24 ஆகஸ்ட், 2010

மட்டு. கிராமங்களுக்கு முதற்தடவையாக பஸ் சேவை இன்று ஆரம்பம்



மட்டக்களப்பு வாகரை, கட்டுமுறிவு மற்றும் தொப்பிக்கல ஆகிய கிராமங்களுக்கான பஸ் சேவை முதற் தடவையாக கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சர் விமலவீர திஸாநாயக்க பஸ் சேவைகளை ஆரம்பித்து வைத்தார்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்ட மற்றும் பின்தங்கிய கிராமங்களில் போக்குவரத்து வசதியை சீர்செய்யும் திட்டத்தின் கீழ் மேற்படி பஸ் சேவை ஆரம்பிக்ப்பட்டுள்ளது.

கட்டுமுறிவிலிருந்து வாழைச்சேனை வரை மற்றும் தொப்பிக்கலயிலிருந்து கிரான் ஊடாக வாழைச்சேனை வரை இரண்டு பஸ் சேவைகள் நடத்தப்படும் என கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் யுவநாதன் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளுடன் தமிழக அரசியல்வாதிகள் தொடர்பு; கேபி விளக்க வேண்டும் : முதல்வர்



இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தமிழக அரசியல்வாதிகள் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து கே பி எனப்படும் குமரன் பத்மநாதன் விளக்கமளிக்கவேண்டும் என துமிழக முதல்வர் மு கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குமரன் பத்மநாதன், அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை வழங்கி இருந்தார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய தலைவரான குமரன் பத்மநாதன் அளித்த பேட்டியில், இலங்கையில் போர் நிறுத்தம் வராமல் தடுத்தது வைகோதான் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

மேலும் அவர் தனது பேட்டியில்,

"கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன் இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே உச்சக்கட்ட போர் தீவிரம் அடைந்திருந்தது. இலங்கை இராணுவத்திற்கு இந்திய இராணுவம் மறைமுகமாக உதவி செய்கிறது என்ற குற்றச்சாட்டை தேர்தல் பிரசாரத்தில் அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் எழுப்பினர்.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என மத்திய அமைச்சர் சிதம்பரம் வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப்புலிகளும் விரும்பினர்.

இந்த முடிவை விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுச் செயலர் நடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., மகேந்திரனிடம் தெரிவித்தார். அதை அவர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் கூறினார்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டால், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதால், விடுதலைப்புலிகளின் முடிவை வைகோ மாற்றினார்.

தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் பாஜக ஆட்சி அமையும்போது, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு நிலையை எடுக்க முடியும் என வைகோ கூறினார்" என்று குமரன் பத்மநாதன் தெரிவித்திருக்கிறார்.

அந்தப் பேட்டி உண்மையல்ல என்று மகேந்திரன் எம்எல்ஏ மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்தே, இது குறித்த உண்மை நிலவரத்தை விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய தலைவரான குமரன் பத்மநாபன் தெரிவிக்க வேண்டும்.என தமிழக முதலமைச்சர் கருணாநிதி கோரியுள்ளார் என அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

கொரிய வேலைவாய்ப்புக்கு 5000 பேர் தெரிவு : பணியகம் தகவல்

கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற இலங்கையிலிருந்து 5000 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொரிய வேலை வாய்ப்புக்காக நாடு முழுவதிலுமிருந்து 29 ஆயிரத்து 732 பேரின் விண்ணப்பங்கள் தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கொரியாவில் பணியாற்றுவதற்காக கடந்த 3 நாட்களில், நாடு முழுவதிலுமிருந்து பல மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் கடந்த வருடத்தை விடவும், இவ்வருடம் அதிகமானோர் கொரியாவில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளதாகப் பணியகம் தெரிவித்துள்ளது.

கொரிய மொழியிலான பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு நடத்தப்படும் பரீட்சையிலிருந்து 5000 பேர் தெரிவு செய்யப்பட்டு, கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் எனப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இவ்வருடத்தின் ஏப்ரல் மாதம் வரை கொரியாவில் பணியாற்றுவதற்காக இலங்கையிலிருந்து 3 ஆயிரத்து 500 பேர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தானுக்கு இலங்கை நிவாரண உதவிகள்



பாகிஸ்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 18 தொன் எடையுடைய நிவாரண உதவிகளை இலங்கை அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது.

இந்த நிவாரண உதவிகள் நேற்று முன்தினம் பாகிஸ்தானிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஏயார் வின் மாஷல் ஜயலத் வீரக்கொடியினால் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிவாரண பொருட்கடளில் உலர் உணவுப் பொருட்கள், தேயிலை, மருந்து மற்றும் 250 கூடாரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமையவே இந்த நிவாரண உதவிகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதேவேளை, வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்குச் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில் இலங்கையிலிருந்து வைத்திய குழுவொன்று ஏற்கனவே பாகிஸ்தான் நோக்கிப் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

எம்வி சன்சீ கப்பலில் வந்த ஆண்களுக்கான விசாரணை நேற்று நிறைவு


எம்வி சன் சீ கப்பலில் வந்திறங்கிய ஆண்கள் அனைவருக்குமான 48 மணிநேர தடுப்பு மீளாய்வு விசாரணைகள் பிரேசர் பிராந்திய தடுப்பு மையத்தில் அமைந்துள்ள ஐதஆ யின் தற்காலிக அமைவிடத்தில் கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் வாரியத்தினால் நேற்று நிறைவடைந்துள்ளன.

அவர்கள் அனைவரும் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டி மேலும் ஏழு நாட்களுக்குத் தொடர்ந்து தடுப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏழு நாட்களின் பின்னரான தடுப்பு மீளாய்வு விசாரணைகள் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும்.

இன்று பெண்களுக்கான ஏழு நாட்களின் பின்னரான தடுப்பு மீளாய்வு விசாரணைகள் முதல் 10 பெண்களுக்கு ஐதஆ யினால் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் விசாரணையின்போது ஐதஆ யின் வன்கூவர் செயலகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தனர்.

விபரக்கொத்து

கனேடிய எல்லை சேவைகள் முகவம், எம்வி சன்சீ குடிவரவாளர்கள் தொடர்பாக விபரக்கொத்து ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :

"கனேடிய அரசாங்கமும் கனேடிய எல்லைச் சேவைகள் முகவமும் (இஆநஅ) கனேடியர்களின் பாதுகாப்பையும் உறுதிப்பாட்டையும் முன்னிலைப்படுத்தியே செயற்டுவது முக்கியமானது.

பாதுகாப்பு மற்றும் குற்றவியல் அச்சுறுத்தல் காரணமாக முறையற்று வந்திறங்கிய அனைத்து குடிவரவாளர்களையும் சரியான பரிசோதனைகளுக்கு கனேடிய எல்லைச் சேவைகள் முகவம் உட்படுத்தி வருகின்றது.

வயது வந்தவர்கள் நகரத்தின் தென்பகுதியின் பிரதான நிலப்பகுதியில் அவர்களுக்கு உரிய தடுப்பகங்களுக்கு மாற்றப்பட்டு, இந்த நாட்டினுள் அனுமதிப்பதை தீர்மானிப்பதற்கான விபரமான பரிசோதனைகள் கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பிட்ட வயதெல்லையை அடையாத சிறுவர்கள் தடுப்பில் வைக்கப்படவில்லை. உறவினர்களுடன் வந்தடைந்திருக்கும் சிறுவயதினர் அபாயம் குறைந்த இடங்களில் அவர்களின் தாயின் கவனிப்பில் விடப்படுவார்கள்.

சாத்தியமான நேரங்களில் அவர்களின் தங்குமிடங்கள் ஒன்றாகவே இருக்குமாறு ஏற்பாடுகள் செய்யப்படும். குழந்தைகளின் சிறந்த நலனைக் கருத்திற்கொண்டு, உறவினர்களற்ற சிறிவர் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண குழந்தைகள் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சிடம் விடப்பட்டுப் பாதுகாப்பான, ஆபத்தற்ற இடத்தில் பராமரிக்கப்படுவார்கள்.

உரிமைகள்

எம்வி சன்சீயில் உள்ள குடிவரவாளர்கள், ஒரு மொழிபெயர்ப்பாளரைப் பெற்றுக் கொள்ளும் உரிமையும், ஒரு சட்டத்தரணியினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் உரிமையும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பின் ஏன் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அறியும் உரிமையும், அவர்களின் தடுப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையாளருக்கோ அல்லது அவர்களின் தூதுவருக்கோ தெரியப்படுத்தும் உரிமையும் கொண்டிருப்பார்கள்.

தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்குச் சட்டத் தேவைகளுக்கான நிதி உதவி வழங்கப்படும். வந்திறங்கியவர்கள் தங்களின் சட்டத்தரணியைத் தாமே தெரிவு செய்து கொள்ளவும் தடுப்பு மீளாய்வு விசாரணைகளின் முன்னர் சட்டத்தரணியைச் சந்திப்பதற்கும் முடியும்.

பெறுவழி

வயது வந்தவர்கள் வெளியில் தொலைபேசித் தொடர்புகளை மேற்கொள்ளவும் தபால் மூலமான சேவைகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். அவர்களைப் பார்வையிட வருவதற்கான அனுமதி உள்ளவர்கள் பட்டியலில் பெயர்களை அவர்களால் இணைத்துக் கொள்ளவும் முடியும்.

பார்வையிட அனுமதி பெற்றவர்களுக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண தடுப்புப் பிரிவுடன் தொடர்பு கொண்டு பார்வையிடுவதற்கான ஒழுங்குகளைச் செய்ய இயலும்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...