரிவினரும் கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம், நகர், மிஹிந்தலை, அநுராதபுரம் புனித நகர் பகுதிகள் உட்பட போக்குவரத்து பாதுகாப்புக்கென சுமார் 4000 பொலிஸார் கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தம்புள்ள வீதி வழியாக வரும் வாகனங்களை நிறுத்துவதற்கும், புத்தளம் வீதி வழியாக வரும் வாகனங்களை நிறுத்துவதற்குமாக வெவ்வேறு வாகன தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திஸாவெவ, நுவரவெவ ஆகிய குளங்களிலிருந்து குடிப்பதற்காக நீர் எடுப்பதால் நீராடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

நகர சபையினர் குடிநீர் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நகருக்குள் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

ஜோர்தானில் இலங்கை யுவதிகள் பாலியல் வல்லுறவு விவகாரம்: விசாரணை நடத்துவதற்கு உயர் அதிகாரிகள் விரைவு

ஜோர்தானில் இலங்கை யுவதிகள் பாலியல் வல்லுறவுக்குட்பட்டதாக கூறப்படும் விடயத்தை விசாரணை செய்ய ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரையும் வெளிவிவகார அமைச்சின் பெண் அதிகாரி ஒருவரையும் அனுப்பி வைக்கவுள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா நேற்று தெரிவித்தார்.

ஜோர்தானிலுள்ள ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் கடமை புரியும் இலங்கை யுவதிகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு வருவதாக ‘உலக தொழிலாளர்கள் மனித உரிமைகள் நிறுவகம்’ சுட்டிக்காட்டியிருந்தது. இதனை ஆதாரமாகக் கொண்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த யுவதிகளை அந்த ஆடை உற்பத்தி தொழிற்சாலையிலுள்ள இலங்கை அதிகாரி ஒருவரே இவ்வாறு பாலியல் வல்லுறவை செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரகம் ஊடாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் போது இது நடந்ததாக கூறப்படும் சம்பவம் உண்மையல்ல என தெரியவந்துள்ளது.

ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் குறிப்பிட்ட ஆடை உற்பத்தி தொழிற்சாலைக்கு சென்ற போது இவ்வாறான முறைப்பாடுகள் எதனையும் அவர்கள் செய்யவில்லை.

சில வேளைகளில் உணவு தரமானதாக இல்லை. மற்றும் கொடுப்பனவுகள் தாமதமாகிறது போன்ற முறைப்பாடுகளையே செய்தனர்.

யுவதிகள் தங்களது பிரச்சினைகளை ஆண்களிடம் சொல்வதற்கு சில வேளைகளில் தயங்குவதுண்டு. இதனைக் கருத்திற்கொண்டு வெளிவிவகார அமைச்சின் பெண் அதிகாரி ஒருவரை அனுப்புவது என முடிவு செய்தோம்.

அத்துடன் ஜனாதிபதி புலனாய்வு பிரிவிலுள்ள உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரையும் விசாரணைக்காக அனுப்பவும் முடிவு செய்தோம்.

இந்த குற்றச்சாட்டை முன்வைத்த அரச சார்பற்ற நிறுவனத்திடமும் நாம் ஆதாரங்களை கேட்டிருக்கிறோம். அவர்கள் மீண்டும் எதிர்வரும் 17, 18 ஆம் திகதிகளில் இந்த ஆடை உற்பத்தி தொழிற்சாலைக்கு செல்கின்றனர். அவர்களுடனேயே எமது குழுவினரும் செல்லவுள்ளனர். என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...