7 பிப்ரவரி, 2010

ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது-


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. நேற்றுமாலை நடைபெற்ற வைபவமொன்றில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இந்த கௌரவப்பட்டம் வழங்கப்பட்டது. உலக சமாதானத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் பயங்கரவாதத்தை முறியடிப்பதில் வெற்றியீட்டியமைக்காகவும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்பல்கலைக்கழகத்தின் பொன்விழாவையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதற்கு 100 நாடுகளைச் சேர்ந்த 6000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவுக்கு ஜனாதிபதியுடன் பயணமாகியுள்ள இலங்கைக் குழுவில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், ஏற்றுமதி அபிவிருத்தி சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஊடகத்துறை மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



பிராந்திய செய்தியாளர்களுக்கான குருநாகல் நகரில் தமிழ் மொழிமூல பாடநெறி-

குருநாகல் மாவட்ட பிராந்திய செய்தியாளர்களுக்கான பாடநெறியொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளதாக குருநாகல் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். குருநாகல் வைத்தியசாலை சுகாதார அபிவிருத்திப் பிரிவினருடன் இணைந்தே இந்தப் பாடநெறி நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி தகவல் தொழில்நுட்பம், புகைப்படம் எடுத்தல், நடிப்புத்துறை, செய்தித்துறை உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் இதன்போது பயிற்றுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பாடநெறி முழுமையாக தமிழ் மொழியில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாராளமன்றத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதற்கு தீர்மானம்-

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. மலையக மக்களின் எதிர்கால நலன்கருதியும், அபிவிருத்தியைக் கருத்திற் கொண்டும் அரசதரப்புடன் இணைந்து போட்டியிடுவதெனத் தீர்மானித்துள்ளதாக காங்கிரஸின் தலைவரும் தேச நிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் இருந்தபோதிலும், மக்களின் எதிர்கால நன்மைகருதி அரசுடன் இணைந்து களமிறங்குவதாகப் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.

உட்கட்டுமான பணிகளை முன்னெடுக்க சீனா 350மில்லியன் டொலர் நிதியுதவி-

இலங்கையில் யுத்தத்துக்கு பின்னரான உட்கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதற்கு, 350மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா நிதியதவியாக வழங்கவுள்ளதாக சீன ஜனாதிபதி கூ ஜின்ரா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ள சுதந்திரதினச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்கள் எங்களின் நல்ல பங் காளிகள். அந்த நாட்டுடன் அடுத்த வருடங் களில் உறவுகளை அதிகரிக்கவுள்ளோம். இலங்கையின் வளர்ச்சிக்கு சகல விதமான ஒத்துழைப்பையும் சீனா வழங்கும். யுத்தகாலத்தில் சேதமடைந்த வீதிகள் மற்றும் போக்குவரத்துப் பாதைகளை புனரமைக்க 350மில்லியன் அமெரிக்க டொலர் களை வழங்கவிருக்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி உட்பட பல்வேறு திட்டங்களுக்கு 6.1கோடி அமெரிக்க டொலர்களை சீனா ஏற்கனவே வழங்கியுள்ளதெனவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ரஸ்ய ஜனாதிபதி சந்திக்க ஏற்பாடு-


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ரஸ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவை நாளையதினம் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த சந்திப்பு நாளை பிற்பகலில் இடம்பெறுமென ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதன்போது 300மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கான உடன்படிக்கையில் இருநாடுகளின் தலைவர்களும் கைச்சாத்திடவுள்ளதாக செயலகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் ரஸ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்தின் தலைவரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். மேலும் ரஸ்யத் தலைநகர் மொஸ்கோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெறவுள்ள சுதந்தினதின வைபவத்திலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்க திரைமறைவுச் சதி தீட்டப்படுகிறது:வினோநோகராதலிங்கம்



பொதுத்தேர்தலின் போது வட-கிழக்கு மாவட்டங்களிலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளை சிதறச் செய்து , நாடாளுமன்ற தமிழ் பிரதிநிதித்துவத்தை கணிசமான அளவு குறைக்கும் நடவடிக்கைகளில் திரைமறைவுச் சதி ஒன்று தீட்டப்பட்டு வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வட, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு,ஓரணியாக மீண்டும் இணைந்து கொண்டுள்ளதை ஜீரணிக்க முடியாதவர்களும், கூட்டமைப்புடன் தமிழ் மக்கள் சங்கமித்துப் போவதை தடுக்க முனைபவர்களுமே என்ன விலை கொடுத்தேனும் இவ் இரகசிய திட்டத்தை அரங்கேற்ற முயல்கின்றனர்.

இதன்படி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வட-கிழக்கின் ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களிலும் குறிப்பாக வன்னி, மட்டக்களப்பு ,மாவட்டங்களில் குறைந்தபட்சம் தலா மூன்ரு சுயேட்சை வேட்பாளர் குழுக்களை நிறுத்துவதன் மூலம் தமிழ் பிரதிநித்துவத்தை தகர்க்க திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

எமது மக்களில் சிலரை பலிக்கடாவாக்கி சிலநூறு அல்லது சில ஆயிரம் வாக்குகளை பிரித்தெடுப்பதன் மூலம் தமிழ் நாடாளுமன்ற அங்கத்துவத்தினை குறைக்கலாம் என்ர இலாப நட்டக் கணக்கு போடப்படுகிறது.

இதற்காக எம்மந்த்தியில் உள்ள புத்திஜீவிகள், கல்விமான்கள், இளைஞர்கள் மத்தியில் இருந்து ஆட்சேர்க்கும் படலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கின்றோம்.

இதற்காக சாதி, மத, பிரதேச உணர்வுகள் ஊட்டப்படுகின்றன.எம்மத்தியில் இலகுவாக ஏமாறக்கூடிய சிலரை வளைத்துப்போட்டு தமது சுயநல அரசியல் இலக்கினை எட்டுவதற்கு இவர்கள் பயன்படுத்தப்பட இருக்கிறார்கள்.

தமிழ் மக்களினதும்,தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் அரசியல் பலத்தையும், ஒற்றுமை உணர்வையும் உடைத்தெறிய எடுக்கும் எந்தவொரு முயற்சிக்கும் தெரிந்தோ தெரியாமலோ நாம் துணை நிற்கக் கூடாது

இவ்விடயத்தில் தமிழ் புத்திஜீவிகள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,இளைஞர்கள், விழிப்புடனும், அவதானத்துடனும் செயற்பட வேண்டும்.வரவிருக்கும் புதிய அரசுடன் பேரம் பேசக் கூடிய சம அரசியல் பலம் எம்மிடம் இருக்க வேண்டும்.

இதை உணர்ந்து விட்டுக்கொடுப்புகளுடன் தமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட காலம் கனிந்துள்ளது.தமிழ் மக்கள் ஒன்றாக, ஒரே சிந்தனையுடன் இருக்கும்போது தமிழ் இயக்கங்கள், கட்சிகள் பிரிந்து நின்று ஒன்றுமே ஆகிவிடப்போவதில்லை.தலைமைத்துவத்தை வழங்க தகுதியற்றவர்களாகிவிடுவோம்.

ஆயுதபோராட்டத்தில் தோல்வியடைந்த நாம் அரசியல் போராட்டம் ஒன்றில் தோல்வியை சந்திக்கக் கூடாது.எம்மிடையே ஒற்றுமை குலைந்து போனால் இருப்பதையும் நாம் இழந்துவிடுவோம்.கடந்துபோன கசப்பான படிப்பினைகளை உணர்ந்து எந்த சதி முயற்சிகளையும் முறியடிக்க எமது அரசியல்பலத்தை நிலைநிறுத்த கடுமையாக நாம் உழைக்க வேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிட இ.தொ.க. தீர்மானம்



தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

மலையக மக்களின் எதிர்கால நலன்கருதியும் அபிவிருத்தியைக் கருத்திற் கொண்டும் அரச தரப்புடன் இணைந்து போட்டியிடுவதெனத் தீர்மானித்துள்ளதாக காங்கிரஸின் தலைவரும் தேச நிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டி யிடுவதற்கு வாய்ப்புகள் இருந்தபோதிலும், மக்களின் எதிர்கால நன்மை கருதி அர சாங்கத்துடன் இணைந்து களமிறங்குவதாகப் பிரதி அமைச்சர் கூறினார்.இந்தத் தேர்தலில் பழையவர்களுடன் பல புதிய முகங்களும் அறிமுகமாகவுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்பே போட்டியிடுவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ். விஜேகுமாரன் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கட்சி முக்கியஸ்தர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருவதால் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக விஜேகுமாரன் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகளைக் கருத்திக்கொண்டு ஏனைய மலையகக் கட்சிகள் தீர்மானம் எதனையும் எடுக்க முடியாத திண்டாட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறின.

கட்சிகள் சிலவற்றின் தலைவர்கள் மலையகத்தில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பில் ஆலோசித்து வரும் அதேநேரம், பெரும்பான்மைக் கட்சிகளின் பட்டியலில் போட்டியிடுவது தொடர்பிலும் யோசனைகள் முன்மொழியப்பட்டு வருகின்றன.

மேலும், மலையகத்தில் கட்சி தாவியவர்கள் போட்டியிட்டு வெல்வதா, தேசியப் பட்டியலில் இடம்கோருவதா என்பதைச் சிந்தித்து வருவதாகத் தெரியவருகிறது



ஐ.நாவின் குற்றச்சாட்டை அமைச்சர் முரளீதரன் மறுக்கிறார்



நெருங்கிய சகாவான, இனியபாரதி சிறுவர்களை படையில் இணைப்பதாக ஐக்கிய நாடுகள் சபை, தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை, தேசிய இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துறை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் மறுத்துள்ளார்.

தம்மை ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் மற்றும் ஆயுதப் பயன்பாடு தொடர்பான பிரதிநிதி பற்றிக் கம்மேட் அவர்களைச் சந்தித்த போது, இனியபாரதி அவ்வாறான சிறுவர்களை படைகளில் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதை அவருக்கு தெரிவித்ததாக அமைச்சர் முரளீதரன்குறிப்பிட்டுள்ளார்.

தாம் அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளஅமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் , சிறுவர்களை தமக்கு படைகளில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் இனியபாரதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் அம்பாறையில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்



மன்னாரில் ஜனாதிபதி வாக்களித்த மக்களுக்கு அமைச்சர் றிசாட் நன்றி தெரிவிப்பு


மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்த அனைவருக்கும் மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீன் நன்றி தெரித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் நேற்று மன்னார் சென்றிருந்த அமைச்சர் வாக்களித்த அனைத்து மக்களிற்கும் நன்றி தெரிவித்தார்.

இதன்போது நேற்றுக் காலை 10 மணிமுதல் இரவு 11 மணிவரை இந்நிகழ்வு இடம்பெற்றது.உப்புக்குளம், பள்ளிமுனை, பனங்கட்டிக்கோட்டு, மூர்வீதி, தோட்ட வெளி, புதுக்குடியிருப்பு, காட்டாஸ்பத்திரி , பேசாலை முருகன்கோவில், துள்ளுக்குடியிருப்பு, தலைமன்னார் ஆகிய கிரமங்களுக்குச் என்று மக்களுக்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் நன்றி தெரிவித்தார்.

அதேவேளை .

மதவாச்சி மிதலைமன்னார் புகையிரதப் பாதை புனரமைப்ப பணிகள் வெகு விரைவாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழவின் தலைவரும் மீள்குடியேற்ற,அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நேற்று மன்னார் மாவட்டத்தில் உப்புக்குளம்,பேசாலை,தலைமன்னார் பகுதிகளில் இடம் பெற்ற கிராமிய மீள் எழுச்சி திட்ட அபிவிருத்தி பணிகளுக்கான காசோலைகளை கையளிக்கும் வைபவங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்டான்லி டிமெல், மீளெழுலுச்சித் திட்ட மன்னார் மாவட்ட பணிப்பாளர் ரொபட் குரூஸ்,அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் எம்.முனவ்வர்,தொழிலதிபர் கலாநிதி யூசுப் கே மரைக்கார் உட்பட பலரும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டததில் தெரிவு செய்யப்பட்ட 11 கிராமங்களில் ஏற்கனவே இத் திட்டம் 25 கிராமங்களில் நடை முறைப்படுத்தப்பட்டுவருகின்றது.இதற்கு மேலதிகமாக 15 கிராமங்களில் இத்திட்டம் நடை முறைப்படுத்துவதற்கென நேற்றைய தினம் 120 மில்லியன் ரூபாய்களை அமைச்சர் றிசாட் பதியுதீன்,கிராம அபிவிருத்தி சங்கங்களிடம் கையளித்தார்.

இதே வேளை இத் திட்டத்தின் மூலம்,அரிப்பு நீர் விநியோகத் திட்டத்திற்கு 10 மில்லியன் ரூபாய்களும்,9 பலநோக்கு கூட்டுறவு சங்க கடைகள் நிர்மாணிப்புக்கு 20 மில்லியன் ரூபாய்களும்,25 மையக் கிராமங்களின் அபிவிருத்திக்கென 190 மில்லியன் ரூபாய்களும்,கட்டுக்குரை குளப் பனரமைப்பு பணிக்கென 385 மில்லியன் ரூபாய்களும் ஏற்கனவே ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஒதுக்கப்பட்ட மேலதிக 40 மையக் கிராமங்களுக்கான நிதியல் வாழ்வாதாரம்,கட்டுமான நிதி என்பவைகளும் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசுகையில் :-

கடந்த தேர்தலில் மன்னார் மாவட்ட மக்களில் பலர் ஜனாதிபதியின் வெற்றியின் பங்காளர்களாக மாறியுள்ளனர்.வாக்களிக்காதவர்கள் அதிகமானவர்கள் இருக்கின்றார்கள் என்பதற்காக,எமது மாவட்ட மக்களினதும்,எதிர்கால சமூகத்தினது எதிர்பார்ப்புக்களை சூனியப்படுத்திவிட முடியாது.எமது மக்கள் அனுபவித்த இழப்புகளும்,அழிவுகளும் போதும்.இனி அவர்கள் வசந்தமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதில் நாம் உறுதியுடன் செயற்படுகின்றோம்.

மன்னார் மாவட்டத்தில் தொழில் நுட்ப பயிற்சி கல்லூரியொன்றை நிர்மாணித்து இளைஞர்,யுவதிகளின் தொழில் பிரச்சினைகளை தீர்க்க திட்டமிட்டுள்ளேன்.இன்னும் 8 வருடங்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருப்பார்,அரசாங்கமும் அவர் தலைமையிலானதாகவே இருக்கும்.இனியும் எமது மாவட்ட மக்கள் எதிர்கட்சி ஆசனங்களை அலங்கரிப்பவர்களுக்கு வாக்களித்து,தத்தமது தலைகளில் மண்ணை வாரி வீசிக் கொள்ள வேண்டாம்.

இனவாதம்,மத வாதம்,பிரதேச வாதங்கள் ஒரு போதும் எமது முயற்சிக்கு துணையாக அமையாது.மாறாக அதனைவிடுத்து மனித சமூகம் எமது மக்கள்,என்ற சிந்தனையினை வளர்த்துக்கொள்ள ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.இன்று மன்னார் தலை மன்னார் பாதை நவீனமயப்படுத்தப்பட்டு போக்குவரத்துக்கள இலகுபடுத்தப்பட்டுள்ளது.கமநெகும,மகநெகும,நெகோர்ட்,அமைச்சின் நிதி ஒதக்கீடுகள் என மன்னார் மாவட்டம் பல துறைகளிலும் அபிவிருத்தி கண்டுள்ளது.

கடந்த கால யுத்த அழிவுகள் மக்களை அகதிகளாக மாற்றியுள்ளது.இனியும் அந்த நிலையை தோற்றுவிக்க,இனவாதம் மூலம் சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளையும் பிளவுகளையும் தோற்றுவிக்கம் சக்திகளுக்கு மன்னார் மாவட்ட மக்கள் ஒரு போதும் அனுமதியளிக்கமாட்டார்கள் என்பதை நம்புகின்றேன்.எமது மாவட்டத்தில் உள்ள ஏனைய 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த மக்களுக்காக எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை,எதிர்கட்சியுடன் சேர்ந்து தமது காலத்தை கழித்தனர்."என்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் கூறினார்



பொது தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அவசரகாலச் சட்டம் அவசியமில்லை:பெஃப்ரல்



நாடாளுமன்றத்தில் அவசகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது குறித்து நியாயமானதும் நேர்மையானதுமான தேர்தலுக்கான அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பி.பிசி. தமிழோசையிடம்கருத்து தெரிவித்துள்ள பெஃப்ரல் அமைப்பின் நிரிவாக இயக்குனர் ரோஹன ஹெட்டியாராச்சி,"இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. ஜனாதிபதித் தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது. குறுகிய காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலும் நடக்கப் போகிறது எனவே இப்போது இது போன்ற அவசர கால நிலையை நீடிக்க தேவையில்லை" எனத் தெரிவித்தார்.

அதே நேரம் அவசர கால நிலை காரணமாக தேர்தல் நடைமுறைகளுக்கு நேரடி பாதிப்பு இல்லை என்றும், ஆனாலும் சில நேரங்களில் அரசியல் நோக்கங்களுக்காக இதை துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அவசர நிலை சட்டம் துஷ்பிரோயகம் செய்யப்பட்டதாக தமக்கு இதுவரை நேரடிப்புகார்கள் வரவில்லை என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்



வன்னியில் மதவழிபாட்டு தலங்கள் அனைத்தும் முற்றாக அழிந்துள்ளன-யாழ்.மறைமாவட்ட ஆயர்



வன்னியில் தான் பயணம் செய்த பகுதிகளில் உள்ள மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் அழிவடைந்துள்ளதாகவும் மக்களின் வாழ்வாதாரமான வயல் நிலங்கள் மாணவர்கள் கற்கும் பாடசாலைகள் மருத்து வமனைகள் போன்ற இடங்கள் கடும் சேதமாகியுள்ளதாகவும் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு இராணுவப் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் மனோ பெரேராவின் அனுமதியைப் பெற்றே ஆயர்அங்கு சென்றுள்ளார். கடந்த மாதம் 29 ஆம் திகதி அவர் புதுமாத்தளன் பகுதிக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை அவதானித்து திரும்பிய பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முதலில் அவர் புதுக்குடியிருப்பில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தை பார்வையிட்டுள்ளார். புனித சூசையப்பர் ஆலயம் பல்வேறு இடிபாடுகளுடன் காணப்படுகிறது. கட்டிடத்திற்கு கூரையில்லை. திருச்சுருவங்கள் அரைகுறையாகவே உள்ளன. இந்த ஆலயம் பழமைவாய்ந்த ஆலயம். ஆலயத்திற்கு அருகில் உள்ள கட்டிடம் பாதிரியார்கள் தங்ககுவதற்காகக் கட்டப்பட்டது. இக்கட்டிடமும் பல இடிபாடுகளுடன் காணப்படுகிறது. அங்கிருந்த குழந்தையேசு ஆலயம் செபஸ்தின் ஆலயம் போன்றவையும் சேதமடைந்தே காணப்படுகின்றன.

இக் கோயிலுக்கு அருகிலுள்ள வைத்தியசாலையும் பல்வேறு இடிபாடுகளுடனே காணப்படுகிறது. இரணைப்பாலை வழியாக செல்லும் போது அங்கிருந்த புனித பாத்திமா ஆலயம் கூடுதலாக சேதமடைந்திருந்தது. பச்சைப்புல்லுக்குளம் என்னும் இடத்திற்கு அவர் விஜயம் செய்த போது 100 கணக்கான வாகனங்கள் சேதமடைந்த நிலையில் அடுக்கி வைக்கப்ப்பட்டிருந்தன. இவ்வாறு தாம் விஜயம் செய்த அனைத்து இடங்களிலும் உள்ள ஆலயங்கள் கட்டிடங்கள் சேதமடைந்தே காணப்படுகிறது. தங்களுடைய வரவை முன்கூட்டியே அறிந்தது சுற்றாடலை மட்டும் சுத்தம் செய்துள்ளனர். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுதக் கொள்வனவுக்காக இலங்கைக்கு 300 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது ரஷ்யா


தளபாடங்கள் வாங்குவதற்காக இலங்கைக்கு ரஷ்யா 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ரஷ்ய விஜயத்தின்போது இது தொடர்பான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக ரஷ்ய அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மொஸ்கோவை சென்றடைந்தார். இவ்விஜயத்தின் ஒப்பந்தத்தில் கைச்சாத்தி டப்படுவதற்காக ஒப்பந்தமொன்று தயார் செய்யப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் துணை நிதி அமைச்சர் பான்கின் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கான ரஷ்யாவின் ஆயுதங்களை வாங்குவதற்காக ரஷ்யா 300மில்லியன் டொலர்களை இலங் கைக்கு வழங்கும் என ரஷ்ய அரசாங்கத்தின் ரியா நோவாஸ்தி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது 3 நாள் ரஷ்ய விஜயத்தின்போது ரஷ்யாவின் மக்கள் நட்புறவு பல்கலைகழகத்தின் பொன்விழா நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிக ளுக்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கை அரசாங்கத்துக்கு ரஷ்யா ஆதரவளித்தது. கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜ யம் செய்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ், இலங்கைக்கு இராணுவ உத விகளை வழங்குவதற்கு முன்வந்தமை குறிப் பிடத்தக்கது


எதிர்கட்சிகளின் கூட்டு உடைகிறது



ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றிணைந்து செயற்பட்ட எதிரணிக் கட்சிகளின் தேர்தல் கூட்டு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிளவுபடும் நிலை உருவாகின்றது. எதிரணிக் கட்சிகள் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதா என்பது குறித்த சர்ச்சை இடம் பெறுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.தே.க. யானைச் சின்னத்தில் போட்டியிடுவதில் மிக உறுதியாக இருக்கின்றது. ஜே.வி.பியை அடுத்த தேர்தலில் கூட்டணியில் இணைத்து கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ள ஐ.தே.க., தேர்தலுக்குப் பிறகு ஜே.வி.பி.யை சேர்த்துக் கொள்ளுவது குறித்து ஆலோசிக்கலாமெனத் தெரிவித்துள்ளது. எதிரணியின் சரத் பொன்சேகா தரப்பு அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தயார் நிலையிலிருந்தபோதும் அந்த சின்னத்திற்கு உரியவரான ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க அனுமதியளிக்க மறுத்ததையடுத்து கழுகு சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிரணியில் பிளவு

அதேவேளையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகாவினால் முன்வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகளையும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முற்றாக நிராகரித்துள்ளார். இதன் காரணமாக ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பதினான்கு கட்சிகளில் ஐந்து கட்சிகள் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்காக பிரிந்து நின்று செயற்படுவதெனத் தீர்மானித்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜெனரல் சரத் பொன்சேகா வீட்டில் நீண்ட நேரம் இடம்பெற்ற கலந்தாலோசனையின் பின்னரே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஜெனரலின் நெருங்கிய வட்டாரங்கள் வீரகேசரி வார வெளி யீட்டுக்குத் தெரிவித்தன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அமைக்கப் பட்ட அதே கூட்டணியே நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்வது. அன்னப் பறவைச் சின்னத்திலேயே தேர்தல் களத்தில் குதிப்பது, தன்னையே பிரதான வேட்பாளராக கொண்டு தேர்தலுக்கு முகங்கொடுப்பது ஆகிய மூன்று ஆலோசனைகளையும் ஜெனரல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்திருந் தார். இந்தக் கோரிக்கைகளை முற்றாக நிராகரித்த ரணில் விக்கிரமசிங்க மாற்று ஆலோசனை களையும் முன்வைத்தார். ஆனால், ரணிலின் அனைத்து ஆலோசனைகளையும் ஜெனரல் பொன்சேகாவும் முற்றாக நிராகரித்து விட்டார்.

தானே பிரதான வேட்பாளராகக் களமிறங் குதல், யானைச் சின்னத்திலேயே தமது கட்சி ஊடாகப் போட்டியிடல், ஜெனரல் சரத் பொன் சோகாவுக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் முக்கிய பதவி யொன்றினை வழங்குவது போன்ற ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோச னைகளையே ஜெனரல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.

சமரச முயற்சி தோல்வி

இவ்வாறான முரண்பாடுகளைக் களைந்து இவர்களுக்கிடையில் சமரசத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய தலைவர்கள், குறிப்பிட்ட இருதரப்பினரையும் சமரசப்படுத் தும் வகையில் கடந்த புதன், வியாழக் கிழமைக ளில் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

சரத் குழு கழுகு சின்னத்திலேயே போட்டியிட முடிவு

இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜெனரல் சரத் பொன்சேகாவின் இல்லத் தில் புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திராவின் தலைமையில் நடைபெற்ற மந்திராலோசனையில், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் 14 கட்சி களில் ஐந்து கட்சிகள் எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன் சேகாவுக்கு ஆதரவாகச் செயற்படுவதென்றும் கழுகு சின்னத்தில் போட்டியிடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஐ.தே.க ஜே.வி.பி.இணைப்பு இல்லை

இது இவ்வாறிருக்க எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக் குள் ஜே.வி.பி.யையும் இணைத்துக் கொண்டு போட்டியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன் வைக்கப்பட்ட ஆலோசனைகளையும் அவர் முற்றாக நிராகரித்துள்ளார். அவ்வாறு ஜே.வி.பி.யினரையும் இணைத்துக் கொள்ளும் போது அவர்களுக்கான வேட் பாளர் பட்டியலில் இட ஒதுக்கீட்டில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி வருமென ரணில் தெரிவித்துள்ளார். அதுமட்டு மன்றி இரு கட்சிகளின் கொள்கை ரீதியான முரண்பாடுகளையும் அவர் சுட்டிக்காட்டிய தாக வும் தெரிவிக்கப்படுகிறது. ஜே.வி.பி. யினை இணைத்துக் கொள்வதால் தமிழ் பேசும் மக்க ளின் வாக்குகளையும் தமது முன்னணி இழக்க நேரிடலாமெனவும் அவர் சுட்டிக்காட் டியதாக நம்பகமான செய்திகள் தெரிவிக் கின்றன.

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தேவை ஏற்படின் ஜே.வி.பி.யையும் இணைத்து அர சொன்றினை அமைப்பது குறித்து ஆலோசிக் கலாமெனவும் ரணில் தெரிவித்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இட ஒதுக்கீட்டில்ஐ.தே.க. ஜ.ம.மு இடையில் இழுபறி

இதேவேளை ஜனநாயக மக்கள் முன்ன ணிக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கொழும்பு மாவட்ட வேட்பாளர்களை பங்கிட் டுக் கொள்வதில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதா கவும், ஜெனரல் சரத் பொன்சேகாவின் இல்லத் திலே நேற்று முன்தினமிரவு ரணில், பொன் சேகா, மனோ, ரவூப், கரு ஜயசூரிய, ரவி கருணா நாயக்க ஆகியோர் கலந்துகொண்ட பேச்சு வார்த்தைகளின் இடையில் மனோ கணே சன், ரவூப் ஹக்கிம் ஆகியோரது கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு ஆசனம் மாத்திரமே கொழும்பு மாவட்டத்தில் ஒதுக்கப்படுமென ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவித்தபோது அதை கோபத்துடன் இடை மறித்த மனோ கணேசன் தாம் இங்கு வந்தது ஆசனங் களை பற்றி பேசுவதற்காக இல்லை என்றும், தமது கட்சியின் பங்களிப்பு இருந்திருக்கா விட்டால் கொழும்பு மாநகரத் தின் ஐந்து தொகுதிகளிலும் ஜனாதிபதித் தேர்தலில் நமது கூட்டணி வெற்றி பெற்றிருக்க முடியாதென்றும் கூறிவிட்டு கூட்டத்திலிந்து இடை நடுவில் வெளியேறியதாக வெளிவந்த செய்தி தொடர் பில் ஜ.ம.மு தலைவர் மனோ கணேசனை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அவர் கூறியதாவது,

இச்செய்தி உண்மையானது தான். சரத் பொன் சேகாவை தொடர்ந்தும் எமது கூட்டணி யில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவரது இல்லத்திற்கு சென்று நாம் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது,கொழும்பு மாவட் டத்தில் எமது கட்சி சார்பாக கூட்ட ணியிலே போட்டியிடும் வேட்பாளர் தொகை பற்றிய கருத்து பேசப்பட்டமை துரதிர்ஷ்டவசமானதா கும். இதை பேசுவதற்காக நாம் அங்கு போகவில்லை. நேற்று முன்தினம் காலை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரின் அழைப் பின் பேரில் அவரை நான் சந்தித்தபொழுது, ஜே.வி.பி.யின் வேட்பாளர்களை கூட்டணி வேட்பாளர் பட்டியலிலே உள்வாங்குவதற்கு உள்ள இயலாமையையே தாம் அவ்விதம் குறிப்பிட்டதாகவும், எமது கட்சியின் வேட் பாளர் தொகை பற்றி கருத்துக் கூறவில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க என்னிடம் விளக்கி கூறினார். எனவே, இத்துடன் இவ்விவகாரம் தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளது. எனினும் சிலமணி நேரங்களுக்கு முன்னாலே நடைபெற்ற இந்த கடைசி கலந்துரையாடலின் போது ஐ.தே.க தலைவரிடம் நான் தெரிவித்த கருத்துகளை ஊடகங்களின் மூலமாக தமிழ் மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமையென எண்ணுகின்றேன்.

எமது கட்சியான ஜனநாயக மக்கள் முன் னணி கடந்த மூன்று வருடங்களில் துரித வளர்ச் சியை கண்டுவிட்ட ஒரு தேசிய தமிழ் கட்சி யாகும். எமது இன்றைய வளர்ச்சிக் கட்டத்தை ஐ.தே.க புரிந்துகொண்டு எமக்குரிய அந் தஸ்தை வழங்கவேண்டும். எதிர்வரும் தேர்த லில் நாம் நாடு முழுக்க பல்வேறு மாவட்டங் களில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். எனவே, நாம் இன்று ஓர் கொழும்புக் கட்சி அல்ல. ஆனால் கொழும்பு மாவட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவருக்கும் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம். தலைநகர தமிழ் மக்கள் எனக்கு தொடர்ந்து வாக்களித்து, எமது கட்சிக்கு தந்துவரும் உற்சாகத்தினால்தான் இன்று நாம் நாடு முழுக்க தேசிய ரீதியாக செயற்பட முடிகின்றது. எனவே என்னை வாழ வைக்கும் தலைநகர தமிழ் மக்களை நான் ஒருபோதும் மறந்துவிடமாட்டேன். கொழும் பிலே வாழும் இந்தியவம்சாவளி மற்றும் வடக்கு, கிழக்கு சார்ந்த அனைத்து தமிழ் மக்களும் தமிழர்கள் என்ற இன அடிப்படை யில் எமது கட்சியுடன் உணர்வு பூர்வமாக அணிதிரண்டு உள்ளார்கள் என்பதை பெரும் பான்மை கட்சிகள் புரிந்துகொள்ளவேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சியின் சுமார் 25 உறுப் பினர்கள் தமது கட்சிக்கு துரோகம் செய்து விட்டு, ஆளுங்கட்சியுடன் இணைந்து அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டுள் ளார்கள். ஐ.தே.க.வுடன் கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்று நாடாளுமன்றம் வந்த மலையக கட்சிகளும் இன்று அரசுடன் ஒட்டிக்கொண்டி ருக்கின்றன. ஆனால் நாம் உறுதியுடன் பல்வேறு சவால்களை சந்தித்தபடி ஐ.தே.க கூட்டணியில் தொடர்ந்தும் இருந்துகொண்டி ருக்கின்றோம். இதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். எனவே ஐக்கிய தேசிய கட்சி எமக்கு கடமைப்பட்டிருக்கின்றது. அரசியல் சவால்கள் என்ற ஆற்றை கடக்கும் வரைக்கும் அண்ணன், தம்பி எனக்கூறிவிட்டு ஆற்றைக் கடந்தபின் அதாவது நாடாளுமன்ற தேர்தலின் போது நீ யாரோ நான் யாரோ என ஐ.தே.க கூறுமானால் நாம் அதை பொறுத்துக்கொள்ள மாட்டோம். கொழும்பு மாவட்டத்திலேயுள்ள ஒரு சில ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை இன அரசியல்வாதிகளுக்கு தமிழ் மக்களின் விருப்பு வாக்குகளின் மீது பேராசை இருக்கின்றது. எமக்கு இரண்டு இடங்களை கொடுத்துவிட்டு தமிழர்களின் மூன்றாவது விருப்பு வாக்கை கவர்ந்துகொள்வது இவர்களது முதல் திட்டம். அது சரிவராவிட்டால் தமிழ் வாக்காளர்களின் மூன்று விருப்பு வாக்குகளுக்கு எதிராக நான்கு அல்லது ஐந்து தமிழ் வேட்பாளர்களை நிறுத்தி எமது மக்களின் விருப்பு வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்பது இவர்களது இரண்டாவது திட்டம்.

அதாவது தமிழ் மக்களின் கட்சி வாக் குகள் யானை சின்னத்திற்கு வந்து குவிய வேண்டும். ஆனால் தமிழர்களின் விருப்பு வாக்குகள் சிதறடிக்கப்பட்டு உரிய தமிழ் பிரதிநிதித்துவம் கிடைக்கக்கூடாது என்ற இந்த கபடத்தனமான இனவாத ஐ.தே.க அரசியல் வாதிகளை பற்றி எமக்கு தெரியும். தமது சுயநல நோக்கங்களுக்காக இவர்களுக்கு துணை போகும் சில தமிழர்களையும் எங்களுக்குத் தெரியும். இவர்களை இனிமேலாவது திருந்துங் கள் என நாம் கூறுகின்றோம். பல்லாயிரக் கணக்கான தமிழ் விருப்பு வாக்குகள் பெரும் பான்மை வேட்பாளர்களுக்கு கிடைக்க வேண்டும். ஆனால் ஒரு நூறு சிங்கள வாக்குக ளைக்கூட இவர்களால் எங்களுக்கு பெற்றுத்தர முடியாது. இந்த ஒரு வழிப்பாதை மோசடி அரசியலுக்கு நாம் இடங்கொடுக்க மாட்டோம்.

கொழும்பு மாவட்டத்தில் மூன்று தமிழ் எம்.பி.க்களை நாம் உருவாக்குவோம். ஏனென் றால் தமிழர்களுக்கு துன்பம் வந்தால் அது எனக்குத்தான் வலிக்கின்றது. எனவே எனக்கு துணையிருப்பதற்கு இன்னும் இரண்டு எம்.பி.க்களை நாம் பெறவேண்டும். இது இன வாதம் இல்லை. எங்களது உரிமை. அடுத்த வர்களின் உரிமைகளில் நாம் ஒருபோதும் அபகரிக்க மாட்டோம். அதேவேளையில் எங் களது உரிமைகளில் ஓர் அங்குலத்தையேனும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். எனவே ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உரிய முறையில் பெற்றுக்கொள்வதற்கு உரிய சந்தர்ப்பங்கள் எங்களுக்கு கிடைக்கவேண்டும். எங்கள் தன்மானத்தை விட்டு விட்டு வேட் பாளர் ஆசனங்களுக்காக நாங்கள் எவரிடமும் மன்றாடுவோம் என்று கிஞ்சித்தும் கருதவேண் டாம் என நான் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியுள்ளேன் என ஜனநாயக மக்கள் முன் னணி தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.



அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் தேடிபடகில் சென்ற 45 இலங்கையர் கிறிஸ்மஸ் தீவுக்கருகில் நேற்று மீட்பு


அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடி படகொன்றில் சென்றுகொண்டிருந்த 45 இலங்கைத் தமிழர்கள் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கருகில் நேற்று மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படகிலிருந்து கிடைத்த இடர்கால சமிக்ஞைகளைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையொன்றின் கப்பலினால் மேற்படி அகதிகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி அகதிகள் ஜனவரி 20 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டதாகவும் கடந்த நான்கு நாட்கள் அவர்கள் உணவு, நீர் எதுவுமின்றி தவித்ததாகவும் அவுஸ்திரேலியா வின் அகதி கள் செயற்பாட்டுக் கூட்டமைப் பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட அகதிகள் அனைவரும் கிறிஸ் மஸ் தீவிலுள்ள அகதிகள் தடுப்பு நிலையத் திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் மேற்படி அகதிகளில் சிலர் அம்மை நோய் மற்றும் வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்டி ருப்பதாகவும் மேற்படி பேச்சாளர் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
பிரபாகரனின் ஆயுதக் கிடங்கு கண்டுபிடிப்பு!





கொழும்பு,பிப்.6: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பகுதியில் பெரிய ஆயுதக்கிடங்கை இலங்கை போலீஸôர் கண்டுபிடித்துள்ளனர்.

இலங்கை ராணுவத்துடனான இறுதிக் கட்டப் போரில் இந்த ஆயுதக் கிடங்கை புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தி இருக்கலாம் என்று அந்நாட்டு போலீஸôர் கருதுகின்றனர்.

பூமிக்கடியில் பல அடி ஆழத்தைக் கொண்ட அந்த ஆயுதக்கிடங்கில் போலீஸôர் சோதனை நடத்தினர். அப்போது அதற்குள் தற்கொலைப் படை வீரர்கள் அணியும் வெடிகுண்டுகள் அடங்கிய ஆடைகள், 7000 சக்தி வாய்ந்த கண்ணிவெடிகள் உள்பட சக்தி வாய்ந்த ஏராளமான ஆயுதங்கள் இருந்தன. அவை அனைத்தையும் போலீஸôர் கைப்பற்றினர்.

தவிர, அந்த ஆயுதக் கிடங்கில் இருந்து பிரபாகரன், அவரது குடும்பத்தார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்புடைய ஆவணங்கள் ஏராளமானவற்றையும், 56 சி.டி.க்களையும் போலீஸôர் கைப்பற்றினர்.

பிரபாகரனுக்கு நெருக்கமானவர்கள் 6 பேரை இலங்கை அரசு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில்தான் இந்த ஆயுதக் கிடங்கை போலீஸôர் கைப்பற்றினர் என்று அந்நாட்டில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

இப்போது கிடைத்துள்ள ஆவணங்கள் அனைத்தையும் முக்கியமானவையாக அரசு கருதுகிறது. புலிகள் அமைப்பு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைக்கு இந்த ஆவணங்கள் பெரும் உதவியாக இருக்கும் என்று அரசு நினைக்கிறது என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த போர் கடந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவுற்றது. இதையடுத்து புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் கண்ணிவெடிகள் உள்பட ஆயுதங்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.

வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நடத்தியதாகவும், இதனால் இப்பகுதியில் புலிகளின் ஆயுதக் கிடங்குகள் இருக்கலாம் என்றும் அரசு நம்புகிறது. இதனால் இப்பகுதியில் ஆயுதங்களை மீட்கும் பணியில் அதிகப்படியான குழுக்களை ஈடுபடுத்தியுள்ளது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயகே, வன்னிப் பகுதியில் ஆயுதங்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடந்து வருவதாகவும், ஏராளமான ஆயுதங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், வன்னிப் பகுதியில் புலிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பார்த்து மீட்புக் குழுவினரே ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.



கடலோர பகுதிகள் வழியாக மீண்டும் கடத்தல்:ஏஜன்டுகள் குறித்து ரகசிய விசாரணை







ராமநாதபுரம்:ராமநாதபுரம் கடலோர பகுதிகள் வழியாக மீண்டும் கடத்தல் அதிகரித்துள்ளதால், பழைய மற்றும் புதிய ஏஜன்டுகள் குறித்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபின், கடத்தல் முற்றிலும் நின்றுவிட்டதாக போலீசார் தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது, இலங்கையில் உள்ள முக்கிய ஏஜன்டுகள் மூலம், மீண்டும் தமிழகத்திலிருந்து பல்வேறு பொருட்களை கடத்தி, வெளிநாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

இதன் மூலம்தான் கடந்த மாதம் இலங்கையிலிருந்து எட்டு லட்சம் ரூபாய் ஹவாலா பணம், கீழக்கரை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு அனுப்பப்பட்டு, துப்பாக்கி குண்டுகள், ஹெராயின், சேட்டிலைட் போன் போன்ற பொருட்கள் கடத்த முயன்ற போது, நான்கு பேரை கியூ பிரிவு போலீசார் பிடித்தனர்.இதில், சேட்டிலைட் போன் வைத்திருந்ததால் பயங்கரவாத செயல்களுக்காக கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம், போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவிற்குள் ஏதேனும் அசம்பாவித செயல்களில் ஈடுபடலாம் என சந்தேகித்து, உயர் அதிகாரிகள் வரை தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும், இச்சம்பவத்தில் முக்கியமான ஒருவர், ஏற்கனவே இலங்கைக்கு பலமுறை ஆட்களை அனுப்பியது, விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பொருட்கள் கடத்திய வழக்கில் தொடர்பு உடையவர் என்பதால், இவர் மூலம் மேலும் பல ஏஜன்டுகள் உருவாகியிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.


இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் கீழக்கரை பகுதியில், வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற பவளப்பாறைகளை, கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேர் தப்பினர். தப்பியவர்கள், பவளப்பாறைகள் மட்டும்தான் வைத்திருந்தனரா, துப்பாக்கி குண்டுகள், போதை பொருட்கள் போன்றவை வைத்திருந்தனரா என்பது தெரியாத நிலையில், கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீண்டும் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக கியூ பிரிவு மற்றும் உளவு பிரிவு போலீசார், கடலோர பகுதி இன்பார்மர்கள் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



மேலும் இங்கே தொடர்க...