7 ஜூலை, 2010

ஆர்ப்பாட்டங்களுக்கு ஐ.நா. கண்டனம்

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
கொழும்பில் ஐ.நா மன்ற அலுவலகங்கள் மீது நடத்தப்பட்ட முற்றுகை ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக இலங்கை அரசுக்கு தனது கடுமையான ஆட்சேபங்களைத் தெரிவித்திருப்பதாக ஐ.நா மன்றத் தலைமைச் செயலருக்காகப் பேசவல்ல அதிகாரி பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை பின்னதாக பிபிசி சிங்கள சேவையிடம் பேசிய ஹக், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த இருக்கும் ஜனநாயக உரிமையை மதிக்கும் அதே நேரத்தில், ஐ.நா மன்றப் பணியாளர்கள் அலுவலகத்துக்கு உள்ளே செல்லவும், வெளியே வரவும் முடியாமல் தடுக்கப்பட்டிருப்பது, இலங்கையில் ஐ.நா மன்றம் அன்றாடம் செய்து வரும் மக்களுக்கு தேவையான முக்கியமான பணிகளுக்கு இடைஞ்சல் தரும் செயலாகும் என்றார்.

அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்திருப்பதால், இது குறித்து அரசுக்கு ஆட்சேபங்களை தாங்கள் தெரியப்படுத்தியிருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐ.நா. அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுயிருந்தனர்.

சென்ற வருடம் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அரச படைகள், புலிகள் என்று இரு தரப்பினரும் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் கொலைகள் பற்றிய தனது விசாரணைகளை ஐ.நா. நிறுத்திவிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றனர்.

இலங்கை தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழுவொன்றை ஐ.நாவின் தலைமைச் செயலர் பான் கீ மூன் சென்ற மாதம் அறிவித்திருந்தார். ஆனால் இந்த விசாரணைகளை 'விரும்பத்தகாத தலையீடு' என்று கூறி, அவற்றுக்கு ஒத்துழைக்க இலங்கை மறுத்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியதோடு, பான் கீ மூனின் கொடும்பாவியையும் எரித்தனர். ஐ.நா. ஊழியர்கள் அலுவலகக் கட்டிடங்களிலிருந்து வெளியேறுவதை அவர்கள் தடுத்திருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா அலுவலகம் முன் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் இலங்கைக்கு பாதகமான நிலையை உருவாக்கும்- ஜயலத்

கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் முன்பு இடம்பெற்ற ஆர்ப்பாட்டமானது இலங்கைக்கு பாதகமான விளைவுகளைத் தோற்றுவிக்ககூடும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவர்தன பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:

யு.என்.எச்.ஆர் போன்ற நிறுவனங்கள் இலங்கை சிறார்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறது. இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அவ்வமைப்புகள் செய்துவரும் உதவிகள் இல்லாமல் போகலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

புதையல் தோண்டியவர்களுக்கு விளக்கமறியல்- கண்டி நீதவான் உத்தரவு

அக்குறணையில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட நான்கு பேரை அளவத்தகொட பெலிஸார் கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி கண்டி நீதவான் தனுஜ ஜெயதுங்க உத்தரவிட்டார்.

அக்குறணை நீரெல்ல பகுதியில் புதையல் தோண்டும் பணியில் ஏழு பேர் ஈடுபட்டிருந்ததாகப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு பொலிஸார் விரைந்த போது மூவர் ஓடித் தப்பியுள்ளனர். ஏனைய நால்வரையும் பெலிஸார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து பூஜைக்குத் தேவையான கற்புரம் உற்பட இன்னும் சில பொருட்களையும் பூமிக்குக்கீழாக இஸ்கேன் செய்யும் ஸ்கேன் இயந்திரம் ஒன்றையும் மற்றும் அகழ்வு உபகரணங்கள் சிலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பாரிய மட்டத்தில் புதையல்தோண்டும் ஒரு குழுவாக இவர்கள் இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

போதைப்பொருளால் உருவாக்கப்பட்ட உலகக் கிண்ணம்

உலகக்கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் கோகோயின் போதைபொருளிலான உதைப்பந்தாட்ட கிண்ணத்தை ஒத்த போலியான கிண்ணத்தை கொலம்பிய பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கொகொட்டா விமான நிலைய கடதாசி களஞ்சியத்தை பொலிசார் சோதனையிட்டபோது இந்த போலியான கிண்ணம் கைப்பற்றப்பட்டதாக கொலம்பிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

14 அங்குல உயரம் கொண்ட இக்கிண்ணம் 11 கிலோ கிராம் எடை கொண்ட கோகோயினால் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி வாய்ததாகவும் கொலம்பிய போதைப்பொருள்தடுப்பு நிலைய அதிகாரி ஜோஸ் பைர்டஹிடா தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி 14 இல் கிளிநொச்சி விஜயம்: அபிவிருத்தி திட்டங்கள் அங்குரார்ப்பணம்


கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளதோடு மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு சைக்கிள்கள் மற்றும் உபகரணங்கள் என்பன பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்ரசிறி கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் 14 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில் நடைபெற உள்ளது. இதன்போதே மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட உள்ளன.

கிளிநொச்சி மற்றும் பரந்தன் ஆகிய இடங்களில் இரு எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் அன்றைய தினம் திறந்து வைக்கப்பட உள்ளதாகவும் ஆளுநர் கூறினார். இதேவேளை 13 ஆம் திகதி சகல அமைச்சர்களினதும் பங்களிப்புடன் நடமாடும் சேவையொன்று நடத்தப்பட உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சியில் மூன்று ஆடைத் தொழிற்சாலை வன்னி இளைஞர், யுவதிகள் 10,000 பேருக்கு தொழில்

கிளிநொச்சியில் அமைக்கப்படும் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் மூலம் 10,000 இளைஞர் யுவதிகளுக்கு டிசம்பர் மாதமளவில் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் என பிரதி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்றுக் காலை பாராளுமன்றத்தில் வரவு - செலவுத் திடடத்தின் மூன்றாவது வாசிப்பு குழுநிலை விவாதங்கள் ஆரம்பமாகின.

இளைஞர் விவகார, கல்வி, உயர்கல்வி, விளையாட்டுத் துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இளைஞர் விவகார பிரதி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

இளம் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் வன்னி மாவட்டத் துக்கு விஜயம் செய்து அப்பகுதியின் அபிவிருத்தி பற்றி பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

ஜனாதிபதியின் வழிகாட்டலின் பேரில் இவற்றை நாமல் ராஜபக்ஷ எம்.பியின் தலைமையில் முன்னெடுத்துக் செல்கின்றோம்.

கிளிநொச்சியில் மூன்று ஆடை உற்பத்தி தொழிற் சாலைகள் அமைக்கப்படவுள்ளன. இது தொடர்பாக முதலீட் டாளர்களுடன் பேச்சு நடத்தப் பட்டுள்ளதுடன் அவர்களும் இப்பகுதியை சென்று பார்வை யிட்டுள்ளனர்.

இத்தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதன் மூலம் 6000 பேருக்கு நேரடியாகவும், 4000 பேருக்கு மறைமுகமான வேலை வாய்ப்புகளும் கிடைக்கவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

இயேசு நாதரின் முகம் செய்மதியில் படம் பிடிக்கப்பட்டுள்ளது

இயேசு நாதரின் முகம் கூகுள் ஏர்த் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. சார்ச் இவான் என்ற 26 வயதுடைய சவ்தம்டன் என்ற இடத்தில் உள்ளவரே இதனை கண்டுள்ளார்.

ஹங்கேரியில் உள்ள புஸ்பொக்லெடனி என்ற விவசாய நிலத்திற்கு அருகாமையிலேயே செய்மதி மூலம் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அதிகமான மக்கள் இவ்வாறு இயேசு நாதருடைய முகத்தை கடந்த சில வருடங்களாக கண்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர். கடந்த வாரம் அலெக்ஸ் கொட்டன் என்ற 38 வயதுடைய நபர் இயேசு நாதருடைய தெளிவற்ற படத்தை கண்டுள்ளார்..

டொபி எலஸ் ,வயது 22 செல்போட்டைச் சேர்ந்த ஒருவர் இயேசு நாதருடைய எரிந்த நிலையில் உள்ள படத்தை கண்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி பதவிக்கால நீடிப்புக்கு ஐதேக எதிர்ப்பு தெரிவிக்கும் : கண்டியில் ரணில் உரை

தற்போது பதவியிலுள்ள ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலத்திற்கான சத்தியப் பிரமாணம் கூடச் செய்யப்படாத நிலையில், எல்லையில்லாத பதவிக்கால நீடிப்பு தொடர்பாக அரசு கொண்டு வரவுள்ள அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஐ.தே.கட்சி, நாடாளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கண்டி சுயீஸ் ஹோட்டலில் இடம்பெற்ற ஐ.தே.க. உறுப்பினர்களின் கூட்டமொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்கா, காமினி ஜயவிக்ரம பெரேரா, கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உட்பட மாகாணசபை உறுப்பினர்கள், மற்றும் ஐ.தே.க. உள்ளூராட்சி அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கு மேலும் உரை நிகழ்த்திய ரணில் விக்ரமசிங்க தெரிவித்தாவது:

"தற்போது பதவியிலுள்ள ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலத்திற்கான சத்தியப்பிரமாணம் கூடச் செய்யப்படாத நிலையில், எல்லையில்லாத பதவிக்கால நீடிப்பு தொடர்பாக அரசு கொண்டு வரவுள்ள அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஐ.தே.க., நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் எதிர்ப்பைத் தெரிவிக்கும்.

இன்றைய நிலையில் எதிர்க்கட்சியின் பொறுப்பை நாம் சரியாக நிறைவேற்றுகிறோமா என்பதை பொது மக்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.

எனவேதான் எமது பொறுப்பு என்ற வகையில் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் எமது எதிர்ப்பைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இந்த எதிர்ப்பு கீழ்மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டும்.

இன்று இங்கு கூடியுள்ள நீங்களும் பிரதேச சபை அங்கத்தவர்களும் மற்றும் தேவையான அமைப்புக்களையும் ஒன்றிணைத்து இதுபற்றித் தெளிவுபடுத்த வேண்டும். பல அமைப்புக்கள் இது விடயமாகத் தமது எதிர்ப்புக்களைத் தெரிவிக்கக் காத்திருக்கின்றன. அவ்வாறான சகல சக்திகளையும் நீங்கள் ஒன்றிணைக்க வேண்டும்.

நாட்டு மக்களுக்கு நன்மை தரும் சீர்திருத்தங்களுக்கு நாம் முழு அளவில் ஆதரவு தெரிவிக்கத் தயாராகவுள்ளோம். நாடாளுமன்றத்தில் விவாதித்து தேவையான திருத்தங்களைச் செய்து நீதிமன்ற அனுமதிமூலம் அவற்றை மாற்றுவதற்கு ஆதரவளிக்க முடியும்.

ஆனால் கடந்த கால தேர்தல் எதிலும் தெரிவிக்காத ஒருவிடயத்தை மக்கள் ஆணையின்றி அவசர அவசரமாக அதுவும் இரகசியமாக முன்வைக்க வேண்டிய அவசியமென்ன?

இரண்டாவது பதவிகாலம் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை. இந்நிலையில் மூன்றாவது அல்லது அதற்கு மேற்பட்ட பதவிக் காலம் பற்றி இப்பொழுது ஏன் அவசரப்படவேண்டும்? " இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

ரவி கருணாநாயக்க

ரவி கருணாநாயக்க பேசுகையில்,

"ஒரு கட்சிக்கு ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஒற்றுமையும் அவசியம். முதலில் அதனை நாம் மேற்கொள்வோம் ஐ.தே.க. என்பது நீண்ட வரலாறு கொண்டது. அதேபோல் பெரும் அரசியல் தலைவர்கள் இருந்த கட்சியுமாகும்.

இப்போது பதவியிலிருக்கும் ஜனாதிபதியும் முன்னைய ஜனாதிபதி சந்திரிக்கா உட்பட 1978 முதல் ஆட்சி நடத்தும் சகலரும் தமது ஆட்சிக்கு உதவியாகக் கொள்வது, அன்று ஜே.ஆர் ஜெயவர்தனா கொண்டுவந்த அரசியலமைப்பேயாகும். எனவே எமது கட்சியை எவரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்" என்றார்.

திஸ்ஸ அத்தனாயக்க, காமினி ஜயவிக்ரம பெரேரா, லக்ஷ்மன் கிரியெல்ல உட்பட மற்றும் பலர் கூட்டத்தில் உரையாற்றினர்.

கூட்டத்தில், 13,17 ஆவது அரசியலமைப்பு திருத்தம், அவசரகால சட்ட நீடிப்பு, ஜனாதிபதி பதவி நீடிப்பு, மாகாண சபைகளுக்குப் போதிய அதிகாரம் வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் குறிப்பிட்ட அளவு இடம் ஒதுக்குதல் உட்பட எட்டுப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...

அசினின் படங்களுக்கு தமிழ்நாட்டில் தடை

இலங்கையில் இடம்பெற்று வரும் ரெடி திரைப்படப் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தென்னிந்திய முன்னணி நடிகை அசினின் படங்களுக்கு தென்னிந்திய திரையுலக நடிகர் சங்கத்தினர் தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளனர் என இன்போசிரா செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

நடிகை அசினின் செயற்பாடு இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டே இத்தீர்மானம் மேற்கொள்ளபட்டுள்ளது. நீண்ட காலமாக இலங்கைத் தமிழர்கள் துன்பங்கள் அனுபவித்து வருவதையிட்டு இலங்கையில் நடைபெறும் எந்தவொரு கலை கலாசார நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளப் போவதில்லை என்பதில் தென்னிந்திய திரையுலக நடிகர் சங்கத்தினர் உறுதியாக இருந்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற ஐபா விருது வழங்கல் விழாவை இவர்கள் பகிஷ்கரித்திருந்தனர். இதனையடுத்து முன்னனி நடிகர் நடிகைகளான அமிதாப் பச்சன், ஷாருக் கான், நமீதா மற்றும் க்ஷீஐனெலியா போன்றோர் ஐபா நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை கடும் பகிஷ்கரிப்புகளின் மத்தியிலும் சல்மான் கான், விவேக் ஒபரோய், சயிப் அலி கான், ஹிர்த்திக் றொஷான் மற்றும் லாரா தத்தா ஆகிய நடிகர் நடிகைகள் ஐபா நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன் எதிரொலியாக இவர்களின் திரைப்படங்களும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

மேற்படி திரைப்படத்தின் படப்பிடிப்பு மொரிஷியஸ் நாட்டிலேயே இடம்பெறவிருந்தது. எனினும் இதனை சல்மான் கான் இலங்கைக்கு மாற்றியுள்ளார். ரெடி படத்திற்கான படப்பிடிப்பு ஏற்பாட்டின்படி தெரிவு செய்யப்பட்ட இடத்தில் தனது கடமையை கச்சிதமாக நிறைவேற்றியுள்ளதாக அசின் எண்ணியுள்ளார். இருப்பினும் சர்ச்சைக்கு ஆளாக்கப்பட்டுள்ள நடிகை அசின் அவரது படங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பிலான பிரச்சினையை உறுதியாக எதிர்கொண்டு நிற்கின்றார். தற்போது கொலிவூட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள அசினின் படங்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை அவரது தொழிலைப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது
மேலும் இங்கே தொடர்க...

எந்தவித சர்வதேச விசாரணைக் குழுவுக்கும் அடிபணியப் போவதில்லை: ஜனாதிபதி

எந்தவொரு சர்வதேச விசாரணைக் குழுவுக்கோ, அழுத்தங்களுக்கோ அடிபணிந்து இலங்கையின் சுயாதீனத்தன்மையையும் இறையாண்மையையும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை. நாட்டை காட்டிக் கொடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். உள்நாட்டின் நீதிமன்றத் துறைக்கு சர்வதேச விசாரணைக் குழுக்களினால் களங்கம் ஏற்படுமாயின் அதற்கு இலங்கை அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது. பயங்கரவாத யுத்தம் இல்லாத இலங்கையில் சகல இன மக்களும் சமாதானத்துடன் வாழ்கின்றமை இலங்கை அடைந்த பாரிய வெற்றியாகும். இதேபோன்று பொருளாதார அபிவிருத்தியில் வெற்றி இலக்கை அடைய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

தேசிய தபால் சேவை தொல்பொருள் கூடம் மற்றும் முத்திரை கண்காட்சியகம் ஆகியவற்றை நேற்று செவ்வாய்க்கிழமை தபால் மற்றும் தொலைத் தொடர்பு தலைமையகத்தில் அங்குரார்ப்பணம் செய்த பின்னர் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

யுத்தம் இல்லாத சமாதானமான இலங்கையே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். தற்போது நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் அரசும் நாட்டு மக்களும் செயற்படுகின்றனர். ஆனால் இலங்கையின் அபிவிருத்தி பயணத்திற்கு எதிராக பல்வேறு காரணங்களை முன்வைத்து சர்வதேச அழுத்தங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.

கடந்த காலங்களில் பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுக்கும் போதும் சர்வதேசம் அழுத்தங்களைக் கொடுத்தது. அதே போன்று தற்போதும் நாம் பொருளாதார அபிவிருத்தி இலக்கை அடைய முயற்சி செய்கையில் அதனை தடுக்கும் வகையில் உள்நாட்டில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் உள்ளதாக கூறி சர்வதேசம் விசாரணைக் குழு மூலம் அழுத்தங்களை கொடுக்கின்றது. உள்நாட்டின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையின் நீதிமன்றங்கள் சுயாதீன தன்மையுடன் செயற்படுகின்றன. நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக தீர்ப்புகள் வழங்கப்பட்ட பல சந்தர்ப்பங்களில் அரசாங்கம் நீதிமன்றத்தை அகௌரவப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளவில்லை. இவ்வாறான இலங்கையின் நீதிமன்ற துறைக்கு சர்வதேச விசாரணைக் குழுக்களினால் அகௌரவம் ஏற்படுமாயின் அதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைகளுக்கு உள்நாட்டிலும் உதவிகள் வழங்கப்படுவதை நினைக்கும் போது கவலையாக உள்ளது.

இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த போது இந்தியாவின் வெளிநாட்டு கொள்கைகளில் அரசாங்கத்திற்கு உதவி செய்வோம். ஆனால் உள்நாட்டில் பல விடயங்களில் எதிராக செயற்படும் நிலையே உள்ளது எனக் கூறினார். ஆனால் இலங்கையில் மாற்றியமைக்கப்பட வேண்டிய விடயங்கள் ஏராளம் உள்ளன. நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். இதற்கு அமைவாக உலக சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நவீன தொழில் நுட்பங்களை ஏற்படுத்த வேண்டும். தேசிய தபால் சேவை தொல்பொருள் கூடமானது நாட்டின் தேசியத்துவத்திற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் உதவியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நிகழ்வை நினைவுகூரும் முகமாக வெளியிட்ட முத்திரையில் வவுனியா மாணவியொருவர் வரைந்த சித்திரமே உள்ளது.

இது இலங்கைக்கு கிடைத்த முக்கியமான சந்தர்ப்பமாகவே நான் கருதுகிறேன். சமாதானமான இலங்கையை எதிர்கால சந்ததியினருக்கு வழங்க வேண்டியது எமது கடமையாகும்.
மேலும் இங்கே தொடர்க...

வட,கிழக்கு மாகாணங்களில் மூன்று இலட்சம் நிலக்கண்ணி வெடிகள்



பிரிகேடியர் உபயமெதவல
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை சுமார் மூன்று இலட்சம் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உபயமெதவல தெரிவித்தார்.

சதுர கிலோமீட்டர் 1732 பரப்பில் மொத்தம் 290445 நிழக்கன்னி வெடிகள் அகற்றப் பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். முல்லைத் தீவில் 16749 ம், கிளிநொச்சியில் 57710 ம், மன்னாரில் 59379 ம், யாழ்ப்பாணத்தில் 10408ம், வவுனியாவில் 30905ம், மட்டக்களப்பில் 16320ம், அநுராதபுரத்தில் 1873ம் , பொலன்னறுவையில் 957ம், திருகோணமலையில் 4983ம் அகற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இப்பணிக்காக 28 அதிகாரிகளுடன் 1203 படைவீரர்களையும் பயன்படுத்தியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை அகதிகளுக்கான ஆஸியின் இடைக்காலத் தடை நீக்கம்!

இலங்கையிலிருந்து செல்லும் அகதிகள் குடிவரவிற்காக விண்ணப்பிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அவுஸ்திரேலிய அரசாங்கம் நீக்கியுள்ளது.

இதற்கான அறிவித்தலை அவுஸ்திரேலியப் பிரதமர் ஜுலியா கில்லர்ட் இன்றைய தினம் வெளியிட்டுள்ளார்.

இதனிடையே இலங்கை அகதிகள் விடயத்தில் நியுசிலாந்து மற்றும் கிழக்கு திமோர் ஆகிய நாடுகளுடன் பிராந்திய இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

இதன்படி இந்த இரு நாடுகளிலும் இலங்கை அகதிகளைத் தங்க வைப்பதற்கான மத்திய நிலையங்கள் நிறுவப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே இலங்கையுடன் சேர்த்து தடை விதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அகதிகளைக் கையாள்வது குறித்து இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவுஸ்திரேலியப் பிரதமர் தெரிவித்திருக்கிறார்
மேலும் இங்கே தொடர்க...

உண்ணாவிரதம் இருக்கப் போவதாக விமல் வீரவன்ச அறிவிப்பு



ஐநா சபையின் கொழும்பு அலுவலகத்தின் முன்னால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கைகளில் இறங்குமிடத்து தாமும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.

இன்று காலை விமல் வீரவன்ச தலைமையில் சுமார் ஆயிரம் பேர் கூடி நடத்திய ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டதோடு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கலைத்தனர்.

இந்நிலையில் அவ்விடத்திற்கு மீண்டும் வந்த விமல் வீரவன்ச பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு உடனடியாக அவ்விடத்திலிருந்து பொலிஸாரை அகற்றிக் கொள்ளுமாறும் இல்லாவிட்டால் தாமும் உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாகவும் கூரியதாகத் தெரிய வருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...