20 மே, 2011

நோர்வேயில் நெடியவன் ஐரோப்பிய பயங்கரவாத சட்டத்தின் கீழ்கைது

நோர்வேயில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக செயற்பட்டு வந்த நெடியவன் கைது செய்யபட்டு பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் நீதிமன்றில் நிறுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹொலன்ட் நாட்டு சர்வதேச பொலிசாரால் நெடியவனின் வீடு சுற்றி வளைக்கபட்ட போதே நெடியவன் கைது செய்பட்டதுடன் அவர் உடனடியாக நோர்வே தலைநகரம் ஒஸ்லோவுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டுவரபட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்.

இவர் ஐரோப்பிய பயங்கரவாத சட்டப்படியான வழக்கை எதிர் நோக்கி உள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மீனவர்கள் கைது

இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 10 பேரை இந்திய கடலோரப் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணைக்குப் பிறகு இவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிப்பதற்கு இலங்கைக்கு இந்தியா ஆலோசனை

போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக உள்ளக நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஒரே வழி என்று இலங்கைக்கு இந்தியா ஆலோசனை கூறியுள்ளது. புதுடெல்லி அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ""இந்து'' நாளேடு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த செவ்வாயன்று புதுடில்லியில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உயர் மட்டங்களுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஜி.எல்.பீரிஸ் நடத்திய பேச்சுக்களின் போதே இந்தியாவின் இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா வின் அறிக்கையில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.

நாம் அவர்களுக்கு கூறியுள்ள செய்தி உள்ளக ரீதியான நடவடிக்கைகளை எடுங்கள் என்பதே. அதற்கு இந்தியா உதவும். போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகின்ற நிலையில் அரசியல் நல்லிணக்கம் உள்ளிட்ட பல கவலைகள் இந்தியாவுக்கு உள்ளன.

அவர்கள் உள்ளக ரீதியாக நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் வேறு இடங்களிலிருந்து அழுத்தங்கள் வரும் என்று இந்திய அரசாங்க வட்டாரம் ஒன்று கூறியுள்ளது. அரசியல் ரீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை துரிதப்படுத்துமாறு இந்திய தலைவர்கள் இலங்கையிடம் கேட்டுள்ளனர்.

13வது திருத்தத்தின் அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு ஒன்றை இந்தியா வலியுறுத்தியுள்ளது. அத்துடன் போரின் பின்னர் காணாமல் போனவர்களின் பட்டியல் ஒன்றை தயாரிக்கும் படியும், அவர்களின் மரணத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கைக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

அத்துடன் உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கி, அவசரக்கால சட்டத்தையும் விலக்கிக்கொள்ளுமாறும் இந்தியா வலியுறுத்தியுள்ளது என்றும் இந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இரு அமெரிக்கப் பிரஜைகள் விமானநிலையத்தில் கைது

அமெரிக்காவுக்கு செல்லவிருந்த விமானத்தின் மூலம் துப்பாக்கியொன்றை கொண்டு செல்ல முயற்சித்த இரு அமெரிக்கர்களை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸார் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

பிஸ்டல் போன்ற துப்பாக்கியொன்றை பாகங்களாக பிரித்து கொண்டு செல்ல முயற்சித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாங்கள் அமெரிக்க இராணுவத்தை சேர்ந்தவர்கள் எனவும் விடுமுறையை கழிக்க இலங்கை வந்ததாகவும் அவர்கள் தெரிவித்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பொருள் ஸ்கேனர் இயந்திரத்தில் தெரிந்தவுடனேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளைக் கொடி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பிலான வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றபோது முன்னாள் இராணுவத் தளபதியின் உடல்நிலை தொடர்பிலான மருத்துவ அறிக்கையொன்றை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையில் சரத் பொன்சேகாவின் உடல் நிலை இதுவரை தேறாமையினால் அவருக்கு இரண்டு வாரங்கள் ஓய்வு தேவை என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய வழக்கை இம்மாதம் 23 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு நீதிபதிகள் தீர்மானித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் தாம் விடுதலை செய்யப்படாததை ஆட்சேபித்து கைதிகள் சிலர் கூரை மீது ஏறி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயுள் கைதிகள் ஏழு பேரே இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...