15 மார்ச், 2011

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவி படுகொலை: இலங்கை இளைஞர் கைது

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவி ஒருவரை கடந்த வாரம் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்து பெட்டிக்குள் அடைத்து வீசியதாக இலங்கையில் பிறந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் 19 வயது இளைஞன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மார்ச் 11ஆம் திகதியன்று கட்டிட தொழிலாளர்களால் கால்வாய் கரையில் இருந்து சூட்கேஸ் பெட்டியொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்டவர் 24 வயதுடைய இந்திய மாணவி தோஷா தாக்கர் என அவுஸ்திரேலிய பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய ரயில் பெட்டிகள் இறக்குமதிக்குத் தடை



இந்தியாவில் இருந்து கொழும்பு- மாத்தறை அதிவேக புகையிரத சேவைக்காக இறக்குமதி செய்யப்படவுள்ள 20 புகையிரத பெட்டிகளில் 17 பெட்டிகளை இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்ட மூன்று புகையிரதப் பெட்டிகள் எதிர்பார்த்த அளவு தரத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் இதனால் இறக்குமதி செய்யப்படவிருந்த பெட்டிகளை இடைநிறுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு புகையிரத பெட்டியின் பெறுமதி இலங்கை நாணயப்படி ரூபா 38கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் அகழ்வுப்பணிகள் ஜூலையில் ஆரம்பம்

மன்னார் கடற்பரப்பில் எதிர்வரும் ஜூலை மாதம் எண்ணெய் அகழ்வுப்பணி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கரின் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கையின் வடமேற்குக் கடற்பிராந்தியத்தில் எண்ணெய் வள ஆய்வுகளை நடத்துவதற்காகவும் அந்தப் பிராந்தியத்தில் மூன்று எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டுவதற்காகவுமென கரின் நிறுவனம் 2008 ஆம் ஆண்டு 10 கோடி டொலர்களை முதலிட்டிருந்தது.

இப் பணிகள் இந்த ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரித்தானியாவின் கரின் 'எனேர்ஜி" நிறுவனத்தின் இந்தியக் கிளையான கரின் இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.க. மனு உள்ளிட்ட மூன்று மேன்முறையீடுகளை நிராகரித்தது நீதிமன்றம்

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனு நிராகரிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று மேன்முறையீட்டு மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்துள்ளது.

ஏறாவூர் பிரதேச சபைக்கான ஐக்கிய தேசிய கட்சியும், குச்சவெளி பிரதேச சபைக்கென லங்கா சமசமாஜக் கட்சியும், கந்தளாய் பிரதேச சபைக்கென சுயேட்சைக் குழு ஒன்றினாலும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு மேன் முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

குறித்த மனுக்கள் மனுக்களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஹெல உறுமய

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு தொடர்பான இலங்கை அரசின் நிலைப்பாடு தெளிவில்லாமலேயே உள்ளது. எனவே நிபுணர் குழுவின் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகச் செயலாளரும் பேச்சாளருமான நிடிகீந்த ஸ்ரீ வர்ணசிங்க

இலங்கைக்கு எதிராக நியமிக்கப்ட்ட பான் கீ மூனின் நிபுணர் குழுவிற்கு ஜாதிக ஹெல உறுமய கொள்கை ரீதியாகவே எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இறுதிக் கால யுத்தின் போது இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் செய்ய உள்நாட்டில் நீதிமன்றங்களும் சட்டங்களும் இருக்கும் போது சர்வதேச விசாரணையொன்று நடைபெறுவது ஏற்றுக் கொள்ள முடியாது.
மேலும் இங்கே தொடர்க...

போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் பொலிஸாரால் கைது

குருநாகல் வாரியபொல நகரில் ஆறு போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த ஒருவரை வாறியபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குருநாகல் வாரியபொல மஹ மல்கொல்லேவ எனும் இடத்தைச் சேர்ந்த குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

வட, கிழக்கு ஆசிரியர்களுக்கு 3 மாத முற்கொடுப்பனவு சம்பளம் வழங்கப்படவில்லை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரச ஊழியர்களுக்கு முற்பணமாக மூன்று மாத சம்பளம் வழங்கப்படுமென அரசாங்கம் அறிவித்திருந்தும் இன்னும் வழங்கப்படவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜேசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

3 இலக்கம் 2011ஆம் ஆண்டு சம்பள சுற்றறிக்கை பிரகாரம் முற்கொடுப்பனவு வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்த போதும் இன்னும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மூன்று மாத முற்கொடுப்பனவு சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

88, 89 களில் நிலவிய இருண்ட யுகத்தை ஏற்படுத்த சில கட்சிகள் முயற்சி அம்பாந்தோட்டையில் ஜனாதிபதி






இந்த நாட்டில் 1988ம், 1989ம் ஆண்டுகளில் நிலவிய இருண்ட யுகத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்கு சில அரசியல் கட்சிகள் முயற்சி செய்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று அம்பாந்தோட்டையில் தெரிவித்தார்.

அப்பாவி பாடசாலை மாணவ, மாணவியரை ஏமாற்றி அவர்களைத் தவறான வழியில் இட்டுச் செல்லுவதற்கு இந்த அரசியல் கட்சிகள் சூட்சுமமான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், குறிப்பிட்டார்.

“தமது பிள்ளைகளின் செயற்பாடுகள் குறித்து ஒவ்வொரு பெற்றோரும் மிகுந்த அவதானத்துடன் கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் அவ்வாறான அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளில் சிக்கி உங்களது குழந்தைகள் தவறான வழியில் சென்று விடாது அவர்களைப் பாது காத்துக்கொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

உள்ளூராட்சித் தேர்தலின் நிமித்தம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அங்குணுகொல பெலஸ்ஸ பிரதேச சபைக்கான பிரதிநிதிகள் மாநாட்டை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் அவரது அங்குணுகொல பெலஸ்ஸ வளாகத்தில் நேற்று மாலை நடாத்தியது. இம்மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சில அரசியல் கட்சிகள் சூட்சுமமான முறையில் ஆசிரியர்களைச் சேர்த்துக்கொண்டு அப்பாவி மாணவ, மாணவியரை ஏமாற்றி தவறான வழியில் இட்டுச் செல்ல முயற்சியில் ஈடுபடுவதாகத் தெரிகின்றது. இச்சூழ்ச்சி குறித்த பொலிஸ் அறிக்கைகளும் எமக்குக் கிடைத்துள்ளன. இந்த முயற்சி எந்தெந்த பிரதேசப் பாடசாலைகளில் இடம்பெறுகின்றன. அவற்றுக்குப் பயன்படுத்தும் மாணவ, மாணவிகள் யார் போன்ற விபரங்களும் அந்த அறிக்கையில் உள்ளன.

இக்கட்சியினர் பதினான்கு, பதினைந்து வயது மாணவ, மாணவியருக்கு பிரத்தியேக வகுப்பு, கருத்தரங்குகளை நடத்துவதாகக் கூறி இச்சூழ்ச்சியை ஆசிரியர்களை கொண்டு முன்னெடுக்கின்றனர். இவர்கள் அரசியல் கோஷங்களை கரும்பலகைகளில் எழுதவும், துண்டுப் பிரசுரங்களை ஒட்டவும் இவ் வகுப்புகளில் சொல்லிக்கொடுக்கின்றனர்.

பெற்றோர்களே! உங்களது அப்பாவிக் குழந்தைகளை அரசியல் கோஷங்களை கரும்பலகைகளில் எழுதிப் பழகவும், துண்டு பிரசுரங்களை ஒட்டும் முறைகளையும் அறிந்துகொள்ளவா பாடசாலைக்கும், தனியார் வகுப்புக்களுக்கும் அனுப்புகின்ஹர்கள் அதனால் உங்களது குழந்தைகளின் நடவடிக்கை, செயற்பாடுகள் குறித்து சிறுபராயத்தில் கவனம் செலுத்தியது போல் இப்போதும் அவர்கள் மீது கவனம் செலுத்துங்கள்.

இவர்கள் உங்களது குழந்தைகளைத் தவறான வழிக்கு இட்டுச் செல்லும் வகையிலான கருத்துக்களை அவர்களது பிஞ்சு உள்ளங்களில் விதைக்கின்றார்கள். இதனூடாக பெற்றோர் மீதும் ஆசிரியர்கள் மீதும், சமூகத்தின் மீதும் பகைமைகொள்ளும் மனப்பான்மை இவர்களில் வளர்க்கப்படு கின்றது. இவ்வாறான நடவடிக்கையின் ஊடாகவே 1988ம், 1989ம் ஆண்டில் இந்த நாட்டில் இருண்ட யுகம் உருவாக்கப்பட்டது. அந்த இருண்ட யுகத்தின் போது எமது இளம் பராயத்தினர் எவ்வாறு அழிக்கப்பட்டார்கள். முடக்கப்பட்டார்கள் என்பதை நாம் இன்னுமே மறந்துவிட வில்லை.

இவர்களது சூழ்ச்சியில் அன்று சிக்கிய மாணவர்கள் எத்தனையோ பேர் நிர்க்கதியான நிலையில் கண்ணீர் சிந்தியதை நாமறிவோம்.

அப்படியான இருண்ட யுகத்தை ஏற்படுத்தவே இக்கட்சிகள் முயற்சி செய்கின்றன. இவர்களின் ஆசை வார்த்தைகளையும் ஏமாற்று வித்தைகளையும் நம்புவதற்கு எமது இளைஞர்கள் தயாரில்லை. அதனால் தான் பதினான்கு, பதினைந்து வயது அப்பாவி மாணவ/மாணவியரை வளைத்து விட முயலுகின்றனர்.

அரசியல் செய்வதென்றால் திறந்த மனதோடு அரசியல் செய்யுங்கள். இதை விடுத்து யாதுமறியாத அப்பாவி குழந்தைகளை அரசியலுக்குள் இழுத்து அவர்களது எதிர்காலத்தை சீரழிக்காதீர்கள். இலவசக் கல்வி சீரழிவதற்கு நாம் ஒருபோதும் இடமளியோம்.

கடந்த காலங்களில் நகரங்கள் தான் அபிவிருத்தி செய்யப்பட்டன. இதனால் கிராம மக்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து வந்தனர்.

இதற்கான பிரதான காரணம் கொழும்பு உள்ளிட்ட சில நகரங்களில் வீதிகள் பாடசாலை, ஆஸ்பத்திரி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்ட மையாகும்.

ஆனால் நாம் பதவிக்கு வந்த பின்னர் நகரங்களின் அபிவிருத்தியைக் கிராமங்களுக்கும் கொண்டுசென்றுள்ளோம். இதன் விளைவாக நகரங்களுக்கு இடம்பெயர்வோரின் எண்ணிக்கை பெரிதும் குறைவடைந்துவிட்டது.

இப்போது கொழும்பு மக்கள் கூட கிராமங்களுக்குச் சென்று குடியேறும் நிலமை ஏற்பட்டிருக்கின்றது. நகரத்தில் கிடைக்கும் வசதிகள் கிராமங்களில் ஏற்படுத்தப்பட்டிருப்பதன் வெளிப்பாடுதான் இது. நாம் முழு நாட்டையும் அபிவிருத்தி செய்து வருகின்றோம்.

ஆகவே இந்த உள்ளூராட்சித் தேர்தலில் எமது ஐ.ம.சு. முன்னணி அமோக வெற்றி பெறும் அந்த வெற்றியில் நீங்களும் பங்காளர்களாகுங்கள் என்றார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான அருந்திக பெர்னாண்டோ, திலும் அமுனுகம, ஜே. ஆர். பி. சூரியபெரும உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

குறையை முறையிட்டோர் வீடு திரும்பும் முன்பே தீர்த்துவைத்த ஜனாதிபதி





துணுக்கேதெனிய மஹாபாக பாடசாலை மாவணர்கள் கல்விச் சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பிற்கு பயணம் செய்தனர். அவர்கள் அலரி மாளிகைக்குச் சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்திக்கவும் மறக்கவில்லை.

அதன்போது ஜனாதிபதி அவர்கள் அந்த மாணவர்களிடம் சுகம் விசாரித்துவிட்டு கற்கை நடவடிக்கைகள் பற்றியும் வினவினார். அதன்போது மாணவர்கள், எமது பாடசாலையில் மலசலகூட வசதி, குறைபாடு உள்ளது. பாடசாலைக்குச் செல்லும் வீதியும் மிக மோசமான நிலையிலே உள்ளது என ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்தனர்.

துணுக்கேதெனிய மாணவர்கள் இன்ன மும் கொழும்பை சுற்றிப் பார்த்தவாறு உள்ளனர்.

மறுபுறமாக மாலை நேரம் வாகனமொன்றிலே பாடசாலைக்குச் சென்ற ஒருசிலர் பாடசாலைப் பிரதேசத்தை அளந்து விட்டுத் திரும்பிச் சென்றனர். சுற்றுலா சென்ற மாணவர்கள் இன்னமும் கொழும்பிலேயே உள்ளனர். இருளாகிவரும் வேளையில் மற்றுமொரு பிரிவினர் பாடசாலைக்குச் சென்று தகவல்களை கேட்டறிந்தனர். அவர்களில் சப்ரகமுவா மாகாண முதலமைச்சர் மஹீபால ஹேரத்தும் காணப்பட்டார். மறுதினம் காலையில் சேதமான வீதி கொகிரீட் இட்டு புனரமைக்கப்பட்டது.

முதலமைச்சர் இவ்வாறு உடனடியாக செயற்படுவதற்கான காரணம், பாடசாலை மாணவர்களின் முறைப்பாட்டினை உடனடியாக ஜனாதிபதி அவர்கள் சப்ரகமுவா மாகாண முதலமைச்சர் மஹீபால ஹேரத்திடம் தொலைபேசி ஊடாக தெரிவித்தமையாகும். துணுக்கேதெனிய பாடசாலை மாணவர்கள் கல்விச் சுற்றுலாவை முடித்துவிட்டு வீடு திரும்ப முன்னரே பாடசாலையின் குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன.

முதலமைச்சரின் வருகை பற்றி அறிந்த கிராமத்து மக்கள் அங்கே வந்து ஒன்றுசேர்ந்தனர். அவர்கள் மத்தியில் இது பற்றி விளக்கிய முதலமைச்சர் “எமது ஜனாதிபதியின் வேலையைப் பார்த்தீர்களா" இப்படித்தான் அவர் பணியாற்றுவார் என்று கூறிவிட்டுச் சென்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நீதி, நியாயமான தேர்தலுக்கு இடையூறுகள் ஏற்பட்டால் வாக்குகள் செல்லுபடியாகாது






உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது கலவரம் ஏற்படுத்தி சுதந்திரமும் நியாயமானதுமான தேர்தலை நடத்த இடமளிக்கப்படாத அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் அளிக்கப்படும் வாக்குகள் செல்லுபடியற்றதாக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள் ளார்.

இவ்வாறு வாக்களிப்பு நிலையமொன்றில் அளிக்கப்படும் வாக்குகள் செல்லுபடியற்ற தாக்கப்பட்டால் அதனுடன் சம்பந்தப் பட்ட உள்ளூராட்சி மன்றத்தின் இறுதி முடிவுகள் வெளியிடப்படமாட்டாது என்று அவர் மேலும் கூறினார்.

அவ்வாறான ஒரு வாக்காளிப்பு நிலையத்தில் மீண்டும் வாக்களிப்பு நடத்தப்பட்டு அதன் பின்னரே குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றத்தின் தேர்தல் முடிவு வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

வாக்களிப்பு நிலையமொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள தேர்தல் அதிகாரிகளை விரட்டியடித்தல், காலை 7 மணிக்கு வாக்களிப்பை ஆரம்பிக்க முடியாமற் செய்தல், மாலை 4 மணிக்கு வாக்களிப்பை முடிவுக்கு கொண்டு வரமுடியாமற் செய்தல், வாக்காளர்களை அச்சுறுத்துதல் ஆகியவை நியாயமான தேர்தலை நடத்த இடமளிக்கப்படாத நடவடிக்கைகளாக கணிக்கப்படும்.

பலவந்தமாக போடப்படும் வாக்குகளை நீக்கிவிட்டு வாக்குகளை எண்ண நடவடிக்கை எடுக்கப்படவுள்ள போதிலும் வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல முடி யாமற் போகுமிடத்து அப் பிரதேசத் துக்கான வாக்குகள் செல்லுபடியற்ற தாக்கப்படும் என்றும் தேர்தல் ஆதீணாயளர் குறிப்பிட்டார்.

அதேபோன்று குழப்ப நிலை உள்ள பிரதேசங்களில் தேர்தல் முடிவுகளை வெளியிடுவது தாமதமாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

அணு உலைகளில் தொடர்ந்தும் வெடிப்பு ஜப்பானில்... நேற்றும் 2000 சடலங்கள் மீட்பு



ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து மூன்றாவது அணு உற்பத்தி நிலையத்திலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகரித்திருப்பதால் புக்கிஷிமாவிலுள்ள அணு உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட அதிகரித்த வெப்பத்தால் அங்குள்ள குளிரூட்டிகள் வெடித்து வருகின்றன. கடந்த நான்கு நாட்களில் 3 அணு உற்பத்தி நிலையங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இவ்வெடிப்புக்களைத் தொடர்ந்து அணுக்கசிவு ஏற்படுவதற்கான அபாயம் மேலும் அதிகரித்துள்ளது. அதேநேரம், சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதுவரை 2000ற்கும் அதிகமானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சுனாமி அனர்த்தத்தில் முற்றாகப் பாதிக்கப்பட்ட மியாகிப் பிரதேசத்தில் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பார்கள் என அந்தப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். சுனாமி அனர்த்தத்தால் ஜப்பானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் பல மடங்குகளாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், ஜப்பானில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு 68 விசேட மீட்புக் குழுக்களை அனுப்புவதற்கு 45 நாடுகள் முன்வந்துள்ளன. முதற்கட்டமாக அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து மீட்புக் குழுக்கள் கோரப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

ஓமந்தை வரை யாழ். தேவி






எதிர்வரும் 26ம் திகதி ஓமந்தை ரயில் நிலையம் வைபவ ரீதியாக திறக்கப்படும்.

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட இந்த நிலையம் புனரமைக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் கொழும்பிலிருந்து தாண்டிக்குளம் வரை நடைபெற்று வருகின்ற ரயில்சேவைகள் 26ம் திகதி முதல் ஓமந்தை வரை நீடிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

வவுனியாவிலிருந்து இதுவரைகாலமும் பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பிற்கு புறப்பட்ட யாழ். தேவி ரயில் சேவை ஒரு மணித்தியாலம் முன்னதாக 2.30 மணிக்கு புறப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓமந்தை நிலையம் திறக்கப்பட்ட தும் கொழும்பிற்கான அனைத்து ரயில் வண்டிகளும் அங்கிருந்து புறப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல் பிரசாரம் நிறைவு


உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தன. பிரதான கட்சிகள் நேற்று தமது இறுதிக் கட்ட பிரசாரப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டன.

ஐ. ம. சு. மு. வின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றது.

இ,தில் அமைச்சர்கள் உட்பட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

தேர்தல் பிரசாரப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் சுவரொட்டிகள், தேர்தல் அலங்காரங்கள் அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடாத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு 16ஆம் திகதி இரவு வரை கட்சி அலுவலகங்களைத் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் பணிகளில் ஈடுபடும் பொலிஸார் மற்றும் அரச ஊழியர்கள் இன்று பிற்பகல் முதல் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையங்களுக்கு செல்ல வுள்ளனர்.

அரச அதிகாரிகளுக்கான விசேட கூட்டம் நாளை வாக்களிப்பு நிலையங்களில் நடைபெற உள்ளதாக தேர்தல் செயலகம் கூறியது. பொலிஸார் நாளை முதல் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

தேர்தலை முன்னிட்டு தேர்தல் திணைக் களம் விசேட பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. வாக்கு மோசடிகளைத் தடுக்கவும் விசேட திட்டங்கள் முன் னெடுக்கப்படவுள்ளன
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பாடசாலைகள் மூடப்படும் கல்வி அமைச்சு அறிவிப்பு




உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடை பெறும் பிரதேசங்களில் உள்ள அர சாங்க பாடசாலைகள் நாளை 16ஆம் திகதியும் நாளை மறு நாளான 17ஆம் திகதியும் மூடப் பட்டிருக்கும் என்று கல்வி அமை ச்சின் செயலாளர் எச். எம். குண சேகர தெரிவித்துள்ளார்.

அதேவேளை யாழ்ப்பாணம், கிளி நொச்சி உள்ளிட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறாத இடங் களில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளும் வழமை போல் இயங்கும் என்று அவர் மேலும் கூறினார்.

வாக்குகளை எண்ணும் நிலையங் களாக பயன்படுத்தப்படும் பாட சாலைகள் நேற்று 14ஆம் திகதி முதல் எதிர்வரும் 19ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை மூடப்பட்டி ருக்கும் தேசிய பாடசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகள் வரு மாறு:

1) இசிபதன கல்லூரி - கொழும்பு

2) சியனெ மகா வித்தியாலயம் – பத்தலகெதர, கம்பஹா

3) பஸிதுன்ரட கல்வியியற் கல்லூரி - களுத்துறை

4) கிறிஸ்து தேவ தேசிய பாடசாலை – மாத்தளை

5) காமினி தேசிய பாடசாலை – நுவரெலியா

6) சுசீ தேசிய பாடசாலை - அம்பாந்தோட்டை

7) மலியதேவ ஆண்கள் பாடசாலை – குருணாகல்

8) மலியதேவ பெண்கள் பாடசாலை – குருணாகல்

9) சென். அன்ட்ரூஸ் மகா வித்தியாலயம் – புத்தளம்

10) மத்திய மகா வித்தியாலயம் - அனுராதபுரம்

11) புவஸ்திபுர தேசிய கல்வியியற் கல்லூரி - பொலன்னறுவை

12) மகானாம மத்திய மகா வித்தியாலயம் - மொனராகல

13) விசாக உயர்தர மகளிர் பாடசாலை – பதுளை

14) பதுளை மத்திய மகா வித்தியாலயம் – பதுளை

வாக்குகளை எண்ணும் நிலையங்களாக

பயன்படுத்தப்படும் பாடசாலைகள்

1) வித்யாலோக வித்தியாலயம் – பத்தலகெதர, கம்பஹா

2) மியூஸியஸ் வித்தியாலயம் - களுத்துறை

3) சென். சில்வெஸ்டர் - கண்டி

4) சென். அலோசியஸ் - காலி

5) ரோஹன மகா வித்தியாலயம் – மாத்தறை

6) ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல வித்தியாலயம் – குருணாகல்

7) பாத்திமா மகளிர் வித்தியாலயம் – புத்தளம்

8) செய்னப் மகளிர் வித்தியாலயம் – புத்தளம்.

9) விசாகா கனிஷ்ட வித்தியாலயம் – பதுளை.

10) சுமன மகளிர் - இரத்தினபுரி

11) சுவர்ண ஜயந்தி - கேகாலை

12) கேகாலை மகளிர் மகா வித்தியாலயம் - கேகாலை.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் இலாபத்துக்காக மாணவர்களை ஐ.தே.க பலிக்கடாவாக்குகிறது அம்பாந்தோட்டையில் ஜனாதிபதி


வெளிப்படையாக பேச முடியாத எதிர்க்கட்சியினர் அரசின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு குழப்பம் விளைவிக்கிறது

அரசியல் தேவைகளுக்காக எதிர்க்கட்சியினர் மாணவர் சமுதாயத்தைக் காட்டிக்கொடுத்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியல் லாபத்திற்காக மாணவர்களை காட்டிக்கொடுப்பதற்கு இடமளிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

அம்பாந்தோட்டை மாவட்ட த்தில் உள்ள ஐ.ம.சு. முன்னணி ஆதரவாளர்களை ஜனாதிபதி நேற்று சந்தித்தார். நேற்று காலை லுணுகம்வெகர, தியவர கிராம ஐ.ம.சு.மு. செயற்பாட்டாளர்களை சந்தித்த அவர், அடுத்து தங்கல்ல, தெபரவெவ, பன்னகமுவ மற்றும் திஸ்ஸமகாராம பிரதேச ஆதரவா ளர்களை சந்தித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரி வித்த ஜனாதிபதி பாடசாலை நேரத்தை நீடிக்கப்போவதாக எதிர் க்கட்சி பொய்ப் பிரசாரம் செய்து வருகிறது. மாணவர்களின் மனதை குழப்பும் கீழ்மட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சியினர் வெளிப்படையாக பேச முடியா மல் அரசின் அபிவிருத்தி நடவடிக் கைகளை குழப்பும் பயனற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என் றும் ஜனாதிபதி கூறினார்.

இதேவேளை ஜே.வி.பி.யினால் கொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூரும் வகையில் தங்கல்ல பஸ் தரிப்பிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளி லும் ஜனாதிபதி கலந்து கொண் டார்.
மேலும் இங்கே தொடர்க...

மீண்டும் ஒரு பிரேமதாசா யுகம் ஏற்பட வேண்டுமா? அமைச்சர் ஜகத் புஸ்பகுமார கேள்வி

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களி த்து பிரேமதாசா யுகமொன்றை மீண்டும் ஏற்படுத்த உதவுமாறு கேட்பது ஆயிரக் கணக்கான இளைஞர் யுவதிகளை மீண்டும் பலி கொடுப்பதற்கா? என்று தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கேள்வி எழுப்புகிறார்.

தனமல்வில, வெள்ளவாய, புத்தள ஆகிய பிரதேசங்களில் உள்ள கிராமங்களுக்கு மின்சார வசதியை வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் ஜகத் புஷ்பகுமார இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து பேசிய அவர் மேலும் கூறியதாவது, பிரேமதாச யுகத்தை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

66 ஆயிரம் இளைஞர் யுவதிகளை பலி எடுத்த அந்த இருண்ட யுகம் மீண்டும் ஏற்பட நாட்டின் எந்தவொரு பிரஜையும் எந்த வகையிலான பங்களிப்பையும் வழங்கப் போவதில்லை.

அன்று அப்பாவி மக்களை கொலை செய்து மக்களுக்கு சேவை செய்வதற்காக இருந்த பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் விவசாய சேவை நிலையங்களுக்கு தீ வைத்து அழித்தவர்கள் இன்று விவசாயிகளைப் பற்றி பேசுவது கேலியாக உள்ளது என்று அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கூறினார்.

இது பற்றி மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டிய காலம் வந்துள்ளது. அதற்கான பதிலை எதிர்வரும் 17ஆம் திகதி மக்கள் வழங்குவார்கள்.

இன்று நாட்டில் சுதந்திரமும் அபிவிருத்தியும் ஏற்பட்டுள்ளது. கிராமப்புற தலைமைத்துவத்தின் காரணமாகவேயாகும். கிராமத்தில் இடம்பெறும் அபிவிருத்தியை சகித்துக் கொண்டிருக்க முடியாதவர்களுக்கு பல்வகை நோய்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.

அரசாங்கத்தின் நோக்கம் அடுத்த சில வருடங்களில் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க வேண்டும் என்பதாகும் என்று அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...