31 டிசம்பர், 2009

30.12.2009 தாயகக்குரல் 32


இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கான அவசியத்தை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் புரிந்து கொண்டு தமது அரசியல் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என புலம் பெயர் தமிழர்களிடமும்; இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மனச்சாட்சிக்கு வாக்களிக்காமல் அரசியல் மாற்றத்திற்கு வாக்களிக்கும்படியும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவிக்கிறார்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மேடைகளில் எதிர்கட்சித் தலைவர்கள் பலரும் ஆட்சிமாற்றம் பற்றியே பேசிவருகின்றனர். இவர்கள் கருதும் ஆட்சி மாற்றம் என்பது ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா வெற்றி பெறுவது மட்டும்தானா?.

ஆட்சி மாற்றம் ஏற்படுவதானால் பொது தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆட்சியில் இருந்து இறக்கவேண்டும். இறக்கியபின்னர் அடுத்து ஆட்சி அமைக்கக்கூடிய கட்சி ஐக்கிய தேசியக் கட்சியே. இந்த ஆட்சி மாற்றம் சிங்கள மக்களுக்கு தேவையாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஆட்சி மாற்றதால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மையுண்டா என்பதுதான் மக்கள் மனதில் எழும் சந்தேகம்.

பிரித்தானியர் பெரும்பான்மை இனத்தவரின் கைகளில் இலங்கை ஆட்சியை ஒப்படைத்து சென்றபின்னர் இதுவரையும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுமே மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால் இரண்டு கட்சி ஆட்சியிலுமே இனப்பிரச்சினை கொழுந்து விட்டெரிய எண்ணை ஊற்றப்பட்டது குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்திலேயே தமிழ் மக்கள் பலதடவை வன்முறைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

பலதடவைகள் இனப்பிரச்சினைக்கு தீர்காணும் முயற்சியில் பல ஒப்பந்தங்கள் ஏற்பட்டபோதும் அவை அப்போதுள்ள எதிர்கட்சிகளினால் முறியடிக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கு இன்றுள்ள முக்கிய பிரச்சினை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வேயாகும்.

அரசியல் மாற்றத்தால் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? இதுதான் தமிழ் மக்கள் முன்நிற்கும் கேள்வியாகும். அதேவேளை ஆட்சிமாற்றத்தைக் கோரும் கட்சிகள் இனப்பிரச்சினை தொடர்பாக கடந்த காலங்களில் அவர்கள் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் இன்று ஆராயவேண்டிய விடயமாகும்.

ஜனாதிபதி வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத்தியுள்ள எதிர்கட்சிகளில் பிரதான கட்சிகள் ஐக்கிய தேசியக்கட்சிஇ மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆகிய இரண்டுமேயாகும். இனப்பிரச்சினை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு திடமான நிலைப்பாடு கிடையாது. ஜே.வி.பி.யை பொறுத்தமட்டில் அவர்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13வது அரசியலமைப்பு திருத்தத்தையே நடைமுறைப்படுத்தக்கூடாது என்ற தீவிர நிலைப்பாட்டை கொண்டுள்ள கட்சியாகும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு மேலான தீர்வை வைப்பதாக சரத் பொன்சேகா தெரிவிக்கிறார். இதை ஜே.வி.பி ஏற்றுக்கொள்கிறதா என்பதை சரத் பொன்சேகா தெளிவு படுத்தவேண்டும். சரத் பொன்சேகாவை இயக்கும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிஇ ஜே.வி.பி ஆகிய இருகட்சிகளும் மகிந்த ராஜபக்ஷாவை ஜனாதிபதி பதவியிலிருந்து இறக்குவதிலேயே ஒத்த கருத்துடையவர்களாக காணப்படுகின்றனர். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிபிடத்தில் அமர்த்துவது ஜே.வி;பி;யின் நோக்கமாக இருக்காது.

சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்தைக் கலைத்து காபந்து அரசை உருவாக்கவேண்டும் என்றும் அதில் ரணிலைப் பிரதமராக்கவேண்டும் என்ற நிபந்தனையை ஐக்கிய தேசியக் கட்சி சரத் பொன்சேகாவிடம் வைத்திருந்தது. ஆரம்பத்தில் சரத் பொன்சேகா அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டிருந்த போதிலும் இப்போது ஜே.வி.பி.யின் நிர்ப்பந்தத்தால் அந்த நிபந்தனையை கைவிடவேண்டிய நிலைக்கு சரத்பொன்சேகா வந்துள்ளார்.

சரத் பொன்சேகாவை ஆதரித்து கொழும்பில் ஜே.வி.பி. ஒழுங்கு செய்திருந்த பேணியில் பேசிய சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றபின்னர் அமையும் தற்காலிக அரசு பிரதமர் இல்லாத தற்காலிக அரசாகவே அமையும் எனத் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எதிர்கட்சிகள் ஆட்சிமாற்றம் பற்றி பேசுகின்றரே அன்றி ஆட்சி மாற்றத்தின் பின் ஏற்படும் அரசு எப்படி அமையப்போகிறது என்பது பற்றி யாரும் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதி முறையை ஒழிக்கப்போவதாக கூறும் சரத் பொன்சேகா ஜனாதிபதிமுறைக்குப் பதிலாக ஏற்படும் புதிய அமைப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி எந்தக் கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அதுபற்றி ஒரு கருத்தைத் தெரிவிக்கிறது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படும் பிரதமர் தலைமையிலான பாராளுமன்ற அரசமைப்பை உருவாக்குவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் தெரிவிக்கிறார்.

அப்படியானால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்குப் பதிலாக அதே அதிகாரங்களை பிரதமருக்கு கொடுப்பதினால் என்ன மாற்றம் ஏற்படப்போகிறது.? இதை ஜே.வி.பி. ஏற்றுக்கொள்ளுமா? இந்தக் கேள்விகளுக்கு மனோகணேசனிடம் இருந்து மக்கள் பதிலை எதிர்பார்க்கிறார்கள்.
மேலும் இங்கே தொடர்க...
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக அரச தாதியர்சங்கம் ஆர்ப்பாட்டம்-

அரச தாதியர் மேற்கொண்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கையானது நண்பகல் 12மணிமுதல் 1மணிவரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. நாட்டிலுள்ள 15அரச வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஒரே நேரத்தில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் 06ம் திகதி மற்றுமொரு எதிர்ப்பு நடவடிக்கையினையும், எதிர்வரும் 12ம் திகதி கொழும்பில் பிறிதொரு எதிர்ப்பு நடவடிக்கையினையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தாதியர் சேவைக்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்ளும் முறை, முதலாவது தரப்பிற்கான பதவியுயர்வை 14வருட சேவைக்காலத்தில் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

திருமலை மீனவர்களுக்கு மீன்பிடித்தடை நீக்கம், யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு நீக்கம்-
திருகோணமலைக் கடற்பரப்பில் மீன்பிடித் தடையானது முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார். மீனவச் சங்கங்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் இன்றையதினம் காலையில் நடத்திய கலந்துரையாடலின்போதே இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இந்தவகையில் திருமலையில் சகல பகுதிகளுக்கும் சென்று மீன்பிடிப்பதற்கு மீனவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. யாழ். குடாநாட்டில் நாளை நள்ளிரவுமுதல் ஊரடங்கு முற்றாக நீக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்தியநிலையத்தில் இன்றுபிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.. இதுவரை காலமும் நள்ளிரவு 12.00மணிமுதல் அதிகாலை 4.00மணிவரை யாழ்.குடாநாட்டில் ஊரடங்கு அமுலில் இருந்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கென யாழ்ப்பாணம் செல்கின்றனர் வேட்பாளர்கள்-

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண குடாநாட்டிற்கு எதிர்வரும் தினங்களில் விஜயம் செய்யவுள்ளனர். இந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரும் இடதுசாரி முன்னணியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன 2010, ஜனவரி முதலாம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கிறார். அதுபோல் எதிர்க்கட்சி பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா ஜனவரி 02ம் திகதியும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனவரி 18இலும் யாழ்ப்பாணம் செல்லவுள்ளனர். இவர்கள் யாழ். குடாநாட்டில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
முன்னாள் கடற்படைத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவிடம் நட்டஈடு கோருகிறார்-

ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவிடம் 500மில்லியன் ரூபா நஷ்டஈடுகோரி முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான வசந்த கரன்னாகொட தனது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளார். தனக்கு அபத்தமாகவும், அபகீர்த்தி ஏற்படும் வகையில் பொதுமக்களின் பார்வையில் தனக்கு அவமதிப்பு ஏற்படும் வகையிலும் சரத்பொன்சேகா சிரச தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தமைக்காகவே அவர் இவ்வாறு கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார். தனது சட்டத்தரணி அத்துல டிசில்வா மூலம் குறிப்பிட்ட பணம் 14நாட்களுக்குள் செலுத்தப்பட தவறினால் 500மில்லியன் ரூபாவை வசூலிக்க சட்டநடவடிக்கையில் இறங்கநேரிடும் என்று அக்கோரிக்கைக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் கடற்படைத் தளபதியின் அறிவித்தலின்பேரில் தனது கட்சிக்காரருக்கு மேற்படி பேட்டியில் கூறப்பட்ட பிதற்றல்கள் வேண்டுமென்றே செய்யப்பட்டதாகவும் தனது கட்சிக்காரரின் கண்ணியம் நற்பெயர் மற்றும் பொதுமக்களிடையிலான மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன் மீளப்பெற முடியாத அளவுக்கான பாதிப்பையும் தோற்றுவித்துள்ளது என்றும் முன்னாள் கடற்படை தளபதியின் சட்டத்தரணி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்ட மருதானை ஐ.தே.கட்சி அமைப்பாளர் கைது-

ஐக்கிய தேசியக் கட்சியின் சுதுவெல தேர்தல் தொகுதி அமைப்பாளர் கித்சிறி ராஜபக்ஷ பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கித்சிறி ராஜபக்ஷ இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டதாக முன்னர் தகவல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடாட்ந்து மருதானைப் பொலீசிலும் கட்சியினரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கித்சிறி ராஜபக்ஷ பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மருதானைப் பகுதியில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினர் அவரை கைதுசெய்ததாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்துள்ளார். சுதுவெல பகுதியில் இடம்பெற்ற பல்வேறு திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் கித்சிறி ராஜபக்ஷவிற்கு தொடர்பிருப்பதாக விசேட அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர். முகத்தை மூடிய குழுவொன்று கித்சிறி ராஜபக்ஷவை கடத்திச் சென்றதாக அவரது பாரியாரும் ஆதரவாளர்களும் முன்னர் தகவல் வெளியிட்டிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...