23 செப்டம்பர், 2009

23.09.2009 தாயகக்குரல்.20

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள் விவகாரம் தேசிய எல்லைக்கு அப்பால் சர்வதேச அளவில் முதன்மைப்படுத்தப்பட்ட விவகாரமாக கவனிக்கப்பட்டு வருகிறது. ஐ.நா.சபை பிரதிநிதிகளும் அடிக்கடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வன்னி தமிழ் அகதிகளை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா. விசேட பிரதிநிதி லின் பெஸ்கோ வன்னி மக்களின் மீள்குடியேற்றம் பற்றி சர்வதேச சமூகம் கொண்டுள்ள அக்கறைபற்றி ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார். அது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி, கண்ணி வெடிகள், மிதிவெடிகள் அகற்றப்படும் நடவடிக்கை நிறைவடைந்ததும் மீள்குடியேற்றம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். குரேசியா யுத்தத்தின் 16 வருடங்கள் நிறைவடைந்த பின்னரும் இன்னமும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருவதாகவும் ஆனால் இலங்கையில் அவ்வாறு நீண்ட காலம் செல்லாது என்றும் லின் பெஸ்கோவிடம் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.
மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்த லின் பொஸ்கோ அங்குள்ள அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டதுடன் வடபகுதியில் கண்ணி வெடிகள், மிதிவெடிகள் அகற்றும் பணிகளையும் நேரில் பார்வையிட்டுள்ளார். அவர் நாடு திரும்பும்போது ஊடகவியலாளர்களைச் சந்தித்து அகதிகள் பிரச்சினைபற்றி கருத்து தெரிவிக்கையில் கண்ணி வெடிகள்,மிதிவெடிகள் அகற்றுவதற்கு நவீன இயந்திரங்கள் பயன்படுத்த அரசு மேற்கொண்டுள்ள துரித நடவடிக்கைகளைப் பாராட்டியதுடன் இலங்கையின் தற்போதைய நிலவரம் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறப்பாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
கண்ணி வெடிகள், மிதிவெடிகளை துரிதமாக அகற்றுவதற்காக இலங்கை அரசு 5 நவீன இயந்திரங்களை குரேசியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இவை மணிக்கு 2700 சதுர மீற்றர் நிலப்பரப்பில் கண்ணி வெடிகள், மிதிவெடிகளை அகற்றும் ஆற்றல் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அரசாங்கம் கண்ணி வெடிகளை காரணம் கூறி மீள்குடியேற்றத்தை நீண்ட நாட்களுக்கு தாமதப்படுத்தமுடியாது என எதிர்பார்க்கலாம்.
ஆனாலும் புலிச்சந்தேக நபர்களிடம்; விசாரணையூடாக பெறும் தகவல்களின் அடிப்படையில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள், வெடிபொருட்கள், கண்ணிவெடிகள், காஸ் சிலிண்டர்கள் என்பன நாளாந்தம் மீட்கப்பட்டு வருவதால் யுத்தம் நடைபெற்ற இடங்களில் இருந்து ஆயுதங்கள் முற்றாக எடுக்கப்படும்வரை அந்த இடங்களில் மீள்குடியேற்றம் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது.
ஆனாலும் வன்னி தவிர்ந்த வடக்கு தெற்கு பகுதிகளில் தற்காலிக வாழ்விடங்களை அமைத்துக்கொள்ள வசதிபடைத்தவர்களை முகாம்களில் இருந்து வெளியேற அரசாங்கம் அனுமதி அளித்தால் பலர் வெளியேறக்கூடிய வாய்ப்பிருக்கிறது. இதன்மூலம் முகாம்களில் ஏற்படும் இட நெருக்கடிகளை குறைப்பதன் மூலம் அங்கு நிலவும் நடைமுறைப் பிரச்சினைகளைக் குறைக்கலாம்.
மீள் குடியேற்றம் விரைவுபடுத்தப்படாததுபற்றி ஒரு சாரார்; விமர்சனம் செய்கின்றனர். இன்னொருசாரார்; அவசர கதியில் மீள்குடியேற்றம் செய்யப்படவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்பற்றி விமர்சனம் செய்கின்றனர்.
மீள்குடியேற்றம் என்ற பெயரில் முசலி பிரதேசத்தில் முஸ்லிம் மக்களை அவசர அவசரமாக மீள்குடியேற்றினர். ஆனால் அங்கு திட்டமிடப்படாமல் அவசரகதியில் குடியேற்றியதால் அம்மக்கள் எதிர்நோக்கும் நடைமுறைப் பிரச்சனைகள் குறித்து இப்போது பேசப்படுகிறது.
முகாம்களில் தங்கியுள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவது பற்றி பேசுவோர் குடியேற்றப்படுபவர்களினது மனிதாபிமான உதவிகளில் மாத்திரம் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் அந்த மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கேற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளும் சேர்த்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளாததே முசலியில் குடியேற்றப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளாகும்.
வன்னி மக்கள் அன்றும் இன்றும் அரசியல் பகடைக் காய்களாக பாவிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் முடிவுக்கு வரும் இறுதி நேரம்வரை வன்னி மக்களை புலிகள் தங்களது அரசியல் கேடயமாகவும் யுத்த கேடயமாகவும் பயன்படுத்தினர். யுத்தம் முடிந்து அம்மக்கள் வவுனியா முகாம்களில் அகதிகளாவுள்ள நிலையில் பலரும் அவர்களை தங்கள் அரசியலுக்கு மூலதனமாக்க முயல்கின்றார்கள்.
இந்த நிலை இலங்கையில் மாத்திரமல்ல தமிழ் நாட்டிலும் பலர் வன்னி மக்களை வைத்து தமது அரசியலை நடத்த மீண்டும் ஆரம்பித்துள்ளனர். வன்னி மக்களை விரைவில் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த இந்திய மத்திய அரசு இலங்கை அரசை நிர்ப்பந்திக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழக முதல்வரின் அனுசரணையுடன் தி.மு.க.வும் காங்கிரஸ் கட்சியும் கூட்டாக பிரதமரை சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பின்போது தி.மு.க. காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அடங்கிய குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு இலங்கைக்கு வருவது அவசியமே. அப்போதுதான் இலங்கையில் உள்ள உண்மை நிலைகளைப் புரிந்து கொண்டு இனப்பிரச்சினை தீர்வுக்கு யதார்த்தமான முடிவுகளை அவர்களால் எடுக்கமுடியும்.
தமிழ் நாட்டில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றுள்ளது. அந்த மகாநாட்டில் ~ஈழத்; தமிழர்; வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம்” என்று ஒரு பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரகடனம் புலிகள் சார்ந்த கருத்துக்களை உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் கலைஞரும் தமது பங்குக்கு அகதிகள் பிரச்சினையை கிளப்பியுள்ளார். அகதிகள் பிரச்சினையில் இலங்கை அரசாங்கம் விரும்பியோ விரும்பாமலோ தாமதமாகவேனும் அவர்களை சொந்த இடங்களில் குடியேற்றியே தீரவேண்டும். முகாம்களில் பெரும் தொகையான மக்களை வைத்து நீண்டகாலம் பராமரிக்க அரசாங்கத்தால் முடியாது. மக்களை நீண்டகாலம் முகாம்களில் வைத்து பராமரிக்க சர்வதேச நாடுகளும் தொடர்ந்து நிதியுதவி அளிக்காது
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைத் தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு தார்மீக பொறுப்புண்டு. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு குறிப்பாக தி.மு..க.வுக்கு மதிப்பளிக்கவேண்டிய தேவையும் மத்திய அரசுக்கு உண்டு. எனவே அகதிகள் பிரச்சினையில் தமிழக அரசு மத்திய அரசுடன் முட்டி மோதி நேரத்தை வீணாக்காமல் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன் வைக்கும்படி இந்திய அரசின்மூலம் இலங்கை அரக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்தினால் அது தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வாக அமையலாம். இந்தியப் பிரதமர் வாக்களித்தபடி இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் மாநில எம்.பி.க்கள் குழுவும் இனப்பிரச்சினை தொடர்பாக கூடிய கவனம் செலுத்துவர் என எதிர்பார்ப்போம்.

மற்றுமொரு ஐநா பிரதிநிதி இன்று இலங்கை வருகை



யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்கள் தொடர்பில் ஆராயும் பொருட்டு ஐக்கிய நாடுகளின் விசேடப் பிரதிநிதியான வோல்டர் கெலின் ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகின்றார்.

வடபகுதியில் இடம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களை இவர் பார்வையிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அரச தரப்புப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வோல்டர் கெலின் இந்த மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த இரண்டாவது ஐக்கிய நாடுகள் பிரதிநிதி என்பது குறிப்பிடத்தக்கது
வன்னி முகாம்களில் தினமும் 30,40 பேர் கைதாகின்றனர் -கடத்தப்படுகின்றனர் : சபையில் மங்கள


வன்னி முகாம்களில் மக்கள் கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு தினமும் 30, 40 பேர் கைது செய்யப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் போகின்றனர். அந்த முகாமில் மூடி மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றால் முகாமை உலகத்திற்கு திறந்து விடுங்கள் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர தெரிவித்தார்.

புலிகள் அமைப்பில் 4 ஆயிரம் பேர் மட்டுமே இருப்பதாக 2008 செப்டெம்பர் மாதம் முன்னாள் இராணுவத் தளபதி தெரிவித்திருந்த நிலையில், யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் புலிகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தையும் தாண்டி ஊதிப் பெருத்தது எவ்வாறு என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மீள்குடியமர்வு அமைச்சுக்கான 35 கோடி ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தை எதிர்க்கட்சி தரப்பில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது:

"சர்வாதிகாரத்தின் மூலம் எங்கும் வெற்றியீட்ட முடியாது. இலங்கை என்றசொர்க்க பூமியில் சர்வாதிகார பெரியண்ணனின் படம் எல்லா இடங்களிலும் காட்சியளிக்கின்றது. கொழும்பு வீதிகள் மஹிந்த ராஜபக்ஷவின் படங்களின் குப்பைகளினால் நிரம்பி வழிந்து கிடக்கின்றன என்று லண்டனிலிருந்து வெளியாகும் சஞ்சிகை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹிட்லர், ஸ்டாலின் ஆகியோரின் நவீன யுகமாகவே இது இருக்கின்றது. இலங்கையின் சமாதான செயலகம், இலங்கையின் யுத்த செயலகமாகவே மாறியது. அந்த செயலகம் கொடூரங்களுக்கும் பயங்கரவாதம் என்று காரணம் கற்பித்து மன்னிப்பு கோரியது.

நலன்புரி முகாம்களில் ஒட்டுமொத்தமாக 300 ஆயிரம் பேர் சிறைக் கைதிகளாகவே இருக்கின்றனர். அகதிகளை முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைத்து கொண்டு சர்வதேசத்தைத் திருப்திப்படுத்துவதற்கு அரசாங்கத்தினர் முயற்சிக்கின்றனர். இவர்கள் அகதிகள் அல்லர். கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களே ஆவர்.

வன்னியில் அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் என்னதான் குற்றம் செய்தனர்? விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் பிறந்து இரண்டு தசாப்த காலங்களாக அங்கு வாழ்ந்தமையே அவர்கள் செய்த குற்றமாகும்.

புலிகளின் சர்வாதிகார ஆட்சியில் வாழ்ந்தனர். புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தாச்சியிலிருந்து அடுப்புக்குள் விழுந்து விட்டனர். புலிகள் தோற்கடிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. எனினும், மக்களின் சுதந்திரமான நடமாட்டம் மறுக்கப்பட்டு விட்டது.

மக்களின் சுதந்திரமான நடமாட்டமும் வாழ்கின்ற உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது. வன்னி முகாம்களில் தினமும் 30, 40 பேர் கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு காணாமல் போகின்றனர்.

முகாம்களுக்கு உள்ளூர், வெளியூர் ஊடகங்களோ, சர்வதேச, உள்ளூர் தொண்டு நிறுவனங்களோ அனுமதிக்கப்படுவதில்லை. முகாமில் மூடிமறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றால் முகாமை உலகத்திற்கு திறந்து விடுங்கள்.

அரசாங்கம் பல்வேறு சாக்குபோக்குகளை கூறிக்கொண்டு மாதங்களைக் கடத்தி வருகின்றது என்பதனால் நாடாளுமன்ற தெரிவுக்குழு முகாம்களுக்கு சென்று ஏன் பார்வையிட முடியாது?

அகதிகளுக்குப் பொருளாதார பிரச்சினை இல்லை. நாட்டின் பல பாகங்களிலும் அவர்களுக்கு உறவினர்கள் இருக்கின்றனர். அரசாங்கத்தின் நன்மையோ, பணமோ தடுப்பு முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையில்லை. அவர்களுக்கென வங்கியில் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.

அவர்கள் பிச்சைக்காரர்கள் அல்லர். சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களும் அல்லர். யுத்தம் நிறைவடைந்து விட்டமையினால் அவர்களை சுதந்திரமாக நடமாடுவதற்கும் உறவினர்களுடன் இணைந்து வாழ்வதற்கும் இடமளிக்க வேண்டும்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற பிரதேசங்களுக்குப் போக முடியாவிடின் அவர்களின் உறவினர்களின் வீடுகளுக்காவது செல்வதற்கு அனுமதியளிக்கலாம். அதற்காக அவர்கள் அமைச்சர்களிடம் பணம் கோரவில்லை.

அகதிகள் தொடர்பிலான நடவடிக்கைகள் மூன்று மாதங்களுக்குள் நிறைவடைந்து விடும் என்று இந்திய வெளிவிவகார செயலாளர்களுக்கும் பாதுகாப்பு செயலாளர்களுக்கும் அரசினர் உறுதியளித்தனர்.

எனினும், அந்த நடவடிக்கைக்கு 2010 ஜனவரி 31ஆம் திகதி வரையிலும் கால அவகாசம் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு விருப்பம் இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு விருப்பமில்லையே.

மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கை நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு தரப்பினரின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்படல் வேண்டும். ஏனென்றால் மக்கள் தற்போதுள்ள முகாம்களிலிருந்து கைது செய்யப்பட்டு, இது போன்ற மற்றுமொரு முகாமில் மீண்டும் தடுத்து வைக்கப்படுகின்றனர்.

கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நான் சென்றதில்லை. எனினும், அந்த மக்கள் புலி அட்டூழியங்களுடன் வருடக் கணக்கில் கண்ணி வெடிகளுடனேயே வாழ்ந்து வந்தவர்கள்.

மக்களை மீளக்குடியேற்றுவதற்கு கண்ணிவெடிகள் தான் தடையென்றால் அவர்களை உறவினர்களுடன் வாழ்வதற்கு இடமளிக்க வேண்டும். அவர்களின் சுதந்திரமான நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டும்.

முகாம்களில் 20 ஆயிரம் புலிகளின் சந்தேகநபர்கள் இருப்பதாக அரசாங்கத்தினால் வெளியாகியுள்ள புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்படுகிறது. எனினும், முன்னாள் இராணுவத் தளபதி 2008ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5000 புலிகள் மட்டுமே இருப்பதாக கூறினார்.

பின்னர் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டுவிட்டதாகவும் தற்போது 4 ஆயிரம் புலிகள் மட்டுமே இருப்பதாகவும் கூறினார். அழித்தொழிக்கப்பட்டதன் பின்னர் புலிகள் ஊதிப் பெருத்து விட்டனரா?". இவ்வாறு மங்கள சமரவீர கேள்வி எழுப்பினார்.
மட்டு., அம்பாறை வந்த மக்களில் சிலர் இன்று சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு


வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு மீள் குடியேற்றத்திற்கு அழைத்து வரப்பட்டு, இடை தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த குடும்பங்களில் ஒரு சிறு தொகையினர் இன்று தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள குருக்கள் மடம் கலைவாணி வித்தியாலயம் இடைத் தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 45 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேரில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரும்-

அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று இடைத்தங்கல் முகாமிலுள்ள 42 குடும்பங்களைச் சேர்ந்த 132 பேரில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும் இன்று விடுவிக்கப்பட்டனர். இவர்களைப் பிரதேச செயலக அதிகாரிகள் பொறுப்பேற்று அவரவர் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைத்தார்.

அதிகாரிகளின் தகவல்களின்படி கட்டம் கட்டமாக இக்குடும்பங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் சர்வதேசத்தின் விசாரணைகளுக்கு ஒருபோதும் இடமளியோம் : பீரிஸ்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் சர்வதேசத்தினால் கோரப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைகளை பெறுவதற்காக சர்வதேசத்தினால் கோரப்படும் மனித உரிமைமீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு இடமளிக்கப்போவதில்லை என ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.



இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பீரிஸ் மேலும் கூறுகையில்,

"பிரசல்ஸில் உள்ள தூதுவர் மூலமாக தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, எமது நாட்டு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்படுகிறது.

எனினும் ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளைப் பெறுவதற்காக இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு சர்வதேச நாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது.

எமது நாடு கௌரவமான ஒரு நாடு. ராஜதந்திர ரீதியில் நாம் நமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியே ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்தும் பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளவுள்ளோம்" என்றார்.

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி நியமித்துள்ள நான்கு அமைச்சர்கள் கொண்ட குழுவின் இணைத் தலைவர்களில் அமைச்சர் ஜி.எல் பீரிஸும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேற்றத்தை துரிதமாக்க ரூ.35கோடி குறைநிரப்பு பிரேரணை: சபையில் ஏகமனதாக நிறைவேற்றம

இடம்பெயர்ந்த மக்களைத் துரிதமாக மீளக் குடியமர்த்துவதற்கேதுவாக 35 கோடி ரூபாவுக்கான குறைநிரப்புப் பிரேரணையொன்று நேற்று (22) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கு இந்த நிதியை வழங்க சபை அங்கீகாரம் வழங்கியது.

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் சமர்ப்பித்த பிரேரணை விவாதத்தின் பின்னர் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 இற்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமையில் கூடியது.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் நிறைவடைந்ததும் அமைச்சர் பதியுதீன் குறைநிரப்புப் பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றினார்.

மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகளைத் திட்டமிட்டு செயற்படுத்தி வருவதாகக் கூறிய அமைச்சர் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவரும் வெகுவிரைவாக தமது சொந்த மண்ணில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார்.

மீளக் குடியமர்த்தும் பணிகளை மிகவும் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றோம். முதலில் வயது முதிர்ந்தவர்களை விடுவித் தோம். தற்போது காயமுற்றோர் மற்றும் பெண்களை அனுப்பி வருகின்றோம். அதே நேரம், கிளிநொச்சி – முல்லைத்தீவு தவிர் ந்த பகுதிகளைச் சார்ந்தவர்கள் கிழக்கு மற் றும் வடக்கிலிருந்து சிக்குண்டோர்கள் எனப் பெருந்திரளானோரை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றோம் என்று தெரிவித்த அமைச்சர், மனசாட்சியுட னும், நேர்மையுடனும் மீள்குடியேற்றப் பணி களை மேற்கொண்டு வருவதாகக் கூறி னார். அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கி, வவுனியா அரசாங்க அதிபரின் ஊடாகச் செயற்படுத்தி வருவதாகக் கூறினார்.

நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்களை உறவினர்கள் பொறுப்பேற்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பதியுதீன் கூறினார்.

அதேநேரம், இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தமது உறவினர் கள் ஈடுபட்டிருப்பதாக ஐ. தே. க. உறுப்பி னர் பாலித ரங்கே பண்டார முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் அமைச் சர் மேலும் குறிப்பிட்டார்.

மக்களை மீளக்குடியமர்த்தும் திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் விளக்கியுள்ளாரென்றும் அமைச்சர் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் வைத்து அரசியல் நடத்தும் நோக்கம் அர சாங்கத்திற்குக் கிடையாதென்றும் அவர் குறிப்பிட்டார்.


மேலும் இங்கே தொடர்க...

யாழ். மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்கு 28 முதல் ஆட்சேர்ப்பு

யாழ். குடநாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கினைப் பேணி, சமூக முறைக்கேடுகளைத் தவிர்க்கும் முகமாகவும் சிவில் நிர்வாகத்தை ஒழுங்குற மேற்கொள்ளக்கூடிய வகையிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியதற்கு இணங்க யாழ். குடாநாட்டில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு யாழ். குடாநாட்டைச் சேர்ந்தவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளது.

இதன் பிரகாரம், பொலிஸ் உத்தியோகத்தர்கள் (ஆண்/பெண்), சாரதிகள் மற்றும் உதவிப் பொலிஸ் அதிகாரி (எஸ்.ஐ.) ஆகிய பதவிகளுக்கே ஆட்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

யாழ். குடாநாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணி சமூக மட்டத்தில் நிலவக் கூடிய சீர்கேடுகளை அகற்றும் முகமாக மேற்படி வாய்ப்பினை ஒரு தொழிலாக மட்டுமன்றி ஓர் உன்னத சமூகக் கடமையாகக் கருதி இப்பதவிகளில் இணைந்து கொள்வதற்கு தகுதியானவர்கள் முன்வர வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்படி பதவிகளில் இணைந்து கொள்ளவிரும்புவர்கள் அந்தந்த பிரிவுகளில் உள்ள பிரதேச செயலாளர் உதவி அரசாங்க அதிபர் பணிமனைகளில் உரிய விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் இங்கே தொடர்க...
தமிழக மீனவர்கள் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு: இலங்கைக் கடற்படை அட்டூழியம்




இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவர்கள்.
மணமேல்குடி, செப். 22: புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இந்திய எல்லைக்குள் இலங்கைக் கடற்படையினர் திங்கள்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும், மீனவர்களின் விசைப் படகுகளைச் சேதப்படுத்தியதுடன், வலைகளையும் கடலுக்குள் அறுத்தெறிந்தனர். இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக தமிழக மீனவர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் அவர்கள் மிரட்டி அனுப்பப்பட்டுள்ளனர். கோட்டைப்பட்டினத்திலிருந்து 243 விசைப் படகுகளில் திங்கள்கிழமை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அதில் சல்மான் பாருஸýக்குச் சொந்தமான ஒரு படகு, முஹம்மது ஆரிஃபுக்குச் சொந்தமான ஒரு படகு மற்றும் முஜிபுர் ரஹ்மானுக்குச் சொந்தமான இரு படகுகளில் மீனவர்கள் முருகவேல் (28), வடிவேல் (30), முருகன் (30), அஞ்சப்பன் (28), ஏழுமலை (20), செல்வம் (30), சரவணண் (24), போஸ் (38), கிருஷ்ணன் (48), பெருமாள் (45), முருகன் (28), ஏழுமலை (48) ஆகியோர் அருகருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியை நோக்கி வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களின் படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து முன்னேறிய அவர்கள் மீனவர்களின் படகுகளைச் சுற்றிவளைத்தனர். தொடர்ந்து, தமிழக மீனவர்களின் படகுகளுக்குள் வந்த இலங்கைக் கடற்படையினர், மீனவர்களின் படகுகளிலிருந்த வலைகள், கயிறு மற்றும் தளவாடப் பொருள்களை வெட்டி கடலுக்குள் வீசி எறிந்தனர். பின்னர், துப்பாக்கி முனையில் தமிழக மீனவர்களை மிரட்டி அனுப்பிவிட்டு தங்கள் படகுகளில் அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.கெஞ்சியும் விடவில்லை: இந்தச் சம்பவம் குறித்து மீனவர் போஸ் கூறியது: ""இலங்கைக் கடற்படையினர் சுடத் தொடங்கியதுமே படகுகளை நிறுத்திவிட்டோம். அவர்கள் சூழ்ந்ததும் கைகளை உயர்த்தி நின்றோம். மீனவர்கள் என்று நன்கு அறிந்தும்கூட அவர்கள் எங்களை விடவில்லை. வலைகளை எங்கள் கைகளாலேயே அறுத்தெறியுமாறு கூறினர். வேண்டாம் என்று கெஞ்சினோம். பின்னர், அவர்களே அறுத்தெறிந்தனர்'' என்று கூறினார் போஸ்.ரூ. 2.4 லட்சம் சேதம்: இலங்கைக் கடற்படையினர் சேதப்படுத்தியதால், நான்கு படகுகளுக்கும் தலா ரூ. 60 ஆயிரம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கைத் தமிழ் அகதிகள் நிலை: அமெரிக்கா கவலை





வாஷிங்டன், செப். 22: இலங்கை அகதிகள் முகாம்களில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அவதிப்படுகின்றனர். இந்த விஷயத்தில் இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக நியூயார்க்கில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான வெளியுறவு துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கை அகதிகள் முகாம்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் அடைக்கப்பட்டுள்ளது கவலை அளிக்கும் விஷயமாகும். இன்னமும் முகாம்களில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டியது மிகவும் அவசர அவசியமானதாகும். முகாம்களில் மூன்று மாதத்திற்கும் மேலாக அவர்கள் அவதிப்படுகின்றனர். இம்மாத இறுதியில் பருவமழை தொடங்க உள்ளது. அப்போது அங்குள்ளவர்களின் நிலைமை மிகவும் மோசமாகும். இதைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த விஷயத்தில் இலங்கையை சர்வதேச சமுதாயம் நிர்பந்தப்படுத்துவதில் பல்வேறு இடர்ப்பாடுகள் உள்ளன. மேலும் இப்பிரச்னைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்படுவதோடு, முகாம்களில் உள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை அளித்து புதிய இடங்களில் குடியமர்த்துவதில் உள்ள பிரச்னைகளும் உள்ளன. இருப்பினும் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை இத்தகைய முகாம்களில் தங்க வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் மேலும் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே வெகு விரைவாக அவர்களைக் குடியமர்த்த வேண்டும். அனைவரையும் ஒரே சமயத்தில் குடியமர்த்துவது என்பது உடனடியாக இயலாத காரியம். ஏனெனில் இலங்கையின் வடக்குப் பகுதியில் இன்னும் பல விஷயங்களை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த பணிகள் தொடங்கப்பட்டாலும், முகாம்களில் உள்ளவர்களை இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள அவர்களது உறவினர்களின் வீடுகளில் தங்கிக்கொள்ள அனுமதிக்கலாம். அல்லது முகாம்களில் தங்க விரும்புவர்களை தங்க அனுமதிக்கலாம். முகாம்களில் இருப்பவர்கள் அனைவரும் சோதனை செய்யப்படுவது குறித்து கேட்டதற்கு, முகாம்களில் சேர்க்கப்பட்ட தினத்திலிருந்தே இத்தகைய சோதனைகள் நடத்தப்படுகின்றன. முகாம்களில் தங்கியுள்ளவர்களில் விடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எவரேனும் இருக்கிறார்களா என்று பார்ப்பதில் தவறில்லை. இத்தகைய சோதனை மிகவும் அவசியமானது. ஆனால் முகாம்களில் உள்ள மக்கள் நீண்ட காலம் இதே சூழலில் வசிக்கக்கூடாது என்பதுதான் என்றார் பிளேக்.
அன்பான புதியபாதை வாசகர்களே எமது



அன்பான புதியபாதை வாசகர்களே எமது
இணையத்தள முகவரியை உங்கள்
நண்பர்களுக்கும் தெரியபடுத்துமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
எமது முகவரி
http://puthiyapathai.com
நன்றி
இலங்கை தமிழர் பிரச்சினை: பிரதமர் மன்மோகன்சிங்குடன் தி.மு.க.கூட்டணி எம்.பி.க்கள் சந்திப்பு


இலங்கையில் கடந்த மே மாதம் நடந்த போரின்போது சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்கள் வீடுகளில் இருந்து வெளியேறினார்கள். அவர்களை சிங்கள அரசு தடுப்பு முகாம்களில் அகதிகள் போல அடைத்து வைத்துள்ளது.

எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத அந்த முகாம்களில் ஈழத்தமிழர்கள் கடும் அவதிக்குள்ளாகி கண்ணீரும் கம்பலையுமாக உள்ளனர். சோதனை என்ற பெயரில் முகாம்களில் உள்ள தமிழர்கள் கடத்தி படுகொலை செய்யப்படுகிறார்கள். பெண்கள் பாலியல் துன்புறுத்துக் குள்ளாகிறார்கள்.

ஐ.நா.சபையும், உலக நாடுகளும் ஈழத்தமிழர்களை அவரவர் வீட்டுக்கு திருப்பி அனுப்புங்கள் என்று பலதடவை இலங்கையிடம் வேண்டுகோள் விடுத்தன. ஆனால் கண்ணிவெடிகளை அகற்றிய பிறகு தமிழர்களை திருப்பி அனுப்புவதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கூறினார்.

தடுப்பு முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள் நிலை நாளுக்கு நாள் மோசமானதால் உலகத் தமிழர்களிடம் குமுறல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கும் சம்பவம் அதிகரித்துவிட்டது. இந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட தமிழ்நாடு அரசு தீவிர முயற்சிகளை தொடங்கி உள்ளது.

இலங்கை தமிழர்கள் நிலை குறித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்- அமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதினார். இதன் தொடர்ச்சியாக இன்று (செவ்வாய்) தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினார்கள். டெல்லியில் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி, தயாநிதிமாறன், ஜெகத்ரட்சகன், பழனிமாணிக்கம், டி.கே.எஸ்.இளங்கோவன், சுகவனம், வசந்தி ஸ்டாலின், ஹெலன் டேவிட் ஆகியோர் சென்றிருந்தனர். விடுதலை சிறுத்தைகள் சார்பில் தொல்.திருமாவளவன் எம்.பி. சென்றார்.

மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், சித்தன், மாணிக்தாகூர், சுதர்சன நாச்சியப்பன், கிருஷ்ணசாமி ஆகியோர் சென்றிருந்தனர். 10.15 மணி முதல் 10.45 மணி வரை சுமார் 30 நிமிடம் பிரதமருடன் தமிழக எம்.பி.க்கள் பேசினார்கள்.

அப்போது முதல்- அமைச்சர் கருணாநிதி சார்பில் கோரிக்கை மனு ஒன்றை பிரதமரிடம் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

இலங்கையில் போர் முடிந்த பிறகும் ஈழத்தமிழர்கள் தடுப்பு முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் அவரவர் வீடுகளுக்கு உடனடியாக திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மழைக்காலம் தொடங்கும் முன்பு தமிழர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

இலங்கையில் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் ஈழத்தமிழர்களின் உண்மைநிலை என்ன என்பதை அறிந்து கொள்ள உலகத்தமிழர்கள் எதிர்பார்ப்புகளுடன் உள்ளனர். எனவே ஈழத்தமிழர் உண்மை நிலையை அறிய தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு எம்.பி.க்கள் குழுவை அனுப்ப வேண்டும். அந்த குழு தடுப்பு முகாம்களுக்கு சென்று உண்மையை அறிந்து வரச்செய்ய வேண்டும். இந்த குழு பயணத்துக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு விரைவில் செய்து தர வேண்டும்.

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தாக்குவது சமீபகாலமாக அதிகரித்து விட்டது. கடந்த 6 மாதங்களில் மட்டும் சிங்கள கடற்படை தாக்குதல்களில் 9 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படை கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது அதிகரித்துவிட்டது. அந்த பகுதியில்தான் நல்ல மீன் வளம் உள்ளது. எனவே தானமாக கொடுத்த கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து இந்தியா திரும்ப பெற வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்ய தமிழக அரசு சார்பில் பல கட்டங்களாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிவாரணப் பொருட்கள் உரிய முறையில் ஈழத் தமிழர்களின் கைகளில் சென்று சேர்ந்ததா? என்பதை அறிய மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என்று பிரதமரிடம் தமிழக எம்.பி.க்கள் கேட்டுக்கொண்டனர். இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்று தர வேண்டும் என்றும் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர வீடு கட்டி கொடுக்க வேண்டும். அவர்களுக்கு தற்போது மாதந்தோறும் 110 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையை 250 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும் என்றும் பிரதமரிடம் தமிழக எம்.பி.க்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

எம்.பி.க்களின் கோரிக்கைகளை பிரதமர் மன்மோகன்சிங் கவனமாக கேட்டுக்கொண்டார். பிறகு அவர் ஈழத்தமிழர்களுக்கு உதவ எல்லாவித நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். பிரதமர் கூறியதாவது:-

ஈழத் தமிழர்களுக்கு உதவும் விஷயத்தில் இந்தியா தரப்பில் உண்மையான, ஆக்கப்பூர்வமான பணிகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுததுள்ளோம்.

எதிர்காலத்திலும் ஈழத் தமிழர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த விஷயத்தில் இந்தியா ஒரு போதும் தயங்காது.

இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

இதையடுத்து வெளியில் தமிழக எம்.பி.க்கள் பிரதம டம் பேசியது பற்றி நிருபர் களுக்கு பேட்டியளித்தனர்.

பின்னர் அவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்கள்.

இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோனியாவிடம் வற்புறுத்தினார்கள்.
கல்குடா பிரதேசத்தில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது, ஆயுதம் மீட்பு-

மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் நேற்றையதினம் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ரி56 ரக துப்பாக்கியொன்றும், மகசின் ஒன்றும் மீட்கப்பட்டதாகவும், இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலீசார் மேற்கொண்டு வருவதாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இரு பெண் புலி உறுப்பினர்கள் கைது, ஒருவர் சயனைட் அருந்தி தற்கொலை-

வவுனியா உக்குலாங்குளம் பிரதேசத்தில் வைத்து இரண்டு பெண் புலிஉறுப்பினர்கள் இன்றுபகல் கைதுசெய்யப்பட்டதாகவும், இதன்போது ஒருவர் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகவும் இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். உக்குலாங்குளத்தில் இரு புலிகளின் தற்கொலைதாரிகள் மறைந்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அப்பிரதேசம் சுற்றவளைக்கப்பட்டபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஒருவரே சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும் பிரிகேடியர் கூறியுள்ளார். கைதுசெய்யப்பட்ட யுவதிகள் இருவரும் வவுனியாவிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்ததுடன், உக்குலாங்குளம் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தங்கியிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. கைதான பெண்புலி உறுப்பினர் வழங்கிய தகவலுக்கமைய ஆசிகுளம் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தற்கொலை அங்கிகள் 03, தலா 02 கிலோகிறாம் எடைகொண்ட வெடிமருந்துப் பொதிகள் 03, அதிசக்தி வாய்ந்த டெட்னேற்றர்கள் 03, மைக்ரோ கைத்துப்பாக்கி ரவைகள் 100 என்பன மீட்கப்பட்டுள்ளன. குறித்த பெண் புலி உறுப்பினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது : தர்மசிறி லங்கா பேலி



ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக இலங்கை ஊடகத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தர்மசிறி லங்கா பேலி தெரிவித்தார்.

இந்நாட்டு மக்களின் தகவல்களைத் தெரிந்துகொள்ளும் உரிமையைப் பாதுகாக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமக்குக் கிடைக்கும் தகவல்களை மக்களுக்குத் தெரியப்படுத்துவதில் ஊடகவியலாளர்களுக்கு இருக்கும் தடைகள் அகற்றப்பட வேண்டும் என்றும் இவர்கள் மீதான கொடுரத் தாக்குதல்களும் ஊடக அடக்குமுறையும் உடனடியாக நிறுத்த்தப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் எட்டு ஊடக நிறுவனங்கள் சார்பாக வேண்டுகோள் விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை இதழியல் கல்லூரி கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அரசாங்கம், இதுவரையில் செயலற்றுக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பத்திரிகைப் பேரவையை மீண்டும் இயங்கு நிலைக்குக் கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளது. 35 வருடங்களுக்கு முன் இலங்கையிலுள்ள அச்சு ஊடகங்களுக்காகத் தயாரிக்கப்பட்டிருந்த அன்றேல் அச்சு ஊடகங்களை நிர்வகிப்பதற்காக, அடக்கியாள்வதற்காகவே இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

இவற்றை எவ்வித மாற்றங்களும் இன்றி, இன்றைய நிலைக்கு இவை பொருத்தமானவைதானா என ஊடக சங்கங்களுடனோ ஊடகவியலாளர்களுடனோ ஆராய்ந்து பார்க்காமலும் எவருடனும் எவ்வித பேச்சுவார்த்தைகளை நடத்தாமலும் மீண்டும் இயங்கு நிலைக்கு அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.

பத்திரிகை பேரவையை மீண்டும் இயக்க முயற்சிப்பதற்கு நாம், ஊடக அமைப்புக்கள் என்ற வகையில் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இதன்மூலமாக அரசாங்கம் தொடர்ச்சியாக இந்த நாட்டிலுள்ள மக்கள், தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைக்குப் பங்கத்தை ஏற்படுத்தவே அரசு முயற்சிக்கின்றது.

இந்த நாட்டிலுள்ள ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எதிராக இடம்பெற்ற தாக்குதல்களை நாம் நன்கறிவோம். ஊடக நிறுவனங்கள் எரியூட்டப்பட்டதை அறிவோம்; ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதை அறிவோம்; ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும் நாம் அறிவோம்.

அண்மையில் போத்தல ஜயந்த மீது நடத்தப்பட்ட தாக்குதலால் இன்னமும் அவரால் இரு பாதங்களையும் நிலத்தில் ஊன்றி நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கைத்தடி உதவியுடன் கூட ஊன்றி நடக்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. போத்தல ஜயந்த இந்த சமூகத்திற்கு இழைத்த அநீதிதான் என்ன என்று நான் கேட்கின்றேன்.

இந்த நாட்டுமக்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளும் உரிமைக்காக குரல் கொடுத்துச் செயற்பட்டமைக்காகவே இவர் இந்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்தியவர்கள் யார் என்பதை கண்டறிவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு கூட அரசாங்கம் தவறியுள்ளது.

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களைக் கொன்றவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதற்குக் கூட அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

இதுபோன்றதே ஊடகவியலாளர்கள் கடத்தப்படும் சம்பவங்களும்.

ஊடக நிறுவனங்களை எரியூட்டுதல் போன்ற எந்தச் சம்பவம் தொடர்பிலும் அரசாங்கத்தின் பாதுகாப்பு பிரிவினரோ பொலிஸாரோ, இதற்குக் காரணமானாவர்கள் யார் என்பதைக் கண்டறிவதற்கு எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

அந்த வகையில் இந்த நாட்டின் எட்டு ஊடக நிறுவனங்களைச் சார்ந்த நாம், இந்த மேடையில் ஒன்றுகூடி, இந்நாட்டு மக்களின் தகவல்களைத் தெரிந்து கொள்ளும் உரிமையைப் பாதுகாக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தமக்குக் கிடைக்கும் தகவல்களை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது ஊடகவியலளார்களின் கடமை. எனவே அக்கடமையைச் செய்ய ஊடகவியலாளர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடைகளை அகற்றுமாறும், கொடுரத் தாக்குதல்களையும் ஊடக அடக்குமுறையையும் உடனடியாக நிறுத்துமாறும் நாம் கோருகின்றோம்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...