28 ஏப்ரல், 2010

13 மணி நேரத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் பெண்; ஸ்பெயின் நாட்டுக்காரரின் சாதனையை முறியடித்தார்






உலகிலேயே மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி பலர் சாதனை படைத்துள்ளனர். இந்த நிலையில் தென் கொரியாவை சேர்ந்த ஓ யுன்-சன் (44) என்ற பெண் 13 மணி நேரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இவர் எவரெஸ்ட் சிகரத்துக்கு செல்லும் 14 மலை முகடுகளில் கடைசியில் உள்ள அன்னபூர்னாவில் இருந்து 13 மணி நேரத்தில் 26,247 அடி (8 ஆயிரம் மீட்டர்) உயர சிகரத்தில் ஏறினார்.

இதற்கு முன்பு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எடுர்ன் பசயின் (26) என்பவர் 26,330 அடி உயரம் ஏறி இருந்தார். அவரது சாதனையை நேற்று இவர் முறியடித்தார். எவரெஸ்ட் உச்சியில் ஏறிய அவர் அங்கு தென்கொரிய நாட்டின் கொடியை அசைத்தார்.

இந்த சாதனை நிகழ்ச்சியை தென் கொரியாவின் கேபிஎஸ் என்ற டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பியது.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த ஒயுன்-சன்னு தென் கொரிய அதிபர் லீ மியுங் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அவரது மிகப் பெரிய சாதனையை பாராட்டுவதாகவும் அவரைப்பற்றி பெருமைப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தனது சாதனை பற்றி கூறும் போது, எவரெஸ்டில் ஏறியவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அதை தென்கொரிய மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று ஓயுன்-சன் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

'நித்யானந்தா உடலில் எந்த குறைபாடும் இல்லை'





பெங்களூரு : நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நித்யானந்தாவிற்கு, எந்த குறைபாடும் இல்லை என கூறி, மருத்துவமனையிலிருந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.

கடந்த 23ம் தேதியிலிருந்து சாமியார் நித்யானந்தாவிடம், நான்கு நாள் தொடர்ச்சியாக பெங்களூரு சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின், நேற்று முன்தினம் ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் இரண்டு நாள் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் பெங்களூரிலுள்ள சி.ஐ.டி., அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலிப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார். உடனடியாக ஜெயதேவா அரசு இதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலையிலும் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

சிகிச்சை குறித்து மருத்துவமனை இயக்குனர் மஞ்சுநாத் கூறுகையில், ''மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் நித்யானந்தாவுக்கு நேற்று முன்தினம் இரவு சில மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின், இன்று (நேற்று) காலை மீண்டும் நித்யானந்தாவிற்கு இ.சி.ஜி., எக்கோகார்டியோகிராப் உட்பட இதய சம்பந்தமான அனைத்து சோதனைகளும் நடத்தப் பட்டன. அவரது உடல் நிலையில் எந்தவித மாறுபாடுகளும் இல்லாததால், உடனடியாக அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். பிற்பகலில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்,'' என்றார்.

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன நித்யானந்தா, சி.ஐ.டி., மத்திய அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். மீண்டும் அவர், தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். நாளை மாலை 5:30 மணிக்குள் ராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தா ஆஜர்படுத்தப்படவுள்ளார்.நித்யானந்தா சீடர் லெனினிடம், சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர். அவரிடமிருந்து பல நம்பகமான தகவல்களை சேகரித்துள்ளனர். நித்யானந்தாவின் நிதி விவகாரங்கள், இந்தியா மட்டுமின்றி, வெளிநாட்டிலுள்ள ஆசிரமத்தின் கிளைகள், அந்த இடங்களில் நடத்திய விவகாரங்கள் ஆசிரமத்திற்கு விஜயம் செய்து வந்த நடிகைகள் தவிர, ஆசிரமத்தில் நடந்து வந்த சட்ட விரோத நடவடிக்கை குறித்த தகவல்களை லெனின், சி.ஐ.டி., போலீசாரிடம் கூறியுள்ளார்.

ரகசிய ஒப்பந்தங்களின் தஸ்தாவேஜுகளை, 'சிடி'க்களை லெனின், சி.ஐ.டி., போலீசாரிடம் அளித்துள்ளதாக தெரிகிறது.இதற்கிடையில், சாமியார் நித்யானந்தாவிடம் நடத்தப்படும் விசாரணையை கண்காணிக்கவும், அவரது நடத்தையை கண்காணிக்கவும், பெங்களூரிலுள்ள சி.ஐ.டி., அலுவலகத்தில், 'சிசிடிவி' அவசர, அவசரமாக பொருத்தப்பட்டது. கடந்த 23ம் தேதி நடந்த முதல் நாள் விசாரணையை அதிகாரி, திருப்பிப் போட்டு பார்க்கும் போது, வீடியோ மட்டும் தான் தெரிந்தது. சாமியாரின் குரல் எதுவும் கேட்க வில்லை. இதனால், போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் அதேகேள்விகளை வைத்து, சாமியாரிடம் மீண்டும் போலீசார் விசாரணை நடத்தினர். சாமியார் புன்முறுவலுடன் தகவல் தெரிவித்தார்.முக்கியமான கேள்விகளை கேட்கும் போது, தூங்குவது போன்று கண்ணை மூடிக் கொள்கிறார் அல்லது மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்து விடுகிறார். இதனால், பெரிய சிரமம் ஏற்படுகிறது, என்று சி.ஐ.டி., போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

நித்யானந்தா வங்கி கணக்கு முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும்: பெங்களூர் ஆசிரம தலைவர் ஐகோர்ட்டில் மனு

நித்யானந்தா வங்கி கணக்கு முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும்: பெங்களூர் ஆசிரம தலைவர் ஐகோர்ட்டில் மனு
பெங்களூர் நித்யானந்தா ஆசிரமத்தில் பொறுப்பு தலைவர் நித்ய சதானந்தம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நித்யானந்தா ஆசிரமத்தின் வங்கி கணக்கை போலீசார் முடக்கி வைத்துள்ளனர். இதனால் ஆசிரம பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே வங்கி கணக்கு முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே நித்யானந்தா சார்பில் அவரது வக்கீல்கள் பாலா டெய்சி, வீரகதிரவன் ஆகியோர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தற்போது நித்யானந்தாவிடம் பெங் களூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணைக்கு நித்யானந்தா ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். எனவே சென்னை மற்றும் கோவையில் அவர் மீது போடப்பட்டுள்ள மோசடி வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த 2 மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு இல்லை: நித்யானந்தா சாமியார் பதில் சொல்ல மறுப்பு; உண்மை அறியும் சோதனை நடத்த முடிவு





போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு இல்லை: நித்யானந்தா சாமியார் பதில் சொல்ல மறுப்பு; உண்மை அறியும் சோதனை நடத்த முடிவு
திரைப்படம் திரைப்படம்
பெங்களூர், ஏப். 28-

நித்யானந்தா சாமியார், நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில் இருக்கும் காட்சி வெளியானதை அடுத்து அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இதை தொடர்ந்து அவர் மீது சென்னை போலீசிலும், கர்நாடக போலீசிலும் பலர் புகார் கொடுத்தனர். நித்யானந்தா சாமியாரின் தலைமை ஆசிரமம் கர்நாடக மாநிலம் பிடதியில் இருந்ததால் சென்னையில் கொடுக்கப்பட்ட புகார்கள் அனைத்தும் கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டன.

இதையடுத்து நித்யானந்தா மீது கர்நாடக போலீசார் கற்பழிப்பு, மோசடி, மத உணர்வை புண்படுத்துதல், சதி ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர். மாநில சி.ஐ.டி. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

தன் மீது புகார் வந்ததை அடுத்து நித்யானந்தா தலைமறைவாக இருந்தார். அவர் இமாச்சல பிரதேச மாநிலம் சோலன் நகரில் பதுங்கி இருப்பதை கர்நாடக போலீசார் கண்டுபிடித்து கடந்த 21-ந் தேதி கைது செய்தனர்.

பின்னர் 22-ந் தேதி அவரை கர்நாடகாவுக்கு கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவரிடம் முழுமையான விசாரணை நடத்துவதற்காக போலீஸ் காவலில் எடுத்தனர். கோர்ட்டு முதலில் 4 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்தது. ஆனால் நித்யானந்தாவிடம் முழுமையாக விசாரணை முடியாததால் நேற்று முன்தினம் மேலும் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர்.

ஆனால் நித்யானந்தா திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறினார். எனவே நேற்று முன்தினம் மாலை அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

அவருக்கு இ.சி.ஜி. எக்கோ கார்டியோ கிராம், டிரட்மில் டெஸ்ட் ஆகிய இதய தொடர்பான பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில் அவருக்கு இதயத்தில் எந்த கோளாறும் இல்லை. போலீஸ் விசாரணைக்கு பயந்து நாடக மாடி இருக்கிறார் என்று தெரிய வந்தது.

எனவே நேற்று மாலை ஆஸ்பத்திரியில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன் பின்னர் போலீசார் மீண்டும் அவரை காவலுக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

ஆனால் நித்யானந்தா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டார். ஆசிரமத்தில் நடந்த செக்ஸ் விவகாரம், பெண்களுடன் ஏற்படுத்திய செக்ஸ் ஒப்பந்தம் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை. போலீசார் நெருக்கடி கொடுத்து கேட்ட போது எதுவும் பேசாமல் மவுனம் சாதித்தார்.

இந்த நிலையில் இன்று மாலையுடன் அவரது போலீஸ் காவல் முடிகிறது. எனவே அவரை மாலைக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும், அதன் பிறகு அவர் ஜெயில் காவலில் வைக்கப்படுவார்.

அவரிடம் விசாரணை இன்னும் முழுமையாக முடியாததால் மேலும் 1 வாரம் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். எனவே போலீஸ் காவல் மேலும் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போலீஸ் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு கொடுக் காததால் அவரிடம் மயக்க மருந்து கொடுத்து நடத்தப் படும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கும் கோர்ட்டில் அனுமதி பெற உள்ளனர்.

உண்மை அறியும் சோதனை நடத்தினால் எதையும் மறைக்க முடியாது, மனதில் புதைந்து இருக்கும் அனைத்து தகவலும் வெளியே வந்துவிடும். அப்போது ஆசிரமத்தில் நடந்த அத்தனை விவகாரங்களும் வெளியே வரும் வாய்ப்பு உள்ளது.

போலீசார் நடிகை ரஞ்சிதா மற்றும் நித்யானந்தாவின் பெண் செயலாளர் கோபிகா ஆகியோரிடமும் விசாரணை நடத்த உள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது தலை மறைவாக உள்ளனர். அவர்கள் இருப்பிடத்தையும் போலீசார் கண்டுபிடித்து விட்டனர். எனவே அவர்களை எந்த நேரத்திலும் போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தலாம்.

நித்யானந்தா ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அது நாளை விசாரணைக்கு வருகிறது. அதில் ஜாமீன் கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறார்.

எனவே அதுவரை ஜெயிலுக்கு செல்லாமல் தப்பிக்கவே அவர் நெஞ்சு வலி நாடகம் நடத்தி ஆஸ்பத்திரிக்கு சென்றதாக தெரிகிறது. ஆனால் அவர் நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் அவருடைய திட்டம் ஈடேறவில்லை.

ஒரு வேளை இன்று போலீஸ் காவலுக்கு கோர்ட்டு அனுமதிக்கவில்லை என்றாலும் இன்று மாலையே அவர் ஜெயிலில் அடைக்கப்படுவார்.
மேலும் இங்கே தொடர்க...

கிழக்கு மாகாண முதலமைச்சர் அடுத்த மாதம் இந்தியா விஜயம்



கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் அடுத்த மாதம் இந்தியா செல்லவுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்தார்.

சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் குழு ஒன்று, இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும், அடுத்த மாதம் இக்குழுவினர் செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது, இந்திய அரசாங்கத்தின் பல்வேறு உயர் மட்ட பிரதிநிதிகளை முதலமைச்சர் சந்திக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கட்சியின், கொள்கைகள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து, இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ் இலங்கை வந்திருந்த வேளை, சந்திரகாந்தனை சந்தித்த போது விடுத்த அழைப்பின் அடிப்படையில் அமையவுள்ளதாகவும் அசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பு சிறைச்சாலையில் புத்தாண்டு விளையாட்டு விழா

மட்டக்களப்பு சிறைச்சாலை நலன் புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு இடையில் புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் இன்று விமர்சையாக இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மாவட்ட சிறைச்சாலை அத்தியட்சகர் கீத ஸ்ரீ பண்டார பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன் நலன் புரி உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீநிவாசன் உட்பட பல பிரமுகர்கள் பிரசன்னமாகி இருந்தனர்.

இங்கு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் கலந்து கொண்ட பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் பல் ஏற்பாடு செய்யப்பட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதாக அரச தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பில் கண்ணிவெடிகள் விழிப்புணர்வு தினம் அனுஸ்டிப்பு

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் அனுசரணையில் சர்வோதய அமைப்பினால் சர்வதேச கண்ணிவெடிகள் விழிப்புணர்வு தினம் மட்டக்களப்பு நகரில் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

கண்ணிவெடி அபாயக்கல்வித் திட்டத்தின் கீழ் இன்று மட்டக்களப்பு தேவநாயகம் கலையரங்கில் கண்ணி வெடி விழிப்புணர்வு விசேட நிகழ்வுகள் இடம்பெற்றது. கண்ணிவெடி அபாயம் பற்றிய கண்காட்சியும் இராணுவத்தின் உதவியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாவட்ட இணைப்பாளர் சர்வோதய இ.மதன்ராஜ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் சர்வோதய அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல்.ஏ கரீம் யுனிசெப் நிறுவன கிழக்கு மாகாண இணைப்பாளர் அஸதுர் ரகுமான் உட்பட பல பிரமுகர்கள் பிரசன்னமாயிருந்தனர்.

இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பெருமளவு சிறார்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
மேலும் இங்கே தொடர்க...

மன்னாரில் அதிகரித்துவரும் சமூக சீர்கேடுகள்

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியின் 2ஆம் கட்டை பகுதியில் இளைஞர் படையணிக்காக கட்டப்பட்ட கட்டட வளாகத்தினுள் சமூக சீர்கேடுகளும் குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கடற்படையினர் இந்தக் கட்டடத்தில் காவலரண்களை கடந்த 2 வருடங்களுக்கு மேலாக அமைத்திருந்ததுடன் சுமார் கடந்த வருட இறுதிப் பகுதியில் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

அதன்பின்னரே இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...

தலவாக்கலை நகரில் இ.தொ.கா.வின் மேதினம்

இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டம் தலவாக்கையில் இடம் பெறவுள்ளது.

இ.தொ.கா. பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் கூட்டம் இடம்பெறவுள்ளது.

கூட்டத்தில் இ.தொ.கா. தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான வி. ராதாகிருஷ்ணன், ராஜதுரை மத்திய மாகாணசபை உறுப்பினர்களான ரமேஸ், ராம், சிங் பொன்னையா உட்பட இ.தொ.கா. உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களும் உறுப்பினர்களும் காங்கிரஸ் முக்கியஸ்தர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நகர மத்தியில் இடம்பெறவுள்ள இந்த மேதினக் கூட்டத்தின் பேரணி தலவாக்கலை நகரசபைக்கு அருகிலிருந்து காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

நீண்ட நாள் மருத்துவ விசா: ஜப்பான் திட்டம்


ஜப்பானில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் விரும்பும் வெளிநாட்டவருக்கு, நீண்ட நாள் விசா நடைமுறையை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.

தற்போதுள்ள விசா நடைமுறைகளின் படி, ஜப்பானில் மருத்துவசிகிச்சை மேற்கொள்ள விரும்புவோர் குறுகிய கால சுற்றுலா விசா மூலம் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இத்தகைய விசாவுக்கான கால வரம்பு 90 நாட்கள் மட்டுமே.

இதற்கு மேல் இங்கு தங்கி சிகிச்சை பெற வேண்டுமானால், அவர்கள் விசா நீட்டிப்புக்காக விண்ணப்பிக்க வேண்டும். இது கூடுதல் சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு மருத்துவசிகிச்சை பெறுபவர்களுக்கான நீண்ட நாள் விசா நடைமுறையை அறிமுகப்படுத்த ஜப்பான் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இப் புதிய விசா நடைமுறையின் மூலம் விசா நீட்டிப்புக்கு அவர்கள் விண்ணப்பிக்க தேவையிருக்காது.

சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலிருந்து தரமான சிகிச்சை விரும்பி வருபவர்களை அதிக அளவில் ஈர்க்கவும், ஜப்பானின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கிலும் இத்தகைய விசா நடைமுறை கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் ஜூன் மாத இறுதியில் ஜப்பானில் அறிவிக்கப்படவுள்ள பொருளாதார வளர்ச்சி திட்டங்களில், இந்த நீண்ட நாள் மருத்துவ விசா நடைமுறையும் அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அமைச்சர் பீரிஸ் - பூட்டான் வெளிவிவகார அமைச்சர் நேற்று சந்திப்பு

வெளிவிவகார அமைச்சா பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பூட்டான் வெளிவிவகார அமைச்சர் லியோன் போசரினுடன் நேற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதிய அரசின் வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவு செய்யப்பட்டமை குறித்து பூட்டான் வெளிவிவகார அமைச்சர் முதலில் தமது வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்துக்கொண்டார்.

அத்துடன் இலங்கையில் பயங்கரவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறித்தும் தமது மகிழ்ச்சியை பூட்டான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பூட்டான் மாணவர்கள் இலங்கையில் கல்வி கற்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டமை குறித்தும் பூட்டான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐநா துணைச் செயலர் அடுத்த மாதம் இலங்கை வருகை

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் நாயகம் லின் பஸ்கோ இலங்கையின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக அடுத்த மாத நடுப்பகுதியில் இங்கு வருவதற்கு ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபன நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பது பற்றி இலங்கை அரசாங்கத்துடன் கலந்தாலேசிப்பது பஸ்கோவின் விஜயத்திற்கான முன்னைய நோக்கமாக இருந்தது. ஆனால், தற்போதும் அத்தகைய ஆலோசனைகள் நிகழ்ச்சிநிரலில் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி தெரியவில்லை.

ஐக்கியநாடுகள் ஸ்தாபன நிபுணர்கள் குழு நியமனம் குறித்து அண்மைக் காலத்தில் பேச்சு எதுவும் அடிபடவில்லை என்றும் தொடர்ந்தும் நிபுணர்கள் குழு அமைப்பது பற்றிய யோசனை இருப்பதாக தெரியவில்லை என்றும் நியூயோர்க்கில் ஐக்கியநாடுகள் உயர்வட்டாரங்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும் அடுத்த மாதம் பஸ்கோ இலங்கைக்கு வர அனுமதி கோரப்பட்டுள்ளதை இவ்வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மே மாதம் இரண்டாம் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய பஸ்கோ அனுமதி கோரியுள்ளார். ஆனால் அனுமதி அளிப்பது பற்றி எதுவும் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இலங்கையின் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அண்மையில் நியூயோர்க்கில் செயலாளர் நாயகம் பான் கீ மூனைஙூ சந்தித்து நீண்டநேரம் பேசியுள்ளார். இந்த பேச்சவார்த்தையின் போது இருவரும் நிபுணர்கள் குழு நியமனம் பற்றியும் பேசியுள்ளார்கள் என்று தெரியவருகிறது.

செயலாளர் நாயகமும் சட்டமா அதிபரும் சந்தித்துஸ பேசியதை பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெசிர்கி உறுதிப்படுத்திய போதிலும் பேச்சின் விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில்,இம்மாதம் 20ஆம் திகதி இஸ்ரேல் அளித்த ஐக்கியநாடுகள் விருந்து வைபவம் ஒன்றில் இலங்கையின் ஐக்கியநாடுகள் தூதுவர் கலாநிதி பாலித கொஹணவிடம் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம், "நான் உங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவன் அல்லன்" என்று தெரிவித்ததாக அவர்கள் இருவருக்கும் அருகிலிருந்த ஒருரை மேற்கோள் காட்டி 'இன்னர் சிற்றி பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

நிபுணர்கள் குழு எதுவும் நியமிக்கப்பட மாட்டாது என்று எதிர்வு கூறிய கலாநிதி கொஹண, பதிலாக சிறுவர் துஷ்பிரயோகத்திற்காக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் வத்திக்கான் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பட்டதாகவும் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்தது.

இதற்கிடையில், இலங்கை மீது யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக குழு ஒன்றை நியமிப்பது என்று 6 வாரங்களுக்கு முன்னர் செயலாளர் நாயகம் உறுதியளித்தது சம்பந்தமாக எதையும் எதிர்பர்க்க வேண்டாமென சிரேஷ்ட ஐக்கியநாடுகள் அதிகாரி ஒருவர் இன்னர் சிற்றி பிரஸுக்கு தெரிவத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் கருணாவின் அலுவலகம்


இடம் பெயர்ந்துள்ள அனைத்து மக்களையும் மீளக்குடியமர்த்துவதுடன் அவர்களது அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் அனைத்தும் வழங்கப்படுமென மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் தற்போது சுமார் 60,000 பேர் வரையிலேயே உள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழும் நிலையை உருவாக்குவதுடன் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் விடயம் தொடர்பாக இலங்கைக்கு இருந்த சர்வதேச அழுத்தங்களை முற்றாக இல்லாதொழிப்பதும் எமது நோக்கம் என்றும் பிரதி அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எஞ்சியுள்ள இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்படும். இவ்வாறான அமைச்சுப் பொறுப்பை வழங்கியுள்ளமை குறித்து ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன். மீளக்குடியேற்ற பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கருணா அம்மான் நேற்று கொள்ளுப் பிட்டியிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

கொள்ளுப்பிட்டியிலுள்ள அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு கட்டடத்தில் நாளை வியாழக்கிழமை முதல் பிரதியமைச்சர் கருணா அம்மானின் அலுவலகம் இயங்கவுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோவின் அமைச்சு அலுவலகம் கொள்ளுப்பிட்டி, அலரி மாளிகைக்கு முன்னாலுள்ள மீள்குடி யேற்ற அமைச்சு கட்டடத்திலேயே இயங்கும்
மேலும் இங்கே தொடர்க...

மக்களுக்கு நன்மை பயக்கும் அரசின் யோசனைகளுக்கு ஐ.தே.க. ஆதரவளிக்கும் கரு ஜயசூரிய எம்.பி

அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைக்கும் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய யோசனைகளுக்கு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி முழுமையான ஆதரவு நல்கும் என்று அக்கட்சியின் உபதலைவரும், கம்பஹா மாவட்ட எம்.பி.யுமான கரு ஜயசூரிய நேற்றுத் தெரிவித்தார்.

மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய அரசாங்கத்தின் யோசனைகளுக்கு ஆதரவு அளிப்பது என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளிடம் நேற்று ஆசி பெற்றுக்கொண்ட கரு ஜயசூரிய எம்.பி ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு சிறந்த ஜனநாயகக் குடியரசாக விளங்குவதற்கு நாம் முழுமையான பங்களிப்பை அளிப்போம். இதற்காக அரசாங்கம் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நன்குவோம்.

பாராளுமன்ற தெரிவுக்குழுக்களினதும், பாராளுமன்ற ஆலோசனைக் குழுக்களினதும் செயற்பாடுகளுக்கும் முழுமையாக ஆதரவு அளிப்போம்.
மேலும் இங்கே தொடர்க...

மத்திய மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் தெரிவில் கட்சிக்குள் குழப்பம் கண்டி மாவட்ட தலைவர் காதரா? கிரியெல்லவா?

மத்திய மாகாண சபையில் எதிர்க்கட்சியாக விளங்கும் ஐக்கிய தேசியக் கட்சியில் எதிர்க் கட்சித் தலைவர் ஒருவரை தெரிவு செய்வதில் பிரச்சினைகளும் கருத்து முரண்பாடுகளும் தலைதூக்கியுள்ளன.

மத்திய மாகாண சபையில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த வசந்த அலுவிகார பொதுத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். இதனால் மத்திய மாகாண சபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இவ்வெற்றி டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய மாகாண சபை உறுப்பினரான கே. கே. பியதாஸவை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது.

இச்செயல் ஏனைய ஐக்கிய தேசியக் கட்சி மாகாண சபை உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ள தோடு, மத்திய மாகாண சபையில் நீண்டகால உறுப்பினர்களாக விளங்கும் ஒருவரை கட்சி நியமிக்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எதிர்வரும் மே மாதம் 4 ம் திகதி மத்திய மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்திற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை ஐ.தே.க. தீர்மானிக்க வேண்டும் என்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கட்சியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, ஐ.தே.க.வின் கண்டி மாவ ட்ட தலைமை யார்? என்பதில் தற்போது கட்சி எம்.பி.க்களான அப்துல் காதர் மற்றும் லக்ஷ்மன் கிரியெல்லவுக்குமிடையில் கருத்துமோதல் வெடித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் ஐ.தே.க.வின் சார்பில் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்ற தனக்கே கட்சியின் கண்டி மாவட்ட தலைமை வழங்கப்பட வேண்டுமென்பது காதர் எம்.பி.யின் வாதமாகவுள்ளது.

லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. விருப்பு வாக்கு அடிப்படையில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளார்.

அவர் உடனடியாக மாவட்ட தலைமைப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டுமென்றும் காதர் எம்.பி. வாதிடுகின்றார்.

அத்தோடு, மு.கா. தலைவர் கூட விருப்பு வாக்கினடிப்படையில் என்னிடம் தோல்வி கண்டுள்ளார். அவரும், ஐ.தே.க. மற்றும் இதர விடயங்களில் தன்னிச்சையாக செயற்பட முடியாதென்றும், மக்கள் என்னையே அங்கீகரித்துள்ளனர் என்பதும் காதர் எம்.பி.யின் வாதமாகவுள்ளது.

ஐ.தே.க.வின் முஸ்லிம் தேசிய அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ள காதர் எம்.பி. தொடர்ச்சியாக கட்சியுடனும், கட்சித் தலைமையுடனும் முறுகல் போக்கையே கடைப்பிடித்து வருகின்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஊடகவியலாளர்களுக்கு சகல வசதிகளுடன் ஊடகக் கிராமம் ‘எனது நீண்ட காலக் கனவு இது’


ஊடகவியலாளர்களுக்காக சகல வசதிகளையும் கொண்ட ஊடகக் கிராமம் ஒன்றை அமைப்பதே தனது நீண்டகால கனவுயென பதில் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா தெரிவித்தார்.

லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு நேற்றுக் காலை வருகை தந்த அமைச்சர், தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊடகத்துறை பதில் அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு வருகை தந்த அமைச்சருக்கு பெரு வரவேற்பு வழங்கப்பட்டது.

நிறுவனத்தின் தலைவரும் பிரபல ஊடகவியலாளருமான பந்துல பத்மகுமார உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள், தொழிற்சங்க முக்கியஸ்தர்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் இணைந்து அமைச்சரை வரவேற்றனர்.

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் சென்ற அமைச்சர் மேர்வின் சில்வா, குறை நிறைகளைக் கேட்டறிந்துக்கொண்டார். இதேவேளை லேக்ஹவுஸ் நிறுவனத்தின் அச்சகப் பகுதியை பார்வையிட வந்த பாடசாலை மாணவர்களுடனும் அமைச்சர் பேசினார். அவர் மேலும் உரையாற்றுகையில்:-

பேனாவை கையில் எடுத்த அனைவ ரையும் ஊடகவியலாளர்கள் என கூறிவிட முடியாது. ஊடகவிய லாளர்களாக தம்மைக் காட்டிக்கொண்டு பலர் கடந்த காலங்களில் நடந்துகொண்ட விதத்தை முழு நாடும் அறியும். வெளிநாட்டுக்குச் சென்று குடியிருப்பதற்காக சிலர் தம்மைத் தாமே தாக்கிக்கொண்டனர்.

சந்தர்ப்பவாதம், அதிகார ஆசை, பழிவாங்குதல், கோபம் என்பவற்றை புறந்தள்ளி, தமது பேனாவை பயன்படுத்த வேண்டியது சகல ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும். இதன் மூலமே உண்மையான ஊடகத்துறையை கட்டியெழுப்ப முடியும். ஊடகவியலாளரின் குடும்பப் பின்னணி, சமூக அந்தஸ்து என்பவற்றை மேம்படுத்துவதன் மூலமே சிறந்த ஊடகத்துறையை கட்டியெழுப்ப முடியும்.

குடும்ப பிரச்சினை, மனதில் இருக்கையில் தனது கருத்தை தெளிவாகவும் சுதந்திரமாகவும் சமூகத்துக்கு முன்வைக்க முடியாது. அதனால் அனைத்துக்கும் முன்பாக ஊடகவியலாளர்களின் சமூக அந்தஸ் த்தை உயர்த்தி பொருளாதார ரீதியில் அவர்களை பலப்படுத்த வேண்டியது மிக முக்கியமாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெளத்த மதத்தால் போசிக்கப்பட்ட தலைசிறந்த தலைவர். அத்தகைய தலைவரின் கீழ் பணியாற்ற கிடைத்தது நாம் அனைவரும் செய்த பாக்கியமாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் பந்துல பத்மகுமார, ஆசிரியர் பீட பணிப்பாளர் நிஹால் ரத்னாயக்க, பணிப்பாளர் உபுல் திஸாநாயக்க, பொது முகாமையாளர் அபய அமரதாஸ, பிரதி பொது முகாமையாளர் நாரத சுமனரத்ன, உட்பட தொழிற்சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ஊடகத்துறை பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட கலாநிதி மேர்வின் சில்வா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 16வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பூட்டான் சென்றதையடுத்து பதில் ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

சார்க் மாநாட்டையொட்டி திம்பு நகர் விழாக்கோலம்: உச்சி மாநாடு இன்று ஆரம்பம்;; ; ஜனாதிபதி மஹிந்த ஆரம்ப உரை


பூட்டான் தலைநகர் திம்புவில் இன்று (28) ஆரம்பமாகும் 16 ஆவது ‘சார்க்’ உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பவுரை நிகழ்த்துகிறார். அதனையடுத்து ‘சார்க்’ அமைப்பின் தலை மைப் பதவியை பூட்டானிய பிரதமர் ஜிக்மி வை தில்லேவுக்குப் பொறுப்பளிப்பார்.

சார்க் மாநாடு இன்று ஆரம்பமாவதை யிட்டுத் திம்பு நகர் கோலாகலமாகக் காட்சியளிக்கிறது. சார்க் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவ டைவதையொட்டி 16வது உச்சி மாநாடு பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘சார்க் கிராமத்திலுள்ள இலங்கை இல்லத்தில் பூட்டான் பிரதமர் தின்லேயைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பூட்டானுக்கு முதன் முதலாக விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு பூட்டான் மன்னரின் சார்பிலும், மக்களின் சார்பிலும் பிரதமர் தின்லே உற்சாகமான வரவேற்பை தெரிவித்துக்கொண்டார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழித்துச் சமாதானத்தை ஏற்படுத்தியமைக்காக நன்றி தெரிவித்த பிரதமர் தின்லே, இது பிராந்தியத்தில் அமைதியைப் பலப்படுத்து வதற்கு வழிவகுக்குமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனவரியில் நடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஏப்ரலில் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் அடைந்த வெற்றிக்காக ஜனாதிபதிக்குப் பாராட்டுதல்களையும் பூட்டான் பிரதமர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது உடனிருந்த புதிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த பூட்டான் பிரதமர் மக்களின் பேராதரவுடன் நாமல் வெற்றி பெற்றுள்ளதாகவும் எதிர்காலத்தில் இலங்கையில் மாத்திரமன்றி பிராந்தியத்திலும் முக்கிய பங்காற்ற முடியும் என்றும் குறிப்பிட்டார்.

‘சார்க்’ ஆரம்பிக்கப்பட்ட 25 ஆவது ஆண்டில் உச்சி மாநாட்டை நடத்துவதை யிட்டு பூட்டான் பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதேவேளை, 16 ஆவது உச்சி மாநாட்டில் அவதானிப்பா ளராக ஓர் இடம் கிடைத்துள்ள அமெரிக்கா வின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்க ளுக்கான உதவிச் செயலாளர் ஹாபர் ஒ பிளக்கை, நேற்று மாலை ஜனாதிபதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

‘சார்க்’ கிராமத்திலுள்ள இலங்கை இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இலங்கையின் எதிர்காலத் திட்டங்கள், இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி விளக்கியுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...