29 நவம்பர், 2010

ஜனாதிபதி நாளை லண்டன் விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ நாளை லண்டனுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக அரசாங்க இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று விஜயம் செய்யும் ஜனாதிபதி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க அமர்வொன்றில் விஷேட உரையாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

குவைத்திலிருந்து நிர்க்கதி நிலைக்குள்ளான 85 பேர் இன்று இலங்கை வருகை

குவைத் நாட்டில் நிர்க்கதி நிலைக்குள்ளான 85 பேர் இன்று இலங்கை வரவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

அந்நாட்டில் நிர்க்கதி நிலைக்குள்ளானவர்களில் மேலும் 360 பேரை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவர்கள் கொழும்பு, கண்டி மற்றும் கிழக்கு மாகாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இலங்கையைச் சேர்ந்த 2ஆயிரம் பேர் இவ்வாறு வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

டொலர்கள் மூலம் கொடுக்கல் வாங்கல் முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: பாக்.ஜனாதிபதி

அமெரிக்க டொலர்கள் மூலம் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளும் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாடுகளுக்கிடையே பண்டமாற்று முறைமையை ஏற்படுத்தி அபிவிருத்தி காண வேண்டும் என்று பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸீப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸீப் அலி சர்தாரியை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹில்டன் ஹோட்டலில் பிரதமர் டி.எம். ஜயரத்ன சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே பாகிஸ்தான் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் போது மேலும் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் ஜனாதிபதி,

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையே நீண்ட காலமாக ராஜதந்திர உறவுகள் இருந்து வருகிறது. அதனை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும். இங்கு பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்கினோம். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் அமெரிக்க டொலர்கள் மூலம் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொண்ட யுகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

அதற்கு பதிலாக எம்மைப் போன்ற நாடுகள் பண்டமாற்று முறைமை ஊடாக அபிவிருத்தியின் இலக்குகளை நோக்கிச் செல்ல வேண்டும். இலங்கையின் நிர்மாணப் பணிகளுக்கு தேவையான இரும்பு மற்றும் சீமெந்து உட்பட தேவையான பொருட்களை பாகிஸ்தானால் வழங்க முடியும். மேலும் இலங்கையில் சீனி உற்பத்தியை மேம்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கவும் நாம் தயாராக உள்ளோம்.

இரண்டு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உடன்படிக்கையினை பலப்படுத்தி வர்த்தக அடித்தளமொன்றை ஏற்படுத்திக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது" என்று கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சிறுமி மீது பாலியல் வல்லுறவு : 62 வயது நபர் கைது


வாழச்சேனை நாசிவன் தீவு பகுதியில் எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 62 வயதுடைய நபரொருவரை நேற்றிரவு கைது செய்துள்ளதாக வாழச்சேனை பொலிஸ் நிலைய அதிகாரி எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

குறித்த சிறுமி வாழச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை இன்று நீதிமன்றில் ஆஜர் செய்ய உள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

சவூதி மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி: அமைச்சர் ராஜித

இலங்கை ஆழ்கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு சவூதி அரேபிய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

''இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் 400 சவூதி அரேபிய மீனவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பிடிக்கும் மீன் வகைகளில் 20 சதவீதத்தை இலங்கைக்கு வழங்க வேண்டும்.
இதுதொடர்பான ஒப்பந்தம் டிசம்பர் முதல் வாரமளவில் கைச்சாத்திடப்படவுள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையை வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்க்கும் வரவு செலவுத் திட்டம் : ஜே.வி.பி

உலகின் விமர்சனத்திற்குள்ளான புதிய லிபரல்வாத, காலனித்துவ நாடாக இலங்கையை வெளிநாட்டவர்களுக்கு "தாரைவார்க்கும்' வரவு செலவுத் திட்டத்தையே அரசாங்கம் முன்வைத்துள்ளது என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சாட்டினார்.

பௌத்த குருமார்கள் முன்னிலையில் உறுதியளித்த சம்பள உயர்வை வழங்காத ஜனாதிபதி ஒரு "பொய்காரர்' என்றும் அவர் தெரிவித்தார். பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மக்களுக்கு சலுகைகளை வழங்காத அரச ஊழியர்களுக்கு உறுதியளித்த ரூபா 2500 சம்பள உயர்வை வழங்காத வரவு செலவு திட்டம் என்பதே எமக்கு மேலோட்டமாகத் தெரியும் விடயமாகும். ஆனால் இதனை ஆழமாக ஆராய்ந்தபோது நாட்டின் பொருளாதாரத்தை வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயல்படுத்தும் வரவு செலவுத் திட்டம் என்பதே உண்மையாகும்.

முதலீட்டு நிதியை வெளிநாட்டவர்களுக்கு ஏற்ற விதத்தில் இலகுவாக்கி நிதிச் சட்டங்களையும் அவர்களுக்கு சார்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

எனவே உலக நாடுகளிலிருந்து எந்தத் "திருடர்களும்' இங்கு வந்து முதலீடு செய்யும் ஆபத்தான நிலை தோன்றியுள்ளது. அமைச்சுப் பதவிகளுக்காக சிறப்புரிமைகளுக்காகவும் தேசப் பற்றுள்ள தேசிய பொருளாதாரத்தை கட்டிக் காக்கும் அரசாங்கம் என புகழ் பாடிக் கொண்டிருப்போர் ரணில் விக்கிரமசிங்கவை விட புதிய லிபரல்வாதக் கொள்கையை முன்னெடுக்கும் ஜனாதிபதி தொடர்பில் மௌனம் சாதிக்கின்றனர்.

நிதியமைச்சின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவே உலகின் சிறந்த லிபரல்வாதி ஜனாதிபதி என புகழ் பாடியுள்ளார். இன்று விவசாயம் புறம்தள்ளப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக சூதாட்டம் சட்டமாக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஹிக்கடுவை கண்காட்சி, ஐபா என பல்வேறு கலாசார சீரழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. "மதுவுக்கு முற்றுப்புள்ளி' எனக் கூறும் அரசாங்கம் நாடு முழுவதும் மதுபானச் சாலைகளை ஆரம்பிக்கின்றது.சூதாட்ட வலயங்கள் அமைக்கப்படுகின்றன. சுற்றுலாத்துறைக்கான பொருளாதார அபிவிருத்தி என்பது எமது நாட்டுக்கு பொருந்தாத விடயமாகும். இது நாட்டில் கலாசார சீரழிவை ஏற்படுத்தும்.

வெளிநாட்டவர்களை சந்தோஷப்படுத்தி உறவினர்களுக்கு உழைப்பதற்கு வழிவகுக்கும் அனைத்து திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

கிருஷ்ணாவுடனான தமிழ்க் கூட்டமைப்பு, அரங்கம் ஆகியவற்றின் சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்க் கட்சிகளின் அரங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சந்தித்து பேச இருந்த போதிலும் இந்தச் சந்திப்புக்கள் இறுதி நேரத்தில் ரத்துச்செய்யப்பட்டுள் ளன. நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டமையினாலேயே இந்தச் சந்திப்புக்கள் இரத்துச் செய்யப்பட்டதாக குறித்த கட்சிகளுக்கு இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கை வந்திருந்த கிருஷ்ணா, யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மற்றும் அங்கு ஏற்பாடாகியிருந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும், அதனைத் தொடர்ந்து தமிழ்க்கட்சிகளின் அரங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

எனினும் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலநிலை மாற்றம் காரணமாக அன்று மாலை நடைபெறவிருந்த நிகழ்வுகள், நேற்று ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டன. இதன் பிரகாரம் அம்பாந்தோட்டையில் புதிதாக இந்திய கிளை தூதுவர் ஆலயம் திறந்து வைப்பதற்கென அமைச்சர் கிருஷ்ணா நேற்று அங்கு சென்றிருந்தார். இதுவே சந்திப்பு இடம் பெறாமைக்கான காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

நேற்று காலை அம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்த எஸ்.எம். கிருஷ்ணா அங்கிருந்து நேரடியாக கட்டுநாயக்கா விமான நிலையம் சென்று நாடு திரும்பியுள்ளார்.

இதேவேளை தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் நேற்று கொழும்பில் கூடி கிருஷ்ணாவைச் சந்தித்து மகஜர் கொடுப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இறுதி நேரத்தில் இந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதையடுத்து மகஜரை கையளிக்க முடியாத நிலை அரங்கத்தினருக்கு ஏற்பட்டது
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் இணக்கப்பாட்டை வளர்ப்பதற்கு அரசாங்கத்துக்கு உதவத் தயார் : அமெரிக்க தூதுவர் பற்றீஷியா

பாதுகாப்பை வலுப்படுத்தவும் பொருளாதார அபிவிருத்தியை மேலும் விருத்தி செய்யவும் அரசியல் இணக்கப்பாட்டை வளர்ப்பதற்கும் இலங்கை அரசாங்கத்துக்கு உதவ அமெரிக்கா தயாராகவுள்ளது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீஷியா ஏ. பியூடெனிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகம் பூராக ஐக்கிய அமெரிக்காவின் உறவுகளுக்கு ஜீவனூட்ட ஜனாதிபதி ஒபாமாவும் இராஜாங்க செயலாளர் ஹிலரி ரொட்ஹம் கிளின்டனும் முன்னுரிமை கொடுத்துள்ளனர்.

அவர்கள் தற்போதைய அமெரிக்க உறவுகளுக்கு வலுவூட்டவும் அன்றாட சவால்களை முறியடிக்கக் கட்டியெழுப்பப்படும் உறவுகளுக்கு அதாவது காலநிலை மாற்றங்கள், அணு ஆயுத அச்சுறுத்தல்கள், நோய் மற்றும் வறுமை ஒழித்தல் போன்ற சவால்களை புதிய உறவுகளுக்கு வலுவூட்டவும் பாடுபடுகின்றனர். இந்த முயற்சிகளில் நாமும் ஒரு பங்காளி என்பதையிட்டு இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன்.

பாதுகாப்பை வலுவூட்டவும் பொருளாதார அபிவிருத்தியை மேலும் விருத்தி செய்யவும் அரசியல் இணக்கப்பாட்டை வளர்ப்பதற்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இலங்கை வாசிகளுக்கும் உதவ ஐக்கிய அமெரிக்கா மிகவும் பாடுபட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விருத்தி செய்ய அமெரிக்க வர்த்தகக் குழுவை வரவழைத்தோம். தமது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் முகமாக மோதல் பிரதேச மக்களுக்கு புதுச் செயல்திறன்களை பயிற்றுவிப்பதற்காக எமது அபிவிருத்தி முகவரான யுஎஸ்எயிட் பல உள்ளூர் நிறுவனங்களுடன் தோழமை பூண்டுள்ளது.

இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவிற்கு நாம் வழங்கும் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியின் முதல்கட்ட உதவி கடந்த வாரம் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அமெரிக்க 180 மில்லியன் அமெரிக்க டொலரிலான உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக ஊடகத் துறையில் மிகவும் அதிகமாகப் பேசப்படும் விடயமாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் கணினியிலிருந்து களவாடப்பட்ட ஆவணங்கள் அமைந்துள்ளது. இந்த ஆவணங்களின் நம்பகத்தன்மையை என்னால் உறுதி செய்ய முடியாது. ஆயினும் இரகசியமாக வைத்திருக்க வேண்டிய தகவல்கள் வெளியாகியமை சம்பந்தமாக ஐக்கிய அமெரிக்காவின் ஆழ்ந்த அனுதாபத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்தச் செயலை நாம் கண்டிக்கின்றோம்.

தூதுவர்கள் தம்மைச் சந்திப்பவர்களிடம் நேர்மையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. ஆகையால் பேச்சுவார்த்தையில் அடங்கியவை இரகசியமாக அமைய வேண்டும். ஏனைய அரசாங்கங்களுடன் சர்வதேச உறவுகள் பற்றி கலந்துரையாடும் போது அது நேர்மையானதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சமாதானம், பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறுதித் தன்மையைப் பேண முடியாது.
மேலும் இங்கே தொடர்க...

முன்னை நாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஆதவனின் விசேட செய்தி வன்னியிலிருந்து


புலம்பெயர் தேசங்களில் எமது பெயரால் நீங்கள் நடாத்தும் இழிசெயலை நிறுத்துங்கள் என முன்னாள் புலி ஒருவர் தனது வேண்டுதலை கே.பி யின் இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளார். நபரின் பதிவில் புலம்பெயர் தமிழரின் புலித்தொழில் சார்பாக விரிவாக விபரிக்கப்பட்டுள்ளதுடன் , பிரபாகரனை தமிழர்கள் தலைவர் என ?ஏற்றுக்கொள்வதாயின் பிரபாகரன் இறுதி நேரத்தில் புலிகளியக்கத்தின் புலம்பெயர் தலைவராக கே.பி யை நியமனம் செய்திருந்ததையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என வக்காலத்துவேறு வாங்கியுள்ளார். குறிப்பிட்ட பதிவில் புலிகள் தமிழ் மக்களுக்காக போராடியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். புலிகள் மக்களுக்காக போராடினார்களா அன்றில் தமது சொந்த தேவைகளுக்காக போராடினார்களா என்பதற்கு குறிப்பிட்ட முன்னாள் புலியின் பதிவே சான்று. புலிகள் இவ்வாறு காலத்திற்கு காலம் தமது இழிசெயல்களை மறைப்பதற்காக மாறி மாறி நிறம்மாறும் விலங்குபோன்று மற்றவர் மீது குற்றம் சுமத்துவது வரலாற்றினூடாக கண்டிருக்கின்றோம்.

அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

முன்னைய கட்டுரையில் புலம்பெயர் சூழலில் மாவீரர் தினத்தை நினைவு கொள்ளுவதிலுள்ள போலித்தனங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தோம். மீண்டும் அது குறித்து மேலும் சில விடயங்களை எங்கள் புலம்பெயர் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றோம். சீனாவில் இப்படியொரு கருத்துண்டுமரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லைபெரும்பாலும் எங்களுடைய நிலைமையும் அப்படிப்பட்ட ஒன்றுதான். உங்களது செயல்கள் எங்களது மௌனத்தை கலைக்கிறது. நாங்கள் சாவை உதைத்துக் கொண்டு வாழ்வதற்கான போராட்டத்தில் இருக்கிறோம். தினமும் செய்திகளைப் படித்து, அது குறித்தெல்லாம் விவாதம் செய்யுமளவிற்கு, மனதிலும் உடலிலும் எங்களுக்கு தென்பில்லை நன்பகளே! ஆனாலும் இனியும் நாங்கள் மௌனமாக இருந்தால் நீங்கள் எங்கள் நிர்வாணம் மறைக்கும் கோவணங்களையும் விலைபேசத் தயங்கப் போவதில்லை ஏனெனில் உங்களது தேவையெல்லாம் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் மட்டுமே. எனவே இனியும் அமைதி காப்பது சரியல்ல என்பதை உணர்ந்தே இதனை பதிவு செய்ய விழைகின்றோம். பொறுமைக்கும் ஒரு எலை உண்டல்லவா!

சமீப நாட்களாக, நாங்கள் அவதானித்து வருகின்ற சில சம்பவங்களை முன்னிறுத்தி விவாதிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

எங்கள் மக்களும், எங்கள் சரணடைந்த போராளிகளும் அடுத்த வேளை உணவுக்காக கையேந்திக் கொண்டிருக்கும் போது, நீங்கள் புலம்பெயர் நாடுகளில், எங்கள் மரணமடைந்த போராளிகளை நினைவு கொள்வதாக அறிவிக்கின்றீர்கள். இறந்து கொண்டிக்கும் எங்கள் உறவுகளைக் காப்பாற்ற முடியாத உங்களது சுயநலத்தையும், சந்தர்ப்ப வாதத்தையும் எண்ணி ஆரம்பத்தில் மனம் நொந்திருந்தாலும், சரி எங்கள் உடன்பிறப்புக்கள் போல் வாழ்ந்த சகோதரர்களையும், சகோதரிகளையும்தானே நினைவு கொள்ளுகின்றீர்கள் என்று உள்ளுர மகிழ்ந்தோம். நாங்கள் பசியோடும் வேதனையோடும் இருந்த போதும் அவர்களது தியாகம் இப்படியாவது மக்களால் நினைவு கொள்ளப்படுகிறதே என்பதையெண்ணி மகிழ்சியடையாமல் இருக்க முடியவில்லை. ஆனால் அது கூட உண்மையல்ல உங்கள் பணம் சம்பாதிக்கும் பேராசையின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் என்பதை அறிந்த போது எங்களால் எப்படி அமைதியாக இருக்க முடியும். போராட்டம் நடந்து கொண்டிந்த காலத்திலும் அதன் வலிகளை எந்தவகையிலும் அனுபவித்தறியாத சிலர் புலம்பெயர் மக்களின் உள்ளார்ந்த ஈடுபாட்டை வியாபாரமாக்கினீர்கள். உங்களைப் போன்றவர்களின் கேவலமான செயற்பாடுகளை அறிந்திருந்த போதும், நாங்கள் எங்கள் மக்களுக்காக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டோம். இன்று ஒரு மிகப்பெரிய அழிவை சந்தித்த பின்னர் போராட்டம் முற்றுப்பெற்று விட்டது. எங்கள் போராட்டம் ஓய்தாலும் உங்கள் பணம் சம்பாதிக்கு சூதாட்டம் மட்டும் இன்னும் ஓயவில்லை. போராட்ட காலத்தில் போராட்டத்தை விற்றீர்கள், இன்று அதில் இறந்தவர்களின் தியாகங்களை ஏலம் போட்டு விற்கிறீர்கள். இதனை மனச்சாட்சியுள்ள எந்த மனிதனால் சகித்துக் கொள்ள முடியும்? உங்களது ஊடக பலத்தாலும், அடியாள் பலத்தாலும் இந்த உண்மையை புலம்பெயர்ந்த சாதாரண மக்கள் அறியாத வண்ணம் நீங்கள் தடுத்து வைத்திருக்கலாம், ஆனாலும் தங்கள் மனச்சாட்சிக்கு மதிப்பளிக்கும் நல்ல மனிதர்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த விடயங்களை பகிரங்கமாகப் பேசுகின்றோம். எங்களின் இந்தக் குரல்கள், நல்லுள்ளம் கொண்ட ஒரு சிலரையாவது உசுப்பும், செயலுக்கு தூண்டும்; என்பதில் இம்மியளவும் எங்களுக்கு சந்தேகமில்லை.

ஏதோ நடந்துவிட்டுப் போகட்டுமே என்று எங்களால் அமைதியாக இருக்க முடியாது. ஏனென்றால் உங்களது சூதாட்டத்தால் கேவலப்படுத்தப்படுவது எங்கள் சகபோராளிகளின் தியாகங்கள், பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது எங்கள் மக்கள். அவர்கள்தான் போராட்டத்தால் எல்லாவற்றையும் தொலைத்து உருக்குலைந்து போனவர்கள். ஒரு காலத்தில், விருந்தோம்பல் என்றால் வன்னி என்று சொன்ன காலம் போய் பசி,பட்டினி. நோய் என்றால் வன்னி என்று சொல்லும் நிலைமை உருவாகியிருக்கிறது. இப்படியொரு நிலைமையில், தொடர்ந்தும் எங்களைக் காட்சிப் பொருளாக்கி அரசியல் செய்யும் உங்கள் கேவலமான செயல்களை எங்களால் அனுமதிக்க முடியாது. எங்களால் மட்டுமல்ல, மனிச்சாட்சியுள்ள எந்தவொரு புலம்பெயர் தமிழரும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றே நாங்கள் நம்புகிறோம்.

இன்று பலகோடி ரூபாய் செலவில், மாவீரர் தினக் கொண்டாட்டங்களை நடாத்திக் கொண்டு இருக்கின்றீர்கள். கொண்டாடுவதற்கு இது மகிழ்சிக்குரிய விடயமா அல்லது திருவிழாக் கோலம் கொண்டு அனுஸ்டிப்பதற்கு இதென்ன கோயில் நிகழ்வா? பின்னர் எதற்கு இந்த ஆடம்பரங்கள்? யாருடைய நன்மைக்காக இது மேற்கொள்ளப்படுகிறது? எங்கள் தன்னலமற்று இறந்த, அந்த போராளிகள் மீது உங்களுக்கு உண்மையிலேயே ஈடுபாடிருந்தால், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் அவர்களை நினைவு கொண்டிருக்க முடியும். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லை ஏன்? பதில் பணம் சம்பாதிக்க வழி இல்லாமல் போய்விடும் என்பதுதானே! உண்மையில் இதற்கும் மக்களின் உள்ளார்ந்த ஈடுபாட்டிற்கும் ஒரு தொடர்புமில்லை என்பதை நாங்கள் நன்கு அறிவோம். இவ்வாறான இழிவுகள் ஒருபுறம் என்றால்;, மறுபுறம் யார் யாரோ, இம்முறை மாவீரர் தின உரை ஆற்றவுள்ளதாக பிறிதொரு நகைச்சுவையான செய்தியும் வெளிவந்து கொண்டிருகிறது. இதுவும் நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று எமது கடந்தகாலத்தை இழிவுபடுத்தும் செயல்தான்.

ஒருவகையில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான மாவீரர் தின நிகழ்வுகள் மேலும் உருத்திரகுமார் உரை நிகழ்த்தும் கதையெல்லாம், கோடாம்பாக்க தமிழ் சினிமாவின் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு ஒப்பானது. அங்கு இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் இருக்கும் உணர்வுகளை கிளறுவதன் மூலம் பணம் சேர்கிறது. இங்கு, எங்கள் மக்கள், போராளிகள் மீதும் அவர்களது தன்னலமற்ற அர்ப்பணிப்பு மீதும் கொண்டிருக்கும் உள்ளார்ந்த உணர்வை ஆதாரமாகக் கொண்டு உங்கள் பணம் பெருகுகிறது. அந்த தன்னலமற்ற மனிதர்களை முதலீடாகக் கொண்டு உங்களது குடும்பங்கள் செல்வச் செழிப்பில் வளர்கிறது. இப்படியொரு அவலம் உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளில் எங்குமே கானக்கிடைக்காத ஒன்று. உலகில் பல தேசங்களில் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் சிலதே வெற்றி பெற்றிருக்கின்றன. தோல்வியடைந்த இடங்களில் எங்கும் இது போன்றதொரு கேவலமான அநீதி போராடிய மக்களுக்கு, அந்த மக்களின் ஒரு பகுதியினரால் மேற்கொள்ளப்பட்டதில்லை. சொந்த உறவுகளையே அந்த மக்களின் ஒரு பகுதியினர் போராட்டத்தின் பேரால் ஏமாற்றி பிழைக்கும் அவலத்தை இங்குதான் நாம் கான்கிறோம்.

புலம்பெயர் உறவுகளே! போராட்டம் பற்றியும் அதன் முடிவு பற்றியும் பேசுவதற்கும் உரித்துடைவர்கள் ஈழத்திலேயே இருக்கின்றனர். எந்தவொரு முடிவும் ஈழத்தில் இருந்தே எடுக்கப்படும். அரசியல், அடையாளம் அனைத்தும் நாங்கள்தான். எனவே நீங்கள் அங்கு எடுக்கும் பிழையான உணர்ச்சி வேக முடிவுகள் எங்களையே பாதிக்கும் என்பதை உணர்ந்து செயற்படுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் எங்களைப் பாதிக்கும் போது அதில் தலையிடுவது எங்களைப் பொருத்தவரையில் தவிர்க்க முடியாத ஒன்றாகும் ஏனெனில் அது எங்களின் உயிர்வாழ்தலோடு சம்மந்தப்பட்டது. இன்று இன்னொரு கதையும் சிலர் சொல்ல முற்படுகின்றனர். ஈழத்தில் சிறையுண்டு கிடக்கும் போராளிகள் எல்லாம் அரசாங்கத்தின் முன் கையுயர்த்தியவர்கள், கோழைத்தனமாக சரணடைந்தவர்கள், அவர்களுக்கு போராட்டம் பற்றிக் கதைப்பதற்கு தகுதியில்லை என்றவாறும் சில அபிப்பிராயங்கள் உலவுகின்றன. அவ்வாறாயின் 17ஆம் திகதி சரணடைந்து பின்னர் ஏதோ ஊழல்களின் துணையில் தப்பியோடியவர்களை எந்தக் கணக்கில் சோப்பது. போராட்டத்தின் வலியையே உணராது இடைத்தரகர்களாக இருந்த வியாபாரிகள் தமிழ்த் தேசியம் பேசுவதை என்னவென்று சொல்வது. சமீபத்தில் உருத்திரகுமாரன் கொடுத்த நேர்காணல் ஒன்றில், களத்தில் இருக்க வேண்டியதில்லை ஒரு புரிந்துனர்வுடன் பணியாற்றினால் போதுமானது என்னும் தொனியில் பேசியிருந்தார். இதற்கு திலகர் முன்னர் களத்துடன் தொடர்பற்று வெளிநாட்டில் பணியாற்றியதையும் அதனை 'மேதகு' அங்கீகரித்ததையும் குறிப்பிட்டிருக்கிறார். முன்னர் பிரபாகரன், குறிப்பிட்டதொரு சூழலில் சொன்ன விடயத்தை தனது இன்றைய தான்தோறித்தனமான, சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளுக்கான நியாயமாகக் காட்டிக் கொள்ள முற்படுகின்றார் உருத்திரா. பிரபாகரன் சொன்னவற்றிற்கெல்லாம் கட்டுப்படுவது உண்மையாயின் அவர் இறுதியாக அமைப்பின் சர்வதேச பொறுப்புக்கள் அனைத்தையும் ஒப்படைத்தது கே.பியிடம் அல்லவா, அப்படியாயின் போராட்டம் அரசியல் அனைத்தையும் தீர்மானிக்கும் தகுதி கே.பிக்கு மட்டுமல்லவா உண்டு. இங்கு உரத்திரகுமாரனோ அல்லது புலம்பெயர் சூழலில் இரவு அரசியல் செய்யும் நபர்களோ, அனைவருமே ஈழத்து மக்களையும் போராட்டத்தின் மீதும் அதன் தலைமை மீதும் பற்றுக் கொண்டிருந்த புலம்பெயர் மக்களையும் ஏய்த்துப் பிழைக்கும் பித்தலாட்டமொன்றில் ஈடுபட்டிருப்பது தெளிவாகிறது.. உருத்திரா தன்னை நியாயப்படுத்துவதற்கு திலகரின் கடந்த காலத்தை புரட்டுகிறார் ஆனால் திலகரின் மனைவி, பிள்ளை இப்போதும் கிளிநொச்சியில் சாப்பிட வழியின்றி இருப்பதை மறந்துவிட்டார். நாம் மேலே குறிப்பிட்டது போன்று. ஈழத் தமிழர்கள் எதிர்காலத்துடன் தொடர்புபட்ட எந்தவொரு விடயத்தையும் களத்தில் நிலைகொண்டு இருப்பவர்களே எடுக்க முடியும். அதுதான் சரியானதும், பாதிக்கப்பட்ட மக்கள் விரும்புவதும். வெளிநாடுகளில் இருந்து கொண்டு எல்லாவற்றையும் செய்யலாம் என்றால் தீபன். சொர்ணம், ஜெயம் இப்படியான தளபதிகள் எல்லாம் உயிரை மாய்த்திருக்கத் தேவையில்லையே! எல்லோரும் குளிருக்கான அங்கிகளைப் போட்டுக் கொண்டு அமெரிக்காவிலும், நோர்வேயிலும் இருந்து போராடியிருக்கலாமே. இத்தனை அழிவுகளையும் வேதனைகளையும் எங்கள் மக்களும் சந்தித்திருக்க வேண்டி வந்திருக்காதே. தமிழில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், கேக்கிறவன் கேனயன் என்றால் எல்லாம் சொல்லலாம், அது மாதிரித்தான் இருக்கிறது உருத்திரகுமார்களின் கதை.

எனவே இனியாவது மக்களை ஏய்த்துப் பிழைக்கும் இவ்வாறான செயல்களை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களும் போராளிகளும் இது குறித்து தெளிவாகவே இருக்கின்றனர். இப்போது தெளிவடைய வேண்டிய பொறுப்பில் புலம்பெயர்
மக்கள்தான் இருக்கின்றனர். அவர்களின் அறியாமையை, உண்மையான ஈடுபாட்டை இவ்வாறான அரசியல் வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள விழைகின்றனர்.

நாங்கள் உங்களைச் சிந்திக் கூடாது என்று கூறவில்லை. நாங்கள் உங்களை செயற்படக் கூடாது என்று கூறவும் இல்லை. ஆனால் உங்கள் செயற்பாடுகள் எங்களின் வாழ்வை மீட்டெடுக்கும் வகையில் அமைய வேண்டுமென்றே கூறுகின்றோம். அது வீழ்ந்து கிடக்கும் எங்களின் ஆயிரக்கணக்கான போராளிகளின் வாழ்வை புதுப்பிப்பிதாக அமைய வெண்டுமென்றே கூறகின்றோம். அங்கவீனமடைந்த, முகங்கள் சிதைந்த ஆண் பெண் போராளிகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுமென்றே கூறுகின்றோம். அவ்வாறில்லாது, மீண்டும் எங்களின் குருதி பார்த்து வசனம் சொல்லும் ஆசையை கைவிடுங்கள் என்றே சொல்லுகின்றோம். எங்கள் ஒப்பாரிச் சத்தம் கேட்க ஆசைப்படாதீர்கள் என்றே சொல்லுகின்றோம். எங்கள் பேச்சின் எல்லை இவ்வளவுதான். தயவு கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள். எங்கள் களமாடி வீழ்ந்த பெண் போராளி கப்டன் வானதியின் கவிதை வரிகள் இவை – 'எழுதாத என் கவிதையை எழுங்களேன். எல்லையில் என் துப்பாக்கி எழுந்து நிற்பதால், எழுந்துவர என்னால் முடியவில்லை' – எங்களாலும் எழுந்து வர இயலவில்லை உறவுகளே! மழைக் காலம் என்பதால், எங்கள் பிள்ளைகளுடன் ஓதுங்கிக் கொள்வதற்கு ஒரு கூடு தேடிக் கொண்டிருக்கிறோம், பசி தரும் வலியுடன். எங்களை இந்த துயரத்திலிருந்து மீட்க வாருங்கள். தத்தளித்துக் கொண்டிருக்கும் எங்கள் தலைமுறை கரைசேர உதவுங்கள். முடியாவிட்டால் சில ஆறுதல் வார்த்தைகளையாவது சொல்லுங்கள். இனியும் இழப்பதற்கு எங்களிடம் குருதியில்லை.

இங்கு பசியில் அழும் குழந்தைக்கு ஒரு நேர பால் வாங்கி தரவிரும்பாத நீங்கள்- பட்டினியில் மயங்கும் முதியோருக்கு ஒரு நேர கஞ்சி ஊற்ற விரும்பாத நிங்கள் தேசியம்! சுயநிர்ணயம்! சுயாட்சி! என்றெல்லாம் கூறி எங்களை உங்கள் நலனுக்கான பகடைக் காய்களாக்க முயற்சிக்காதீர்கள்.

வீழந்து கிடக்கும் எமக்கு உதவ விரும்பாத நீங்கள், உதவ முன்வருபவர்களையும் மிரட்டி துரோகி பட்டம் சூட்டி அடாவடித்தனம் செய்யும் நீங்கள் எங்களது அரசியல் உரிமையில் மட்டும் அக்கறை காட்டுவதனை எப்படி நம்புவது?

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவதாகச் சொல்வதை எந்த அடிப்படையில் நம்புவது.



மேலும் இங்கே தொடர்க...

இந்தியா, இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக பங்காளி எஸ்.எம். கிருஷ்ணா


இந்தியா இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை புது வீதியில் இந்திய துணைத் தூதரக அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது, இலங்கை, இந்தியாவின் தெற்காசிய வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாகும். 2000 ஆம் ஆண்டில் அமுலுக்கு வந்த இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் மூலம் எட்டு ஆண்டுகளில் மொத்த வர்த்தகப் புரள்வு ஐந்து மடங்காக அதிகரித்தது.

இந்தியாவிற்கான இலங்கையின் ஏற்றுமதி சென்ற வருடத்திலிருந்து 50 சதவீதத்திற்கு கூடுதலாக அதிகரித்தது. இலங்கையின் நான்கு பாரிய முதலீட்டாளர்களில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியாவில் இலங்கையின் முதலீடுகளும் குறிப்பிடத் தகுந்த வளர்ச்சியை அடைந்துள்ளன. எங்கள் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு வடக்கு, தெற்கு உட்பட நாடுபூராவும் வளர்ச்சியடைந்துள்ளது.

என்னுடைய நாட்டுடன் நீண்ட வரலாற்று ரீதியான பிணைப்பினைக் கொண்ட ஒரு தேசத்துடனான இணைப்பை வலுவாக்கும் அவாவின் பிரதி பலிப்பாகும். சமய, கலாசார மற்றும் மொழி சம்பந்தப்பட்ட எமது இரு நாடுகளின் பிணைப்பானது பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது.

இலங்கையும் இந்தியாவும் சமய அனுஸ்டானங்களில் ஒத்த கொள்கைகளை யும், இணைப்புக்களை உண்டாக்கியுள்ளன. பிரமாண்டமான ஆயிரம் தூண்களையுடைய விஷ்ணு கோயில் முந்திய காலத்தில் தேவேந்திர முனையில் இருந்துள்ளது. இன்னுமொன்றையும் நாங்கள் மறக்க முடியாது. அது இந்துத் தமிழர்களும், பெளத்த சிங்களவர்களும் ஒரே இடத்தில் வழிபடும் முருகக் கடவுள் அல்லது ஸ்கந்த என்றழைக்கப்படும் தெய்வம் கோயில் கொண்டுள்ள கதிர்காமமாகும்.

எமக்கிடையேயுள்ள தொடர்புகள் பலதரப்பட்டவையும் சரித்திர ரீதியானவையுமாகும். எமது நட்பினதும் ஒத்துழைப்பினதும் முழுமையான ஆற்றலின் முழுமையான பிரயோசனத்தை பெற்றுக்கொள்வதே எங்கள் முன்னுள்ள சவாலாகும். யுத்தம் முடிவடைந்ததுடன் அதற்கான நேரம் வந்துள்ளது என நான் நம்புகிறேன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயம் இரு தரப்பு உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியது. அபிவிருத்தியினை துரிதப்படுத்துவதற்கும் எமது இணைப்புக்களையும் பழைமை வாய்ந்த கலாசாரப் பிணைப்புக்களையும் புத்தூக்கம் பெறச் செய்யவும் பொருளாதார கடப்பாடுகளை துரிதப்படுத்தவும் எமது பிரதமரும் ஜனாதிபதியும் இணக்கம் தெரிவித்தனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அம்பாந் தோட்டையையும் அதன் சுற்றுப்புறங்களை யும் பாரிய பிராந்திய மையமாக அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுளார். எனவே தென்பகுதியில் ஒரு துணைத் தூதரக அலுவலகத்தை திறப்பதற்கு தீர்மானித்ததுடன் அதை அம்பாந்தோட்டையில் திறப்பதானது வர்த்தகம், வணிக முதலீடுகள், கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய துறைகளில் இப்பிராந்தியத்துடன் இந்தியாவுக்குள்ள இறுக்கமான பிணைப்புக்களை கட்டியெழுப்புவதற்காகவே ஆகும் என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை - பாகிஸ்தான் தலைவர்கள் இருதரப்பு பேச்சு நான்கு முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்து

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அலி சர்தாரிக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றதுடன் இரு நாடுகளுக்குமிடை யிலான நான்கு முக்கிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.

ஒரு மணித்தியாலம் வரை நீடித்த மேற்படி பேச்சுவார்த்தையையடுத்து இரு நாடுகளினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்றது.

இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமது கவலையினைத் தெரிவிப்பதாக பாகிஸ்தானிய ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதேவேளை, இலங்கை மக்களை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துலைமையிலான அரசாங்கத்துக்குத் தமது பாராட்டுக்களைத் தெரிவித்த அவர்; பிராந்திய ரீதியில் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு இலங்கையின் அனுபவம் மிக முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கிடையில் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தியதுடன் இலங்கையின் தேயிலை மற்றும் மாணிக்கக் கற்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்குள்ள வாய்ப்புகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டன.

இலங்கையின் மாணிக்கக் கல் தொழில் துறையில் உபயோகப்படுத்தப்படும் தொழில் நுட்ப நுணுக்கங்களை பாகிஸ்தானுக்குப் பெற்றுக் கொடுக்குமாறு பாகிஸ்தான் ஜனாதிபதி கேட்டுக் கொண்டதையடுத்து இலங்கை ஜனாதிபதி அதனைக் கவனத்திற் கொண்டார்.

இலங்கையின் மருத்துவத்துறை ஈட்டியுள்ள வளர்ச்சி தொடர்பில் பாகிஸ்தான் ஜனாதிபதி தமது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தாதியருக்கு பயிற்சிகளை வழங்கக் கூடிய தாதியர்களை இலங்கையிலிருந்து தமது நாட்டுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் அவர் இலங்கை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

அத்துடன் இலங்கையிலிருந்து ஆங்கிலம் மற்றும் கணித ஆசிரியர்களின் ஒத்துழைப்பினை பாகிஸ்தானின் கல்வித் துறைக்கு பெற்றுக்கொள்வது சம்பந்தமாக பாகிஸ்தான் ஜனாதிபதி முன்வைத்த வேண்டுகோள் தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது இரண்டாவது பதவி ஏற்போடு பாகிஸ்தான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் அமைந்துள்ளதால் இரு நாடுகளுக்குமிடையி லான நல்லுறவுகள் மேலும் வலுப்பட இது சிறந்த வாய்ப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் அமைதிச் சூழல் நிறைந்த இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வ தற்காக பாகிஸ்தான் முதலீட்டாளர்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்ட ஜனாதிபதி; அதற்கான வசதிகளை செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்; இலங்கையில் எதிர்கால தலைமுறையினரை போதைப் பொருளிலிருந்து பாதுகாக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு விசேட பாராட்டுக்களைத் தெரிவித்த பாகிஸ்தான் ஜனாதிபதி; பிராந்திய ரீதியில் போதை உபயோகத்தை ஒழிப்பதற்கு பிராந்திய நாடுகள் இணைந்து செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இரண்டு நாடுகளுக்குமிடையில் வங்கி நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடினர்.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளையடுத்து இரு நாடுகளுக்குமிடையில் நான்கு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.

இதன்படி ராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுகளை வைத்திருப்போருக்காக விசா இன்றி இரு நாடுகளுக்குமிடையில் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள்.

இரு நாடுகளுக்குமிடையில் விவசாயம் சம்பந்தமான ஒத்துழைப்பு விடயங்களில் புரிந்துணர்வு.

சுங்க நடவடிக்கைகளில் தனித்துவமான நிர்வாக ரீதியான ஒத்துழைப்பு.

கலை மற்றும் உருவாக்கத்திறன் தொடர்பான ஒத்துழைப்பினை மேம்படுத்தல் போன்ற நான்கு உடன்படிக்கைகளில் இரு நாட்டுத் தலைவர்களினதும் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.

மேற்படி உடன்படிக்கைகளில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் விவசாய அமைச்சின் செயலாளர் கே. ஏ. கருணாதிலக்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சுதர்மா கருணாரத்ன, நுண்கலைப் பல்கலைக்கழக உபவேந்தர் ஜயசேன கோட்டகொட ஆகியோரும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மக்டூம் ஷா மஹ்மூத் குரேஷி, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் லியாகி பலோச் ஆகியோரும் கைச்சாத்திட்டனர்.

பாகிஸ்தான் தூதுக் குழுவில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மக்டூம் ஷா மஹ்மூத் குரேஷி, பாதுகாப்பு அமைச்சர் அகமட் முக்தார், நிதியமைச்சர் சைப் முரப் அலி ஷா, உயர்ஸ்தானிகர் கூமா லியாகி பலோச், ஜனாதிபதியின் பிரதம செயலாளர் எம். சல்மான் பாரூக், மேலதிக செயலாளர் பாரூக் அமில், பாதுகாப்பு செயலாளர் சையிட் மொகமட் அட்னன் ஆகியோர் பங்கேற்றனர்.

இலங்கையின் சார்பில் அமைச்சர்கள் ஜீ. எல். பீரிஸ், ஏ. எச். எம். பெளஸி, கலாநிதி சரத் அமுனுகம, பந்துல குணவர்தன, டி. பி. ஏக்கநாயக்க, மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பிரதம பதவிநிலை அதிகாரி காமினி செனரத் ஆகியோர் பங்கேற் றனர்.
மேலும் இங்கே தொடர்க...

பல பகுதிகளிலும் கடும் மழை: 9 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு யாழ்., மன்னார், கற்பிட்டி, சிலாபம் பகுதிகளில் வெள்ளம்


நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் மழை காரணமாக 8646 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 395 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.

மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனுக்குடன் சமைத்த உணவு மற்றும் உலர் உணவு நிவாரணம் வழங்குவதற்கு மாவட்ட செயலாளர்கள் ஊடாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப் பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

இம்மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் 101 வீடுகளும், புத்தளம் மாவட்டத்தில் 21 வீடுகளும் பகுதியாக சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையப் பேச்சாளர் கூறினார். யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மழை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களில் 1283 குடும்பங்கள் 17 முகாம்களில் தங்க வைக்கப்பட்டி ருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், இம்மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 1231 குடும்பங்களைச் சேர்ந்த 6164 பேரும், மன்னார் மாவட்டத்தில் 5855 குடும்பங்களைச் சேர்ந்த 23 ஆயிரத்து 680 பேரும், யாழ். மாவட்டத்தில் 1354 குடும்பங்களைச் சேர்ந்த 4988 பேரும், மொனறாகலை மாவட்டத்தில் 82 குடும்பங்களைச் சேர்ந்த 560 பேரும், வவுனியா மாவட்டத்தில் மெனிக்பாமில் 47 குடும்பங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 77 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.

இம்மழையினால் புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் பிரதேச செயலகப் பிரிவில் 803 குடும்பங்களைச் சேர்ந்த 4764 பேரும், கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 170 பேரும், நவகத்தேகம பிரதேச செயலகப்பிரிவில் 292 குடும்பங்களைச் சேர்ந்த 1010 பேரும், கருவலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 270 பேரும் மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப்பிரிவில் 971 குடும்பங்களைச் சேர்ந்த 3930 பேரும், மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் 2183 குடும்பங்களைச் சேர்ந்த 9485 பேரும், மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் 224 குடும்பங்களைச் சேர்ந்த 939 பேரும், மடு பிரதேச செயலகப் பிரிவில் 2015 குடும்பங்களைச் சேர்ந்த 7562 பேரும், யாழ். பிரதேச செயலகப் பிரிவில் 670 குடும்பங்களைச் சேர்ந்த 2504 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

கொரியன் குடாவில் பாரிய வெடியோசைகள் ; தீப்பிளம்புகள்

அமெரிக்கா, தென் கொரியா பயிற்சியை
ஆரம்பித்ததால் விண்ணும் மண்ணும் அதிர்ந்தன



வட கொரியா மீது எத்தகைய தாக்குதல் கள் தொடுக்கப்பட்டாலும் அதன் எதிரொலி மிகக் கடுமையாக இருக்குமென வட கொரியா கடுமையான தொனியில் எச்சரித்தது. கொரியன் குடாவை நோக்கி அமெரிக்க தென்கொரிய இராணுவங்கள் முன்னேறிவரும் நிலையில் ஜோர்ஜ் வாஷிங்டன் என்ற மிகப் பெரிய போர்க்கப்பலும் களத்தில் இறங்கியுள்ளன.

இதில் விமான ஓடுபாதைகள் ஏவுகணைத் தளங்கள் உள்ளிட்ட நவீன இராணுவ, ஆயுத உபகரணங்களும் உள்ளன. வட கொரியாவை இலக்கு வைக்கும் தாக்குதல் திசையை நோக்கி ஜோர்ஜ் வாஷிங்டன் என்ற இந்தக் கப்பல் மையம் கொண்டுள்ளது.

இந்நிலையில் தென் கொரிய, அமெரிக்க இராணுவங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த நான்கு நாள் போர்ப்பயிற்சியை நேற்று ஆரம்பித்த மைக்கான ஆதாரமாக பாரிய வெடியோசை கள் விண்ணையும், மண்ணையும் அதிர வைத்ததாகப் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

வட, தென் கொரிய எல்லைகளிலுள்ள பொதுமக்கள் அச்சம் காரணமாக வேறு இடங்களை நோக்கி நகர்ந்தனர். வானம் புகை மண்டலமாகவும் எங்கும் தீப்பிளம்புகளும் தென்பட்டதை இரண்டு எல்லைகளிலிருந்தும் பார்க்கக் கூடியதாக இருந்தது. வட கொரியா வானைமுட்டிச் சென்று தாக்கும் நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகளை கரை ஓரத்திற்குக் கொண்டுவந்தது.

அந்நாட்டு விமானங்களும் விண்ணில் வட்டமிட்டவண்ணமிருந்தன. தென் கொரியாவைப் பொறுமைகாக்குமாறு கோரும் பொருட்டு சீனாவின் வெளிநாட்டமைச்சர் அவசரமாகப் புறப்பட்டு நேற்று தென் கொரியத் தலைநகர் வந்தார்.

இவர் தென் கொரிய ஜனாதிபதியுடன் விரிவான பேச்சுக்களையும் நடத்தினார். ஆனால் நான்கு நாள் போர்ப்பயிற்சி ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறுமென்பதை தென்கொரியா திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

பேச்சுவார்த்தை பலனளிக்காவிட்டாலும் பயிற்சிகளின் போது இராணுவ மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும்படி சீன வெளிநாட்டமைச்சர் கேட்டுக்கொண்டார். சென்றவாரம் தென்கொரியா மீது வடகொரியா ஐம்பது ஏவுகணைகளை ஏவியது. இதனால் இந்த முறுகல் நிலையேற்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

வட மாகாண அபிவிருத்தி பற்றி ஆராய வவுனியாவில் 3 நாள் மாநாடு


வட மாகாணத்தின் முதலீடு, வளங்கள் தொடர்பாக விரிவாக ஆராயும் பொருட்டு ‘உள்ளூராட்சி மாநாடும், கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

ஜனவரி மாதம் 28ம் திகதி முதல் 30ம் திகதி வரை மூன்று நாட்கள் வவுனியாவில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் போது வட மாகாண அபிவிருத்திக்கான ஐந்தாண்டு திட்டங்கள் தயாரிப்பது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதற்காக ஏசியன் பவுண்டேசன், ஜி. டி. இஸட் ஆகியன 200 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்க வுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

மஹிந்த சிந்தனையில் கூறப்பட்டுள்ள ‘உள்ளூர் மட்ட அபிவிருத்தி ஊடான தேசிய அபிவிருத்தி’ என்ற தொனிப் பொருளுக்கு அமைய இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியாவுக் கான உள்ளுராட்சிப் பிராந்திய உதவி ஆணையாளர் எஸ். அட்சுதன் தெரிவித்தார்.

வட மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆரம்ப மற்றும் இறுதி நாள் வைபவங்கள் வவுனியா நகர சபை கலாசார மண்டபத் திலும் கண்காட்சி நகர சபை மைதானத்தி லும், பொருளாதார ஆளுகை என்ற மாநாடு கச்சேரி மாநாட்டு மண்படத்திலும் இடம்பெறவுள்ளன. தொழில்நுட்ப அறிமுகம், தகவல் பங்கீடு, கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி போன்ற துறையை மேம்படுத்துவது தொடர்பாக இதன் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட வுள்ளது.

அபிவிருத்திக்கு தனியார் துறை, பொது மக்கள் மற்றும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளுதல் போன்றவையே இதன் பிரதான நோக்கமாகும் என்றும் எஸ். அட்சுதன் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டின் பல பகுதிகளில் நேற்று மின்சாரத்தடை


நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நேற்று பிற்பகல் 2.50 மணி முதல் மின்சாரத்தடை ஏற்பட்டது. கொத்மலை - பியகமைக்கிடையிலான தேசிய மின்னிணைப்புப் பரிமாற்றத் தொகுதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணமென மின்வலு எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

இது தொடர்பில் அமைச்சின் உயரதிகாரி யொருவர் தெரிவிக்கையில்,

கொத்மலை - பியகம தேசிய மின்னி ணைப்புப் பரிமாற்றத் தொகுதியில் நேற்று 2.50 மணியளவில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இது தொடர்பில் மின்சார சபைக்குப் பல முறைப்பாடுகள் வந்தன.

மேற்படி மின்துண்டிப்பினால் கொத்மலை - பியகம மின்னிணைப்பு பரிமாற்றத் தொகுதியூடாக மின்சாரத்தைப் பெற்றுக்கொள் ளும் மின் பாவனையாளர்கள் அசெளகரிய ங்களுக்குள்ளாகினர்.

இத்தொழில்நுட்பக் கோளாறைப் பரிசோதித்து திருத்தும் நோக்கில் கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன் அக்குழு உடனடியாகவே தமது செயற்பாடுகளை ஆரம்பித்தன.

இதனையடுத்து எவ்வளவு விரைவாக மின்சாரத்தை வழங்க முடியுமோ அந்தளவு விரைவாக மின்சாரத்தை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் மின்வலு எரிசக்தி அமைச்சு மேற்கொண்டதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...