2 அக்டோபர், 2009

கிலாரி கிளிண்டனின் குற்றச்சாட்டை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மறுக்கிறார்-

மனிதாபிமான யுத்த நடவடிக்கையின்போது பாலியல் துஸ்பிரயோகங்களை படைவீரர்கள் ஒரு ஆயுதமாக கொண்டிருந்ததாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் கிலாரி கிளிண்டன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இன்று மறுத்துள்ளார். கிலாரி கிளிண்டனின் இந்தக் குற்றச்சாட்டானது அடிப்படையற்றது. இறுதிக்கால யுத்தக்காலமான மூன்றரை வருடத்தில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின்போது இவ்வாறான வழிமுறைகள் படையினரால் கைகொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் படையினர்மீது இதுகுறித்த குற்றச்சாட்டுக்கள் எந்தவொரு அமைப்பினராலும், சர்வதேச நிறுவனங்களாலும் முன்வைக்கப்படவில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் கிலாரி கிளிண்டனின் இக்கருத்து ஏற்றுக்கொள்ள முடியாததொன்று என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...
நலன்புரி நிலையங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு, நிர்க்கதியான மக்களுடன் புளொட் பிரதிநிதிகள் சந்திப்பு-

வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் தமது சொந்த இடங்களுக்கு செல்வதற்கு விண்ணப்பத்திருந்த கர்ப்பிணித் தாய்மார்கள், மற்றும் கைக் குழந்தைகளையுடைய தாய்மார்கள் உள்ளடங்கிய சுமார் 30குடும்பங்கள் முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் நலன்புரி நிலையங்களிலிருந்து அழைத்துவரப்பட்டு வவுனியா கச்சேரியில் வைத்து விடுவிக்கப்பட்டிருந்தனர். இருந்தும் இவர்களுக்கான பயண ஒழுங்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாத நிலையில் கடந்த 05நாட்களாக வவுனியா கச்சேரி, பஸ் நிலையம் என்பவற்றில் தங்கியிருந்தனர். இவர்களில் சில குடும்பங்கள் தமது சுய முயற்சியின் பயனாக தமது சொந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளபோதிலும் பல குடும்பங்கள் தற்போது கோயில்குளம் சிவன்கோவில் நிர்வாகத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோயில்குளம் சிவன்கோவில் பகுதியில் தங்கியுள்ள இம்மக்களைச் சந்தித்த புளொட் அமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் (விசுபாரதி) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன் மற்றும் புளொட் முக்கியஸ்தர்கள் அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டுள்ளனர். அத்துடன் அவர்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு செய்து கொடுக்கவேண்டிய உதவிகள் குறித்தும் கோயில்குளம் சிவன்கோயில் நிர்வாகத்தினருடனும் கலந்துரையாடலையும் மேற்கொண்டு குறித்த மக்களுக்கான போக்குவரத்து உள்ளிட்ட உதவிகளைக் செய்ய ஆவனசெய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். சந்திப்பின்போதான புகைப்படங்கள் கீழே
மேலும் இங்கே தொடர்க...
வாழைச்சேனையில் ஆற்றைக் கடந்து செல்ல முற்பட்ட இளைஞன் நீரில் மூழ்கி பலி





மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் ஆற்றைக் கடந்து ஆலய உற்சவத்தில் கலந்துகொள்ள முற்பட்ட மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கிப் பலியானார்.

நேற்றிரவு பிரம்படித்தீவு - கின்னையடி ஆற்றில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் பூலாக்காட்டைச் சேர்ந்த 19 வயதான நடராஜா வில்வன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த ஆற்றில் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையே படகு சேவை நடைபெற்று வருகின்றது. தற்போது கின்னையடி விஷ்னு ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பூலாக்காடடைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் நீந்தி ஆற்றைக் கடந்து ஆலய உற்சவத்திற்கு சென்றதாகவும்,இருவர் மறு கரையை அடைந்த போதிலும் மூன்றாவது நபர் பற்றிய தகவல் இல்லாத நிலையில் இன்று காலை தேடிய போதே அந் நபர் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது
மேலும் இங்கே தொடர்க...
இந்திய மீனவர்களைக் கடற்படைத் தாக்கவில்லை : இலங்கை துணைத் தூதர்




"இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படைத் தாக்குதல் நடத்தியது என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு,'' என இலங்கை துணைத் தூதர் மறுப்பு தெரிவித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தென் மாநிலங்களுக்கான இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, சென்னையில் நேற்று அளித்த பேட்டியில் இது குறித்துத் தெரிவிக்கையில்,

"தமிழ்நாடு மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கடந்த மாதம் 9ஆம் திகதி என்னைச் சந்தித்த போது, "இலங்கை கடற்பகுதிக்குள் தடைகளை மீறி உட்புகும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதில்லை; கைது செய்வதுமில்லை" என்று தெரிவித்துள்ளனர்.

இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் நுழையும் போது இந்திய அதிகாரிகள் அவர்களை கைது செய்து, சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கின்றனர். தமிழகம், ஆந்திரா, அந்தமான் நிகோபரில் உள்ள சிறைகளில், 160 இலங்கை மீனவர்கள் தற்போதும் அடைக்கப் பட்டுள்ளனர்.

மீனவர்கள் மீது யார் தாக்குதல் நடத்துகின்றனர் என்பதை, பத்திரிகையாளர்கள் தான் ஆய்வு செய்து உண்மையைக் கண்டறிய வேண்டும். இந்திய இராணுவத்தை, கடற்படையைத் தாண்டி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்த முடியுமா?

தமிழக அரசும், தமிழக எம்.பி.,க்களும் தாக்குதலைக் கண்டித்து பிரதமரிடம் மனு அளித்துள்ளனர். அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை." என்றார்.

தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:


இலங்கைத் தமிழர் முகாம்களை பார்வையிட ஏன் தடை விதிக்கப்படுகிறது?

"தமிழர் முகாம் ஒன்றும் மிருகக் காட்சி சாலை அல்ல. முகாம் குறித்து, புலம் பெயர்ந்தவர்கள் சொல்லும் கதைகள் உண்மையல்ல. பத்திரிகையாளர்கள் விரும்பினால், ஏற்பாடு செய்கிறோம். உங்கள் பாதுகாப்பு, சுதந்திரம் எப்படி முக்கியமோ அது போல எங்களது பாதுகாப்பும் முக்கியம். பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக விலகவில்லை."

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை உள்ளதா?

"இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தப்படி, கச்சத்தீவு இலங்கையின் ஒருங்கிணைந்த பகுதி."

இந்திய மீனவர்கள் அங்கு மீன் பிடிக்க அனுமதிப்பீர்களா?

"உங்கள் நாட்டு அரசிடம் கேளுங்கள்."
மேலும் இங்கே தொடர்க...
அவுஸ்திரேலியாவிலிருந்து 9 இலங்கையர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர்-சேனக வல்கம்பாய



அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒன்பது இலங்கையர்களை நாடுகடத்தவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் சேனக வல்கம்பாய தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் சிங்களவர் எனவும் அகதிகள் இல்லையென்றும் வேலைவாய்ப்பினை பெற்று கொள்வதற்காகவே அவுஸ்திரேலியாவிற்குள் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் பிரதமர் கெவின் ரூட் அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் பலவந்தமாக திருப்பியனுப்பப்பட்டு அடைக்கலம் கோரியோர் என அவுஸ்திரேலிய செய்திதாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்கள் நேற்றிரவு கிறிஸ்துமஸ் தீவில் இருந்து பேர்த் நகருக்கு அழைத்துவரப்படவிருந்தார்கள்.குறித்த ஒன்பது பேரும் கடந்த நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்தன் பின்னர் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

இவர்கள் 12 பேர் அடங்கிய குழுவினருடன் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்தனர்.எனினும் இவர்களில் இருவர் சுயமாகவே இலங்கைக்கு திரும்பினர்.

இந்தநிலையில் நாடு கடத்தப்படவுள்ள 9 பேரின் உயிருக்கும் இலங்கையில் ஆபத்து எதுவும் ஏற்பட போவதில்லையென அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிரிஸ் இவான்ஸ் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அகதிகள் இல்லையென்றும் வேலைவாய்ப்பினை பெற்று கொள்வதற்காகவே அவுஸ்திரேலியாவிற்குள் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அடைக்கலம் கோரியோரின் சட்டத்தரணியான இயன் ரின்டவுல் தகவல் தெரிவிக்கையில் தாம் நாடு திரும்பினால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படுமென ஒன்பது பேரில் உள்ளடங்கியுள்ள சரத் தென்னக்கோன் என்பவர் அச்சம் வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த 9 பேரும் தாம் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக மனு தாக்கல் செய்த போதும் அது நிராகரிக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...
புலிகளுக்கு ஆயுதம் விநியோகித்த குற்றச்சாட்டின்பேரில் சிங்கப்பூர் மறுமலர்ச்சி கட்சி முன்னாள் உறுப்பினர் கைது-

புலிகளுக்கு ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு சிங்கப்பூர் மறுமலர்ச்சி கட்சியின் முன்னாள் உறுப்பினரான பால்ராஜ் நாயுடு சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இவர் கடந்தவாரம் அவரது வீட்டில்வைத்து கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இவர் அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள இரண்டு வழக்குகள் தொடர்பில் தேடப்படும் ஒருவராக இருந்து வருகிறார். அதேநேரம் இலங்கையின் புலனாய்வு பிரிவினரும் இவர் புலிகளுக்காக ஆயுதங்களை விநியோகத்தார் என்ற தகவலை வெளியிட்டுள்ளனர். கைதான இவர் நேற்றுமுன்தினம் நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டுள்ளார். இருப்பினும், எதிர்வரும் 05ம் திகதிவரையும் வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின்பேரில் இவர் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அவரைத் தங்களிடம் கையளிக்க வேண்டுமென்று அமெரிக்க அரசு சிங்கப்பூரிடம் கோரியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கேபியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் இங்கே தொடர்க...
புலிகளின் முக்கிய உறுப்பினர் நலன்புரி நிலையத்திலிருந்து கைது-

புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் செட்டிகுளம் நலன்புரி நிலையத்தில் மக்களுடன் மக்களாக தங்கியிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கட்டுகஸ்தோட்டை புகையிரதபாலம், பொல்காவல பஸ்மீதான குண்டுதாக்குதல் போன்றவற்றில் ஈடுபட்ட நபரே விசேட பொலிஸ் பிரிவினரால் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை .புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் மோட்டார் படகு மற்றும் வெடிமருந்துகளுடன் மன்னாரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் வைத்திருந்த படகுமூலம் வடக்கே யுத்தம் இடம்பெற்று கொண்டிருந்த காலத்தில் பெற்றோல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட புலி உறுப்பினர்; தொடர்ந்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...