23 மே, 2011

பின்லேடனை கொன்றதையொத்த நடவடிக்கை மீண்டும் பாகிஸ்தானில் முன்னெடுக்கப்படலாம்: ஒபாமா

பாகிஸ்தானின் போராளிக் குழுத் தலைவர் இன்னொருவர் இருப்பது கண்டறியப்பட்டால் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை கொல்வதற்கு முன்னெடுக்கப் பட்டதை யொத்த இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார்.

தனது ஐரோப்பிய விஜயத்தை முன்னிட்டு "பிபிசி' செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானிலோ அல்லது ஏனைய இறைமையுள்ள பிராந்தியமொன்றிலோ அல் கொய்தாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரோ அல்லது தலிபான் தலைவர் முல்லாஹ் ஓமரோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என பராக் ஒபாமாவிடம் வினவப்பட்ட போது அமெரிக்கா தேவைப்பட்ட நடவடிக்கையை எடுக்கும் என ஒபாமா தெரிவித்தார்.

""அமெரிக்காவை பாதுகாப்பது தான் எமது வேலையாகும்'' நாங்கள் பாகிஸ்தானின் இறைமைக்கு மிகுந்த கௌரவமளிக்கின்றோம். ஆனால் எமது மக்களையும் எமது நட்புறவு நாடுகளிலுள்ள மக்களையும் கொல்வதற்கு எவராவது திட்டமிடுவதை எம்மால் அனுமதிக்க முடியாது'' எனக் கூறிய பராக் ஒபாமா எமது நடவடிக்கையை மீறி இத்தகைய செயற்றிட்டங்கள் செயலுருவம் பெறுவதை நாம் அனுமதிக்க முடியாது'' என வலியுறுத்தினார்.

சவூதி அரேபியாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒசாமா பின்லேடன் அமெரிக்க விசேட படையினரால் பாகிஸ்தானின் அபோதாபாத்திலுள்ள வசிப்பிடத்தில் வைத்து கொல்லப்பட்டார் என்பது தெரிந்ததே .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக