13 அக்டோபர், 2009

இலங்கைக்கு எம்பிக்கள் குழு, தமிழர்களை ஏமாற்றும் முயற்சி: ஜெயலலிதா

http://www.tamilnet.com/img/publish/2006/03/VaikoJeya_51532_front.jpg
இலங்கைக்கு எம்பிக்கள் குழுவை அனுப்பியது தமிழர்களை ஏமாற்றும் முயற்சி என அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.இது குறித்து சென்னையில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கைக்குச் சென்றுள்ள நாடாளுமன்றக்குழு அனைத்துக் கட்சிக் குழு அல்ல என்பதால்தான் அதில் சேர்ந்துகொள்ள எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு அளிக்கப்படவில்லை என்பதை முரசொலி கேள்வி-பதில் அறிக்கை மூலம் முதல்வர் கருணாநிதி ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தக் குழு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ குழு என்று நினைத்து இலங்கை அதிபர் ராஜபக்ஷே ஏமாந்து இருக்கிறார்.இலங்கை சென்றுள்ள 10 அரசியல்வாதிகளின் சுற்றுப்பயண முடிவு எப்படி இருக்கும் என்பதை எளிதில் யூகித்துக் கொள்ள முடியும். இலங்கை அரசின் அடக்குமுறை எந்த தமிழர் பகுதியில் மிகக் குறைவாக இருப்பதாக தோற்றம் அளிக்கிறதோ, அங்கு தான் இந்தக் குழுவினர் அழைத்துச் செல்லப்படுவார்கள்.ராஜபக்ஷேவின் சிங்களப் பெரும்பான்மை அரசால் தேர்வு செய்யப்படும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடம் மட்டுமே அவர்கள் கலந்துரையாட முடியும். இலங்கை அரசின் பாதுகாப்பிற்குட்பட்ட ஏதாவது ஒரு முகாமில் உள்ள, அரசால் அச்சுறுத்தப்பட்ட சில தமிழர்களை இந்தக் குழுவினர் பேட்டி காண ஏற்பாடு செய்யப்படும். இந்தக் குழு திரும்பி வந்தவுடன் கருணாநிதியிடம் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்கும். இலங்கை அரசு கிட்டத்தட்ட நான்கு லட்சம் இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அணிக்கும் பணியை மனப்பூர்வமாக செய்ய முயற்சித்து வருவதாக இந்தக் குழு தெரிவிக்கும். சில குறைபாடுகள் இருக்கின்றன என்றும், மிகப் பெரிய பிரச்சினையை கையாளும் போது இது போன்ற குறைபாடுகள் ஏற்படுவது சகஜம் தான் என்றும் இந்தக் குழுவினர் ஒப்புக் கொள்வார்கள். தன்னால் எந்த அளவுக்குச் சிறப்பாகச் செய்ய முடியுமோ அதைச் செய்வதாக ராஜபக்ஷே உறுதி அளித்ததாகவும், கருணாநிதியின் நிர்வாகத் திறமையையும், தொலைநோக்குப் பார்வையையும் ராஜபக்ஷே புகழ்ந்ததாகவும் தெரிவிப்பார்கள். இதன் மூலம், ஒட்டுமொத்தத் தமிழினத்தை ஏமாற்றிவிடலாம் என்று நம்புகிறார்கள். ஆனால், தமிழர்களின் ஐம்பது ஆண்டு கால சுய நிர்ணயப் போராட்டம் என்னவாகும்? ‘சிங்களர்கள் மட்டும் என்ற கொள்கை மற்றும் தங்கள் சொந்த மண்ணிலேயே தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்பட்ட கேடு விளைவிக்கக் கூடிய முறையான தரப்படுத்துதல் ஆகியவை என்னவாகும்? இதனை வருங்கால தலைமுறையினரும்மன்னிக்க மாட்டார்கள், தமிழர் உரிமைக்காக தங்கள் உயிரை ஈந்தவர்களின் ஆன்மாக்களும் மன்னிக்காது. இவ்வாறு ஜெயலலிதா தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
ஒரே நேரத்தில் 18 நாடுகளில் நாளை சுனாமி முன்னெச்சரிக்கை


இந்து சமுத்திரத்திலுள்ள 18 நாடுகளில் நாளை ஒரே நேரத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.

உலக பேரழிவு குறைப்பு தினத்தை முன்னிட்டு அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் நாளை காலை 6.30 மணிக்கு சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன.

உலக அழிவுகளை குறைக்கும் தினத்தை முன்னிட்டு இந்தோனேஷியாவை மையமாகக் கொண்டு இந்த ஒத்திகை நடத்தப்பட உள்ளது. இந்த ஒத்திகையில் இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா, மலேசியா, அவுஸ்திரேலியா உட்பட 18 நாடுகள் பங்கேற்க உள்ளன.

இந்தோனேஷியாவில் இருந்து 18 நாடுகளுக்கும் ஒரேநேரத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட உள்ளது. அறிவித்தல் கிடைத்து எவ்வளவு நேரத்தில் சுனாமி எச்சரிக்கை குறித்த நாட்டை வந்தடையும்.

எவ்வளவு நேரத்தில் மக்களுக்கு அறிவிப்பது, எவ்வளவு நேரத்தினுள் மக்களை வெளியேற்றுவது என்பன குறித்தும் ஒத்திகைகள் இடம்பெற உள்ளதாக இடர்முகாமைத்துவ நிலைய தேசிய இணைப்பாளர் கீர்த்தி ஏக்கநாயக்க தெரிவித்தார்
இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்திலிருந்த 82 குடும்பங்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர்வு

மட்டு. மாவட்ட முகாமிலிருந்த 4 குடும்பங்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர்வு



இடைத்தங்கல் முகாம்களிலிருந்து மீள் குடியேற்றத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டு இரண்டு இடைத்தங்கல் முகாமில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டிருந்த 10 குடும்பங்களில் நேற்று மாலை 4 குடும்பங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சிங்கள மகாவித்தியாலயம் இடைத்தங்கல் முகாமில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் கொக்கொட்டிச்சோலை பிரதேசத்தைச் சேரந்த மூன்று குடும்பங்களும், செங்கலடிப் பிரதேசததைச் சேர்ந்த ஒரு குடும்பமும் என 4 குடும்ப உறுப்பினர்கள் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர். இவர்களைச் சிவில் அதிகாரிகள் பொறுப்பேற்று சொந்த இருப்பிடங்களுக்கு அழைத்துச் சென்று, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 11 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 127 குடும்பங்ளைக் கொண்ட 367 பேர் விடுவிக்கப்பட்டு குறித்த இடைத் தங்கல் முகம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 23 ஆம் திகதி முதல் இக்குடும்பங்கள் கட்டம் கட்டமாக மீள் குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.




இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வன்னி மக்கள் நேற்று திங்கள் அவர்களுடைய சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்தில் 175 குடும்பங்களைச் சேர்ந்த 518 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 82 குடும்பங்களை சேர்ந்த 229 பேர் மீள குடியமர்த்தப்பட்டிருப்பதாக மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.

இவர்களில் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 34 குடும்பங்களை சேர்ந்த 91 பேரும், முசலி பிரதேச செயலாளர் பிரிவுகுட்பட்ட பகுதியில் 07 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேரும், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேரும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது 93 குடும்பங்களை சேர்ந்த 389 பேர் இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
உடனடியான மீள்குடியேற்றத்தை தவிர அகதிகள் வேறு எதனையும்



கோரவில்லை: காங்கிரஸ் எம்.பி சுதர்சன நாச்சியப்பன்
வவுனியாவிலுள்ள முகாம்கள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அகதிகள் தங்குவதற்கான விதிமுறைகளுக்கு ஏற்ப ஓரளவு நெருக்கமாக அமைந்துள்ளன. அங்கு பாதுகாப்புக்காகவே முட்கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளன. அங்கு வாழ்கின்றவர்கள் தங்களை உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்களே தவிர, வேறெதனையும் கேட்கவில்லை என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக எம்.பி.க்கள் குழுவில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். இலங்கையில் உள்ளக இடம்பெயர்வுக்குள்ளான தமிழர்கள், பல்வேறு துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவிப்பதாக பல்வேறு தகவல்கள் தமிழகத்தில் பரப்பப்பட்டன. அந்த தகவல்கள் உண்மையானவையா? என்பதனை நேரடியாக கண்டறிவதற்கே வருகைதந்தோம் என்றும் அவர் சொன்னார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக எம்.பி.க்களை அவர்கள் மலையகத்திற்கு விஜயம் செய்கின்ற வேளையில் கேசரி நாளிதழுக்காக நேர்காணல் செய்வதற்கு முயற்சித்தோம், நெருக்கமான நிகழ்ச்சி நிரல் என்பதனால் ஒவ்வொரு வைபவத்திலும் ஐந்து, பத்து நிமிடங்களை மட்டுமே செலவழித்தனர். எனினும் அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கான விஜயத்தின் போது காலை உணவையும் உட்கொண்டு இரண்டொரு மணித்தியாலம் அங்கிருக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.

இவ்வாறான தொரு நிலையிலேயே காங்கிரஸ் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பனை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அவர் குறுகிய நேரத்திற்குள் கேசரி நாளிதழுக்காக வழங்கிய செவ்வியின் விபரத்தை கேள்வி பதிலாக தருகின்றோம்.

கேள்வி; இடம்பெயர்ந்த மக்கள் சிறைக்கூடங்களில் வாழ்கின்றனர். அது திறந்தவெளி சிறைச்சாலை, முட்கம்பிகளால் சூழப்பட்ட முகாம் என்றெல்லாம் கூறப்படுகின்றதே உங்களுடைய பார்வையில் எவ்வாறு இருக்கின்றது?

பதில்; சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பிற்காகவே முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன.

கேள்வி; முகாம்களுக்குள் செல்வதற்கு ஏதேனும் வரையறை விதிக்கப்பட்டனவா? அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மட்டுமே சந்தித்தீர்களா?

பதில்; சுதந்திரமாக சென்றோம், மக்களின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டோம். எங்களுக்கு வரையறை என்றொன்று விதிக்கப்படவில்லை, ஏன்? எங்களுக்கு வரையறை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா? யாரை சந்திக்கவேண்டும். சந்திக்க கூடாது என்று வரையறுக்கப்படவில்லை, எனினும் சில வைபவங்கள் நடைபெற்றன. அதில் சகலரும் பங்குபற்றவில்லை.

கேள்வி; முகாம்களின் நிலைமையில் திருப்தி கொள்கின்றீர்களா? அந்த மக்கள் உடனடி தேவை என்னவாக இருக்கின்றது?

பதில்; அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளோ? ஏனைய பொருள் உதவிகளோ? தேவையில்லை, உடனடியான தேவையாக அந்த மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தப்படல் வேண்டும் என்பதனையே அவர்கள் பிரதான கோரிக்கையாக முன்வைத்தனர்.

உடனடியாக மீளக்குடியர்த்தப்படல் என்பதனை தவிரவும் அவர்கள் எம்மிடம் எவ்விதமான உதவிகளையும் கோரவில்லை. முகாம்கள் சர்வதேச அளவில் அகதிகள் தங்குவதற்கான விதிமுறைகளுக்கு ஓரளவு நெருக்கமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.எவ்வாறெனினும் குறுகிய நிலப்பரப்பிற்குள் சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளமை வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாகும்.

கேள்வி; தமிழக எம்.பி.க்களின் தூதுக்குழுவை தமிழக அரசாங்கமோ? இந்திய அரசாங்கமோ? அனுப்பவில்லை என்றும் அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே இலங்கைக்கு சென்றிருப்பதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்திருகின்றாரே?

பதில்; அதில் தவறேதும் இல்லை. ஏனென்றால் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலைஞர் கருணாநிதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அதன் பின்னர் தமிழக எம்.பி.க்கள் முதலமைச்சரையும் சோனியா காந்தியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அழைப்பின் பிரகாரம் காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம், விடுதலைகள் சிறுத்தைகள் ஆகியன இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டன. ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அழைப்பை அவர்கள் கணக்கெடுக்கவில்லை. அதனால் நாம் பிரதிநிதிகளை நியமித்து புறப்பட்டோம்.

கேள்வி; தமிழகத்திலுள்ள எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே?

பதில்; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவனை பார்ப்பதற்கு அழைப்பு விடுக்க வேண்டிய தேவையில்லை, பார்க்கவிரும்பினால் விசா எடுத்துக்கொண்டு வரவேண்டியதுதான்?

கேள்வி; நோயாளியை பார்ப்பதாயின் மலையகத்திற்கு வந்ததன் நோக்கம்?

பதில்; மலையகத்திற்கு எங்களை வரவேண்டாம் என்று சொல்கின்றீர்களா? நாங்கள் வரக்கூடாதா? நிகழ்ச்சி நிரல் அப்படி அமைந்து விட்டது. நாங்கள் என்ன செய்வது?

கேள்வி; அப்படியாயின் கிழக்கிற்கான விஜயம் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லையா?

பதில்; நாங்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவிருக்கின்றோமா? இல்லையா? என்பது பற்றி எமக்கு எவ்விதமான அறிவிப்புகளும் கொடுக்கவில்லை. விமானம் தாமதித்ததனால் கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக எமக்கு கூறப்பட்டது.

கேள்வி; நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பீர்களா?

பதில்; நிகழ்ச்சி நிரல் எவ்வாறு இருக்கின்றதோ அதன் பிரகாரம் ஒவ்வொன்றும் நடைபெறும். ஆளும் தரப்பை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நான் அறிகின்றேன்.

கேள்வி; தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறான விடயங்களை ஆழ வலியுறுத்தின?

பதில்; உங்களுக்கு தெரிந்த விடயங்களை என்னிடம் மீண்டும் கேட்கின்றீர்களே? சில விடயங்களை நாம் அறிய வேண்டியிருக்கின்றது என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

கேள்வி; விஜயம் தொடர்பில் எவ்வளவு நாட்களுக்குள் அறிக்கையிடுவீர்கள்? யாரிடம் கையளிப்பீர்கள்?

பதில்; இது காலம் தாழ்த்தும் விடயமல்ல, உடனடியாகவே அறிக்கையிடப்படும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எம்.பி.க்களின் அறிக்கையை தமிழக முதல்வர் கருணாநிதியிடமே கையளிப்போம்.

கேள்வி; மலையகத்தை பற்றி ஏதாவது கூறவிரும்புகின்றீர்களா? .

பதில்; மலையகம் அருமையாக இருக்கின்றது, மாறிவருகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாற்றிவருகின்றது என்றார்.
வடக்கிலும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் : ஜனாதிபதி உறுதி



மக்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டதும் ஏனைய மாகாணங்களைப் போன்று அங்கும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமென யாழ். மாநகர சபைக்கு ஐ.ம.சு.மு. சார்பில் தெரிவான உறுப்பினர்கள் முன்னிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"இடம்பெயர்ந்திருக்கின்ற மக்களை மீளக்குடியமர்த்தி வருகின்றோம். அவர்களும் சொந்த இடம் செல்ல மிகுந்த விருப்பதுடன் இருக்கிறார்கள்.

கண்டபடி குரலெழுப்பும் சர்வதேச சமூகத்திற்கு ஏன் இவற்றைப் பெற்றுக் கொடுக்க முடியாது? எமது மக்களுக்கு அநியாயம் இடம்பெறக் கூடாது.

அவர்களை பாதுகாப்பது எம் பொறுப்பு மட்டுமல்ல; கடமையும் கூட. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்காகப் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை நாம் துரிதகதியில் முன்னெடுத்து வருகின்றோம்.

அதேவேளை, அவர்களது வாழ்வாதார தொழில்களை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

உங்களுடைய யாழ்ப்பாணம் மாநகர சபையானது இற்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. யாழ். மக்கள் பல ஆண்டுகளாக இம்மாநகர சபையினூடாக பல்வேறுபட்ட சேவைகளைப் பெற்றுள்ளனர்.

யாழ். மாநகர சபையின் நூல் நிலையமானது தெற்காசியவிலேயே சிறந்ததெனப் பெயர் பெற்றது.

மிகவும் அரிதான பல நூல்கள் அதில் இருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியினர் அதனை எரியூட்டினர். இது எதிர்கால பரம்பரையினருக்கே இழைக்கப்பட்ட மிகப் பெரிய அநியாயமாகும்.

கடந்த 30 வருடகாலமாக நாட்டில் நிலவிய பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக யாழ். மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகினர். எல். ரி. ரி. ஈ.யினரால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளை எல்லோரும் அறிவர்.

யாழ்ப்பாண மேயராகவிருந்த அல்பிரட் துரையப்பா புலிகளால் கொலை செய்யப்பட்டார். அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர். ஆனால், இன்று எமது மக்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை.

இன்று எமது நாட்டு மக்கள் எந்தவொரு பயமோ சந்தேகமோ இன்றி சுதந்திரமாக வாழ முடியும்.

யுத்தம் முடிவடைந்ததும் நாம் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நகர சபைக்கான தேர்தலை நடத்தினோம்.

வடக்கைச் சேர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டதும் யாழ்ப்பாணத்திலும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம்.

ஜனநாயகம் மீளவும் நிலைநாட்டப்பட வேண்டும். இடம்பெயர்ந்திருக்கும் மக்களை மீளக்குடியமர்த்தி வருகின்றோம். அவர்களும் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல மிகுந்த விருப்பத்துடன் இருக்கிறார்கள்.

அன்று தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். யாழ். தேவி ரயில் ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாணத்திற்கு சென்று வந்தது.

நாமும் அந்தக் காலத்தில் யாழ். தேவியில் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளோம். எமது தமிழ் நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக இருந்துள்ளோம்.

யாழ்.தேவி மீண்டும் தொடர்ச்சியான சேவையில் ஈடுபடுவதைப் பார்ப்பதற்காக வடக்கு மற்றும் தெற்கு மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

வடக்கின் பனை மரமும் தெற்கின் தென்னை மரமும் எப்படியாவது மீண்டும் ஒன்றிணையும். யாழ். மாநகர சபையின் உறுப்பினர்களாகிய நீங்கள் உங்களது பிரதேசங்களில் அபிவிருத்திகளை தொடர்ச்சி யாக முன்னெடுக்க வேண்டும்.

துப்பாக்கி கலாசாரம் மீண்டும் தலைதூக்காத வகையில் பொதுமக்களுக்கு சேவை வழங்கப்பட வேண்டும்.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் இதுவரையில் பெரும் எண்ணிக்கையிலான வேலைத் திட்டங்கள் முன்னெடு க்கப்பட்டு வருகின்றன.

கல்வி, விவசாயம், மீன்பிடி அபிவிருத்தி, சுகாதாரம், குடிநீர் வழங்கல், போக்குவரத்து உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் நாளுக்கு நாள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இளைஞர்களுக்கு நாளை வேலைத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்கு உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம்" என மேலும் தெரிவித்தார்
இலங்கை விஜயம் தொடர்பில் பாலு,கனிமொழி திருமாவளவன் கருத்துக்கூறுவதற்கு தயக்கம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக பாராளுமன்றக் குழுவினரை சந்தித்து, அவர்கள் பார்வையிட்ட அகதி முகாம்களின் நிலைவரங்கள் மற்றும் அவர்களின் கருத்துக்கள் குறித்து அறிய முயற்சித்த போதிலும், அது சாத்தியமான பயனை அளிக்கவில்லை. தமிழக எம்.பி.க்களின் தூதுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய முன்னாள் அமைச்சர் ரி.ஆர்.தங்கபாலுவை சந்தித்து பேச முயற்சித்த போதிலும் அது சாத்தியமான கிட்டவில்லை.

தமிழக முதல்வரின் மகளும் எம்.பி.யுமான கனிமொழியை அணுகியபோது அவர் ""நோ கொமன்ட்ஸ்'' என்று கூறி ஒதுங்கிக் கொண்டார். இலங்கை விவகாரத்தில் தமிழ் மக்களுக்கட தமிழகத்தில் அதிக குரல் கொடுத்தவரும் விடுதலை சிறுத்தைகள் அணியின் தலைவருமான திருமாவளவனைச் சந்தித்தப்போது அவரும் செவ்வியளிக்க மறுத்ததுடன், ஓரிரு வார்த்தைகளை கூறினால் அவர் கூறுகையில்,

முகாம்களில் இருக்கும் அகதிகள் தங்களை உடனடியாக மீளவும் தங்களுடைய சொந்த இடங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு எங்களிடம் கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையை இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவோம். இவ்விடயம் குறித்து இலங்கை அரசாங்கமும், இந்திய அரசாங்கமுமே தீர்மானிக்கும் என்றார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் முகாம்களிலுள்ள மக்கள், தமிழக எம்.பி.க்கள் குழுவிடம் விடுத்த கோரிக்கை என்ன? அதனை இந்தக் குழு விரைவாக நிறைவேற்றிக் கொடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று கேட்டபோது, முகாம்களை அவதானித்தோம். நேரில் கண்டதை மிக விரைவில் அறிக்கையிட்டு தமிழக அரசாங்கத்தின் ஊடாக இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவோம்.

முகாம்களில் வாழ்கின்ற மக்கள் நிவாரணப் பொருட்களைக் கேட்க வில்லை. தமது சொந்த மண்ணில், சொந்த வீட்டில் வாழ்வதற்கே விரும்புகின்றனர் என்றார். மேலும் அவரிடம் விபரம் அறிய முயன்றபோது, மேலதிக விபரங்களை தொலைபேசியூடாக தெரிவிப்பதாக கூறி அதன் இலக்கத்தையும் பெற்றுக் கொண்டு நழுவினார்
மேலும் இங்கே தொடர்க...
இதை பார்க்கும்போது விஸ்ணு சக்கரம்போல் தோன்றுகிறதா?
மொஸ்கோ நகருக்கு மேலாக மர்மமான பிரகாச வளையம்




மொஸ்கோ நகருக்கு
மேலாக பிரகாசமான முகில் வளையம் காணப்பட்டதையடுத்து, உள்ளூர்வாசிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பிரகாசமான வளையமானது வேற்றுக்கிரகவாசிகளின் விண் ஓடம் போன்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

1996 ஆம் ஆண்டில் வசூலில் சாதனை படைத்த ஹொலிவூட் திரைப்படத்தில் வேற்றுக் கிரகவாசிகள் பூமியைத் தாக்கும் போது வானில் தோன்றிய பிரகாசமான வளைய அமைப்பை ஒத்ததாக இந்த முகில் வளையம் காணப்பட்டதாக கூறப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...