30 ஜூன், 2011

மலேசிய கடத்தல் கும்பலிடம் இருந்து 6 இலங்கையர்கள் மீட்பு

மலேசியாவில் மனிதக் கடத்தல் கும்பல்களிடமிருந்து 6 இலங்கையர்களை மீட்டுள்ளதாக மலேசிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜாலன் வோங் அஹ் பூக் நகரிலுள்ள ஹோட்டலொன்றை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டபோது இலங்கையர்களான 6 ஆண்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கைது செய்யப்பட்ட மனிதக் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளூரைச் சேர்ந்த முகவரான இந் நபர் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்காக மேற்படி இலங்கையர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 5000 மலேசிய ரிங்கிட் பணம் அறவிட்டதாக பிரதி உதவி குடிவரவுப் பணிப்பாளர் கஜேந்திரா பஹதூர் கூறியுள்ளார்.

இந்த இலங்கையர்கள் சட்டபூர்வமாக மலேசியாவுக்கு வந்த போதிலும் அவர்களின் கடவுச்சீட்டு காலாவதியாகியுள்ளதாக அவர் கூறினார். மேற்படி இலங்கையர்கள் மலாக்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பலஸ்தீன பிரதேசங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும்: ஹக்கீம்

பலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் சட்டவிரோத குடியேற்றங்களையும் காஸா மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளையும் பலஸ்தீனர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களையும் சர்வதேச நீதிகளையும் ஐ.நா. மாநாட்டு தீர்மானங்களை மீறிச் செயல்படுவதையும் ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் பல உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் வன்மையாக கண்டித்து கருத்து வெளியிட்டதை தாம் கவலையோடு செவி மடுத்ததாகவும் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பிரதேசங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டுமெனவும் பிரஸ்தாப அமைப்பின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் மூன்றாம் நாள் அமர்வு கொழும்பு கிராண்ட் லேக்சைட் ஹோட்டலில் நேற்று நடைபெற்றபோது பலஸ்தீனர்களை வெளியேற்றுதலும் சர்வதேச சட்டங்களுக்கு எதிராக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் யூதக் குடியேற்றங்களை மேற்கொள்ளுதலும் என்ற தலைப்பில் இடம்பெற்ற செயலமர்வை முடித்து வைத்து உரையாற்றும்போதே நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.

காஸா பிரதேசத்தில் சர்வதேச நீதி, நியாயங்களை மீறி பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் விதித்துள்ள தடை காரணமாக அப்பாவி பலஸ்தீன பொது மக்கள் உணவுப் பொருட்கள், மருந்து, எரிபொருட்கள் போன்றவை கிடைக்கப் பெறாது பாரிய இன்னல்களுக்கு முகங் கொடுத்துள்ளதாகவும் பலஸ்தீன நீதியமைச்சர் சுட்டிக் காட்டியதை போன்று பலஸ்தீனத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் 45 வீதமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.

பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்து ஜப்பான், ஈரான், கட்டார், எகிப்து, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் குழுக்களின் தலைவர்கள் இந்த செயலமர்வின்போது உரையாற்றினர்.

பலஸ்தீனம் சுதந்திரமான தன்னாதிக்கமுடைய நாடாக செயற்படுவதற்கு இடமளிக்கப்பட வேண்டுமெனவும், அதன் தலைநகராக ஜெருசலம் விளங்க வேண்டுமெனவும் முஸ்லிம்களின் புனிதத் தலங்களில் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸா பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் 1967 ஆம் ஆண்டுக்கு முந்திய எல்லைகளுக்கு இஸ்ரேல் பின்வாங்க வேண்டுமெனவும் காஸா மக்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் முற்றாக அகற்றப்பட வேண்டுமெனவும் அவர்கள் தமது உரைகளின் போது வலியுறுத்தினர்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் தீர்வு தொடர்பிலான ஜனாதிபதியின் கூற்றுக்கு இந்தியாவே பதிலளிக்க வேண்டும்: மாவை

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின் தெளிவுபடுத்தல்கள் மற்றும் அவரது நிலைப்பாடு ஆகியவற்றுக்கு இந்தியாவே பதிலளிக்க வேண்டுமே தவிர அதற்கான தேவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு கிடையாது என்று கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி. யுமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

உள்நாட்டின் தேசிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் உயர் அதிகாரிகள் ஆகியோருடனான சந்திப்பின் போது அரசியல் தீர்வு விவகாரம் குறித்து வெளியிட்டிருந்த கருத்துக்கள் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மாவை எம்.பி. மேலும் கூறுகையில்:

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் தமிழர்களால் எதிர்பார்க்கப்படுகின்ற நிரந்தரமான அரசியல்தீர்வு உள்ளிட்ட தமிழர் தரப்பு விடயங்கள் குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு ஏற்கனவே அரசாங்கத்திடமும் ஜனாதிபதியிடமும் அறிவித்தாயிற்று. இதனை ஊடகங்களும் வெளிப்படுத்தியிருந்தன.

இந்நிலையில் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது அல்லது அத்திருத்தத்துக்கும் அப்பால் செல்வது குறித்து இந்தியா தமக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருப்பதும் பாராளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் அரசியல் தீர்வு தொடர்பிலான தமது நிலைப்பாடு சம்பந்தமான கூற்றுக்களை அவர் வெளியிட்டிருப்பது குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலட்டிக் கொள்ளவில்லை.

மேலும் பாராளுமன்றத் தெரிவுக்கு அமைப்பதான நோக்கம் குறித்தும் நாம் எடுத்துக் கூறியிருக்கிறோம். எனவே ஜனாதிபதியின் மேற்படி கூற்றுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடோ அல்லது அவசியமோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடையாது.

இலங்கைத் தமிழர் விவகாரம் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்கள் மற்றும் கடைப்பிடிக்கவேண்டிய அணுகு முறைகள் குறித்து இந்தியா இலங்கைக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை என்று ஜனாதிபதி கூறியிருப்பதற்கு இந்தியாவே பதிலளிக்க வேண்டும், கூட்டமைப்பு அல்ல.

மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை பேசிக் கொண்டிருக்கவும் எமக்கு நேரமில்லை. ஜனாதிபதியின் கூற்று குறித்து ஊடகங்கள் இந்தியாவிடமே கேள்வியெழுப்ப வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய மீனவர்கள் 23பேர் விடுதலை

இலங்கை கடற்படையால் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேரை மன்னார் நீதிமன்றம் இன்றைய தினம் விடுதலை செய்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை அடுத்து கைதான நபர்களை பொலிஸார் இலங்கை கடற்படையிடம் நாளை ஒப்படைக்கவுள்ளனர். அதேவேளை இலங்கை கடற்படையினர் நாளை மாலை இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

29 ஜூன், 2011

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் ஆயுதங்கள் மீட்பு


மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவக்குடிச்சேனை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

5 கிலோ கிராம் நிறையுடைய ஒரு கைகுண்டு, சீ 4 ரக வெடிபொருள் 1.8 கிலோ கிராம், ரீ 56 ரக மெகஸின் 5, ரீ 56 ரக ரவைகள் 107, ரீ 56 ரக டுல் கிட் 1, 20 மீற்றர் நீளமுடைய வயர் ரோல், 3 சயனட் குப்பிகள், 4 கைக்குண்டு மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத் தகடு ஒன்று உள்ளிட்ட சில வெடிபொருட்கள், ஆயுதங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட ஆயுதங்கள் வவுணதீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

பாலியலுக்கான மனிதக் கடத்தலில் ஒரு மூலமாக இலங்கை உள்ளது: அமெரிக்காவின் ஆண்டறிக்கை

மனிதக் கடத்தல்களை தடுப்பதற்கான குறைந்தபட்ச தராதரங்களுக்குரிய கடப்பாடுகளை இலங்கை முழுமையாக நிறைவேற்றவில்லை எனவும் ஆனால் இதில் குறிப்பிடத்தக்களவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் மனிதக் கடத்தல்கள் தொடர்பான அமெரிக்காவின் 2011 ஆம் ஆண்டின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள், சிறார்கள் ஆகியோர் கட்டாய வேலை வாங்கல் மற்றும் பாலியலுக்காக கடத்தப்படுவதில் இலங்கை ஒரு மூலமாக இருப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் இலங்கையை கண்காணிப்புப் பட்டியலில் இருந்து நீக்கியுள்ள அமெரிக்கா, இரண்டாம் மட்டத்தில் குறித்துள்ளது. அதன் பொருள், கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான சட்டத்தை இலங்கை முழுமையாக நிறைவேற்றவில்லை. ஆனால் அதை செய்வதற்கு குறிப்பிடத்தக்களவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்பதாகும்.

மனிதக் கடத்தல்களை குறிப்பாக பெண்கள், சிறார்களை கடத்துவதை தடுக்கும், ஒடுக்கும் தண்டிப்பதற்கான ஐ.நா.வின் 2000 ஆம் ஆண்டு ஷரத்தை இன்னும் முழுமையாக நிறைவேற்றவில்லை என அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் அறிக்கையில் இலங்கை தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் ஆண்கள், பெண்கள் சிறார்கள் (16 17 வயதானோர்) குவைத், ஜோர்டான், சவூதி அரேபியா, கட்டார், லெபனான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், பஹ்ரெய்ன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு நிர்மாணத் தொழிலாளர்களாக, வீட்டுப் பணியாளர்களாக அல்லது தொழிற்சாலை ஊழியர்களாக செல்கின்றனர்.

அத்தொழிலாளர்களில் சிலர், நடமாட்டக் கட்டுப்பாடு, கடவுச் சீட்டை தடுத்து வைத்தல், அச்சுறுத்தல் உடல் ரீதியான அல்லது பாலியல் துஷ்பிரயோகம் போன்றவற்றின் மூலம் கட்டாய வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

அண்மையில் வெளியான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் ஜோர்தானில் பணியாற்றும் இலங்கை வீட்டுப் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கும் அதிகமானோர் அவர்களின் எஜமானர்களால் உடல் ரீதியாக துஷ்பிரயோகப்படுத்தலுக்கு உள்ளாகின்றனர் எனவும் 11 சதவீதமானோர் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாகுவதாகவும் 60 வீதமானோர் சம்பளம் வழங்கப்படாதிருப்பதாகவும் 60 சதவீதமானோர் கடவுச் சீட்டு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இருப்பதாகவும் 80 சதவீதமானோர் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் சவூதி அரேபியா, குவைத், ஜோர்டான் ஆகிய நாடுகளில் இலங்கை பணியாளர்கள் உடலில் 20 ஆணிகள் ஏற்றப்பட்டமை அல்லது 9 ஆணிகளை உட்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டமை உட்பட உடல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உட்படுவதாக செய்திகள் வெளியாகின. இலங்கை வேலைவாய்ப்பு முகவர்கள் ஒப்பந்தங்களை மாற்றுதல் ஒரு வேலைக்கு வாக்குறுதி வழங்கி விட்டு (தொழில் புரியும் இடங்களை) அடைந்த பின் வேலை, தொழில் தருநர், வேலை சூழல், சம்பளம் ஆகியவற்றை மாற்றுதல் உட்பட மோசடிகளில் ஈடுபடுவதாகவும் அறிக்கைகள் வெளியாகின. இது கட்டாய வேலை வாங்குதல் மற்றும் கடன் பிணைகளுக்கான அச்சுறுத்தல் காரணிகளாகின்றன.

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஐ. அ. எமிரேட்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வரும் ஆண்களுக்கும் பெண்களுக்குமான இடைத்தங்கல் நாடாக இலங்கை உள்ளது. அவர்களில் சிலர் கடத்தலால் பாதிக்கப்படுபவர்களாக இருக்கலாம். பல சந்தர்ப்பங்களில் வேலை வாய்ப்பு முகவர்களால் ஆண்கள் இலங்கையில் நிர்க்கதியாக்கப்பட்டனர்.

இலங்கைப் பெண்கள் பலர் ஏனைய நாடுகளில் வீட்டுப் பணிப் பெண் போன்ற வேலைகளுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டு ஆனால் அங்கு வந்து சேர்ந்த பின் விபசார நிலையங்கள் போன்றவற்றில் (அதிகமாக சிங்கப்பூரில்) பணியாற்றுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். சொற்ப எண்ணிக்கையான பெண்கள் மாலைதீவில் பாலியல் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்த நாட்டிற்குள் பெண்களும் சிறார்களும் விபசார விடுதிகளுக்கான பாலியல் கடத்தல்களுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக வடக்கிற்குச் செல்லும் இலங்கை படையினரின் முக்கிய இடைத்தங்கல் நிலையமாக விளங்கும் அநுராதபுரம் பகுதியில் சிறுமிகளை விட சிறுவர்கள் விபசாரத்திற்கு தள்ளப்படுகின்றனர். குறிப்பாக கரையோரப் பகுதிகளில் பாலியல் சுற்றுலாவுக்காக இது நடைபெறுகிறது. சுமார் 1,000 சிறார்கள் இலங்கையில் பாலியல் சுரண்டல்களுக்குள்ளாவதாக 2009 ஆம் ஆண்டில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மதிப்பிட்டிருந்தது. எனினும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இந்த எண்ணிக்கை 10,000 இற்கும் 15,000 இற்கும் இடைப்பட்டதாகும் எனத் தெரிவித்திருந்தன.

யுத்தத்தின் பின்னர் வறுமையான கிழக்குக் கரையோரத்தில் அண்மையில் ஏற்பட்ட சுற்றுலா அதிகரிப்பானது சிறுவர் பாலியல் சுற்றுலாவுக்கான கேள்வியை அதிகரிக்கக் கூடும்.

உலர் வலயங்களில் பெருந்தோட்ட பண்ணைப் பகுதிகள், பட்டாசு, கருவாட்டு தொழிற்றுறை போன்றவற்றில் சிறார்கள் கொத்தடிமையாக அல்லது கட்டாய வேலை வாங்கலுக்கு உள்ளாவதாக அறிக்கைகள் வெளியாகின. சிறார்கள் சிலர், பொதுவாக தமிழ் தேயிலைத் தோட்டத் துறையை சேர்ந்தோர் கொழும்பில் வீட்டுப் பணியாளர்களாக உள்ளனர். அவர்கள் உடல், உள, பாலியல் துஷ்பிரயோகம், சம்பளம் வழங்கப்படாமை, நடமாட்டம் கட்டுப்படுத்தப்படல் போன்றனவற்றுக்கு உள்ளாகின்றனர்.

பெண்கள் மற்றும் சிறார்கள் சிலர் ஆடைத் தொழிற்சாலையில் தொழில் வழங்கப்படும் என முகவர்களால் வாக்குறுதி அளிக்கப்பட்டு, விபசாரத்திற்கு தள்ளப்படுகின்றனர். தாய்லாந்து, சீனா, தெற்காசியா, ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த சொற்ப எண்ணிக்கையான பெண்கள் இலங்கையில் விபசாரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

சனல்4 படங்கள் போலியானவை என்பதை சரியாக உற்று நோக்கினால் தெரியும்: ஜனாதிபதி

அரசாங்கம் ஏற்கனவே இரண்டு அறிக்கைகளை தயாரித்துள்ளது. அமுலாக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது என்ன நடந்தது என்பது குறித்து இந்தவாரம் அல்லது அடுத்த வாரம் எனக்கு ஒப்படைப்பார்கள், இதேவேளை பொதுமக்களை புலிகள் எவ்வாறு சுட்டுக் கொன்றார்கள் என்பது குறித்து நான் ஆளில்லாத விமானங்கள் எடுத்த படங்களைப் பார்த்திருக்கிறேன். அதனை அனைத்து தூதுவர்களும் பார்த்துள்ளார்கள். பாதுகாப்பு தேடி வந்த மக்களை புலிகள் சுட்டுக் கொல்வதை அவை படம் பிடித்துள்ளன. இந்த சனல்4 படங்கள் போலியானவை என்பதை சரியாக உற்று நோக்கினால் தெரியும். அதாவது சுடப்பட்டு விழுபவர் கவனமாகவே விழுகிறார். இது ஒரு திரைப்படத்தை தயாரிப்பதைப் போன்றே அமைந்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் படையினர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. உண்மையில் இறுதி மோதலில் உள்ளவர்கள் வாழ்வா? சாவா என்ற போராட்டத்திற்கு மத்தியிலேயே இருந்தனர். எனவே அவர்களால் இத்தகைய துஷ்பிரயோகங்களில் ஈடுபட முடியுமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். இவ்வாறு கூறினார்.

இதனிடையே இந்த சனல்4 வீடியோவை நாம் ஒருபோதும் நம்பவில்லை. இது ஒரு திரைப்படமாகவே உள்ளது. எனினும் பொதுநலவாய அமைப்புக்கள் இதனை உண்மை என்று கூறுகின்றனவே என பத்திரிகை ஆசிரியர் ஒருவர் வினவியபோது ஜனாதிபதி பதிலளிக்கையில்:

நாம் அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். இது தவறு என்பதை. பாலித கோஹன, சவேந்திர சில்வா ஆகியோர் இது போலி என்பதை எடுத்துக் கூறியுள்ளனர். இறுதிக் கட்டத்தில் அங்கு இருந்தவர் என்பதால் சவேந்திர சில்வா இது குறித்து சவால் விட்டுள்ளார். அத்துடன் மூன்று பேருக்கு எதிராகவே குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகின்றன என்றார்.

இதேவேளை, கடந்த காலங்களில் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச் சாட்டின் பேரில் நாம் பலரை கைது செய்துள்ளோம். திருகோணமலை சம்பவம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுத்தோம். ஒரு படைப்பிரிவை பல மாதங்களாக தடுத்து வைத்திருந்தோம். எனினும் அவர்களுக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டுக்களும் இருக்கவில்லை. இறுதியாக நாம் அவர்களை விடுவித்தோம். சாட்சியம் இருந்தால் வந்து கூறுங்கள் என நான் திரு. சம்பந்தனிடம் கேட்டுக் கொண்டேன். இவ்வாறானவர்களைத் தண்டிக்க உதவி புரியுமாறும் நான் அவரிடம் கேட்டுக்கொண்டேன்.

எல்லோரும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பத்திரிகை மூலம் அறிக்கை விடுவதிலேயே குறியாக உள்ளனர் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கொழும்பில் நாளை ஆர்ப்பாட்டம்

தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளினதும் விபரங்களை வெளியிட்டு அவர்களின் விடுதலையை காலதாமதமின்றி அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இதனை வலியுறுத்தும் முகமாக நாளை வியாழக்கிழமை கொழும்பில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்து கொள்வதற்கான இயக்கம் அறிவித்துள்ளது.

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இலங்கையில் ஏராளம் உண்டு. அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் அப்புறப்படுத்தப்பட்டு ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதில் அரசு தவறிழைத்துள்ளது என்றும் அவ் இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்து கொள்வதற்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சமீர கொஸ்வத்த கூறுகையில் அவசரமாக தீர்க்கப்பட வேண்டிய அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் இன்று வரையில் இழுபறி நிலையிலேயே உள்ளன. 10 தொடக்கம் 15 வருட காலமாக எவ்விதமான விசாரணைகளும் இன்றி பெரும் தொகையான அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையானது பாரிய மனிதாபிமான மற்ற செயலாகவே அமைகின்றது.

அரசியல் கைதிகளின் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளன. எத்தனைபேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அவர்களின் பெயர் விபரங்கள் கூட இதுவரையில் வெளியிடப்படவில்லை. சிறைச்சாலைகள் அமைச்சர் 12 ஆயிரம் பேர் சிறையில் உள்ளதாகவும் 3 ஆயிரம் பேர் விடுதலை செய்யப்பட்டதாகவும் கூறுகின்றார். அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனிவாவில் வைத்து 4 ஆயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார். பாராளுமன்றத்தில் 639 பேர் மாத்திரமே உள்ளதாக கூறுகின்றனர்.

எனவே இதில் எந்த தரவு உண்மையானது இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு அரசின் வெளிப்படையற்ற தன்மையே காரணமாகின்றது. தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்கான போராட்டத்தில் அனைத்து இன மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தனியார் பஸ்களில் கமெரா பொருத்துவதற்கு ஏற்பாடு

தனியார் பஸ்களில் கமெராக்களை பொருத்துவதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பஸ்களில் ஒட்டப்பட்டிருக்கின்ற அரசியல் வாதிகளின் படங்களை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பி ரத்னாயக்க தெரிவித்தார்.

தனியார் பஸ்களுக்குள் இடம்பெறும் ஊழல் மோசடிகளை கண்டுபிடிப்பதற்கும் பெண்கள் மீதான துன்புறுத்தல்களை இனங்காண்பதற்குமே கமெராக்களை பொருத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தனியார் பஸ்களில் பல்வேறான முறைகேடுகள் இடம்பெறுவதாக தனியார் போக்குவரத்து அமைச்சுக்கு பொதுமக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவ்வாறான முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டே தனியார் பஸ்களில் கமெராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சாதாரண பஸ் மற்றும் அரைசொகுசு பஸ்களை பயணிகள் இலகுவாக இனங்கண்டுகொள்வதற்கு அரைசொகுசு பஸ்ஸை சுற்றி விசேட ஸ்ரிக்கர் ஒன்றும் ஒட்டப்படும். அதுமட்டுமன்றி மக்களுக்கு சிறந்ததொரு சேவையை வழங்குவதற்காக தனியார் பஸ்களில் ஒட்டப்பட்டிருக்கின்ற அரசியல்வாதிகளின் படங்களை அகற்றுமாறும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பில் புதிய வாடகை கார் சேவையினால் 40 ஆயிரம் முச்சக்கரவண்டிகள் செயலிழக்கும்: ஐ.தே.க



அரசாங்கத்தினால் தலைநகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நனோ டெக்ஸி (வாடகைக் கார்) திட்டத்தின் மூலம் 40 ஆயிரம் முச்சக்கரவண்டிகள் செயலிழப்பதுடன் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் தொழில்களை இழக்கவேண்டிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

முஜிபுர் ரஹ்மான் இங்கு மேலும் கூறுகையில், கொழும்பில் மாத்திரம் சுமார் 40 ஆயிரம் முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடுகின்றன. இன்னும் முழு நேர தொழில்களுக்கும் இந்த முச்சக்கர வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.

அது மட்டுமல்லாது, உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்வோர் விற்பனையில் ஈடுபடுவோர் என மொத்தத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் இத் திட்டத்தினால் தொழில் இழக்க வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டு வருகின்றது.

அரசாங்கத்தின் இத் திட்டத்தின் மூலம் தலைநகரில் முச்சக்கர வண்டிகளை இல்லாது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இது ஒரு பாரதூரமான விடயமாகும். எனவே நனோ டெக்ஸி திட்டத்தை கைவிடுமாறும் முச்சக்கர வண்டித்தொழிலாளர்களை சங்கடத்தில் தள்ளிவிட வேண்டாம் என்றும் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

இதேவேளை, தலைநகரை அழகு மயப்படுத்தப் போவதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிடுகின்ற அரசாங்கம் நகர்ப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எண்ணுவதாகத் தெரியவில்லை.

கொழும்பு நகர சபைக்கு சொந்தமான 140 மில்லியன் ரூபாவை செலவிட்டு பம்பலப்பிட்டியிலிருந்து அலரி மாளிகை வரையிலான மூன்ற கிலோமீற்றர் பாதையை திருத்தியமைக்கின்ற அரசாங்கம் தலைநகர் குடியிருப்புப பகுதிகளில் கழிவுகளை அகற்றுவதற்கான இயந்திர வசதிகளைக் கூட பெற்றுக் கொடுக்காதிருக்கின்றது. அது மட்டுமல்லாது, வடிகான்களை துப்புரவு செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் இல்லை. இவ்வாறு பலதரப்பட்ட குறைபாடுகள் இருக்கின்ற நிலையில் காலி வீதியையும் கருவாத்தோட்ட வீதிகளையும் திருத்தியமைப்பதற்கு அரசு முன் நிற்கின்றது. இதன் மூலம் தலைநகரை அழகுபடுத்தி விட முடியாது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தேசிய பிரச்சினைக்கான தீர்வில் அதிகாரப் பகிர்வு இடம்பெறக் கூடாது: ஜா.ஹெ.உ


தேசிய பிரச்சினைக்கான தீர்வில் அதிகாரப் பகிர்வு இடம்பெறக் கூடாது. வடக்கு கிழக்கிற்கு ஏனைய மாகாண சபைகளுக்குள்ள நிர்வாக முறையையும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையுமே வழங்க வேண்டும். மேலதிகமாக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படுமேயானால் அதற்கு எதிராக கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.

யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அமைதியான சூழலை சீர்குலைக்கும் வகையில் அநாவசியமான தீர்வுத் திட்டங்களை தேசிய அரசியலுக்குள் உட்புகுத்த அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது. இன்று தமிழர்கள் எவ்விதமான பிரச்சினையும் இன்றி இலங்கையில் வாழ்கின்றார்கள் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க கூறுகையில்: இலங்கையில் 30 ஆண்டு கால யுத்தம் முடிவடைந்து இரண்டு வருட காலமாகின்றது. இன்று வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழர்கள் நாட்டில் எங்கு வேண்டுமென்றாலும் செல்லக்கூடிய அச்சமற்ற சூழல் பிறந்துள்ளது. எவ்விதமான பிரச்சினைகளும் அசம்பாவிதங்களும் இன்றி மூவின மக்களும் வாழ்கின்றனர். இதுவே யுத்தத்தின் பின்னர் இலங்கை அடைந்த மிகப் பெரிய வெற்றியாகும்.

இதனை சீர்குலைக்கும் வகையில் முடிவுற்ற பிரச்சினைக்கு தீர்வுக் காண அதிகாரப் பகிர்வுகளை விஸ்தரிப்பது படுமோசமான செயலாகும். அரசாங்கம் தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேசி தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை ஆராய்வதில் எவ்விதமான தவறும் இல்லை ஆனால் புலிகளின் கோரிக்கைகளையே முன் வைக்கும் கூட்டமைப்பு போன்றவர்களிடம் அதிகாரப் பகிர்வு குறித்து பேசுவது ஆபத்தான விடயமாகும்.

எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரப் பகிர்வு ஒன்றுக்கு ஜாதிக ஹெல உறுமய இடமளிக்காது. நாட்டை மீண்டும் பின்னகர்த்தும் நடவடிக்கையில் ஈடுபடும் சக்திகளுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம். அரசாங்கம் தமிழ் மக்களின் உண்மையான அடிப்படைப் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை முன் வைக்க வேண்டும்.பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தமிழ் மக்களின் பிரச்சினை கிடையாது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பாராளுமன்றின் தீர்மானமே அரசியல் தீர்வு: ஜனாதிபதி

பாராளுமன்றின் தீர்மானத்திற்கமைய அரசியல் தீர்வை வழங்கத் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், பொதுச் சேவை கட்டமைப்பின் கீழ் இரண்டு லட்சம் ரூபா ஊதியம் வழங்க முடியாது என்ற காரணத்தினாலேயே பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு ஊதிய அதிகரிப்பை வழங்க முடியாதுள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

2031 இல் வேற்றுக்கிரகவாசிகளை சந்திக்கலாம்: ரஸ்ய விஞ்ஞானி எதிர்வுகூறல்

மனித குலமானது 2031 ஆம் ஆண்டளவில் வேற்றுக் கிரக வாசிகளை சந்திக்க முடியும் என ரஸ்ய விஞ்ஞானி ஒருவர் எதிர்வுகூறியுள்ளார்.

இதனை எதிர்வு கூறியுள்ளவர் 'ரஸ்யன் எக்கடமி ஒப் சயன்ஸ் எப்ளையிட் அஸ்ட்ரோனோமி இன்ஸ்டிடூட்' இன் இயக்குனர் பின்கில்ஸ்டீன் ஆவார்.

வேற்றுக் கிரக வாசிகள் தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளும் சர்வதேச மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"உயிர்களின் தோற்றமானது அணுக்கள் உருவாகுவதை போல தவிர்க்க முடியாதது. வேற்றுக்கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றை நாம் 20 வருடங்களுக்குள் கண்டு பிடிப்போம்" என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன் போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் நட்சத்திர மண்டலத்தில் நாம் அறிந்த வகையில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் 10 % பூமியை ஒத்தவை.

இவற்றில் நீரைக் கண்டுபிடிக்க முடிந்தால் ஏன் உயிர்களைக் கண்டு பிடிக்க முடியாதென கேள்வியும் எழுப்பியுள்ளார்.

வேற்றுக் கிரக வாசிகளும் உருவத்தில் மனிதர்களை ஒத்ததாக காணப்படலாம் எனவும், வேறு வகையான தோல் நிறத்தினை உடையவர்களாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

28 ஜூன், 2011

முல்லைத்தீவில் இதுவரை 77 ஆயிரம் பேர் மீள் குடியேற்றம்




முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 24 ஆயிரத்து 624 குடும்பங்களைச் சேர்ந்த 77 ஆயிரத்து 74 பேர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பிரதேசத்தில் நேற்று 311 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் சில தினங்களில் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு வடக்கு பிரதேசத்தில் மேலும் 337 குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் தீர்வு வழங்குவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அவசியமே இல்லை: லக்ஷ்மன்




தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை அரசாங்கமே வழங்க வேண்டுமே தவிர பாராளுமன்றம் வழங்க முடியாது. இது மஹிந்த சிந்தனையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கண்டி மாவட்ட ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

தீர்வு வழங்குவதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமே இல்லையென்றும் அவர் சுட்டிக் காட்டினார். இது தொடர்பாக எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கருத்து தெரிவிக்கையில்,

13 ஆவது திருத்தத்தை முன்னெடுப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமில்லை. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படுமென மஹிந்த சிந்தனை எதிர்கால இலக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் இதற்காக மக்கள் ஆணையும் கிடைத்தது.

அத்தோடு அமைச்சர் திஸ்ஸ விதாரண ஆணைக்குழு, சர்வகட்சி நிபுணர்கள்குழு என்பன ஜனாதிபதியினால்அமைக்கப்பட்டன. அந்த ஆணைக்குழுக்களும் அரசியல்தீர்வு தொடர்பான பரிந்துரைகளை ஜனாதிபதியிடம் கையளித்தன.

இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட நாமும் ஏற்றுக் கொண்டோம். அதனடிப்படையில் அரசியல் தீர்வை வழங்க முடியும். அத்தோடு அரசாங்கத்திற்க பெரும்பான்ø பலமும் உள்ளது.

எனவே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமில்லை. அரசாங்கத்தினாலேயே அரசியல் தீர்வை வழங்க முடியும். சர்வதேசத்தையும் இந்தியாவையும் ஏமாற்றுவதற்கும் காலத்தை இழுத்தடிக்கவுமே பாரளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வை வழங்காமல் இருப்பதற்கே இவ்வாறான நடவடிக்கைகள முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த ஐந்து வருடங்களாக ஐ.தே.க. அரசியல் தீர்வு தொடர்பான தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது. ஆனால் அரசாங்கம் எதனையும் கண்டுகொள்ளவில்லை.

இன்று எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லையென குறைகூறுகிறது. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படுமென மஹிந்த சிந்தனை எதிர்கால இலக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு மக்கள் ஆணையும் கிடைத்துள்ளது. அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே இதுவொரு கடினமான காரியமல்ல.?

அதேவேளை 13 ஆவது திருத்தத்தை அரசாங்கம் முன்னெடுக்க முனைந்தால் அரசாங்கம் பிளவுபடும்.

ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி உட்பட மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற கடும் இனவாதக் கட்சிகள் அரசாங்கத்திலிருந்து வெளியேறும். இதனால் அரசாங்கம் வீழ்ச்சியடையும் ஆபத்தான சமிக்ஞையும் உள்ளது.

எனவே 13 ஆவது திருத்தத்தை முன்னெடுத்து அதிகாரப் பரவலாக்கலுடனான அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை. எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க யுத்த நிறுத்த புரிந்துணர்வை ஏற்படுத்தி அழிவுகளில்லாமல் யுத்தம் இல்லாமல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ஆனால் அம்முயற்சி சந்திரிகா, ஜே.வி.பி. மஹிந்தவினால் தோல்வியடையச் செய்யப்பட்டன என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

600 முன்னாள் போராளிகள் ஜூலை முதல் வாரத்தில் விடுதலை




புனர்வாழ்வு பெற்ற 600 முன்னாள் போராளிகள் இவ்வார இறுதியில் விடுதலை செய்யப்படவுள்ளனர். இதற்கான விசேட நிகழ்வு வவுனியாவில் இடம்பெறவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கூறுகையில்:,

யுத்தத்தின் இறுதிக்காலப் பகுதியில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்களை சமூகத்துடன் இணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பெரும் தொகையான முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளனர். 3508 போராளிகள் மட்டுமே இன்னமும் விடுவிக்கப்படாத நிலையில் எஞ்சியுள்ளனர்.

இவர்களையும் கூடிய விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வார இறுதியில் மேலும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 600 போராளிகள் அவர்கள் உறவினர்களுடன் இணைக்கப்பட உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சிறந்த முறையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதுடன் தொழில்சார் கல்விகளும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண வாழ்விற்கு திரும்பியதன் பின்னர் இவர்கள் தமது வாழ்வில் பொருளாதார பிரச்சினைகளை சீர் செய்துக் கொள்ள முடியும் எனக் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இறுதிப் போரில் இறந்த பொதுமக்களுக்கு ஆடி அமாவாசையன்று பூஜை




வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கு வடமாகாண ஆலயங்களில் எதிர்வரும் ஆடி அமாவாசைத் தினத்தன்று ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளும், பூஜைகளையும் நடத்துவற்கு வடமாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அகில இலங்கை இந்து மாமன்றம் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து ஜனாதிபதி வடமாகாண ஆளுனருக்கு விடுத்துள்ள பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின்போது எண்ணற்ற பொதுமக்கள் மோதல்களில் சிக்கியும் ஷெல்வீச்சுகளில் அகப்பட்டும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும் உயிரிழந்துள்ளார்கள் என்பது தெரிந்ததே. இவ்வாறு இறந்தவர்களில் பலருடைய சடலங்கள் உரிய முறையில் அடக்கம் செய்யப்படவோ, எரிக்கப்படவோ இல்லை என பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக கிரியைகளின் ஊடாக எதுவுமே செய்யப்படவில்லை. என்றும் இதனால் இறந்தவர்களின் குடும்ப உறவினர்கள் பெரிதும் மனம் நொந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் மன அமைதிக்கும் இறந்தவர்களின் ஆத்ம சாத்திக்காகவுமே இவ்வாறாக சிவாலயங்களில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் பூஜைகளும் நடத்துவற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை இந்து மாமன்றத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலுமுள்ள முக்கிய சிவாலயத்தில் பிரதான ஆத்மசாந்திப் பூஜைகள் நடைபெறும் அதேவேளை அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஏனைய சிறியதும் பெரியதுமான சிவாலயங்களிலும் இந்த பூஜைகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

ஆடி அமாவாசை ஜூலை மாதம் 30 ஆம் திகதி இந்த ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் மற்றும் பூஜைகள் நடைபெறவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு 13 ஆவது திருத்தத்திற்கப்பால் செல்லவேண்டும்: டிலான்

இனப்பிரச்சினைக்கு தீர்வாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அப்பால் செல்லவேண்டும். அதாவது 13 ஆவது திருத்தத்தை தாண்டி செல்லவேண்டும் என்பதனை நான் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகின்றேன்.

அத்துடன் அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து ஆராய நியமிக்கப்படுவதற்கு முயற்சிக்கப்படும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரெரா தெரிவித்தார்.

அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து ஆராய நியமிக்கப்படுவதற்கு முயற்சிக்கப்படும் பாராளுமன்ற தெரிவுக்குழு விடயம் குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

சில குழுக்களிடமிருந்து நாட்டை பாதுகாப்பதே இன்றைய சவால்: ஜனாதிபதி




பயங்கரவாத நடவடிக்கைகளால் நன்மையடையும் சில குழுக்களிடமிருந்து இலங்கையைக் காப்பாற்றிக்கொள்வது இன்று நாம் எதிர்நோக்கும் முக்கிய சவாலாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஆசிய ஆபிரிக்க சட்ட ஆலோசகர்கள் சங்கத்தின் 50 ஆவது வருட நிறைவு விழாவையொட்டி கொழும்பில் நடைபெற்ற சட்ட ஆலோசகர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாதப் பிரச்சினை இலங்கைக்கு மட்டும் உரியதொன்றல்ல. இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பலநாடுகள் இந்தப் பயங்கரவாதப் பிரச்சினையை எதிர்நோக்குகின்றன. இலங்கையைப் பொறுத்தளவில் அது ஒரு கடந்த கால நிகழ்வாகும். இனியொருபோதும் இலங்கையில் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கப்படமாட்டாது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

26 ஜூன், 2011

இனப்படுகொலை குற்றச்சாட்டு : முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு ஆயுள் தண்டனை


ருவாண்டா நாட்டில் இனப்படுகொலைகள் புரிந்த குற்றவாளியாக இனங்காணப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பெண் அமைச்சர் மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஐ.நா. போர்க்குற்றவியல் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

போவுலின் நீயிராமாசுஹூகோ (65) என்ற அப்பெண் அக்காலப்பகுதியில் ருவாண்டாவின் குடும்ப மற்றும் பெண்கள் விவகார அமைச்சராக இருந்தவர். இவரின் மகனான ஆர்சனி நடாஹோபலி முன்னாள் இராணுவ தலைவராக இருந்தவர்.

இவர்கள் 1994 ஆம் ஆண்டுப்பகுதியில் 'ஹூடூ' இனத்தவர்களைக் கடத்தி பாலியல் வல்லுறவுகள் மற்றும் இனப்படுகொலைகளை மேற்கொள்ள கட்டளையிட்டதுடன் உதவியுமுள்ளதாக சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து டன்சானியாவில் உள்ள ருவாண்டாவுக்கான ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இதன் போது மேலும் 4 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது..

அவர்கள் முன்னாள் ஆளுநர்களான சில்வெயின் நசாபிமான, அல்போன்ஸ் நடசிராயோ மற்றும் அக்காலப்பகுதியில் நகரப்பிதாக்களாக கடமையாற்றிய ஜோசப் கன்யபாசி, எலியி நட்யாம்பஜே ஆகியோரவர்

பத்து வருடங்களுக்கு முன்னர் தொடரப்பட்ட இவ்வழக்கு மேற்படி தீர்ப்புடன் நிறைவுக்கு வந்தது.

ருவாண்டாவில் 1994 ஆம் ஆண்டுப்பகுதியில் டூட்சி மற்றும் ஹூட்டு இனத்தவர்கள் சுமார் 800,000 பேர் கொல்லப்பட்டனர்.

இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில் தண்டனை வழங்கப்பட்ட முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தினரை அகற்றுமாறு மலேஷிய எம்.பி.கள் கோரிக்கை


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுமாறு மலேஷிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த மாகாணங்களிலுள்ள இராணுவத்தினரை வெளியேற்றி மீண்டும் அந்த பகுதிகளில் குடியியல் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரி மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மகஜர் மலேஷியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் டி.டி. ரணசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த மகஜரில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களிலுள்ள மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்று நடைபெற வேண்டும் என மலேஷிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரேரணை ஒன்று முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும்“ இறைமையயுள்ள ஒரு நாட்டின் வெளிவிவகார கொள்கையில் நாம் தலையிட முடியாது எனக் கோரி மலேஷிய நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் குறித்த பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலே அந்நாட்டு எதிர்க்கட்சியினரால் குறித்த மகஜர் மலேஷியாவிற்கான இலங்கை தூதுவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சனல் 4 காணொளி நாடு முழுவதும் இலவசமாக வழங்க ஐ.தே.க. நடவடிக்கை

நிபுணர்குழு அறிக்கையின் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் சனல் 4 காணொளி என்பவற்றை நாடு முழுவதும் இலவசமாக விநியோகிப்பதற்கு ஐ.தே.க. தீர்மானித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் வைத்து அவை விநியோகிக்கப்படவுள்ளன.

நிபுணர்குழு அறிக்கையின் சிங்கள மொழிபெயர்ப்பை பொதுமக்கள் மத்தியில் விநியோகிப்பதற்கென ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கெனவே தீர்மானித்திருந்தது. அதன் பின் அண்மையில் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது இந்நிலையில் அதனையும் இணைத்து பொதுமக்கள் மத்தியில் விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

இவ்வாறான கட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனது அரசியல் நலனை விட நாட்டு நலன் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டார, சுஜீவ சேனசிங்க போன்றோரே கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக கடுமையான முறையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள் என்றும் அறிய முடிகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை மீது வழக்கு தொடர மன்னிப்புச் சபை முடிவு

இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர சர்வதேச மன்னிப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சனல் 4 தொலைக்காட்சி இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் காட்சிகளை வெளியிட்டது. இவ்வாறு வெளியிடப்பட்ட காட்சிகள் போலியானவை என அரசாங்கத்தினால் தொடர்ந்தும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து கடந்த 23 ஆம் திகதி கனடாவில் நடைபெற்ற கூட்டத்தின் போது சர்வதேச மன்னிப்புச் சபை கலந்தாலோசித்துள்ளது.

இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய பிரித்தானியா மற்றும் சுவிட்ஸர்லாந்தின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

24 ஜூன், 2011

பொருளிடம் அறியும் புதிய பொறிமுறை டாக்டர். சிதம்பரநாதன் சபேசன் விஞ்ஞானி சபேசன் செவ்வி




பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய மின்னணு பொறிமுறை ஒன்றை தமிழ் விஞ்ஞானி ஒருவர் இங்கு பிரிட்டனில் கண்டுபிடித்திருக்கிறார்.

பிரிட்டனின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவரான, இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட டாக்டர். சிதம்பரநாதன் சபேசன் அவர்களே இந்தக் கண்டுபிடிப்பை செய்திருக்கிறார்.

ஒரு பொருளுடன் இந்தப் பொறிமுறை அலகு பொருத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்தப் பொருள் திருடப்பட்டாலோ அல்லது காணாமல் போனாலோ, அந்தக் கணத்தில் அது எங்கு இருக்கிறது என்பதை இந்தப் பொறிமுறை காண்பிக்கும். இதன் மூலம் காணமால் போன பொருளை இலகுவாகத் தேடிக் கண்டுபிடிக்க முடியும்.



விமானப் பொதிகள் தொலைவதை தவிர்க்கலாம்
ஏற்கனவே இப்படியான பொருட்களை தேடியறியும் பொறிமுறை கண்டுபிடிக்கப்பட்டு, அப்பிள் கைத்தொலைபேசி போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்ற போதிலும், தற்போதுள்ள பொறிமுறைகள் மின்கலம் இல்லாமல் இயங்க முடியாத குறைபாட்டுடன் காணபடுகின்றன. அத்துடன் அவற்றின் விலையும் மிகவும் அதிகமாகும்.

ஆனால், 26 வயதான சபேசனின் கண்டுபிடிப்பைப் பொறுத்தவரை, அதற்கு மின்கலம் தேவையில்லை என்பதுடன் அதன் உற்பத்திச் செலவும் வெறுமனே 5 பிரித்தானிய பென்சுகள் மாத்திரமே என்கிறார் சபேசன்.

இந்த பொறிமுறையை பெரிய விமான நிலையங்களில் பயன்படுத்துவது குறித்து ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும், அப்படி பயன்படுத்தும் போது பயணப் பொதிகள் காணாமல் போதல், பயணிகள் தமது விமானத்தை தவற விடுதல் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் என்றும் சபேசன் கூறுகிறார்.

இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமைக்கும் தற்போது விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விபரித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஆப்கனில் அமெரிக்கத் துருப்புகள் குறைப்பு: ஒபாமா திடீர் அறிவிப்பு



ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கத் துருப்புகள் 2014-க்குள் முற்றாக விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறார் அதிபர் பராக் ஒபாமா.
வாஷிங்டன், ஜூன் 23: அல்-காய்தா தலைவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை அழித்து நம்முடைய லட்சியத்தை நிறைவேற்றிவிட்டதால் ஆப்கானிஸ்தானிலிருந்து அதிக எண்ணிக்கையில் அமெரிக்கத் துருப்புகளை இனி ஆண்டுதோறும் விலக்கிக் கொள்வோம் என்று அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் 30,000 துருப்புகள் விலக்கிக் கொள்ளப்படுவர் என்றும் எஞ்சியுள்ள 68,000 பேர் கட்டம் கட்டமாக விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு முதல் கட்டமாக 10,000 அமெரிக்கத் துருப்புகள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா திரும்புவர். 23,000 பேர் 2012 செப்டம்பரில் நாடு திரும்புவர்.

2012 நவம்பரில்தான் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார்.

வெள்ளை மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய தொலைக்காட்சி, வானொலி உரையில் துருப்பகளைத் திரும்பப் பெறும் திட்டத்தை அறிவித்தார் ஒபாமா. 13 நிமிஷங்களுக்கு இந்த உரை நிகழ்த்தப்பட்டது. அந்தப் பேச்சு சாதாரண வானொலி, தொலைக்காட்சி உரையாக இல்லாமல் அதிபரின் தேர்தல் பிரசார பொதுக்கூட்ட பேச்சு போலவே இருந்தது.

""ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இது ஆரம்பம்தான், முடிவல்ல. ஆப்கானிஸ்தானில் தலையிட்டதன் மூலம் நமக்குக் கிடைத்த நன்மைகளை அப்படியே தக்கவைத்துக் கொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும்.

நம்முடைய துருப்புகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு தங்கள் நாட்டை பாதுகாக்கும் பொறுப்பை ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்கள்தான் ஏற்க வேண்டும்.

2014-ம் ஆண்டில் நம்முடைய துருப்புகள் அனைவரையும் நாம் விலக்கிக் கொண்டுவிடுவோம். நாட்டை பாதுகாக்கும் முழுப்பொறுப்பு ஆப்கன் ஆட்சியாளர்களிடம் தரப்பட்டுவிடும்.

பத்தாண்டுகளுக்கு முன்னால் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு நியூயார்க் நகரமும் வாஷிங்டனும் ஆளாயின. (இரட்டைக் கோபுர கட்டடத்தையும் பென்டகனையும் அல்-காய்தா பயங்கரவாதிகள் தாக்கியதைக் குறிப்பிடுகிறார்)

ஜப்பானியர்கள் இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் நிகழ்த்திய பேர்ல்-ஹார்பர் (முத்துத் துறைமுகம்) தாக்குதலை விடக் கொடிதானது அந்தச் செயல். இந்தப் படுகொலைகளை அல் காய்தா இயக்கமும் அதன் தலைவர் ஒசாமா பின் லேடனும் திட்டமிட்டு நிகழ்த்தினர்.

இந்தத் தாக்குதல் நமக்குப் புதியதொரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாதிகளின் இலக்கு போர்க்களத்தில் ஆயுதங்களுடன் நின்று சண்டை போடவல்ல நம்முடைய ராணுவ வீரர்கள் அல்ல; என்ன நடக்கிறது என்றே தெரிந்துகொள்ள முடியாத அப்பாவி மக்கள். ஆடவர், மகளிர், குழந்தைகள் என்று சூதுவாது அறியாத அப்பாவிகள் எண்ணில் அடங்காமல் இத் தாக்குதலுக்கு உயிரிழக்கத் தொடங்கினர்.

இதன் பிறகே நாம் தேச அளவில் ஒன்றுபட்டோம். இந்த அல்-காய்தா இயக்கத்தையும் அவர்களுக்குத் துணை நிற்கும் தலிபான்களையும் பூண்டோடு அழிக்க சபதம் பூண்டோம். இப்போது ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஒடுக்கப்பட்டுவிட்டனர். அல்-காய்தா தலைவர்களில் பாதிக்கும் மேற்பட்டோரை அழித்துவிட்டோம்.

இராக்கிலும் நாம் இரண்டாவது போரை நடத்த வேண்டியிருந்தது. அங்கே மக்களுடைய ஆதரவுடன் பதவிக்கு வந்த அரசைக்காக்க நாம் கோடிக்கணக்கான ரூபாய்களை மட்டும் அல்ல நம்முடைய ராணுவத்தின் விலைமதிக்க முடியாத வீரர்களின் உயிர்களையும் பலி கொடுக்க வேண்டியிருந்தது.

அல்காய்தா தலைவர்கள் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓடி பதுங்கினர். தலிபான்கள் அணி சேர்ந்து நம்மை எதிர்க்கத் தொடங்கினர். நம்முடைய எதிரிகள் யார் என்று அடையாளம் கண்டுவிட்டோம். அவர்களுக்கு அடைக்கலம் தரும் பாகிஸ்தானியப் பகுதிகளும் நம்முடைய தாக்குதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. நான் அதிபராக இருக்கும்வரை பயங்கரவாதிகளையும் அவர்களுடைய பதுங்கு தளங்களையும் விட்டுவைக்கவே மாட்டேன். நம்மைக் கொல்ல நினைப்பவர்கள் நம்மிடமிருந்தும் நீதியிடமிருந்தும் தப்பவே முடியாது.

பயங்கரவாதிகளை ஒழிப்பதில் பாகிஸ்தான் அரசுடன் இணைந்து செயல்படுவோம். அவர்களை ஒழிப்பது அவசியம் என்பதை பாகிஸ்தான் அரசுக்கு வலியுறுத்துவோம். பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடுவோம் என்று அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுங்கள் என்று பாகிஸ்தானிடம் கண்டிப்புடன் கூறுவோம்.

தலிபான்கள் அல் காய்தாவுடனான தங்களுடைய தொடர்பைத் துண்டித்துக்கொள்ள வேண்டும்.

அரசுடன் சமாதானப் பேச்சு நடத்தும் முன் ஆயுதங்களை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்; ஆப்கானிஸ்தான் நாட்டு அரசியல் சட்டத்தை மதித்து நடப்போம் என்று உறுதி அளிக்க வேண்டும்.

நாம் கொண்டுள்ள லட்சியம் எளிதில் அடையக்கூடியதுதான். அது மிகவும் வெளிப்படையானது. அல் காய்தாவோ அவருடைய சார்பு அமைப்புகளோ நம் மீதும் நம்முடைய நட்பு நாடுகள் மீதும் மறந்தும் கைவைக்கக்கூடாது என்பதுதான் நமது முக்கிய நிபந்தனை.

நாம் இப்போது அமெரிக்காவின் மிகப்பெரிய சொத்தான அமெரிக்க குடிமக்கள் மீது முதலீட்டை அதிகப்படுத்த வேண்டும்.

புதிய வேலைவாய்ப்பையும் தொழில்துறை உற்பத்தியையும் அதிகரிக்கும் தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டும். நம்முடைய அடித்தள கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். தூய்மையான, இயற்கைக்கு கேடில்லாத ஆற்றல்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் வழிமுறைகளை அதிகம் நாடியாக வேண்டும்'' என்றார் ஒபாமா.

நெருக்கடி ஏன்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது என்று தீர்மானித்துள்ள ஒபாமா அமெரிக்க மக்களிடையே சரிந்துவரும் செல்வாக்கைத் தூக்கி நிறுத்தும் நோக்கத்திலேயே இந்த அறிவிப்பைத் திடீரென வெளியிட்டிருக்கிறார்.

அவர் உறுதியளித்தபடி பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் நடைபெறாததால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. நாட்டின் தொழில்துறை உற்பத்தியில் ஏற்பட்ட தேக்க நிலையும் குறையவில்லை, வேலையில்லாத் திண்டாட்டமும் மறையவில்லை. எனவே ஒபாமாவுக்கு மக்களிடையே செல்வாக்கு சரிந்தது.

இந்த நிலையில்தான் ஒசாமா பின் லேடனை அமெரிக்கத் துருப்புகள் திடீர் நடவடிக்கையில் கொன்றனர். அதனால் சரிந்த செல்வாக்கு ஓரளவுக்கு கூடியது என்றாலும் பழையபடி மக்களிடையே அமோக ஆதரவுபெற அது போதுமானதாக இல்லை என்று அதிபர் கருதியிருப்பதைப் போலத் தெரிகிறது.

ஆப்கானிஸ்தான் அரசிலும் அந்த ஆட்சியாளர்கள் தலிபான்களுடன் ரகசியமாகப் பேச்சு நடத்துகின்றனர், சுமுகமாகப் போக பேரம் நடக்கிறது என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன. அமெரிக்கா தரும் நிதியில் பெரும்பகுதியை ஆட்சியாளர்களே கையாடல் செய்கின்றனர் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மாதந்தோறும் 10,000 கோடி டாலர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள துருப்புகளின் பராமரிப்புக்காகவே செலவாகிறது. இதை அமெரிக்க மக்களால் தாங்க முடியவில்லை. உள்நாட்டில் வரியைக் குறைக்கவோ வசதிகளைப் பெருக்கவோ நிதி இல்லை என்று கூறிவிட்டு ஆப்கானிஸ்தானில் கொண்டுபோய் இத்தனை கோடி டாலர்களைத் தண்டமாக கொட்டி அழ வேண்டுமா என்று ஆத்திரத்துடன் கேட்கின்றனர். எனவேதான் துருப்புகளைக் குறைப்பது என்ற முடிவுக்கு அமெரிக்க அதிபர் வந்திருக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா - பாகிஸ்தான் இணைந்து செயல்படும்'

இஸ்லாமாபாத், ஜூன் 23: பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் நிலையிலான பேச்சு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை தொடங்கியது.

அப்போது இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்காதது, மும்பை பயங்கரவாதத் தாக்குதல் விசாரணையில் தாமதம் குறித்து பாகிஸ்தானிடம் கவலை தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், இஸ்லாமாபாத்துக்கு வியாழக்கிழமை வந்தார். தொடர்ந்து அவர் பாகிஸ்தான் வெளியறவுச் செயலர் சல்மான் பஷீரை சந்தித்து முதல் சுற்று பேச்சுகளைத் தொடங்கினார்.

இருநாடுகளிடையே அமைதி, பாதுகாப்பு, நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சி என மூன்று பிரிவுகளாகப் பேச்சு நடைபெறுகிறது.

முதல் கட்டப் பேச்சுக்குப்பின் செய்தியாளர்களிடம் நிருபமா ராவ் கூறியது:

நாடுகளின் அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாதம் உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்படும். பயங்கரவாதம் என்பது ஒரு பகுதியில் மட்டும் உள்ள பிரச்னையில்லை, சர்வதேச அளவில் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் என்றார் அவர்.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளுடன் அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு தொடர்பு உள்ளது வெளிப்பட்டுள்ள நிலையில் நடைபெறும் இப்பேச்சு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

அதிகாரப்பகிர்வு: அரசுடன் ததேகூ பேச்சுவார்த்தை சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக அரசுடன் பேச்சு நடத்திவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்வைத்த அதிகாரப்பகிர்வு தொடர்பான பரிந்துரைகளை ஏற்க இலங்கை அரசு மறுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

சுரேஷ்பிரேமச்சந்திரன் செவ்வி

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சு நடத்திவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் குழுவினர் வியாழக்கிழமை அரசு பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்கள்.

இந்த பேச்சுவார்த்தைகளின் ஒருபகுதியாக, மாகாணசபை களுக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பில் ததேகூ சார்பில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளில் மாகாண சபைக்கான அதிகாரங்கள் மற்றும் மத்திய அரசுக்கான அதிகாரங்கள் என்று தெளிவான வரையறை இருக்க வேண்டும் என்று கூறியிருந்ததாகவும், ஆனால் இலங்கை அரசு அதை ஏற்க மறுத்துவருவதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

அதற்கு மாற்றாக, மாகாணசபை, மத்திய அரசு என்கிற இரண்டு அதிகார பட்டியல் தவிர இரண்டுக்கும் பொதுவான அதிகாரங்களை கொண்ட பொதுப்பட்டியல் ஒன்று இருக்கவேண்டும் என்று இலங்கை அரசு கூறுவதாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டு பொருளாதாரத்தில் கட்டியெழுப்ப முற்படும் போது சர்வதேசத்தின் உறுதுணையுடன் காலை வாரி விடும் சூழ்ச்சிகள்

நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டு பொருளாதாரத்தில் கட்டியெழுப்ப முற்படும் போது சர்வதேசத்தின் உறுதுணையுடன் காலை வாரி விடும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

'செனல்-4', தாருஸ்மன் அறிக்கை என எமக்கெதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, அதில் குறிப்பாக எனது பெயருடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ என எம் மூவரது பெயர்களே குறிப்பிடப்படுகின்றன. நம் நாட்டுத் தாய்மாரின் கண்ணீரைத் துடைத்த எம்மை மின்சாரக் கதிரைக்குக் கொண்டு செல்லும் சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எல்லாவற்றையும் விட எமக்கு எமது நாடு பெரிது அதன் கீர்த்தியும் பெரிது. நாட்டை மீட்பதில் உதவியது போல் சவால்களை வென்று நாட்டைக் கட்டியெழுப்புவதிலும் சகலரதும் ஒத்துழைப்பு அவசியம் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற விவசாய மாநாட்டிற்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், துறைசார்ந்த உயரதிகாரிகளுடன் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

மனித உரிமை மீறல் குற்றம் சுமத்தப்படுகிறது. மக்களை வாழவைப்பதைவிட மேலான மனித உரிமை எதுவென நான் கேட்க விரும்புகிறேன்.

தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது என்பது நாட்டின் அரசியல் வேலைத்திட்டமல்ல. அது மக்களைப் பலப்படுத்தும் திட்டமாகும்.

நாட்டை மீட்டெடுத்து மக்களைப் பலப்படுத்தி தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நாம் மேற்கொள்ளும் திட்டங்கள் சிலருக்கு பார்க்கப் பொறுக்கவில்லை.

நாம் பயங்கரவாதிகள் சீரழித்த நாட்டை மட்டுமன்றி பல்வேறு வியாபாரிகள் பல்வேறு நோக்கங்களுக்காக அபகரித்த காணிகள் இழக்கப்பட்ட வளங்களையும் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.

பொருளாதார ரீதியில் எம்மை வீழ்ச்சியுறச் செய்வதற்கு சில சக்திகள் முயற்சி செய்கின்றன. இனங்களுக்கிடையில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பி சகல மதங்களுக்குமான உரிமைகளை வழங்கி முன்னேற்றம் கண்டு வரும் வேளையில் எம்மைக் காலை வாரிவிட முயல்கின்றன.

விவசாயிகளின் உரிமையை அவர்களிடமிருந்து அபகரித்ததுடன் ச.தொ.ச. போன்ற நிறுவனங்களை விற்றனர்.

நாம் தேசிய பொருளாதாரத்தை முன்னேற்ற முயல்கையில் அதனைத் திரிபுபடுத்தி தருஸ்மன் அறிக்கை, மனித உரிமை மீறல் என குற்றங்கள் சுமத்தப்படுகின்றன. தமிழாயிருக்கட்டும், சிங்களமாயிருக்கட்டும் நம் தாய்மாரின் கண்ணீருக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்.

‘சனல் 4’ எனக் கூறிக்கொண்டு எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். அத்தகைய சதிமுயற்சிகளுக்கு எமக்கு எதிராகச் செயற்படும் சக்திகள் துணை போகின்றன. இது விடயத்தில் அனைவரும் அவதானமாயிருக்க வேண்டியது அவசியம்.

நாட்டுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் நாட்டு மக்களுக்கு எதிராகச் செயற்படுகின்றார்கள். அப்பாவி விவசாயிகளின் உரிமைகளைச் சூறையாட இடமளிக்க முடியாது.

இத்தகைய சதிமுயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். பயிர்ச் செய்கையைப் போலவே நாட்டிற்கு எதிரான செயற்பாடுகளிலும் விவசாய சமூகம் விழிப்பாகச் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அளவெட்டி தாக்குதல் சம்பவம்: அரசு - கூட்டமைப்பு பேச்சை பாதிக்காது


அளவெட்டி தாக்குதல் சம்பவம் அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தையைப் பாதிக்காது என்று அமைச்சரும், அமைச்சரவைப் பதில் பேச்சாளருமான அனுர பிரிய தர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் அளவெட்டி தேர்தல் பிரசார கூட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெறு கின்றன.

இது விடயமாக பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்றுமுன்தினம் பாரா ளுமன்றத்தில் விசேட அறிக்கை விடுத்தார். எனவும் அவர் கூறினார். அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முற்பகல் நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை மற்றொரு ஊடகவியலாளர் கட்டுநாயக்க ஆர்ப்பாட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யவென நியமிக்கப்பட்ட தனிநபர் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்திருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இவ்விடயம் தொடர்பான விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை பரிசீலனை செய்து ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்.

அச்சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைகள் நடக்கின்றன மரண விசாரணை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் இந்த அறிக்கையை வெளியிட்டால் இச்சம்பவம் தொடர்பான நீதி விசாரணைகளை பாதிக்கும். அதனால் அந்த அறிக்கை உரிய நேர காலத்தில் வெளியிடப்படும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய வீசா பெறுவதற்கான காலதாமதம் நீக்கம் விண்ணப்பித்த மறுதினமே விசா

இந்தியாவுக்கு செல்வதற்கான வீசா கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தினால் விண்ணப்பம் கையளிக்கப்பட்ட அடுத்த வேலை நாளில் பெற்றுக் கொள்ள முடியுமென்று தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது பற்றி மேலும் விளக்கமளித்த அவர், யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையர் ஒருவர் குறிப்பாக ஒரு தமிழர் இந்தியாவிற்கு செல்வதற்கான வீசா விண்ணப்ப படிவமொன்றை தூதரகத்தில் ஒப்படைத்தால், அது இந்தியா விற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து சம்பந்தப்பட்டவருக்கு வீசா வழங்கலாம் என்ற அங்கீகாரம் கிடைத்த பின்னரே வீசா வழங்கப்பட்டது என்றும், இதனால், ஒருவர் இந்திய வீசாவைப் பெறுவதற்கு காலதாமதம் ஏற்பட்டதென்றும் சுட்டிக்காட்டினார்.

இன்று இலங்கையில் யுத்தம் முடி வுற்று நாட்டில் சமாதானமும் அமைதி யும் திரும்பிக் கொண்டிருப்பதனால், பாதுகாப்பு நடைமுறைகள் தளர்த்தப்பட்டு ஒருவரின் வீசா விண்ணப்பம் அன்றைய தினமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அடுத்த வேலைநாளில் வீசா சம்பந்தப்பட்டவருக்கு வீசா கொடுக்கப்படும் என்று கூறினார்.

இப்போது இலங்கையில் அமைதி நிலைகொண்டிருப்பதனால் வெகு விரைவில் வீசாவை இந்தியா செல்லும் பயணிக்கு விமான நிலையத்தில் வைத்தே வழங்குவதற்கான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தை தாங்கள் தீவிர பரிசீலனைக்கு எடுத்திருப்பதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கச்சதீவை மீண்டும் இந்தியா இலங்கையிடமிருந்து சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்றும் இலங்கை அரசாங்கத்தின் மீது தமிழர் பிரச்சினை குறித்து அழுத்தங்களை கொண்டுவர வேண்டுமென்றும் இந்திய மத்திய அரசாங்கத்தின் வேண்டுகோள் விடுத்திருப்பது குறித்து அந்த அதிகாரி தகவல் தருகையில், அரசியலில் எவருக்கும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கும் உரிமையை இந்திய அரசியல் சட்டம் உத்தரவாதம் செய்திருக்கிறதென்றும் எவர் எந்தக் கருத்தை தெரிவித்தாலும் இந்திய மத்திய அரசாங்கமே இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையை வகுக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கிறதென்றும் கூறினார்.

2009ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் புல்மோட்டையிலும், வவுனியாவில் மெனிக்பாம் முகாமிலும் 50ஆயிரம் நோயாளிகளுக்கு இந்திய வைத்தியக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சையளித்தனர். இவ்விரு இடங்களிலும் இந்திய அரசாங்கம் நடத்திய தற்காலிக நடமாடும் ஆஸ்பத்திரிகளில் 3,000 நோயாளிகளுக்கு பாரிய மற்றும் சிறிய சத்திரசிகிச்சைகளும் செய்யப்பட்டன.

உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் 20ஆயிரம் மெற்றிக்தொன் நிறையுடைய 4 இலட்சம் சீமெந்து மூடைகள் 2010ம் ஆண்டு மீள்குடியேறிய குடும்பங்களுக்காக வழங்கப்பட்டன. இதற்கென இந்திய அரசாங்கம் 1.75மில்லியன் டொலர்களை செலவிட்டது.

இந்திய அரசாங்கம் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த இருப்பிடங்களில் சென்று மீள்குடியேறுவதற்கும் தங்கள் வயல்களில் விவசாயம் செய்வதற்கும் கண்ணி வெடி ஆபத்துக்களில் இருந்து அவர்களை முற்றாக பாதுகாக்கும் எண்ணத்துடன் 2009ம் ஆண்டில் தரைக் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக 7 வெவ்வேறு இந்திய கண்ணி வெடிகளை அகற்றும் குழுக்களை ஈடுபடுத்தியது.

இந்தக் குழுக்களுக்கு உள்ளூரில் உள்ள இளைஞர்கள் மற்றும் யுவதிகளும் தங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கினர். இந்த கண்ணி வெடிகளை அகற்றும் குழுக்களில் சில குழுக்கள் ஒவ்வொன்றாக தங்கள் கைகளாலே அகற்றும் ஆபத்தான பணியை மேற்கொண்டார்கள். இதற்கென இந்திய அரசாங்கம் 10மில்லியன் டொலர்களை செலவிட்டது.

வடபகுதியில் யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுமுகமாக இந்திய அரசாங்கம் 500 நான்கு சக்கர உழவு இயந்திரங்களையும் அவற்றிற்கு தேவையான இயந்திர உபகரணங்களையும் 2010ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வழங்கியது. இதற்கு இந்திய அரசாங்கம் 6மில்லியன் டொலர்களை செலவிட்டது.

இந்திய அரசாங்கம் 2010ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 5,500 கிலோகிராம் பயறுவிதைகளையும் 4,300கிலோகிராம் உழுந்து விதைகளையும் விவசாயிகளுக்கு வழங்கியது. கிழக்கிலங்கையின் வாகரையில் இடம்பெயர்ந்த மீனவர்களுக்காக இந்திய அரசாங்கம் பலநாட்கள் ஆழ்கடலில் இருந்து மீன்பிடிக்க வசதிகளுடனான டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட மீன்பிடி படகுகளையும், மீன்பிடிப்பதற்கான வலைகள் மீனை கெட்டுவிடாமல் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான குளிர் அறைகளையும், குளிர்சாதன வசதி கொண்ட லொறிகளையும் வழங்கியது. இதற்கென ஒரு மில்லியன் டொலர் செலவிடப்பட்டது.

2010ம் ஆண்டு மார்ச் 13முதல் ஏப்ரல் 8ம் திகதி வரையில் இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரிலிருந்து 19 செயற்கை கை, கால்களை பொருத்தும் நிபுணர்கள் அழைத்துவரப்பட்டனர். இவர்கள் கை, கால்களை இழந்து ஊனமுற்ற 1,400 பேருக்கு செயற்கை கை, கால்களைப் பொருத்தினார்கள். இவ்வாண்டில் இது போன்று இன்னுமொரு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்திய அரசாங்கம் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பாவனைக்காக பஸ்களை அன்பளிப்பு செய்துள்ளது. முதல் கட்டமாக 17மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான 10 பஸ்கள் கிழக்கு மாகாணத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டன. இவை பாடசாலைப் பிள்ளைகளை ஏற்றிச் செல்வதற்கும் வைத்திய சேவைகளை மேற்கொள்வதற்கும் அங்கு பயன்படுத்தப் படும்.

சிறிய அபிவிருத்தி திட்டங்கள் என்ற தலைப்பின் கீழ் வடபகுதியில் உள்ள 80 பாடசாலைகளின் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் மன்னாரிலுள்ள மீனவர்களுக்கு 170 மீன்பிடி படகுகள் வழங்கப்பட்டன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆஸ்பத்திரிகளின் அவசர சிகிச்சை பிரிவுக்கு தேவையான உபகரணங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டன. யாழ்ப்பாண துரையப்பா விளையாட்டரங்கு, அச்சுவேலி கைத்தொழில் தொழிற்சாலையிலும் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. வடபகுதி ரயில் பாதையை நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கம் 800மில்லியன் டொலரையும் வழங்கியுள்ளது.

வடபகுதியிலும், கிழக்கு மாகாணத்திலும் மலையகப் பிரதேசங்களிலும் 50ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளுக்காக இந்திய அரசாங்கம் 300 முதல் 400மில்லியன் டொலர்களை செலவிடவுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 27ம் திகதியன்று முன்மாதிரி திட்டமான 1000 வீடுகளை அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

டபகுதியின் ஒரே ஒரு வணிகத் துறைமுகமான காங்கேசன்துறை துறை முகத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கும் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பலாலி விமான நிலையத்தின் விமான இறங்கு தரையின் திருத்தப் பணிகளும் இப்போது இந்தியாவினால் வெற்றிகரமான முறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கம் நாடெங்கிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் இணைந்து செயற்பட விரும்புபவர்கள் தங்கள் திட்ட கொள்கை விளக்கத்துடன் கொழும்பிலுள்ள இந்திய துணைத்தூதுவரிடம் நேரடியாக விண்ணப்பம் செய்யலாமென்று தூதரகத்தின் ஒரு சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

2000 கோடி ரூபாவில் குறைநிரப்பு பிரேரணை பாதுகாப்பு அமைச்சுக்கு சபையில் சமர்ப்பிப்பு



பாதுகாப்பு தலைமையக கட்டட நிர்மாணப் பணிகளுக்கென 2000 கோடி ரூபாவை பாதுகாப்பு அமைச்சுக்கு பெற்றுக் கொள்வதற்கான குறைநிரப்பு பிரேரணையொன்று நேற்று பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் சார்பில் ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன இப்பிரேரணையை சபையில் நேற்று சமர்ப்பித்தார்.

பாராளுமன்றம் நேற்று பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. அரச தரப்பு பிரதம கொரடா தினேஷ் குணவர்தன பிரேரணையை சமர்ப்பித்த போது,

2011 ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் 2011 டிசம்பர் 31ம் திகதி வரையிலான நிதி ஆண்டினுள் அரசாங்கத்தின் இணைந்த நிதியிலிருந்தோ அல்லது அரசின் வேறு ஏதேனுமொரு நிதியத்தினால் அல்லது பெற்றுக் கொள்ளும் ஏதேனும் கடன் தொகையினால் 2000 கோடி ரூபாவை குறைநிரப்பு தொகையாக பெற்றுக் கொள்ளல் என குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அமைச்சையும், பாதுகாப்பு நிறுவனங்களையும் விரைவில் மீளமைப்பதற்காகவும், மீண்டும் அபிவிருத்தி செய்வதற்காகவும் முறையாகவும் பயனுடையதாகவும் நிதி ஈடுபடுத்துவதை சான்றுபடுத்துவதற்காக காணிகள் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் நிதிகளை கழிக்க முடிந்த விசேட கருத்திட்டம் ஒன்றை ஆரம்பித்து, பாதுகாப்பு அமைச்சின் பொதுச் செயற்பாடுகளிலிருந்து அப்பாற்பட்ட அத்தகைய விசேட செயற்பாடுகளை செயற்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் கீழான மதிப்பீட்டிற்கு பாதுகாப்பு தலை மையகக் கட்டமைப்பு’ எனும் பெயரில் விசேட கருத்திட்டமொன்றிற்கு ஒதுக்கீடுகள் பெற்றுக் கொள்ள வேண்டியுள் ளது.

இக்கருத் திட்டம் 2011, 2012 ஆண்டுகளில் செயற்படுத்தவுள்ளதோடு அதற்காக 2011 ஆம் ஆண்டில் ரூபா பில்லியன் 20 ஆன முழுப் பெறுமதியுடைய குறை நிருப்பு ஒதுக்கீடுகளை பெற்றுக் கொள்ளல் என்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விளக்கமளித்துள்ளார்.நிதியத்தினால் அல்லது பெற்றுக் கொள்ளும் ஏதேனும் கடன் தொகையினால் 2000 கோடி ரூபாவை குறைநிரப்பு தொகையாக பெற்றுக் கொள்ளல் என குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

போதைவஸ்துக்கு அடிமையான 4000 கைதிகளுக்கு புனர்வாழ்வு

இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள சுமார் 500 கைதிகள் போதைவஸ்துக்கு அடிமையாகி நோயாளிகளாக பெரும் வேதனைக்கு உட்பட்டிருப்பது இப்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து, அவர்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து, சுகதேகிகளாக மாற்றுவதற்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்டி. சில்வா இப்போது நவீன திட்டம் ஒன்றை தயாரித்துள்ளார்.

இவர்கள் அனைவரையும் பல்லேகலயில் புதிதாக ஆரம்பித்துள்ள சிறைக் கைதிகளுக்கான புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி, இந்த கொடிய போதைப் பொருள் பாவனைப் பழக்கத்திலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கு சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் இவ்விதம் நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரிய விடயமாகும்.

இவ்விதம் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ள சிறைக்கைதிகளுக்கு இந்திய தீய பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வைத்திய சிகிச்சைகளை அளிப்பதுடன், அவர்களுக்கு நல் ஆலோசனை செய்யும் வகுப்புகளையும் இவர் ஒழுங்கு செய்துள்ளார்.

சுமார் ஓராண்டு காலம் இவ்விதம் போதைப் பாவனைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளவர்களுக்கு பயிற்சியளித்தால் அவர்களை முற்றாக திருத்தி நல்வழிப்படுத்த முடியும் என்று சிறை அதிகாரிகள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

இவற்றுடன் சிறைச்சாலை திணைக்களம் இந்த கைதிகளுக்கு தொழிற்பயிற்சிகளையும் வழங்கும். இந்த பயிற்சிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் போதைப் பொருள் பாவனை பழக்கத்திலிருந்து முற்றாக விடுவிக்கப்படும் இந்த கைதிகள் மீண்டும் சமூகத்தில் சங்கமிப்பதற்கு ஏதுவாக விடுவிக்கப்படுவார்கள்.

இந்த பல்லேகல புனர்வாழ்வு நிலையத்தின் இரண்டாவது கட்ட சிகிச்சையின் போது, மேலும் நாலாயிரம் சிறைக்கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்: குடிநீர், அடிப்படை வசதிகளின் மேம்பாட்டுக்கு பிரான்ஸ் உதவி 35 மில்லியன் யூரோக்களை பெற அமைச்சரவை அங்கீகாரம்

யாழ்ப்பாணம் மற் றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான குடிநீர் வழங்கல் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்தவென பிரான்ஸ் அரசாங்கத்திடமிருந்து 35 மில்லியன் யூரோக்களை நிதியுதவியாக பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரும், அமைச்சரவைப் பதில் பேச்சாளருமான அனுரபிரியதர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச் சரவையின் வாராந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறுகையில், விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் உதவியோடு இரணைமடு குளத்தின் ஆற்றுப்படுக்கை அபிவிருத்தி செய் யப்படவுள்ளது. இதற்கென 20 மில்லி யன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப் பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவிருக்கின்ற யாழ். மாவட்ட குடிநீர் விநியோக மேம்பாடு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள குடிநீர் வழங்கல் மற்றும் அடிப்படை சுகாதார வசதி வேலைத்திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியும் ஏற்கனவே 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.

இவ்விரு வேலைத்திட்டங்க ளுக்கும் அரசாங்கம் 20.04 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளது. இந்த வேலைத்திட்டம் 164.04 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் பூர்த்தி செய்யப்படவிருக்கின்றது.

அதேநேரம் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், லஹுகல, பதியத்தலாவ ஆகிய மூன்று பிரதேச செயலகங்களுக்கும் புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

23 ஜூன், 2011

அரசு - த. தே. கூ . இன்று பேச்சு

அரசாங்கத்துடன் இன்று 23 ஆம் திகதி நடத்தப்படும் ஏழாம் கட்டப் பேச்சு வார்த்தையில் அரசியல் தீர்வு விடயம் முக்கியத்துவம் பெறுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அரசுக்கும் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தையின் ஊடாக அரசியல் தீர்வொன்றை எட்ட முடியுமென்ற நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட சுமந்திரன் எம்.பி. அரசாங்கத்துடன் தீர்வு யோசனைகள் அடங்கிய அறிக்கையொன்றை ஏற்கனவே சமர்பித்துள்ளதாகவும் அதனடிப்ப டையில் பேச்சுக்களைத் தொடர்வ தாகவும் குறிப்பிட்டார்.

ஆனால் கூட்டமைப்பின் யோசனைகள் தொடர்பாக இன்ன மும் எந்தவொரு பிரதி பலிப்பும் தென்பட வில்லை யென்றும் இன்றைய பேச்சுவார்த்தை அதற் கான களத்தை உருவாக்குமென்றும் சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்று காண்பதற்காகப் பாராளுமன்றத் தேர்வுக் குழுவொன்றை அமைப்பது காலத்தை வீணடிக்கும் செயலாகுமென்பதே கூட்டமைப்பின் தற்போதைய கருத்தாகுமென்று தெரிவித்த அவர் அது பற்றி இன்னமும் உத்தியோகபூர்வமாக அரசாங்கம் அறிவிக்கவில்லையென்றும் அறிவிக்கும் போது அதுபற்றிச் சிந்திக்கலாமென்றும் கூறினார்.அதே நேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி என்று ஒரு போதும் கூறவில்லை என்று வலியுறுத்திய சுமந்திரன் எம்.பி. தமிழ் தேசியக் கூட்டமைப்பை புறந்தள்ளி தீர்வொன்றை எட்ட முடியாது என்றும் சுட்டிக்காட்டினார். இதனையே சம்பந்தன் எம்.பி. தெளிவாகக் கூறியுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சூரிய சக்தி இன்று விமானங்களையும் இயங்கச் செய்கிறது

சூரிய சக்தி மூலம் இயங்கும் முதலாவது சர்வதேச விமானம் தனது பயணத்தை மே 13 ஆம் திகதி ஆரம்பித்து வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இந்த விமானம் தனது பயணத்தை சுவிற்சர்லாந்தின் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மேலாக 12,400 அடி உயரத்தில் 12 மணி 59 நிமிடங்கள் பறந்து பெல்ஜியத்தின் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

200 அடி நீளமான இந்த விமானத்தில் 12,000 சூரிய கலங்கள் பொருத்தப்பட்டு விமானத்துக்கு தேவையான சக்தி வழங்கப்பட்டது. இதில் பொருத்தப்பட்டுள்ள சூரிய கலங்களில் சேமிக்கப்படும் சக்தியைக் கொண்டு இந்த விமானம் 26 மணித்தியாலங்கள் பறக்கும் வல்லமை கொண்டது.

இந்த விமானத்தின் வேகம் மணிக்கு 50றிசீ/கீ இதனது வேகத்தை அதிகரிக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த விமானம் சுவிற்சர்லாந்தின் தயாரிப்பு என்பதுடன் இதற்காக 88 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

சூரிய சக்தியின் மூலம் இயக்கப்படும் இவ்விமானம் சுற்றாடலுக்கு எவ்வித தீங்கையும் ஏற்படுத்தாது. அத்துடன் இன்னும் பல நூற்றாண்டுகளில் எண்ணெய் கிணறுகள் வற்றிவிடும் அபாயம் தோன்றுவதனால் எதிர்காலத்தில் சூரிய சக்தியின் மூலமான விமானத்தின் தேவை தற்போது உலகளாவிய ரீதியில் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறதெனலாம். அதற்கான ஒரு முன்மாதிரியே இந்த சூரிய சக்தி விமானமாகுமென சுவிற்சர்லாந்தின் தயாரிப்பு குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை - இந்திய உறவில் தமிழக அரசு தலையிட முடியாது

இந்திய அரசியலமைப்பிற்கிணங்க மாநில அரசாங்கங்களுக்கு வழங்கப் பட்டுள்ள அதிகாரத்தை மீறி தமிழ் நாட்டு அரசாங்கம் மத்திய அரசுக்கு அழுத்தங்களையோ சிபாரிசுகளையோ வழங்க முடியாதென பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் தமிழக மாநில அரசாங்கத்துடன் தொடர்ந்தும் நல்லுறவைப் பேணும் என குறிப்பிட்ட அமைச்சர், அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தமிழக முதல மைச்சராக செல்வி ஜெயலலிதா பதவியேற்ற போது தாம் இலங்கை அரசின் சார்பில் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மா நாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கம் மத்திய அரசாங்கத் துடனேயே முக்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது. அதுபற்றிய தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தமிழ் நாட்டுக்கு க்கிடையாது. தமிழ் நாடு மாநில அரசாங்கத்துடன் இலங்கை சம்பந்தப்பட்ட பல்வேறு பேச்சுவார்த்தைகளை எதிர்காலத்தில் மேற்கொள்வோம். அதில் எவ்வித பிரச்சினையுமில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தனியார் துறைக்கு நிகரானதாக இ. போ. சபை தரமுயர்த்தப்படும்


இலங்கை போக்குவரத்து சபை தனியார் பயணிகள் போக்குவரத்து சேவையை விட, தரமான சேவையை வழங்கும் நிறுவனமாகவும் தனியார் போக்குவரத்துடன் போட்டியிடக்கூடிய வகையில் எதிர்காலத்தில் புதிய நடைமுறைகள் வகுக்கப்படுமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபையின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது இலங்கை போக்குவரத்து சபையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் கடந்த கால ஆட்சியில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அத்துடன் நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகள் குறித்தும் இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். அத்துடன் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களை பாதுகாத்தல், பயணிகளுக்கு சிறந்த சேவையை பெற்றுக் கொடுத்தல் தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்கள் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார்.

மேலும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சம்பளப் பிரச்சினை மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பான, அதனுடன் தொடர்புடைய நிர்வாகத்தினருக்கும் ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார். இந்தச் சந்திப்பில் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, தனியார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.பி. ரத்னாயக்க, பிரதி அமைச்சர் ரோஹண குமார திஸாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித்வீரதுங்க, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தம்மிக்க பெரேரா மற்றும் இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

இறுதிக் கட்டத்தில் தமிழர்களை புலிகள் சுட்டுக் கொன்றனர் தமிழர்கள் புலிகளால் பணயம் வைப்பு

அமைதியை ஏற்படுத்தியதற்கு தமிழ் மக்கள் பாராட்டு

‘கார்டியன்’ கட்டுரைக்கு இலண்டனில்
வசிக்கும் இலங்கைத் தமிழர் பதிலடி

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது எல்.ரி.ரி.ஈ தமிழ் மக்களை சுட்டுக்கொன்றதாகவும், அவர்களை பணயக் கைதிகளாக பயன்படுத்தியதாகவும் பிரிட்டனில் வாழும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட எஸ். வாசுதேவன் என்பவர் அங்கிருந்து வெளியாகும் கார்டியன் நாளிதழுக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கார்டியன் பத்திரிகை இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவம் யுத்த மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி அண்மையில் விசேட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் முகமாக எஸ். வாசுதேவன் என்பவர் அந்த பத்திரிகைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

‘உங்களது பத்திரிகையில் கடந்த 13.06.2011ஆம் திகதியில் பிரசுரித்திருந்த கட்டுரைக்கு அதிருப்தி அடைந்தே நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அந்த கட்டுரையில் இலங்கை அரசு மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை நான் முற்றாக மறுக்கிறேன். 2009ம் ஆண்டு யுத்தம் முடிந்த பின் நான் இலங்கைக்கு நான்கு முறை சென்றுள்ளேன். அதன்போது யுத்தத்துக்கு முகம் கொடுத்த பலருடன் கலந்துரையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவர்களின் கருத்துக்கு முற்றும் முரணான செய்தியே உங்களது பத்திரிகையிலிருந்த கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது.

நான் சந்தித்த மக்கள் இறுதிக்கட்ட யுத்தத்தில் தப்பி வந்தவர்களாவர். அவர்களை இலங்கை இராணுவம் தியாகத்துடன் இன்னும் பாராமரித்து வருகின்றனர். இறுதிக்கட்ட யுத்தத்தில் தமது தியாகத்தால் 6,000 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதில் எல்.ரி.ரி.ஈ யினால் தமிழ் மக்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தனர் என்பதே உண்மை.

மேற்படி கட்டுரையில் கூறப்பட்டிருந்த 40 ஆயிரம் பொதுமக்கள் காயமடைந்தனர் என்ற தகவல் தவறானது என்பதை குறிப்பிடுகின்றேன். இது பிரிட்டன் தமிழ் போரம் அழைப்பினால் வெளியிடப் பட்டது. இது குறித்து நீங்கள் உண்மையான விசாரணை செய்வதாக இருந்தால் 2009ம் ஆண்டு காயமடைந்தோர் பற்றிய தகவலை பெற்றிருக்க வேண்டும்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது யுத்த சூன்ய பிரதேசத்திற்குள் எல்.ரி.ரி.ஈ தனது கனரக ஆயுதங்களுடன் போரிட்டது. இந்த பகுதிக்குள் அவர்கள் தமது கனரக ஆயுதங்களை கொண்டுவந்தது மட்டுமல்லாது மருத்துவமனை வளாகத்திற் குள்ளும் ஆயுதங்களை கொண்டு சென்றனர். இந்த நடவடிக்கையால் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

யுத்தத்தின் போது கொல்லப்பட்ட எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களையே யூடியூப் இணையத்தளத்தில் உங்களால் காண முடிகிறது. இதனை தமிழர்களும் உறுதிப்படுத்துவார்கள். எல்.ரி.ரி.ஈ அப்பாவி தமிழ் மக்களை கொன்றது மட்டுமல்லாது அவர்களது உடைமைகளையும் கொள்ளையிட்டனர்.

எல்.ரி.ரி.ஈக்கு சமாதான வழியில் அரசியல் தீர்வை பெற பல வாய்ப்புகள் கிடைத்தன.

ஆனால் அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் புறக்கணித்தனர். இதனால் எல்.ரி.ரி.ஈயை முடிவுக்கு கொண்டு வருவதை விட இலங்கை அரசுக்கு வேறு வழி இல்லாமல் போனது. ஆம், எல்.ரி.ரி.ஈக்கு எதிராக இலங்கை அரசு கடுமையான யுத்தத்தை முன்னெடுத்தது. ஆனால் அவர்கள் இப்போது இருந்திருந்தால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும். இலங்கை அரசு யுத்தத்தின் போது ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

இதன் மூலம் நல்ல தீர்வு கிட்டும் என எதிர்பார்க்கிறேன்.

இலங்கை தமிழ் மக்கள் ஏனைய மக்களுடன் இணைந்து இலங்கையில் அமைதியாக வாழ்வதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனவே, பழைய கசப்பான சம்பவங்களை கிளரி அமைதியை குலைக்க வேண்டாமென்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்’ இவ்வாறு அந்த கடிதத்தில் எஸ்.வாசுதேவன் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

22 ஜூன், 2011

பான் கீ மூன்: உறுதியற்ற நிலைப்பாடு




இலங்கையைப் பொறுத்தவரை ஐநா தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள் ஒரு உறுதியற்ற நிலைப்பாட்டையே கடைப்பிடித்தார் என்று மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் ஆசிய இயக்குனரான பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐநாவின் தலைமைச் செயலராக பான் கீ மூன் அவர்கள் இரண்டாவது பதவிக்காலத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் இலங்கை உட்பட பல நாடுகளில் மனித உரிமை மீறல்களை தடுக்கத் தவறிவிட்டார் என்று பல மனித உரிமை அமைப்புக்கள் கருத்து வெளியிட்டிருந்தன.

இது குறித்துக் கருத்துக் கூறுகையிலேயே பிராட் அடம்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பான் கீ மூனின் செயற்பாடு ஒரு கலவையான விஷயம், என்று கூறிய பிராட் அடம்ஸ் அவர்கள், '' பர்மா விஷயத்தில் அவர் நிறைய அறிக்கைகளை விட்டார். ஆனால் பர்மிய அரசுக்கு எதிராக செயல்படுவதில் அவர் மிகவும் பலவீனமாக இருந்தார். அவருக்கு ஒரு கோர்வையான திட்டம், யுக்தி இல்லை. சீனாவைப் பொறுத்த வரை கடந்த இரு தசாப்த காலத்தில் நடந்த மிகவும் மோசமான ஒடுக்குமுறையின் போது அவர் அமைதி காத்தார்'' என்று கூறியுள்ளார்.

இலங்கை நிலைமை குறித்தும் அவர் தமிழோசையுடன் பேசுகையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.

''இலங்கையைப் பொறுத்தவரை அவர் மிகவும் உறுதியற்ற நிலைப்பாட்டையே கடைப்பிடித்தார். போர் முடிந்த பின், இலங்கைக்கு சென்று, மஹிந்த ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளப்படுவதை அனுமதிக்க வேண்டாம் என்று நாங்களும் மற்றவர்களும் தந்த நல்ல அறிவுரையை மீறி,அங்கே சென்றார். மஹிந்த ராஜபக்ஷ, தனது அரசுக்கு நம்பகத்தன்மையைப் பெற அந்த விஜயத்தைப் பயன்படுத்திக் கொண்டார்'' என்றார் பிராட் அடம்ஸ்.

இலங்கையில் போர் தொடர்பான பிரச்சினைகள் பற்றி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு பொறுப்பு சுமத்தும் வழிமுறை உருவாக்கப்படும் என்று மஹிந்த கொடுத்த உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டதன் மூலம் ஒரு சரியான முடிவெடுப்பதில் பான் கீ மூன் தவறிழைத்துவிட்டார் என்றும் பிராட் அடம்ஸ் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுக்க விசா நடைமுறைகளில் மாற்றம்

இலங்கையுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ள ஐக்கிய இராச்சியம், இலங்கை மக்கள் தமது நாட்டுக்கு விஜயம் செய்வதையும் அங்கு கல்வியைத் தொடர்வதையும் பெரிதும் விரும்புகின்றது. இருந்தபோதிலும், சட்ட ரீதியற்ற முறையில் நாட்டுக்குள் நுழைவதையும் சட்டரீதியற்ற குடியேற்றத்தையும் தவிர்க்கும் வகையில், விதிமுறைகளில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளதோடு அவற்றை இறுக்கமாக நடைமுறைப்படுத்தவும் எதிர்பார்க்கின்றோம் என்று இலங்கைக்காக பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மார்க் கூடிங் தெரிவித்தார்.

இதன்பொருட்டு மாணவர் விசாக்கள் மற்றும் குறுங்கால விஜயத்திற்கான விசா நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டுவந்துள்ள அதேநேரம், வதிவிட விசா வழங்குவதற்கான நடைமுறைகளையும் அடுத்த வருடம் முதல் திருத்தியமைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய இராச்சியத்திற்கான குடிவரவு நடைமுறைகள், விசா வழங்கல் நடவடிக்கைககள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் நேற்று நடைபெற்றது. அங்கு விளக்கமளிக்கும் போதே பிரதி தூதுவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையும் பிரித்தானியாவும் நீண்ட கால பொருளாதார, காலாசார மற்றும் வர்த்தக உறவுகளைக் கொண்ட நாடுகளாகும். இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு பல்வேறு வழிகளிலும் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது. இந்நாடுகளுக்கிடையில் பயணம் செய்யும் நடவடிக்கை இப்போது முக்கிய கட்டத்தில் உள்ளது. இதற்கு இரு காரணங்கள் உள்ளன.

முதலாவது இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து இரு வருடங்கள் பூர்த்தியடைந்து விட்டன. இதனால் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமன்றி, இந்நாட்டில் இருந்து பிரித்தானியாவுக்கு செல்ல விரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமுள்ளது.

இரண்டாவது, உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருந்த வீழ்ச்சி நிலை இப்போது சீரடைந்து விட்டது. இதன் காரணமாக எதிர்விளைவுகளைச் சந்தித்திருந்த ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரமும் மீட்சியடைந்து, மீளவும் முன்னேறிச் செல்கின்றது. இதனால் வர்த்தக முயற்சிகளை முன்கொண்டு செல்லும் நோக்கிலும், வேறு நோக்கங்களுக்காகவும் பிரித்தானியாவுக்கு சென்று வருவோரின் தொகை அதிகரித்துச் செல்கின்றது.

எனவே இவ்வாறான ஒரு காலகட்டத்தில், நல்ல நோக்கங்களுக்காக பிரித்தானியாவுக்கு செல்ல விரும்புகின்ற அனைவராலும் நேர்மையான முறையில் சமர்ப்பிக்கப்படுகின்ற விசா விண்ணப்பங்களை நாம் வரவேற்கின்றோம். ஆனால், போலியான அல்லது குடிவரவு சட்டங்களுக்கு புறம்பான விண்ணப்பங்கள் குறித்து இறுக்கமான சட்ட நடைமுறைகளை கையாள வேண்டியுள்ளது. இதற்காக குடிவரவு கொள்கைகள் திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து பெருமளவானோர் பிரித்தானியாவுக்கு சென்றுள்ளனர்; செல்கின்றனர். இப்போது சட்டரீதயிக்ஷிக அங்கு 2 இலட்சம் இலங்கையர் வாழ்கின்றனர். கடந்த வருடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விசா விண்ணப்பங்களில் 70 வீதமானவற்றுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 20 ஆயிரம் பேர் விசாவினைப் பெற்றுள்ளனர். இவர்களுள் 8000 பேர் குறுங்கால விஜய (விசிட்) விசாவையும் 7000 பேர் மாணவர்களுக்கான விசாவையும் பெற்றுள்ளனர்.

சாதாரணமாக 15 நாட்களுக்குள் விசா வழங்கப்படுகின்றது. அது நிராகரிக்கப்படும் பட்சத்தில் அதற்கான காரணம் தெளிவாக விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படுகின்றது. விசா ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கான அனைத்து நடைமுறை தொடர்பிலும் எமது இணையத்தளத்தின் ஊடாக அறிந்து கொள்ளலாம். இதற்கென ஆலோசனை முகவர்களின் உதவி அத்தியாவசியமற்றது என்றே கருதுகின்றேன் என்றார்.

ஐக்கிய இராச்சியத்தின் கரையோர கண்காணிப்பு முகவரகத்தின் பிராந்தியப் பணிப்பாளர் கிரிஸ் டிக்ஸ் உக்பா விளக்கமளித்து உரையாற்றுகையில்,

தவிர்க்கமுடியாத பல்வேறு காரணங்களினால் பிரித்தானியா தனது குடிவரவு சட்ட விதிகளை இறுக்கமாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டவிரோத குவியேற்றத்தை தடுப்பதும் சட்டத்திற்கு முரணாக நாட்டில் தங்கியிருத்தலை கட்டுப்படுத்துவதுமே இப்புதிய நடைமுறைகளின் பிரதான நோக்கமாகும். இது தொடர்பாக உலக நாடுகளின் அரசங்கங்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம்.

பிரித்தானியாவில் உயர்தரம் வாய்ந்த கல்வியகங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில் பலர் நேர்மையாக கல்வி நடவடிக்கைகளை தொடர்கின்றனர். ஆனால், இதனை சில உள்நாட்டு விண்ணப்பதாரிகளும் ஏன் குறைந்த தரத்திலான ஒரு சில பிரித்தானிய கல்வியகங்களும் துஷ்பிரயோகம் செய்கின்றமை தெரியவந்துள்ளது.

இலங்கையில் பிறந்த 2 இலட்சம் பேர் பிரித்தானியாவில் சட்டரீதியாக வசிக்கின்றனர் என்றாலும் சட்டத்திற்கு முரணாக எத்தனைபேர் அங்குள்ளனர் என்பது குறித்த மிகச் சரியான தரவுகள் எம்மிடம் இல்லை. நிச்சயமாக அத்தொகை மேற்குறிப்பிட்டதை விட கணிசமானளவு அதிகமாகவே இருக்கும். அவர்களுள் 26 பேரே அண்மையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இலங்கையில் இருந்து விசாவுக்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுள் மாதத்திற்கு 200 விண்ணப்பங்கள் போலியான ஆவணங்களுடன் மோசடியாக தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படுகின்றன. அப்படியாயின் நாளொன்றுக்கு சராசரியாக இவ்வாறான 10 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுகின்றன.

பிரித்தானியாவுக்கு கடந்த வருடத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 30ஆயிரம் பேர் குடிபெயர்ந்து வந்துள்ளனர். இலட்சக் கணக்கில் உள்ள குடியேற்றவாசிகளின் தொகையை ஆயிரக்கணக்காக குறைப்பதற்கு எமது அரசாங்கம் விரும்புகின்றது.

இதற்கமைய கொண்டுவரப்படும் புதிய விதிமுறைகளின் படி, கல்வியைத் தொடர்வதற்காக மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கும் ஒருவர், கூடியபட்சம் 5 ஆண்டுகள் மட்டுமே ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருப்பதற்கும் கல்வி கற்கவும் அனுமதிக்கப்படுவர். அதன்பின்னர் அவர் இலங்கைக்கு திரும்பியாக வேண்டும். அவர் மீண்டும் பிரித்தானியாவுக்கு செல்ல விரும்பின், அவர் விசாவுக்காக விண்ணப்பிக்கும் போது அவருக்கு இன்னுமொரு விசா வழங்குவதா என்பது குறித்து கவனமாக ஆராயப்படும். காலாநிதி போன்ற பட்டப் படிப்புகளை தொடரும் குறிப்பிட்ட சில தரப்பினருக்கு இதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் எனினும் பொதுவாக இவ்விதி கடைப்பிடிக்கப்படும்.

பிரித்தானியாவில் கல்வியைத் தொடர விரும்பும் விண்ணப்பதாரி, பிரித்தனிய அரசாங்கத்தின் கண்காணிப்பில் இயங்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றால் மட்டுமே பகுதிநேரமாக தொழில்புரிவதற்கு அனுமதிக்கப்படுவர். அங்கீகரிக்கப்படாத, தனியார் கல்வியகங்களில் கற்கைகளுக்காக பதிவு செய்யும் எவருக்கும் வேலை செய்வதற்கான அனுமதி கிடைக்காது.

இவ் விதி புதிதாக விசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கே செல்லுபடியாகும். எவ்வாறிருந்த போதும், அவர்கள் இதற்குப்பிறகு வேறொரு கற்கை நெறிக்கு பதிவு செய்ய முற்படுகின்றபோதோ அல்லது தமது விசா காலத்தை புதுப்பிக்க முனையும் போதோ இப்புதிய நடைமுறைக்கு உள்வாங்கப்படுவர்.

அத்துடன் , பிரித்தானியாவில் பட்டப்படிப்பு ஒன்றை பூர்த்தி செய்யும் ஒருவர், தமது தகுதிக்கமைய தொழில் செய்வதற்கான அனுமதிப் பத்திரத்தை முறையாக பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் இரு வருடங்கள் தொழில்நிமித்தம் தங்கியிருக்க அனுமதி கிடைக்கும்.

அதேநேரம், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவினை மேம்படுத்தும் வகையில் இலங்கையில் உள்ள மிக முக்கிய கம்பனிகளின் அதிகாரிகளுக்காக எக்ஸ்பிரஸ் சேர்விஸ் எனப்படும் விஷேட விசா நடைமுறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அது மட்டுமன்றி, சிலர் என்னென்ன காரணங்களை மனதில் வைத்துக் கொண்டு பிரித்தானிய விசாவுக்கு விண்ணப்பிக்கின்றனர் என்பது எமக்குத் தெரியும். எனவே, மிகவும் சிறந்த, நேர்மையான பிரஜைகளுக்கு மட்டுமே வதிவிட விசாவை வழங்கும் வகையில் அடுத்த வருடம் ஏப்ரல் முதல் குடிவரவு விதிகளில் மாற்றம் கொண்டுவர தீர்மானித்துள்ளோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

2020 க்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டுவிடும்: தினேஷ்

வடக்கு கிழக்கை உள்ளடக்கியதாக இதுவரையில் 5594.89 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் மற்றும் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. எதிர்வரும 2020 ஆம் ஆண்டுக்குள் மேற்படி மாகாணங்களில் புதைக்கப்பட்டுள்ள சகல கண்ணிவெடிகள் மற்றும் மிதி வெடிகளும் அகற்றப்பட்டு விடும் என்று அரசாங்கம் நேற்று சபையில் அறிவித்தது.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பி.ப. ஒரு மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கையின் பின்னர் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.யான ரவி கருணாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார் .

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள நாடுகள், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள நிலப்பரப்புக்கள், எஞ்சியுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு எடுக்கும் காலப்பகுதி ஆகியவை தொடர்பிலேயே ரவி கருணாநாயக்க எம்.பி.கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தொடர்ந்தும் பதிலளிக்கையில், சுவிற்சர்லாந்து, டென்மார்க், பிரிட்டன் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்ணிவெடிகள் மற்றும் மிதிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் படி 258.51 சதுர கிலோ மீற்றர் பரப்பளவு சுவிற்சர்லாந்துக்கும் 1336.29 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு டென்மார்க்கிற்கும் 650.59 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கு 1273.90 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பும் ஒதுக்கப்பட்டுள்ளன.

2002 முதல் இன்று வரையில் மேற்படி நான்கு நாடுகளும் நிறுவனங்கள் மற்றும் இராணுவத் தரப்பினாலும் 5594.89 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புகளில் கண்ணிவெடிகள் மற்றும் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. இதற்கென இதுவரையில் 149 கோடியே 28 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா, சீனா,அவுஸ்திரேலியா, யு.என்.எச்.சி.ஆர். ஐ.ஓ.எம். மற்றும் பொருளாதார அமைச்சு ஆகியவை கண்ணிவெடிகள் மிதிவெடிகளை அகற்றுவதற்கான உபகரணங்களை வழங்கியுள்ள அதேவேளை யுனிசெப் மற்றும் அமெரிக்கா ஆகியன 65 வாகனங்களையும் வழங்கியுள்ளன.

மேற்படி நிறுவனங்கள் மற்றும் நாடுகள் வடக்கு கிழக்கில் கண்ணிவெடி, மிதிவெடிகளை அகற்றுவதற்காக அதிகமான நன்கொடைகளையும் வழங்கியுள்ளன.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள், மிதி வெடிகள் அனைத்தும் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் முற்றாக அகற்றப்பட்டுவிடும். இந்த இலக்கினை கொண்டே அரசு செயற்பட்டுவருகிறது. 2020 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே இந்த இலக்கினை எட்டுவதற்கு அரசு எதிர்பார்க்கிறது. கண்ணிவெடிகள் மிதிவெடிகள் அகற்றப்பட்ட பிரதேசங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதுடன் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் அரசாங்கம் நிறைவேற்றியிருக்கின்றது என்றார்
மேலும் இங்கே தொடர்க...

ஆணுறையில் மறைத்து தங்க பிஸ்கட் கடத்தல் : இலங்கை வாலிபர் கைது

கொழும்பில் இருந்து விமானத்தில் திருச்சி சென்ற இலங்கை வாலிபர் ஆணுறையில் தங்கக் கட்டிகளை கடத்தியதால் திருச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து இந்தியா சென்ற விமானத்தில் பயணி ஒருவர் தங்க பிஸ்கட்களை கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சென்னை, திருச்சி விமான நிலையங்களில் நேற்று முன்தினம் தீவிர சோதனை நடத்தினர்.

கொழும்பிலிருந்து திருச்சி விமான நிலையம் சென்ற விமானம் ஒன்றில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், இலங்கையைச் சேர்ந்த வாலிபர் முகமது நஜிமுன் என்ற பயணியை ஸ்கேன் செய்து பார்த்தபோது, வயிற்றில் சந்தேகப்படும்படியான பொருள் இருந்தது. அவரை அரசு மருத்துவமனையில் சேர்ந்து டாக்டர்கள் மூலம் உள்ளே இருந்த பொருளை வெளியே எடுத்தனர். ஆணுறைக்குள், 12 தங்க பிஸ்கட் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதன் மதிப்பு, 40 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. அவரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரித்தனர். நேற்று அவரை கைது செய்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 29ஆவது இடம்

மிகவும் தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 29ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியிடப்படும் பொரின் பொலிஸி (வெளிவிவகாரக் கொள்கை) எனும் சஞ்சிகையினால் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் சோமாலியா முதலிடத்திலும் சாட் இரண்டாவது இடத்திலும் சூடான் 3ஆவது இடத்திலும் உள்ளன.

இலங்கையின் அயல் நாடுகளில் பாகிஸ்தான் இதில் முன்னிலை வகிக்கிறது. இப்பட்டியலில் பாகிஸ்தான் 12ஆவது இடத்தில் உள்ளது. மியன்மார் 18ஆவது இடத்திலும் பங்களாதேஷ் 25ஆவது இடத்திலும் நேபாளம் 27ஆவது இடத்திலும் உள்ளன.

60 நாடுகளைக் கொண்ட இப்பட்டியலில் பூட்டான் 50 ஆவது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் உள்ள நாடுகளில் பெரும்பாலானவை ஆபிரிக்க நாடுகளாகும்.

இலங்கை தொடர்பான குறிப்பில் 2010 ஆண்டின் சர்வதேச நெருக்கடிக் குழுவின் அறிக்கையின் படி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் இறுதிக்கட்ட நடவடிக்கை பொதுமக்கள் மீது எறிகணைகள் வீசுவதிலும் ஏனைய அக்கிரமங்களிலும் தங்கியிருந்தது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் கடைசியாக வெளியான புள்ளிவிபரங்களின் படி 327,000 பேரில் சிலர் இன்னும் இடம்பெயர்ந்த நிலையில் உள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க பிளவுகள் இன்னும் நிலவுகின்ற போதிலும் சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தும் அரசாங்கம் கடந்த காலத்தை மறக்க ஆர்வம் கொண்டிருப்பதாக தோன்றுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இராணுவ பதிவுக்கு எதிராக கூட்டமைப்பு தாக்கல் செய்திருந்த மனு வாபஸ்

வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் இராணுவ பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளது என யாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்ததையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் யாழ்.கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது பதிவு நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக அவர் வழங்கிய உறுதிமொழியை அடுத்தே குறித்த மனுவை வாபஸ் பெற தீர்மானித்ததாக சிரேஷ்ட சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ்.சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக உயர் நீதிமன்றத்திடம் அறிவித்தனர்.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான என்.ஜே.அமரதுங்க, பி.ஏ.ரத்னாயக மற்றும் சந்திரா ஏக்கநாயக்க ஆகியோர் முன்னிலையில் கடந்த மார்ச் 3ஆம் திகதி விசாரிக்கப்பட்ட இந்த மனுவில் பிரதிவாதிகளான பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, யாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, இராணுவ பேச்சாளர் உபய மெதவல மற்றும் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அவர்கள் சார்பில் சட்டமா அதிபர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

பலாத்காரமான முறையில் பொதுமக்கள் பதிவு நடவடிக்கை இடம்பெறுவதுடன் புகைப்படம் பிடிக்கப்படுவதாகவும் இதற்கு மேலதிகமாக கிளிநொச்சி மாவட்ட மக்கள் சிங்கள மொழியில் அச்சடிக்கப்பட்ட பத்திரத்தில் பலவந்தமாக கைச்சாத்திட வைக்கப்படுவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தில் எவரும் கொல்லப்படவில்லை என்பதை யாரும் நம்பமாட்டார்கள்: கிரியல்ல



இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொது மக்களில் ஒருவர் கூடக் கொல்லப்படவில்லை என அரசு கூறுகின்றது. இதனை யாரும் நம்பமாட்டார்கள், இதனை அரசு சர்வதேசத்திடம் விளக்கிக் கூற வேண்டும் என்று ஐ.தே.க. எம். பியான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஒதுக்கீடு சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரிக்கப்பட்டு விட்டதாக அரசு கூறுகின்ற போதிலும் அந்த அறிக்கையில் கேட்கப்பட்டுள்ள 31 கேள்விகளுக்கும் அரசு மிகவும் இரகசியமான முறையில் பதிலளித்துள்ளது.

இலங்கை தொடர்பான ஐ. நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் சனல் 4 வீடியோ காட்சி தொடர்பாகவும் சர்வதேசத்திற்கு விளக்கமளிக்க அரசு இதுவரையில் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இவை தொடர்பில் சர்வதேச நாடுகளுடன் பேச்சுக்களை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அரசு அதனை செய்யவில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்பு சனல் 4இல் வீடியோ காட்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. இதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அப்போது கூறியது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நாட்டிற்கு ஏற்படும் ஆபத்துக்கள் அவப் பெயர்களை தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். இது தொடர்பாக ஊடகங்களுடனோ நாட்டு மக்களுடனோ அல்லது பாராளுமன்றத்திலோ பேசுவதில் எந்த பயனும் இல்லை சர்வதேசத்துடன் தான் பேச வேண்டும்.

ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையை பொய்யென நிரூபிப்பது அரசின் கைகளில் தான் இருக்கிறது. ஆனால் இது தொடர்பில் அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது தொடர்பில் உடனடியாக சர்வதேசத்துடன் பேச வேண்டும்.

ஐ. நா. மனித உரிமைகள் சபையின் அலுவலகம் ஒன்றை கொழும்பில் திறந்து இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை பொய்யாக்குவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

21 ஜூன், 2011

த.தே.கூ தாக்குதல் பின்னணியில் இராணுவத்திற்குள் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான குழு: வாசுதேவ

இராணுவத்திற்குள் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான கடும் போக்குடைய இரகசிய குழுவினரே யாழ்ப் பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியிலுள்ளனர். தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஒரு சில குழுக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன என்று தேசிய மொழிகள் மற்றும் இன நல்லுறவு அமைச்சரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பிரபாகரனின் தயார் இறந்த பின்னர் தகனக் கிரியைகள் இடம்பெற்ற இடத்தில் நாய்களை சுட்டுக் கொன்று வீசியவர்களும் இத்தகைய குழுவினரேயாவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

யாழ்ப்பாணத்தில் அளவெட்டியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அப்பிரதேசத்தில் உருவாகப் போகும் ஜனநாயகச் சூழலை இல்லாதொழிப்பதே இத் தாக்குதலின் நோக்கமாகும். இதன் மூலம் ஜனநாயக அரசியலை இல்லாதொழிப்பதும் அரசாங்கத்தை அசௌகரியத்துக்குள் தள்ளுவதுமே சூத்திரதாரிகளின் நோக்கமாகும்.

இராணுவத்தில் உள்ள பிடிவாதமுடைய தமிழ் மக்களுக்கு எதிரான இரகசியக் குழுவினரே இத்தாக்குதலின் பின்னணியில் இருக்கின்றனர். இக்குழுவினர் தான் பிரபாகரனின் தாயார் இறந்த பின்னர் தகனக் கிரியைகள் இடம்பெற்ற இடத்தில் நாய்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அவ்விடத்தில் வீசியவர்களுமாவர்.

இக்குழு அரசியல் ரீதியாக செயற்படுவதோடு தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதக் குழுவாகும். எனவே இராணுவத்தில் இயங்கும் இந்த இரகசிய குழு தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி கண்டுபிடித்து களைய வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் மேலும் பயங்கரமான நடவடிக்கைகளை இக்குழு மேற்கொள்ளும் நிலைமை உருவாகும். இக்குழுவினரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

இன்று ஜனாதிபதியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையிலேயே அமெரிக்காவில் ஒரு பிராந்தியத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாட்டின் பிராந்திய மாவட்ட நீதிமன்றத்திலேயே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே எதுவும் செல்லுபடியாகாது. எமது நாட்டுக்குள்ளேயே வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டாலும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு அதனை இரத்து செய்யும் அதிகாரம் உண்டு. சனல் 4இல் ஒளிபரப்பாகிய எமது இராணுவத்தினர் தொடர்பான வீடியோ நாடாவை கோரியுள்ளோம். அது தொடர்பில் ஆராய்ந்து இராணுவத்தினர் குற்றங்கள் செய்திருப்பின் அதற்கெதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே வெறுமனே ஆதாரங்கள் இன்றி திரைப்படத்தை காண்பிப்பது போன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மேலும் இங்கே தொடர்க...

செனல் 4 ஆவணப்படம் அரசியல் இலாபம் தேடும் சிலரால் தயாரிக்கப்பட்டது : பீரிஸ்

செனல்4 ஆவணப்படமானது ஜனாதிபதி மகிந்தவின் குரல் சர்வதேசத்தில் ஒலிக்காமல் தடைசெய்வதற்காக அரசியல் இலாபம் தேடும் சிலரால் போலித்தனமாக தயாரிக்கப்பட்டது என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் இன்று முற்பகல் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

'சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப்பெயரை எற்படுத்த பலர் முயற்சித்து வருகிறார்கள். செனல்4 காணொளியும் அந்த முயற்சிகளின் ஓர் அங்கமேயாகும்.

சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்கு கௌரவமான பெயர் உண்டு. அதனை இல்லாமல் செய்வதற்கு சில சக்திகள் முயற்சிக்கின்றன' என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைப் பணிப்பெண்கள் மீது பாலியல் வல்லுறவு: ஜோர்தான் ஆடைத்தொழிற்சாலை முகாமையாளர் கைது

ஜோர்தானிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் இலங்கைப் பெண்களை பல மாதங்களாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் அந்த ஆடைத்தொழிற்சாலை முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோர்டானிலுள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலை நிறுவனங்களில் ஒன்றான கிளஸிக் குறூப் ஆடைத்தொழிற்சாலையில் இலங்கை பெண்களை வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் இந்நபர் இலங்கையரான அனில் சாந்த என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வல்லுறவுப் புகார்கள் குறித்து அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலக தொழிலாளர் மற்றும் மனித உரிமைகளுக்கான நிறுவகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அதன்பின் அது தொடர்பான செய்திகள் உலகெங்கும் பல ஊடகங்களில் வெளியாகின.

அது தொடர்பாக புகார்கள் கிடைக்கவில்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் நலன்புரி அமைச்சு ஆரம்பத்தில் மறுத்திருந்த போதிலும் அண்மையில் இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்துவதற்காக இருவர் கொண்ட குழுவொன்றை ஜோர்தானுக்கு அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய மீனவர்கள் 23 பேர் கைது



இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 23 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு மண்டபம் மற்றும் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 23 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் மத்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை நேற்றிரவு 11 மணியளவில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் இந்திய மீன்பிடித்துறை உதவிப் பணிப்பாளர் மார்கண்டேயன் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் தப்பிச் செல்ல முற்பட்டபோதும் இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்திய மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 5 மீன்பிடிப் படகுகளும் மன்னார் கடற்படை முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

கூட்டமைப்பின் மீதான தாக்குதலுக்கு இந்திய வம்சாவளி மக்கள் கண்டனம்


யாழ்ப்பாணம் அளவெட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டம் ஆயுததாரிகளால் குழப்பியடிக்கப்பட்டு கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

இச்சம்பவம் தொடர்பாக முன்னணியின் தலைவர் முத்தப்பன் செட்டியார் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அமைதியான சூழல் நிலவும் இன்றைய காலகட்டத்தில் இடம்பெற்றுள்ள வேண்டத்தகாத கசப்பான, இவ்வாறான சம்பவம் அமைதி நிலையை சீர்குலைக்க வழிவகுத்துவிடும். இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அரசியல் நடவடிக்கையை நாம் வரவேற்கின்றோம்.

அதேநேரம் குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். குற்றமிழைத்தவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி தண்டிக்காவிட்டால் எதிர்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர வழிவகுத்து விடும். எந்தவொரு அரசியல்கட்சியும் தமது ஜனநாயக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் உரிமை உள்ளது. எனவே, ஜனநாயக செயற்பாடுகளை சீர்குலைத்து அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துபவர்கள் தொடர்பாக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியமாகும்.

எனவே, இச்சம்வம் தொடர்பில் நீதியான நேர்மையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று அரச உயர்மட்டத்தினரை கேட்டுக்கொள்கின்றோம் என்றும் முத்தப்பன் செட்டியார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்கா செல்வதை தடுக்க முடியாது


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவுக்குச் செல்வதைத் தடுக்க முடியாது. சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரகடனத்தின்படி அரச தலைவர்களுக்கு விதிவிலக்கு உண்டு என நீதி அமைச்சின் செயலாளர் சுஹதகம்லத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி உள்ளது தொடர்பாகவே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து முப்பது மில்லியன் டொலர்களை நஷ்ட ஈடாகக் கோரி வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மூன்று வழக்குகள் தொடர்பாக வாஷிங்டன் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.

அலரி மாளிகைக்கு இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டபோது அங்கு அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பின்னர் நீதியமைச்சு இந்த அழைப்பாணையை ஏற்றுக் கொண்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செப்டெம்பர் மாதம் ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா செல்ல வுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...