14 ஆகஸ்ட், 2010

சரத் மீதான நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு : சட்டத்தரணிகள்

இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும் என ஜெனரல் சரத் பொன்சேகாவின் சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்.

இராணுவ நீதிமன்றின் தீர்ப்பு பக்கச்சார்பானது என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தாம் விடுமுறையில் இருந்த காலத்திலேயே அரசாங்கத் தரப்பு சாட்சியங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளை நடத்த வேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு இராணுவ நீதிமன்றம் செவிசாய்க்கவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இராணுவ நீதிமன்றில் சாட்சியமளித்த ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் லக்ஸ்மன் செனவிரட்ன ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடத்தத் தமக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை என சட்டத்தரணிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜீஎஸ்பியை நீடிக்க இன்னமும் சந்தர்ப்பம் உள்ளது : ஐரோப்பிய ஒன்றியம்

ஜீ.எஸ்.பி. வரிச் சலுகைத் திட்டத்தை நீடித்துக் கொள்வதற்கு இலங்கை அரசுக்கு இன்னமும் சந்தர்ப்பம் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் இடைநிறுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கை அரசாங்கம் காத்திரமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக இழக்கப்படவில்லை என ஒன்றியத்திற்கான இலங்கைப் பிரதிநிதி பெர்னாட் சாவெஜ் தெரிவித்துள்ளார்.

சலுகைத் திட்டம் இடைநிறுத்தப்பட்டதன் பின்னரும் இலங்கை பேச்சுவார்த்தைகளைத் தொடர முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகள் இன்னமும் மூடப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை, ஊடக சுதந்திரம் உள்ளிட்ட 15 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் இலங்கைக்கான ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை தொடர்ச்சியாக வழங்க முடியும் என ஐரோப்பிய ஒன்றியம் காலக்கெடு விதித்திருந்தது.

எவ்வாறெனினும் இந்தக் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

தேடப்படுவோர் பட்டியலிலிருந்து நீக்குமாறு டக்ளஸ் கோரிக்கை

தேடப்படுவோர் பட்டியலில் இருந்து தன்னை நீக்குமாறு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில், இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அவருடன் சென்றிருந்தார்.

டக்ளஸ் தேவானந்தா மீது சென்னையில் 3 குற்றப்பிரிவு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவரைக் கைதுசெய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

டக்ளஸ் தேவானந்தாவை கைதுசெய்ய 16 ஆண்டுகளாக எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் எனவே அண்மையில் இந்தியா வந்த அவரை கைதுசெய்யக் கோரியும் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தன்னைத் தேடப்படுவோர் பட்டியலில் இருந்து நீக்குமாறு அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

உரிய காரணம் தெரிவித்தால் அகதி அந்தஸ்து : கனேடிய அமைச்சர்

எம்வி சன் சீ கப்பலில் வந்த இலங்கை அகதிகள் உரிய காரணங்களைக் கொண்டிருந்தால்அகதி அந்தஸ்து வழங்கப்படும். ஏனையோர் நாடு கடத்தப்படுவர் என கனேடிய பொதுமக்கள நலன் துறை, பாதுகாப்பு அமைச்சர் விக் டோவிக் தெரிவித்துள்ளார்.

சன் சீ கப்பல் மூலம் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சென்றடைந்துள்ள அகதிகளை விசாரணை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இன்னும் ஒரு வார காலத்தில் இந்தப்பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சன் சீ கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியளவில் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்படைத்தளத்திற்கு வழிநடத்திச் செல்லப்பட்டது.

இந்நிலையில் அதில் பயணித்த 490 பேரின் சுகாதார நலன் குறித்த விடயங்கள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக கனேடியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைகளின் பின்னர் உரிய காரணங்களைக் கொண்டிருப்பவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படும். ஏனையோர் நாடு கடத்தப்படுவர் என பொதுமக்கள நலன் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் கப்பலில் சென்றவர்களில் சிறு தொகையினரே நோய்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் அவர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு விரைவில் அங்கிருந்து முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்க்கட்சி அரங்கத்தின் ஐந்தாவது கூட்டம் இன்று

ஒன்பது தமிழ்க் கட்சிகள் கூட்டிணைந்த தமிழ்க்கட்சி அரங்கத்தின் ஐந்தாவது கூட்டம் மட்டக்களப்பு ஆளுனர் விடுதியில் இன்று காலை 10.00மணி தொடக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இன்றைய கூட்டம் நடைபெறுகின்றது.

இக்கூட்டத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரி உட்பட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ் உட்பட ஒன்பது தமிழ்க் கட்சிகளின் பிரதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

எனினும் இக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

"இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்.

"இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம். அங்கு செல்லும் அமெரிக்கர்கள் உஷாராக இருக்க வேண்டும்' என, அமெரிக்க நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்தியா, பாகிஸ்தான் உட்பட தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் உள்ள அமெரிக்க அரசுக்கு சொந்தமான கட்டடங்கள் மீதும், இந்த நாடுகளில் அமெரிக்கர்கள் அடிக்கடி வந்து செல்லும் இடங்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக எங்களுக்கு தொடர்ந்து ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடப்பதற்கான அச்சுறுத்தல் அதிக அளவில் உள்ளது. மேலை நாட்டவர்கள் அதிகம் வந்து செல்லும் பொது இடங்கள், மக்கள் நிறைய பேர் கூடும் ஓட்டல்கள், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள், மார்க்கெட்கள், சினிமா தியேட்டர்கள், மசூதிகள் மற்றும் உணவகங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.இதனால், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் அமெரிக்கர்கள், அங்கு தங்கியிருக்கும் அமெரிக்கர்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.

அல்-குவைதா, தலிபான், லஷ்கர்-இ-தொய்பா உட்பட பல பயங்கரவாத அமைப்புகளை, அன்னிய நாட்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்து, அவற்றுக்கு தடை விதித்துள்ளது. அந்த அமைப்புகளால் அமெரிக்கர்களுக்கு ஆபத்து நேரலாம்.இவ்வாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பயங்கரவாதிகளை அழிக்க இலங்கை கண்ட புது வழி


பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒரு நாடு வெற்றி பெற வேண்டுமெனில், வெளிநாட்டு ராணுவ உதவியை சார்ந்திருக்கக் கூடாது. தங்கள் நாட்டு ராணுவத்தை பயன்படுத்தியே பயங்கரவாதிகளை எதிர்த்து போரிட வேண்டும்' என, இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ் கூறியுள்ளார்.இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ், சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு நடந்த விழாவில் அவர் பேசியதாவது:விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கை வெற்றி பெற்றது. புலிகளுக்கு எதிரான சண்டையில் எங்கள் ராணுவத்தையே பயன்படுத்தியது தான் இதற்கு முக்கிய காரணம். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒரு நாடு வெற்றி பெற வேண்டுமானால், வெளிநாட்டு ராணுவ உதவியை அந்த நாடு சார்ந்திருக்கக் கூடாது.உள்நாட்டு பயங்கரவாதிகளை எதிர்க்க, வெளிநாட்டு ராணுவத்தை ஈடுபடுத்தினால், மக்களிடையே அதற்கு பெரிய அளவில் ஆதரவு இருக்காது. ஆனால், உள்நாட்டு ராணுவத்தை பயன்படுத்தினால், மக்கள் அதை வரவேற்பர். இது மக்களின் பொதுவான மனநிலை. அரசுகள் அதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு பெரிஸ் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

ஒன்பது தமிழ் கட்சிகளின் அரங்கம் நாளை மட்டக்களப்பில் ஓன்பது தமிழ் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்

அரங்கம் நாளை மட்டக்களப்பில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பாடும்மீன் (றெஸ்ட் ஹவுஸ்) விடுதியில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகான முதலமைச்சரின் ஊடகசெயலாளர் தெரிவித்தார். தமிழ்தேசிய கூட்டமைப்பு தவிர ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் இவ்அரங்கத்தில் பங்கு கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

அகதிகளின் உரிமைகள் மறுக்கப்படக் கூடாது : கனேடிய தமிழர் பேரவை

கப்பலில் வன்கூவர் வந்தடைந்த தமிழ் அகதிகளின் உரிமைகள் மறுக்கப்படக்கூடாது என கனேடியத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

எம்.வி.சன் சீ என்னும் கப்பலில் 490 இற்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் கனடாவின் விக்டோரியா நகரத்தை வந்தடைந்துள்ளனர். நகரத்தின் அண்மையிலிருக்கும் கனடிய இராணுவ முகாம் ஒன்றில் அனைவரும் தரையிறக்கப்பட்டுள்ளனர்.

உடல்நலப் பரிசோதனையைத் தொடர்ந்து 9 நபர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். வந்தவர்களில் 45 சிறுவர்களும், இரு கர்ப்பிணிகள் உட்பட 90 பெண்களும் உள்ளனர் என உறிதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

உடனடி சோதனைகள் முடிந்தபின் நாளை அனைவரும் வெவ்வேறு தடுப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்களென நம்பப்படுகிறது.

குழந்தைகள் மற்றும் பெண்கள், ஆண்களின் தடுப்பு முகாம்களில் அல்லாது தனிப்பட்ட வேறு தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வந்திருக்கும் அகதிகளை ஏற்றுக்கொண்டதற்காக கனேடிய அரசுக்கு நன்றி கூறிக்கொள்ளும் அதே வேளை, சர்வதேச மற்றும் கனடிய சட்டங்களுக்குட்பட ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் பரிசீலிக்கப்பட்டு தகுந்த உரிமைகள் வழங்கப்படவேண்டுமென கனேடியத் தமிழர் பேரவை இன்று காலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு அகதிகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பன குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. அகதிகளாக வந்திருப்போருக்கு உரிய முறையில் உதவ மொழி பெயர்ப்பாளர்கள், சட்ட ஆலோசகர்கள், வைத்தியர்கள், குழந்தைப் பராமரிப்பாளர்கள் ஆகியோர் தயார் நிலையில் வைக்கப்படடுள்ளார்கள் என கனடியத் தமிழர் பேரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.

கனேடிய எல்லைப் பாதுகாப்பு பிரிவினருடனும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையகத்துடனும் பேரவை தொடர்பில் இருந்து வருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

மரண தண்டனையை சட்டத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பது அவசியம் நீதியமைச்சு செயலாளர் தெரிவிப்பு


மரண தண்டனையை சட்டத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நீதியமைச்சின் செயலாளர் சட்டத்தரணி சுகத கம்லத் தெரிவித்தார்.

மரண தண்டனை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இது ஒருபோதும் குற்றங்களை குறைத்துவிட உதவப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, நீதிமன்றத்தீர்ப்புகள் சுயாதீனமாக அமைய வேண்டும். இதில் எத்தரப்பினரதும் அழுத்தங்கள் இருக்க முடியாது. நீதித்துறையின் கெளரவம் இதன்மூலம் பாதுகாக்கப்படல் வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

ரணிலின் தாயார் சுகயீனம்: ஜனாதிபதி நேரில் சென்று பார்வை

சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு தனியார் ஆஸ்பத்திரியொன்றில் சிகிச்சை பெற்று வரும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தாயாரை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக்காலை விஜயம் செய்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் தாயாரின் சுகதுக்கங்களை விசாரித்தறிந்த ஜனாதிபதி அவர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் பிரார்த்தித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரான லக்ஷ்மன் ஜயகொடி தங்கியிருந்து சிகிச்சை பெறும் இடத்துக்கும் சென்று பார்வையிட்டார். பிரதியமைச்சர் லசந்த அழகியவன்னவும் ஜனாதிபதியுடன் சென்றிருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு நீர் நிரப்பும் வைபவம் நாளை ஜனாதிபதி பிரதம அதிதி






அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத் திற்கு நீர் நிரப்பும் வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் நாளை காலை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை பார்வையிட பொதுமக்களுக்கும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதோடு, சுமார் 2 இலட்சம் பேர் இதில் கலந்து கொள்வர் என எதிர்பார்ப்பதாக துறைமுக அதிகார சபை கூறியது.

அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணிகள் 2007ம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. 3 கட்டமாக நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதோடு முதற்கட்டப் பணிகள் நவம்பர் மாதம் பூர்த்தி செய்யப்படவுள்ளன.

முதற்கட்டத்தின் போது 3 கப்பல்கள் நிறுத்தக்கூடியவாறு வசதி அளிக்கப்பட உள்ளதோடு, மூன்றாம் கட்ட முடிவில் 33 கப்பல்கள் நிறுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துறைமுகத்திற்கு நீர் நிரப்பும் வைபவத்தை பார்வையிட வரும் மக்களுக்கு நாளை காலை 4.00 மணி முதல் அங்கு வர அனுமதி வழங்கப்படவுள்ளது. 17 மீட்டர் ஆழத்திற்கு தோண்டப்பட்டுள்ள நிலப்பரப்பில்

நீர்நிரப்பப்படும் போது அதில் இறங்கி குதூகலிக்க மக்களுக்கு அவகாசம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. துறைமுக நிர்மாணப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்கு கடந்த 10ம் திகதி வரை மக்களுக்கு அவகாசம் வழங்கப் பட்டிருந்தது.

துறைமுக பகுதியில் கட்டம் கட்டமாகவே நீர் நிரப்பப்பட உள்ளதோடு, முழுமையாக நீர் நிறைய ஒரு மாதம் பிடிக்கும் என துறைமுக அதிகார சபை கூறியது.

நவம்பர் மாதத்தில் முதலாவது கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளது. இந்தத் திட்டத்திற்கு மொத்தமாக 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட உள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

சன் ஸீ' கப்பலுக்குள் கனடா படை பிரவேசம் 490 பேர் இருப்பதாக கனடா அறிவிப்பு




இலங்கை அகதிகள் இருக்கலாமென நம்பப்படும் ‘சன் கூ’ கப்பலுக்குள் கனேடிய கரையோர காவல் படையினர் பிரவேசித்துள்ளதாக கனடா செய்திச் சேவை அறிவித்துள்ளது.

500 இலங்கையர் இருக்கலாமென ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்த போதும், 490 பேரே கப்பலினுள் இருப்பதாக கனடிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக்ரோவ்ஸ் அறிவித்துள்ளார்.

என்றாலும், இவர்கள் அனைவரும் புலிகள் இயக்க உறுப்பினர்களாக இருக்கலாமென கனடா நம்புவதாகவும் அவர் கூறினார்.

“இவர்கள் மீதும் மனிதக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீதும் கனடா கடுமையான நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

இந்த அகதிகள் விடயத்தில் கனடா என்ன நடவடிக்கை எடுக்கிறதென்பதை மனிதக் கடத்தலில் ஈடுபடுவோர் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நடவடிக்கையைப் பொறுத்து மனிதக் கடத்தலில் தொடர்ந்து ஈடுபடலாமா? இல்லையா? என்பது தான் அவர்களது அங்கலாய்ப்பாக இருக்கிறதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மேற்படி சன் கூ கப்பல் விடயம் தொடர்பாக அமெரிக்காவும் கருத்துத் தெரிவித்துள்ளது.

“இது தொடர்பாக கனடிய அரசுடன் பேசி வருகிறோம். அவதானித்தும் வருகிறோம். ஏதும் அவசரமான நிலை ஏற்படுமாக இருந்தால் அமெரிக்கா பொருத்தமான முறையில் பதிலளிக்கும்” என அமெரிக்க இராஜாங்கத் திணைக் களப் பேச்சாளர் நிகோல் தோம்ஸ்சன் தெரிவித்தார்.

சன் கூ கப்பலுக்குள் கனேடிய படை யினர் பிரவேசித்துள்ளனர்.

இந்த கப்பல் பசுபிக் சமுத்திரத்தை கடக்கும் போது அதிலுள்ள பலருக்கு காசநோய் தொற்று ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கனேடிய வன்கூவர் சன் செய்திச் சேவையின் தகவல்படி கப்பலில் பயணித்த ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

எனினும், யாரென்ற விடயம் வெளி யாகவில்லை.

அதேவேளை, கப்பலில் வரும் நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்கவென விக்டோரி யாவில் வைத்தியசாலை ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கப்பலில் வருபவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டாம் என இலங்கையின் உயர்ஸ்தானிகர் கனேடிய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...