6 ஜூன், 2011

புலிகள் அன்று கேட்டதை இன்று பலர் எம்மிடம் கேட்கின்றனர்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ



புலிகள் அன்று எம்மிடம் கேட்டதை இன்று பலர் எம்மிடம் கேட்க முயற்சிக்கின்றனர். அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை வழங்கத் தயாரில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

கொக்காவில் தொலைத்தொடர்புக் கோபுரத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

"வடக்கிலுள்ள இளைஞர்களை தெற்கிலுள்ளவர்கள் சந்தேகத்தில் நோக்கிய காலம் இருந்தது. சுமார் 25 வருடங்களுக்கு அதிகமாக இந்த நிலை காணப்பட்டது. எனினும் தற்போது அந்நிலை மாறியிருக்கிறது. நாம் மாற்றியமைத்துள்ளோம். வடக்கிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எமது நோக்கமாகும்.

அதனை நிறைவேற்றுவதற்கு பல வழிகளிலும் நாம் ஈடுபட்டு வருகிறோம். புலிகள் அன்று எம்மிடம் கேட்டதை இன்று பலர் எம்மிடம் கேட்க முயற்சிக்கின்றனர். அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை வழங்கத் தயாரில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

திமிங்கிலங்களை பார்வையிடுவதற்கான பயணிகள் கப்பல் சேவை






திமிங்கிலங்களை பார்வையிடுவதற்கான பயணிகள் கப்பல் சேவை இன்று இலங்கை கடற்படையினரால் ஆரம்பிக்கப்படுகின்றது.

இலங்கையின் கிழக்கு மாகாணமான திருகோணமலை துறைமுகத்தில் உள்ள அஸ்ரப் இறங்கு துறையில் இருந்து இக்கப்பல் தொடங்கிவைக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இப்பயணிகள் கப்பல் 3 தொடக்கம் 6 மணித்தயாலங்கள் சேவையில் ஈடுபடுவதுடன் இது ஒரே நேரத்தில் 100 பயணிகளை ஏற்றக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் இக்கப்பல் ஆனது உள்நாட்டு வெளிநாட்டவர்களுக்காக வாரத்திற்கு 3 நாட்கள் இயங்கும்.

கடந்த ஜனவரி மாதம் காலியில் ஆரம்பிக்கப்பட்ட இக்கப்பல் சேவை தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் திமிங்கிலங்களை பார்வையிடுவதற்கான காலமான மே மாதத்தில் இருந்து செப்டெம்பர் மாதம் வரை இயங்கும் என தெரியவருகிறது. திருகோணமலையானது சுற்றுலாத்துறை பயணிகளை கவரும் விதமாக அமைந்துள்ள கடலோர பிரதேசமாகும். வட மேற்கு பிரதேசத்தை சேர்ந்த கற்பிட்டி, அழுத்கம, அம்பலாங்கொட மற்றும் ஹிக்கடுவ என்பனவும் இலங்கையில் உள்ள ஏனைய கடலோர பிரதேசங்களாகும்.
மேலும் இங்கே தொடர்க...

எஞ்சியிருக்கும் மக்களை வருட இறுதிக்குள் குடியேற்றுவோம்: குணரட்ண

வவுனியா முகாம்களில் எஞ்சியுள்ள அகதி மக்களை இவ்வருட இறுதிக்குள் மீள்குடியேற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் சுமார் 4000 பேர் வரையான மக்கள் முகாம்களில் இருந்து செல்வதற்கு விருப்பமற்றவர்களாக உள்ளதாக தெரியவந்துள்ளது என்று மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோன் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எந்த மட்டத்தில் உள்ளது என்பது தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: குறைந்தளவிலான தொகையினரே தற்போது வவுனியா முகாம்களில் தங்கியுள்ளனர். எனவே அவர்கள் அனைவரையும் இவ்வருட இறுதிக்குள் மீள்குடியேற்றிவிட முடியும் என்று நம்புகின்றோம்.

அனைத்து மக்களையும் மிக விரைவில் மீள்குடியேற்றிவிடவேண்டும் என்றுதான் நாங்களும் முயற்சிக்கின்றோம். ஆனால் நிலக்கண்ணிவெடிகளே இதற்கு பிரதான தடையாகவுள்ளன.

நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளும் துரிதமாக இடம்பெற்றுவருகின்றன. நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டதாக பிரதேச செயலாளர் உறுதிபடுத்தியதும் நாங்கள் மீள்குடியேற்றங்களை ஆரம்பித்துவிடுவோம்.

இதேவேளை வவுனியா முகாம்களில் தங்கியுள்ள மக்களில் சுமார் 4000 பேர் அங்கிருந்து செல்வதற்கு விருப்பமற்றவர்களாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் ஆய்வு செய்யவேண்டியுள்ளது. இந்த நிலைமை தொடர்பில் ஆய்வு செய்துவிட்டு நடவடிக்கை எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.
மேலும் இங்கே தொடர்க...

கொக்காவில் தொலைத் தொடர்புக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு



தெற்காசியாவில் அதியுயரமான கொக்காவில் தொலைத் தொடர்புக் கோபுரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் இன்று முற்பகல் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

வன்னி, கொக்காவில் தொலைத்தொடர்புக் கோபுரம் 450 மில்லியன் ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொலைத் தொடர்புக் கோபுரத்தினூடாக வட மாகாணத்திற்கான தொலைக்காட்சி வானொலி மற்றும் தொலைபேசிச் சேவைகள் வழங்கப்படவுள்ளன.

சுமார் 174 மீற்றர் உயரமான இந்தத் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் மூலம் தொலைக்காட்சிச் சேவைகளை வழங்குவதற்காக நிறுவனங்கள் சில விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ரணில் விக்கிரமசிங்கவின் தாயார் காலமானார்

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தாயார் நளினி விக்கிரமசிங்க காலமானார்.

95 வயதுடைய நளிணி விக்கிரம சிங்க நேற்றிரவு காலமானதாகவும் அன்னாரின் பூதவுடல் கொள்ளுபிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6.30 மணிக்கு பொரளை மயானத்தில் இறுதிக் கிரியைகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளியக்க உறுப்பினர்கள் அனைவரும் டிசம்பருக்குள் விடுதலை: சந்திரசிறி கஜதீர



விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு நிலையங்களில் பயிற்சி பெற்று வருகின்ற விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

30 வருட கால யுத்தத்திற்கு முடிவு காணப்பட்டதையடுத்து யுத்த பிரதேசமாகிய வடபகுதியில் வடக்கின் வசந்தம் என்ற பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பல அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுப்பொலிவு பெற்று வரும் இந்தப் பிரதேசத்தினுள் தமது சொந்தக் கிராமங்களில் தமது குடும்பத்தினர் உறவினர்களுடன் இணைந்து வாழப் போகின்ற புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளவர்கள் சமூகத்தில் பயனுள்ளவர்களாகவும் சமூகத்தையும் நாட்டையும் வளப்படுத்தக் கூடியவர்களாகவும் மாற்றுவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த நிலையங்களில் உள்ளவர்கள் இந்தப் பயிற்சிகள் முடிவடைந்ததும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டு விடுவார்கள்'' என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள புனர்வாழ்வுப் பயிற்சி நிலையங்களில் புனர்வாழ்வுப் பயிற்சியை முடித்துக் கொண்டவர்களில் ஒரு தொகுதியினரை விடுதலை செய்வதற்காக வவுனியாவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

இந்த வைபவத்தில் புனர்வாழ்வு பயிற்சியை முடித்துக் கொண்டவர்களில் ஒரு தொகுதியினர் அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் புதல்வருமாகிய நாமல் ராஜபக்ச புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர இளைஞர் விவகார மற்றும் திறனபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமா, புனர்வாழ்வு அமைச்சின் செலயாளர் ஏ.திசாநாயக்க, அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் சதீஸ்குமார், வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க ஜனாதிபதியின் இணைப்பாளர் சிவநாதன் கிஷோர் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வைபவத்தில் 900 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என புனர்வாழ்வு அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் வைபவம் நடைபெற்ற மண்டபத்திற்குக் குறைந்த எண்ணிக்கையானர்வர்களே அழைத்து வரப்பட்டிருந்தார்கள். விடுதலைக்காகத் தெரிவு செய்யப்படட்டவர்களின் குடும்ப உறவினர்களிடம் விடுதலைக்குரிய கையெழுத்துக்கள் ஏற்கனவே பெறப்பட்டதையடுத்து அவர்களை வீடுகளுக்கு அழைத்துச் செல்வதற்காக வருகை தந்திருந்த பலருக்குச் சொந்தமான இளைஞர்கள் புனர்வாழ்வு நிலையங்களில் இருந்து அழைத்து வரப்படாதிருந்ததைக் கண்டதும் பம்பைமடு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் ஆகிய புனர்வாழ்வு நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் தமது உறவினர்கள் ஏன் விடுதலை செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பினார்கள்.

இவ்வாறு சென்ற பலரும் ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக அழுது குளறி சத்தமிட்டு தமது கணவன்மார்களும் பிள்ளைகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரினர். இதற்குப் பதிலளித்த அதிகாரிகள் இது குறித்து விடுதலை செய்யப்படுவதற்கான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கலாசார மண்டபத்திற்குச் சென்று புனர்வாழ்வு அமைச்சரிடம் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இதனையடுத்து வவுனியா நகரசபை கலாசார மண்டபத்திற்கு வருகை தந்த பலரும் நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்னர் தமது கணவன்மாரையும் பிள்ளைகளையும் ஏற்கனவே அறிவித்தபடி விடுதலை செய்ய வேண்டும் என்று அங்கு கடமையில் இருந்த பொலிசார் மற்றும் இராணுவத்தினரிடம் அழுது குளறி கோரிக்கை விடுத்தனர். ஆயினும் நிகழ்வு முடிவடைந்ததும் இவர்கள் அமைச்சரைச் சந்தித்து தமது குறைகளைத் தெரிவிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்படும் என அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வைபவத்தில் உரையாற்றிய அமைச்சர் சந்திரசிறி கஜதீர மேலும் தெரிவித்ததாவது: இன்று 900 பேரை விடுதலை செய்வதாக அறிவிக்கப்பட்டபோதிலும் அந்த எண்ணிக்கையிலும் குறைந்த எண்ணிக்கையான சுமார் 300 பேர் வரையில் தான் விடுதலை செய்யப்படுவார்கள் என வதந்தி பரவியிருந்தது. இதனால் புனர்வாழ்வு பயிற்சி பெற்றவர்களின் உறவினர்கள் குழப்படைந்திருந்தார்கள். அவர்கள் அவ்வாறு குழப்படைய வேண்டியதில்லை. ஏனென்றால் அறிவித்தவாறு 900 பேரை நாங்கள் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். எந்தக் காரணத்தைக்கொண்டும் பயிற்சி முடிந்தவர்களை நாங்கள் புனர்வாழ்வு நிலையங்களில் வைத்திருக்கப் போவதில்லை.

தெரிந்தோ தெரியாமலோ முன்னர் தவறான வழிகளில் சென்றிருந்தவர்களில் மூன்று பிள்ளைகளுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைக் கொண்ட தந்தையரான இளைஞர்களை கடந்த முறை நாங்கள் விடுதலை செய்தோம். இன்றைய தினம் 2 பிள்ளைகளுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைக் கொண்ட தந்தையரான இளைஞர்களை நாங்கள் விடுதலை செய்கின்றோம். இவ்வாறு செய்வதனால் திருமணமாகாதவர்களை நாங்கள் விடுதலை செய்யமாட்டோம் என்று கருத வேண்டாம். அவர்களும் அடுத்தடுத்த முறைகளில் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள்.

புனர்வாழ்வு பயிற்சி பெற்றவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் பெரும் தொகை பணத்தை மாதந்தோறும் செலவு செய்து வந்துள்ளது. புனர்வாழ்வு நிலையங்களில் வாழ்வாதாரத்திற்கான தொழில் பயிற்சிகளோடு பள்ளிப் படிப்பில் ஆர்வம் கொண்டிருந்தவர்கள் தமது படிப்பைத் தொடர்வதற்கான சந்தர்ப்பத்தையும் எற்படுத்தியிருந்தோம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பலர் இப்போது பல்கலைக்கழகத்தில் தமது கல்வியைத் தொடர்கின்றார்கள். இதேபோன்று விடுதலை பெற்று செல்பவர்களும் தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காக இரண்டரை லட்சம் ரூபா வரையிலான கடனுதவிகளையும் நாங்கள் குறைந்த வட்டியில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் இந்தக் கடனுக்கு முதல் வருடம் அவர்கள் வட்டி செலுத்த வேண்டியதில்லை. அத்துடன் மிகவும் குறைந்த வட்டி வீதத்திற்கே இந்த கடன்கள் வழங்கப்படுகின்றன.

எனவே பயிற்சி முடிந்து வீடுகளுக்குச் செல்பவர்களை நாங்கள் கைவிடமாட்டோம். அவர்களுக்குத் தொடர்ந்து உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது. ஆகவே விடுதலை பெற்று செல்பவர்களும் விடுதலையானவர்களை வீடுகளுக்கு அழைத்துச் செல்பவர்களும் இந்த நாடு எங்கள் நாடு இது பிரிக்கப்பட முடியாதது என்பதை மனதில் கொண்டு நாட்டினதும் சமூகத்தினதும் முன்னேற்றத்திற்காகச் செயற்பட வேண்டும். பல தீய சக்திகள் உங்களை தவறான வழிகளில் இட்டுச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவத்றகாகக் காத்திருக்கின்றன. அந்தச் சக்திகளின் வலையில் நீங்கள் வீழ்ந்து விடக்கூடாது. என தெரிவித்தார் அமைச்சர் சந்திரசிறி கஜதீர.

இந்த நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இளைஞர் விவகாரம் மற்றும் திறனபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமா உட்பட பலரும் உரையாற்றினார்கள். நாடகம் மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மேலும் இங்கே தொடர்க...