28 ஜூன், 2011

முல்லைத்தீவில் இதுவரை 77 ஆயிரம் பேர் மீள் குடியேற்றம்




முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 24 ஆயிரத்து 624 குடும்பங்களைச் சேர்ந்த 77 ஆயிரத்து 74 பேர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பிரதேசத்தில் நேற்று 311 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் சில தினங்களில் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு வடக்கு பிரதேசத்தில் மேலும் 337 குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் தீர்வு வழங்குவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அவசியமே இல்லை: லக்ஷ்மன்




தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை அரசாங்கமே வழங்க வேண்டுமே தவிர பாராளுமன்றம் வழங்க முடியாது. இது மஹிந்த சிந்தனையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கண்டி மாவட்ட ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

தீர்வு வழங்குவதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமே இல்லையென்றும் அவர் சுட்டிக் காட்டினார். இது தொடர்பாக எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கருத்து தெரிவிக்கையில்,

13 ஆவது திருத்தத்தை முன்னெடுப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமில்லை. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படுமென மஹிந்த சிந்தனை எதிர்கால இலக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் இதற்காக மக்கள் ஆணையும் கிடைத்தது.

அத்தோடு அமைச்சர் திஸ்ஸ விதாரண ஆணைக்குழு, சர்வகட்சி நிபுணர்கள்குழு என்பன ஜனாதிபதியினால்அமைக்கப்பட்டன. அந்த ஆணைக்குழுக்களும் அரசியல்தீர்வு தொடர்பான பரிந்துரைகளை ஜனாதிபதியிடம் கையளித்தன.

இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட நாமும் ஏற்றுக் கொண்டோம். அதனடிப்படையில் அரசியல் தீர்வை வழங்க முடியும். அத்தோடு அரசாங்கத்திற்க பெரும்பான்ø பலமும் உள்ளது.

எனவே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமில்லை. அரசாங்கத்தினாலேயே அரசியல் தீர்வை வழங்க முடியும். சர்வதேசத்தையும் இந்தியாவையும் ஏமாற்றுவதற்கும் காலத்தை இழுத்தடிக்கவுமே பாரளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வை வழங்காமல் இருப்பதற்கே இவ்வாறான நடவடிக்கைகள முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த ஐந்து வருடங்களாக ஐ.தே.க. அரசியல் தீர்வு தொடர்பான தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது. ஆனால் அரசாங்கம் எதனையும் கண்டுகொள்ளவில்லை.

இன்று எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லையென குறைகூறுகிறது. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படுமென மஹிந்த சிந்தனை எதிர்கால இலக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு மக்கள் ஆணையும் கிடைத்துள்ளது. அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே இதுவொரு கடினமான காரியமல்ல.?

அதேவேளை 13 ஆவது திருத்தத்தை அரசாங்கம் முன்னெடுக்க முனைந்தால் அரசாங்கம் பிளவுபடும்.

ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி உட்பட மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற கடும் இனவாதக் கட்சிகள் அரசாங்கத்திலிருந்து வெளியேறும். இதனால் அரசாங்கம் வீழ்ச்சியடையும் ஆபத்தான சமிக்ஞையும் உள்ளது.

எனவே 13 ஆவது திருத்தத்தை முன்னெடுத்து அதிகாரப் பரவலாக்கலுடனான அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை. எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க யுத்த நிறுத்த புரிந்துணர்வை ஏற்படுத்தி அழிவுகளில்லாமல் யுத்தம் இல்லாமல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ஆனால் அம்முயற்சி சந்திரிகா, ஜே.வி.பி. மஹிந்தவினால் தோல்வியடையச் செய்யப்பட்டன என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

600 முன்னாள் போராளிகள் ஜூலை முதல் வாரத்தில் விடுதலை




புனர்வாழ்வு பெற்ற 600 முன்னாள் போராளிகள் இவ்வார இறுதியில் விடுதலை செய்யப்படவுள்ளனர். இதற்கான விசேட நிகழ்வு வவுனியாவில் இடம்பெறவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கூறுகையில்:,

யுத்தத்தின் இறுதிக்காலப் பகுதியில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்களை சமூகத்துடன் இணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பெரும் தொகையான முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளனர். 3508 போராளிகள் மட்டுமே இன்னமும் விடுவிக்கப்படாத நிலையில் எஞ்சியுள்ளனர்.

இவர்களையும் கூடிய விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வார இறுதியில் மேலும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 600 போராளிகள் அவர்கள் உறவினர்களுடன் இணைக்கப்பட உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சிறந்த முறையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதுடன் தொழில்சார் கல்விகளும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண வாழ்விற்கு திரும்பியதன் பின்னர் இவர்கள் தமது வாழ்வில் பொருளாதார பிரச்சினைகளை சீர் செய்துக் கொள்ள முடியும் எனக் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இறுதிப் போரில் இறந்த பொதுமக்களுக்கு ஆடி அமாவாசையன்று பூஜை




வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கு வடமாகாண ஆலயங்களில் எதிர்வரும் ஆடி அமாவாசைத் தினத்தன்று ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளும், பூஜைகளையும் நடத்துவற்கு வடமாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அகில இலங்கை இந்து மாமன்றம் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து ஜனாதிபதி வடமாகாண ஆளுனருக்கு விடுத்துள்ள பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின்போது எண்ணற்ற பொதுமக்கள் மோதல்களில் சிக்கியும் ஷெல்வீச்சுகளில் அகப்பட்டும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும் உயிரிழந்துள்ளார்கள் என்பது தெரிந்ததே. இவ்வாறு இறந்தவர்களில் பலருடைய சடலங்கள் உரிய முறையில் அடக்கம் செய்யப்படவோ, எரிக்கப்படவோ இல்லை என பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக கிரியைகளின் ஊடாக எதுவுமே செய்யப்படவில்லை. என்றும் இதனால் இறந்தவர்களின் குடும்ப உறவினர்கள் பெரிதும் மனம் நொந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் மன அமைதிக்கும் இறந்தவர்களின் ஆத்ம சாத்திக்காகவுமே இவ்வாறாக சிவாலயங்களில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் பூஜைகளும் நடத்துவற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை இந்து மாமன்றத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலுமுள்ள முக்கிய சிவாலயத்தில் பிரதான ஆத்மசாந்திப் பூஜைகள் நடைபெறும் அதேவேளை அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஏனைய சிறியதும் பெரியதுமான சிவாலயங்களிலும் இந்த பூஜைகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

ஆடி அமாவாசை ஜூலை மாதம் 30 ஆம் திகதி இந்த ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் மற்றும் பூஜைகள் நடைபெறவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு 13 ஆவது திருத்தத்திற்கப்பால் செல்லவேண்டும்: டிலான்

இனப்பிரச்சினைக்கு தீர்வாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அப்பால் செல்லவேண்டும். அதாவது 13 ஆவது திருத்தத்தை தாண்டி செல்லவேண்டும் என்பதனை நான் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகின்றேன்.

அத்துடன் அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து ஆராய நியமிக்கப்படுவதற்கு முயற்சிக்கப்படும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரெரா தெரிவித்தார்.

அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து ஆராய நியமிக்கப்படுவதற்கு முயற்சிக்கப்படும் பாராளுமன்ற தெரிவுக்குழு விடயம் குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

சில குழுக்களிடமிருந்து நாட்டை பாதுகாப்பதே இன்றைய சவால்: ஜனாதிபதி




பயங்கரவாத நடவடிக்கைகளால் நன்மையடையும் சில குழுக்களிடமிருந்து இலங்கையைக் காப்பாற்றிக்கொள்வது இன்று நாம் எதிர்நோக்கும் முக்கிய சவாலாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஆசிய ஆபிரிக்க சட்ட ஆலோசகர்கள் சங்கத்தின் 50 ஆவது வருட நிறைவு விழாவையொட்டி கொழும்பில் நடைபெற்ற சட்ட ஆலோசகர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாதப் பிரச்சினை இலங்கைக்கு மட்டும் உரியதொன்றல்ல. இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பலநாடுகள் இந்தப் பயங்கரவாதப் பிரச்சினையை எதிர்நோக்குகின்றன. இலங்கையைப் பொறுத்தளவில் அது ஒரு கடந்த கால நிகழ்வாகும். இனியொருபோதும் இலங்கையில் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கப்படமாட்டாது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...