30 அக்டோபர், 2009

ஜனாதிபதி நாளை திருப்பதி பயணம் : ஆந்திராவில் வரலாறு காணாத பாதுகாப்பு






இந்திய மீனவர் மீது தாக்குதல் : கடற்படைப்
பேச்சாளர் மறுப்பு

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

இந்திய ஊடகங்களில் வெளியானது போன்று இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை எனக் கடற்படைப் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்கத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் 40 இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர்களது உபகரணங்கள் சேததப்படுத்தப்பட்டதாகவும் 'டைம்ஸ் இந்தியா' செய்தி வெளியிட்டிருந்தது.

பிடிக்கப்பட்ட மீன் வகைகளை படையினர் மீண்டும் கடலில் எறிந்ததாகவும், ஒரு படகு முழுமையாக சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தாக்கப்பட்ட மீனவர்கள் நீந்தி இந்தியாவை அடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை எனவும், கடற்படையினருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான செய்திகள் வெளியிடப்படுவதாகவும் கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ராஜபக்ஷ திருப்பதி கோவிலுக்கு நாளை செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி அவர் சிறப்பு விமானம் மூலம் கொழும்பிலிருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு நாளை காலை 11.00 மணிக்கு வருகிறார். பின்னர் அவர் வாகனம் ஒன்றில் திருப்பதி மலைக்குச் செல்வார் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து அவர் மதியம் 1.30 மணிக்கு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

ராஜபக்ஷவின் வருகைக்கு இங்குள்ள தமிழர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் அவருக்கு வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு அளிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ராஜபக்ஷ செல்லும் வழி நெடுகிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...
ராஜரட்னத்தின் பிணைத் தொகையைக் குறைக்குமாறு கோரிக்கை

, 100 மில்லியன் டொலர்களில் இருந்து 25







உட்சந்தை வியாபாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்னத்தின், பிணை அபராதத் தொகையை, 100 மில்லியன் டொலர்களில் இருந்து 25 மில்லியனாகக் குறைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

பங்கு உட்சந்தை வணிகத்தில் பல பில்லியன் டொலர்களை மோசடி செய்த பேர்னாட் மடோப் என்பருக்கு, 10 மில்லியன் டொலர்களே அபராதம் அறவிடப்பட்டமை இதற்காகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர்களில் ஒருவரான ராஜ், குற்றவாளியாகக் காணப்பட்டாலும் அவருக்கு 10 வருடத்துக்கும் குறையாத தண்டனையே வழங்கப்படும் என அவருடைய சட்டத்தரணி ஜோன் டௌட் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ராஜரட்னத்தின் பிணைக்காக அசாதாரண நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுடன் கைது செய்யப்பட்டுள்ள மொடப்புக்கு, 150 வருடகால சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ராஜ் ராஜரட்னத்துக்கான பயணத்தூரமும், நியூயோர்க் நகருக்குள் 175 கிலோமீற்றர் தூரம் என மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பிறந்த ராஜ் ராஜரட்னம், சுமார் 1.3 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களுடன், உலகின் 549ஆம் இடத்தை வகிக்கும் கோடீஸ்வரராவார்.

அவர் நியூயோர்க் நகரில், 17.5 மில்லியன் டொலர்கள் பெறுமதியான மாளிகையில், தமது மனைவியுடன் 21 வருடங்களாக வாழ்ந்து வருகிறார்.

இதற்கிடையில் ராஜ் ராஜரட்னம் தமது தவறை இதன் பின்னர் திருத்திக் கொள்வார் எனச் சட்டத்தரணி டெளட் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
கடலில் மூழ்கி இளைஞர் மரணம் : பொலிஸ் உத்தியோகத்தர் கைது










நேற்று பம்பலப்பிட்டி கடலுக்குள் குதித்தபோது தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞரின் சடலம் சற்று நேரத்திற்கு முன்னர் கரை ஒதுங்கியது.

இத் தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

சடலம் கரையொதுங்கிய இடத்திற்குச் சென்ற இவ்விளைஞரின் சகோதரர் சடலத்தை அடையாளங் காட்டினார்.

இவ்விளைஞரைத் தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தரைக் கைது செய்வதற்கும் ஏனையோரை அடையாளம் காண்பதற்கும் விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சற்று முன்கிடைத்த செய்தி

சற்று முன்கிடைத்த செய்தியின்படி இந்த இளைஞரைத் தாக்கியதாகக் கருதப்படும் பொலிஸ் உத்தியோகத்தரை விசேட பொலிஸ் குழு கைது செய்துள்ளது.

கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொண்ட குழு, இவரை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் வைத்துக் கைது செய்ததாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் இடம்பெற்றபோது கடற்கரைக்குச் சென்றதாகக் கூறப்படும் 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 10 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கரையோரப் பாதையில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் நேற்றுப் பகல் வேளையின் போது, வீதியில் செல்லும் வாகனங்களுக்குக் கல் எறிந்துள்ளார்.

இதன் காரணமாக இரண்டு வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. ரயில் ஒன்றுக்குக் கல் எறிந்ததில் அதில் பயணித்த சிலரும் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் சத்தமிடவே அவர் தப்பிப்பதற்காக கடலில் குதித்துள்ளார்.

பின்னர் அவர் மீண்டும் கரை திரும்ப முயற்சித்த போதும், அதனைத் தடுத்த பொலிஸார் அவரைக் கட்டைகளால் தாக்கினர்.

இந்தச் சம்பவம் நீடித்துக்கொண்டிருந்ததால் கரை திரும்ப முடியாத அந்த இளைஞர் கடலுக்குள்ளேயே செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார்.

இதன் போது அவர் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு மரணமானார் எனக் கூறப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...
கண்டி வைத்தியசாலையில் இரண்டு மருந்து குப்பிகளில் கண்ணாடி துண்டுகள் கண்டுபிடிப்பு
கண்டி போதனா வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை நோயாளர் ஒருவருக்கு ஏற்றப்படவிருந்த ஊசி மருந்து குப்பியில் கண்ணாடி துண்டுகள் இருக்கின்றமை கண்டு பிடிக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரி சி.குணதிலக்க தெரிவித்தார்.

வைத்தியசாலையின் 64ஆம் இலக்க வார்ட்டில் இரண்டு மருந்துக் குப்பிகளில் இவ்வாறு கண்ணாடி துண்டுகள் இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இது தொடர்பில் தாதியர்கள் வைத்தியசாலை உயர்மட்ட நிர்வாகத்திற்கு அறிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த கண்ணாடித் துண்டுகள் காணப்படுகின்ற மருந்துக் குப்பிகளைப் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவித்தன.

மேலும், தங்காலை பிரதேசத்திலும் வைத்தியசாலை ஒன்றில் மருந்து குப்பியில் கண்ணாடி துண்டுகள் இருந்தமையை நேற்று முன்தினம் வைத்தியசாலை நிர்வாகம் கண்டு பிடித்தது. இதனையடுத்து குறித்த மருந்துக்குப்பிகள் அம்பாந்தோட்ட மாவட்ட வைத்திய அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

குறித்த மருந்து குப்பி வகைகளை விநியோகித்துள்ள ஆறு நிறுவனங்களின் பிரதிநிதிகளை முக்கிய விசாரணை ஒன்றுக்கு சுகாதார அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை அழைத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சுத் தகவல்கள் தெரிவித்தன.

ரவி கருணாநாயக்க எம்.பி.

அதேவேளை, கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கூறுகையில், "சுகாதார அமைச்சர் ஏதோ ஊசி ஒன்றை உட்செலுத்திக் கொண்டவர்போன்று சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பில் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டால் விளம்பரங்களை நிறுத்தி விடுவதாக அமைச்சர் அச்சுறுத்துகின்றார். நாட்டில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை" என்றார்.

சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கூறுகையில், "நியாயமான முறையில் சிக்கல்களின்றி சிகிச்சை பெறும் எண்ணத்துடனேயே நோயாளர்கள் அரசாங்க வைத்தியசாலைகளை நாடுகின்றனர். ஆனால், அவ்வாறான அடிப்படை உரிமை கூட இன்று மறுக்கப்படுகின்றது. எனினும் அரசாங்கம் மௌனம் சாதிக்கின்றது. சுகாதார அமைச்சர் என்ன கூறுகின்றார் என்று தெரியவில்லை" என்றார்.

அநுர பிரியதர்ஷன யாப்பா

நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவிக்கையில்,

"சுகாதார அமைச்சு ஒரு நோய்க்காக மருந்துகளை கொள்வனவு செய்வதில்லை. இது பாரிய ஒரு வேலைத்திட்டம். இதன்போது ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது என்பதற்காக முழு சுகாதார தொகுதியையும் குறை கூறமுடியாது. எனினும் சம்பந்தப்பட்ட மருந்துக் குப்பிகளை விற்பனை செய்த நிறுவனங்களிடம் விசாரணை நடத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இருநூறு மற்றும் ஆயிரம் என அதிகளவான கட்டில்கள் உள்ள வைத்தியசாலைகள் இலங்கையிலேயே அமைந்துள்ளன என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...
இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படும் அபாயம்
- இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக பி.பி.சீ உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் சுமத்திர தீவுகளுக்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் அவுஸ்திரேலிய கப்பலில் குறித்த இலங்கையர்கள் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆள் அடையாள சோதனைகளை நடத்துவதற்கு இலங்கை அகதிகள் போதிய ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் நாடு கடுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என இந்தோனேஷிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய, குறித்த அகதிகள் விவகாரத்தை கவனிக்க இந்தோனேஷியா இணக்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான ஓர் பின்னணியில் இலங்கை அகதிகள் தொடர்ந்து கப்பலிலிருந்து வெளியேறி இந்தோனேஷியாவுக்குள் செல்ல மறுப்பு தெரிவித்தால் சிக்கல் நிலை உருவாகக் கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களின் ஆள் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே அவர்களுக்கு உதவிகளை வழங்க முடியும் என இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் டெக்கு பெஸியாஸா தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...
எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பு நவம்பர் 03ம் திகதி அறிவிக்கப்படவுள்ளது-

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஸ்தாபித்துள்ள பொதுக் கூட்டமைப்பான ஐக்கிய தேசிய முன்னணி எதிர்வரும் நவம்பர் 03ம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான நிகழ்வு ஸ்ரீஜயவர்தனபுர நாடாளுமன்றக் கட்டிடத்தில் இடம்பெறவுள்ளதாக ஐ.தே.கட்சி பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதன்போது கூட்டமைப்பில் இணைந்து கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்படவுள்ளதுடன், ஐக்கிய தேசிய முன்னணியின் பத்து அரசியல் கொள்கைகள் அறிவிக்கப்படுமென்றும் அவர் கூறியுள்ளார். புதிய கூட்டணியில் இணையும் அரசியல் கட்சித் தலைவர்களிடையிலான சந்திப்பு இன்றுகாலை இடம்பெற்றதையடுத்து மேற்குறித்த விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...
முகாமிலுள்ள இடம்பெயர்ந்தோர் தொகை 1லட்சத்து 79ஆயிரமாக குறைப்பு-

வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை 1லட்சத்து 79ஆயிரமாக குறைத்துள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். தற்போது வவுனியா அகதிமுகாம்களில் தங்கியுள்ள மக்களை மீளக் குடியமர்வுக்காக அனுப்பி வருகின்றோம். இப்போது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து மக்களும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டார்கள். ஏனைய மாவட்டங்களான மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மக்களைப் படிப்படியாக அனுப்பிக் கொண்டிருக்கிறோம். வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த மக்களில் இதுவரை அகதிமுகாம்களில் இருந்தவர்கள் தற்போது மீளக் குடியமர்விற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தரவுகளின்படி தற்போது அகதி முகாம்களிலுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1லட்சத்து 79ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் அரசஅதிபர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...